Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி Prakrit Inscription


Guru

Status: Offline
Posts: 7329
Date:
கீழடி Prakrit Inscription
Permalink  
 


 தமிழ் பிராமி எழுத்துகள் - அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில்

”தி இந்து”  தமிழ் நாளிதழில், சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடந்துகொண்டிருக்கிற அகழாய்வில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்தில் “டிசன்” என்று எழுதியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. சங்ககாலப்பானையில் “டி” என்னும் எழுத்தில் ஒரு சொல் தொடங்க வாய்ப்பில்லை என்னும் நோக்கில் பானை ஓட்டில் இருக்கும் எழுத்தினைப் படித்தேன். நான் நினைத்தது சரியாக அமைந்தது. பிராமி எழுத்தின் மெய்யான வடிவம் “திஸன்” என்பதேயாகும். நாளிதழில் பிழையாக “டிசன்” எனக்குறிப்பிட்டுவிட்டார்கள். 


%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE




விளக்கத்துக்கு இத்துடன் இணைத்திருக்கும் (“Paint picture “ ) படத்தைப் பார்க்க.

keezhadi-brami%2Bscript.bmp

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.
 
 
         அண்மையில் கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தொல்லியல் துறையில் பணியாற்றிய கல்வெட்டு ஆய்வறிஞர் திரு.க.குழந்தைவேலன் அவர்கள் கல்வெட்டுகள் பற்றி உரையாற்றினார். பயனுள்ள பல செய்திகளை நாம் அறிய முடிந்தது. சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டே எடுத்த சிறு சிறு குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்.
 
         சொற்பொழிவாளர், மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் “கொங்கு நாட்டுப் பெருவழிகள்” என்னும் தலைப்பில் கட்டுரை படித்தவர். “கல்லும் சொல்லும்”, “பாளையப்பட்டு வம்சாவளிகள்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
 
         இனி, அவருடைய சொற்பொழிவிலிருந்து:
 
வரலாற்றுக்கு அடிப்படையாய் கல்வெட்டுகள் அமைகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழகத்தில் கிடைத்தவையே எண்ணிக்கையில் மிகுதி. தமிழ் நாட்டு வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டை அறிய அவை பெரிதும் துணை செய்கின்றன. பழந்தமிழர், பல்வேறு தாக்கங்களுக்கிடையில் மொழியைக் காப்பாற்றியுள்ளனர். மொழியில் பெயர்ச்சொற்கள் முதன்மையானவை. தமிழர், ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கும்போது அப்பொருளின் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகியனவற்றின் அடிப்படையில் பெயர் அமைத்தனர். சங்க காலத்திற்குப் பின்னர் வந்த அரசர்கள் வடமொழிக்குத் துணை நின்றதாகத் தெரிகிறது. அரசர்களின் பெயரில் தமிழ் இல்லை என்பதைப் பாருங்கள். தமிழ் மொழியின் அடையாளம் இல்லை. கோயில்களே முதன்மையாய் இருந்த அக்கால கட்டத்தில், வடமொழிப்பூசையாளர் தம்மை நிலை நிறுத்திக்கொள்ளப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஊர்ப்பெயர்களையும், கோயில்களின் இறைவர் பெயர்களையும் தமிழ் மொழியிலிருந்து  வடமொழியாக்கம் செய்தனர். ஆனால் மக்கள் வழக்கில் தமிழ் இருந்ததால் கல்வெட்டுகளில் மக்களின் வழக்காற்றுக்கேற்ப நல்ல தமிழ்ப்பெயர்கள் நிலை நின்றன. எடுத்துக்காட்டாக நடராசர் என்னும் வடமொழிச்சொல் தேவாரத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை. ஆடவல்லான், கூத்தன், கூத்தபிரான், நக்கன் ஆகிய பெயர்களே கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆடவல்லான் வடமொழியாக்கம் பெற்று நடராசர் ஆயிற்று. இதே போல், சிற்றம்பலம் சிதம்பரம் ஆயிற்று. தஞ்சைக்கருகில் உள்ள ஊர் திருநெல்லிக்கா. நெல்லிக்கு வடமொழியில் அமலா என்று பெயர். திருநெல்லிக்கா அமலேசுவரம் ஆயிற்று.
 
         முன்னரே குறிப்பிட்டவாறு, தமிழர் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகிய உள்ளடக்கங்களின் அடிப்படையில் பெயர் வைத்தனர். வள்ளி என்று ஒரு கிழங்கு பண்டு தொட்டு உள்ளது. தற்காலத்து வரவாகிய மரவள்ளிக்கிழங்குக்கு அதன் தோற்றம் கருதி இப்பெயர் அமைந்தது. சில இடப்பகுதிகளில் (குறிப்பாகக் கொங்குப்பகுதியில்) இக்கிழங்கு குச்சிக்கிழங்கு என அழைக்கப்படுகிறது. இதுவும் உருவம் கருதித்தான். குழந்தைக்கண்ணன் வெண்ணெய்ப்பிரியன். வெண்ணெய் கிடைத்ததும் கூத்தாடுவான். எனவே, அவன் தமிழில் வெண்ணெய்க்கூத்தன் ஆகிறான். வடமொழியிலும் அதே வெண்ணெயை அடிப்படையாக வைத்து நவனீதகிருஷ்ணன் என்கின்றனர். நவனீதம் என்பது வெண்ணெயின் வடசொல். மக்களுக்கு எது எட்டும்? எது புரியும்? வாமன அவதாரம் நமக்குத்தெரியும். குறுகிய வடிவம் உடையவன். எனவே தமிழர் குறளப்பன் என்றனர். வேணுகோபாலன், தமிழர்க்குக் குழலூதும் பிள்ளை. கல்வெட்டுகளில் இறைவர் பெயர்களெல்லாம் தமிழில். வடவர் மொழிமாற்றம் செய்தாலும் தமிழர் இடங்கொடுத்ததால்தான் இம்மாற்றம் நிகழ்ந்தது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாதல்லவா?
 
         கி.பி. முதல் நூற்றாண்டில்தான் சமற்கிருதம் வந்தது. அதற்கு முன்னர் பிராகிருதம் இருந்தது. பல்லவர் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் வட்டெழுத்துகளே இருந்தன. எழுத்துகளில் மாற்றம் ஏற்படப் பல்லவர்களே காரணம். அவர்கள் வடபுலத்தவர். அங்கிருந்த எழுத்து வரிவடிவத்தின் தோற்றத்தைத் தமிழில் புகுத்தினார்கள். பல்லவக் கல்வெட்டு எழுத்துகள் மேலும் கீழுமாக நீண்டிருக்கும். வடவரின் வல்லாண்மை. நாட்டியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் பிறப்பிடம் தமிழகம். ஆனால் இக்கலைகள் பற்றிய தமிழ் நூல்கள் மறைந்து வடமொழி நூல்கள் தோன்றினாலும் அவை தமிழகத்தில்தான் கிடைத்தன.
 
         வடமொழியில் இறைவன் இருப்பிடத்தைக் கர்ப்பக்கிருகம் என்றனர். நாமும் தற்போது அதனைத் தமிழ்ப்படுத்தி கர்ப்பம்=கரு கிருகம்=அறை -> கருவறை என மாற்றிகொண்டிருக்கிறோம். ஆங்கிலச் சொல்லான “வாட்டர் பால்ஸ்”  என்பதை நீர் வீழ்ச்சி என்பது போல. அருவி என்னும் தமிழ்ச் சொல் நமக்குள்ளதை மறந்தோம். கல்வெட்டுகளில், கருவறைக்கு அழகான இயல்பான தமிழ்ப்பெயர் உண்ணாழிகை என்பது காணப்படுகிறது.  உள்+ நாழிகை - > உண்ணாழிகை. அகநாழிகை எனவும் மற்றொரு சொல் உண்டு.  நிலவின் வளர்பிறையும் தேய்பிறையும் பதினான்கு நாள்கள். கல்வெட்டுகளில் இவற்றை “பக்கம்” என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஷ்டமி, நவமி என்பனவற்றை எட்டாம் பக்கம், ஒன்பதாம் பக்கம் என்று எழுதியிருக்கிறார்கள். அமாவாசை “காருவா” (கார்+உவா) என்றாகிறது. தற்போது ஆங்கிலத்தில் Personal  Assistant  என நாம் சொல்லுவதைக் கல்வெட்டில் அணுக்கன் என்று குறித்திருக்கிறார்கள். அணுக்கி என்பது பெண்பாற்சொல். நெருங்கி இருத்தலால் இப்பெயர் வந்தது. இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்கள் கல்வெட்டுகளில் உள்ளன. நாம் பயின்று வழக்கத்தில் கொண்டுவரவேண்டும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அள் என்பது வேர்ச்சொல்லாக இருக்கலாம். அள் -> அண் எனத்திரிகிறது. அண்மை, அணி, அணு, அணுகு ஆகிய சொற்களை நோக்குக. இப்போது பரவலாகக் கையாளும் “அள்ளக்கை” என்னும் சொல்லும் “அள்”  வேரிலிருந்து பிறந்ததாய் இருக்கவேண்டும். “அள்” , பக்கத்தைக் குறிக்கும். கொங்குத் தமிழில் மக்கள் வழக்கில் “இந்தப்பக்கம்”, “அந்தப்பக்கம்” என்பன “இந்தள்ளை” , “அந்தள்ளை” என வழங்குவதையும் நோக்குக. (திரு. கணேசன் அவர்களைப்போல்  சொல்லாய்வு செய்யும் முயற்சி.)
 
         சாதிப்பெயர்கள் பழங்கல்வெட்டுகளில் இல்லை. தொழிலின் அடிப்படையில் பெயர்கள் வழங்கின. முதலி, பிள்ளை என்பன அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருந்த முதன்மையைச் சார்ந்து அமைந்த பெயர்கள். பதவிப்பெயர் என்றும் சொல்லலாம்.
 
         கல்வெட்டுகளில் பல்வேறு பெருவழிகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதியமான் பெருவழி, இராசகேசரிப்பெருவழி ஆகியன குறிப்பிடத்தக்கவை. சேலம் ஆத்தூர் அருகேயுள்ள ஆறகழூரிலிருந்து காஞ்சி வரை சென்ற பெருவழி மகதேசன் பெருவழி என்னும் பெயர் பெற்றிருந்தது. அக்கல்வெட்டில் இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள தொலைவு 27 காதம் என்பதைக் குறிக்க காதம் என்றெழுதி அதன் பக்கத்தில் இரண்டு பெரிய புள்ளிகளையும், அவற்றைத்தொடர்ந்து ஏழு சிறு புள்ளிகளையும் செதுக்கியிருக்கிறார்கள். இரண்டு பெரிய புள்ளிகள் இருபது என்னும் எண்ணிக்கையையும், சிறு புள்ளிகள் ஏழு என்னும் எண்ணிக்கையையும் குறிப்பன. ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.
 
-------------  உரை முடிவு  --------------------
 
         உரை முடிவில் பலரும் பல ஐய வினாக்களை எழுப்பினர். சில விளக்கங்கள் பறிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில செய்திகள்:
 
  • தகடூர் (தர்மபுரிப்பகுதி) கொங்கு நாட்டைச் சேர்ந்ததல்ல. தகடூர் நாடு என்னும் பெயரமைந்த தனி நாடு.
  • கொங்கு நாடு ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு பகுதி வரை அமைந்திருந்தது.
  • கிரந்த எழுத்து - பல்லவர்கள் கி.பி. 6  ஆம் நூற்றாண்டு அளவில் வடமொழிச்சொற்களைப் பயன்படுத்த உருவாக்கினார்கள். ஆனாலும், கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியே எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக செங்கம் நடுகற்களில் “ஸிம்ஹ விஷ்ணு”  என்பதைச் “சிங்கவிண்ண”  என்று எழுதியிருக்கிறார்கள். (இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு: விஷ்ணு, விண்ண என மாற்றம் பெற்றதுபோல் விஷ்ணு கோவிலும் (பெருமாள் கோவில்) “விண்ணகரம்”  எனக் கல்வெட்டில் பயில்கிறது.)
  • அசோகர் காலத்தில் பிராமியைப் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை எனத்தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களும் பயன்படுத்தினர். சான்று: சமணக் குகைத்தளங்களில் உள்ள பிராமிக்கல்வெட்டுகளைப் பொதுமக்களில் பலர் வெட்டுவித்திருக்கிறார்கள். பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் இருபதில் பெருவழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • கோயில் திருப்பணி, குறிப்பாகக் “கும்பாபிஷேகம்”  தமிழில் நடைபெற்றதா எனபதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால், கும்பாபிஷேகம் தமிழ்ச் சொல்லால் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆனைமலைக் குடைவரைக் கோயிலான நரசிங்கப்பெருமாள் கோயில் கல்வெட்டில் (வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு) பராந்தக பாண்டியனின் உத்தரமந்திரியான மாறங்காரி என்பவன் இக்கோயிலைக் கட்டுவித்தபோது, பணிகள் முடியுமுன்னே இறந்து போகிறான். அவனுடைய தம்பி, மாறன் எயினன் என்பவன் உத்தரமந்திரி பொறுப்பேற்றதும் பணிகளை முடித்துக் கும்பாபிஷேகம் செய்கிறான்.கும்பாபிஷேகம் செய்தான் என்பது கல்வெட்டில்நீர்த்தெளித்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இராசகேசரிப் பெருவழி (கோவைக்கருகே உள்ளது), இந்தியாவிலேயே உள்ள பழைய பெருவழியாகும். இன்றும், அப்பெருவழியின் மூலவழி மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.
  • கல்வெட்டுகளில் பறையன் என்னும் சொல் வேளாளர் பெயரோடு சேர்ந்து காணப்படுகிறதே? திரு. பூங்குன்றன் அவர்களின் விளக்கம்: பறையன், பாணன், கடம்பன், துடியன் என்பன முல்லைத்திணைக்குரிய பெயர்கள். முல்லைநிலப் பறையர் குடிகள் வேளாளர்களாக மாறியபின் பறையன் என்னும் பெயரை அடைமொழியாகக் கொண்டனர்.
  • சமணக் குகைத்தளங்கள் பள்ளி, பாழி என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. பள்ளி என்னும் இந்தச்சொல் கல்விகற்கும் இடம் என்பதைக்குறிக்கிறதா ?  - இல்லை. பள்ளி என்பது படுக்குமிடத்தை அல்லது தங்குமிடத்தை மட்டுமே குறிக்கும். அங்கே கல்வி கற்க மக்கள் வந்தார்கள். அவர்கள் “மாணாக்கன்” , “மாணாக்கிஎனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள்.
  • கல்வெட்டு எப்படி எழுதியிருப்பார்கள் ?  முதலில் கல்லில் செம்மண் குழம்பு கொண்டு எழுதிப் பின்னர், கல்தச்சர் என்னும் சிற்பாச்சாரிகள் உளி கொண்டு வெட்டினர்.
 
 
கட்டுரை ஆசிரியர் குறிப்பு : பல்லவர்களின் கிரந்தக் கல்வெட்டு, பல்லவர்களின் தமிழ்க்கல்வெட்டு, “மாணாக்கி” என்னும் சொல் வந்துள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு, கும்பாபிஷேகம் பற்றிய ஆனைமலைக் கல்வெட்டு ஆகியவற்றின் ஒளிப்படங்களை இங்கே பார்வைக்குத் தந்துள்ளேன்.
 
 பல்லவர் கிரந்தக்கல்வெட்டு :
 
Copy%2Bof%2BP1100098.JPG
 
கல்வெட்டுப்பாடம் :
 
                                                                       அமேயமாய :
                                                                       அப்ரதிஹதசாஸந
                                                                       அத்யந்தகாம
                                                                      அவநபாஜந :
பல்லவர் தமிழ்க்கல்வெட்டு : 
 
Copy%2Bof%2BP1100100.JPG
 
 கல்வெட்டுப்பாடம் :
 
                                                 ஸ்ரீதிருக்கழுக்குன்றத்து பெருமான்
                                                னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
                                                து ....................   திருக்கழுக்குன்ற
                                                த்து ஸ்ரீமலை மேல்
                                                (மூ)லட்டானத்து பெருமான்
                                                னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
                                                க வாதாபிகொண்ட நரசிங்கப்
                                                போத்த(ர)சர் (வை)த்தது
 
 
ஆனைமலைக் கல்வெட்டு :
 
Copy%2Bof%2BP1100099.JPG
 
 
 கல்வெட்டுப்பாடம் :
 
                                                                கோமாறஞ்சடையற்கு உ
                                                                த்தரமந்த்ரி களக்குடி வை
                                                                த்யந் மூவேந்தமங்கலப்
                                                                பேரரையன் ஆகிய மாறங்
                                                                காரி இக்கற்றளிசெய்து
                                                                நீர்த்தெளியாதேய் ஸ்வர்க்காரோ
                                                                ஹணஞ்செய்தபின்னை அவ
                                                                னுக்கு அநுஜந் உத்தர
                                                                மந்த்ரி பதமெய்தின பாண்டி
                                                                மங்கலவிசைஅரையன்
                                                               ஆகிய மாறன்னெஇ
                                                               னன்முகமண்டமஞ்செ
                                                               ய்து நீர்த்தெளித்தான்
 
 
 ஐவர்மலை வட்டெழுத்துக்கல்வெட்டு - மாணாக்கி குறித்தது :
 
Copy%2B(2)%2Bof%2BP1060467.JPG
 
 
கல்வெட்டுப்பாடம் :
 
                                                           ஸ்ரீபெரும்பத்தி
                                                           ஊர் பட்டிநிக்குர
                                                           த்தியர் மாணாக்கிய
                                                           ர் அவ்வணந்திக்
                                                           குரத்தியர் செய்
                                                           வித்த தேவர்
 
 
 
கட்டுரையாக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

 

அலைபேசி: 9444939156. 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் கல்வெட்டு
                                                        து.சுந்தரம்,கோவை
 
         அண்மையில், நெகமம் (கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையில் அமைந்துள்ள ஓர் ஊர்) அருகே பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்டு கோவை தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு ஒன்றில் நெகமம் ஊரில் வணிகர்களுடைய சங்க அமைப்பு இயங்கியிருக்கலாம் என்று கருதத்தக்க சான்றுகள் இருந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தோம். நெகமத்தில் இதற்கான சான்றாகக் கல்வெட்டுகள் எவையும் கிடைக்காத சூழ்நிலையில், தற்போது ஒரு சான்று கிடைத்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் நெகமம் மற்றும் நெகமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகையில், நெகமம் சந்தைக்கு மிக அணித்தாயுள்ள பத்ரகாளியம்மன் கோவிலை ஆராய்ந்து பார்க்கும்போது, கோயிலின் கருவறைக்கு அடுத்தாற்போல் உள்ள அர்த்தமண்டபத்தின் நிலைக்கால் ஒன்றின்மீது எழுத்துகள் காணப்பட்டன. கற்களால் அமைக்கப்பட்ட நிலைக்கால்கள் முழுவதும் காவி வண்ணத்தில் வழவழப்பாக ” ஆயில் பெயிண்ட் “ என்னும் எண்ணை வண்ணப்பூச்சால் எழுத்துகளின் சீர்மையான வடிவம் மறைந்துவிட்டிருந்தது. கல்வெட்டை ஒளிப்படம் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பின் வரும் செய்திகள் புலனாயின.
 
நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் - கல்வெட்டுப்பாடம்
                                                        
 
 
 
.................தேவற்(கு)
........... (யா)ண்டு ஒ
ன்பதாவது
நியமத்து
வியாபாரி
(தேவன்) பி                         
ள்ளனான அ
திராசராச சீ
லை செட்டி
யிட்ட திருனி
லை காலிரண்
டும் அதிரா
ச(ராச) சிலை
(செட்டி) தன்
மம்
 
 
         நெகமம் என்னும் ஊர்ப்பெயர் கல்வெட்டில் “நியமம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. வணிகக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஓர் அமைப்பே “நிகமம்  ஆகும். அது போன்ற ஒரு வணிகச்சங்கம் நெகமத்தில் இயங்கிவந்துள்ளது இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது. “நியமத்து வியாபாரி என்று கல்வெட்டு வரியில் வருவதாலும் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என உறுதியாகக் கருதலாம். கல்வெட்டின் காலத்தை வழக்கமாகக் கண்டறிய, கல்வெட்டின் தொடக்க வரிகள்தாம் துணை நிற்கும். ஏனெனில், தொடக்கவரிகளில் ஆட்சியில் இருக்கும் அரசனின் பெயரும், அரசனது ஆட்சியாண்டும்  அதாவது அரசன் பட்டத்துக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்னும் குறிப்பும் காணப்படும். இங்கே, கல்வெட்டின் தொடக்க வரிகள், கல் பொளிவின் காரணமாகச் சிதைந்து போயுள்ளமையால், அரசனின் பெயர் காணப்படவில்லை. ஆனால், அரசனின் ஆட்சியாண்டு ஒன்பதாவது என்னும் குறிப்பு உள்ளது. எனவே, கல்வெட்டின் காலத்தைத்துல்லியமாகச் சொல்ல இயல்வில்லை எனினும் கோவைப்பகுதியில்  கொங்குச்சோழனான வீரரசேந்திரனின் கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைப்பதால் இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1216 எனக் கருத வாய்ப்புண்டு. மேலும், கல்வெட்டின் எழுத்தமைதியை நோக்குமிடத்து, கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனக்கொள்வதில் தவறில்லை. கோவிலும் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக்கொள்ளலாம்.
         அடுத்து, வியாபாரியின் பெயர் தேவன் பிள்ளனான அதிராசராச சிலை செட்டி  எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவருடையஇயற்பெயர் தேவன் பிள்ளன் என்பதாகும். சிறப்புப்பெயராக “அதிராசராசஎன்று கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளாகவோ, அல்லது அரசின் சார்பாகவோ செல்வாக்குள்ள ஒருவருக்கு இது போல் இயற்பெயரோடு ஒரு சிறப்புப்பெயர் அமைந்துவருவது மரபாகக் கல்வெட்டில் காணப்படுகிறது. தேவன் கந்தனான தொண்டைமானேன், சோழன் கூத்தனான வீரராசேந்திர இருங்கோளனேன் ஆகிய பல பெயர்கள் இவ்வாறு கல்வெட்டுகளில் வருவதைப்பார்க்கிறோம். இங்கு நமது கல்வெட்டில், அதிராசராச  என்னும்சிறப்புப்பெயர் அரசனைக்குறிப்பதாகும். இது வீரகேரள அரசனான அதிராஜராஜன் என்பவருடைய பெயரால் அமைந்த சிறப்புப்பெயராகலாம். அடுத்து, “சிலைசெட்டி என்னும் பெயரில் அமைந்த செட்டி”  என்பது அவர் வணிகர் அல்லது வியாபாரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது. “சிலைசெட்டி என்பது வணிகர்களில் ஒரு வகையினரைக் குறிக்கின்றது எனலாம். சேவூர் கபாலீசர் கோவில் கல்வெட்டில் “மாந்தோட்டத்தில் வியாபாரி ஈசானச் சிலைசெட்டி பொன்னம்பலக்கூத்தன்”  எனவும், (மேட்டுப்பாளையம்) வெள்ளியங்காடு பதினெண்பூமீசுவரர் கோயில் கல்வெட்டில் குலோத்துங்கச் சிலைசெட்டி”  எனவும் வருகின்ற தொடர்களை ஒப்புநோக்கலாம். வணிகர்கள் “பதினெண்பூமியார்”,  “நானாதேசியார்”,  “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்”  ஆகிய பல்வேறு வகையினராகக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள். அவர்களில் “சிலைசெட்டிகள் ஒரு உட்பிரிவினராக இருக்கலாம். அல்லது “சீலை செட்டிஎனக்கொண்டால், அந்த வியாபாரி ஒரு துணி வணிகராக இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது. நெகமம் பகுதியில் நெடுங்காலமாக நெசவுத்தொழில் நடைபெற்று வந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று. துணி வணிகர் என்னும் கருத்துக்கு இது வலு சேர்க்கிறது என்றாலும் இக்கருத்து ஆய்வுக்குரியது.
 
         அடுத்து, திருனிலைக்காலிரண்டும் அதிராசராச சிலைசெட்டி தன்மம் என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் நிலைக்கால்களைக் கோவிலுக்குக் கொடையளித்துள்ளார் என்பது கல்வெட்டின் முதன்மைச்செய்தியாய் அமைகிறது. முடிவாக, ஒரு வியாபாரி கோயிலின் நிலைக்காலிரண்டு கொடையாக அளித்துள்ளார் என்னும் கல்வெட்டுச் செய்தியின் மூலம், நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
 
 
         கோவிலின் அதிட்டானப்பகுதியில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. அதன் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு அது கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனகருதலாம். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகப் படிக்க இயலவில்லை. இருப்பினும் “பண்டாரத்தில் என்னும் தொடரைப்படிக்க முடிந்தது. ஏதோ ஒரு கொடைக்காகக் கோயில் பண்டாரத்தில் காசோ அல்லது பொன்னோ செலுத்தப்பட்டிருக்கலாம். அதன் ஒளிப்படம் இங்கே தரப்பட்டுள்ளது.
 
 
 
நன்றி :   சிலைசெட்டி”  என்பதைச் “சீலைசெட்டி” எனப் பாடம் கொண்டு துணி வணிகர் நெகமத்தில் இருந்தனர் என்னும் கருத்துத் தந்துதவிய மதுரை தொல்லியல் அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் அவர்களுக்கு நன்றி.
 
 
 
P1060886.JPG

P1060887.JPG

P1060888.JPG

P1060889.JPG

P1060890.JPG

P1060891.JPG

P1060892.JPG

P1060893.JPG

P1060894.JPG

P1060895.JPG

P1060882.JPG

 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆங்கிலேயர் கல்லறைகளுக்கு நடுவே ஒரு தமிழரின் கல்லறைக்கல்

 
                                          அக்டோபர் 19, 2014                                        
                                                          ஆங்கிலேயர் கல்லறைகளுக்கு நடுவே ஒரு தமிழரின் கல்லறைக்கல்
 
 
         இன்று, தினமணி நாளிதழின்  இணைப்புப்பகுதியான தினமணி கதிரில் வெளியான ‘ஒன்ஸ்மோர்’ பகுதியில் எழுத்தாளர் நரசய்யாவின் பேட்டியில் சென்னை தானப்ப முதலியார் பற்றிய செய்திக்குறிப்பைப் படித்தேன். படித்ததுமே, நான் 9-7-2012 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தைச் சுற்றிப்பார்த்ததும், தேவாலயத்தின் நுழைவு வாயிலுக்கருகேயுள்ள சுற்றுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டிருந்த கல்லறைக் கல்வெட்டுகளைக் கண்டு ஒளிப்படங்கள் எடுத்து வந்ததும் நினைவுக்கு வந்தன. அவை அனைத்துமே மறைந்த ஆங்கிலேய அதிகாரிகளின் நினைவாக ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள். அவற்றின் இடையில் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பார்வையைத் தனித்துக் கவர்ந்தது. வியப்புடன் அதை ஒளிப்படம் எடுத்துக்கொண்டதோடு அங்கேயே படித்தும் பார்த்தேன். தானியப்ப முதலியார் என்னும் பெயர் அதில் காணப்பட்டது. சென்னை மாநகரில் தானப்ப முதலித் தெரு இருப்பது நினைவுக்கு வந்தது. இது அவருடைய நினவுக்கல்தான் என்று தெரிந்தது. ஆனால், அவரைப்பற்றிய செய்திகள் எவையும் அறிந்திருக்கவில்லை.
 
         மேற்படி தினமணி” ச்செய்தியில், மதராசில் முதன் முதலாக விமானம் வாங்கியவர் தானப்ப முதலியார் என்றும், பிரெஞ்சு நாட்டவருடன் தொடர்புடையவர் என்றும், உரோமன் கத்தோலிக்கராக மதம் மாறி “லாசரஸ் தியேதிதி”  என்னும் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. என்னுடைய கல்வெட்டுகள் சேர்க்கையிலிருந்து அவ்வொளிப்படங்களை இன்று எடுத்துப்பார்த்தேன். அப்படங்களை இந்தப்பகுதியில் பகிர்ந்திருக்கிறேன். தானப்ப முதலியாரின் நினைவுக்கல்வெட்டின் பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.
 
 
 
          1691 (வரு) செல்லும்
          பிறமாதூத வருஷம் சித்திரை
          மீ 21 உ (தேதி) அகம்படிமுத
          லிகளில் புதுச்சேரி பறாஞ்ச
          கும்புனிக்கு காறணகற்தராயி
          ருந்த லாசுறு தமோத்த என்கு
          ற தானியப்பமுதலியார் மற
          ணமானார் அவரை சென்ன
          பட்டணத்திலே சந்தந்திரை
          யுட கோயிலிலே அடக்குனது
          அவர் தகப்பனாருட பெ
          .....................முதலியார் ...........
 
P1030059.JPG
 
 
Copy%2Bof%2BP1090082.JPG
கல்வெட்டை ஆய்வுக்குட்படுத்தும்போது கீழ்க்கண்ட செய்திகளும், உறுதிப்படுத்தப்படவேண்டிய ஐயங்களும் கிடைக்கின்றன.
 
         கல்வெட்டின் உச்சியில் சிறிய எழுத்தில் “பரமண்டல.....”  என்னும் தொடர் காணப்படுகிறது. ஆங்கில ஆண்டு 1691, தமிழில் உள்ள எண் குறியீடுகளில் தரப்பட்டுள்ளது. ஆங்கில ஆண்டு தரப்பட்டுள்ளதேயன்றி ஆங்கில மாதமோ ஆங்கிலத்தேதியோ தரப்படவில்லை. ஆனால், தமிழ் ஆண்டு, மாதம், தேதி ஆகியன தரப்பட்டுள்ளன. கிழமை எது என்னும் குறிப்பு இல்லை. பிரமோதூத(Pramoda) ஆண்டு, சித்திரை தேதி 21. பிரமோதூத ஆண்டு “பிறமாதூத” என்று மாறுபட்ட எழுத்தில் உள்ளது. இதற்கு ஈடான ஆங்கிலத்தேதி 19-5-1691 ஆகும். இதேபோல, பிரெஞ்சு என்னும் சொல் “பறாஞ்ச” என்று மாறுபட்ட எழுத்தில் உள்ளது.  அவர் அகம்படி முதலிகள் வகுப்பினர் என அறிகிறோம். அகமுடைய முதலி என்று தற்காலத்தில் குறிப்பிடும் வழக்கு பின்பற்றப்படவில்லை. பழங்கல்வெட்டுகளில் பயிலும் “அகம்படி முதலிஎன்னும் சொல்லே ஆளப்பட்டுள்ளது. நாயக்கர் காலக்கல்வெட்டுகளில் நிர்வாக உயர் அதிகாரிகளைக் “காரியத்துக்கு கர்த்தர்” எனக்குறிப்பிடுவது மரபு. அம்மரபை ஒட்டியே இங்கும் “காறணகற்தராயிருந்த  என்று குறிப்பிடப்படுகிறது. தானப்ப முதலியார் பிரெஞ்சு கம்பெனிக்குக் காரணகர்த்தராய் (உயர் பதவியில்) இருந்துள்ளார் என அறிகிறோம்.
 
         அடுத்து அவருடைய கிறித்தவப்பெயரை நோக்கும்போது, நரசய்யா அவர்கள் லாசரஸ் தியேதிதி”  எனக்குறிப்பிடுகிறார். ஆனால், கல்வெட்டில் “லாசுறு தமோத்த”  எனத்தரப்பட்டுள்ளது. இதில், தியேதிதி என்பது சரியான உச்சரிப்பு ஆகாது எனக்கருதவேண்டியுள்ளது. தமோத்த”  என்பதும் சரியான கிறித்தவப்பெயரின் உச்சரிப்பா என்னும் ஐயம் எழுகிறது. தமோத்த” என்பதற்குச் சரியான ஆங்கில உச்சரிப்புப் பெயர் நமக்குத்தெரியவில்லை. மேலும் கல்வெட்டில், பழங்கல்வெட்டு மரபைப்பின்பற்றி மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடவில்லை; ஏகார, ஓகார நெடில் எழுத்துகளுக்கு குறிலைக்குறிக்கும் ஒற்றைக்கொம்பே எழுதப்பட்டுள்ளது. இதுவும் பழங்கல்வெட்டு மரபேயாகும்.
 
         அடுத்து அவரை அடக்கம் செய்த தேவாலயம் எது என்னும் ஐயம் எழுகிறது. நரசய்யா அவர்கள் செயிண்ட் மேரீஸ் தேவாலயம் என்று குறிப்பிடுகிறார். ஆனால், கல்வெட்டு குறிப்பிடும் தேவாலயம் “சந்தந்திரையுட கோயில்” .  இதிலும் மெய்யெழுத்துகளில் புள்ளி இல்லாமை நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. “சநதநதிரை”   என்ற கல்வெட்டுச் சொல்லைக்கொண்டு தேவாலயத்தின் பெயரை உறுதிப்படுத்துவது கடினம். ஆனால் கல்வெட்டின்படி மேரீஸ் தேவாலயம் இல்லை என்பது தெளிவு. “சநதநதிரை ஒருவேளை “சாந்தோம்”  தேவாலயமாக இருக்குமா? ஆய்வாளர்கள்தாம் தெளிவு படுத்தவேண்டும். கல்வெட்டின் இறுதியில் “தகப்பனாருட”  என்னும் தொடர் எதைக்குறிக்கிறது எனப்புலப்படவில்லை.


 
பின் குறிப்பு : ”செயிண்ட்’  என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில், தமிழ் ஒலிப்பில் கொணரும்போது “சந்த்”  எனவும்,  அதேபோல் “ஆண்ட்ரூஸ்”  என்னும் ஆங்கிலச் சொல்லை “அந்திரை”  எனவும் குறிப்பிடுவதற்குப்பெரிதும் வாய்ப்பு உள்ளது. 
“சந்த்” + “அந்திரை” = “சந்தந்திரை”  என அமையும். எனவே, கல்வெட்டில் உள்ள “சந்தந்திரை” கோயில் என்பது செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தைக் குறிக்கும் எனலாம். தானப்ப முதலியார் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார் எனக்கருத இடம்
உண்டு.
 
 
 
 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
 
 
 
P1030035.JPG

P1030036.JPG

P1030037.JPG

P1030038.JPG

P1030039.JPG

P1030040.JPG

P1030041.JPG

P1030043.JPG

P1030044.JPG

P1030045.JPG

P1030046.JPG

P1030047.JPG

P1030048.JPG

P1030049.JPG

P1030050.JPG

P1030051.JPG

P1030052.JPG

P1030053.JPG

P1030054.JPG

P1030055.JPG

P1030056.JPG

P1030057.JPG

P1030058.JPG

P1030060.JPG

P1030062.JPG

P1030063.JPG

P1030064.JPG

P1030065.JPG

P1030066.JPG

P1030067.JPG

P1030068.JPG


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

காணாமல் போன கடவுள் சிலைகள்
 
 
        முகலாயர்களின் படையெடுப்பின்போது தென்னகத்தில் பல கோயில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின. கட்டுமானப்பகுதிகளும் சிலைகளும் உடைக்கப்பட்டன. மூலஸ்தானத்து விக்கிரகங்கள் பல காணாமல் போயின. ஒரு சில கோயில்களில் அவ்விக்கிரகங்களைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
 
        அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்றுள்ளது. முகலாயப்பேரரசன் ஔரங்கசீப் தென்னிந்தியாவில் கி.பி.1688-இல் நடத்திய படையெடுப்பின்போது மராட்டர்களின் மீதும் காஞ்சியின் மீதும் தாக்குதல் நடத்தினான். அதுசமயம் தென்னிந்தியாவின் வேறு சில பகுதிகளும் தாக்குதல்களுக்குள்ளாயின. இத்தாக்குதல்களின்போது கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன. காஞ்சித்தாக்குதலைத்தெரிந்து முன்னெச்சரிக்கையாக காஞ்சியிலிருந்த மூன்று பெரிய கோயில்களின் நிர்வாகத்தினர் கோயில்களின் இறைவர் திருமேனிகளை அடையாளம் தெரியாதவாறு தோற்றத்தை மாற்றி, திருச்சி மாவட்டம் உடையார்பாளையத்துக்காடுகளில் ரகசியமாக ஒளித்து வைத்தனர். முகலாயரின் தாக்குதல் ஆபத்து நீங்கி, காஞ்சியின் பாதுகாப்பு உறுதியானதும் மீண்டும் பெருமாளைக் காஞ்சிக்குக்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உடையார்பாளையத்து ஆட்சித்தலைவனாக இருந்தவன், பெருமாள் மீது கொண்ட பக்தியால் பெருமாள் திருமேனியைத்தர மறுக்கவே,காஞ்சியின் ஜீயரான ஸ்ரீனிவாசர் என்னும் ஆத்தான் திருவேங்கட ராமானுஜர் குறுக்கிட்டார். அவரது சீடரான ராஜா லாலா தோடர்மல் என்பவனின் உதவியை நாடினார். ராஜா தோடர்மல், கர்னாடக நவாபின் படைத்தலைவனாக இருந்தவன். அவன், உடையார்பாளையத்துத் தலைவனைப் படைகொண்டு தாக்கப்போவதாக வெருட்டிப்பணியவைத்து, பெருமாளின் சிலையை மீண்டும் காஞ்சியில் பிரதிஷ்டை செய்துவைத்தான். இந்நிகழ்ச்சி, மிகச்சிறப்பான முறையில் கொண்டாட்டத்துடன் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் காஞ்சியில் உடையார்பாளையம் திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்பெறுகிறது.
 
          இச்செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டுச்செய்தி ஒன்று உண்டு. காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் தாயார் சன்னதிக்கெதிரில் உள்ள பலகைக்கல்வெட்டில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஜீயர் திருவேங்கட ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று ராஜா லாலா தோடர்மல், பெருமாளின் திருமேனியைத் திரும்பக்கொண்டுவந்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வைத்ததைக்குறிப்பிடுகிறது.
கல்வெட்டின் காலம் கி.பி. 1710(விரோதி வருடம்,பால்குன மாதம்). கல்வெட்டின் முதல் பகுதியில், இரண்டு வடமொழிச்செய்யுள்களும், அவற்றுக்கான தெலுங்கு மொழிபெயர்ப்பு வரிகளும், அவற்றையடுத்து நாகரி எழுத்துகளில் பன்னிரண்டு வரிகளில் சிலை மீட்புச்செய்தியும் உள்ளன.
  
        இங்கே குறிப்பிட்ட ராஜா தோடர்மல், செஞ்சியின் மீது படையெடுத்து, புகழ்பெற்ற ராஜா தேசிங்கைத்தோற்கடித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
குறிப்பு: துணை நின்ற நூல் :- இந்தியத் தொல்லியல் துறையின் 1919-20-ஆம் ஆண்டறிக்கை.
 
 
 து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை-641004.
அலை பேசி: 9444939156.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard