Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி

 
தமிழ் முச்சங்கம் பற்றிய கட்டுக்கதை
தமிழில் இலக்கிய வரலாறு -கார்த்திகேசு சிவத்தம்பி
அடுத்து, இறையனார் அகப்பொருளுரையிலே தரப்பட்டிருக்கும் முச்சங்கம் பற்றிய ஐதீகக் கதையிலேயே, கடந்தகால இலக்கியத்துக்கான நிகழ்கால அர்த்தத்தை மதிப்பிடும் முயற்சியினை எதிர்நோக்குகின்றோம். இவ்வுரையின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியே என்பதை இராம.சுந்தரம் முடிவாக நிறுவியுள்ளார்.21 அதனைப் பொதுவில், கி.பி.7 ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு படைப்பாகவே கொள்வது வழக்கு.
இவ்வுரையிலேயே மூன்று சங்கங்கள் பற்றிய ஐதீக நிலைப்பட்ட முழு விவரங்கள் அடங்கிய, நன்கமைந்த விவரமான 'அறிக்கை' காணப்படுகின்றது. முச்சங்கம் பற்றிய அவ்விவரங்கள் எல்லோர்க்கும் நன்கு தெரிந்தனவே.22 அவற்றினை இங்கு மீட்டும் கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் அக்கதையிலே கூறப்பட்டுள்ள சில தகவல்கள் பற்றி இங்குக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
மேலும் இரு விவரங்களை நினைவூட்டிக் கொள்ளல் வேண்டும்.
அ. இந்த மூன்று சங்கங்களும் மதுரையிலேயே நடத்தப் பெற்றன23 மதுரை, பின்னர் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்று ஆகின்றது என்பதனை மனத்திருத்தல் வேண்டும்.
ஆ. முதற் சங்கத்திற் பங்கு கொண்டோரென அக்கதையிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர்களின் பெயர்கள், இந்துத் தெய்வங்கள் சிலவற்றின் பெயர்களாகும்.
இந்து ஐதீகக் கதைகளில் அடிக்கடி வரும் அகத்தியர், முதலிரு சங்கங்களினதும் அங்கத்தினராகவிருந்தாரென்று குறிப்பிடப்படுகின்றது.
இவ் ஐதீகம், தமிழிலக்கியத்திற் சமணத்தின் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகத் தொழிற்பட்ட காலத்தின் பின்னரே, சமண நோக்குச் சார்புடைய அற இலக்கியங்கள் எழுதப்பட்டதன் பின்னரே எடுத்துக் கூறப்படுகின்றது.
சமண மத நிறுவனங்கள் இயங்கிய முறைமை, அந் நிறுவனம் இலக்கியத்தைப் பயன்படுத்திய முறைமை, அவர்களால் (சமணர்களால்) எழுதப்பெற்ற இலக்கியங்கள் அதற்கு முந்தித் தோன்றிய இலக்கியச் செல்நெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த முறைமை ஆகியன இப்பொழுது நிலையான இலக்கிய வரலாற்றின் அங்கங்களாகிவிட்டன.24 சமணர்களின் 'மிசனறி' (தேவ ஊழிய) நடவடிக்கையில் வச்சிர நத்தியின் திராவிட சங்கத்துக்குரிய இடம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.25
பாண்டிய, பல்லவ அரசுகள், ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்தனவெனினும், பக்தி இயக்கத்துக்கு அரசு ஆதரவு வழங்கின.26 பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற, சைவர்கள், வைஷ்ணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவத்துக்கு அல்லது வைஷ்ணவத்துக்குத்தான் உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும், திருஞான சம்பந்தர், திருமங்கை ஆழ்வா‘ர் போன்றவர்கள் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும்.27
இப் பின்னணியிலேயே இறையனார் அகப்பொருளுரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டு கொள்ளல் வேண்டும்.
ஐதீகவாக்கம் என்பது வரலாற்றினைத் 'தயாரிக்கும்' ஒரு வகைமுறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை, தமிழை இந்துசமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் ஐதீகத்துக்குரிய இடம் பெருமுக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை ('சங்க'த்தினை) எடுத்துக்கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம். இதனிலும் பார்க்கச் சுவாரசியமானது. அக்கதைக்குள் அரசர்கள் கொண்டு வரப்படும் முறைமையாகும். கதையின் அமைப்பை நோக்கும்பொழுது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக் கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் சீவாதாரன பகுதியாக்கப்பட்டுள்ளது. உண்மையில்ல, சங்கம் பற்றிய கதை தொடங்கும் பகுதி பின்வருமாறு தொடங்குகின்றது.
'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'
கடவுளர்களே பங்கு கொள்ளும் ஒரு சங்கத்திற்கு ஓர் அரச தளத்தை கற்பிப்பதன் மூலம், அப்பொழுது மேற்கிளம்பும் பாண்டிய ஆட்சியை, சந்தேகத்துக்கு அப்பாலான ஒரு முறைமையில் முறைவழிப்பட்ட தாக்குவதற்கான முயற்சி இக்கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சங்கம் பற்றிய கதை, தமிழிலக்கிய வரலாற்றை சைவத்தின் வரலாற்றுடன் இணைப்பதற்கான முதல் முயற்சியாகும்.
நாயன்மார்கள் தமிழுக்கு முற்றிலும் சைவச் சார்பான தோற்றம்பற்றிக் குறிப்பிடுவதும், தமிழை வடமொழிக்கு இணையாகக் கொள்வதும், இம்முயற்சியின் அடுத்தபடிகளாகும். இவற்றினைப்பற்றிப் பேசும் இவ்வேளையில், தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்தும் இம்முயற்சிக்கான பௌத்த பதிற் குறிப்பினைப்பற்றி இங்கு குறிப்பிடலாம்.
'ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'
- வீரசோழியம்-பாயிரம் (11)
வீரசோழிய ஆசிரியர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவராகவிருத்தல் வேண்டும். அவர் தமிழை அவலோகி தேஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கின்றார் (இது சொல்லப்பட்ட காலம் சைவத் தமிழ் மரபைக் காக்க இராஜராஜன் முதல் சேக்கிழார் வரையுள்ள சோழப் பேரரச ஆட்சியுறுப்பினரே முன்னின்று உழைத்த காலமாகும்). இதே போன்று ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக் கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளேயாகும். தமிழ்நாட்டில் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கு ஒங்காதிருந்த காலத்தில் (9-ம் நூற்றாண்டு முதல் 11-அம் நூற்றாண்டு வரை) தாங்கள் எழுதிய இலக்கியக் கூற்றுக்குத் தனியான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்க முனைந்தது ஆச்சரியத்தைத் தருவதன்று.
குறித்த அப்பண்பாட்டுச் சூழல்களில் வரலாறெழுது முறையியல் தொழிற்பட்ட முறையினை நோக்கும்பொழுது, இந்த ஐதீகங்களை உண்மையில் வரலாழெழுதுவதற்கான முயற்சிகளாகவே கொள்ளல் வேண்டும். எந்த ஒரு மதமும், தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைப்பது அத்தியாவசியமே. அதன் காரணமாக அம்மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தையே அது தனதாக்கிக் கொள்ள முயல்வது இயல்பே. நமது பண்பாட்டுச் சூழலில் இலக்கிய வரலாறு தொழிற்பட்ட ஒரு சிறப்பான அமிசமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும்.
 
மூன்று சங்கங்கள் சரித்திர ரீதியில் இருந்ததா-இல்லையா ?
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி..பி.8ம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் கட்டிவிடப்பட்ட கதையே முச்சங்க கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ அவற்றை கடல் கொண்டதாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்க கதையை நம்பி சங்க காலத்தை கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.
- பக்-30 சங்க கால மன்னர் வரலாறு 
வி.பி.புருஷோத்தம்,
தமிழ அரசு உதவித் தொகையோடு வெளியிடப்பட்டது,
Published with TN Govt ASSISTANACE 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

 
குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? 
பேராசிரியர். க.பூரணச்சந்திரன் 
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். லெமூரியாக் கண்டம் என்ற ஒன்றுகூட-அதைப்போல-இருந்தததாகச் சொல்கிறார்கள். இவையெல் லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலப்பகுதிகள். அப்போது பூமியின் தோற்றமே வேறாக இருந்தது. இப்போதுள்ள பல நிலப்பகுதிகள் துண்டுபட்டும், பல நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்தும் தோற்றமளித்தன. எந்தக் கலைக்களஞ்சியத்திலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம்.
ஆனால் குமரிக்கண்டத்தில் ஏழுஏழு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன, அவற்றில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. (நண்பர் அவற்றின் பெயர்களையெல்லாம் வேறு தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.) சிலப்பதிகாரத்தில் “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வருவதெல்லாம் தொல்பழம் மனத்தின் நினைவுகள் அல்லது கூட்டு நனவிலியின் நினைவுகள் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கொள்வார்கள்.
ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழியே பிறக்காத கற்கால மனிதர்கள்தான் வாழ்ந்தார்கள். இன்று போற்றப்படுகின்ற எகிப்திய நாகரிகம் (பிரமிடுகளையெல்லாம் வானியல் அறிவோடு கட்டியவர்கள்) என்பதே இன்றைக்கு ஐந்தாயிரம்-ஆறாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுதான். சிந்து வெளி நாகரிகமும் அவ்வாறே. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்தது என்பது பழங்காலக் கற்பனை. ஒருவேளை ஆரியர்கள் அவர்களுடைய வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கதைகட்டியதற்கு மாற்றாகத் தமிழ்ப்புலவர்கள் இப்படிக் கதைகட்டினார்களோ என்னவோ!
லெமூரியா என்ற பெயர், லெமூர் என்ற ஆதிக்குரங்கின் பெயரால்தான் வருகிறது. இதனால்தான் புதுமைப்பித்தன் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று சொல்வதில் தமிழர்களுக்கு ஆசை என்று கிண்டல் செய்தார் போலும்.
இன்று நாம் செய்ய வேண்டியது லெமூரியாவையோ குமரிக் கண்டத்தையோ தேடுவது அல்ல. அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அங்கு தமிழர்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வேறு கற்கால இனம் ஏதேனும் வாழ்ந்திருக்கவும் கூடும். ஏனென்றால் இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நிலப்படங்களில் ஆப்பிரிக்காவும் இந்தியத் துணைக்கண்டப் பகுதியும் இணைந்திருந்ததாகக் காட்டப்படுகிறது.
இப்போது நாம் செய்யவேண்டியது, இன்று தமிழினம் தன்னை எப்படித் தற்காத்துக் கொள்ளப்போகிறது, எப்படி எதிர்காலத்தின் சவால்களை எதிர் கொண்டு வாழப்போகிறது என்பது பற்றிய சிந்தனைதான். குமரிக்கண்டம் இருக்கட்டும், இன்று போகும் போக்கில் இனி ஐந்து முதல் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயமே இருக்காது, நிலம் எல்லாம் பிளாட்போட்டு விற்பனை செய்யப்பட்டு விடும், சோற்றைவிடுங்கள் ஐயா, குடிக்கத் தண்ணீருக்கு எங்கே போகப்போகிறீர்கள்? அரசியல்வாதிகளுக்கு இதுபற்றிய அக்கறை எல்லாம் இல்லை
உணவு உடை உறைவிடம் என்றார்கள் பழங்காலத்தில். உணவையும் (விவசாயத்தையும்) உடையையும் (நெசவுத்தொழிலையும்) ஒழித்துவிட்டு வெறும் கான்கிரீட் காடுகளில் (உறைவிடம்) வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணமா?
அன்பர்களே, தயவுசெய்து தமிழ்மீது உள்ள அக்கறை என்றபெயரில் குமரிக் கண்டத்தையும் பழங்கால நினைவுகளையும் தேடுவதைவிட்டு இன்றைக்கு வாழ்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி யோசியுங்கள்.
http://siragu.com/?p=5130
Tweet கேள்வி (39): குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? அது பற்றித் தங்கள் கருத்தென்ன? நண்பர் ஒருவர் தான் குமரிக்கண்டம் என்ற நூல் ஒன்று எழுதப்போவ தாகக் கூறி அதுபற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு என் எதிர்வினையைப் பொதுவாகச் சிறகில் தெரிவிக்க வேண்டியே இந்த பதில…


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 தமிழ் முச்சங்கங்களும் முழுப்பொய்களும்

 
 முச்சங்கங்களும் முழுப்பொய்களும் -முனைவர் ப. சரவணன்
 
பொ.யு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்க் களவியலுரை முதலான தமிழ் நூல்களிலும் பொ.யு. 10ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டிலும் சங்ககாலத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்கள், மூன்று வேறுபட்டக் காலகட்டத்தில், மூன்று வேறுபட்ட நிலப்பரப்பில், மூன்று வேறுபட்ட சான்றார் கூட்டத்தில் இருந்ததாகக் தெரிவித்துள்ளன. அந்நூல்கள் கூறும் காலகட்டமும், மன்னர் மற்றும் புலவர் கூட்டங்களும் ஏற்புடையனவாக இல்லை. அவை தமிழையும் தமிழரையும் மிகைப்படுத்திப் புகழும் நோக்கோடு எழுதப்பெற்ற புனைவுகளே. டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி, இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இப்புனைவினை முழுவதும் நம்பாவிடினும் “ஒரு சங்கமாவது இருந்திருக்கக் கூடும்“ [4] என்று கருதுகின்றனர்.
978-93-8414-906-2_b-01.jpg
 
 
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் (பிற்காலத்தொகுப்பு நூல்கள் தவிர) மூச்சங்கங்கள் பற்றிய எக்குறிப்பும் இல்லை. “புணர்க்கூட்டு“ என்ற சொல் மதுரைக்காஞ்சியில் (762) காணப்படுகின்றது. மன்றம், தமிழ்நிறை என்ற சொற்களாலும் “சங்கம்“ என்ற அமைப்பு பிற இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது.
 
முச்சங்க கால நூல்களான அகத்தியம், கலி, குருகு, வெண்டாளி, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்றனவற்றுள் எவையும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இவையெல்லாம் கற்பனை நூல்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
 
மதுரையில் சங்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதனை மதுரா, உத்தர மதுரை, தென்மதுரை, வட மதுரை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[5] அக்காலத்தில் மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர்தான் இருந்துள்ளது. அதற்கு முற்பட்டக் காலத்தில் மதுரைக்கு “மதிரை“ என்ற பெயரே இருந்துள்ளது. இவற்றைக் கல்வெட்டாதாரங்கள் மெய்ப்பித்துள்ளன.
 
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை விரிவுபடுத்தி, ஸ்கை நலன் [6] என்ற ஒரு வலைத் தளத்தில் வரைபடத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முச்சங்கங்கள் பற்றி மாயையின் உச்சம் அச்செய்தி.
 
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை உடைத்தெறியும் ஆய்வுக்கட்டுரைகளுள் மூ. அய்யனார் எழுதிய “இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்கவரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்“[7] என்ற கட்டுரை ஆகச்சிறந்தது.
 
“சங்கம் என்ற அமைப்பு இல்லவே இல்லை“ என்ற கருத்தினை கே.என். சிவராசபிள்ளையும் பி.தி. சீனிவாச ஐயங்காரும் முன்மொழிந்துள்ளனர். நான் அவர்களின் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.
 
தமிழகமும் சங்கமும்
 
எங்கெல்லாம் தமிழ் அறிந்த மன்னர்கள் ஆட்சிபுரிந்தனரோ, எங்கெல்லாம் தமிழ் அறிந்த உயர்குடியினர் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் புலர்வர் சென்று அவர்களைச் செய்யுட்களால் புகழ்ந்தும் போற்றியுமுள்ளனர்.
 
அப் புலவர்களின் கூட்டம் தங்களுக்குள் வாதிட்டும், புலமைப்போர் நடத்தியும் இருக்கலாம். “புலன் நாவுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ்“ (கலித்தொகை – 68) என்ற அடிகளால் புதிய செய்யுட் படைப்பினை மன்னர் உள்ளிட்ட சான்றார் அவையில் அரங்கேற்றம் செய்யும் மரபும் ஏறக்குறைய Public viva-vice போல இருந்துள்ளது. ஆக, அந்த அவையிலும் தமிழ்ச்செய்யுட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சான்று தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட முறை.
 
ஆதலால், முச்சங்கம் என்று வரையறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்முகப்பட்ட சங்கங்கள் இருந்துள்ளன. அவை தமிழ்ச் செய்யுட்களைத் தகுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது என் கணிப்பு.
 
சங்க காலத்தின் இறுதி என்பது பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் சங்க காலத்தின் தொடக்கம் என்பது தமிழி எழுத்துருக்கள் பண்பட்ட காலமான பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு என்பதும் என் கணிப்பு.
 
- – -
 
 ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 46.
ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 30.
Lewis, Martin W.; Karen E. Wigen,The Myth of Continents: a Critique of Metageography.p. 21
http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm
Sivrajapillai K.N., The Chronology of Early Tamils (1932)
http://www.nalan.me/nalan.me.drupal/node/69
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1902:2014-01-09-03-46-43&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard