தமிழ் இலக்கண - இலக்கியங்களில் வர்ணாஸ்ரமம்

“தமிழனுக்குத் தெளிவான இலக்கியமோ, வரலாறோ இல்லை. இன்று இருக்கும் இலக்கியங் களிலும் கூட கலப்பற்ற “தமிழர் பண்பாடு” என்பது காணமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது. அவைகளில் பெரிதும் ஆரியக்கடவுள், மதம், சாதிப் பழக்க வழக்கங்கள் கொண்ட கருத்துக்களே பரவலாகக் காணக்கிடக்கின்றன” என்பது தமிழர்தம் ஒரே பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மேடைகளில் இலட்சக்கணக்கான மக்கள் முன்பு எடுத்து உரைத்துவரும் கருத்துக்களாகும்.

இக்கருத்துக்களுக்குத் சான்று பகர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். திராவிடர் கழகத்துக் காரர்களுக்கு அதாவது சுயமரியாதைக்காரர்களுக்கு மக்கள் அறிவு வளர்ச்சி பற்றி நாட்டங்கொள்வதே முக்கியம் அன்றி, அறிவைத்தடை செய்யும் வகையில் மொழிப் பற்றோ, இலக்கியப் பற்றோ, நாட்டுப் பற்றோ மற்றும் எந்தப்பற்றோ தேவை இல்லை என்பதே கொள்கையாகும். பகுத்தறிவு உணர்ச்சி யுடன் சுயமரியாதைக் கண்ணோட்டத்துடனுமே சங்க இலக்கியங்களின் தன்மை இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டு இருக்கிறது.

நம் தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் வர்ணாசிரமக் கோட்பாடுகளும் பன்னெடு நாட்களுக்கு முன்னரேயே புகுந்தவிட்டது எனலாம். அகத்தியர் போன்ற ஆரிய முனிவர் தமிழகம் போந்து, தமிழ் கற்று அதன் மூலம் தங்களது நச்சுக் கருத்துக்களை எல்லாம் புகுத்தி இருக்கின்றனர். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட நூலாகிய தொல்காப்பியத்தில் கூடப் பார்ப்பனர்தம் வர்ணாசிரமக் கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகள் நான்கும் தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பெயரில் காணப்படுகின்றன. இதனைப் தமிழ்ப்புலவர்கள் “அது எப்படி வர்ணாசிரமப் பிரிவுகளாகும் ! தொல் காப்பியர் கூறும் இந்த நான்கு பிரிவுகளும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டனவே அல்லாது வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல” என்று வாதிடுகின்றனர்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியலில்,

“அறுவகைப் பட்ட பார்ப்பனர் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் ”

(74ம் சூத்திரம்)

என வரும் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த இளம்பூரணர் கருத்தினை ஈண்டு காண்போம்.

அறுவகைபட்ட பார்ப்பனர் பக்கம் : அவையாவன : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.

ஐவகை மரபின் அரசர் பக்கம் : ஓதலும், வேட்டலும், ஈதலும், படை வழங்குதலும், குடி ஓம்புதலும் ஆகும்.

வணிகருக்குரிய அறு பக்கமாவன : ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வணிகம், நிரை யோம்பல்

வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்கமாவக : உழவு, உழவு ஒழிந்த மற்ற தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தரல், ஏனைய மூவர் வழிபாடு வேதம் ஒழிந்த கல்வி

என்று கூறியுள்ளார்.

பார்ப்பன உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்பதற்கு ஓதலும், வேட்டலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வணிகப் பக்கமும் என்றும் வேதம் ஒழிந்த ஓதலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும், வழிபாடும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வேளாளர் பக்கமும் என்றும் கூறுகின்றனர்.

இதிலிருந்து, நான்காம் வருணத்தனாகிய சூத்திரனுடைய தொழில் பார்ப்பானுக்குத் தொண்டூழியம் செய்வது என்பதைத் தான் உரையாசிரியர்கள் வழிபாடு என்ற பெயரில் குறிப்பிடு கின்றார்கள் என்பதையும், சூத்திரன் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று மனு நீதி கூறுவது போலவே இவர்கள் நான்காம் பிரிவினரான வேளாளன் வேதம் ஒழிந்த கல்வியைத்தான் கற்க அருகதை உடையவர் என்று கூறவதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

பண்டிதர்கள் கூறலாம் உரையாசிரியர்கள் செய்த குற்றத்திற்கு நாம் எப்படி தொல்காப்பியத்தையே குறை கூறுவது என்று!

“ மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே ”

என்ற சூத்திரத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கும் உரியகாரணம் (சடங்குகள்) கீழோர்களாகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் இருந்தது என்று குறிக்கின்றார்.

இது மட்டும் அல்ல : தொல்காப்பியத்தில் சிறு தெய்வ வணக்கங்கள், யூபம் நட்ட வேள்வி, அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை போன்ற ஆரியக் கருத்துக்கள் மலிந்துள்ளதை வேறு தனிக் கட்டுரையில் காண்போம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலமாகிய கடைச் சங்க காலத்திலும், இந்த வர்ணாசிரமக் கொள்கை தமிழகத்தில் நன்கு வேர் ஊன்றி இருந்திருக்கின்றது. அவன் பாடிய புறநானூற்றுப் பாடலிலே,

“ வேற்றுமை தெரிந்த நாற்

பாலுள்ளும்      

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவன்

அவன்  கட்படுமே”

எனக்குறிப்பிட்டுள்ளான். மேலும் கபிலர் போன்ற பார்ப்பனப் புலவர்கள்,

“ யானோ மன்னும் அந்தணன் ” என்று இறுமாப்புடன் கூறிக்கொள்கின்றனர்.

சங்க காலத்தில் இறுதியில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அடுத்த படியாக நோக்குவோம்.

கோவலன், கண்ணகியையும் கவுந்தி அடிகளையும் புறஞ்சேரியில் வைத்துவிட்டுத் தான்மட்டும் மதுரை நகர் வீதிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்து திரும்புவதைக் கூறும் ஊர்காண் காதையில், மதுரை வீதிகளில் விற்கப்படும் ஒன்பது வகை மணிகளைப் பற்றிக் கூறும் பகுதியில் இளங்கோவடிகள் ஒன்பது வகை மணிகளில் ஒன்றான வைரத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிள்றார்.

“ காக பாதமும் களங்கமும் விந்துவும்

 ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா

 நூலவர் நொடிந்த நுழை நுண்கொடி

 நுால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ”  

இதற்கு உரை எழுத வந்த உரையாசிரியர்கள் எல்லாம் நால்வகை வருணத்து ஒளியினைக் குறிக்க

“ அந்தணன் வெள்ளை அரசன் சிவப்பு

 வந்த வைசியன் பச்சை சூத்திரன்

 அந்தமில் கருமை என்றறைந்தனர் புலவர் ”

எனவரும் பரஞ்சோதி முனவரின் திருவிளையாடற்புராணத்துத் திருவாலவாய்ப் படலத்தின் (25) செய்யுளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்துடன் மட்டும் விட்டர்களா? இல்லை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இந்நான்கு வருணத்தாரும் தத்தமது வருணத்திற்கு உரிய மணிகளையே அணிய வேண்டும்; அப்படி அணிந்தால்தான் பலவித நன்மைகள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

அந்தணர்க்கு ஒப்பான வெள்ளை நிறம் உள்ள வைரத்தை அணிவோர் ஏழ் பிறப்பும் அந்தணராகவே பிறப்பார்களாம்.

“ மறையோர் அணியின் மறையோராகிப்

   பிறப்பேழும் பிறந்து வாழகுவரே ” என்றும்

மன்னர்க்கு ஒப்பாகக் கூறப்படும் சிவப்புநிற வைரத்தை அணிந்தால் அரசர்களுக்கெல்லாம் பேரரசனாக ஏழு பிறப்பும் பிறப்பான்.  

“ மன்னவ ரணியின் மன்னவர் சூழ  

   இந் நில வேந்தவராவர் எழு பிறப்பும் ”  என்றும்

வணிகர்க்கு ஒப்பாகக் கூறப்படும் பச்சை நிற வைரத்தை அணிந்தவர் சிறந்த செல்வராக உலகினில் வாழ்வர்.

“ வணிகர் அணியின் மனிப்பொன் மலிந்து  

  தணி வற வடைந்து தரணியில் வாழ்வர் ”  என்றும்

சூத்திரர்க்கு ஒப்பாகக் கூறப்படும் கறுப்புநிற வைரத்தை அணிந்தால் சிறந்த மனைவி,பொன், நெல், நல்வாழ்வு முதலியன பெற்று இவ்வுலகின்கண் நீடு வாழ்வர்.  

“ சூத்திரர் அணியின் தோகையர் கனக நெல்

   வாய்ப்ப மன்றி மகிழந்து வாழ்கு வரே ”  

என்றும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சிலப்பதிகாரம் அழற்பட்டு காதையில் மதுரை மாநகரில் அந்தணர், சாதிப்பூதம், அரசர் சாதிப் பூதம், வணிகர் சாதிப்பூதம், வேளாளர் சாதிப்பூதம், என்பதாக நான்கு பூதங்கள் இருந்தனவாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அந்தணப் பூதமாவது: பசுமையான முத்துவடம் அணிந்த நிலவு போல் விளங்கும். மிக்க ஒளியினை யுடைய நான்குமுகன் யாகத்திற்கென உரைத்த வகுப்புகளோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய அந்தணக் கடவுளும்,

“ நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி

  முத்தீ வாழக்கை முறைமையின் வழா அ

    வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் ” என்றும்

அரச பூதத்தை: செவ்விய ஒளியினையுடைய பவளம் போலத் திகழ்கின்ற ஒளியினைப் பொருந்திய மேனியை உடையனாய், ஆழந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரசமும், வெண் கொற்றக் குடையும், கவரியும், கொடியும், புகழமைந்த தோட்டியும், வடித்த வேலும், வடிகயிறும் எனப்படும் இயைபினனாய் அளிவிடற்கரிய சிறப்புக்களையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து இந்நிலத்தை தனதாக்கிக்கொண்டு செங்கோலோச்சிக் கொடிய செயல்களை நீக்கி நீதியினை மேற்கொண்டு தன்பெயரை நிறுத்துதற்குரிய புகழினை மிகுந்து உலகின்கண் காக்கின்ற உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் எனும் பாண்டியனை ஒத்த அதிக வரியினையுடைய அரச பூதமாகிய கடவுளும்

“ பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்

ஆழக்கடல் ஞாலமாள் வோன் தன்னின்

முரைசோடு வெண்குடை கவரி நெடுங்கொடி

உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு

என இவைபிடித்த கையினன் ஆகி

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி

மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக்

கொடுந் தொழில் கடிந்து கொற்றங் கொண்டு

நெடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்

உரைசால் சிறப்பின் நெடி யோன் அன்ன

அரச பூதத்து அருந்திறற் கடவுளும்  ” என்றும்

வணிக பூதத்தை: சிவந்த நிறமுடைய பொன்னை ஒத்த மேனியையுடையனாய் நிலை பொருந்திய சிறப்பினையும் மறம் பொந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமையமைந்த முடிதவிர மற்றையன பூண்ட கலன்களையுடையனாய், வாணிகம் செய்யும் முறையானே பெரிய உலகினை காத்துக் கலப்பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினையுடையனாய் உழவுத் தொழிலானே உலகுக் குதவும் குற்றமற்ற வாழக்கைக்குரியோன் எனப்படுவோனாகிய விளங்கும் ஒளியினையுடைய தலை மீது குழவித்திங்களையணிந்த இறைவனது திருவடி போலும் ஒளிமிளிரும் மிகப்பெரிய  வணிக பூதமாகிய கடவுளும்,

“ செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமதந்த பூணினன்

வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்

உழவுத் தொழிலுதவும் பழுதில் வாழக்கைக்

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியன்

இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர்

விளங் கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்” எனவும்

வேளாள பூதத்தை: கழுவப்பட்ட நீலமணி போன்ற மேனியனாய் ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்ந உடையினனாய் , உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்திப் புலவர் பாடுதற் கேற்ற ஈகைத்துறை பலவற்றிலும் முடியச் சென்ற ஆரவாரம் மிக்க கூடற்கண்ணே (மதுரையின் கண்) பலியினைப் பெறும் பூத்த தலைவனென்னும் வேளாண் பூதமும்,

“ மண்ணுற திருமேணி புரையும் மேனியன்

ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்

ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்

பாடற் கமைந்த பலதுறை போகிப்  

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்  

தலை னென்போன் தானுந் தோன்றி ”

என்றும் கூறியுள்ளார்.

சீவக சிந்தாமணியின் நான்கு வருணப் பாம்புகள்: