Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)


Guru

Status: Offline
Posts: 7329
Date:
புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)
Permalink  
 


 

புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)

 
கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்தி ராமஜன்ம பூமி வரலாறு குறித்தும், இந்துத்துவ இயக்கங்கள் குறித்தும் காத்திரமான நூல்களை எழுதியிருக்கிறார். http://www.valamonline.in/2017/08/blog-post.html?fbclid=IwAR0UJlppVKH9nTgX2gzY3NZW3T63mAaUqTiR7Bk2B-JU9PFX5vek1_Ew_QA
koenraad_elst.jpg
 
ரோப்பாவைச் சேர்ந்த கீழைத்தேச ஆய்வாளர்கள் (Orientalists) இந்தியாவிற்கு வெளியில்தான் பௌத்தத்தை முதலில் கண்டறிந்தனர். அதனால், பௌத்தம் புழக்கத்தில் உள்ளதற்கான அடையாளமே இல்லாதிருந்த இந்தியாவுடன் அதற்கு எந்த வெளிப்படையான தொடர்பும் இல்லை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்று அவர்கள் கருதினர். ஆரம்பத்தில், புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையில் பௌத்தம் பல நூற்றாண்டுகள் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு வெளியே வளர்ந்து வந்தது உண்மை. எனவே, இந்துமதத்துடன் அதற்கு உள்ள உறவு எடுத்துச் சொல்லப்படும் வரை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்ற கருத்து அவர்களிடையே நிலவியது புரிந்துகொள்ளக் கூடியதே.
 
நவீன இந்தியாவில் பௌத்தம்
 
இதன் பின்னர் இந்தியாவிலும் பௌத்தம் தனி மதம் என்ற இந்த நிலைப்பாட்டுடன் பொருந்தும்படி பலவிதமான புதிய ‘கண்டுபிடிப்புகள்’ உருவாக்கிச் சேர்க்கப்பட்டன. குறிப்பாக 1956ல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் புத்தமதம் தழுவியதன் பின்னணியில், ‘இந்துமதத்திற்கு முற்றிலும் எதிரானவர்’ என்ற வகையில் புத்தரின் கடந்தகாலத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் அம்பேத்கரிய இயக்கம் முனைந்து ஈடுபட்டது. தனது மத சம்பிரதாயத்திலிருந்து வேறு ஒரு மத சம்பிரதாயத்தைத் தழுவுவதாக அல்லாமல் (இந்துவாக இருந்துகொண்டு இதைச் செய்வதற்கான முழு சுதந்திரம் இந்துமதத்தில் உண்டு), ‘மதமாற்றம்’ என்ற பெயரில் ‘எனது முந்தைய மதத்தைத் துறந்து பௌத்த மதத்தில் இணைகிறேன்’ என்று அம்பேத்கர் அறிவித்தது கிறிஸ்தவ மதக் கோட்பாடே அன்றி, இந்திய மதங்களில் உள்ள கோட்பாடு அல்ல.
 
கி.பி. 496ம் வருடம் ஃபிராங்கிய மன்னர் க்ளோவிஸ் ‘தான் அதுகாறும் வழிபட்டு வந்தவற்றை எரித்து, எரித்து வந்ததை வழிபடத் தொடங்கி’ மதம் மாறியது இதற்கான முன்னுதாரணமாகலாம். (கிறிஸ்தவ வரலாற்றாசியர்கள் ஒரு பொய்யான எதுகைமோனைக்காகத் தங்களது மத எதிரிகளை வசைபாடி இவ்வாறு எழுதினார்கள். மற்றபடி பழைய விக்கிரக வழிபாட்டாளர்கள் கிறிஸ்தவச் சின்னங்களை ஒருபோதும் எரித்ததும் அழித்ததும் கிடையாது என்பதே உண்மை.) இஸ்லாமின் வரலாறு குறித்தும், சாதி தொடர்பான வரலாற்றில் உள்ள சில விஷயங்கள் குறித்தும் அம்பேத்கர் சிறப்பாக எழுதியுள்ளார் என்பது உண்மையே. ஆனால் பௌத்த தர்மத்தின் வரலாறு குறித்து அவரது புரிதல் சிறிதுகூட ஆதாரமில்லாதது, நம்பகத்தன்மையில்லாதது. ஆனால், அவர் கொஞ்சம் சரியாகவும் கொஞ்சம் தவறாகவும் இதுபற்றிச் சொல்லிச் சென்றவற்றை, அவரைப் பின்பற்றிய தொண்டர்கள் ஒரேயடியாக மட்டையடி அடித்து, வரலாற்றுக் கேலிச்சித்திரம் போல ஆக்கிவிட்டார்கள். இந்து வரலாற்றில் பௌத்தத்தின் இடம் என்ன என்பது குறித்த அம்பேத்கரிய கருத்துக்கள் விஷயத்தில் இந்த விமரிசனம் முற்றிலும் பொருந்தும்.
 
இங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த நேருவியர்களின் இந்துமத எதிர்ப்பு ஒரு கட்டுக்குள் அடங்கியதாக இருந்தது. அம்பேத்கரியக் கண்ணோட்டம் அதை மேலும் தீவிரப்படுத்தியது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஆட்சியில் இந்தியாவின் ‘அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அரசு மதமாக’ பௌத்தம் முன்னெடுக்கப்பட்டது. பௌத்தப் பேரரசர் அசோகரின் சிங்கத் தூண் அரசுச் சின்னமாகவும், 24 ஆரங்கள் கொண்ட ‘சக்ரவர்த்தி’ ஆழி தேசியக் கொடியில் இடம்பெறும் ஒன்றாகவும் ஆயிற்று. இந்திய வரலாற்றைப் பற்றிய நேருவின் குறுகலான அறிவுப் பார்வையில் ஒட்டுமொத்த இந்திய சரித்திரத்தில் இரண்டு ஆன்மிகத் தலைவர்களும் (புத்தர், மகாத்மா காந்தி) மூன்று அரசியல் தலைவர்களும் (அசோகர், அக்பர் மற்றும் ஜவஹர்லால் நேருவாகிய தான்) மட்டும்தான் தெரிந்தார்கள்! உண்மையில் ‘சக்ரவர்த்தி’ (சக்கரத்தை சுழலச் செய்பவர், உலகப் பேரரசர்) என்ற கோட்பாடு, அசோகருக்கு மிகவும் முன்பு வேதகாலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கும் ஒன்று. 24 ஆரங்கள் என்பவை பௌத்த கோட்பாடுகளை மட்டும் குறிக்கவில்லை. அந்தக் குறியீட்டை பல்வேறு விதங்களில் பொருள் கொள்ளலாம். உதாரணமாக, சாங்கிய தரிசனத்தில் புருஷன் என்பதை மையமும், 24 தத்துவங்களுடன் கூடிய பிரகிருதி என்பதை ஆரங்களும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
 
முற்றிலும் ஆங்கிலமயமாகி விட்ட ‘இந்தியாவின் கடைசி வைஸ்ராய்’ ஆன நேரு, இந்துக் கலாசாரம் குறித்த தனது அறியாமையை ஒருவிதப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்பவராகவே இருந்தார். உண்மையில் அவர் சக்கரத்தையோ அதன் தத்துவத்தையோ பற்றியெல்லாம் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்தs சின்னங்கள் அசோகரின் பெருமையைப் பறைசாற்றி இந்துமதத்தைச் சிறுமைப்படுத்துகின்றன என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. பௌத்தத்தைத் தழுவுவதற்காக, அசோகர் தன்னை அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறிய இந்துமதம்! பொதுவாக, இந்தியாவில் பெருமிதத்திற்கும் மதிப்புக்கும் உரியவை எல்லாம், பௌத்தம் (மற்றும் இஸ்லாம்) துப்புக்கெட்ட இந்துக்களுக்கு அளித்துவிட்டுச் சென்ற கொடை என்றே நேரு கருதினார். அவரைப் பொருத்த வரையில் இந்துக்களின் சகிப்புத்தன்மை என்ற புகழ்பெற்ற விஷயம் கூட புத்தமதத்திலிருந்து கடன் வாங்கியதுதான். ஆனால், உண்மை என்னவென்றால், வரலாற்று ரீதியாக, இங்கு ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்துக் கலாசாரத்தின் பன்முகத்தன்மைதான், புத்தர் என்பவர் தோன்றி, தனது தர்ம உபதேசங்களைக் கூறுவதற்கே காரணமாக அமைந்தது. ஒரு முஸ்லிம் நாட்டில் அவர் தனது கொள்கைகளை 45 வருடங்கள் அமைதியாகவும் சுகமாகவும் உபதேசித்துக் கொண்டிருந்திருந்திருக்க முடியாது. இங்கும் அவரது உயிருக்குச் சில முறைகள் ஆபத்துக்கள் நேர்ந்தனதான். ஆனால் அவை ‘இந்துக்களிடமிருந்து’ வரவில்லை. அவரே உருவாக்கியிருந்த துறவு அமைப்பின் பொறாமை பிடித்த சீடர்களிடமிருந்துதான் வந்தன.
 
ஆயினும், இந்துவாகப் பிறந்து துறவறம் பூண்ட புத்தர், தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்துமதத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, புத்தமதம் என்ற ஒரு புதிய மதத்தை உருவாக்கினார் என்பதான ஒரு கருத்தாக்கத்தை நேருவும், அம்பேத்கரும் அவர்களைப் பின்பற்றியவர்களும் நம்பத் தொடங்கினர். இந்தக் கருத்துதான் இப்போது எங்கும் பரவலாக உள்ளது. பள்ளிப் பாடப் புத்தகங்களின் வாயிலாக, பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்தக் கருத்து ஊட்டப்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், இந்தக் கதையை நம்புகின்ற எண்ணற்றவர்களில் ஒருவர் கூட, புத்தர் தனது வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு சென்றார் என்பதைக் கூறுவதே இல்லை. எப்பொழுது அவர் இந்துமதத்திற்கெதிராகப் புரட்சி செய்தார்? ஏராளமான இந்தியர்கள் இந்த நேருவியச் சித்தரிப்பை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை புத்தரின் வாழ்வில், அவர் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு சென்றார் என்று கருதத்தக்க ஒரு சம்பவத்தைக்கூட அவர்கள் ஒருவராலும் சுட்டிக்காட்ட இயலவில்லை.
 
இந்துமதம்’ என்னும் சொல்
 
இவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்படும்போது அவர்களது முதல் வாதம் கட்டாயமாக இப்படித்தான் இருக்கும் – ‘உண்மையில், அந்தக் காலகட்டத்தில் இந்துமதமே இருக்கவில்லையே.’ அதாவது, அப்போது இந்துமதம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் புத்தர் அதிலிருந்து விலகிக்கொண்டு மட்டும் வந்து விட்டார்! ஆமாம், அவர் செய்த மகா அற்புதங்களில் ஒன்று இது. இப்படித்தான் உள்ளது மதச்சார்பின்மைவாதிகளின் நிலைப்பாடு.
 
அதைத் திருத்துவோம். அதாவது, ‘இந்துமதம்’ என்ற *சொல்* அப்போது இருந்திருக்கவில்லை. புத்தருக்குச் சமகாலத்தில் வாழ்ந்த அகாமெனிட் (Achaemenid) பாரசீகர்களின் அரசன் டேரியஸ் ‘ஹிந்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தியபோது, அது நிலவியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது – அதாவது, சிந்து பிரதேசத்திலும் அதற்கு அப்பாலும் இருப்பவர்கள். மத்தியக் காலத்திய முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு ‘ஹிந்து’ என்ற சொல்லைக் கொண்டுவந்தபோது அதன் பொருள் இப்படி இருந்தது – இந்திய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் தவிர்த்து இந்தியாவில் உள்ள மற்ற அனைவரும். ‘ஆபிரகாமியர்களாக அல்லாதவர்கள்’ என்ற எதிர்மறைக் குறிப்பைத் தாண்டி, ஹிந்து என்ற அந்தச் சொல் எந்தக் குறிப்பிட்ட மதக்கொள்கையுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை. எல்லா விதமான இந்திய பாகனியர்களையும் (Indian Pagans) அது குறித்தது – பிராமணர்கள், பௌத்தர்கள் (‘மொட்டைத் தலை பிராமணர்கள்’), ஜைனர்கள், மற்ற துறவிகள், தாழ்ந்த சாதியினர், இடைநிலைச்சாதியினர், பழங்குடியினர் மேலும் இதே தொடர்பின் காரணமாக, வரலாற்றில் இன்னும் தோன்றியிருக்காத லிங்காயதர்கள், சீக்கியர்கள், ‘ஹரே கிருஷ்ணா’க்கள், ஆரிய சமாஜிகள், ராமகிருஷ்ண இயக்கத்தினர், மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் தற்காலத்தில் இந்து என்ற முத்திரையை மறுதலிப்பவர்கள் – இவர்கள் எல்லாரையுமே அச்சொல் குறித்தது. ஹிந்து என்ற சொல்லுக்கான இந்த வரையறையைத்தான் ஹிந்துத்துவம் என்ற தனது நூலில் (1923) வீர சாவர்க்கரும், இந்திய அரசின் இந்து திருமணச் சட்டமும் (1955) ஏற்றுக்கொண்டனர்.
 
இந்த வரலாற்று ரீதியான வரையறை ‘தந்திரக்கார பிராமணர்களால்’ புகுத்தப்படவில்லை என்பதனால் சாதகமானதும்கூட. இதன்படி, புத்தரும் அவரைப் பின்பற்றுபவர்களும் சந்தேகத்திற்கிடமின்றி இந்துக்களே. எனவே, அம்பேத்கர் புத்தமதத்தில் தஞ்சமடைந்தபோது, ‘உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீர சாவர்க்கர் கூறியது இதன்படி மிகச்சரியானதே.
 
ஆனால் நடைமுறையில் ‘இந்து’ என்ற இந்தச்சொல் அபிமான விளையாட்டுக் கருவி போல இஷ்டத்துக்கு வளைக்கப்படுகிறது. திராவிடர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட சமூகக் குழுக்களையும் ‘இந்துக்களே அல்ல’ என்று மதச்சார்பின்மைவாதிகள் அடித்துக் கூறுவார்கள். ஆனால் சிறுபான்மை மதத்தினரின் அராஜக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்துக்கள் புகார் கூறினால், அது ஒரு பிரச்சினையே அல்ல என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ‘இந்துக்கள் எப்படி ஆபத்தாக உணர முடியும்? அவர்கள் தான் 80%க்கு மேல் இருக்கிறார்களே’ என்று அதே வாயால் கூறுவார்கள் இந்த மதச்சார்பின்மைவாதிகள். ‘பழங்குடிகள் இந்துக்களே அல்ல’ என்று கிறிஸ்தவ மிஷனரிகள் அறிவிப்பார்கள். ஆனால் தங்களது மரியாதைக்குரிய துறவியின் படுகொலைக்குக் காரணமான கிறிஸ்தவர்களை எதிர்த்துப் பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபடும்போது அவர்கள் ‘இந்து கலவரக்காரர்கள்’ ஆகிவிடுகிறார்கள்! இதே ரீதியில்தான், புத்தர் விஷயத்தில் ‘இந்து‘ என்பது ‘வேதம் சார்ந்த, வைதீக‘ என்ற பொருளில் சௌகரியத்திற்கேற்றபடி குறுக்கப்படுகிறது. பிறகு தேவைப்படும்போது அதன் பரந்த பொருளுக்குத் திரும்ப அழைத்து வரப்படுகிறது.
 
 
ஹிந்து என்ற சொல்லின் ஒரு பொருளாக ‘வேதம் சார்ந்த, வைதீக‘ என்பது நிச்சயமாக இல்லை. அந்தச் சொல் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கூட அப்படி ஒரு பொருள் இருக்கவில்லை. சங்கரர் பதஞ்சலிக்கும், சாங்கிய தத்துவப் பிரிவினருக்கும் எதிராக, ‘அவர்கள் (புத்தரைப் போன்றே) வேதங்களைப் பிரமாணமாகக் கொள்வதில்லை‘ என்று கூறுகிறார். ஆயினும் இந்துச் சிந்தனைப்பள்ளியின் ஒவ்வொரு வரலாற்றிலும் இந்தத் தத்துவங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. இந்துமதத்தின் பல கூறுகளில் வேதம் ஒரு மெல்லிய மேற்பூச்சுப் படலம் போல மட்டுமே உள்ளதையும், இன்னும் சில கூறுகளில் வேதம் சாராமலே அவை இருப்பதையும் நாம் கவனிக்கலாம். சில அறிஞர்கள், வைதீக ‘பெருமரபு’, பற்பல பிரதேசம் சார்ந்த சம்பிரதாயங்களும் அனுமதிக்கப்பட்ட ‘சிறுமரபு’ இவை இரண்டுமே வேதம் என்ற பெருமிதமிக்க விசாலமான குடையின் கீழ் வளர்ந்து வந்துள்ளன என்று இதனை விளக்குகிறார்கள். இந்த விதத்தில் நாம் புத்தரை வகைப்படுத்த விரும்பினால், அவருக்கான இடம் பெருமரபு என்பதிலேயே உள்ளது என்பதையும் தெளிவாக உணரலாம்.
 
Buddha.jpg
 
 சித்தார்த்த கௌதமர் என்கிற புத்தர், சூரிய குலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில், மனுவின் வழித்தோன்றலாக வந்த க்ஷத்திரியர் ஆவார். ‘ராமரின் மற்றொரு அவதாரமாகத் தோன்றியவன்‘ என்று தன்னை விளித்துக் கொள்ளும் அவர், சாக்கியர் குடியின் ராஜனுடைய (நிரந்தரக் குடித்தலைவன்) மகனாக, கௌதமக் கோத்திரத்தில் உதித்து, சபையின் உறுப்பினராக இருந்தவர். துறவிகள் பெரும்பாலும் தங்களது துறவுப்பெயராலேயே அறியப்படுவது மரபானாலும், பௌத்தர்கள் புத்தரை அவரது குலப்பெயரைச் சேர்த்து ‘சாக்கிய முனி’ (சாக்கியர் குடியைச் சார்ந்த துறவி) என்று அழைப்பதையே விரும்புகின்றனர். இந்தக் குடியானது எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கான ஒரு இந்து சமூகமாக இருந்தது. ஆதி மூதாதையான மனுவின் மூத்த மகனின் வழித்தோன்றல்களாகவும், அவரது பிந்தைய, இளைய மனைவியின் ஆணையால் மறுதலிக்கப்பட்டவர்களாகவும் அக்குடியினர் தங்களைக் கருதினர். புத்தர் ஒருபோதும் ‘சாக்கிய’ என்ற குலப்பெயரை நிராகரித்ததற்கான சான்றுகள் இல்லை. அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், சாக்கியர்கள் கோசல மன்னன் விடூதபனின் கோபத்திற்கு இலக்காகி முற்றிலுமாக படுகொலை செய்யப் பட்டபோதும் கூட.
 
ராமன் முதலான அவதாரங்களின் வரிசையில் அவரும் ஒருவர் என்பதான கருத்து, குயுக்திபடைத்த பிராமணர்களின் புராணங்களின் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, புத்தரே தன்னைக் குறித்து அறிவித்துக் கொண்டது அது. தனது முந்தைய அவதாரங்களில் ராமரும் ஒருவர் என்று கூறிக்கொண்டது புத்தர்தான். பல இந்துமதக் கொள்கைகளையும் பழக்கங்களையும் ‘புத்தமதத்திலிருந்து கடன்வாங்கப்பட்டது’ என்றே கூறி விளக்க விரும்பும் அறிஞர் பெருமக்கள், இந்தக் குறிப்பிட்ட ‘இந்து’ மதக்கொள்கையை அம்பேத்கர் நிராகரிப்பதை, இல்லை இல்லை இதுவும் ‘புத்தமதத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதே’ என்று சிறப்பாகவும் செம்மையாகவும் கூறி அம்பேத்கரை எதிர்க்கலாம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)
Permalink  
 


வாழ்க்கைப் பாதை
 
தனது 29ம் வயதில் அவர் சமூக வாழ்க்கையைத் துறந்தார்ஆனால் இந்துமதத்தைத் துறக்கவில்லைசமூகத்திலிருந்து முற்றிலுமாக விலகிதனது சாதிக்கான அடையாளங்களையும் பெயரையும் கூட நீத்துச் செல்வது என்பது இந்துக்களிடையே இருந்த பழக்கம்தான்சடாமுடிகளுடன் ஆகாயத்தையே ஆடையாக உடுத்து வாழும் முனிவர்களைப் பற்றி ரிக்வேதத்திலேயே குறிப்பு உண்டு. ‘நாகா சாதுக்கள்’ என்று இன்று அழைக்கப்படுபவர்கள் இத்தன்மையினர்தான்துறவு வாழ்க்கை என்பது புத்தருக்கு நீண்ட காலம் முன்பே வேதகால சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. ‘ஆத்மா’ என்ற தத்துவத்தை விரிவாக வளர்த்தெடுத்த உபநிஷத ரிஷியாகிய யாக்ஞவல்கியர் அரசவைப் புரோகிதராகஇரண்டு மனைவியருடன் நிறைவான இல்லறத்தில் வாழ்ந்து பின்னர் சமூகவாழ்வைத் துறந்தவர்எனவேஇந்து சமுதாயத்தில் ஏற்கெனவே இருந்த ஒரு மரபைப் பின்பற்றியே புத்தரும் தனது அரசியல் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் துறந்து சென்றார்அதன்பிறகு மற்ற வேதநெறி சார்ந்த துறவியர் போலவேஅவரும் எந்த வைதீக சடங்குகளையும் பின்பற்றவில்லை (ஆனால் ஜென் பௌத்தர்கள் இன்றளவும், ‘ஸவுகா’ அதாவது ‘ஸ்வாஹா’ என்று முடியும் ஹிருதய சூத்திரத்தை (Heart Sutra) வேதமந்திரங்களின் பாணியில் போல ஜபம் செய்கிறார்கள்).
 
கர்மகாண்டம்’ எனப்படும் சடங்குகளைத் துறந்துஅறிவுத் தேடலில் ஈடுபடும் ‘ஞானகாண்டம்’ என்பதான இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளதுஇந்த இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார்கானகத்திற்குச் செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின்அவர் இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று பார்த்தார்எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லைஆயினும்அவற்றைத் தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்ததுஅனபனஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறதுஇன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும் பிரபலமான இருக்கும் யோக முறைதான் அதுசில காலங்கள்இந்துமதப் பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார்ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும்பிறகு அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.
 
பிறகு அவர் தனது சொந்த வழிமுறைகளையும் இதில் சேர்த்தார் அல்லது அப்படித்தான் புத்தமதத்தின் முதல்நூல்கள் நமக்குச் சொல்கின்றனஇது குறித்து ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்பதனால்விபாசனா (மனதை முழுவதுமாக ஈடுபடுத்தியிருத்தல்என்ற இந்த வழிமுறையையும் கூட வேறு எங்கிருந்தாவது அவர் கற்றிருக்கக் கூடுமா என்பதை நாம் அறிய வாய்ப்பில்லைவேறு ஏதேனும் எதிர்மறையான சான்றுகள் கிடைக்காத பட்சத்தில்ஒரு இந்துவுக்கு அத்தகைய (புதிய பாதைகளை உருவாக்கும்சுதந்திரம் எப்போதுமே உண்டு என்பதனால்இந்த வழிமுறையை அவர் தானாகவே முழுமையாகக் கண்டுபிடித்தார் என்றே நாம் கொள்ளலாம்அதன் பிறகு அவர் ‘போதி’ என்ற அகவிழிப்பு நிலையை அடைந்தார்அவரே கூறியுள்ளபடிஅவர் இத்தகைய நிலையை அடைந்த முதல் மனிதரும் அல்லமாறாகஅவருக்கு முந்தைய விழிப்புற்றோர் (புத்தர்கள்நடந்த பாதையில் சென்றவரே அவர்.
 
வேத தெய்வங்களான பிரம்மாவும் இந்திரனும் கேட்டுக் கொண்டபடிஅவர் தன்னிறைவு பெற்ற அந்த அகவிழிப்பு நிலையிலிருந்து இறங்கி வந்துதனது உபதேசங்களை மற்றவர்களுக்கு வழங்கத் தொடங்கினார்தர்மத்தின் ஆழியை அவர் இயக்கத்தொடங்கிய போது (தர்மசக்ர ப்ரவர்த்தனம்), ஏற்கெனவே இருக்கும் ஒரு அமைப்பிலிருந்து (system) விலகுவதற்கான எந்த அடையாளமும் அதில் இல்லைமாறாகஏற்கெனவே உள்ள வேத உபநிஷத சங்கேதங்களைப் பயன்படுத்தி தனது வழியை ‘ஆர்ய தர்மம்’ என்று அழைத்தார் (ஆர்ய = வேதத்தினால் பண்படுத்தப்பட்ட). இதன் மூலம் தனது வேத வேர்களை உறுதி செய்தது மட்டுமின்றிதனது வழியானது சீரழிந்து விட்ட வேத ஆதர்சங்களை மறுசீரமைப்பு செய்வதாகும் என்றும் அவர் உணர்த்தினார்தனது வழிமுறைகளையும்மானுட நிலை குறித்த தனது வியாக்கியானங்களையும் தனது சீடர்களுக்குப் போதித்துஅவற்றைச் சிரத்தையுடன் கடைப்பிடித்தால்தான் அடைந்தது போன்ற அதே அகவிழிப்பை அவர்களும் அடையமுடியும் என்றும் வாக்களித்தார்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 சாதி
 
சாதி விஷயத்தில்ஏற்கெனவே இருந்த சமுதாய அமைப்புடன் முழுவதுமாக ஒத்துழைப்பவராகவே புத்தர் இருந்தார் என்பதைக் காண்கிறோம்செல்வாக்குள்ள பிரபு குடும்பத்தவர் என்ற அளவில்தனது உபதேசங்களைப் பரப்புப் பணிக்காக உயர் சாதியினரையே அவர் தெரிவு செய்தார்அதில் 40%க்கும் அதிகமானோர் பிராமணர்கள்பிற்காலத்தில் பௌத்தம் என்றாலே நேர்த்தியான நுட்பமான தத்துவங்கள் என்ற நிலையை உருவாக்கப் போகிற மகத்தான தத்துவவாதிகள் அவர்களிலிருந்துதான் வந்தார்கள்இதற்குப் பிரதியாகபிற்காலத்தில் பௌத்த பல்கலைக்கழங்கள் வானியலாளர் ஆர்யபட்டர் போன்று சிறந்த பௌத்தரல்லாத அறிஞர்களுக்கும் கற்பிக்கும் கேந்திரங்களாக விளங்கினஇந்தியாவின் பண்டைய பல்கலைக்கழங்களே புத்தமதம் அளித்த கொடைதான் என்று ஒரு பொதுப்படையான எண்ணம் நிலவுகிறதுஆனால்புத்தரின் நண்பர்களான பந்துலர் (Bandhula), பிரசேனாதி (Prasenadi) ஆகியவர்களும் (சில ஊகங்களின் படி இளைஞரான சித்தார்த்தருமே கூடதட்சீலத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்பௌத்தர்களின் கூட்டம் உருவாவதற்குப் பலகாலம் முன்பே இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுவிட்டிருந்ததுகறாராகச் சொல்வதானால்இந்துச் சமூகத்தில் முன்பு இருந்த கல்வி அமைப்புகளை விரிவாக்கி மேன்மைக்கு இட்டுச்சென்றது புத்தமதம் என்பது சரியாக இருக்கும்.
 
கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதியைச் சார்ந்த மன்னர்களும் செல்வந்தர்களும் புத்தரைத் தங்களில் ஒருவராகக் கருதினர்அதுவே உண்மையும் கூடஎனவே வேகமாக வளர்ந்து வந்த அவரது துறவு அமைப்புக்கு மகிழ்ச்சியுடன் அவர்கள் உதவினர்தங்களது பணியாளர்களையும் பிரஜைகளையும் அந்த அமைப்புக்கான மடாலயங்களை உருவாக்குமாறு ஆணையிட்டனர்எதிர்காலத்தில் தன்னைப் போன்ற அகவிழிப்பு கொண்ட ‘மைத்ரேய’ புத்தரின் (நட்பும் கொடையும் நிரம்பியவர்வருகை நிகழும் என்றும் அவர் பிராமணக் குடும்பத்தில் பிறப்பார் என்றும் கௌதம புத்தர் அறிவித்தார்.
 
தனது மனைவி தூய சாக்கிய குல இளவரசி அல்லசாக்கிய அரசருக்கும் பணிப்பெண்ணும் பிறந்தவள்தான் என்று தெரிய வந்தவுடன்மன்னர் பிரசேனாதி அவளையும் அவள்மூலம் பிறந்த மகனையும் மறுதலித்தார்இளமைக்காலம் முதல் மன்னரின் நண்பராக விளங்கிய புத்தர் அது தவறு என்று கூறி மன்னர் அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தார்ஆனால்அம்பேத்கரியர்கள் கூறுவது போல, ‘பிறப்பு முக்கியமானதல்ல’ என்றோ ‘சாதி தவறு’ என்றோ ‘சாதி ஒரு பொருட்டல்ல’ என்றோ கூறி அதை அவர் சாதித்தாரா என்னஇல்லைமாறாகசாதி என்பது தந்தைவழியிலேயே சந்ததியினருக்கு வரும் என்ற பழைய சாஸ்திர மரபை மன்னனுக்கு நினைவுறுத்தினார் (அக்காலகட்டத்தில் இந்த சாஸ்திர மரபு இன்னும் கறாராகத் திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தது). குதிரைகள்கழுதைகள் ஆகியவற்றின் கூட்டு இனங்களில்ஆண் குதிரைக்கும் பெண் கழுதைக்கும் பிறப்பவைதந்தையின் இனம் சார்ந்து குதிரையினங்களாகவே கருதப்பட்டனஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறப்பவை அதே ரீதியில் கழுதையினங்களாகக் கருதப்பட்டனஇந்தப் பழங்கால மரபை வைத்துத்தான்ஆகத் தொன்மையான சாந்தோக்ய உபநிஷதத்தில்பிராமணர்களுக்கு மட்டுமே கற்பிக்க விரும்பும் குருசத்யகாம ஜாபாலனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார் – அவனது தாய் பணிப்பெண்ணாக இருந்தாலும் தந்தை பிராமணர் என்று அறியப்பட்டிருந்ததால்இதே முறைப்படிதான்தனது மனைவி தூய சாக்கிய க்ஷத்திரிய ரத்த உறவில் வந்தவளாக இல்லாவிட்டாலும்கூட அவள் பெற்ற மகனை மன்னர் பிரசேனாதியும் க்ஷத்ரியனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புத்தர் வாதிட்டார்.
 
அவரது மறைவின்போதுஎட்டு நகரங்களின் பெருங்குடியாளர்களும் பிரபுக்களும், ‘நாங்கள் க்ஷத்ரியர்கள்அவரும் க்ஷத்ரியர்எனவேஅவரது புனித சாம்பல் மீது எங்களுக்கு உரிமை உள்ளது’ என்று கோரி அந்தப் புனித சாம்பலுக்கான உரிமையைப் பெறுவதில் வெற்றியடைந்தனர்அதற்கு அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகுஅவரது சீடர்கள் பொதுவில் சாதியைக் கடைப்பிடிப்பதில் எந்தத் தயக்கத்தையும் காண்பிக்கவில்லைசொல்லப் போனால் அது புத்தமதத்தின் சிறந்த நெறியாகவே கருதப்பட்டதுகாரணம் என்னவென்றால்புத்தர் அவரது உபதேசங்களில் சாதியை விட்டுவிடுங்கள் (உதாரணமாகஉங்கள் மகள்களை வேறு சாதியினருக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்பது போலஎன்று ஒருபோதும் கூறவில்லைதர்க்கபூர்வமாகவும் இதுவே சரியாக வருகிறதுஏனென்றால்ஆன்மிக உபதேசகராகசமூக நடைமுறை சார்ந்த விஷயங்களில் அனாவசியமாக நேரத்தை விரயமாக்க புத்தருக்கு எந்த விருப்பமும் இருக்கவில்லைசொந்த வாழ்வில் தனிப்பட்ட அளவில் துன்பத்திற்குக் காரணமான ஆசையைத் திருப்தி செய்வதே மிகக் கடினமாக இருக்கையில்சமதர்ம சமுதாயத்திற்கான ஆசையைத் திருப்தி செய்வதெல்லாம் ஆன்மத் தேடலிலிருந்து விலகிய முடிவற்ற திசைதிருப்பலாகவே இருக்கும்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ஏழு நெறிகள்:
 
இந்து அல்லாத தனிப்பட்ட பௌத்த சமுதாயம் என்று ஒன்று எப்போதுமே இருந்ததில்லைபெரும்பாலான இந்துக்கள்பல்வேறு கடவுளர்களையும் ஆசாரியர்களையும் வழிபடுகின்றனர்தங்கள் வீட்டுப் பூஜை அறைகளில் ஒருசில படங்களையும் திருவுருவங்களையும் சில சமயங்கள் சேர்ப்பதும்சில சமயங்கள் எடுப்பதும் சகஜமான விஷயம்தான்இந்த வகையில்தான் புத்தரை வழிபடும் மக்களும் இருந்தார்கள்மற்ற தெய்வங்களையும் ஆசாரியர்களையும் வழிபடுபவர்களிடமிருந்து தனிப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் இருக்கவில்லைசமூகத்தைக் கறாரான மதப்பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி பெட்டிகளுக்குள் அடைப்பது என்பது பரஸ்பர காழ்ப்புணர்வுகளுடன் கூடிய கிறிஸ்தவ மனநிலைஇந்தக் கிறிஸ்தவக் கண்ணோட்டம் நேருவிய மதச்சார்பின்மையால்நவீன இந்து சமுதாயத்திற்குள் வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறதுவரலாற்று உண்மை என்னவெனில் – இந்துக்கள் மட்டுமே இருந்தனர்இந்து சாதிகளின் உறுப்பினர்களாகஅவர்களில் சிலர் மற்ற தெய்வங்களோடு கூட புத்தர் மீதும் வழிபாட்டுணர்வுடன் கூடியவர்களாக இருந்தனர்.
 
இந்தியாவின் பௌத்தமதக் கட்டடங்கள் பெரும்பாலும் வேதம் சார்ந்த வசிப்பிடச் சூழல் கோட்பாடுகள் அல்லது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளனபௌத்தக் கோவில்களின் நடைமுறைகள் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் இந்துமதப் பாணியையே பின்பற்றுகின்றனஇந்தியாவிலும் அதற்கு வெளியிலும்பௌத்த மந்திரங்கள் வேத மந்திரங்களின் பாணியிலேயே உள்ளனசீனாவிலும் ஜப்பானிலும் பௌத்தம் பரவியபோதுபௌத்த துறவிகள் பன்னிரு ஆதித்தியர்கள் போன்ற வேத தெய்வங்களையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்அவர்களுக்கான கோயில்களையும் எழுப்பினர்ஜப்பானின் பல ஊர்களில்பென்ஜைடென் (Benzaiten) என்ற நதி தேவதையின் கோயில் உள்ளதுஇவள் சாட்சாத் சரஸ்வதி தேவியேதான்அவளை அங்கு பௌத்தர்களேதான் அறிமுகப்படுத்தினர், ‘குயுக்தி பிடித்த’ பிராமணர்கள் அல்ல.
 
தனது வாழ்வின் கடையிறுதிக்காலத்தில்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் ஏழு நெறிகளை புத்தர் வரையறுத்தார்இவை சப்தசீலங்கள் என்று அழைக்கப்படுகின்றன (சீதாராம் கோயல்இதனை ‘சப்த சீல’ என்ற தனது வரலாற்று நாவலில் விரிவாக எடுத்தாண்டுள்ளார்). ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பண்டிகைகளையும்புனிதயாத்திரைகளையும்சடங்குகளையும் போற்றிப் பாதுகாத்தல்அனைத்துத் துறவியர்களுக்கும் மரியாதை செய்தல் ஆகிய நெறிகளும் அவற்றில் அடக்கம்இதில்பண்டிகைகள் என்று புத்தர் குறிப்பிடுவை அனைத்தும் வேதநெறி சார்ந்தவை அன்றி வேறென்னமகாபாரதத்தில் சரஸ்வதி நதிதீரத்திற்கு பலராமன் சென்ற யாத்திரைதம் முதியவயதில் பாண்டவ சகோதரர்கள் செய்த கங்கா தீர யாத்திரை போன்றவைதான் இதில் புனித யாத்திரைகள் என்று குறிப்பிடப்படுபவை.
 
புத்தர் ஒரு புரட்சிக்காரர் என்பதெல்லாம் தொலைதூரக் கற்பனைஉண்மையில்சமூக விஷயங்களிலும் மத விஷயங்களிலும் மரபில் வேரூன்றியவராகவே (conservative) அவர் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார்அவர் விரும்பியது கிளர்ச்சியையோ புரட்சியையோ அல்லஏற்கெனவே உள்ள பழக்கவழக்கங்கள் நீடித்துத் தொடர்வதைத்தான்தன் ஒவ்வொரு அணுவிலும் இந்துவாக இருந்தவர் புத்தர்.
 
*********
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

டுமீல் ஜல்லி!!

சோலைமலை ஆலயம் புத்தர் கோயிலாக இருந்தது என்று ஒரு ஜல்லி. ’உழைக்கும் மக்கள் கோலம்’, அப்புறம் ’பெருந்தெய்வக் கோலம்’ என இரு வகைக் கோலங்கள் மாலிருஞ்சோலை அழகருக்கு இருப்பதாக புது அவதூறு ஒன்றையும் சுற்றுக்கு அனுப்பியுள்ளனராம் அன்னியக் கைக்கூலிகள்.
கள்ளழகனுக்குக் கூடும் அடியார் திரள் மாற்றார் மனத்தில் கிலியை ஏற்படுத்தி இத்தனை நாள் இல்லாத திடீர் ஆராய்ச்சியைக் கிளப்பி விடுகிறது. இலக்கிய ஆதாரமோ, கல்வெட்டு ஆதாரமோ காட்ட இயலாமல் வெற்றுக் கருத்தியலைச் சுற்றுக்கு விடுவது பயனற்றது.

சங்க இலக்கியத்தில் திருமாலிருஞ்சோலை :

நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்!
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் ......

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய
*சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்.....

மன்பது மறுக்க துன்பம் களைவோன்
அன்பது மேஎய் இருங்குன்றத்தான்
கள் அணி பசு துளவினவை கரு குன்றனையவை
ஒள் ஒளியவை ஒரு குழையவை.....

நலம் புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தனெம் உள் அமர்ந்து இசைத்து இறை
இருங்குன்றத்து அடியுறை இயைக என
பெரு பெயர் இருவரை பரவுதும் தொழுதே ......

தொல்லிலக்கியம் ‘மாலிருங்குன்றம்’ என்றே அம்மலைக்குப் பெயர் சூட்டியுள்ளது.
[*சிலம்பாறு - நூபுர கங்கை]

கள்ளழகர் ஆலயம் வேசர பாணியில் அமைந்த வைகாநச விண்ணகரம்; மதுரை வட்டாரத்தில் சமணம் இருந்ததற்கே சான்றுகள் உண்டு; அரிட்டாபட்டி, கருங்காலக்குடி போன்ற சிற்றூர்கள் சமண மையங்களே. மதுரை சூழும் ‘எண்பெருங்குன்றம்’ சமணச் சார்புள்ளது. பவுத்தம் அங்கு இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. மாலிருஞ்சோலை கருவறைப் படிமத்துக்கு நான்கு திருக்கரங்கள்; எந்த ஊரில் புத்தருக்கு நான்கு கைகள்? பரம ஸ்வாமியின் இருமருங்கிலும் தேவியர் வேறு.தமிழகத்தில் காணக்கிடைக்கும் புத்தர் படிமங்கள் இரு கரங்களோடு, தியானத்தில் அமர்ந்த நிலை மட்டுமே. மணிமேகலை சோலைமலைப் புத்தரைச் சொல்லவில்லை.

* ** ** * * ** ** *

கண்ணன் எம்பெருமான் என்றைக்குமே உழைப்பாளிதான், பிறந்தது முதல். விவரம் புரியும் அகவையிலேயே ஆநிரை மேய்த்தான், குன்றமேந்திக் குளிர்மழை காத்தான். வட மதுரை சேர்ந்த பின்னரும் முடிசூட்டிக் கொண்டு நாடாளும் வாய்ப்புக் கிடத்தாலும் அதை ஏற்கவில்லை. பின் யாதவர்க்கு உழைத்தான்; துவாரகையில் அவர்களைக் குடியமர்த்தி, வாழ்வளித்தான்; பாண்டவர்க்கும் உழைத்தான்.

அவன் ஏற்கும் கோலத்தை வைத்துக் கணக்கிடக் கூடாது. ’ந தே ரூபம் ந சாகாரம்’ என்றே நூல்கள் கூறும்; அவனுக்கெனத் தனி வடிவ விருப்பு வெறுப்புகள் கிடையா. ’தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்பார் ஆழ்வார். வனவாசிகளான முனிவர் விரும்பும் வகையில் மரவுரி தரித்து, மைவண்ண நறுங்குஞ்சி புன்சடையாகப் புனைந்த சக்கரவர்த்தித் திருமகனாரை ஸ்ரீ ராமாயணம் காட்டுகிறது.

’பெருந்தெய்வக் கோலம்’ எனும் தனித்ததொரு கோலம் மிகச் சிறந்த கற்பனை. மீனாகவும், ஆமையாகவும் திகழும் கோலத்தை எதோடு சேர்ப்பது?

ஸ்ரீவைகுண்டத்திலும் பெருமாளுக்கு ‘கள்ளர்பிரான்’ [சோரநாதன்] எனும் திருநாமம்; அதற்கும் ஏதாவது கதை கட்டுவார்களா, பார்க்க வேண்டும்.

பிற துறைகள் போல, இந்திய இறையியல் தனித்துறை; கற்காமல் கருத்துக்கூறக் கிளம்புவது முட்டாள்தனம்.

பரிமேலழகனாகப் பட்டுடுத்தி நகர்வலம் காணும் கள்ளழகன் - உற்சவ மூர்த்தி, படத்தில்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அவரவர் வழிபடும் குலதெய்வங்கள் ஆவணமாக வேண்டும் என விரும்புகிறார் திரு Raja Sankar. அவர் சொல்வது நியாயமானதே. ஆனால் நம் வழிபாட்டு முறைகள் குறித்து நமக்கே ஒரு சரியான புரிதல் உள்ளதா? ஆய்வுப் போர்வையில் கட்டவிழ்த்து விடப்படும் தவறான வழிகாட்டல்களின உள்நோக்கம் புரிந்துகொண்டு நம்மால் அப்புரட்டுகளை எதிர்கொள்ள முடிகிறதா? இக்கேள்விகள் விடை கிடைக்காமல்தான் நிற்கின்றன. பழைய பதிவு ஒன்று, சற்றே நெடியதானலும் தேசிய அளவில் ஆழ்ந்த புரிதலுக்கு உதவும் எனும் நம்பிக்கையில்...

உயர்நிலைக் கடவுளர் X நாட்டார் தெய்வங்கள்

கிரித்தவ மிஷநரிகள் அமைக்கும் நவீன ‘உப்பு வேலி’

உலகின் பிற பகுதிகளில் பாலிதீயிஸம் ஆபிரஹாமிய சமயத்தினரால் எதிர்கொண்டு, அழிக்கப்பட்டது; ஜப்பானில் பாலிதீயிஸம் உள்ளது; ஆனால் அவர்கள் கிரித்தவத்தை உள்ளே அனுமதிக்காததால் அங்கு அவ்வழக்கம் நீடிக்கிறது. பாரதத்தில் நாம் அனுமதித்து விட்டோம். இங்கிருக்கும் பல்லினப்பிரிவுகளை உபயோகப் படுத்திக்கொண்டு பிரிவினை மூலம் நம் சமயத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியே கிரித்தவத்தின் இவ்வித ஆய்வுகள். இதற்குத் துணை போவது போலி முற்போக்கு இடச்சாரியினர். கிரித்தவரிடையேயும் பல் கடவுளர் வழிபாடு அறவே இல்லை எனச் சொல்லவும் வழியில்லை; திரித்துவக் கொள்கையே பாலிதீயிசம்தான்; அபோஸ்தலரை ‘தூய அடியார்’ ஆக்கி வழிபடுவதும் இதோடு சேர்ந்ததுதான். அபோஸ்தலரோடு நில்லாமல் மேலும் புதிது புதிதாகப் பலரை இணைக்கவும் செய்து வருகின்றனர். இதை நான் சொல்லவில்லை. கிரித்தவ அறிஞர் ஒருவரே இக்கருத்தை ஆதரிப்பதோடு, பாலிதீயிசத்தை வற்புறுத்தியும் சொல்லியுள்ளார் - Jordan Paper, a Western scholar and self-described polytheist, considers polytheism to be the normal state in human culture. He argues that "Even the Catholic Church shows polytheistic aspects with the 'worshipping' of the saints." ஆய்வாளர்கள் இதன்பால் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. நாமும் கிரித்தவரிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை.

இந்த ஆராய்ச்சி ஆஃபீசர்கள், அப்ரெண்டிஸ்கள் கேட்கும் பல கேள்விகளை
பூணூல் போட்ட சாமி பூணூல் X போடாத சாமி
தமிழ்ப் பெயர்ச் சாமி X சமக்கிருதப் பெயர்ச் சாமி என்று சுருக்கமாகப் பிரித்து விவரிக்கலாம்.

’நாட்டார் தெய்வங்கள் ஏன் பரவலான அங்கீகாரம் பெறவில்லை ?’ - இதுவும் இவர்களது கேள்வி. இது சற்றே விளக்கமான கட்டுரை, காரணம் வெறுப்புமிழும் வினாக்கள். வழிபாட்டு முறைகளின் பரப்பு ஓரளவு தெரிந்தால்தான் பிரிவினைக் கேள்விகள் உள்ளீடற்றவை என்பது புலப்படும். அன்பர்கள் பொறுமையுடன் வாசிப்பர் என நம்புகிறேன். தடாலடியாகக் கேள்வி கேட்கும் இந்த ஆய்வுலக ஆஃபீசர்கள் மற்றும் அவர்களது அப்ரெண்டிஸ்கள் மீனவரின் மரபுவழித் தெய்வங்களைக் கிரித்தவ ஊடுறுவல் அழித்த வரலாற்றைக் கவனமாக மறைத்து விடுவர். சப்த கன்னியர், அங்காள ஈசுவரி - மீனவரின் கடவுளர்; கடல் சார்ந்த பல சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் கிரித்தவர் கைங்கரியத்தால் மறைந்தொழிந்தன. கடல் சார்ந்த வாழ்க்கை வாழும் பரதவரிடையே பரவர்,பர்வதராஜர், செம்படவர், ஓடக்காரர், முக்குவர், நுழையர், பட்டங்கட்டி, வலயர், வலைஞர், அம்பலக்காரர், கரையர், முத்தரையர், செட்டி, நாட்டார், பட்டணவர், பள்ளி, மரைக்காயர், வருணகுல முதலி என்பன போன்ற இனக்குழுக்கள். அது சார்ந்த மரபு வழிப் பாடல் - வழிபாடுகளைக் கிரித்தவம் அழித்தது. மீனவரில் ஒரு பிரிவான ‘பட்டணவர்’ வரலாற்றை Coromandel - Fishermen எனும் புத்தகத்தில் திரு.பக்தவத்சல பாரதி அவர்கள் விவரித்துள்ளார். ’ஆழி சூழ் உலகு’ பல உண்மைகளை உணர்த்துகிறது, மக்கள்சாரி எழுத்தாளரின் வலிமையான வார்த்தைகள் வாயிலாக. ’ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது’ எனும் சொலவடைக்குப் பொருத்தமாகக் கடல் வழியே இங்கு நுழைந்த மேற்கத்திய மதம், பரதவ அடையாளத்தை - அவர்கள் பேணிய தொழில்நுட்பங்களைத் துடைத்தெறித்து விட்டது. ஆயினும் மதம் மாறாமல் எஞ்சிய பரதவர் வாயிலாகச் சில மரபுகள் இன்னும் நீடித்து வருகின்றன. மீனவர் வழிபாட்டு முறைகள் - http://tamil.thehindu.com/…/%E0%AE%B0%E0…/article9481469.ece மீனவரின் மரபுசார் வழிபாடுகளில் என்றுமே இந்துக்களின் பிற இனத்தவர் தலையீடு இருந்தது கிடையாது; மாறாக மீனவரான அதிபத்தரை ஒரு நாயனாராகச் சைவம் ஏற்றுள்ளது; பரதவர் குலத்தில் உதித்த பத்மினி நாச்சியார் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் மஹிஷி ஆவார். http://m.dailyhunt.in/…/meenavarkalin+mappillai-newsid-4967…

தமிழ் X சமக்கிருதம் - ஏதோ இருமொழிக் கடவுளர் மட்டுமே உள்ளனர் எனும் தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குள் ஒரு போட்டி என்பது போன்ற ப்ரமையைத் தோற்றுவித்து, அதே போக்கில் இவர்களது ஆய்வு தொடரும்;தெலுகுப் பெயர் கொண்ட சாமிகளுக்கும் இம்மண் இடமளித்துள்ள உண்மை மறைக்கப்படும். சித்தர் - ஞானியர்க்கான எண்ணற்ற, பரவலான, எளிய சமாதி ஆலயங்கள்; ஆகமம் சாராத வருமானம் மிக்க ஆலயங்கள், பாழ்பட்ட நிலையிலுள்ள வருமானமற்ற தொன்மை வாய்ந்த ஆகமக் கோயில்கள் இவற்றை இந்த ஆராய்ச்சி ஆஃபீசர்கள் ஆய்வுப்புலத்துக்குட்படுத்த மாட்டார்கள். ஏதோ இருப்பது இரண்டே விதமான ஆலயங்கள்தாம் எனும் பிரமையை முதலில் தோற்றுவித்து விவாதத்தை நகர்த்துவது இவர்கள் கையாளும் உத்தி.

நாகராஜாவுக்குத் தனியாக ஒரு கோயில், நாகர்கோவில் என்றே ஓர் ஊர். நாகராஜா ஆகம வழிபாட்டுப் பெருந்தெய்வம் கிடையாது. ராஜஸ்தானில் உடன்கட்டையேறிய மகளிர்க்கான ஆலயங்கள் உள்ளன, வெளிப் புலனத்தவரின் பரவலான பார்வைக்குட்படாமல். கர்ணீ மாதா ஆலயம் - சுமார் 25 லக்ஷம் சுண்டெலிகளுக்கு இடமளித்துப் பளிங்கு வேலைப்பாடுகளோடும், வெள்ளிக் கதவுகளோடும் திகழும் கோயில் இது. கண்ணகி ஆலயங்கள் பகவதி ஆலயமாகவும், மாரியம்மன் ஆலயமாகவும் பிற்காலத்தில் மாற்றம் பெற்றன; விவரமறியாத ஊரக மக்கள் பவுத்த - சமணச் சிலைகளுக்கு நீறணிவித்து வணங்குவது போன்றதே இம்முறை. ரண பத்ரகாளி, கங்கையம்மன், உச்சி மாகாளி, பிரம்ம சக்தி, நாராயண சாமி, ஜக்கம்மா, பொம்மி அம்மன், எல்லம்மன், ஸ்ரீ ரேணுகா தேவி, காந்தாரி அம்மன் - எங்கிருந்து வந்த சாமிகள் ? ரண பத்ரகாளி, ரேணுகா தேவி - தூய சங்கதப் பெயர்கள். கங்கா தேவி - புராண இதிஹாஸங்கள் அனைத்தும் போற்றும் நதி தேவதை. பழந்தமிழ் நூல்கள் இன்றைய வழிபடு கடவுளர் அனைவரையும் சொல்கின்றனவா ? கருணாநிதியாரின் குலதெய்வம் திருக்குவளை ’அங்காள பரமேசுவரி’க்கான தனித்தமிழ்ப் பெயர் யாருக்காவது தெரியுமா ? ஆகமக் கடவுளர்க்கு அடியார் அளித்த அழகான பெயர்களில்தான் தூய தமிழ் இன்றும் வாழ்கிறது. அவற்றை இந்த ஆய்வாளர் அறிவரா ? கடவுளரில் எத்தனை வகை ? எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் ? நம் ஹிந்துக்களிடையேகூட இது குறித்துச் சரியான புரிதல் இல்லை. மேலும் ஹிந்துக்களிடையே இது குறித்த சச்சரவுகள் - விவாதங்கள் எதுவும் எள்ளளவும் கிடையா. ஆய்வுப் போர்வையில் வேற்றுமைகளைக் கிளறி விடுவது முற்போக்குப் போர்வையில் ஹிந்துப் பெயர்களோடு உலவும் இடச்சாரிக் கிரித்தவரே என்பதைப் பலரும் விளக்கி எழுதியுள்ளனர். ஹிந்துக்களிடம் முறையான மதக் கல்வியும், மரபுசார் புரிதலும் இல்லாத நிலையில் இந்த ஆராய்ச்சி விஷ வித்துகள் வேர்பிடித்து வளர்வதில் வியப்பில்லை. இந்தியர் வழிபடும் தெய்வங்களைத் தனிப்பட்ட தெய்வம், குல தெய்வம், ஊர் தெய்வம் என மூன்றாகப் பிரித்துச் சொல்வர்.

வழிபாட்டு முறைகள் திடீரென்று தோன்றவில்லை; சங்ககாலத்திலிருந்து ஒருவிதத் தொடர்ச்சியை அவற்றில் காண முடிகிறது. ஒரே சமயத்தில் சமுதாயத்தில் நிலவிய பல்வகையான வழிபாட்டு முறைகளைத் தொல் இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்ட இயலும். இதற்குள் புகுந்தால் இந்த உரை இன்னும் மிகப் பெரிதாக விரியும். உயர்நிலைக்கடவுளர் எனும் இந்த ஆராய்ச்சி ஆஃபீசர்களின் வகைப்பாட்டுக்குள்ளேயே சைவ சமயத்தில் விட்டுணு முதலியோர் சிவபிரானுக்கு அடங்கியவர்கள்; வைணவ நெறியில் இதற்கு மாறாக; பவுத்த தாரணியைப் பார்த்தால் பூணூல் அணியாத பகவான் புத்தரிடம் ஏனைய பூணூல் தேவர்கள் கைகட்டி, வாய் புதைத்து உபதேசம் பெற்றதாக வரும். பவுத்தத்தில் பகவான் புத்தர் உயர்நிலைக் கடவுள். ‘நீலகண்ட தாரணி’ புத்தபிரானைச் சிவபெருமானைப்போன்ற நீலகண்டராகக் காட்டுகிறது. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பாரத சமுதாயம் என்பது பல்வேறு இனக்குழுக்களின் ஒரு கூட்டமைப்பு. இணைந்து வெகுகாலம் ஒன்றி வாழ்ந்த ஒரு சமுதாயத்தினரிடையே ஆழ்ந்த பிணைப்புத் தொடர்வது தவிர்க்க இயலாததே. சிறு வட்ட அளவினதான நிலப்பரைப்பைக்கூட ‘நாடு’ எனும் தனிப்பெயரிட்டு அழைக்குமளவு மரபுட்பிரிவுகள் - ஆலி நாடு, மல்லி நாடு, ஆறை நாடு, வருச நாடு. மகதை மண்டலம், வடகரை நாடு என அழைக்குமளவு. போஹ்ரா முஸ்லிம்கள் மேற்கிந்தியாவின் இனக்குழுவினர். முஸ்லிம் அஹமதிய மரபைப் பின்பற்றுவோர். குஜராத்தின் ஒரு வணிகப் பிரிவினர் இஸ்லாமைத் தழுவியபோது ‘போஹ்ரா’ இனமாகியது; இவர்களது பேச்சு மொழி குஜராத்தி மொழியின் துணை மொழியான ’லிசான் உது- தவாத்’. சமயம் மாறினாலும் இவர்கள் தம் தனித்தன்மை இழக்காமல் மரபுசார் வணிகம், தனி மொழி இவற்றோடு வாழ்க்கையைத் தொடர்கின்றனர். வெளி இனத்தவரோடு இவர்கள் மண உறவு கொள்வதில்லை. தமிழகத்தின் நாடார் இனத்தின் ஒரு பிரிவினர் கிரித்தவரான பின்பும் இன்னும் அதே மரபோடு தொடர்வதைக் காண்கிறோம், இந்துப் பழக்க - வழக்கங்களையும் அவர்கள் கைவிடவில்லை. கோலி - இது மராட்டிய பரதவ சமூகத்தவரின் பெயர்; இவர்களில் கிரித்தவரும் உளர். சர்ச்களில் திருமணம் நடைபெற்றாலும் ஹிந்து கோலி சமுதாயப் பழக்க வழக்கங்களை இவர்கள் கைவிடவில்லை. பாரதத்தின் வடகிழக்குப் பகுதியின் மலைவாழ் மக்களான நாகர்கள் பழங்குடியினரே தவிர, ஒரு கட்டுக்கோப்பான சமூக அமைப்புடன் வாழ்ந்தவர் ஆவர்; கிரித்தவ வருகை அவர்களது வாழ்க்கை முறையை, சமய நம்பிக்கைகளை அடியோடு மாற்றிவிட்டதையும் உற்று நோக்க வேண்டும். வங்கத்தின் சுந்தரவனக் காட்டுக்குள் தேன் சேகரிக்கச் செல்வோர் அவர்கள் முஸ்லிமானாலும் ‘பன்தேவி’ எனப்படும் வன துர்கையை வழிபட்டுவிட்டு வனத்தினுள் புகுவர். இஸ்லாமியக் கவிஞர்களும் இந்த அம்மனைப் பாடியுள்ளனர். உள்நாட்டுவாசிகளுக்கு இவ்வழிபாடு கிடையாது. ‘விசுவகர்மா’ - பூணூல் அணிந்த விசுவகர்ம வகுப்பினர் மட்டுமே வழிபடுவர். தெலுகு மொழி பேசும் ராஜபாளையம் ராஜுக்களில் ஒரு குழுவினர் மட்டும் வனத்திலுறையும் மாவரசி அம்மனை வழிபடுவர். கட்டபொம்மு துரையின் தெய்வம் ‘ஜக்கம்மா’ குறி சொல்லும் தெலுகு பேசுவோர் ஒரு பிரிவினருக்கு மட்டுமே தெய்வமாகிறாள். வாசவி அம்மன் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வாழும் தெலுகு பேசும் வணிக இனத்தவரின் குல தெய்வம். பெரியாண்டவர் எனும் தெய்வத்தை பிராமணரில் ஒரு சில குழுவினர் மட்டும் வணங்கி வருகின்றனர். சேர்மன் அருணாசல சுவாமிக்கு ஏரலில் ஆலயம் உள்ளது; நாடார் இனத்தவரின் தெய்வம். பலருக்கும் சேர்மக்கனி என்ற பெயர் இருக்கும். ஈழத்தின் ‘பெரிய தம்பிரான்’ சலவைத் தொழிலாளரின் தெய்வம். விநாயகர், முருகன், விஷ்ணு எல்லொருமே இவருக்குப் பரிவார தெய்வங்கள்.

தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றத்துறையும் [அஹோபிலம்] சிங்கப்பிரானுக்கு வேதாகம வழிபாடும் உள்ளது; வனவேடரின் படையலையும் பரந்தாமன் மறுப்பதில்லை. அஹோபிலம்வாழ் செஞ்சு இனத்தில் தோன்றிய செஞ்சு லக்ஷ்மியே நரசிம்மனின் திவ்ய மஹிஷி ஆவார். மறந்தும் புறந்தொழா ஆழ்வார்கள் பாடிய, மாலிருஞ்சோலை மலை ஆலயத்தில் கருப்பண்ண சாமி வழிபாடு - https://www.youtube.com/watch?v=ak_Qg_tHzsU இந்தியாவில் பல்வேறு கடவுளர், பெயர் தெரியாத எண்ணற்ற சிறு தெய்வங்களிடையே பெரிய அவதாரங்களுடன் எதிரம்புகோத்த புகழ்பெற்ற ராவணனும், கார்த்தவீர்ய அர்ஜுநனும்கூட இன்னும் சில குழுவினரின் வழிபாட்டில் உள்ளனர். புராணம் போற்றும் ஆற்றல் மிக்க இவ்வீரர்களும் பூணூல் அணிந்தவர்களே. பூணூல் அணிந்த பெரும்பான்மை ஏற்காத சாமிகள். ராவண வழிபாடு - விதிஷா மாவட்டத்தில் வாழும் கன்யாகுப்ஜ பிராமணர் ராவணனை வழிபடுவர். கான்பூரில் ராவணனுக்கு ஆலயம் உள்ளது - https://www.youtube.com/watch?v=uwiymkyKV8Q ராவண க்ராமம் என்றே ஓர் ஊர் மத்திய பிரதேசத்தில். மந்தஸௌர் சிற்றூரின் மக்கள் ராவணனைத் தம் மாப்பிள்ளையாகக் கருதுவர்; மந்தஸௌர் ராவணனின் மனையாள் மந்தோதரியின் [ மண்டோதரி] பிறந்த ஊர். http://www.grehlakshmi.com/…/%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B0%E0… ராவணன் தென்னகம் சார்ந்த திராவிடன் எனும் போலிப் பகுத்தறிவுப் புளுகு தமிழகம் தவிரப் பிற புலங்களில் சற்றும் எடுபடாது. துரியோதன வழிபாடு - கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் துரியோதனுக்கான ஆலயம் உள்ளது; தென்னிந்தியாவின் ஒரே ஆலயம் அரவக் கொடியோனுக்காக - https://www.google.co.in/maps/uv… உத்தர கண்ட மாநிலம் குமாவுனிலும் துரியோதன வழிபாடு உண்டு.

கார்த்த வீர்யன் ‘ஸஹஸ்ரார்ஜுந’ சந்திர வமிச க்ஷத்திரியரின் குலதெய்வம்; மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இனத்தவர் தம் தற்போதைய வாழ்விடங்களிலும் கார்த்தவீர்யன் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். கார்த்த வீர்ய அர்ஜுநர் காயத்ரியே தனியாக உள்ளது, யந்திர வழிபாடும் உண்டு. வடபுலத்தினர் இவரை ’ஸஹஸ்ரார்ஜுனர்’ என்பர். இவர் பரசுராமரால் கொல்லப்பட்டதாகப் புராண நூல்கள் சொல்லும் https://www.youtube.com/watch?v=Wsv7dzFXiXo காசி புகழ் ’கால பைரவர்’ மராட்டியரின் ஊர்க்காவல் தெய்வம்; தமிழர் அவரையே சிவாலயங்களின் காவல் தெய்வமாக்குகின்றனர். கணநாதருக்கான பெரிய ஆலயங்கள் மராட்டியம் முழுக்க இருப்பினும் ‘கஸ்பா’ கணபதி புணே மாநகரில் ஒரு சிறுநிலைத் தெய்வம். முன்பு சொன்னதுபோல் காளிதாஸர் பாடிய உஜ்ஜயினி மஹாகாளி நெல்லைப் பகுதியில் ஆகம வழிபாடற்ற கடவுள். புராணம் போற்றும் கங்கா தேவி , தமிழகத்தில் ஆகமக் கட்டுக்குள் வராத ‘கங்கையம்மன்’ எனும் சிறு தெய்வமாகிறாள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் தர்ம ராஜா , திரௌபதியம்மன் ஆலயங்கள்; இந்த ஆலயங்களில் ஆகம வழிபாடில்லை. திரௌபதியம்மனுக்குத் தீமிதி வழிபாடும் உள்ளது. திருவிழா நாள்களில் மஹாபாரதச் சொற்பொழிவும் உண்டு. மஹாபாரத நாயக -நாயகியரான இவர்கள் எந்தப் பாகுபாட்டில் அடங்குவர் ? பங்களூருவிலும் ஒரு தர்மராஜா ஆலயம் உள்ளது. வட மாநிலங்களின் தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் மஹாபாரதக் கதையே மையம்.

’அண்ணமார் சாமி’ கொங்கு மண்டலத்தவரின் தெய்வம்; பிற பிராந்தியத்தில் உள்ளவருக்கு இவரைத் தெரியாது. ‘காத்தவராயன்’ தஞ்சைப் பகுதியில் [திரைப்படம் வெளி வந்துள்ளது] . மதுரைப் பகுதியின் ‘மதுரைவீர’ சுவாமி திரைப்படம் வாயிலாகப் பிரபலமடைந்தவர்; செருப்புத் தைக்கும் இனத்தில் பிறந்தவர். ஈரோட்டுக்கருகில் தோல் பொருள் செய்வோர் வாழும் பகுதியில் சென்று நான் களப்பணி செய்தபோது, அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவர்களுக்கு ’மதுரைவீர’ சுவாமி பற்றித் தெரிந்திருக்கவில்லை. காவல் மரத்துக் கனியை உண்ட காரணத்துக்காக நன்னன் என்ற மன்னனால் கொலையுண்ட பெண்ணே ‘மாசாணி அம்மன்’ ஆனதாக ஒரு வரலாறு சொல்வர். நெல்லையின் ’வண்டி மறிச்ச’ அம்மனை வழிபடுவோருக்கு ‘மாசாணி’ அம்மனைத் தெரியாது. வடமாவட்டங்களின் ‘அரவான்’ தென்மாவட்டத்தினர் அறியாத சாமி. திருநங்கையர் வழிபடுவர். தென் மாவட்டத்தின் கரடி மாடசாமியைக் காஞ்சிபுரத்துக்காரர் அறியார். ஒரு பகுதியினரின் சாமியைப் பிற பகுதியினர் ஏன் கும்பிடுவதில்லை என்றெல்லாம் ஆய்வு செய்தால் பட்டம் பெற வாய்ப்பாகும். சில அறிஞர்கள் வீர சாகசம் புரிந்து மரித்த ஆடவர், தீப்பாய்ந்து இறந்த மகளிர் இவர்களே சில குழுவினர் மட்டும் வழிபடும் சிறு தெய்வங்களாக - குல தெய்வங்களாயினர் என எழுதுகின்றனர். இவர்கள் தீப்பாஞ்ச அம்மன் கோவில்களைச் சான்று காட்டுவர். ஆக சில கடவுளர் சிறு தெய்வங்களாக ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடுவதற்கான காரணம் நமக்குப் புரிந்து விடுகிறது.

திறந்தவெளிக் கருப்பண்ண சாமிகளுக்கு மாறாகத் திருச்சி ஒண்டிக் கருப்பண்ண சாமி விமானத்துடன் கட்டுக்கோப்பான ஆலயத்தில் குடிகொண்டுள்ளார். தென் மாவட்டங்களில் ...... நாராயண சாமியை பிரதான சாமியாக ஆகம வழிபாட்டுக்கு முரணாக முளைப்பாரி எடுத்தும் வழிபடுகின்றனர். இவர் பீடத்துக்குள் அடங்கிய பரிவார சாமியாகவும் ஆகிவிடுகிறார். சுடலைமாடசாமி தனியான வழிபாடும் உண்டு; முத்தாரம்மனுக்குப் பரிவார தெய்வமாகவும் வழிபாடு உள்ளது. முத்தாரம்மன் தனியாகவும் வழிபாடு பெறுகிறார்; மாரியம்மனுக்குப் பரிவாரமாகவும் வழிபாடு பெறுகிறார். நாராயணசாமி, பெருமாள்சாமி, சந்தனமாரி அம்மன் , பத்திரகாளி அம்மன், சுடலைமாடசாமி ஆகியோர் முத்தாரம்மனுக்குப் பரிவாரமாகவும் உள்ளனர். கொடிமரம், மதிலுடன் குலசேகர பட்டினம் முத்தாரம்மன் ஆலயம்; நவராத்திரி சமயம் சுமார் 10 லட்சம் மக்கள் வழிபடுவர் - https://www.youtube.com/watch?v=8TUQUOEEcbg இவர்களில் யார் உயர்நிலைச் சாமி ? யார் நாட்டார் சாமி ? ஊரக வழிபாடுகளில் மூன்று பீட சாமி முதல் 21 பீட சாமிகள் வரை இருப்பதைக் காண முடிகிறது. சுடலை மாடசாமியைத் தனியாக வழிபடுவர் பரவலாக. அவர்களே இனக்குழுக்கள் பிரியும்போது புலமாடசாமி , முண்ட மாடசாமி , இசக்கி மாடசாமி, கரடி மாடசாமி, காளை மாடசாமி, பன்றி மாடசாமி, பொன் மாடசாமி, தளவாய் மாடசாமி, பூக்குழி மாடசாமி, சங்கிலி மாடசாமி, ஆகாச மாடசாமி, உதிர மாடசாமி, சப்பாணி மாடசாமி, கச மாடசாமி எனத் தனித் தனிப் பெயர்களில் தெய்வமாகிறார். தூசி மாடசாமி கலிங்கர் இனக்குழுவினருக்கான தெய்வம். தூசிமாடசாமிக்கு சிவனைணந்த பெருமாள், பேச்சியம்மாள் சேர்ந்து பீடம். நாயக்கரில் ஒரு பிரிவு கம்பளத்து நாயக்கர்; இவர்களின் பொது தெய்வம் பொம்மி அம்மன், ஜக்கம்மா. ஆனால் இவர்களிடையேயும் பல உட்பிரிவுக் குலங்கள்; இவர்களுக்கெனப் பன்னிரண்டு வகை சாமிகள்.

மேற்சொன்ன பட்டியலில் உள்ள சாமிகள் அனைவரும் பொது வழிபாட்டில் வராத காரணத்தை ஆராய்ச்சி ஆஃபீசர்கள் கண்டுபிடித்தனரா ? மந்த்ராலயம் ராகவேந்திரரை வழிபடாதவர் யார் ? பூணூல் அணிந்த சாமிகள் பூணூல் அணியாதவர்களுக்கு அருள் செய்வதில்லையா ? பூணூல் அணியாத சாமிகளைப் பூணூல் அணிந்தவர் கும்பிடுவதில்லையா ? தெலுகு பேசும் வடுகர் தமிழ்ச் சாமிகளைக் கும்பிடுவதில்லையா ? வடுகர் கொணர்ந்த தெய்வங்களைத் தமிழர் வணங்குவதில்லையா ? ஊருக்கு வெளியே, கானகத்தின் நடுவே சிவ - விஷ்ணு ஆலயங்கள் கிடையவே கிடையாதா ? அதனால் மதிப்புக் குறைந்து விட்டதா ? [உலகத்திலேயே பொருள் வசதி படைத்த வேங்கடேசுவர சுவாமி ஆலயம் காட்டின் நடுவில் அமைந்ததுதான்]

சென்னை மாநகரின் மிகப்பழைய பெருந்திருவிழா ‘மயிலை அறுபத்து மூவர்’. அடியார்களை முன்னிறுத்தி நடைபெறும் இவ்விழாவில் எல்லா தெய்வங்களும் ஊர்வலம் வருவர் - https://www.youtube.com/watch?v=fQXcODu0BZA பங்களூரு மாநகரின் பெரிய , பழைய கோடைத்திருவிழா ’அல்சூர் பல்லகி’; மலர் அலங்காரத்துடன் சுமார் 70 -80 ஆலயங்களின் கடவுளர் அல்சூர் - ஜோகுபாளையம் பகுதியில் கூடுவார்கள்; தமிழ்ச் சாமிகள், கன்னடச் சாமிகள், ஆகமச் சாமிகள், சாலையோரச் சாமிகள் எல்லோரும் பல்லக்கேறிப் பங்கு கொள்வர் - https://www.youtube.com/watch?v=0Iknik5EK1A

உண்மையில் நம் கடவுளர் எல்லாருமே மிக எளிமையானவர்கள். கற்றினம் மேய்த்தான்; காடுவாழ் சாதியானான்; பற்றி உரலிடை ஆப்புண்டு அழுதான்; ஆயர் சிறார் அணிவித்த வனமாலையில் மகிழ்ந்தான் அச்சுதன். ‘பத்ரம் - புஷ்பம் - பலம் - தோயம் ‘ என ஏதோ ஒன்றை நம்மிடம் கையேந்துகிறான் கீதை மொழிந்த பரந்தாமன். உருளி நிறைந்த குன்றிமணிகளைக் கை நிறைய எடுத்து சமர்ப்பித்தாலும் போதும் என நிறைவுகொள்கிறான் குருவாயூரப்பன். பரம சிவத்துக்கு வில்வத்தழை போதுமானது. ஆனைமுகர் ஆடகச் செம்பொன்னில் கவசம் கேட்கவில்லை, அருகம்புல் போதுமானது. ’எதுவுமே வழிபாட்டுக்குத் தேவையில்லை; அழுதால் பெறலாம்’ என்றனர் ஆன்றோர். சமயங்களின் சாரம் இதுவே.

ஒரு மொழிபேசும் மாநிலத்தையே இரண்டாக்கிப் பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளைக்காரர் தொடங்கியது; அதே வழிமுறையையே கிரித்தவ மிஷநரிகளும் கையாள்கின்றனர். ஹிந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

'சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த - சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை. சாமானியப் பேச்சு வழக்கு மொழிகளையே கையாண்டு வந்தன' என்பது பரவலான ஆழ்ந்த புரிதல். வழக்கம்போல் உள்நோக்கம் கொண்ட போலி ஆய்வாளர்கள் கிளப்பி விட்டது. ஆனால் சிரமண சமயங்களின் [பவுத்த- செயின] வரலாறும், சான்றுகளும் இக்கருத்தைச் சற்றும் ஏற்க முடியாமல் அமைந்திருக்கக் காண்கிறோம்.

சில சிரமண நூல்கள் அர்த மாகதி, பாலி இவையே மாந்தரின் இயல்பான மூல மொழிகள் எனக்கூறியபோதிலும் ஆரம்பத்திலிருந்து சங்கதப் பயன்பாடே சிரமணர்களிடம் பரவலாகத் தொடர்ந்து நீடிப்பதைக் காண முடிகிறது.

அடிப்படையில் பௌத்தம், ஜைநம் என்பவை சங்கதப் பெயர்களே; சமணக் கோட்பாட்டுக் கலைச்சொற்கள் அமைந்திருப்பதும் ஸம்ஸ்க்ருதத்தில்தான். தீர்த்தங்கரர் பெயர்கள் சங்கதத்தில், கணதரர் பெயர்கள் சங்கதத்தில். சமணக் கல்வெட்டு சொல்லும் சில சமணத் துறவியருக்கு அழகான சங்கதப் பெயர்கள் -
ப₄த்₃ரோ ப₄த்₃ரஸ்வபா₄ஶ்ச த₄ரஸேநோ யதீஶ்வர:||
பூ₄தப₃லி: புஷ்பத₃ந்தோ ஜிநபாலிதயோகி₃ராட்|
ஸமந்தப₄த்₃ரோ தீ₄த₄ர்மா ஸித்₃தி₄ஸேநோ க₃ணாக்₃ரணீ:||

புகழ்பெற்ற கணதரர் சிலர் -
வ்ரு’ஷப ஸேன, கேசி, சுபதத்த, ஆர்யகோஷ, வசிஷ்ட, ப்ரஹ்மசாரி, ஸோம, வீரபத்ர, ஸ்ரீதர, இந்த்ரபூதி கௌதம, ஸுதர்ம ஸ்வாமி. இவர்கள் தீர்த்தங்கரர்க்கு அணுக்கமாக இருந்து கோட்பாடுகளைப் பரப்பினர்.

சமணத் துறவியர் நந்தி கணம், ஸேன கணம், ஸிம்ஹ கணம், தேவ கணம் என நான்கு கணத்தவராக இருந்தனர். வஜ்ர நந்தி மதுரையில் சமண சங்கத்தை நிறுவினார். பவணந்தி முனிவர் [நன்னூல்] நந்தி கணம் சார்ந்தவர்; அப்பரடிகளார் தாய்ச் சமயம் திரும்புமுன் சமணத்தின் ஸேன கணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; ‘தர்மஸேனர்’ அவர்தம் பெயர். திருஞான ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளின் ‘திருவாலவாய்ப் பதிகம்’ பார்த்துத் தெளிவு பெறலாம். தமிழ்க் காப்பியமான நீலகேசிக்கு உரை எழுதியவர் ஸமய திவாகர முனிவர்.

இன்றளவும் சமணத் துறவியர் சங்கதப் பெயர்களோடுதான் இருக்கின்றனர்; இன்றைய சமண உலகின் புகழ்பெற்ற துறவியார் ‘தருண ஸாகர முனி’. இவரது சொற்பொழிவுகளை யுட்யூபில் கேட்கலாம்.

புத்த மித்ரர், அமித ஸாகரர் - தமிழ்ப் பவுத்த அறிஞர்கள்.

சமணரின் தொன்மையான ஆகம நூலான ஷட்கண்டாகமத்தின் தவள டீகை அருமையான சங்கத சுலோகங்களுடன் திகழ்கிறது, மாதிரிக்கு ஒன்று-
பூர்வாபரவிரோதா₄தே₃வ்ர்யபேதோ தோ₃ஷஸந்ததே:|
த்₃யோதக: ஸர்வபா₄வநாமாப்தவ்யாஹ்ருʼதிராக₃ம:||

சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த சமணர் குழாம் கருநாடகத்தில் நிலைபெற்று வளர்ந்தது; தென்னக மொழிகளில் சமயப் பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சங்கதம் ஒதுக்கப்படவில்லை. ‘மஹா புராணம்’ கருநாடகச் சமணர் தந்த முக்கியமான சங்கத நூல். சமணர் தம்மில் வாதுவல்ல அறிஞர்க்கு ‘வாதீப ஸிம்ஹ’, ’வாதி கண்டீரவ’ எனும் பட்டங்களை அளித்துக் கவுரவித்தனர். பாரதத்தில் விருதளிப்புச் சடங்கை முதலில் தொடங்கி வைத்தது சமணராகவே இருக்க வேண்டும்.

தென்னகத்தின் மிகுந்த புகழ் படைத்த குந்தகுந்த ஆசார்யரும் சங்கதத்தில் நூல்கள் செய்துள்ளார். இவரது தீக்ஷா நாமம் - பத்ம நந்தி. மாநதுங்க முனி, ரிஷப தீர்த்தங்கரர் குறித்து ‘பக்தாமர ஸ்தோத்ரம்’ இயற்றினார்; இத்துதி நூல் சமணரால் மிகவும் மந்திர சக்தி பொருந்தியதாகக் கருதப்படுகிறது. பன்முக ஆற்றல் படைத்த ஹேமசந்த்ர முனியின் சங்கதப் படைப்புகள் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

ப்ராஹ்மி லிபியை ஜைனரின் பழைய பகவதி ஸுத்தம் “ணமோ பம்பியே லிவியே” என்று போற்றி வணங்கினாலும், இன்றைய பாகதச் சமண நூல்கள் அச்சேற்றப்படுவது தேவநாகரியில்தான். அதைப் பார்த்துவிட்டுப் பாகத மொழிக்கெனத் தனியான எழுத்துருக் கிடையாது என முடிவுகட்ட இயலாது, இதே நிலைதான் சங்கதத்துக்கும். அன்றைய கால கட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் ப்ராம்மி லிபி பொது எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். இன்றைய தேவநாகரி 120 மொழிகளுக்கு ஒரே எழுத்துருவாக விளங்குவதுபோல. அதே காரணத்தால் சமணமும் அந்த லிபிக்கு மரியாதை தந்திருக்கலாம்.

அருமையான சங்கத நிகண்டு செய்தளித்த அமரசிம்மர் பார்ப்பனரல்லர்.

அருகர் சமயப் பரப்புரைக்கு பேச்சுமொழிகளைக் கையாண்டனரே தவிர, சங்கத வெறுப்பு அவர்களிடம் கிடையாது. அர்த மாகதி, சூரஸேனி மொழிகளில் அவர்கள் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டியே எழுதியுள்ளனர்.

புத்தரின் பெயரால் ‘பௌத்தம்’ என அந்த சமயத்தை நாம் அழைத்தாலும், புத்தர் தம் சமயத்துக்குச் சூட்டிய பெயர் ‘ஆர்ய தர்மம்’ என்பதே. பவுத்த அடிப்படைக் கோட்பாடுகள் நான்கு ‘சத்வாரி ஆர்ய ஸத்யாநி’ எனப் பெயர் பெற்றன. இன்று பரவலாக விளங்கும் தேரவாதமும் ‘ஸ்தவிர வாதம்’ எனும் சங்கதச் சொல்லின் திரிபே.

அச்வகோஷரின் ‘புத்த சரிதம்’ ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்துள்ளது. மஹாயாந பௌத்தர் மட்டுமே சங்கதம் பயன்கொண்டனர் என்பதிலும் உண்மை இல்லை. ‘ஸர்வாஸ்தி வாதம்’ அமைந்திருப்பது ஸம்ஸ்க்ருதத்தில், இது மஹாயாநம் இல்லை. பௌத்தரான நாகார்ஜுனர், திங்நாகர், வஸுபந்து, ஆர்யதேவர், ஸ்திதமதி, தர்மகீர்த்தி, சந்த்ரகீர்த்தி, பாவிவேகி அனைவருமே வடமொழித் தேர்ச்சி மிக்கவரே. பிற்காலத்தில் ஸித்த லிபியிலும் சங்கத பவுத்த நூல்கள் எழுதப்பட்டன. [தர்மகீர்த்தியார் எழுதிய வரிகளை அப்படியே தந்து, பகவத்பாதர் அவர்கள் தம் மறுப்பை வெளியிட்டுள்ளார்கள்]

சமயவாதிகளின் நோக்கம் சமயப்பரவல் மட்டுமே; மொழி வளர்ப்பது அவர்களது நோக்கமன்று. தம் கோட்பாடுகளை விரைவில் பரப்பப் பிராந்திய அளவில் பெரும்பான்மையோர் பேசும் மொழிகளை ஊடகமாக்கிக் கொண்டனர். கோட்பாடுகளைச் செந்தரமாக்கிப் பொதுப்புரிதலுக்கு ஆக்கும்போது சங்கதத்தைத் துணை கொண்டனர். சமணக் கோட்பாடுகள் நூற்பா ஆகும்போது சங்கதமே துணை செய்கிறது. சமணர் தொடர்பில்லாத இந்திய மொழிகள் இல்லை; ஆனால் அவர்களின் சங்கதப் பங்களிப்பும் மிகுதி, இதுவே உண்மை. சமணம் சமயம் தவிரப் பிறதுறைகளிலும் அவர்கள் நூல்கள் யாத்துள்ளனர்.

"What would be the condition of the Indian Sanskrit literature if the contribution of the Jains were removed? The more I study Jain literature the happier and wonderstruck I am."
- Dr Hertel, Germany

ஜப்பானிய அறிவியலார் தம் ஆய்வுரைகளை உலக அளவில் முற்செலுத்தும்போது ஆங்கில மொழி வல்லுநரைத் துணை கொள்வர், தம் கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கு இடமில்லாதபோதும். ஆங்கிலம் இன்றைய உலகில் இன்றியமையாத மொழியாக விளங்குவதுபோல், அன்று தெற்காசியாவைப் பொருத்த மட்டில் சங்கதம் இன்றியமையாத மொழியாக இருந்தது.

[மூல நூல்களின் ஆதாரத்தோடு எழுதப்பட்டுள்ளது; சங்கதத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சி எனும் குற்றச்சாட்டுக்கு இடமில்லை]

படத்தில் இருப்பது வடமேற்குச் சீனாவில் கிடைத்த சங்கத ஏடு - பிராம்மி லிபியில், அடுத்தது ‘ஸித்தம்’



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

Krishna Kumar சங்கதத்தில் இயற்றப்பட்ட பௌத்த நூற்களான ஸத்தர்மபுண்டரீக ஸூத்ரம், ப்ரக்ஞாபாரமிதா ஸூத்ரம், காரண்டவ்யூஹ ஸுத்ரம், ஆர்யசதுர்தர்மநிர்தேசஸூத்ரம் என எண்ணிறந்த ஸூத்ரங்கள், பாஷ்யங்கள், ஸ்தோத்ரங்கள் என இவற்றின் ஒரு பெரிய தொகுப்பு Digital Sanskrit Budhist Canon எனும் இணையதளத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. http://www.dsbcproject.org/canon-text/browse-by-list/77 . தேவநாகர லிபியிலும் ரோமனைஸ்ட் லிபியிலும் பௌத்த சங்கத நூற்களை இங்கு காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

ஸம்ஸ்க்ருதம் Vs வடபுல மொழிகள்

பவுத்தரும் - சமணரும் மறை மறுப்பாளர்கள் ஆவதால் அந்தச் சமயங்களின் பங்களிப்பை உயர்த்திப் பேசுவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் மறை மறுப்பாளர் என்பது உண்மையே ஆயினும் ஸம்ஸ்க்ருதத்தை ஒதுக்கவில்லை. நிகந்த சமய ஆசாரியர்கள் தத்தம் சமயப் பரவலை எளிதாக்குவதற்காக முதலில் மக்களின் பேச்சு மொழிகளுக்கு முதன்மை தந்ததும் உண்மையே. அதற்குக் காரணம் அவர்களுக்குச் சங்கத மொழிமீது வெறுப்பிருந்தது எனப் பொருள் கொள்வது தவறு. மஹாவீரர், புத்தர் இவர்களின் கணதரர்கள் / முதல்நிலைச் சீடர்களின் பெயர்கள் சங்கதத்திலேயே அமைந்துள்ளன. நாலந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்ற சீன அறிஞர்கள் சங்கத வழியே பவுத்தத் தேர்ச்சி பெற்றுச் சீன மொழியில் பவுத்த நூல்களை மொழி பெயர்த்தனர். சங்கத மூல நூல்கள் பல இங்கு கிடைக்காத நிலையில் அவற்றின் சீன - திப்பெத்திய வடிவங்கள் கிடைக்கின்றன.

வேத நெறி சார்ந்த அறிஞர்கள் பலர் பிராந்திய மொழிப் பெயர்களில் பிரபலமாக அறியப்படுகின்றனர். ஆனால் நிகந்தரின் பெயர்கள் தூய சங்கத மொழியில்தான் அமைந்துள்ளன.
அதிலும் வடபுலத்தின் சமணத் தீர்த்தங்கரர் - துறவியரின் பெயர்கள் இன்றளவும் ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்ட இயலும். திருநாவுக்கரசு சுவாமிகளின் சமணப் பெயர் ‘தர்மஸேனர்’.

சமணர் பாகத மொழிகளில் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டி எழுதிவந்துள்ளனர். மொழி இயலார் பலர் இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. சமண ஆசாரியரான ஹேமசந்திரர் சங்கத இலக்கணமும் செய்துள்ளார்; பாகத மொழிக்கும் இலக்கணம் வரைந்துள்ளார்.

‘ப்ராக்ருத ப்ரகாச’ - பாகத இலக்கணம் கூறும் நூல், வரருசியால் செய்யப்பட்டது. நூல் பாகதச் சொற்களைச் சங்கதத்தின் தற்பவ வடிவமாகவே காட்டுகிறது.

பவுத்த ஆசாரியர்களான தர்ம கீர்த்தி, நாகார்ஜுநர் , திங்நாகர் போன்றோர் சிறந்த சங்கதப் புலமை பெற்றோராவர். ஆசார்ய தர்மகீர்த்தி எழுதிய வரிகளை அப்படியே எடுத்தாண்டு அதற்கான கண்டனத்தை பகவத்பாதர் அவர்கள் தெரிவிப்பதை சங்கரரின் உரையில் காண முடிகிறது.

ப்ராக்ருத - ஸம்ஸ்க்ருத பாஷைகளுக்குள் போட்டி இருப்பது போலவும், ஸம்ஸ்க்ருதம் பிற ப்ராக்ருத மொழிகளை விழுங்கி விட்டதுபோலவும் எழுதுவர். ஆனால் உண்மை அதுவன்று. ஸம்ஸ்க்ருத வாங்மயம் [சங்கத இலக்கியம்] என்பது ப்ராக்ருத மொழிகளையும் உள்ளடக்கியது. பாலி, சௌரஸேனீ, அர்த மாகதி எனும் பாகத மொழிகளின் பெயர்கள் சங்கதத்திலேயே அமைந்துள்ளன.

அம்மைக்கும், அரனாருக்கும் திருக்கயிலையில் நடந்த மண வைபவத்தில் கலைவாணி சங்கதத்திலும், பாகதத்திலுமாக அனைவருக்கும் முகமன் கூறி வரவேற்றதாகக் காளிதாஸ மஹாகவி கூறுவார் - ‘த்³விதா⁴ ப்ரயுக்தேந ச வாங்மயேந ஸரஸ்வதீ...’ [குமார ஸம்பவம்]

”ஸம்ஸ்க்ருதமும் ப்ராக்ருதமும் இரு மொழிகள் அல்ல. ஒன்று இலக்கிய நடை, மற்றொன்று பேச்சு நடை” என்பார் லண்டனில் வாழும் இண்டாலஜி அறிஞர் Santanam Swaminathan அவர்கள்.

சங்கத நாடகங்களில் பாகத உரையாடல்கள் கலந்திருக்கும். பிராந்தியச் சொலவடைகளையும் நாடகங்களில் சேர்த்திருப்பர். இதன் விளக்கம் Prakrit Verses in Sanskrit works on poetics" எனும் தலைப்பில் இரு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ”ராவண வஹோ” எனும் பாகதக் காப்பியத்தின் சங்கத வடிவத்தையும் தந்துள்ளனர். காஞ்சியில் வாழ்ந்த நிகமாந்த மஹா தேசிகர் தமது அச்யுத சதகத்துக்குக்கான பாகத வடிவத்தையும் தந்துள்ளார்; இவர் செய்துள்ள தமிழ்ப் பாக்கள் எண்ணற்றவை. ”செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” எனத் தயக்கமின்றி அறிவித்தவர் இந்த மஹா புருஷர்.

9ம் நூற்றாண்டின் ராஜசேகரர் சிறந்த ஸம்ஸ்க்ருத பண்டிதராக இருந்த போதிலும் “கர்ப்பூர மஞ்ஜரி” எனும் பாகத காப்பியம் [சௌரஸேனீ] படைத்தார்.

பாகத மொழிவளத்தை வெளிக்காட்டுவதில் சங்கத அறிஞர்களுக்குத் தயக்கம் இருந்ததில்லை. சங்கத மொழிச் சாயை காட்டுவதில் பாகத அறிஞர்கள் பின்வாங்கியதில்லை. சங்கத வல்லுநர் பாகத மொழிகளுக்கு இலக்கணம் வகுத்துத் தந்துமிருக்கின்றனர்.

ப்ராக்ருத பாஷைகள் பேச்சு வழக்கில் மேலும் திரிபுக்குட்பட்டு அபப்ரம்ச [அவஹத்த] பாஷைகளாகிவிட்டன என்பதே மொழி வரலாறு. இன்றைய ஹிந்தி, மராட்டி, பஞ்ஜாபி, வங்காளி, மைதிலி, போஜ்புரி போன்ற மொழிகள் பாகத மொழிகளின் திரிபால் தோன்றியவை.

மணிப்பவளம் தமிழக நிகந்த சமயத்தினரின் கொடை. ஈழத்தின் பவுத்தக் கல்வெட்டுகள் மணிப்பவள நடையில் அமைந்துள்ளன. சமண சயத்தினரின் உரைநடையில் மணிப்பவளம் மிகுதி; பின்னர் 10ம் நூற்றாண்டுக்குப்பின் தமிழக வைணவர் அந்நடையைத் தமதாக்கிக் கொண்டனர்.

Hybrid Sanskrit எனும் பாலி மொழி கலந்த சங்கத நடையை வடபுலப் பவுத்தர் பயன்படுத்தினர். பவுத்த தாரணி மந்திரங்களில் இந்நடையைக் காணலாம். பௌத்த ஸங்கீர்ண ஸம்ஸ்க்ருதத்துக்கெனத் தனி அகராதியே உள்ளது. இந்த அகராதியைத் தொகுத்தளித்தவர் Franklin Edgerton அவர்கள். வடமொழி வாணர் யாரும் இவ்விதக் கலப்புக்குக் கூக்குரல் எழுப்பவில்லை. மொழிகள் கடந்துவரும் நெடிய பாதையில் இத்தகைய கலப்புகள் தவிர்க்க இயலாதவை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Ram Sury "ஸம்ஸ்க்ருதமும் ப்ராக்ருதமும் இரு மொழிகள் அல்ல. ஒன்று இலக்கிய நடை, மற்றொன்று பேச்சு நடை."


அது சரி ஆனால் எது இலக்கிய நடை எது பேச்சு நடை?


பிராக்ருதத்தை பேச்சு நடை என்றால் சிரிப்பு தான் வரும்.

Ram Sury நாடகங்களில் ஆயிரம் பேர் சம்ஸ்க்ருதம் பேசுகையில் ஓரிருவர் ப்ராக்ருதம் பேச முயற்சிப்பது போல வரும். அந்த ஓரிருவர் பேசுவது வெகுஜனங்களுக்கு புரியாதோ என்று எண்ணி அதற்கு சம்ஸ்க்ருத சாயையும் அங்கேயே கொடுத்திருப்பார்கள்.

அதாவது ப்ராக்ருதம் தான் எல்லா காலங்களிலும் புரியாத வழக்கு, சம்ஸ்க்ருத சாயை தான் பரவலாக புரியும் (பேச்சு) நடை.

Ram Sury ப்ராக்ருத நடையின் தொடக்க வடிவம் காந்தாரி பாஷை என்று இன்று அழைக்கப்படும் 'பைஸாசி' ('பஶ்சாத்ய' என்ற பதத்தின் ப்ராக்ருத வடிவம் --- 'மேற்கத்திய' மொழி என்று பொருள்).

இது பாணினி காலத்திலேயே (பொயுமு நான்காம் நூற்றாண்டு) இருந்தது. பொயுமு மூன்றாம் நூற்றாண்டில
் மௌரிய சக்ரவர்தி தேவானாம்ப்ரிய ப்ரியதர்ஶி என்ற அஶோகர் இட்ட கல்வெட்டுகளில் தான் இதை முதலில் காண்கிறோம். இது எழுத்து நடை மட்டுமே, பேசப்பட்ட மொழி பாஷை (சம்ஸ்க்ருதம்).

பேச்சு நடைக்கு (பாஷைக்கு) இலக்கணம் வகுத்தார் பாணினி. அன்றும் இன்றும் ப்ராக்ருதம் பேசுபவர்கள் சம்ஸ்க்ருதம் பேசுபவரை விட மிக குறைவு.

சம்ஸ்க்ருதம் 'ஸீக்ஷை' (பேச்சுவழக்கு) பாடநூல்கள் நூற்றுக்கணக்கானவை இயற்றப்பட்டுள்ளன.

ப்ராக்ருதம் மூலம் சம்ஸ்க்ருதம் கற்க யாரும் முயன்றதாக வரலாறு இல்லை. ஆக ப்ராக்ருதம் வெகுஜனங்களின் பேச்சு மொழி என்பது முற்றிலும் தவறு.

https://archive.org/details/PaniniyaShiksha

 

Ram Sury "பாகத மொழிகள் பல்வேறு பிராந்தியப் பேச்சு முறைகள்"

இது தவறு. தேஶ பாஷைகள் ப்ராக்ருதங்கள் அல்ல.


ப்ராக்ருதம் பிராந்திய அடிப்படையில் உருவானதும் அல்ல.

ஶிக்ஷா - ஆம் ஶிக்ஷையை தான் ஸீக்ஷை என்று தவறாக பதித்துவிட்டேன்.

Ram Sury அது காலத்தை பொறுத்தது. அஷ்டாத்யாயீக்கு முன்னும் பிராந்திய வழக்குகள் வட-இந்தியாவில் இருந்தன அவையெல்லாமே ஸம்ஸ்க்ருத மொழியுள் அடங்கியவை தான். அப்படிப்பட்ட வழக்குகளுக்கு தான் இலக்கணம் வகுத்தார் பாணினி.

வட்டார வழக்கு என்றால் ஸம்ஸ்க்ருதம் அல்ல என்றோ ப்ராக்ர
ுதம் தான் என்றோ பொருள் கொள்ளுதல் தவறு.

திஶை அடிப்படையில் அமைந்தவையே தேஶங்கள். பிராகிருதம் என்பது தேஶிய மொழிகளை (அதாவது வட்டார வழக்குகள்) குறிக்கும் சொல் அல்ல.

பிராக்ருதம் தோன்றுவதற்கு காரணம் தேஶ-பாஷை ப்ரயோகங்கள் அல்ல.

Ram Sury புத்தர் பாணினி இருவரும் ஒரே காலத்தில் ஒரே ராஜ்யத்தில் வாழ்ந்தவர்கள் தான். புத்தர் பாணினியைவிட சற்று வயதில் மூத்தவர். அவர்கள் வாழும் காலத்தில் இருந்த அனைத்து இந்தோ-ஆரிய மொழிகளும் (ஸம்ஸ்க்ருத) பாஷையின் அங்கமாகத்தான் கருதப்பட்டன. இன்றைய இந்தி பேச்சு வழக்குகளை (Hindustani dialect continuum) போல். அவர்கள் வாழ்ந்த காலத்தின் இறுதியில் தான் ப்ராக்ருத தாக்கம் பாஷையில் உருவெடுக்க தொடங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பவுத்தம் மறைச் சடங்குகளை ஆதரிக்கிறது.

அக்னி ஹோத்ரத்தின் மேன்மை கூறுகிறது.
(அக்₃கி₃ஹுத்தமுகா₂ யஞ்ஞா)

மறைச் சடங்குகளுக்குதவும் தருப்பைப் புல்லின் பவித்திரத் தன்மையை மதிக்கிறது.
கீதை - விபூதி யோகத்தின் சாயலில் முக்கிய விபூதிகளை ஒப்புக்கொள்கிறது.

காயத்ரீ மஹாமந்த்ரம் போற்றுகிறது!
(ஸாவித்தீ ச₂ந்த₃ஸோ முக₂ம்)

ஏவம் மயா ச்ருதம்:

evaṃ me sutaṃ—ekaṃ samayaṃ bhagavā aṅguttarāpesu cārikaṃ caramāno mahatā bhikkhusaṃghena saddhiṃ aḍḍhateḷasehi bhikkhusatehi yena āpaṇaṃ nāma aṅguttarāpānaṃ nigamo tadavasari.

ஏவம்மே ஸுதம்ʼ—
ஏகம் ஸமயம் ப₄க₃வா அங்கு₃த்தராபேஸு சாரிகம் சரமாநோ மஹதா பி₄க்கு₂ ஸங்கே₄ந ஸத்₃தி₄ம் அட்₃ட₄தேளஸேஹி பி₄க்கு₂ஸதேஹி யேந ஆபணம்நாம அங்கு₃த்தராபாநம் நிக₃மோ தத₃வஸரி।

அக்₃கி₃ஹுத்த முகா₂ யஞ்ஞா,
ஸாவித்தீ ச₂ந்த₃ஸோ முக₂ம்;
ராஜா முக₂ம் மநுஸ்ஸாநம்,
நதீ₃நம் ஸாக₃ரோ முக₂ம்ʼ।

நக்க₂த்தாநம் முக₂ம் சந்தோ₃,
ஆதி₃ச்சோ தபதம் முக₂ம்ʼ;
புஞ்ஞம் ஆகங்க₂மாநாநம்ʼ,
ஸங்கோ₄ வே யஜதம் முக₂ந்”தி।

Aggihuttamukhā yaññā,
sāvittī chandaso mukhaṃ;
Rājā mukhaṃ manussānaṃ,
nadīnaṃ sāgaro mukhaṃ.

Nakkhattānaṃ mukhaṃ cando,
ādicco tapataṃ mukhaṃ;
Puññaṃ ākaṅkhamānānaṃ,
saṅgho ve yajataṃ mukhan”ti.

[இவை பகவான் புத்தரின் வாய் மொழிகள்; அக்₃கி₃ஹுத்தம் - அக்னிஹோத்ரம்]

https://suttacentral.net/mn92/pli/ms

புராதனமான இந்த மஜ்ஜிம நிகாயப் பகுதியைச் சுட்டியவர் நண்பர் Ram Sury அவர்கள்

 

https://suttacentral.net/mn92/pli/ms

புராதனமான இந்த மஜ்ஜிம நிகாயப் பகுதியைச் சுட்டியவர் நண்பர் Ram Sury அவர்கள்

SUTTACENTRAL.NET
 
A brahmanical ascetic named Keṇiya invites the entire Saṅgha for a meal. When the brahmin Sela sees what is happening, he visits the Buddha and expresses his delight in a moving series of devotional verses.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard