Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் வழிபாட்டு வரலாறு : சுந்தர சண்முகனார்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
கடவுள் வழிபாட்டு வரலாறு : சுந்தர சண்முகனார்
Permalink  
 


கடவுள்
வழிபாட்டு வரலாறு

 

 

 

ஆசிரியர் :

ஆராய்ச்சி அறிஞர்

முனைவர் சுந்தர சண்முகனார்

தமிழ்-அகராதித்துறைப் பேராசிரியர் (ஒய்வு),

புதுச்சேரி-11.

 

 


கிடைக்கும் இடம் :

சுந்தர சண்முகனார்

புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்

38, வேங்கட நகர்,

புதுச்சேரி - 11.

 

கடவுள் வழிபாட்டு வரலாறு

முதல் பதிப்பு : 7-11-1988

உரிமை : ஆசிரியருக்கே.

 

கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf

கோவில் வழிபாடு:
"கோவில் முழுதும் கண்டேன் - உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் - தோழி
தேடியும் கண்டிலனே"
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 

 


விலை : ரூ. 15-00

 

 

அச்சிட்டோர் :


வெற்றி அச்சகம்

91, டாக்டர் பெசன்ட் ரோடு,

இராயப்பேட்டை- சென்னை - 600 014.

 

ஆசிரியர் முன்னுரை

யான் செல்லும் வழியில் எந்த மதத்துக் கோயில் தென்படினும், என்னை அறியாமல் என் இருகைகளும் கூப்பிக் கும்பிடும் ; சில இடங்களில் அரைக் கும்பிடாவது போடும்.

அப்படியிருந்தும், இந்நூலின் முற்பகுதியைப் படிப்பவர்கள் என்னை 'நாத்திகன்’ என்று கூறக் கூடும். நூல் முழுதும் படித்த பின் எனது கொள்கை புலனாகும்.

ஆத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் கடவுளர்களின் நிலைமையினும், யான் கும்பிடும் கடவுளர்களின் நிலைமை வேறு.

கடவுளர்கள் எவ்வாறு கடவுளர்களானார்கள் என் பதிலேயே ஆத்திகரும் யானும் வேறுபடுகின்றோம்.

நூல் முழுதும் படித்தபின், நடுநிலைமையோடு தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன்.

இந்நூலை நன்முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த வெற்றி அச்சகத்தாருக்கு என் நன்றி உரியது.

சுந்தர சண்முகன்
7-11-1988

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: கடவுள் வழிபாட்டு வரலாறு : சுந்தர சண்முகனார்
Permalink  
 


கடவுள் வழிபாட்டு வரலாறு

 

1. நூல் முதல்

நூல் முதல் என்னும் இந்தப் பகுதி, இந்த நூலின் எழுச்சிக்கு உரிய காரணத்தை விளக்கும் பகுதியாகும்.

சைவ சிந்தாந்தப் பற்று

இளமையில் யான் முறுகிய கடவுள் பற்று உடையவனாக இருந்தேன் : திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஞானியார் மடத்தில் கல்வி பயின்றேன்; புலவர் பட்டம் பெற்றதும், மயிலம் அருள்மிகு பாலய சுவாமிகள் கல்லூரியில் பத்தொன்பதாம் வயதுத் தொடக்கத்திலேயே பிரிவுரையாளனாக அமர்ந்து பணியாற்றினேன் ; இந்த இரண்டு மடங்களின் தொடர்பினால் சைவப்பற்று-சைவ சித்தாந்தப் பற்று உடையவனாக இருந்தேன் ; சைவ சித்தாந்தக் கொள்கையைப் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றிப் பரப்பும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன்.

பொய்ம்மையும் போலித் தன்மையும்

நாள் ஆக ஆக, அகவை (வயது) ஏற ஏற யான் ஒரு வகைச் சிந்தனையில் ஈடுபடலானேன். இதற்குக் கார ணம், பல துறைகளிலும் மெய்ம்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையும் போலித்தனமும் இருப்பதைக் கண்டதே யாகும். திருமணம் ஆகி வாழ்க்கையில் ஈடுபட்டதும் மேலும் உலகியலைப் புரிந்து கொள்ள முடிந்தது; மேலும் சிந்தனை ஈடுபாடு வளரலாயிற்று. விழுந்து விழுந்து கடவுளை வணங்குபவர்கள் துன்புறுவதையும் ஐம்பெருங்குற்றங்கள் (பஞ்சமகா பாதகங்கள்) புரிவோர் இன்புற்று வாழ்வதையும் கண்டு வியப்படைந்தேன். இதற்குக் காரணம் பழைய ஊழ்வினை எனக் கூறப்படும் 'நேரப் பேச்சை' (சந்தர்ப்பவாதப் பேச்சைக்) கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் இதன் உண்மைக் காரணத்தை ஆராயத் தொடங்கினேன்.

மூட நம்பிக்கைகள்

பல செயல்கள் காரண காரியத் தொடர்பு இன்றியே மக்களால் செய்யப்படுவதைக் கண்டேன். ஒரு கத்தரிக் காய் செடி போட்டால் கத்தரிக்காய் கிடைக்கிறது ஆனால் கடவுளை வணங்குவதால் நேர்ப்பயன் ஒன்றும் கிடைக்காமையை உணர்ந்தேன். ஒரு சிலரின் வாழ்க்கையில், அவர்கள் கடவுளை வணங்க வணங்க மேன் மேலும் துன்பம் பெருகுவதையும், அவர்கள் அதற்காக அலுப்பு-சலிப்பு அடையாமல் மீண்டும் மீண்டும் கடவுள் வழிபாடு செய்து கொண்டிருப்பதையும் கண்டு வியப்பு எய்தி அதைத் தொடர்ந்து வெறுப்பும் வேதனையும் அடைந்தேன். இவ்வாறு எந்தத் தொடர்பும் இன்றி மூட நம்பிக்கையின் காரணமாகச் செய்யப்படும் பல்வேறு சடங்குகளையும் செயல்களையும் கண்டு - கண்டு அதற்குரிய காரணத்தை மீண்டும் மீண்டும் ஆராயலானேன். ஊழ்வினை-மறுபிறவி - மறு உலகம் - வீடுபேறு (மோட்சம்) என்பன உண்மையில் உண்டா? என்ற ஆராய்ச்சியிலும் காலத்தைச் செலவிட்டேன். சமுதாய ஏற்றத் தாழ்வுகள்

அடுத்தபடியாக. சமுதாய வாழ்க்கையில் பலதுறைகளிலும் உள்ள பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு எண்ணத்தில் ஈடுபடலானேன்.

“கல்லானே யானாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்"
(34)

என்னும் ஒளவையாரின் நல்வழிப் பாடலின் கருத்தை நடைமுறையில்-எனது சொந்த வாழ்க்கையிலும் கண்டு சரிபார்த்துக் கொண்டேன். யான் மயிலம் கல்லூரியில் ஆசிரியனாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த போது என் தமையனார் குடும்பத்துக்கு எவ்வளவோ பொருள் உதவி புரிந்தேன். இடையில் ஒராண்டு காலம் கடுமையாய் நோயுற்று வருவாய் இன்றி அல்லலுற நேர்ந்தது. திருமணத்துக்கு முன்பே பெற்றோரை இழந்து விட்ட யான், இந்த வருமானம் இல்லாத நோய்க் காலத்தில் என் அண்ணன் வீட்டில் சிறிது காலமும் என் மாமனார் வீட்டில் சிறிது காலமுமாக இருந்து வந்தேன். அப்போது, என் அண்ணன் மனைவியாகிய என் அண்ணியால் யான் எய்திய இன்னல்களும், என் மாமனார் வீட்டில் எனக்கு நேர்ந்த இழிவுகளும், என்னைச் சிந்தனையில் ஆழ்த்திப் பெரிய தத்துவ வாதியாக மாற்றிவிட்டன: உலகின் உண்மை நிலையை நன்கு உணர்ந்து கொண்டேன்.

நிலையாமை உணர்வு அடுத்த படியாக உலக நிலையாமை உணர்வும் என்னை அடிமைப்படுத்திக் கொண்டது. எங்கள் பெற்றோர்க்கு யாங்கள் பன்னிரண்டு பிள்ளைகள். அவர் களுள், யானே, பன்னிரண்டாவது கடைக்குட்டிப் பிள்ளை. எனது முப்பத்தைந்தாவது வயது காலத்துக்குள்ளேயே என் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் இழந்து வருந்தி, நிலையாமை உணர்வின் கொடும் பிடியில் சிக்கித் தவித்தேன். உலகியலில் நடை பெறும் எந்த இன்ப நிகழ்ச்சியைக் கண்டாலும் எனக்குத் துன்ப உணர்வே தோன்றத் தொடங்கியது. உலகில் பேரரசர், பெருந் துறவியர், பெருஞ்செல்வர், பேரறிஞர், பெரிய தத்துவ வாதிகள் முதலியோருள் எவர் வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் ‘காலமானார்’ என்று முடிவதைக் கண்டு யான் சிந்தனையில் ஆழ்ந்து போவது உண்டு. சாவுச் செய்தியைக் கேட்டாலும் பிண ஊர் வலத்தைக் கண்டாலும் பெரிதும் அதிர்ச்சி அடைவேன். அதிர்ச்சியின் காரணம் அச்சம் அன்று-நிலையாமை உணர்ச்சியே!

பிண ஊர்வலத்தின்போது முழக்கும் பறைக்கு 'நெய்தல்' பறை என்பது பெயர். பிண ஊர்வலத்துக்கு முன்னால் முழங்கிக் கொண்டு போகும் இந்த நெய்தல் ஒசை, உலகில் இறக்காமல் இன்னும் எஞ்சியிருப்பவர் கட்குச் சுடுகாடு என ஒன்றுள்ளது-வாழ்க்கையில் நேர்மையாய் இருங்கள்-என்று நினைவு செய்து நெஞ்சை நடுங்கச் செய்யுமாம். இதனைச் சாத்தனாரின் மணிமேகலை நூலிலுள்ள -

“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”

(சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 70-71)-

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இந்த நெய்தல் பறை என் நெஞ்சை நடுங்கச் செய்து என்னை நினைவில் ஆழ்த்துவது உண்டு. யான் புதுச்சேரியில் வாழும் பகுதி, பிண ஊர்வலம், மண ஊர்வலம், அரசியல் ஊர்வலம் முதலிய எல்லா ஊர்வலங்களும் போகும் மையப் பகுதியாகும். எங்கள் பகுதியில் நாடோறும் மாலையில் ஓரிரு பிண ஊர்வலம் போய்க் கொண்டேயிருக்கும். சில நாளில் பிண ஊர் வலம் சென்ற ஒரு மணி நேரமோ-இரண்டு மணி நேரமோ கழித்து மண ஊர்வலம் செல்வதுண்டு. இந்த இரண்டையும் மாறி மாறிப் பார்க்கும் யான் ஒருவகை மயக்கத்தில் ஆழ்ந்து போவேன். இந்த மயக்க உணர்வின் போதே, 'பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்று நினைவுக்கு வருவதுண்டு. அதன் கருத்தாவது:-'ஓர் இல்லத்தில் சாப்பறை கொட்டவும், மற்றோர் இல்லத்தில் மிகவும் குளிர்ந்த மணமுழவின் இனிய ஓசை எங்கும் ததும்பவும், கணவருடன் வாழும் மகளிர் மலரும் அணிகலன்களும் அணிந்து மகிழவும், கணவரைப் பிரிந்த பெண்டிரின் துன்பம் தோய்ந்த கண்களில் நீர் உகுந்து துளிக்கவும், இவ்விதம் ஏறு மாறாகப் பண்பில்லாத கடவுள் உலகைப் படைத்து விட்டான். அம்மவோ! இவ்வுலக வாழ்வு மிகவும் கொடியது-துன்பமானது; ஆதலின் இவ்வுலக இயற்கையை உணர்ந்தோர், அல்லனவற்றை நீக்கி நல்லனவற்றையே-இனியனவற்றையே செய்வாராக!” என்பது அப்பாடற் கருத்து. இனிப் பாடல் வருமாறு:—

“ஒரில் நெய்தல் கறங்க, ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூ அணிஅணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பு இலாளன்:
இன்னாது அம்ம-இவ்வுலகம்:
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தேரோ” (194)

என்பது பாடல். நிலையாமையுணர்வின் போதும், யான், இப்பாடலில் உள்ள பொருட் சுவையோடு சொற்சுவை யினையும் சுவைக்கத் தவறுவதில்லை. சுவை ஒருபுறம் இருக்க, இறக்கப் போகின்றவர் பிறப்பது எதற்கு? எல்லாரும் இன்பமாயிருக்கும்படி கடவுள் படைத்தால் என்ன?-என்ற மாதிரியான எண்ணங்கள் என் மனத்தை எப்போதும் வாட்டிக் கொண்டேயிருக்கும்.

துன்பமே வாழ்க்கை

மற்றும், எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) ஏற்பட்டதால், அடிக்கடி நோயுற்றுத் தொல்லைப்படுவதுண்டு. அடிக்கடிச் சம்பள இழப்பு விடுமுறை எடுத்து வருந்துவதுண்டு. என்னைப் போன்ற இன்னும் பலரது நிலையையும் எண்ணிப் பார்ப்பதுண்டு. உலக மக்கள் படும் பல்வேறு இடுக்கண்களையும் நோக்குவதுண்டு. இதனால், உலக வாழ்க்கையில் துன்பமே மிகுதி-போலியான இன்பம் ஒரு சிறிது நேரம் இருந்து மறையக் கூடியது-என்ற கருத்து என் உள்ளத்தில் ஆழ்ந்தபதிவை உண்டாக்கியது.

போரும் பூசலும்

இம் மட்டுமா? மக்கள் தம் நலம் காரணமாக ஒருவரையொருவர் ஏய்த்து ஏப்பம் விடுவதும், தம் நலத்துக்காகக் கொள்ளையோடு நில்லாது கொலையும் புரிவதும், எல்லாத் துறைகளிலும் ஒழுங்கு இன்றிப் பல வகை ஊழல்கள் மலிந்து கிடப்பதும் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டுள்ளன. தம் நலம் காரணமாகத் தனி மாந்தர் ஒருவரோடொருவர் பூசல் புரிவது ஒரு புறம் இருக்க, உலக நாடுகள் ஒன்றோடொன்று பொருது கொண்டு, உலக மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் என் உள்ளத்தை உலுக்கிக் கொண்டுள்ளன. சீர்திருத்த உணர்வு

இந்நிலையில், மேற் குறித்துள்ள குறைபாடுகள் இல்லாத உலகம் இருக்க முடியாதா? இவ்வளவு குறைபாட்டுடன் கடவுள் ஏன் இவ்வுலகத்தைப் படைக்க வேண்டும்?-என்றெல்லாம் என் சிந்தனையில் உறுத்தல் ஏற்பட்டது. உலக நன்மைக்காகப் புத்தர், ஏசு பிரான், திருவள்ளுவர் முதலான பெருமக்கள் பலர் பெரிதும் பாடுபட்டுள்ளனர். கைமேல் பயன் கிடைத்ததா? அவர் தம் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று சொல்ல வேண்டிய நிலையிலேயே உலகம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன். யானும் ஏதேனும் நல்லது செய்யவேண்டும் போலத் தோன்றியது யான் நேர்மையின் கூர்மையிலே நிற்பவன் என்று கூற முடியாதெனினும், நேர்மையின் கூர்மையிலே நிற்க முயலுபவன் என்றாவது என்னைக் கூற முடியும் என நினைக்கிறேன். எனவே, என்னால் இயன்ற அளவு சீர்திருத்த உணர்வை உலகுக்கு ஊட்ட முற்படலானேன்.

வேறு சீர்திருத்தக்காரர்களின் சொற்பொழிவு களைக் கேட்டதாலோ-அவர்தம் நூல்களைப் படித்ததாலோ-வேறு பிறரது தூண்டுதலாலோ எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றவில்லை; எனது ஆழ்ந்த சிந்தனையின் வாயிலாகவே-எனது பட்டறிவின் (அனுபவத்தின்) வாயிலாகவே-எனது மனச் சான்றின் வாயிலாகவே எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றி வளரலாயிற்று.

நெஞ்சு பொறுப்பதில்லை

இளமைப் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு வழக்கம் உண்டு, எங்கேனும் யாரேனும் தீயது ஏதேனும் செய்வதைக் கண்டால், நமக்கு என்ன-யாராவது எப்படி யாவது போகட்டும்-என வறிதே செல்வது கிடையாது. அங்கு நின்று அதைக் கவனித்துத் தொடர்புடையவரைக் கண்டிப்பது எனது வழக்கம். இந்த வழக்கத்தால் யான் சில எதிர்ப்புகளையும் இழப்புகளையும் பெற்றிருக்கிறேன்.

"நெஞ்சு பொறுக்கு தில்லையே- இந்த

நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்"

என்னும் சுப்பிரமணிய பாரதியார் கூற்றை யான் நடை முறையில் கடைப்பிடித்து வந்தேன். எங்கே சண்டை என்றாலும் அங்கே போய் விலக்கி விடுவேன்- எங்கே தகராறு என்றாலும் அங்கே என்னைப் பார்க்கலாம். தகராறு செய்பவனாக என்னைப் பார்க்க முடியாது-தகராறைத் தீர்த்து வைப்பவனாகவே அங்கு என்னைப் பார்க்கலாம்.

உள்ள முயற்சியின் உருவம்

 

வயது ஏற ஏற, உடல்நலம் குன்றக் குன்ற, உடலால் ஒன்றும் பணிசெய்ய முடியாமற் போய்விட்டது-உள்ளத்தாலேயே ஏதேனும் செய்ய முடிகின்றது. இத்தகைய உள்ளத்தின் ஊக்க முயற்சியே, இப்போது, “கடவுள் வழிபாட்டு வரலாறு’ என்னும் இந்த நூல் வடிவம் பெறலாயிற்று. இந்நூலில், கடவுள் தோற்றுவிக்கப்பட்ட வரலாறும், கடவுள் வழிபாடு தோன்றிய வரலாறும் பல கோணங்களில் விளக்கப்பெறும். கடவுள் உண்மைப் பொருளா? என்பதும் ஆராயப்பெறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

2. உலகமும் உயிர்களும்

ஏன் இந்த உலகம்?

ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்.........?......?

பதில் எளிதில் கிடைக்கவில்லையே! ஒருவேளை இதற்குப் பதிலே இல்லையா?

“ஏன் இல்லை; பதில்கள் நிரம்ப உள்ளனவே," என்கின்றனர் பலர்.

“உயிர்கள் உய்வதற்காகக் கடவுள் இவ்வுலகத்தைப் படைத்தார்" எனப் பொதுவாகப் பலரும்- பல பிரிவினரும் கூறுகின்றனர். அவர்தம் கூற்றுகளுள் சில காண்பாம்:

கடவுள் ஒருவர் உள்ளார் என்பது எவ்லாரும் கூறுவது. இந்த எல்லாருள்ளும் ஒவ்வொருவர் ஒவ்வொரு கடவுளைக்குறிப்பிடுகின்றனர். அவ்வளவுகடவுள் பெயர்களையும் பட்டியல் படுத்தினால் அது மிகவும் நீளும். எனவே, கடவுள் என்னும் பொதுப் பெயரையே பயன்படுத்துவோம்.

படைப்பின் நோக்கங்கள்:

உயிர்களுக்காகக் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார்; உலகில் பல பொருள்களையும் உண்டாக்கினார் என்பர் சிலர். இதையே சிலர், கடவுள் உயிர்கள் உய்யத் தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்தார்-என்பதாகக் கூறுவர். (தனு = உடம்பு; கரணம் = மனம் முதலிய உட்கருவிகள்; புவனம் = உலகம் ; போகம் = உயிர்கள் துய்க்கும் பல்வேறு இன்பங்கள்-இன்பப் பொருள்கள்.)

கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கிறார்; பின் காக்கிறார்; பின்பு அழித்து மறைக்கிறார்; பின் நல்லவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்; நல்லவர் அல்லாதவரை நரகத்தில் தள்ளிக் கொடுமைகளைத் துய்க்கச் செய்து பின் மீண்டும் உலகுக்குக் கொண்டு வருகிறார்; பின்னர் அவர்கள் நல்லன செய்து நல்லவர்கள் ஆனதும் கடவுள் அவர்களையும் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்- (அஃதாவது, மாணாக்கன் ஒருவன் மூன்றாண்டுகள் ஒரு வகுப்பிலேயே கிடந்து பிறகு நன்கு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று மேல் வகுப்புக்கு மாறுவது போல-) என்பது ஒருவகைக் கருத்து.

தண்ணீர் கடலிலிருந்து ஆவியாக மேலெழுந்து முகிலாகிப் பின்னர் மழையாகப் பெய்து ஆறுகளின் வாயிலாக மீண்டும் கடலை அடைவது போல, உயிர்கள் கடவுளிடமிருந்து தோன்றி உலகில் உழன்று மீண்டும் கடவுளையே அடைகின்றன-என்பது ஒரு பெரிய நூற் கருத்து. (எந்த நூலையும்-யாரையும் எந்தப் பிரிவினரையும் குறிப்பிடாமலேயே இங்கே செய்திகள் தரப்படுகின்றன.)

கடவுள் உயிர்களைப் பிறப்பித்து அவற்றுக்காகத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்ததோடு மன நிறைவு கொள்ளாமல், இடைவிட்டு இடைவிட்டுச் சிற்சில நேரங்களில் தாமும் உலகில் மக்கட் பிறவி எடுத்து (அவதாரம் செய்து) மக்களோடு வாழ்ந்து மக்களுக்காகப் பல இன்னல்களையும் துய்க்கிறார் என்பது ஒருவகைக் கருத்து.

கடவுள் உயிர்களைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளி ஐந்தொழில் (பஞ்ச கிருத்தியம்) புரிகிறார். அஃது அவருக்கு ஒருவகைத் திருவிளையாடல் ஆகும் என்பது ஒரு கருத்து.

சிந்தனைக்கு வாய்ப்பு :

இவ்வாறு பலர் பலவிதமாகக் கூறுவனவாகப் பல்வேறு கருத்துகள் சொல்லிக் கொண்டே போகலாம். இனிச் சிந்தனைக்கு வாய்ப்பு தர வேண்டும்.

முன்னோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களையெல்லாம் மறந்து, அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு இப்போது பலரும் கூறும் பல்வேறு கோட்பாடுகளை யெல்லாம் மறந்து, நாம் நம் விருப்பத்தில் சொந்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; தன்னுரிமையுடன் சுதந்திரமாக-ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த ஆய்வுத் துளிகளுள் சில வருமாறு;

கடவுள் உயிர்களுக்காக ஏன் உலகத்தைப் படைக்க வேண்டும்? தனு கரண புவன போகங்களை ஏன் தர வேண்டும்? கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கவில்லையெனில் தனு கரண புவன போகங்களைத் தரவேண்டிய தில்லையே? நனைத்துச் சுமப்பது ஏன்?

கடவுள் தன்னைப் பிறப்பிக்க வேண்டும் என்று எந்த உயிர் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது?-எந்த உயிர் அவரிடம் முறையிட்டுக் கொண்டது? தன்னைப் பிறப்பிக்கவில்லையென்று எந்த உயிர் அவரிடம் சினந்து கொண்டது?

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்பது போல, வாளா கிடந்த உயிர்களைப் பிறப்பிப் பது ஏன்? பின் காப்பதும் அழிப்பதும் ஏன்? சிலவற்றை நரகத்தில் தள்ளுவதும் சிலவற்றைச் சொர்க்கத்திற்கு அனுப்புவதும் சிலவற்றைத் தம்மோடு சேர்த்து இணைத்துக் கொள்வதும் ஏன்? இந்த நாடகம் எதற்கு?

குடும்பக் கட்டுப்பாடு

கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்றால், எத்தனை வகை உயிர்களைப் பிறப்பிப்பது? மக்கள் மட்டும் போதாதா? கண்ணுக்குத் தெரியாத அணு உயிர்கள் முதற் கொண்டு யானை, ஒட்டசகம், மலைப் பாம்பு, திமிங்கலம், திமிங்கில கிலம், இன்னும் பெரிய உயிர்கள் வரை எத்தனை வகைகளைப் பிறப்பிப்பது? இவ்வளவு வகை உயிரிகளுள் ஒவ்வொன்றுக்கும் பேரேடு போட்டுக் கடவுள் கணக்கு வைத்துக் கொண்டுள்ளாரா? கோடி - கோடி - கோடி - கோடிக் கணக்கான உயிரிகள் உள்ளனவே! ஒருவர் வீட்டுக் கணக்கை எழுதவே பதின்மர் போதவில்லையே! இவ்வளவு உயிரிகளின் வரவு செலவு நடைமுறைக் கணக்குகளை எழுதிவைத்து அவற்றிற் கேற்பப் பயன் அளிக்கக் கடவுள் என்ன மிக மிக மிகப் பெரிய கம்ப்யூட்டரா?

பூவுலகில் நானூறு-ஐந்நூறுகோடி மக்கள் உள்ளனர் என்றால், ஒரே புற்றில் இவ்வளவு மக்கள் தொகைக்கும் மிகுதியான எறும்புகள் உள்ளனவே! எறும்புகள் போல இன்னும் பல்வேறு வகை உயிரிகள் கோடிக் கணக்கில் உள்ளன. சுமார் பத்துநூறாயிரம் வகை (பத்து இலட்சம் 10,00,000) உயிரி இனங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட் டுள்ளது. இவற்றுள் ஒவ்வோர் இனத்திலும், ஆயிரக் கணக்கான-நூறாயிரக்கணக்கான - கோடிக்கணக்கான உயிரிகள் உள்ளன. இத்தனை வகை உயிரிகள் உலகுக்குத் தேவையா? இவ்வளவையும் ஏன் படைக்க வேண்டும்? வீட்டில் குழந்தைகள் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மக்கள் தொகை பெருகினால் கட்டுபடியாகவில்லை - சமாளிக்க முடியவில்லை என்பதால் மக்கள் இனத்தார் குடும்பக்கட்டுப்பாட்டைத் (Birth Control) கடைப்பிடிக்கின்றனரே! கடவுள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கலாகாதா? இவ்வளவு உயிரிகளை இம் மண்ணுலகில் படைத்து. உண்டி, உறையுள் முதலியன போதாமல் இன்னலுறச் செய்ய வேண்டுமா?

ஒன்றை ஒன்று

இங்கே பல்வேறு உயிர்களைப் படைப்பதால் என்ன நன்மை? ஆனால் ஒரு நன்மை கூறலாம்! உயிர்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கின்றன; தம்மினும் சிறிய உயிரிகளைப் பெரிய உயிரிகள் கொன்று தின்கின்றன. இது சிறிய உயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும். பகுத்தறிவு உடையவர்கள் என்று தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்ற மக்களே, தமக்குள் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுகின்றனரே! ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்பதற்காகத்தான், இத்தனை வகை உயிரிகளைக் கடவுள் படைத்தாரா? இறக்கப் போகும் உயிரிகளைப் பிறப்பிப்பதேன்?

கவுளுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகள்-கடவுள் முன் எல்லா உயிர்களும் சமமானவை - என்பதாக ஒரு கருத்து கதைக்கப்படுகிறது. அங்ஙனமெனில், தம் பிள்ளைகளுக்குள்ளேயே ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளை யைக் கொன்று தின்னும்படி கடவுள் ஏன் அமைத்தார்? இஃது அறிவுள்ள செயலா?

மிகச் சிறிய பூச்சியைப் பாசிப் பூச்சி தின்கிறது - பாசிப் பூச்சியைக் கரப்பான் பூச்சி தின்கிறது-கரப்பான் பூச்சியைப் பல்லி விழுங்குகிறது-பல்லியைப் பூனை விழுங்குகிறது - இப்படியே மற்ற-மற்ற உயிரிகளும் செய்து கொண்டிருக்கின்றன. மலைப்பாம்பு, புலி,கரடி, சிங்கம் முதலியன மற்ற உயிர்களை உண்பதல்லாமல், மக்களையே கொன்று பசியாறுகின்றன. மக்களோ எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறார்கள். இந்தப் பொல்லா முரண்பாடு அமைப்பு ஏன்? பிற உயிரிகளைக் கொன்று தின்னக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரைகள்-உபதேசங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன; ஆனால், பிற உயிரிகளைக் கொன்று தின்னக் கூடாது என்று மக்கள் அல்லாத மற்ற உயிர்களுக்கு யார் அறிவுரை கூறித் திருத்த முடியும்! மக்களே இன்னும் திருந்த வில்லையே! கீழே ஊர்வனவற்றில் வண்டி வகைகளைத் தவிர-மேலே பறப்பவற்றில் காற்றாடி, வான ஊர்தி, இராக்கெட் போன்றவற்றைத் தவிர - மற்ற யாவற்றையும் மக்கள் தீர்த்துக் கட்டுகின்றனரே!

ஒன்றை ஒன்று கொன்று தின்னக் கூடாது என்று கடவுள் உயிர்களுக்கு அறிவுரை பகரக் கூடாதா? அவர் அவ்வாறு அறிவுரை பகர்ந்தால், 'எங்களைப் படைத்து விட்டீர்களே-யாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?' என்று உயிரிகள் திருப்பிக் கேட்டால் கடவுள் என்ன பதில் பகரக் கூடும்? அவருடைய திருவிளையாடல் தானே இது? உயிரிகளின் இயல்பை நோக்குங்கால், உயிர் என்ற சொல்லுக்கு, தன்னலம் உடையது-மற்றதை ஏய்ப்பது மற்றதைக் கொன்று தின்பது-என்றெல்லாம் பொருள் கூறலாம் போல் தோன்றுகிறது. படைப்புக் கொள்கை

நிலைமை இவ்வாறிருக்க, படைப்புக் கொள்கையினர் கூறுவது வியப்பாயுள்ளது. அவர் கூற்று வருமாறு:- கடவுளே எல்லா உலகங்களையும் (அண்டங்களையும்) எல்லா உயிர்களையும் படைத்தார். ஓர்உயிர் இனத்துக்கும் மற்றோர் உயிர் இனத்துக்கும் தொடர்பில்லை. கடவுளே ஒவ்வோர் உயிர் இனத்தையும்தனித்தனியாகப் படைத்தது மட்டுமல்லாமல், இடையிடையேயும் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறார்; அஃதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவில்லை; தொடக்கக் காலத்தில் ஒன்று தோன்றுவதற்கு எது முதற்காரண மாய் இருந்ததோ, அம்முதற்காரணமே பின்னரும்பின்னரும் பல்வேறு வகை உயிர்கள் தனித்தனியே தோன்றுவதற்குக் காரணமாயுள்ளது. உயிர்களின் நன்மைக்காகவே எல்லாம் உள்ளன-என்றெல்லாம் படைப்புக் கொள்கையினர் (Creationists) கூறி வருகினறனர். இவர்கள் வேறுயாருமல்லர்; உலகில் உள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களும் அவர்களைப் பின் பற்றுபவருமேயாவர்.

டார்வின் (Darwin) போன்றோர் கூறுகின்ற-ஒன்று திரிந்து வேறொன்றாக மாறும் திரிபு மாற்றக் கொள்கை-அதாவது, ‘பரிணாமக் கொள்கை’ (Evolutionism) படைப்புக் கொள்கையினும் வேறுபட்டது. எனவே, எது உண்மை என்பதைக் காணப் 'படைப்புக் கொள்கை’ பற்றி இந்நூலுள் விரிவாக ஆராய்வோமாக!

[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

3. படைப்புக் கொள்கை ஆய்வு

பெற்றோரும் பிள்ளைகளும்

கடவுளே எல்லாம் படைத்தார் என்னும் படைப்புக் கொள்கையே சரியானது என்று சொல்வதனால், இந்நூலில் முன்பு கூறியுள்ளாங்கு, கடவுள் ஏன் உலகங்களையும் உயிர்களையும் படைக்க வேண்டும்? அதிலும் இத்தனை வகை உயிர்கள் எதற்குத் தேவை? இதன் உண்மையான நோக்கம் என்ன? இந்தப் பூவுலகில்தான் உணவு நெருக்கடியும் இட நெருக்கடியும் மற்ற நெருக்கடிகளும் உள்ளனவே! இந்த நெருக்கடிகளைக் குறைக்கச் சில கோடி உயிர்களையாவது நிலா உலகில் (சந்திர மண்டலத்தில்) படைத்துச் சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக் கலாமே! நிலா உலகில் காற்றையும் தண்ணீரையும் உண்டாக்காதது ஏன்? அதன் மேல் ஏதேனும் சினமா?— அல்லது வெறுப்பா?

பூவுலசில் இவ்வளவு உயிர்களைப் படைத்தாரே—அவற்றையெல்லாம் நன்முறையில் காப்பாற்ற முடிகிறதா? சூது-வாது, பகை-வெறுப்பு, கொலை—கொள்ளை, வறுமை-பிணி, பசி-பற்றாக் குறைகள் இன்னபிற தொல்லைகள் எத்தனையோ-எத்தனையோ! கடவுள் சிலைகளையே மக்கள் திருடி விற்றுப் பிழைக்கும் ஏளனமான நிலைக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? ஏழைகள் எப்படியாவது பிழைக்கட்டும் என்ற இரக்கமா? அங்ஙனமெனில், எந்தத் தீமையை வேண்டுமானாலும் செய்யலாமா? உலகில் நன்மைகளோ - தீமைகளோ, கடவுள் விருப்பப்படிதான் நடைபெறுகின்றனவா? உயிர்களின் இந்த நிலைமை பொருத்தம்தானா?

தம் குழந்தைகள் துன்பப்படப் பெற்றோர் உடன் படுவரா? கடவுளுக்கு ஏன் இது தெரியவில்லை. குறைபாடுடைய குழந்தைகளை-உயிரிகளைக் கடவுள் படைப்பதேன்? மக்கள் குறைபாடுடைய குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் குறைபோக்க முயல்கின்றனர்—கெட்ட பிள்ளைகளைத் திருத்த முயல்கின்றனர். கடவுள் இதுபோல் ஏதாவது செய்கிறாரா? நரகத்தில் அல்லவா தள்ளுகிறார்! பெற்றோரின் அன்பைப் பெறபெற்றோரிடமிருந்து உதவி பெறப் பிள்ளைகள் கெஞ்ச வேண்டியதில்லையே. இயற்கையாகவே பெற்றோர்கள் அருள் மழை பொழிகின்றனரே! ஆனால் கடவுளின் அன்பை-அருளைப் பெற, மக்கள் எவ்வளவோ பணச் செலவு செய்யவேண்டியுள்ளது-எவ்வளவோ உடல் உழைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது-கீழே விழுந்தும், மண்டியிட்டும், கைகட்டியும் அல்லது கைகூப்பியும், தலை தாழ்த்தியும், வாயால் புலம்பியும் வாழ்த்தியும் கெஞ்சிக் குழைந்து கூத்தாட வேண்டியுள்ளது. இஃது ஏன்? தாயின் அன்பைப் பெறச் சேய் தாய்க்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுப்பதில்லையே! கடவுள் அன்பைப் பெறுவதற்கு மட்டும் மக்கள் ஏன் இவ்வளவு செய்ய வேண்டியுள்ளது? அங்ஙனமெனில், கடவுள் கொடியவரா? இரக்கம் இல்லாதவரா? மக்களுக்கு இருக்கும். இரக்கம் கடவுளுக்கு இல்லையே. ஏன்? அறியாமைப் பிதற்றல்

ஏழைகளின் வறுமையைப் போக்கவும் பிணியாளரின் பிணிகளை நீக்கவும் பல்வேறு துன்பங்களில் உழல்வோரின் துன்பங்களைப் போக்கவும் மக்களுக்கு மக்கள் தாமே உதவி செய்து கொள்கின்றனர்? இங்கே கடவுள் என்ன செய்கிறார்? “கடவுள், மக்கள் சிலரைக் கொண்டு மற்ற மக்களுக்கு உதவி புரிகிறார்-மேலும் தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) மேல் உலகத்திலிருந்து பூவுல கிற்கு அனுப்பி உதவி செய்ய வைக்கிறார்-என்றெல்லாம் பிதற்றப்படுகிறது. அங்ஙனமெனில், பிணியும் வறுமையும் இன்னபிற துன்பங்களும் வருவதனால்தானே கடவுள் பிறர் வாயிலாக அவற்றைப் போக்க வேண்டியுள்ளது? இந்தத் துன்பங்கள் எல்லாம்-ஏன்?-எந்தத் துன்பமுமே உயிர்கட்கு வராதவாறு கடவுள் உலகத்தைப் படைத்தால் அவருக்கு என்ன இழப்பு (நஷ்டம்) வந்து விடும்? அவர் தாம் எல்லாம் வல்லவராயிற்றே.

துன்பம் ஒரு சிறிதும் இல்லாத=இன்பமே நிறைந்த உலகத்தை ஏன் அவர் படைக்கலாகாது? துன்ப உலகைப் படைத்து விட்டுப் பின்னர்ப் பேராளர்களை அனுப்பித் துன்பங்களைப் போக்க முயல்வது, குழந்தையைக் கிள்ளிவிட்டுப் பின்னர்த் தொட்டிலை ஆட்டுவது போலல்லவா இருக்கிறது? அப்படியே பிறர் வாயிலாக அல்லது தம் பேராளர் (பிரதிநிதிகள்) வாயிலாக உலகத் துன்பங்களை இன்று வரையிலும் நூற்றுக்குக் கால்பங்கா வது கடவுளால் போக்க முடிந்ததா? சில நோய்கள் பரவாமல் தடுக்கவும் சில நோய்களை அறவே அகற்றவும் அறிவியல் மக்கள் (Scientist) முயல்கின்றனரே-அம் முயற்சியில் வெற்றியும் காண்கின்றனரே! இந்தியப் பெரு நாட்டில் பெரியம்மை நோய் அறவே அகற்றப்பட்டு விட்டதே! அதுபோல், கடவுள் உலகில் துன்பங்களே இல்லாதவாறு முற்றிலும் அகற்றாதது ஏன்? அறிவியலார் (விஞ்ஞானிகள்) வாயிலாகக் கடவுளே எல்லாம் கண்டுபிடிக்க வைக்கிறார்-அறிவியலார் வாயிலாகவே வறுமை, பிணி, இன்ன பிற துன்பங்களைக் கடவுள் அகற்றுகிறார் எனில், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு கட்கு முன்பே அறிவியலார் வாயிலாகக் கடவுள் இந்தக் கண்டு பிடிப்புகளையெல்லாம் செய்ய வைத்திருக்கலாமே! இவ்வளவு காலம் தாழ்த்திக் காத்திருந்ததேன்? இப்போதுதான் அக்கறை பிறந்ததா?

உயிர்களின் இன்னல்களைப் போக்கக் கடவுளே பூவுலகில் வந்து (அவதாரம்) பிறவி எடுக்கிறாராம்; உலகில் கொடுமைகள் மலிந்துவிட்டபோது அவற்றைப் போக்கக் கடவுளே மக்களிடை வந்து அவதரிக்கிறாராம்.

சரி, தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) உலகிற்கு அனுப்பியும் பயன் இல்லாது போகவே, கடவுள் தாமே நேரில் வந்து அவதரிக்கிறார் போலும்! சரி, எத்தனையோ மதத்தார்கள் சொல்கிறபடி எத்தனையோ அவதாரங்களைக் கடவுள் எடுத்தாரே-அதனால் பயன் என்ன? உலகில் எந்தத் தீமை-எந்தத் துன்பம் குறைந்துள்ளது? இந்த அவதாரங்கள் எல்லாம் முழுத் தோல்வி அடைந்தனவே தவிர, ஏதேனும் வெற்றி கண்டனவா? அவதாரங்கட்கு முன் இருந்த தீமைகளுள்-கொடுமை களுள்-துன்பங்களுள் இப்போது எது எவ்வளவு குறைந்துள்ளது?

‘பார்க்க வந்த சீமாட்டி பல் உடைந்து போனாளாம் எடுக்க வந்த சீமாட்டி இடுப்பு ஒடிந்து போனாளாம்’-என்னும் பழமொழிகளின் உட்பொருள் போல, மக்களின் துன்பங்களைப் போக்க மேலுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த அவதாரங்கள் எல்லாம், மக்களைப் போலவே உலகில் பெருந் துன்பம் உற்றுச் செத்துத் தொலைந்தனவே! எனவே, மேலே சுட்டியுள்ளாங்கு, கடவுள் பெயரால் கூறும் கருத்துகள் எல்லாம், அறியாமையால் உளறும் பிதற்றல்களே என்பது தெளிவு.

இவ்வளவு தானா? இன்னும் எவ்வளவோ அறியாமைப் பிதற்றல்கள் உள: “கடவுள் மேல் பழி போடுவது ஏன்? அவரவர் செய்த வினையை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்-கடவுள் என்ன செய்வார்!"-என்பதாக ஒரு கருத்து உளறப்படுகின்றது. அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உண்மை; இது அறிவியல் கருத்தும் ஆகும். அங்ஙனமெனில் இடையில் கடவுள் எதற்கு பிறருக்கு நன்மை செய்பவன் திரும்ப நன்மையைப் பெறுகிறான்: பிறர்க்குத் தீமை செய்பவன் திரும்பத் தீமை அடை கிறான்; தீமை செய்தவன் முதலில் மறைந்து தப்பித்துக் கொள்ளினும் பிறகு கண்டு பிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான். இதற்குக் கடவுள் தேவையில்லை. இதற்குச் சமூக நீதி உள்ளது-நீதிமன்றங்கள் உள்ளன-அரசு உள்ளது. இந்த அமைப்பினால், அவரவர் செய்த வினையை அவரவர் நுகர்ந்தே தீர்வர். தீமை செய்தவன் கடவுளை வேண்டித் தப்பித்துக் கொள்வானே யாயின் கடவுள் நீதி தவறியவராவார். ஒருவன் நன்மை பெற வேண்டுமாயின் அஃது அவனது செயலைப் பொறுத்தே உள்ளது; வாளா இருந்து கொண்டு கடவுள் அருளால் நன்மை பெற்றுவிட முடியாது. ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாய்ப் பிறக்கின்றான்-அதாவது பணக்காரர்க்குப் பிறக்கின்றான்; மற்றொருவன் பிறக்கும்போதே ஏழையாய்ப் பிறக்கிறான்-அதாவது ஏழைக்குப் பிறக்கிறான்; இது, அவனவன் முற்பிறவியில் செய்த வினையின் பயன்-எனச் சொல்லப்படுகிறது. அங்ஙனமெனில், இங்கும் கடவுளுக்கு வேலையில்லை; உண்மையில் இது சமுதாய அமைப்பின் கோளாறாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

4. ஊழ் வினை

இந்தச் சிக்கல்களிலிருந்து கடவுளைக் காப்பாற்ற 'ஊழ்வினை’ என்னும் படைக்கலம் பயன்படுத்தப்படுகிறது. நல்லவர் துன்புறுவதையும் தீயவர் இன்புறுவதையும் உலகியலில் கண்ணெதிரில் காண்கிறோம். இவ்வாறு நிகழக் கடவுள் உடன்படலாமா என்பது ஒரு வினா. தமிழர்களின் தலைமகனாரும் உலகப் பெரும் புலவரும் ஊழ்வினையில் நம்பிக்கை உடையவருமாகிய திருவள்ளுவரே இத்தகைய வினா ஒன்றுக்கு விடை யிறுக்க முடியாமல் திக்குமுக்காடியுள்ளார். அஃதாவது, தீய நெஞ்சத்தானது வளர்ச்சியும் நேர்மையாளனது கேடும் இயற்கைக்கு மாறாதலின் ஆராயப்பட வேண்டியவை யாகும் என்று தமது திருக்குறளில் ஓரிடத்தில் கூறியுள்ளார்.

“அவ்விய கெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்" - (169)

என்பது பாடல். இதனை முற்பிறவியில் செய்த ஊழ் வினையின் பயன் என்று பலரும் கூறுவர். குழந்தை பிறக்கும்போதே கடவுள் தலையில் எழுதியனுப்பு வாராம். முற்பிறவியில் நல்லன செய்த உயிர் அடுத்த பிறவியில் நல்லனவே பெறும்; முற்பிறவியில் தீயன செய்த உயிர் அடுத்த பிறவியில் தீமையே அடையும் என்பது ஊழ்வினை நம்பிக்கையாளரின் கருத்து. முற்பிறவிச் செயல்களுக்கேற்ப இப்போது எடுக்கும் பிறவியில் இன்னின்ன பயன் கிடைக்கும் என்று குழந்தையின் தலையில் எழுதியிருக்கும் என்ற நம்பிக்கையாளர் இதற்குத் 'தலை எழுத்து’, ‘தலை விதி’ என்னும் பெயர்கள் வழங்குகின்றனர். ஆங்கிலத்தில் இது 'Fate' எனப் படுகிறது. இந்தத் தலை எழுத்தை மாற்றுவது கடவுளுக்கே கடினமாம். 'அன்று எழுதியனுப்பியவன் இன்று மாற்றி எழுத முடியுமா?’ என்பது உலகியல் பேச்சு. அங்ஙனமெனில், இதில் இனிக் கடவுளுக்கே வேலையில்லை; அவரை வேண்ட வேண்டியதும் இல்லை. அவராலேயுந்தான் இதை மாற்ற முடியாதல்லவா?

விதி விலக்கு

ஆனால் சில சமயம் கடவுள் இதற்கு விதிவிலக்கு அளிப்பாராம். இது சார்பான கதைகள் சில வழங்கப் படுகின்றன. எடுத்துக் காட்டுக்கு ஒரு கதை வருக; மார்க்கண்டேயன் என்பவன் பதினாறு ஆண்டு காலமே வாழ்வான் என அவன் பிறக்கும்போதே 'சிவன்' என்னும் இந்து மதக்கடவுள் எழுதியனுப்பி விட்டாராம்; பதினாறு ஆண்டுகள் முடிந்ததும் எமன் மார்க்கண்டேயனது உயிரைப் பிடிக்க வந்தானாம்; அப்போது மார்க்கண்டேயன் சிவனது உருவமெனச் செதுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கல் சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டானாம்; உடனே எமன் சிவனது உருவச் சிலையோடு சேர்த்துக் கயிற்றைப் போட்டு இழுத்தானாம்; சினம் கொண்ட சிவன் உண்மை உருவத்தோடு தோன்றி எமனைக் காலால் உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயனது உயிரைக் காப்பாற்றினாராம். மார்க்கண்டேயன் அன்று முதல் என்றும் பதினாறு அகவை (வயது) இளைஞனாகவே இருக்கின்றானாம். இது புராணக் கதை. இப்போது மார்க்கண்டேயன் பதினாறு அகவையுடனேயே எங்கே இருக்கின்றான் என்பது தெரியவில்லை. அவனைக் கண்டுபிடிக்கும் வேலையைத் துப்பறியும் துறையினரிடம் விட்டுவிட வேண்டும். இந்தக் கதை நிகழ்ச்சி உண்மையாயின், பலருக்கும் ஒருவிதமாகவும் ஒருவர்க்கு மட்டும் வேறு விதமாகவும் நடந்து கொண்டதான-நடுநிலைமை பிறழ்ந்த குற்றம் கடவுளைச் சாரும் என்பதில் ஐயமில்லை.

ஊழ்வினை பிறந்த வரலாறு

ஊழ்வினை என்னும் ஒன்று இருப்பதாக எப்போது யாரால் ஏன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என ஆய்வு செய்ய வேண்டும். மிக மிகப் பழங்காலத்தி லேயே மக்களுள் சிலர் உலகியல் நிகழ்ச்சிகளை உற்று நோக்கியிருப்பர். வாழ்க்கை முழுதும் நல்லனவே செய்யும் சிலர் துன்பம் உறுவதையும் வாழ்க்கை முழுவதும் தீயனவே செய்யும் சிலர் இன்பமாக வாழ் வதையும் கண்ட அறிஞர் சிலர், இந்த எதிர்மாறான அமைப்புகளுக்குக் காரணம் என்ன என்று துணுகிச் சிந்தித்திருக்கக் கூடும். அவர்கட்குத் தக்க நேரடியான பதில் கிடைத்திருக்காது.

நெல் விதைத்தவன் நெல்லைத்தான் அறுவடை செய்யமுடியும்-மாறாகத் தினையை அறுவடை செய்ய முடியாது; அதுபோலவே, தினை விதைத்தவன் தினையைத் தான் அறுவடை செய்ய முடியும்-மாறாக நெல்லை அறுவடை செய்ய முடியாது. இஃது இயற்கை விதி. இவ்வாறே, நல்லன. செய்தவன் நன்மையே பெற வேண்டும்-மாறாகத் துன்பமுறக் கூடாது; தீயன செய்தவன் துன்பமே படவேண்டும்-மாறாக இன்பம் எய்தலாகாது. ஆனால், இந்த இயற்கைப் பொது விதிக்கு மாறாக உலகியல் நிகழ்ச்சிகள் சில அமைவ தற்குத் தக்க காரணம் ஏதாவது ஒன்று மறைவாக இருக்கத்தான் வேண்டும் என அவர்கள் எண்ணினர். அதற்குரிய காரணமாக அவர்கள் உய்த்துணர்ந்துயூகித்துக் கண்டதாவது:-


இந்தப் பிறவியில் நன்மை செய்பவர்கள் துன்பமுறுவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் செய்த தீவினையாகத்தான் இருக்கவேண்டும்; இந்தப் பிறவியில் தீமை செய்பவர்கள் இன்பம் எய்துவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் ஆற்றிய நல்வினையாகத்தான் இருக்க வேண்டும்-என்பதுதான் அவர்களின் உய்த்துணர்வு. இவ்வாறு முற்பிறவியில் செய்த வினைக்கு ‘ஊழ்வினை’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காண இந்த உய்த்துணர்வைத் தவிர அவர்கட்கு வேறு வழி புலப்பட்டிலது. எதிர்மாறான வினைவுகட்குச் சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத முன்னோர்கள் இப்படியாவது ஒரு காரணம் கண்டுபிடித்ததில் வியப்பில்லை. உலகியலில் நேருக்கு நேர் தீமைசெய்தவன் அரசால் கண்டுபிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான்-இது அரசநீதி! தீமையே செய்யாதவனும் சில நேரத்தில் துன்புறுகிறான்-இஃது ஊழ் வினைப் பயன்-என்பதாகத் கருதிய முன்னோர்கள்,"அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்”- என்னும் பழமொழியையும் உருவாக்கிவிட்டனர்.

ஊழ்வினை உண்மையா?

நடுநிலைமையுடன் பகுத்தறிவு கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆராயுங்கால் ஊழ்வினை என ஒன்று இருப்பதாக நம்புவதற்கில்லை. அந்த அந்தப் பிறவிகளில் செய்த வினைகளின் பயன்களை அந்த அந்தப் பிறவிகளிலேயே துய்க்கச் செய்வதுதான் கடவுளின் கடமை; அதைவிட்டு அடுத்த பிறவிகளில் துய்க்கச் செய்வது. என்பது கட்டுக் கதையே. போன பிறவியில் இழைத்த வினையின் பயனைத்தான் இந்தப் பிறவியில் துய்க்கிறோம் என ஒருவர் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? போன பிறவியில் எங்கே யாருக்கு என்ன செய்தோம் என்பது இந்தப் பிறவியில் அறியப்படவில்லையே! எனவே, ஊழ்வினை என்பது உண்மை யன்று; அறியாமையால் எழுந்த கட்டுக் கதையே. ஊழ் வினை என ஒன்று இருப்பதாக உலகப் பெரும் புலவராகிய திருவள்ளுவர் ஓரிடத்தில் தெரிவித்திருப்பினும் அதை ஒத்துக் கொள்வதற்கில்லை. தெய்வத்தால் (ஊழ்வினைப்படி) காரியம் கைகூடாவிடினும், உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை முயற்சி கொடுத்தே தீரும்; விடாமுயற்சியுடன் வெற்றிச் செயல் புரிபவர் ஊழ்வினையையும் வென்று விடலாம்-எனத் திருவள்ளுவர் வேறு ஒரிடத்தில் தெரிவித் திருப்பது, ஒரளவு ஆறுதல் அளிக்கிறது;

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
(619)

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்." 
(620)

என்பன திருக்குறள் பாக்கள். ஊழ்வினையில் நம்பிக்கை உடையவர்களும், துன்பம் வந்து உற்றக்கால் சோர்ந்து விடாமல் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எழுந்து நின்று செயலாற்றுவதற்கு இந்தத் திருக்குறள் பாடல்கள் ஓரளவேனும் உதவும். இல்லையேல், கடவுள் நமக்கு இட்டது இவ்வளவுதான் என்று சோர்ந்து மடிந்து போக நேரிடும். குருட்டுத்தனமான இந்த ஊழ்வினை நம்பிக்கையால் இரு பயன்கள் உண்டு எனலாம். முதலாவது: நாம் தீவினைகள் புரியின் இந்தப் பிறவியில் தப்பித் துக் கொள்ளினும், அடுத்த பிறவியில் தப்பவே முடியாது என அஞ்சிச் சிலர் தீவினைகள் புரியத் தயங்கலாம்.


இரண்டாவது : எவ்வளவு விடாது மேன்மேலும் முயன்றும் காரியம் கைகூடாதபோது, [1] “கிட்டாதாயின் வெட்டென மற”-என்னும் ஒளவையின் அறிவுரைக்கு இணங்க, நமக்கு உள்ளது இவ்வளவுதான்- வருந்த வேண்டியதில்லை’ என மன அமைதி கொள்ளச் செய்வ தாகும். இதனை - ஒருவகை ஆறுதலாகக் கொள்ள வேண்டுமே ஒழிய, மற்று, ஊழ்வினையையே முழுதும் நம்பி, நமக்கு வரவேண்டும் என்று ஊழ்இருப்பின் தானே வரும் என்று எண்ணிச் செயல் ஒன்றும் புரியாது வறிதே சோம்பியிருப்பது மடமையினும் பெரிய மடமையாகும்:


ஊழ்வினைக்கு மாற்று

நல்லவர்க்குத் தீமையும் தீயவர்க்கு நன்மையும் ஏற்படும் எதிர்மாறான விளைவுகளுக்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க முடியாதெனில், இதற்கு மாற்றுக் காரணம் உண்டா என ஆய்வு செய்யவேண்டும். மாற்றுக் காரணங்களாக என்னென்னவோ சொல்லலாம் எனினும் அவற்றை வகைதொகை செய்து நறுக்காக மூன்று காரணங்கள் உள எனலாம், அவை :-

(ஒன்று) சமுதாய அமைப்பின் சீர்சேடு; (இரண்டு) அரசு முறையின் குறை; (மூன்று) தற்செயலான சூழ்நிலை ஆற்றல்- என்பனவாம்.


சமூகச் சீர்கேடு

இவற்றிற்குச் சிறு சிறு விளக்கமாவது வேண்டி யுள்ளது. முதல் காரணத்தின் விளக்கம் : பலவகை ஆற்றல் பெற்ற கொடியவர்கள்-தீயவர்கள், எளிய மக்களை ஏய்த்துக் கொடுமைப்படுத்தி மேலுக்கு வந்து விடுகின்றனர். இவர்களை யாராலும் ஒறுக்க முடியவில்லை; இவர்களை ஒறுக்க முயல்பவர்கள் இவர்களால் மீண்டும் ஒறுக்கப்படுகின்றனர்.


நல்லவர்கள் இயற்கையாகச் சிலவகை ஆற்றல்களைப் பெறாமையால், வாழ்க்கைச் சிக்கல்களையும் போட்டிகளையும் வென்று மேல்நிலைக்கு வரமுடியவில்லை. இவ்விரு திறத்தாரின் வாழ்க்கை நிலையைக் காண்பவர்கள், தீயவர் மேல் நிலையிலும் நல்லவர் கீழ் நிலையிலும் இருப்பதற்குக் காரணம் முற்பிறவியில் செய்த ஊழ்வினையேயாகும் என்ற முடிவுக்கு எளிதில் வந்துவிடுகின்றனர். மற்றும்-சாதி வேற்றுமைக் கொடுமைகள் உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் இல்லை. இவை இடையில் புகுந்தனவாகும்-புகுத்தப்பட்டனவாகும். மேல் சாதிக்காரராக ஆக்கப்பட்டவர்கள் மேல்நிலையில் நிமிர்ந்து நின்று பல நல்ல வசதி வாய்ப்புகளைப் பெற்று இன்பமாய் வாழ்கின்றனர்; அதே நேரத்தில், கீழ்ச்சாதிக்கார ராக ஆக்கப்பட்டவர்கள் கீழ்நிலையில் தாழ்ந்து குனிந்து நல்ல வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் தோய்ந்து உழல்கின்றனர். இதற்கும் ஊழ்வினையே காரணமாகக் கற்பனை செய்யப்படுகிறது. ஒரு சாதியினர்க்குள்ளேயே-ஒரு தரத்தினர்க்குள்ளேயே ஒரு சிலர் ஏழையராகவும் வேறு சிலர் செல்வராகவும் இருக்கும் அமைப்பை எடுத்துக்கொள்ளினும் இதே நிலை தான். இவ்வாறு இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் சமுதாய அமைப்பின் சீர்கேடே காரணமாகும்; ஊழ்வினை என ஒன்று காரணமாகாது. முயன்றால் இத்தகைய சீர்கேடுகளை அகற்றிச் சமுதாய அமைப்பைச் செப்பம் செய்ய முடி யுயும். சமுதாயத்தைச் செம்மை செய்து சமப்படுத்தும் பணி, இப்போது நாடுகளில் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதில் சமூகச் சீர்திருத்தக்காரர்களின் பங்கு பெரிது.


அரசின் குறை

அடுத்து, இரண்டாவது காரணமாகிய அரசியல் முறையின் குறைபற்றிப் பார்க்கலாம்: இந்தக் காலத்தில் அரசியல் கொடுமைகள் சில, பல நாடுகளில் காணப்படினும். பண்டைக் காலத்தை நோக்க, இக்கால அரசியல் முறை எவ்வளவோ சீர்திருந்தியுள்ளது எனக் கூறலாம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் அரசர் இருந்தனர். ஒருவர்க்கொருவரிடையே எப்போதும் கெடுபிடி இருந்தது. அடிக்கடி போர்-கொலை-கொள்ளை-தீவைப்பு -கற்பழிப்பு-இப்படிப் பல கொடுமைகள் மாறி மாறி நடந்துகொண்டேயிருந்தன. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரராய்க் காணப்பட்டனர். இந்நிலையில் மக்களின் வாழ்க்கையமைப்பு எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் என்று உய்த்துணர முடியும். அரசரைச் சார்ந்தோர்-அரசியலைச் சார்ந்தோர் வசதி பெற்றவராகவும், அல்லாதார் வசதி அற்றவராகவும் வாழ்ந்தனர். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிலைமை சில இடங்களில் காணப்படுகின்றதன்றோ? அந்தக் காலத்திற்குக் கேட்கவா வேண்டும்! அரசர்கள் சிலரை உயர்த்தினர்; பலரைத் தாழ்த்தினர். உயர் சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களால் உயர்த்தப்பட்டனர்; பல வாய்ப்பு வசதிகள் அளிக்கப் பெற்றனர். கீழ்ச்சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களாலும் அரசர்களின் ஆதரவு பெற்றவர்களாலும் ஒடுக்கப்பட்டனர்; இழிந்த வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்வாறாக, அரசு முறையின் குறைபாட்டினால், ஆண்டான் - அடிமைகள், உயர்குலத்தார்-கீழ்க்குலத்தார், செல்வர் -வறியவர் என்ற மேடு பள்ளங்கள் மிகுதியாக உருவாயின. மேட்டுக் குடியினர் முற்பிறவியில் நல்வினை செய்தவராகவும் பள்ளப்பகுதியினர் முற்பிறவியல் தீவினை இழைத்தவராகவும் கருதப்பட்டனர். இங்கே ஊழ்வினைக் கொள்கை மிகவும் விளையாடியது. இந்நிலைக்கு இடமின்றி, அரசர்கள் மேடு பள்ளங்களை நிரவி ஆட்சி புரிந்திருந்தால் குடிமக்களுள் சமநிலை ஏற்பட்டிருக்கும். அப்போது ஊழ்வினைக் கொள்கைக்கு இடம் இராதன்றோ? இந்தக் காலத்திலும் எல்லா இடங்களிலும் இன்னும் மேடு பள்ளங்கள் நிரவப்படவில்லை. அந்தப் பணி இப்போதுதான் தொடங்கப்பெற்று மெல்ல மெல்லத் தளர்நடை போடுகிறது.


சூழ்நிலை ஆற்றல் :

அடுத்து மூன்றாவது காரணம், தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்பதாகும். அப்படி என்றால் என்ன? ஒருவர் தெருவழியே போய்க்கொண்டிருக்கிறார்; அவருக்கு முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ ஒரு வண்டி வந்து அவர் மீது மோத அவர் கால் இழந்து போகிறார் அல்லது இறந்தே போகிறார். இதற்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க வேண்டியதில்லை. எதிர்பாராமல் தற்செயலாய் ஏற்பட்ட அந்த நேரச் சூழ்நிலையின் வன்மையே அவரது முடிவுக்குக் காரணமாகும். இந்நிகழ்ச்சியோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டு வந்து முடிச்சு போடத் தேவையே இல்லை. “தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்றால் இப்போது விளங்கலாம். முற்கூறிய சமூகச் சீர்கேடு, அரசு முறையின் குறை என்னும் இரண்டு காரணங்களையும்கூட இந்தச் சூழ்நிலை ஆற்றல்’ என்னும் காரணத்துள் அடக்கிவிடலாம். அவர் வண்டியில் அகப்பட்டு முப்பத் தேழு வயதிலேயே முடிந்துவிடுவார் எனத் தலையில் எழுதியிருந்ததால் இவ்வாறு மடிந்து போனார் எனப் பொதுமக்கள் எளிதில் ஊழ்வினையின் மேல் பழி போட்டுப் பேசுவர். இவ்வாறு கூறுவது அறியாமையாகும்.


இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். ஒருவருக்குக் குலுக்குச் சீட்டுப் பரிசுத் திட்டத்தின் (Lottery) வாயிலாகப் பத்து நூறாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது என்றால், அது தற்செயலான வாய்ப்பேயாகும். சூதாட்டத்தில் ஒருவருக்குத் தாயம் விழுகிறது - இன்னொருவருக்கு விழவேயில்லை; ஒருவருக்கு நல்ல சீட்டுகளே விழுகின்றன - இன்னொருவர்க்குக் கெட்ட சீட்டுகளே விழுகின்றன. குதிரைப் பந்தயத்தில் ஒருவர் வெல்கிறார் - இன்னொருவர் தோற்கிறார். இவற்றையெல்லாம். ஏதோ ஊழ்வினை என ஒன்று காரணமாக இருந்துகொண்டு நடத்துகிறது என்று கூறுவது அறியாமை. இவையெல்லாம் எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சிகளே.


வாழ்க்கையில் நேரும் எல்லா வகையான நிகழ்ச்சிகளுமே இத்தகையனவே. ஒருவர் வாணிகம் தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் கடை உள்ள இடத்தின் தேர்ந்தெடுப்பு, கடை தொடங்கிய விழாக்காலம், அதனால் பெற்ற விளம்பரம், மக்களுக்கு இன்றியமையாத் தேவையான விற்பனைப்பொருள், அதன் தரம், விலையளவு, நாளடைவில் பெற்றுவிட்ட நல்ல பெயர் - முதலிய சூழ்நிலை ஆற்றல்கள் எல்லாம் சேர்ந்து அவரை மாபெருஞ் செல்வராக்கி விடுகின்றன, இன்னொருவர் இத்தகைய நல்ல சூழ்நிலை வாய்க்கப் பெறாமையால் வணிகம் தொடங்கியும் முன்னேற முடியவில்லை. நல்ல சூழ்நிலை வாய்ப்பினால் பெருஞ் செல்வரான ஒருவரே, பின்னர்ப் பின்னர் அத்தகைய வாய்ப்புக் குறையக் குறைய வாணிகம் குன்றி ஏழையாகி விடுவதும் உண்டு. உலகியலில் பல துறைகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றைப் பார்க்கலாம்.


செல்வர்கட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து செல்வத்தைத் துய்க்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் நல்வினை செய்தவர்களாகப் பார்த்து இந்தச் செல்வர்கட்குப் பிள்ளைகளாக வந்து பிறந்தனர் என எந்தச் சான்று கொண்டு கூறமுடியும்? அது போலவே, ஏழைகட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து ஏழ்மையை ஏற்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் தீவினை செய்தவர்களே இங்கு வந்து பிறந்தனர் என்று எவ்வாறு கூற முடியும்? அவரவர் பிறந்த குடும்பச் சூழ்நிலையே அந்தந்த நிலைமைக்குக் காரணமாகும். இதற்கும் ஊழ்வினைக்கும் தொடர்பேயில்லை. ஊழ்வினை என ஒன்று இருந்தாலல்லவா தொடர்பு இருக்க முடியும்?


குடும்பச் சூழ்நிலையையடுத்து உடலமைப்புச் சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாம். நல்ல உடலமைப்பு பெற்றவர் நன்கு செயல்பட முடிகிறது. அல்லாதவர் நன்கு செயல்பட முடியவில்லை. உடல் ஊனமுற்றோர் குறைபாடு உடையவராய் வருந்துவதைக் காணலாம். நாம் பயிரிடுகிறோம்-மரம் செடி கொடிகள் வைத்து வளர்க்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உடையனவாய் அமைந்துவிடுகின்றன - சில கெட்டும் போகின்றன. நாம் பல கருவிகள் செய்கிறோம் - பல பொம்மைகள் செய்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உறுகின்றன சில கெட்டும் விடுகின்றன. அவ்வாறே பிறக்கும் பிள்ளைகளுள்ளும் சிலர் குறைபாடு உடையவராய் - உடல் ஊனமுடையவராய்ப் பிறந்து விடுகின்றனர். எனவே, குறை பாடுடைய பயிர்களுக்கும், கருவிகளுக்கும். பிள்ளைகளுக்கும் ஊழ்வினையே காரணம் என்று உளறுவதா? நல்ல மூளையமைப்பு உடையவர்கள் திறமை பல உடையவராயும் கல்வியறிவில் வல்லவராயும் கண்டு பிடிப்புகள் செய்வதில் கைதேர்ந்தவராயும் விளங்குகின்றனர்; அல்லாதவர்கள் அவ்வாறு விளங்க முடியவில்லை. இதற்கெல்லாம் ஊழ்வினை காரணமன்று; உடலமைப்புச் சூழ்நிலையே உண்மைக் காரணமாகும்.


மற்று,-உயிர்ப் பண்புச் சூழ்நிலையும் உடல் அமைப்புச் சூழ்நிலை போன்றதே! ஒருவர் பெரிய வள்ளலாய் வாரி வாரி வழங்குகிறார்; மங்றொருவர் கஞ்சக் கருமியாய், எச்சில் கையால் காக்கை ஓட்டாதவராய் ஈரக்கையை உதறாதவராய், பணத்தை இரும்புப் பெட்டியில் இறுக்கி வைக்கிறார்; இன்னொருவர் பிறரை ஏய்க்கிறார்; மாற்றார் பொருளைக் களவாடுகிறார். இவர்களுள் நற்பண்பு உடையவர்கள் போற்றப் பெறுகின்றனர்-தீய பண்புடையவர்கள் துாற்றப்படுகின்றனர். கடவுள் எழுதியனுப்பிய தலையெழுத்தின்படி சிலர் நல்லவராயும் சிலர் தீயவராயும் இருப்பதில்லை. அவரவர் பிறந்த மரபுவழிச் சூழ்நிலையும் சுற்றுச் சூழ்நிலையுமே இதற்குரிய காரணமாகும். இதை வலியுறுத்த இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தரலாம் - ஆயினும், இவை போதும். எனவே, ஊழ்வினை என ஒன்று இல்லை-அது வெறுங் கற்பனையே என்பது தெளிவு.

5. கடவுள் அவதாரங்கள்

அடுத்துப் படைப்புக் கொள்கையின் சார்பாகக் கடவுள் அவதாரங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. உலகத்தைப் படைத்த கடவுளால் மேலுலகத்திலிருந்தபடியே ஆட்சி செய்ய முடியாமற்போகிறது போலும் - சமாளிப்பது கடினமாயிருக்கிறது போலும். எனவே சில பல ஆண்டுகள் இடைவிட்டு இடைவிட்டுப் பூவுலகில் கடவுள் வந்து மனிதராய்ப் பிறக்கிறார்; மாந்தரைத் திருத்தவும் அவர்கட்கு நன்மை உண்டாக்கவும் வீடுபேறு கிடைக்கச் செய்யவும் அவர்களுள் தாமும் ஒருவராய் உடன் வாழ்கிறார்; அவர்கள் படுவது போன்ற பாடுகளை அவர்களுக்காகத் தாமும் படுகிறார் என்பதாக- இன்னும் பலவிதமாகப் பல மதத்தினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

உலகில் கொடுமைகள் நிறைந்துவிட்டபோது மக்களைத் திருத்துவதற்காக- அவர்களை ஆட்கொள்வதற்காகக் கடவுள் மேலிருந்து கீழே வந்து அவதரிக்கிறார் என்னும் கருத்தே கடவுள் ஆட்சியின் இயலாமையைக் காட்டுகிறது. கீழே வந்த அவர் மக்களைப் போலவே தாமும் ஏன் பாடுபட வேண்டும்? மக்களின் நன்மைக்காகத்தான் கடவுள் தாமும் துன்பப்படுகிறார் என்று கூறுகின்றனர்; இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சு—


  1.  கொன்றைவேந்தன் 16


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

5. கடவுள் அவதாரங்கள்

அடுத்துப் படைப்புக் கொள்கையின் சார்பாகக் கடவுள் அவதாரங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. உலகத்தைப் படைத்த கடவுளால் மேலுலகத்திலிருந்தபடியே ஆட்சி செய்ய முடியாமற்போகிறது போலும் - சமாளிப்பது கடினமாயிருக்கிறது போலும். எனவே சில பல ஆண்டுகள் இடைவிட்டு இடைவிட்டுப் பூவுலகில் கடவுள் வந்து மனிதராய்ப் பிறக்கிறார்; மாந்தரைத் திருத்தவும் அவர்கட்கு நன்மை உண்டாக்கவும் வீடுபேறு கிடைக்கச் செய்யவும் அவர்களுள் தாமும் ஒருவராய் உடன் வாழ்கிறார்; அவர்கள் படுவது போன்ற பாடுகளை அவர்களுக்காகத் தாமும் படுகிறார் என்பதாக- இன்னும் பலவிதமாகப் பல மதத்தினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

உலகில் கொடுமைகள் நிறைந்துவிட்டபோது மக்களைத் திருத்துவதற்காக- அவர்களை ஆட்கொள்வதற்காகக் கடவுள் மேலிருந்து கீழே வந்து அவதரிக்கிறார் என்னும் கருத்தே கடவுள் ஆட்சியின் இயலாமையைக் காட்டுகிறது. கீழே வந்த அவர் மக்களைப் போலவே தாமும் ஏன் பாடுபட வேண்டும்? மக்களின் நன்மைக்காகத்தான் கடவுள் தாமும் துன்பப்படுகிறார் என்று கூறுகின்றனர்; இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சு— அறியாமைப் பேச்சு-ஏமாற்றுப் பேச்சு வேறொன்றும் இல்லை எனலாம். இவர் ஏன் அதற்காகக் கொடிய துன்பங்களைத் துய்க்கவேண்டும்? தாம் துன்புறாமலேயே மக்களைத் திருத்தலாம்-அவர்கட்கு நன்மை உண்டாக்கலாம். சேயின் நோயைத் தீர்க்கத் தாயும் அந்த நோயைக் கொள்ள வேண்டுமா என்ன? நோயாளர்களின் நோய் தீர்க்க மருத்துவர்களும் (டாக்டர்களும்) அந்நோய்களை அடைய வேண்டுமா என்ன? வாந்தி பேதி என்னும் (Cholera) காலரா நோயைப் போக்க முயலும் மருத்துவர்க்கும் காலரா வரவேண்டுமா என்ன? கொடியவர்களை ஒறுக்கும் (தண்டிக்கும்) நீதிபதிகளும் அரசர்களும் தாங்களும் அத்தகைய ஒறுப்புகளைப் (தண்டனைகளை)பெற வேண்டுமா என்ன? சேயின் நோயைப் போக்க, அச்சேய்க்குப் பால் கொடுக்கும் தாய் தானும் பத்தியம் பிடிக்கிறாள். தாயின் பாலைக் குடிக்கும் சேய்போல, மக்கள் கடவுளின் பாலைக் குடிக்கிறார்களா என்ன ? சேய்க்குத் தன் மார்பகத்துப் பாலை ஊட்டாத தாய் சேய்க்காகப் பத்தியம் பிடிப்பதில்லையே. இன்னும் கேட்டால், தாய்மார்கள் சிலர், தம் நோய்கள் குழந்தைகளுக்குத் தொற்றாமல் இருப்பதற்காகப் பாலை மறக்கடித்துவிட்டுத் தாங்கள் பத்தியம் பிடிக்காமல் இருக்கின்றார்களே ! எனவே, மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காகக் கடவுள் தாமும் அவர்களைப்போலவே துன்பப்படுகிறார் என்று கூறுவது, பொறுப்பற்ற-பகுத்தறிவற்ற மடமைப் பேச்சு - ஏமாற்றுப் பேச்சு என்பது எளிதில் புலப்படும். மக்களுக்காக மக்களாய்ப் பிறந்து துன்புறும் கடவுள் மற்ற உயிரிகளுக்காக என்ன செய்கிறார்?-ஏதாவது செய்கிறாரா? மற்ற அஃறிணை உயிரிகளைப்போன்ற உருவங்களுடன் அவற்றிடையே பிறந்து, அவற்றிடையே வாழ்ந்து அவற்றுக்காகத் துன்புறுகிறாரா?-என்பது ஈண்டு எண்ணத்தக்கது. அவதார வரலாறு:

மேற்கூறியவற்றின் பிழிவாக - பிழிவு தெளிந்த சாறாக நாம் எடுததுக் கொள்ள வேண்டியதாவது: கடவுள் மனிதர்களோடு தாமும் வாழ்ந்து அவர்களுக்காகத் தாமும் துன்பப்படுகிறார் என்பது நூற்றுக்கு நூறு பொய்க் கூற்று. அங்ஙனமெனில், இதில் உள்ள உண்மையாவது: மக்களுள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலர், மிகவும் உயர்ந்தவராக-சிறந்த மனிதத் தன்மையின் பேரெல்லைக் கோட்டில் நிற்பவராக - மாண உயர்ந்த மக்கட் பண்பாம் மலையின் கொடு முடியில் வீற்றிருப்பவராக அவ்வப்போது காணப்பட்டனர். இவர்கள் மற்ற மாந்தரைப் போல மனிதத் தாயின் வயிற்றில் மனிதராய்ப் பிறந்தும், மிகவும் உயர்ந்த பண்பாளராய்த் திகழ்ந்து, பிற உயிர்களின் நன்மைக்காக அரும்பாடுபட்டுப் பெரிய சாதனைகளாம் பணிகள் பல புரிந்து, மெழுகுவர்த்திபோல் தம்மையே அழித்துக் கொண்டனர்-அர்ப்பணித்து விட்டனர்.


இந்த மாபெருஞ் சாதனைப் பணிகள் மற்ற மாந்தர்களால் எளிதில் நிகழ்த்த முடியாதனவாய்த் தென்பட்டன. இந்த அருமைப்பாட்டைக் கண்ட சிலர், இந்தப் பெரியார்கள் மற்றவர்களைப் போல் மனிதராய் இருக்க முடியாது; கடவுளே இந்த மனிதப் பெரியார்களாகப் பிறந்து இவ்வளவு அரியபெரிய சாதனைகளைப் புரிந்திருக்க வேண்டும்- என்ற முடிவுக்கு வந்தனர்; எனவே, கடவுளே இந்தப் பெரியார்களாய் வந்து அவதரித்தார் என்று கற்பனை செய்தனர்; பின்னர் இந்தக் கற்பனையின் அடிப்படையில் பற்பல புளுகு மூட்டைக் கதைகளைக் கட்டிவிட்டனர். அவதார்த்தின் வரலாறு இதுதான்! தந்தை யில்லாத அனாதைகள்:

அவதாரக் கொள்கையினர், இந்தப் பெரியார்கள் கடவுளின் அவதாரங்களே என்பதை வலியுறுத்த-மனிதர்களினும் இவர்கள் வேறானவர்கள் என்பதைப் பிரித்துக் காட்ட முயன்றனர். ‘அம்முயற்சியிள் ஒரு கூறாகப் பின்வரும் கருத்தினை வெளியிட்டு விளம்பரமும் செய்துகொண்டிருக்கின்றனர்; அஃதாவது; மனிதத் தந்தையின் தொடர்பில்லாமலேயே கடவுள் நேராக வந்து மனிதத் தாயின் வயிற்றில் புகுந்துவிட்டார் என்பது கட்டு கதையாளரின் ஒரு கூறாகும். ஒரு தாய் வேள்வியில் விளைந்த பாயசத்தைச் சாப்பிட்டதன் வாயிலாகக் கடவுளைத் தன் வயிற்றில் கருவாகக் கொண்டாள் என்பது ஒரு கதை, கடவுள் சோதிவடிவமாக தாயின் வயிற்றில் புகுந்தார் என்பது மற்றொரு கதை இவ்வாறு பல கதைகள் எழுந்தன. கடவுளே வந்து பிறந்தார் என்பவர் ஒரு சாரார்; கடவுள் தம் மைந்தனை அனுப்பினார் என்பவர் மற்றொரு சாரார்; கடவுள் தம் தூதரை அனுப்பினார் என்பவர் வேறொரு குழுவினர். இவ்வாறாகப் பல கற்பனைகள் கிளைத்த்ன. இவ்வாறு அவதார மாந்தர்களைத் தந்தையில்லாத அனாதைகளாக-தந்தைக்குப் பிறந்தும் வேறு வழியில் பிறந்தவராக ஆக்கிக் காட்டியிருப்பது கொடுமையினும் கொடுமைபாவத்தினும் பெரிய பாவம்! அவதார மாந்தர்கள் புரிந்துள்ள தியாகங்களுக்கு மதவாதிகள் கொடுக்கும் பரிசு இதுதானா? அந்தோ கொடுமை! -


யான் எந்த மதத்தினரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. பொதுவாகச் சொல்வதற்கே என்மேல் சிற்றம் கொள்வர்; வெளிப்படையாகக் குறிப்பிட்டுச் சொல்வேனேயாயின் என்பாடு பெரும்பாடுதான். பூமி தட்டையானது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களிடையே, பூமி உருண்டையானது என முதல் முதல் கூறினவர் உதை வாங்கினதாகக் கூறப்படும் வரலாறு பலரும் அறிந்ததேசிறையிலும் அடைக்கப்பட்டனர் அவர்கள்.


அவதார மாந்தனரப் பெற்ற தாய், தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொள்ளாமல் பிள்ளை பெற்றாள் என்பது நூற்றுக்கு நூறு பொய்க்கூற்று. தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொண்டே, அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாய் பெற்றாள் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. ஊசி மருந்து மூலம் கருவுறச் செய்வது இந்தக் காலத்து அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பா யிருக்கலாம்; ஆனால் இந்தகைய அறிவியல் முன்னேற்றம் அந்தக் காலத்தில் இல்லையே. அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாம் தம் மனைவியோடு உடலுறவு கொண்டு பெற்ற தந்தையார் இப்போது உயிரோடு இருப்பாராயின், தாம் உடலுறவு கொண்டதால் அப்பிள்ளை பிறக்கவில்லை என்று கூறும் மதவாதிகளை மிகவும் கண்டிப்பார். எனவே. அவதார மாந்தர்க்குத் தெய்வத் தன்மை ஊட்டுவதற்காக, அவரைப் பெற்ற உண்மைத் தந்தையாரை அத்தொடர்பினின்றும் விலக்கி வைப்பது மன்னிக்க முடியாத மாபெருங் குற்றமாகும். என்மேல் சினங்கொள்ளாமல் அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்; இனிமேலாவது இந்த மாபெருந் தவறைத் திருத்திக் கொள்ளவேண்டும்.


மனிதத் தந்தையின் தொடர்பில்லாமல், கடவுளே மனிதத் தாயின் வயிற்றில்வந்து புகுந்து மனிதக் குழந்தையாக அவதாரம் செய்து, அரும் பெரும் செயல்கள் பல புரிந்தார் என்று கூறுவதால் மக்கள் இனத்திற்கு இன்னொரு பெருங்கேடு-பேரிழப்பு உள்ளது. இதற்கு விளக்கம் வருமாறு: அவதார நம்பிக்கையினால், - சாதாரண மக்களுக்கு எந்தவித ஆற்றலும் இல்லை-அச்சாதாரண மக்களால் எந்த அரும்பெருஞ் செயலும் ஆற்ற முடியாது. கடவுள் மனிதராய் வந்தால்தான் பெரிய அற்புதங்களை நிகழ்த்த முடியும்-என்பதாக, தன்னம்பிக்கையில்லாத ஒரு வகை மனப்பான்மை மக்கள் இனத்தில் குடிகொள்ளும்; அதனால், அரும்பெருஞ் செயல்கள் புரியக் கூடிய ஆற்றல் உடையவர்களும், நாம் கடவுளா என்ன நம்மால் பெருஞ்செயல் எதுவும் புரியமுடியாது எனச் சோர்வுறக் கூடும். கடவுள் வந்து எந்த அற்புதங்களும் நிகழ்த்தவில்லை - அவதார மாந்தர் எனப்படுபவர் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதரேயாவார்- எனவே, நாமும் முயன்றால் அற்புதங்கள் பல நிகழ்த்த வியலும்-என்ற தன்னம்பிக்கை மக்கள் இனத்தின் மனத்தில் வேர் ஊன்றினால்தான், அந்த நம்பிக்கையின் அடிப்படையில், யாரும் முயன்று எந்த அற்புதமும் நிகழ்த்த முடியும். இதனால், அவதார மாந்தர் எனப்படுபவர் போன்ற பெரியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகும். இதனால் மக்கள் இனம் முழுவதும் விரைவில் மாண்புற முடியும். அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின் இதன் உண்மை விளங்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 
 


ஆத்திகமும் நாத்திகமும்

கடவுள் உண்டு என்னும் கொள்கையின் கூடவே கடவுள் இல்லை என்னும் கொள்கையும் உடன் இருந்து வருகிறது. கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம்’ (Theism) என்னும் பெயராலும், கடவுள் இல்லை என்னும் கொள்கை நாத்திகம்’ (Atheism) என்னும் பெயராலும் சம்சுகிருதத்தில் வழங்கப்படுகின்றன.


“அஸ்தி என்னும் சம்சு கிருதச்சொல்லுக்கு ‘உள்ளது' . என்பது பொருளாகும்; எனவே, கடவுள் உண்மைப் பொருள்” என்னும் கொள்கை ஆஸ்திகம் (ஆத்திகம்) எனப்பட்டது. இதற்கு எதிரான கடவுள் இன்மைக் கொள்கை நாஸ்திகம் (நாத்திகம்) எனப்பட்டது. இவ்விரண்டையும் முறையே, உண்மை அல்லது உண்மைக் கொள்கை, இன்மை அல்லது இன்மைக் கொள்கை என நாம் தமிழில் வழங்கலாம்.


ஆத்திகர், நாத்திகர் என்னும் பெயர்களைத்தமிழில் என்னென்ன பெயர்களால் வழங்கலாம் என்பதைத் திருவள்ளுவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். உலகத்தார் உண்டு என்பதை இல்லையென்பவன் பேயாகக் கருதப்படுவான் என்று அவர் கூறியுள்ளார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (850)

'

என்பது அவரது திருக்குறள் பாடலாகும். எனவே, ஆத்திகர், நாத்திகர் என்னும் சம்சுகிருதப் பெயர்கட்கு நேராக முறையே உண்டென்பவர், இன்றென்பவர்’ என்னும் பெயர்களைத் தமிழில் வழங்கலாம். வள்ளுவனார் உண்டு என்னும் கொள்கையினரே. இக்காலத்தில் ஆத்திகர் பலராகவும் நாத்திகர் மிகச் சிலராகவும் உள்ளனர்; ஆயினும், நாத்திகர் பற்றிய குறிப்பு பல்லாண்டுகட்கு முன்பே நூல்களில் ஏறிவிட்டது.


இற்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்ரு முற்பட்டவரான மாணிக்கவாசகர் என்னும் பெரியார், நாத்திகம் பற்றி,

(1) காத்திகம் பேசி காத்தழும்பு ஏறினர்

எனக் கூறியுள்ளார். மறைஞான சம்பந்தர் என்பவர்.

(2) காத்திகர் என்றே உளத்துள் நாடு

எனவும், சிவஞான முனிவர் என்பவர்,

(3) காத்திகச் சொற்கு ஒரு கரிபோய் இழிந்தேனை எனவும் நாத்திகர் பற்றிக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திகத்தோடு நாத்திகமும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது எனலாம். அவ்வளவு ஏன்? சுமார் இர்ண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, திருவள்ளுவர், கடவுளை வணங்காவிடின் கற்றதனால் பயனில்லை என்று கூறியுள்ளார்.

(4) “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
கற்றாள் தொழாஅர் எனின்.’


என்பது அவரது பாடல். இஃதும் நாத்திகரையே சுட்டுகிறது. மிகப் பழைய வட மொழி வேதத்திலேயே நாத்திகர் பற்றிய குறிப்பு உள்ளது.

(1) திருவாசகம்-போற்றித் திருவகவல்-47
(2) சைவ சமய நெறி-பொது. 408-உரை
(3) காஞ்சிப் புராணம்-கழுவா. 208
(4) திருக்குறள்-பாயிரம்-கடவுள் வாழ்த்து-2.

மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் அஃறிணை உயிரிகள்போல் அவர்கள் வாழ்ந்த காலத்தில்-காட்டு மிறாண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் அவர்களிடையே, இப்பொழுது உள்ளது போன்ற கடவுள் கொள்கை இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், கடவுள் கண்ணுக்குத் தெரிய வில்லை யாதலின்-வேறு பொறி புலன்களாலும் உணர முடியவில்லையாதலின் கடவுள் என்ற உணர்வு ஒரு சிறிதும் தொடக்கக் காலத்தில் இருந்திருக்க முடியாது. அவ்வளவு ஏன்? இப்போதும் பத்துக் குழந்தைகளைத் தனியிடத்தில் வைத்து, கடவுளைப் பற்றிய அறிமுகமே செய்து வைக்காமல் வளர்த்து வருவோமேயானால், அவர்கள் இறுதிவரையும் கடவுளைப் பற்றி எண்ணவே மாட்டார்கள். எனவே, மக்களினம் தோன்றி நெடுங்காலம் சென்றபிறகு இடையிலே கண்டுபிடிக்கப்பட்ட சரக்கே கடவுள் என்பது. நாள் ஆக ஆகக் கடவுளுக்குக் கண்-காது-மூக்கு முதலியவை வைக்கப்பட்டன; கடவுள் பெயரால் கட்டுக் கதைகள் பல பெருகின; மூட நம்பிக்கைகள் முகிழ்த்தன; அதனால் எவ்வளவோ சடங்குகள் புற்றீசல்கள் போல் தோன்றின; இவற்றை அப்படியே பின்பற்றுபவர்கள் ஆத்திகர் எனப்பட்டனர். வேண்டாத இந்தச் சுமையை வெறுத்து ஒதுக்குபவர்கள் நாத்திகர் எனப்பட்டனர்.


நாத்திக வாதம்

கடவுள் என ஒருவர் இருப்பின் அவர் தனி உருவத்துடன் வெளியில் வரலாமே! வெளிப்படையாகக் காட்சியளிக்கலாமே! மறைந்து இருப்பதன் மர்மம்’ என்ன? அவரைக் காண மக்கள் ஏன் எவ்வளவோ தொல்லைப் பட வேண்டும் - துன்பப்பட வேண்டும்? தொல்லைப்பட்டும் காண முடிந்ததா-முடிகிறதா? யார் யாரோ எங்கே எங்கேயோ கண்டதாகக் கூறியுள்ளார்களே!இப்போதும் சிலர் கடவுளைக் காண்பதாகக் கூறுகின்றார்களே! இவர்கள் எல்லாம் என்ன கண்டனர்-என்ன காண்கின்றனர்? கடவுள் எப்படி இருந்தாராம்- - இருக்கிறாராம்? அவர் என்ன கூறினாராம்- கூறுகிறாராம்? கடவுளைக் காணாதவரினும் கண்டவர்கள் தனிச்சிறப்பான பயனாக என்னபெற்றனர்? கண்டவர்கள் ஏதேனும் பயன் பெற்றிருப்பின், காணாதவர்களும் அப்பயனைப் பெறும்படி கடவுள் எளிமையாக வெளிவந்து எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரியலாமே! இவ்வாறு செய்வதனால் அவருக்கு என்ன குறைந்து போகும்? கடவுள் இருப்பது உண்மையானால் அவர் எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரிவாரே! அவ்வாறு நடைபெறாததால், கடவுள் என ஒரு பொருள் இருப்ப தாக நம்புவதற்கு இல்லை. எனவே, கடவுள் பெயரால் கூறப்படுவனவெல்லாம் கட்டுக் கதைகளே-மூட நம் பிக்கைகளே. கடவுள் பெயரால் செய்யப்படும் செயல்கள் யாவும் வீண் முயற்சியே. கடவுள் பெயரால் செய்யப்படும் செலவுகள் அத்தனையும் வெறும் பாழே. எனவே, மக்கள் இனத்திற்கு இந்த வீண்சுமை வேண்டியதேயில்லை - என்பதாக, இன்னும் பலவாறாக நாத்திக வாதம் பேசப்படுகிறது.


ஆத்திக வாதம்

மேற்கூறிய நாத்திக வாதத்தை மறுத்து ஆத்திகக் கொள்கையை நிலைநாட்டி நிமிர்த்த, எவ்வளவோ சப்பைக் கட்டு-சிம்புக் கட்டு-மாவுக் கட்டு எல்லாம் ஆத்திகர்களால் கட்டப்படுகின்றன. அவர்களின் வாதமாவது:-கடவுள் ஒருவர் உறுதியாக உண்டு. அவரே உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். அவர் அருளாலேயே எல்லாம் இயங்குகின்றன. அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது. கடவுளை வழிபடுவோரே புண்ணியவான்கள்-அவர்கட்கே எல்லா நன்மைகளும் கிடைக்கும். அவரை வழிப்டாதோர் பாவிகள் இவர்கள் நன்மையொன்றும் பெறுதல் அரிது. கடவுள் உயிர்கட்கு உடம்பைத் தந்தது அவரை வழிபட்டு அவரை அடைவதற்கேயாம். அவரை வழிபடுவோரே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து வீடுபேறாம் உயர் கரையை அடைய முடியும்; அல்லாதார், பல பிறவிகள் எடுத்து இந்த உலகத்திலேயே உழன்று கொண்டு கிடக்க வேண்டியதுதான். * கடவுளுக்குப் பிறப்பும் இல்லை - இறப்பும் இல்லை; அவர் அனாதி. கடவுள் எல்லாம் வல்லவர்; எல்லாம் அறிந்தவர்; எங்கும் நிறைந்தவர்-எதிலும் நிறைந்தவர்; எங்கு எது நடந்தாலும் எல்லாம் அவருக்குத் தெரியும்: அவர் தூணிலும் இருப்பார்-துரும்பிலும் இருப்பார். ஆனால் அவரை வெளிப்படையாக எளிதில் காண வியலாது; எல்லாரும் காணவியலாது. அரும்பாடுபட்டு அவரை வழிபடுவோரும்-அவருக்குத் தொண்டு புரிப வரும்-தியானிப்பவரும்-தவம் புரிவோரும்-யோகம் செய்பவரும் ஆகிய அணுக்கத் தொண்டர்களே அவரைக் காண முடியும்; ஆழ்ந்த அன்பர்களே அவரை நேரில் கண்டு களிக்க முடியும்.


‘கண்டவர் விண்டிலர்-விண்டவர் கண்டிலர்’ என்பது முதுமொழி. எனவே, கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாததால் கடவுள் இல்லை என்று கூறமுடியாது. கடவுள் மறைந்துள்ளார். விறகுக்குள் தீயும், பாலுக்குள் ந்ெய்யும் எள்ளுக்குள் எண்ணெயும் மறைந்திருப்பது போல் கடவுள் நமக்குள்ளேயும் மறைந்துள்ளார். தீக்கடை கோலால் கடைந்து தீயை வெளிப்படுத்துதல் போல, மத்தால் கடைந்து பால்-தயிரிலிருந்து நெய்யை வெளிப்படுத்துதல் போல, உறவு (பக்தி) என்னும் கோல் நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் கடவுள் தம் முன் வந்து நிற்பார்-என்றெல் லாம் ஆத்திகர்கள் கூறுகின்றனர். கடவுளை வெளிப்படச் செய்யும் முயற்சியைப் பற்றிய பாடல் ஒன்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளது. -

[1]

*“விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய கின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் கட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் கிற்குமே”

பாலில் நெய்போல் என்னும் ஒப்புமையை நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் கூறியுள்ளார்:

 

‘சிறந்த கால்தீ நீர்வான் மண்
பிறவும் ஆய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்”.


என்பது அவரது பாடல் (8-5-10) பகுதியாகும். செக்கில் இட்டு ஆட்டினால், வெளிவருகிற எள்ளுக்குள் எண்ணெய் என்னும் உவமையை மாணிக்கவாசகர் மொழிந்துள்ளார்:

“கள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்கின்ற எங்தையே”

(திருவாசகம்-திருச்சதகம்-46)


என்பது இவரது பாடல் பகுதி. எனவே, கடவுள் உண்டு; அவர் மறைந்துள்ளார்-என்பதாகக் கூறுகின்றனர். ஆத்திகர் கூறும் மற்றும் ஒரு கருத்தையும் ஈண்டு மறப்பதற்கில்லை. அஃதாவது:-தந்தையின்றி மைந்தர் எவ்வாறு பிறக்க முடியும்? தச்சரும் கொல்லரும் இன்றிக் கருவிகள் எவ்வாறு உண்டாக முடியும்? கொத்தனார் இன்றிக் கட்டடம் எவ்வாறு எழும்பும் நெய்வோர் இன்றித் துணிகள் இல்லை. தீட்டுவோர் இன்றி ஒவியம் ஏது? ஆட்டுவோர் இன்றிப் பதுமைகள் ஆடுமா? மீட்டுவோர் இன்றி யாழிசை ஏது? உழவர் இன்றி உணவுப் பொருள்களும், தொழிலாளர்கள் இன்றி மற்ற பொருள்களும் எவ்வாறு உண்டாகும்? எல்லாவற்றுக்கும் காரணங்கள் வேண்டும். காற்று இன்றி மரம் அசையுமா? தீ இன்றிப் புகை உண்டா? மலர் இன்றி மணம் ஏது? காரணம் இன்றிக் காரியம் நடைபெறாது. இவை போலவே, மூல காரணர் ஒருவர் இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது. காரண காரிய வாதம் :

ஈண்டு, வேத நாயகம் பிள்ளை நீதிநூல் என்னும் நூலில், காரண காரியவாதத்தின்படி கடவுள் உண்டு என்பதை நிறுவும் வகையில் பாடியுள்ள நான்கு பாடல்கள் வருமாறு :

 

1.

மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலும்
குண்டல முதல் கண்டோர் பொற்கொல்லனுண் டென்னல் போலும்
ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும்
அண்டமற் றகண்டம் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே

 

2.

தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் திகழ்பொற் பாவை
ஆட்டுவோ னின்றித் தாமே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோ னின்றிக் கீதம் விளையுமோ சரா சரங்கள்
நாட்டுவோ னொருவனின்றி கன்கமைந் தொழுகுங் கொல்லோ

3.

மரமுதல் அசைதலால் காலுளதென மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீயுள தென்று தேர்வார்
பரனுளன் எனும் உண்மைக்குப் பாரெலாம் சான்று மன்னோ

4.

வானின்றி மழையுமில்லை வயலின்றி-விளைவு மில்லை
ஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி ஒளியுமில்லை
கோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றி யில்லை
மேனின்ற கடவுளின்றி மேதினி யில்லை மாதோ

எனவே, காரண காரிய (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது.





__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆத்திகமா-நாத்திகமா?

ஆத்திகம் நாத்திகம் என்னும் இரு கொள்கைகளுள் எது சரியானது எனத் தீர்வு காண வேண்டும். நாத்திகர் வினவும் வினாக்கட்கு உண்மையில் ஆத்திகர்கள் நேரான -சரியான பதில் கூறவியலாது. ஏதாவது சுற்றி வளைத்துப் பேசிச் சரிகட்ட முயலலாம்-அவ்வளவுதான்! கடவுள் என ஒன்று இருப்பது உண்மையாயின், கண்ணாலேயோ மற்ற பொறி புலன்களாலேயோ அறிய முடியா திருப்பதேன்? முதலில் இந்த ஒரு கேள்விக்கு நேராகப் பதில் கூற முடியுமா? காற்று என்பது கண்ணுக்குத் தெரியவில்லை; ஆனால் அஃது உடம்பில் உற்று உரசி அறியப்படுகிறது. இனிப்பு என்னும் சுவை கண்ணுக்குத் தெரியவில்லை. அது வாயால்-நாக்கால் சுவைத்து அறியப்படுகிறது.


மணம் (வாசனை) கண்ணுக்குப் புலப்படவில்லை தான்; ஆனால் அது மூக்கால்-மோந்து இழுத்து உணரப்படுகிறது. ஒலி (ஒசை) கண்ணுக்குத் தோன்றவில்லை தான்; ஆனால் அது காதால் கேட்டு அறியப்படுகிறது. இவை போலக் கடவுள் எந்தப் பொறி புலனாலாவது அறியப்படுகிறாரா? முதலில் இந்த வினாவுக்கு விடை வேண்டும்-விடை வராது-விடை இல்லை. அளவைகள்

ஆத்திகர்கள் சுற்றிவளைத்து ஒரு கருத்து சொல்வர். அன்பு என்னும் பண்பு தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரியவில்லைதான்-மற்ற பொறி புலன்களாலும் அறியப்படவில்லைதான். ஆனால், தாய் தன் சேய்க்குச் செய்யும் அரிய பெரிய உதவிகளைக் காணுங்கால். அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத்தினால் உணரமுடிகிறது. ஒருவர் நோயினால் மிகவும் துன்புற்றாலோ-இறந்து விட்டாலோ, அவரைச் சேர்ந்தவர்கள் விடும் கண்ணீரைக் கொண்டு, அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத தினால் அறிய முடிகிறது. இவ்வாறே பொறாமை, சினம், இரக்கம் முதலிய பண்புகளையும் தனித்தனி உருவமாகக் கண்ணால் காண முடியாவிடினும்-மற்ற பொறி புலன்களாலும் உணர முடியாவிடினும், அன்புக்குச் சொன்ன செயல்களைப் போன்ற தொடர்புடைய செயல்களைக் கொண்டு கருத்தினால் அறிய முடிகிறது.


இவ்வாறு, பொறி புலன்களால் அறிய முடியாமல் கருத்தினால் அளந்து நுனித்து (யூகித்து-அனுமானித்து) அறிவதற்குக் கருத்தளவை’ என்று பெயர் வழங்குவர். இதனை அனுமானப் பிரமாணம் என்னும் பெயரால் வடமொழியில் வழங்குவர். தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரிவதைக் காட்சியளவை எனத் தமிழிலும் பிரத்தியட்சப் பிரமாணம் என வடமொழியிலும் வழங்குவர். நூல்களைப் படிப்பதன் வாயிலாகத் தெரிந்து கொள்வதற்கு நூல் அளவை எனத் தமிழிலும் ‘ஆகமப் பிரமாணம்’ என வடமொழியிலும் பெயர் வழங்குவர்.


இந்த மூவகை அளவைகளுள் நூல் அளவையைக் கொண்டு-நூல்களைப் படித்த அறிவு கொண்டு கடவுள் உண்மையை நம்பிவிட முடியாது கண்ணுக்குத் தெரியாததால் காட்சியளவை கொண்டும் கடவுள் உண் மையை ஒத்துக்கொள்ள வியலாது. ஆனால், நெருப்பின்றிப் புகையாது-புகைவதைக் கொண்டு நெருப்பு உண்மையை நம்பமுடிகிறது; காரணம் இன்றிக் காரியம் நிகழாது-காரியம் நிகழ்ந்திருப்பதைக் கொண்டு காரணம் ஒன்று உண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடிகிறது, இவை போலவே, உலகங்களும் உயிர்களும் தோன்றியிருப்பதைக் கொண்டு அவற்றைத் தோற்றியவர் ஒருவர் (கடவுள்) இருப்பது உண்மை என அனுமானத்தால் கருத்தளவையால் கடவுள் உண்மையை நம்பவேண்டும் என ஆத்திகர்கள் அடித்துக் கூறுகின்றனர். நூல் அளவையையும் கருத்தளவைக்குள் (அனுமானப் பிரமாணத்துக்குள்) அடக்கிவிடலாம்; நூல்களைப் படிப்பதன் வாயிலாகவும் ஒன்றை அனுமானிக்கலாம் அல்லவா? எனவே கண்ணுக்குத் தெரியவில்லை என்பதைக் கொண்டு கடவுள் இல்லை எனக் கூறமுடியாது; கருத்தளவையைக் கொண்டு கடவுள் உண்மையை நம்ப வேண்டும்-காரண காரிய வாதத்தின்படி கடவுள் உண்மையை ஒத்துக்கொள்ள முடியும் என்பது ஆத்திகரின் வாதம்.


சரி-ஆத்திகர்களின் காரண காரிய வாதத்தையே ஒத்துக்கொள்ளலாம்-அஃதாவது, காரணம் இன்றிக் காரியம் நிகழாது -நெருப்பின்றிப் புகையாது-கொத்தனார் இன்றிக் கட்டடம் உருவாகாது-மூலகாரணர் ஒருவர் (கடவுள்) இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது-என்ற காரண காரிய வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த் வாதத்தின்படி நோக்குங்கால், தமக்கு மூலகாரண்ர் ஒருவர் இல்லாமல் கடவுள் எவ்வாறு உண்டானார்? கடவுளுக்கு மூல காரணமாயிருப்பது-தோன்றுவதற்கு மூல காரணமாயிருப்பது எது? இந்த மூல காரணத்துக்கு மூல காரணம் எது?-என்று வினாக்களை அடுக்கிக் கொண்டே போனால் விடை கிடையாது. கடவுள் தாமாக உண்டானார்; அவர் தோன்றுவதற்கு மூல காரணம் எதுவும் கிடையாது; எதுவும் தேவையில்லை; கடவுள் ஆதி அந்தம் இல்லாத-தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத அனாதிப் பொருள் என்ற விடையையே ஆத்திகர்கள் திரும்பத் திரும்பத் திரும்பக் கூறுவர். அங்ஙனமாயின்-கடவுளுக்கு மூல காரணம் தேவையில்லையெனில், உலகங்களும் உயிர்களும் மூலகாரணம் இன்றித் தாமாகத் தோன்றின என்று ஏன் கூறக்கூடாது-ஏன் நம்பக் கூடாது? எனவே, காரண காரிய வாதத்தின்படிகருத்தளவையாம் அனுமானப் பிரமாணத்தின்படி கடவுள் உண்மையை நிலைநாட்டிவிட முடியாது.


உலகில் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு-ஆண்டுக்கு ஆண்டு-நாளுக்கு நாள்-புதிய பொருள்கள் பல அறிவியலாரால் கண்டுபிடிக்கப்படுகின்றன; முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அறியாத பொருள்கள் பல, இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுப் பலராலும் அறியப்படுகின்றன. இயற்கையில் மறைந்திருக்கும் (இரகசியமாயிருக்கும்) உண்மைகள்-உட்பொருள்கள் அறிவியலாரால் கண்டு பிடிக்கப்பட்டு வெளிக் கொணரப படுகின்றன; இவை, கண்-ஒளி முதலான பொறி புலன்களால் உணரவும் படுகின்றன, அங்ஙனம் இருக்க, கடவுள் என்னும் பொருள் மடடும் பொறிபுலன்களுக்குத் தெரியும்படி கண்டுபிடிக்கப்பட்டு வெளிக்கொணரப்படாதது ஏன்? விஞ்ஞானிகளால் இயலாவிடினும் மெய்ஞ்ஞானிகளாவது இதைச் செய்தார்களா? வித்தை காட்டுபவன் ஒரு கூடையைக் கவிழ்த்து வைத்து விட்டு, என்னவோ உள்ளே இருக்கிறது-இருக்கிறது என்று ஏய்த்துக் கொண்டிருப்பான்; அது போலே, கடவுள் இருக்கிறார் இருக்கிறார் என்று வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கடவுள் இதோ இருக்கிறார்-இன்ன வித மாக இருக்கிறார் என்பதாக, பொறி புலன்கள் உணரும் வகையில் யாராவது கொண்டு வந்து அறிவித்தார்களா? இனிமேலாவது இயலுமா? வித்தை காட்டிக் கொண் டிருக்கக் கூடாது; வெளிக் கொணர வேண்டும். நம்மை இல்லை என்று சொல்கிறார்களே என்று மானம் ரோஷம்) வந்து, இதோ இருக்கிறேன் பாருங்கள் என்று கடவுள் தாமாகவாவது மக்கள் இனத்தின் கண்ணெதிரில் வந்து காட்சி தருவாரா?


கடவுள் முன்னொரு காலத்தில் வெளி வந்து ஒருவருக்குக் காட்சி தந்தார்-பின்னர் மற்றொரு காலத்தில் வெளிவந்து மற்றொருவர்க்குக் காட்சி தந்தார்-பின்பு வேறொரு காலத்தில் வெளி வந்து வேறொருவர்க்குக் காட்சி தந்தார்-என்பதாகப் புராணங்களிலிருந்து எடுத்துக் கதையளப்பது வித்தை காட்டுவது போன்றது தான்! அப்போது வெளிவந்தது உண்மையாயின் இப்போதும் வெளிவரட்டுமே! இனி எப்போது வெளிவருவார்? உலகில் ஒவ்வொரு துறையும் அறிவியல் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு-திங்களுக்குத் திங்கள்நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை-வளர்க்கப்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். எடுத்துக்காட்டாக, உழவு, பல்வகைப் பொருள்களின் உற்பத்தி, கல்வி, இலக்கியம், மருத்துவம், மின்சாரம், அணு ஆராய்ச்சி முதலிய துறைகள் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருவதை-வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அங்ஙனம் இருக்க, கடவுள் துறை மட்டும் ஏன் மேன்மேலும் வளர்ச்சி பெறவில்லை.


இங்கே, மதங்களின் வளர்ச்சியை-மதவாதிகளின் வளர்ச்சியை - சமயச் சடங்குகளின் வளர்ச்சியைகோயில் குளங்களின் வளர்ச்சியை-தேர்த் திருவிழாக்களின் வளர்ச்சியை - பூசனை வழிபாடுகளின் வளர்ச்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது; இவையாவும், சிறுபிள்ளைகள் தெருவில் என்னென்னவோ விளையாடுவதைப் போல, பெரிய பிள்ளைகள் (ஆத்திகர்கள்) கடவுள் பெயரால் விளையாடும் ஒருவகைப் பெரிய விளையாட்டுகளேயாகும். இவையெல்லாம் கடவுள் துறையின் வளர்ச்சியாக மாட்டா.


இந்த வேடிக்கை விளையாட்டுகளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உண்மையான கடவுள் துறை வளர்ச்சியாவது:- கடவுள் அந்தக் காலத்தில் அங்கே அவருக்குக் காட்சிதந்தார்- இந்தக் காலத்தில் இங்கே இவருக்குக் காட்சி கொடுத்தார் - எந்த எந்தக் காலத்திலேயோ எங்கே எங்கேயோ எவர் எவருக்கோ காட்சியளித்தார் - என்றெல்லாம் கதையளக்கிறார்களே - அந்தக் காட்சி தரும் கடவுள் செயல் எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும்.


ஒரு காலத்தில் பதின்மருக்குக் காட்சியளித்தார் எனில், பின்னர் நூற்றுக் கணக்கானவர்க்கும் அதன் பின்னர் ஆயிரக் கணக்கானவர்க்கும் அதன் பிறகு நூறாயிரக் கணக்கானவர்க்கும், பின்னர்ப் பின்னர்க் கோடிக் கணக்கானவர்க்கும் கடவுள் காட்சியளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்வாறு நடப்பதே, கடவுள் துறையின் உண்மையான வளர்ச்சியாகும். உலகில் மற்ற மற்ற துறைகள் எல்லாம் மேன்மேலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, கடவுள் காட்சியளிப்பது மட்டும் ஏன் வளரவில்லை - ஏன் வளரக்கூடாது? உண்மையில் கடவுள் என ஒரு பொருள் இருந்து யாருக்காயினும் உண்மையில் காட்சி கொடுத்திருந்தால் அல்லவா, அந்தக் காட்சி இந்தக் காலத்தும் கோடிக் கணக்கானவர்க்குக் கிடைக்கும்? இல்லாத பொருளைப் பற்றிப் பேசி என்ன பயன் காணமுடியும்? உண்மையான அன்பு (பக்தி) இருந்தால் அல்லவா கடவுளைக் காண முடியும் என்று கதைப்பவர்கள், போகாத ஊருக்கு வழி சொல்பவர் ஆவார்கள்! அப்படியே வைத்துக் கொள்வோம், மற்ற துறைகள் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அந்த உண்மையான அன்பும் வளர வேண்டியதுதானே? என்மேல் சினம் கொள்ளக்கூடாது; சிந்திக்க வேண்டும். ஆமாம்-நன்கு ஆர அமரச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


காத்திகச் சார்பு

மேற் கூறியவற்றிலிருந்து, ஆத்திகவாதம் உண்மையானதன்று: நாத்திக வாதமே உண்மையானது - பொருத்தமானது என்பது புலப்படும். இது சார்பாக இன்னும் சில சொல்ல வேண்டியுள்ளது. புத்தர் பெருமானையே நாத்திகர் எனப் புகலும் ஆத்திகர்கள் உள்ளனர். புத்தர், கடவுள் பற்றியும் பூசனை-நோன்பு -வழிபாடு பற்றியும் விவரிக்கவில்லை; இறுதியில் அடைவதாகச் சொல்லும் வீடுபேறு (மோட்சம்) பற்றியும் அவர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை: நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றியே அவர் பெரிதும் வற்புறுத்தினார். நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றி இந்தக் காலத்துச் சமூகச் சீர்திருத்தக்காரர்களும் வலியுறுத்துகின்றனர் அல்லவா? இக்கொள்கை காரணமாக ஆத்திகர் சிலரால் புத்தர் நாத்திகர் எனப் புகழப்படுகிறார்.


புத்தரைப் போலவே ஆதி சங்கரரையும் நாத்திகர் என நவில்பவர் உளர், இவர்கள், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையை நாத்திகம் என நவில்வதும் உண்டு. அத்வைதம் என்ற சொல்லுக்கு ‘இரண்டு அற்றது’ (அஃதாவது ஒன்றே) என்பது பொருள் ஆகும். கடவுளும் உயிர்களும் வேறல்லர்; பொன்னும் பணியும் போல - அஃதாவது - பொன் ஒன்றே பலவகை அணிகலன்களாக ஆகியிருப்பது போல, கடவுள் ஒருவரே எல்லா உயிர்களுமாக ஆகியுள்ளார். கடவுளே உயிர் - உயிரே கடவுள். “அஹம் ப்ரம்ஹாஸ்மி” என்பது, அத்வைதிகளின் உரைகளுள் ஒன்றாகும். இதன் பொருள், ‘நானே கடவுள்’ என்பதாகும். நானே என்பது உயிர் தன்னையே (Self) குறிப்பதாகக் கொள்ள வேண்டும். அகம் (அஹம்) என்ற சம்சுகிருதச் சொல்லுக்கு நான் என்ற பொருள் உண்டு.


எனவே, கடவுளும் உயிரும் வேறு வேறு இல்லை - ஒன்றே, என்பது அத்வைதக் கொள்கை. இதற்கு ‘ஏக ஆன்ம வாதம்’ என்ற பெயரும் உண்டு. கடவுள் என ஒருவர் தனியே உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்கவில்லை; கடவுளே உயிர்கள்-உயிர்களே கடவுள் - என்னும் அளவில் அத்வைதக் கொள்கை போய்க் கொண்டிருப்பதால், இதனை ஒரு வகை நாத்திகம்” எனச் சிலர் நவில்கின்றனர். எனவே, கவுதமப் புத்தரின் கொள்கையும், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையும் நாத்திகச் சார்புடையவை என்பது ஒருவகைக் கருத்து.


புத்தர் கொள்கையும் சங்கரர் கொள்கையும் ஒரு வகையில் சீர்திருத்தக் கொள்கைகளாகக் காணப்படினும், அவ்விருவரையும் பின்பற்றுபவர்கள், பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாய், அக்கொள்கைகளுக்குக் கண்-மூக்கு-காது எல்லாம் வைத்துப் பல வகையான பழைய மூட நம்பிக்கைப் பழக்கவழக்கங்களாம் பாழ்ங்கிணற்றிலேயே விழுந்து கிடக்கின்றனர்; அக்கொள்கைகளின் அடிப்படை உண்மையைக் காற்றில் பறக்கவிட்டனர்; இதனால் யாது பயன்? முப்பொருள் உண்மை

இதன் தொடர்பாக ஈண்டு சைவ சித்தாந்த சமயத்தின் முப்பொருள் உண்மைக் கொள்கையும் சிந்திக்கத் தக்கதாகும். முப்பொருள் என்பன, கடவுள், உயிர், உலகம் ஆகும். இவற்றை முறையே பதி, பசு, பாசம் என வடமொழியில் கூறுவர். கடவுளைப் போலவே உயிரும் உலகமும் அனாதியாகும். அனாதி என்றால், தான் தோன்றுவதற்கு வேறொரு மூல காரணம் இல்லாதது- அஃதாவது-தானே தோன்றியது என்று பொருளாகும். இம்மூன்றுமே காலம் கணக்கிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் தோன்றியவையாகும். மூன்றுமே என்றும் அழியாமல் நிலைத்தனவாகும். உலகமாகிய பாசத்தினின்றும் விடுபட்டு, பசுவாகிய உயிர், பதியாகிய கடவுளை அடைய வேண்டும்.


செம்பில் களிம்பு போலப் பாசம் பசுவைப் பற்றிக் கொண்டிருக்கும்; அப்பாசத்தினின்றும் விடுபட்டுப் பசுவானது பதியை அடைந்துவிடின், வறுத்த நெல் மீண்டும் முளைக்காதது போலப் பசுவாகிய உயிர் மீண்டும் பாசமாகிய உலகத்தில் பிறக்காது; இந்த நிலைதான் வீடு பேறு (மோட்சம்) ஆகும்-என்பது சை சித்தாந்த சமயக் கருத்து.

 

இந்த முப்பொருள் உண்மைக் கொள்கை நமது ஆய்வுக்கு மிகவும் உதவுகிறது. கடவுள் உயிர்களையும் படைக்கவில்லை என்பது இக்கொள்கையால் புலனாகிறது. கடவுள் தோன்றியபோதே உயிர்களும் உலகங்களும் தோன்றி அனாதிகளாய் இருந்தனவாம். இதனைத் திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூலில் உள்ள

“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி”


என்னும் (115-ஆம்) பாடல் பகுதியாலும், தாயுமானார் என்னும் துறவியார் கடவுளை நோக்கி,

“என்று நீ அன்று நான்”

எனக் கூறியிருக்கும் கூற்றாலும் தெளியலாம். இதனால் கடவுளே உயிர்களைப் படைத்து, அவற்றின் நன்மைக்காக உலகங்களையும் தனித்தனியே படைத்தார் என்னும் படைப்புக் கொள்கையினரின் (Creationists) வாதம் அடிபட்டுப் போகிறது. மற்றும், நெருப்பின்றிப் புகையாது- காரணம் இன்றிக் காரியம் நிகழாது-கடவுள் என ஒருவர் இல்லாமல் உயிர்களும் உலகங்களும் தோன்றி இயங்கமுடியாது என்னும் அனுமானப் பிரமாணக் கொள்கையும் காரணகாரியவாதக் கொள்கையுங்கூட இதனால் அடிபட்டுப்போகின்றன. எனவே, கடவுள் என ஒரு பொருள் இருப்பின் அது தோன்றுவதற்கு எது காரணமோ, அதுவே உயிர்களும் உலகங்களும் தோன்றுவதற்கும் காரணமாகும் என எளிதில் கூறிவிடலாம். அந்தக் காரணம் யாதாயிருக்கலாம்? யாராலும் ஒன்றும் விவரிக்க முடியாத ஏதோ ஒர் இயற்கை ஆற்றலே அந்தக் காரணமாகும் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இப்போது கண்-மூக்கு-காதுகள் எல்லாம் வைத்துப் “பெரிது படுத்திப் பேசப்படுகின்ற கடவுள் என்பது ஒரு வகைக் கற்பனையே என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.

இயற்கையின் திருவிளையாடல்

இதற்கு இன்னொரு வகைச் சான்றும் தரமுடியும்: கடவுள் என ஒருவர் இருந்து உயிர்களைப் படைக்கின் றார் எனில், இப்போது இப்பூவுலகில் உள்ள சுமார் ஐந்நூறுகோடி மக்கள் உயிர்களும் ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் எங்கே இருந்தன? கடவுள் அவற்றை எங்கே வைத்திருந்தார்? ஒரு காலத்தில் நூறு கோடி மக்களே இருந்தனர்; பிறகு பிறகே நாளடைவில் மக்கள் இனம் பெருகிற்று- பெருகுகிறது- இப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் முயல்கின்றனர்- படிப்படியாக வெற்றியும் காண்கின்றனர். இந்திய நாட்டுக் கவியாகிய சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) இற்றைக்குச் சுமார் அறுபத்தேழு ஆண்டுகட்கு முன்பு இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்ததாகக் கணக்கு வைத்து, ‘முப்பது கோடி முகம் உடையாள்’ என இந்தியாவாகிய தாயைப் பாடினார். இப்போது இந்தியாவின் மக்கள் தொகை எழுபது கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத் தின் விழுக்காடு இப்போது குறைக்கப்பட்டு வருகிறது: இவ்வாறு வேறு பல நாடுகளையும் கொள்ளலாம்.


இச்செய்தியை உற்றுநோக்குங்கால், மக்கள் தொகையைப் பெருக்குவதோ அல்லது சுருக்குவதோ மக்கள் கையிலேயே உள்ளதே தவிர, கடவுள் கையில் ஒன்றும் இல்லை என்பது புலப்படும். இந்த ஆற்றல் கடவுள் கையில் இருக்குமானால், எல்லா உயிர்களையும் ஒரே சமயத்தில் அவிழ்த்துக் கொட்டியிருக்கலாமே! கொஞ்சங் கொஞ்சமாக அனுப்புவதின் நோக்கம் என்ன? மற்றும், நிலாவுலகில் சில கோடிகளைத் தள்ளி விட்டிருக்கலாமே! அங்கே உயிர்க்காற்று, தண்ணீர், உணவுப் பொருள் முதலானவற்றை ஏன் உண்டாக்கவில்லை? எனவே, இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடவுள் என ஒருவர் இருந்து கொண்டு ஒன்றும் செய்யவில்லை; எல்லாமே, இனம் கண்டு கொள்ள முடியாத ஒருவகை இயற்கையின் திருவிளை யாடலேயாகும் என்பது வெளிப்படை.

கடவுள் என ஒருவர் இல்லை என்பதைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அது மட்டுமா? இல்லையென்பவர்மேல் சினம் கொள்வர் -பகையுணர்வு கொள்வர். கடவுள் என ஒருவர் இல்லையென்பதனால் என்போன்றோர்க்கு எந்த நன்மையும் இல்லை; மாறாகச் சமூகத்தின் பகையும் பழிப்புமே பயனாகக் கிடைக்கும். கடவுள் இருப்பது உண்மையானால், அவர் வேண்டா என்று கூறவில்லை. தாராளமாக மேள தாளத்தோடு கடவுள் இருக்கட்டும்! உலகத்துக்கு -உயிர்கட்கு அவர் நன்மைகள் பல புரியட்டும்! போட்டி-பொறாமை, பகை-போர், பிணி-வறுமை, பசி-பஞ்சம், கொலை-கொள்ளை, சூது-வாது, கள்ளம்-கபடு, ஏமாற்று - பித்தலாட்டம் முதலிய கேடுகள்-தீமைகள் இல்லாதபடி உலகை நடத்தட்டும்! கடவுள் முயன்றால்தான் எல்லாம் முடியுமே! ஒரு வகைத் துன்பமும் இல்லாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றட்டும்! தம்மை வழிபட்டால்தான் நன்மை புரிவது என்று கைம்மாறு (இலஞ்சம்) வேண்டாமல், வழிபடுபவர்-அல்லாதார் அனைவரையும் நல்லவராக்கி, சரி நிகராக அனைவருக்கும் நன்மை புரியட்டும்! தீவினை புரிபவருக்கு நரகம்-நல்வினை செய்வோர்க்குச் சொர்க்கம் என்ற பாகுபாடின்றி, அனைவரையுமே உயர்செயல் புரியச் செய்து அனைவருக்குமே வீடுபேறு அளிக்கட்டும்! வேண்டா என்று சொல்லவில்லை. இவ் வாறு செய்வதானால், உலகில் ஒரு'கடவுள் என்னஎத்தனை கடவுளர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும்! அத்தனை கடவுளர்களையும் வரவேற்போம்வணங்குவோம்-வாழ்த்துவோம்! ஆனால் இங்கே நமது கவலையெல்லாம், மேற்கூறியவாறு செய்யக் கூடிய கடவுள் ஒருவர் கூட இல்லையே என்பதுதான்! கருத்து ஒற்றுமை காண்டல்

இங்கே, கருத்து ஒப்புமை காண்டல்’ என்ற முறை யில் இங்கர் சால் (R.G. Inger Sol) என்னும் அறிஞர் அறிவித்துள்ள கருத்துகளைக் காணலாம்:


“மேலே இருந்து உதவி நாடுவதை மக்கள் விட்டு விடவேண்டும். நம் முறையீட்டைக் கேட்கக் கடவுளுக்குக் காதும் இல்லை-உதவி புரியக் கையும் இல்லைஎன்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பகுத்தறியும் அளவில், இயற்கை என்பவள், மன மாறுபாடு இன்றியும் நோக்கம் ஏதும் இன்றியும் எப்போதும் உலகப் பொருள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் அவ்வுருக்களை மாற்றவும் செய்கிறாள்-மீண்டும் மீண்டும் மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அழுகையும் இல்லை-மகிழ்ச்சியும் இல்லை. அவள் நோக்கமின்றி மாந்தரைப் படைக்கிறாள்-இரக்கம் இன்றிப் பின்பு அழித்தும் விடுகிறாள். நல்லவர்-கெட்டவர், அமிழ்தம்-நஞ்சு, இன்பம்-துன்பம், வாழ்வுசாவு, கலகலத்த சிரிப்பு-கண்ணிர்-ஆகிய யாவும் அவளுக்கு ஒரே நிகரானவை. அவள் இரக்கம் உடையவளும் அல்லள்-கொடுமை உடையவளும் அல்லள். வாழ்த்துதலால் அவளை வயப்படுத்தவும் முடியாது கண்ணீரால் அவளைக் கரைத்து உருக்கவும் முடியாது. பாம்புகளின் பற்களில் உள்ள நஞ்சுக்கும் மாந்தரின் உள்ளத்தில் உள்ள இரக்கத்துக்கும் அவள் வேறுபாடு கொள்வதில்லை.

கடவுள் வணக்கமும் வழிபாடும் செல்வத்தையும் செழிப்பையும் உண்டாக்குவதில்லை. இயற்கைக்கு மேல் (கடவுள் என) ஏதோ ஒர் ஆற்றல் இருந்து கொண்டு, கொடுமைக்கு உள்ளானவர்களைக் காத்ததும் இல்லை-உடையும் உணவும் இல்லார்க்கு அவற்றை அளித்த்தும் இல்லை-குற்றமில்லாதவர்களை மீட்டதும் இல்லை-கொள்ளை நோயைத் தடுத்ததும் இல்லை - அடிமையை விடுவித்ததும் இல்லை. எனவே, மாந்தர். இயற்கைக்கு மேல் எந்த ஒர் ஆற்றலும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்-தம் முழுக் கவனத்தையும் முழு முயற்சியையும் இயற்கையின்பாலும் உலகத்தின்பாலும் திசை திருப்ப வேண்டும். மக்கள் தம்மைத் தாமே தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-மக்களைப் பற்றிக் கவலைப்படவோ கவனிக்கவோ இயற்கைக்கு மேல் வேறு எந்த ஓர் ஆற்றலும் இல்லை - என்னும் பேருண்மை உலக மாந்தர் அனைவருக்கும் உணர்த்தப்பட வேண்டும்.’ -


இவை இங்கர் சால் அவர்களின் கருத்துகள் ஆகும். இவ்வாறு இன்னும் அறிஞர்கள் பலர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

இதனால்தான், கடவுள் பற்றியும் வீடுபேறு பற்றியும் புத்தர் பெருமான் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை போலும் கடவுளே உயிர்-உயிரே கடவுள் என்னும் அத்வைதக் கொள்கையும் ஒரு வகையில் சரிதான் போலும்! கடவுள் உயிர்களையும் உலகங்களையும் படைக்கவில்லை; இம்முப்பொருளுமே ஒரே சமயத்தில் தாமே தோன்றியவை என்று குறிப்புக்காட்டும் சைவ -சித்தாந்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையில் ஓரளவேனும் உண்மை இருக்கலாம்.

ஆனால், இளமையிலிருந்து சைவ சித்தாந்தியாகத் தயாரிக்கப் பெற்ற யானே-சைவ சித்தாந்தச் சமயமே மற்ற எல்லாச் சமயங்களினும் சிறந்ததாகும் என முன்பு பல்லாண்டுகளாக வாதிட்டுவந்த யானே, இப்போது (1988) சைவ சித்தாந்தச் சமயக் கொள்கை முழுவ: தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை:

உள்ளத்துள் உள்ளமை

கடவுள் உயிர்களின் உள்ளத்துள் உள்ளார்;வேறெங்கும் இல்லை-என்பதாகப் பெரியோர்கள் சிலர் கூறியுள்ளனர். சிலர் கூற்றுகளைக் காண்போம்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கோவில் வழிபாடு என்னும் தலைப்பில் பின்வரும் பாடல்களைத் தந்துள்ளார்:

1. கோவில் முழுதும் கண்டேன்-உயர்
                      கோபுரம் ஏறிக் கண்டேன்
               தேவாதி தேவனை யான்-தோழி
                     தேடியும் கண்டிலனே.

 

2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்
                   தேரோடும் வீதி கண்டேன்
             எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி
                    ஏழையான் கண்டிலனே.

 

3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல
                    சித்திர வேலை கண்டேன்
             அற்புத மூர்த்தியினைத்-தோழி
                    அங்கெங்கும் கண்டிலனே.

 

4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்
                     பொங்கு பூ மாலை கண்டேன்
              என்னப்பன் எம்பிரானைத்-தோழி
                      இன்னும் யான் கண்டிலனே.

5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்
      சுற்றி எடுத்தல் கண்டேன்
   ஆபத்தில் காப்பவனைத் தோழி
      அங்கே யான் கண்டிலனே.

 

6. தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்
      சிற்றம் பலமும் கண்டேன்
   கல்லைக் கணிசெய்வோனைத் தோழி
      கண்களால் கண்டிலனே.

 

7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்
      காட்டில் அலைய விட்டு
   பண்ணிடும் பூசையாலே-தோழி
      பயனொன் றில்லையடி.

 

8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ
       உணர வேண்டும் அடி
   உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்
       உள்ளேயும் காண்பாய் அடி.


அடுத்து, இதுபற்றிப் பட்டினத்தார் கூறியிருக்கும் ஒரு பாடலைக் காண்போம்:-

 

“சொல்லிலும் சொல்லின் முடிவிலும்
          வேதச் சுருதியிலு
மல்லிலு மாசற்ற வாகாயங் தன்னிலு
           மாய்ந்து விட்டோ
சில்லிலு மன்ப ரிடத்திலும்
            ஈசனிருக்கு மிடம்
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்
           எங்கள் கண்ணுதலே?”

-பட்டினத்தார் பாடல் - பொது-6 அடுத்துச்.சிவ வாக்கியர் என்னும் சித்தர் இதுபற்றிக் கூறியுள்ள பாடல் ஒன்று வருமாறு:

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

சிவ வாக்கியர் பாடல்-520.


கடவுளைக் கோவிலிலோ வேறெங்குமோ காண முடியவில்லை; கடவுள் உயிர்களின் உள்ளத்தில் உள்ளார் எனக் கவிமணி கூறியுள்ளார்.

நாம் கடவுள் என்று எண்ணி வழிபடும் கல் சிலையிலும் செம்புச் சிலையிலும் கடவுள் இல்லை; சொல்லிலும் சுருதியிலும் அன்பர் உள்ளத்திலும் கடவுள் உள்ளார் எனப் பட்டினத்தார் கூறியுள்ளார்.


கடவுள் உள்ளத்துள் உள்ளார்; நட்ட கல்லில் கடவுள் இல்லை; கல் பேசாது; கல்லுக்குச் செய்யும் பூசனைகள், பயனற்றவை. கறி காய் ஆக்கிய சட்டியும் அதை எடுத்து இடும் அகப்பையும் (சட்டுவமும்) கறி காயின் சுவையை அறியாதது போலவே, எந்த வழிபாட்டையும்-பூசனையையும் நட்ட கல் அறியாது-என்று சிவ வாக்கியர் என்னும் சித்தர் ஆணித்தரமாக அறைந்துள்ளார்:


கடவுள் கொள்கையின் தோல்வியை இந்தப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்; கடவுள் வெளியில் எங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளனர்; வேறு வழியின்றி, உள்ளத்துள் உள்ளார் என்று உரைத்துள்ளனர். இது ஒப்புக்குக் கூறியதேயாகும். கடவுள் உள்ளத்துள் உள்ளார் என்பதையும் ஒத்துக் கொள்வதற்கில்லை. உள்ளத்துள் எங்கே இருக்கிறார்உள்ளத்துள் ஏன் இருக்கவேண்டும்-உள்ளத்துள் இருந்து கொண்டு என்ன செய்கிறார். கடவுள் உள்ளத்துள் இருப்பதனால், மக்கள் தீமை செய்யாமல் இருக்கின்றார்களா-எல்லாக் கொடுமைகளையும் புரியும் மக்கள் உள்ளத்துள் மாதேவன் இருப்பதால் ஒரு பயனும் இல்லையே-உள்ளத்துள் கடவுள் உள்ளமைக்கு அடையாளம் என்ன?


கடவுள் நம் உள்ளத்துள் இருந்து கொண்டு எல்லாவற்றையும் சுவனித்துக் கொண்டிருக்கிறார் -எனவே, நாம் தவறு செய்யக்கூடாது-என்று எண்ணி மக்கள் நேர்மையாக நடப்பதற்கு வேண்டுமானால் இந்தக் கருத்து உதவலாம்.

  1.  திருநாவுக்கரசர் தேவாரம்-பொது-தனித்திருக் குறுந்தொகை.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

7. உயிர் என்பதன் விளக்கம்


உயிர் என்பது என்ன? - என்பதைக் காண வேண்டி யது ஈண்டு மிகவும் இன்றியமையாதது.

சைவ சித்தாந்தக் கொள்கையினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுள் என ஒன்று இல்லையே! அடுத்து உயிர் என்பது என்ன என்று திட்டவட்டமாக இன்னும் கூறமுடியவில்லை. உயிர் எனத் தனியே ஒன்று இருப்பதாகவே பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பிணத்தால் சிறிதும் இயங்க முடியவில்லை; எனவே, பிணமாகிய உடலுக்குள் இருந்த ஏதோ ஒரு பொருள் உடலினின்றும் வெளியேறிவிட்டது; அதனால்தான் உடலால் இயங்க முடியவில்லை; வெளியேறிய பொருள்தான் உயிர் என்பது-எனப் பலரும் நம்பிக்கொண்டுள்ளனர். காட்சியளவையாக (பிரத்தியட்சப் பிரமாணமாக) உயிரைத் தனியே பிரித்துக் கண்ணால் காண முடியாவிடினும், இயங்கும் உடல், இயங்காத பிணம் என்னும் இரண்டையும் காட்சியளவையாகக் கொண்டு, அவ்வளவையின் உதவியால், இயங்கும் உடலில் உயிர் என ஒன்று இருக்கவேண்டும்-இயங்காத பிணத்தினின்றும் அவ்வுயிர் வெளியேறிவிட்டிருக்க வேண்டும்-எனவே, உயிர் என்னும் ஒரு பொருள் இருப்பது உறுதி எனக் கருத்தளவையாக (அனுமானமாக) முடிவு எடுத்துள்ளனர். ஈண்டு மிகவும் நுட்பமாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதனால் உடல் இயங்காமல் பிணம் எனப்பட்டதா? அல்லது, உடல் இயங்க ஒத்துழைக்காமையால், உயிர் என்னும் ஒன்று வெளியேறிவிட்டதா? இதற்குச் சரியான விடை வேண்டும். எனவே இது சிந்தனைக்கு உரியதாகும். இதற்குவிட்ையும் கூறவியலும், உயிர் போய்விட்டதனால் உடல் இயங்கவில்லை-பிணமாய் விட்டது’ என்று கூறுவது பொருந்தாது. உடல் இயங்க முடியாமற் போனதால்தான், உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதாகக் கருதுகின்றனர்-என்று கூறுவதே சாலப் பொருந்தும். இதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமெனில். இதோ-


உடல்-உடலுறுப்புகள் சரியான நிலையில் இருப்பவர் நீண்ட காலம் வாழ்கிறார்; உடல்-உடல் உறுப்புகள் பிணியினாலோ வேறு காரணங்களாலோ கெட்டுப் போனவர் செத்துப் போகிறார்; நூறு ஆண்டுகளும் அதற்கு மேலும் வாழ்பவர்கள், உடல் உறுப்புகள் தேய்ந்து போவதால்-மிகப் பழமையாகி ஆற்றல் இழந்து போவதால் உடல் இயங்க முடியாமல் செத்துப் போகிறார்கள்; இதிலிருந்து தெரிவதாவதுஉடல் இயக்கத்தைக் கொண்டு உயிரே தவிர, உயிர் இயக்கத்தைக் கொண்டு உடல் இல்லை என்பதாகும். கட்டான இளமையுடனும் நல்ல தூய உடல் நிலையுடனும் வாழும் இளைஞர் ஒருவர், தூக்கில் இடப்பட்டாலோ - கழுத்து வெட்டுண்ணப் பட்டாலோ, எதிர்பாராத இடையூற்றில் (விபத்தில்) சிக்கிக் கொண்டாலோ, உடனே இறந்து போகிறார். இந்நிலைகளில் அவர் உயிர் போனதால் இறக்கவில்லை-அஃதாவது; மாறாக, உடலுக்கு ஊறு நேர்ந்ததனால்தான் இறந்து போனார்; எனவே, ‘இறப்பு என்பதற்கு, உடலிலிருந்து ஏதோ உயிர் என ஒன்று போய் விட்டதாகப் பொருள் சொல்லலாகாது; மாறாக, உடல்-குறிப்பாக இதயம் இயங்க முடியாமற் போவது தான் இறப்பு என்றே பொருள் கொள்ள வேண்டும். ஈண்டு திருமூலர் தமது திருமந்திரம் என்னும் நூலில் கூறியுள்ள ஒரு பாடலின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது. பாடல் வருமாறு:

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
                திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
            உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
                 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

(மூன்றாம் தந்திரம்-காயசித்தி உபாயம்-724)

என்பது பாடல். உடம்பு கெடின் உயிர் போய் விட்ட தாகப் பொருளாகும். எனவே, பேணும் முறையறிந்து உடம்பை வளர்த்தலே உயிரை வளர்த்தல் ஆகும்என்னும் குறிப்பு இப்பாடலில் பொதிந்துள்ளமையைக் காணலாம். முறையறிந்து உடம்பை வளர்த்ததனால், திருமூலர் நீண்ட நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார் என வரலாறு வழங்கப்படுகின்றது.

உறுப்பு மாற்று மருத்துவம்

பல்வேறு பொறிகளின் (இயந்திரங்களின்) உறுப் புகள் அனைத்தும் சரியான நிலையில் இருந்தால்தான் பொறிகள் இயங்கும்; உறுப்புகள் தேய்ந்து விடின்-பழு தடைந்து விடின்-மாறுதல் பெற்று விடின் பொறிகள் இயங்க மாட்டா. உடலும் ஒருவகையில் இத்தகையதே. மக்களின் படைப்பு இயந்திரங்கள்; இயற்கையின் படைப்பு உடல்கள் இயந்திரத்தின் உறுப்புகளுள் ஒன்று பழுதுபட்டால், அதற்குப் பதிலாக, நல்ல நிலையில் உள்ள வேறோர் உறுப்பைப் போட்டு இயந்திரத்தை இயங்கச் செய்கிறோம்; அதே போல, மனித உறுப்புகளுள் ஒன்று பழுதுபடின், அதற்குப் பதிலாக, வேறு மனித உறுப்பு ஒன்றையோ-அல்லது விலங்கு உறுப்பு ஒன்றையோஅல்லது பிளாஸ்டிக்கால் (Plastic) செய்த உறுப்பு ஒன்றையோ-இன்னும் இரப்பர் போன்றவற்றால் செய்த உறுப்பு ஒன்றையோ இணைத்து உடலை இயங்கச் செய்வது இன்றைய அறிவியல். மக்கள் உடலில் கெட்டுப் போனவற்றிற்கு மாற்றாக, கண், இதயம், குண்டிக்காய் (Kidney) முதலியன பொருத்தப்படுகின்றன. செயற்கைக் கை கால்களும் வேறு செயற்கை உறுப்புகளும் பொருத்தப்படுகின்றன. குருதியே (இரத்தமே) புதிதாகச் செலுத்தப்படுகிறது.


ஊனுக்கு ஊன்

உறுப்பு மாற்று மருத்துவம் (Transplantation) இக்காலத்தில் மிகுதியாக நடைபெறுகிறது. ஆயினும், பழங்காலத்திலேயே இது பற்றிய அறிமுகம் இருந்ததாகவும்-இம்மருத்துவமுறை கையாளப் பட்டதாகவும் தெரிகிறது. கண்ணப்பர் என்னும் சிவனடியாரின் வரலாற்றில் இது பற்றிய குறிப்பு கிடைக்கிறது. இற்றைக்கு (1988) ஆயிரத்திருநூறு ஆண்டுகட்குமுன், தென்னிந்தியாவில்-தமிழ்நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் கண்ணப்பர் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே திருக்காளத்தி மலையில் உள்ள (கடவுள்) சிவனது திருமேனியை வழிபட்டார். கடவுள் சிலையின் கண்ணில் ஒரு நாள் குருதி வழிந்தது. அதைக் குணப்படுத்தக் கண்ணப்பர் பச்சிலை மருந்தைக் கொண்டு முயன்றார்; முடியவில்லை. ஊனுக்கு ஊன் தரின் குணமாகும் என அவர் முன்பே அறிந்திருந்த மருத்துவமுறை அப்போது நினைவுக்கு வந்தது. சிறு பிள்ளையாதலின், கடவுளின் கண் கற்சிலையில் உள்ளது என்பதையும் சிந்திக்காமல், அம்பால் தம் கண்ணைத் தோண்டிக் கடவுள் சிலையில் உள்ள கண்ணின்மேல் பதித்தார் என்பது வரலாறு: இந்த வரலாற்றைப் பற்றிச் சேக்கிழார் என்னும் பெரியார் பெரிய புராணம் என்னும் நூலில் பாடியுள்ளார். இவ்வரலாற்றுப் பகுதி அமைந்துள்ள பாடல்கள் வருமாறு :* [1]

 

“ மற்றவர் பிசைந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்திக்
        கொற்றவர் கண்ணில் புண்ணிர் குறைபடா திழியக்
கண்டும் இற்றையின் கிலைமைக் கென்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்
       உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார்’

“ இதற்கிணி என்கண் அம்பால் இடங்தப்பின் எந்தையார் கண்,
         அதற்கிது மருந்தாய்ப் புண்ணிர் கிற்கவும் அடுக்கும் என்று.
மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்னிருந்து தங்கண்
         முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் அப்ப,


என்பன பாடல்கள். இதனால், ஊனுக்கு ஊன் என்னும் உறுப்பு மாற்று மருத்துவ முறையைப் பண்டைக் காலத்தினரும் அறிந்திருந்தனர் என்பது புலனாகலாம்.


ஊனுக்கு ஊன் தரும் முறை வேறு விதமாகவும் எளிய முறையிலும் செய்யப்படுவதும் உண்டு. இம்முறை பண்டு தொட்டு இன்று வரை பழக்கத்தில் உள்ளது. அஃதாவது :- ஒருவருக்குக் கால்கள் வலுக் குறைந்ததால் நடக்கும் போது சோர்வுறின், அவருக்கு ஆட்டுக் கால் சாறு (Soup) சமைத்துக் கொடுக்கப்படுகிறது. வேறு உறுப்புகள் சோர்வுறினும் அஃறிணை உயிரிகளின் உறுப்புகள் இம்மாதிரி சமைத்துக் கொடுக்கப்படு கின்றன. இதனால் நேர்ப்பயன் உண்டோ-இல்லையோ! ஆக இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது.


அஸ்தி பஸ்பம்: எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) இருந்து குணப்படுத்தப்பட்டது. ‘என் மண்டைக்குள் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) சரியாக வேலை செய்யாததால் சிறிது சிந்தித்தாலும் சிறிது பேசினாலும் தலைவலி-தலைபாரம்-தலை சுற்றல் மயக்கம் எனக்கு உண்டு. ஆசிரியனாகிய யான் பேச முடியாமையால் சம்பள இழப்பு விடுமுறையில் பல திங்கள் வீட்டோடிருந்தேன். ஐரோப்பிய (Allopathy) மருத்துவம் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்தியச் சித்த மருத்துவர் ஒருவர் எனக்கு அஸ்தி பஸ்பம் என்னும் மருந்து கொடுத்தார். அஸ்தி என்றால் எலும்பு; பஸ்பம் என்றால் தூள். அஸ்தி பஸ்பம் என்பது, ஆட்டு மண்டை, மாட்டு மண்டை, மக்கள் மண்டை முதலியவற்றைத் தூளாக்கிப் பதம் பண்ணிச் செய்த மருந்தாகும். யான் இம்மருந்தை உண்டு, பேசினால் தலை வலிப்பது குணமாகி மீண்டும் ஆசிரியர் வேலையைத் தொடர்ந்தேன். அதன் பிறகு அலோபதி மருத்துவர் கொடுத்த டிரிப்ட னால் (Tryptanol) என்னும் மருந்து மேலும் பயனளித்தது. பேசினால் தலைவலிப்பதை முதலில் குணப்படுத்திய அஸ்தி பஸ்பம்’, ஊனுக்கு ஊன் தரும் மருத்துவ முறையைச் சார்ந்ததெனக் கருதுகிறேன். இந்த அஸ்தி பஸ்பம் பைத்தியத்தையும் குணப்படுத்துமாம். நல்ல வேளையாக எனக்குப் பைத்தியம் இல்லை. இத்தகைய பல்வேறு மருத்துவ முறைகளால் மாந்தன் இயங்குகிறான்-வாழ்கிறான். இயந்திரங்களில் எல்லா உறுப்புக்களையும் மாற்றமுடிவதுபோல் மக்கள் உடலில் எல்லா உறுப்புக்களையும் மாற்ற முடியவில் லையே எனக் கேட்கலாம; மற்றும், பெரும்பாலான இயந்திரங்களை உறுப்பு மாற்று முறையில் இயங்கச் செய்வதுபோல, மிகுதியான மக்களை உறுப்பு மாற்று முறையால் பிழைக்கச் செய்ய முடியவில்லையே-- எங்கேயோ ஓரிருவரைத்தானே இ ம் மு ைற யா ல் பிழைக்கச் செய்ய முடிகிறது என்றும் கேட்கலாம். இதற்கு இதோ பதில் : இயந்திரங்கள் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டவை; அவற்றின் உறுப்பு ஒவ்வொன் றும் மனிதனால் பொருத்தப்பட்டது; எனவே, மனிதன் எளிதிலும் பெரிய அளவிலும் இயந்திரங்களைப் பழுது பார்த்து இயக்க முடிகிறது. ஆனால், மாந்தன் தன்னால் படைக்கப்பட்டவன் அல்லன்-இயற்கையால் படைக்கப் பட்டவன்; எனவே, இயற்கையின் மறைவுகள் (இரக சியங்கள்) அனைத்தையும் கண்டு பிடித்து, உறுப்பு மாற்று முறையால் பரந்த அளவில் மிகுதியாக மக்கள் உடலை இயங்கச் செய்வதற்கு இன்னும் போதுமான காலம் வேண்டும்.


மற்றும்,- மாந்தன் தன்னால் கண்டு பிடித்துச் செய்யப்பட்ட இயந்திரங்களைக் கூட, குறிப்பிட்ட காலம் வரையுமே உறுப்பு மாற்று முறையால் ஒட வைத்துக் கொண்டிருக்க முடியும். காலம் கடந்துபோன -மிகவும் பழமைப்பட்டுவிட்ட (obsolete) இயந்திரங்களை அவனால் ஒன்றும் திருத்த முடியாது; நிலை கடந்து விட்டது.(out of condition)எனக் கூறி அவற்றைத் தூக்கி எறிந்து விடுவான். அதேபோல, காலம் கடந்துபோன-மிகவும் சீர்கேட்டுப்போன மக்கள் உடலையும் ஏதாவது.செய்து இயங்க வைக்க முடியாதுகைவிட்டு விட வேண்டியதுதான்!


ஆனால், நல்ல உடல் நிலையுடன் கூடியிருப்பவர், திடீரென ஏதாவது உறுப்புக்கோளாறால் இறந்து விடின், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரது இதயத்தைப் பிசைந்து விட்டு இயங்கச் செய்து அவரைப் பிழைக்க வைக்கும் முறை இப்போது கையாளப்படுகிறது-ஒரு சிலர் மட்டில் வெற்றியும் கிடைக்கிறது. இந்தப் பழக் கத்தின் அடிப்படையில், பல நாள் நோயுற்றவர் இறந்து விடினும் இம்முறையைக் கையாளும் முயற்சி நடைபெறுகிறது. பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று (Oxygen) கொடுத்து இறப்பைத் தள்ளிப்போடும் முயற்சி நடை பெற்று வருவதும் ஈண்டு எண்ண்த்தக்கது. இத்தகு அறிவியல் முயற்சிகள் பல, இன்னும் சில பல ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ந்து மேன்மேலும் வெற்றிப் பாதையில் வீறுநடை போடலாம். எனவே, உயிர் எனத் தனியே ஒன்றும் இல்லை; உடம்பின் ஒருவகை இயக்க ஆற்றலே உயிர் எனப்படுகிறது என்னும் முடிவு கிடைக்கிறது.

சிலர் இன்னொன்று கூறலாம்: இயந்திரம் புதியதாய் அதன் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் இயங்கிவிட முடியாது. அதற்கு எண்ணெயோ, கரியோ, எரி காற்றோ, மின்சாரமோ, அணு ஆற்றலோ, இன்ன பிறவோ கொடுக்கப்பட்டால் தான் அஃது இயங்கும். அதே போல, உடம்பு-உடலுறுப்புக்கள் நல்ல நிலைமையில் இருப்பினும் மாந்தன் இயங்கி விட முடியாது; உயிர் என்னும் ஒன்று இருந்தால்தான் அவன் இயங்க முடியும். எனவே, எண்ணெய் முதலியவை இயந்திரங்களினும் வேறுபட்டுத் தனித்திருப்பது போல, அஃறிணை உயிரிகட்கும் சரி-உயர்திணை உயிரிகட்கும் சரி-உயிர் என்னும் ஒன்று, உடம்பினின்றும் வேறுபட்டுத் தனித்து உள்ளது-என்பதாகச் சிலர் கூறலாம். இக்கூற்று சரியானதன்று. உடலுக்கு உயிர் இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றதாகாது; உடலுக்கு உணவு-நீர்காற்று ஆகியவையே இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றனவாகும். எனவே, இயந்திரத்தின் இயக்க ஆற்றல் போன்றதான - உடலின் - குறிப்பாக இதயத்தின் ஒருவகை இயக்க ஆற்றலே உயிர் ஆகும் என்பது தெளிவு. ‘இயந்திர மூளை மனிதன் வந்து கொண்டிருக்கிறான் வந்து விட்டான் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.


  1.  பெரிய புராணம்-கண்ணப்ப நாயனார் 177-178:


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

8. மனத்தின் தோற்றம்

 

உயிரின் தோற்றம் போலவே, மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner seat of thought, feeling and volition, consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப்பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒருவகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஓர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்கச் செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஓர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். இனி, இக் கால உளவியல் அறிஞர்களின் (Psychologists) கருத்தைக் காணலாம்:


உளம் (மனம்) ஒரு தனிப்பொருள் அன்று; உயிரி (organism) வளர்ச்சி பெறுங்கால் பல படிகளில் காணப் படும் தொழிலே உளம்-வெளியிலிருந்து வரும் தூண்டல் களுக்கு இயையத் துலங்கும் தொழில்களின் தொகுதியே உளம் - என்பது உளவியல் கருத்து. தூண்டல்-துலங்கல் என்றால் என்ன? இந்தக் கருத்தைத் தெளிவு படுத்து வதற்குப் பின்வரும் விளக்கம் தேவைப்படுகிறது:


துண்டல்-துலங்கல்

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் சுரப்பிகளும் தசையும் தண்டு வடத்தின் (Spinal card) வாயிலாக மூளையோடு தொடர்பு கொள்கின்றன. அவ்வாறே மூளையும் நேராகத் தொடர்பு கொள்ளாமல், தண்டு வடத்தின் வாயிலாகவே பொறிகள், சுரப்பிகள் முதலியவற்றோடு தொடர்பு கொள்கிறது. மூளைக்குக் கீழே தண்டுவடம் உள்ளது. அஞ்சல் நிலையமும் தொலைபேசி நிலையமும் போல, தண்டு வடமானது இடையே இருந்து, பொறிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து பொறிகளுக்கும் செய்திகளை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, தண்டுவடத்தை, பல மறிவினைகளின் (Reflexes) இருப்பிடம் எனக் கூறலாம். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

கையில் ஒரிடத்தில் நெருப்புப் பட்டால், அந்த இடத்திலுள்ள உள்செல்லும் (Afferent) நரம்பு வழியாகச் செய்தி தண்டு வடத்துக்குச் செல்கிறது; அங்கிருந்து அச்செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது; நெருப் பினின்றும் கையை இழுத்துக் கொள்ளும்படி மூளை கட்டளையிடுகிறது; அக்கட்டளையைத் தண்டு வடத் தின் வழியாக வெளிச் செல்லும் (Efferent) நரம்பு’ கைக்கு எடுத்துச் செல்கிறது; உடனே கை நெருப்பி னின்றும் விலகுகிறது. இது, தண்டு வடம் செய்யும் ஒரு வகை மறிவினை (Reflex) ஆகும். இங்கே நெருப்பு தூண்டல்’ (Stimuius) ஆகும்; கையை இழுத்துக் கொள்வது துலங்கல் (Response) எனப்படும். உள் செல்லும் நரம்புகள் (Afferent Nerves) மூளைக்கு ஐம்புல நுகர்ச்சி கிடைக்கச் செய்வதால் புலன் நரம்புகள்’ (Sensory Netwes) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும், வெளிச் செல்லும் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து உறுப்புக்களுக்குக் கட்டளையை எடுத்துச் செல் வதால் கட்டளை நரம்புகள் (Connecting Nerves) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும். இங்கே ஐம்பொறிகளுள் மெய் என்னும் ஒரு பொறியின் ஊறு” என்னும் புலன் தொடர்பான தூண்டல்-துலங்கலை அறிந்தோம். இதேபோன்று வாய், கண், மூக்கு, செவி என்னும் மற்ற நான்கு பொறிகள் (சுவை, ஒளி, நாற்றம் , ஓசை என்னும் புலன்கள்) தொடர்பாகவும் தூண்டலுக் துலங்கல் (Response to Stimulus) உண்டு. எடுத்துக்காட்டுகளாவன:-உணவுப் பொருள் தூண்டல்-அதனை வாங்குதலும் வாய்க்குக் கொண்டு செல்லுதலும் நாக்கு சுவைத்து உண்ணுதலும் போன்றவை துலங்கல்; எதிரே உள்ள ஒரு பொருள் தூண்டல்-கண் உற்றுப் பார்த்து அதற்கேற்பச் செயல் புரிதல் துலங்கல்; மலர் தூண்டல்மூக்கால் மணம் அறிந்து பறித்தலும் வாங்குதலும் சூடுதலும் மோந்து பார்த்தலும் போன்றவை துலங்கல்: மணியோசை தூண்டல்-அதனைக் காதால் கேட்டு அதற்கேற்ப வேலை தொடங்குதலும் செய்தலும் போன்றவை துலங்கல். இவ்வாறு வெவ்வேறு எடுத்துக் காட்டுகள் பல தரலாம்: மழை பெய்தால் குடை பிடிக்கிறோம்; இங்கே மழை துாண்டல்-குடை பிடித்தல், விரைந்து நடத்தல் போன்றவை துலங்கல். இவ்வாறு எல்லாச் செயல்களிலும் துாண்டல்-துலங்கல் இருப்ப தைக் காணலாம். - உள்செல் நரம்புகள் (Afferent Nerves) e.gyūLjääss லிருந்து மூளைக்குச் செய்தி எடுத்துச் செல்வதாகவும், வெளிச்செல் நரம்புகள் (Efferent Nerves) மூளையி லிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதாகவும் அறிந்தோம். எனவே, நரம்பு கயிறு போல் இருந்து மூளையையும் மற்ற பகுதிகளையும் இணைக்கிறது என்பது தெளிவு. இதனைச் சுமார். ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் என்னும் தமிழ்த் துறவி திருவாசகம் என்னும் நூலில்,

“மொய்ப்பால் நரம்பு கயிறாக
     மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன்”

என்று அறிவித்திருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. குப்பாயம் என்றால் சட்டை (Shirt) என்று பொருளாகும். சட்டையின் பாகங்கள் நூல் கயிற்றால் இணைத்துத் தைக்கப்படுவதுபோல, உடம்பு என்னும் சட்டையில் உள்ள மூளை-எலும்பு-உறுப்புக்கள், நரம்பு என்னும் கயிற்றால் தைக்கப்பட்டிருப்பதாக-தொடர்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிறதன்றோ! மாணிக்க வாசகர் தமது திருவாசகம்-போற்றித் திருவகவல் என்னும் பகுதியில் கூறியுள்ளபடி, கல்வி என்னும் பல் கடல் கடந்து பாண்டிய மன்னனுக்குத் தலைமை அமைச்சராய் இருந்தவர் அல்லவா? எலும்புகள் நரம்பு என்னும் கயிற்றால் பின்னப் பட்டிருப்பதாகத் திருத்தக்க தேவர் தமது சீவக. சிந்தாமணி என்னும் நூலில் கூறியுள்ள பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது:

என்பினை நரம்பிற் பின்னி
              உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
         புன்புறத் தோலைப் போர்த்து
             மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
         ஒன்பது வாயில் ஆக்கி
            ஊன்பயில் குரம்பை செய்தான்
        மன்பெருங் தச்சன் நல்லன்
            மயங்கினார் மருள என்றான்’

என்பது பாடல். மற்றும், செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம் என்னும் நூலில் உள்ள

“இடையுறும் என்பினை நரம்பின் ஆர்த்திடாப்
புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினான் வேயப் பட்டதோர்
உடலினை யானென உரைக்கல் ஒண்ணுமோ”


என்னும் பாடலும் (5, 2 : 31) உடலிடை நரம்புக்கு. உள்ள தொடர்பை அறிவிப்பது காணலாம். இக்கால அறிவியல் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழர்கள் நரம்பின் இயக்கத்தை அறிந்திருந்தனர் என்பதற்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப்பட்டன. இனி அடுத்து முடிவுக்கு வருவோம் : குறிப்பிட்ட ஒரு தூண்டல்-துலங்கல் தொடர்பான செயல் முழுவதும் ஒரு மறிவினை அலகு” (Reflex Unit) ஆகும். இவ்வாறு பல அலகுகள் உள்ளன. இத்தகைய தூண்டல்- துலங்கல் செயல்களின் தொகுப்பே உளம் (மனம்) ஆகும் என்பது இக்கால உளவியல் கொள்கை. எனவே, ஒரு வகை உடல் இயக்கச் செயல்பாடே-குறிப்பாக மூளை இயக்கமே மனம் என உணரப்படுகிறது. இக்கொள்கை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இங்கே ஒரு சாராரின் மாறுபட்ட கருத்து ஒன்றுக்குப் பதில் தர வேண்டியுள்ளது. அஃதாவது:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது. என்பது உண்மை; ஆனால் மனத்தின் ஈடுபாடு இன்றி இந்நுகர்ச்சி நடைபெற முடியாது. நாம் தேடிக்கொண்டு போகும் ஒருவர் எதிரே வருவதை நம் கண் பார்த்தா லும், மனம் வேறொன்றில் நாட்டம் கொண்டிருந்தால் வருபவரை நாம் இனம் கண்டுகொள்ள முடியாது; இது போலவே, நாம் இருக்கும் இடத்தில் திடீரெனக் கெட்ட நாற்றம் வீசினும், மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் கெட்ட நாற்றம் நமக்குப் புலப்படாது-நாம் அங்கேயே இருப்போம். நம்மிடம் ஒருவர் ஏதாவது சொல்லுங்கால், மனம் ஈடுபடாவிடின் அவர் சொன்னது: கேட்காது-புரியாது. உண்ணுங்கால் மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் சுவை தெரியாது. மனம் வன்மையாக வேறொன்றில் நாட்டம் கொண்டிருப்பின், உடம்பில் எறும்பு கடித்தாலும் தெரியாது. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், மனம் என்னும், ஒர் உட்கருவி தனியாக இருப்பது புலனாகும்-என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்குரிய பதில் வருமாறு:

ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கி யிருக்கக் கூடும். சுந்தரர் என்னும் சிவனடியார், கடவுள் திருமேனிச் சிலையை மிக்க ஆர்வத்துடன் கண்ணால் கண்டு வணங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற நான்கு பொறிகளும அடங்கிக் கண் என்னும்பொறியோடு ஒன்றி யிருந்ததாகச் சேக்கிழார் என்பவர், பெரியபுராணம் என்னும் நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்:

“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”

(பெரிய புராணம்-தடுத்தாட் கொண்ட புராணம்-106)


என்பது அவரது பாடல் பகுதி. மூளை, முனைப்பாக ஏதேனும் ஒரு தூண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கும் போது, மற்ற பொறிகளின் தூண்டலில் கவனம் இல்லாமல் இருப்பது இயற்கையே. இங்கே மனம் என்னும் ஒன்று தேவையில்லை. நாம் தேடிக் கொண்டு போகும் ஒருவர் எதிரே வந்து கொண்டிருப்பதை நம் கண் பார்த்தாலும், இந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல், நாம் வீட்டிலிருந்து புறப்படும் போது மனைவியோ-மக் களோ கடையில் வாங்கிவரச் சொன்னதிலேயே முனைப்பாகப் பின் நோக்சி ஈடுபட்டிருந்தால், அந்தத் தூண்டலுக்கு ஏற்பவே நாம் துலங்கிக் கொண்டிருப்போம்: அதனால் எதிரே வருபவரை இனம் கண்டு கொள்ள முடியாமற் போகிறது. இவ்வாறு எல்லாப் பொறிகளின் தூண்டலுக்கும் கொள்ள வேண்டும். இது கவனக் குறைவு அன்று; இது கவன மாற்றம் ஆகும். அஃதாவது, ஒரு துண்டலுக்குத் துலங்கவேண்டிய நேரத்தில் வேறு துாண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருளாகும். இவ்வாறு ஒன்று நிகழ வேண்டிய நேரத் தில் வேறொன்று வந்து குறுக்கிட்டுத் தடுப்பதற்கு உள வியல் அறிஞர்கள் பின் செயல் தடை (Retroactive inhibition) எனப் பெயர் வழங்குவர்.


நினைவும் மறதியும்

ஈண்டு மறதி (Forgetfulness)என்பது ஒப்புநோக்கத்தக்கது. ஒன்றை நினைத் திருக்க வேண்டிய நேரத்தில், அதனைவிட்டு, வேறொன்றில் நினைப்பு இருப்பது தானே மறதி! எனவே, நினைவு மாற்றமே மறதி எனப்படும். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் (Reciprocal) போன்றவை எனலாம். ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஒன்றை மறந்தால்தான் இன்னொன்றை நினைக்கலாம்-ஒன்றை நினைத்தால்தான் மற்றொன்றை மறக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட யானையை எடுத்துக்கொள்வோம். அதை மரம் என்று நினைக்கும்போது யானையை மறந்து விடுகிறோம் அதை யானை என்று நினைக்கும்போது மரத்தை மறந்து விடுகிறோம். இதைத் தான், திருமூலர் தமது திருமந்திர நூலில்,

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”

(எட்டாம் தந்திரம்-பராவத்தை-2290)

என்னும் பாடலில் மிகவும் நயமாகக் கூறியுள்ளார். ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்- நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'-என்று கூறும் முதுமொழி, கல்லால் ஆன நாயின் தொடர்பாக எழுந்ததே. இந்தக் கருத்தைத் திருவள்ளுவர் என்னும் தமிழ் அறிஞர் திருக்குறள் என்னும் நூலின் பாடல் ஒன்றில் மிகவும் நுட்பமாகப் பொதித்து வைத்துள்ளார். மனைவியைப் பிரிந்து வெளியூர் சென்றிருந்து திரும்பிய கணவன், மனைவியை நோக்கி, உன்னை நான் அடிக்கடி நினைத்தேன்’ என்று கூறினானாம். உடனே அவள், நீங்கள் என்னை அடிக்கடி மறந்திருந்ததனால்தானே அடிக்கடி நினைக்க வேண்டி நேர்ந்தது; ஏன் அவ்வாறு மறந்: தீர்கள்?’ என்று கூறி, அவனைத் தழுவாமல் ஊடல் கொண்டாளாம்.

“உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்திர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்’. - (1316)'

(திருக்குறள்-காமத்துப்பால்-புலவிநுணுக்கம்)

என்பது அப்பாடல். மனைவி என்னும் தூண்டலுக்குத் துலங்காமல், வேறொன்றிற்குத் துலங்கியதை இது குறிக் கின்றது. எனவே, மனம் என ஒன்று தனியே இருப்ப தாகவும், அது வேறு எங்கேயோ-வேறு எதிலோ ஈடுபட்டிருப்பதாகவும், சிலர் கூறுவது பொருந்தாது. அன்னார் வேறொன்றும் கூறுவர் : திறமை மிக்க ஒருவர் ஒரே நேரத்தில் பல செய்திகளுக்கு ஈடு கொடுக்கிறார். ஒரே நேரத்தில் எட்டுச் செய்திகளைக் கவனிப்பதற்கு அட்டாவதானம்’ என்றும், பத்துச் செய்திகளைக் கவனிப்பதற்குத் தசாவதானம்’ என்றும்,பதினாறு செய்திகளைக் கவனிப்பதற்குச்சோட சாவதானம் என்றும் பெயராகும். மனம் என்னும் ஒன்று தனியே இருப்பதால்தான், அது, எல்லாச் செய்திகளிலும்-செயல்களிலும் விரைந்து மாறி மாறி ஈடுபாடு கொண்டு பதில் தர முடிகிறது- என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்குரிய பதிலாவது :- மனம் என ஒன்று: தனியே இருந்து கொண்டு விரைந்து மாறி மாறிச் செயல்படுவதாக இதற்குப் பொருள் இல்லை; அட்டாவதானமாகிய எட்டுத் துண்டல் துலங்கல்களும், தசாவதானமாகிய பத்துத் தூண்டல் துலங்கல்களும், சோடசாவ தானமாகிய பதினாறு தூண்டல் துலங்கல்களும் உடனுக்குடன் மிகவும் விரைந்து-விரைந்து நடைபெறுகின்றன என்பதே இதற்குப் பொருளாகும். அனைவராலும் இது செய்யவியலாது. ஆற்றல் மிக்க ஒரிருவரே இதனைச் செய்யவியலும். அவர்களும் சில நேரத்தில் தவறிப் போவதுண்டு எனவே, மனம் எனத் தனியாக ஒன்றும் இல்லை; உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே மன உணர்வாகும்.

மாற்றுக் கொள்கையினர், இன்னும் நிறைவு கொள்ளாமல், மற்றொரு மறுப்பு கூறலாம்; அஃதாவது; மனி தன், படுக்காமல்-துரங்காமல், விழித்துக் கொண்டு செயலாற்றும்போது, பல தூண்டல்கள் இடையிடையே ஏற்பட, அவற்றிற்குத் துலங்கிக் கொண்டிருக்கலாம்என்பதையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அவன், இரவில்-இருளில், தனியறையில், தனியாகப் படுத்துக் கொண் டிருக்கும்பொழுது, நெடு நேரம் தூக்கம் வராமல், எதை எதையோ மணிக் கணக்கில் மாறி மாறி எண்ணிக் கொண் டிருக்கின்றானே-இது எவ்வாறு நிகழ்கிறது? எந்தத் தூண்டலும் அங்கே இல்லாமலேயே, பல எண்ணங்களின் மேல் எவ்வாறு துலங்கிக் கொண்டிருக்கிறான்? எனவே, மனம் என ஒன்று இருந்து கொண்டே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறது என்பது புலனாக வில்லையா?-என்பதாக, மாற்றுக் கொள்கையினர் வினவலாம். இதற்குப் பதில் வருமாறு :

மூளையில் பல மடிப்புகள் உள்ளன. மனிதன் ஐம் பொறி புலன்களால் அறிந்த செய்திகள் அனைத்தும். அவ்வப்போது மூளையில் பதிவாகிவிடுகின்றன. மேலோடு கவனம் செலுத்திய செய்தி, மேலோடு மூளையில் பதிவாகிறது; இது விரைவில் மறந்து போகக்கூடும். விரைவில் நினைவுக்கு வராமலும் இருக்கக்கூடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்கும் செய்தி மூளையில் நன்றாகப் பதிவாகிறது; விரைவில் மறக்காது-விரைவில் நினைவுக்கு வரும். தாளின் மீதோ-வேறு எதன் மீதோ-பல முறை மேலும் மேலும் எழுதினால் ஒன்றும் படிப்பதற்குப் புரியாது. ஒரு முறை எழுதியதை அழித்தால்தான், மறுமுறை எழுது வது புரியும். அதே போல, நாடாவில் (டேப் ரிகார்டர் Tape Recorder) ஒலியை ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் தான், மீண்டும் அவ்வொலியைக் கேட்க முடியும். இன்னொரு முறை அதிலேயே ஒலியைப் பதிவு செய்ய வேண்டுமெனில், முதலில் செய்த பதிவை அழித்த பிறகே மறுபதிவு செய்ய முடியும்-கேட்கவும் முடியும். நம் மூளை மேற்கூறிய பொருள்கள் போன்ற தன்று; ஆண்டுக் கணக்கில், புதிய புதிய செய்திகள், மேலும் மேலும், மூளையில் எத்தனை முறை பதிவாகிக் கொண் டிருந்தாலும், அத்தனை செய்திகளும், குழப்பம் இன்றி, எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரும்; எல்லாம் தெளிவாகவே இருக்கும். இத்தகைய வியத்தகு ஆற்றலும் அமைப்பும் மூளைக்கு உண்டு.

எனவே, ஒருவன்-இரவில் இருளில்-தனி அறையில் தனியாகப் படுத்துக் கொண்டு, மூளையில் முன்பு பதிவாகி யுள்ள எத்தனைச் செய்திகளை மாறி-மாறி நினைத்தாலும், அத்தனைச் செய்திகளும் மாறி-மாறி நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கும். இங்கே தூண்டல் எதுவும் இல்லையே என்று வினவலாம். ஏன் தூண்டல் இல்லை! அவன் அன்றைக்கு அனுபவித்தவை தொடர்பான சூழ்நிலையும், அதன் விளைவாக மறு நாளோ-எதிர் காலத்திலோ செய்ய வேண்டியவை தொடர்பான சூழ்நிலை யும், தூக்கம் வராமல் ஏற்படும் தொல்லை காரணமான சூழ்நிலையும், இன்ன பிறவும், தூண்டல்களாக இருந்து கொண்டு, அவனைப் பலப் பல எண்ணங்களின் மீது துலங் கச் செய்கின்றன. எனவே, இதற்கு மனம் என ஒன்று தனியாக இருக்க வேண்டிய தில்லை, ஆகவே. எவ்வாறு நோக்கினும், உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே-சிறப்பாக மூளையின் இயக்கமே மன உணர்வாகும் என்பது. வெளிப்படை.


மக்களாகிய உயர் திணை உயிரிகட்கே யன்றி, அஃறிணை உயிரிகட்கும் தூண்டல்-துலங்கல் செயல் பாடுகள் இருப்பதைப் பரக்கக் காணலாம். எனவே, அவையும் மன உணர்வு உடையன என்பது விளங்கும். அங்ஙன மாயின், அஃறிணை உயிரிகளும் மக்களைப் போல் ஏன் சிறப்புச் செயல்கள் புரியவில்லை எனில், அவற்றிற்கு மக்களைப்போல். கைகள் உள்ள உடல் அமைப்பு இல்லை-என்பதே அதற்குரிய காரணமாகும்.

உயிர் பற்றியும் உள்ளம் (மனம்) பற்றியும் யான் கூறியுள்ள கருத்துக்களை மேலும் வலியுறுத்த, என் பட்டறிவு (அனுபவ) நிகழ்ச்சிகள் இரண்டினை ஈண்டு தருகிறேன்.

ஒன்று :- இற்றைக்குப் (1988) பதினைந்து ஆண்டுகட்கு முன்பு, புதுச்சேரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் என்னும் நிறுவனத்தில் ஒரு நாள் யான் சொற்பொழிவாற்றிய போது, மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் என் கருத்தைக் கூறினேன். எனக்குப் பின் சொற்பொழி வாற்றியவர், என் கருத்தை மறுத்து, மனம் எனத் தனியே ஒன்று உண்டு என்று கூறினார். உடனே யான் எழுந்து மீண்டும் என் கருத்தை வலியுறுத்திப் பேசினேன். அதோடு அவர் நிறுத்திக் கொண்டார். இரண்டாவது :- 1982-83ஆம் ஆண்டு காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் யான் பணி யாற்றிய போது, ஒவ்வோர் உடற் கூற்றுத் துறையிலும் வல்ல மருத்துவர்கள் (டாக்டர்கள்) சிலரைப் பல்கலைக் கழகம் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அப்போது மருத்துவர் ஒருவர் சொற்பொழிவாற்றிய போது. மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் எனது கருத்தைத் தற்செயலாகக் குறிப்பிட்டார். உடனே யான் எழுந்து, மனம் என்பது மூளையின் இயக்கமே என்று கூறினீர்கள் - அது பொருத்தமே - அதே போல் உயிர் என ஒன்று தனியே இல்லை-இதயத்தின் இயக்கமே உயிர் என்றும் கூறலாம் அல்லவா?-என்று வினவினேன். அதற்கு அவர், அரை குறை மனத்தோடு ஒப்புக் கொண்டவர் போல் அப்படியும் கூறலாம்-என்று மொழிந்தார். இச்செய்தி ஈண்டு ஒப்பு நோக்குதற்கு உரியது.

  1.  சீவக சிந்தாமணி- கனக மாலையார் இலம்பகம்-21.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

9. உலகமே உண்மைப் பொருள்


சைவ சித்தாந்தக் கொள்கையினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுள் என’ ஒரு பொருளும் உயிர் என ஒரு பொருளும் தனியே இல்லை-அவை ஒருவகை ஆற்றலே என்பது இதுகாறும் நிறுவப்பட்டது. அடுத்து உலகத்தை எடுத்துக்கொள்ளலாம். கட் புலனாலும் மற்ற பொறி புலன்களாலும் நேராக தெளிவாக அறியப்படுவதால், உலகம் என்பது உண்மைப் பொருளாகும். உலகம் என்பதில். நாம் வாழும் பூவுலகமேயன்றி, மற்ற கோள்கள் (கிரகங்கள்), உடுக்கள் (நட்சத்திரங்கள்) போன்று-பொறி புலன் கட்குப் புலனாகும் அனைத்தையும் அடக்கிக் கொள்ளலாம்.


ஐந்து முதற் பொருள்கள்

உலகம் என்பது, ஐந்து முதற் பொருள்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனது- ஐம்முதற் பொருள்களின் சேர்க்கை எனப்படும். அப்பொருள்கள், விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்துமாகும். கடவுளையும் உயிரையும் ஒத்துக் கொள்ளாமல் உலகத்தை மட்டும் ஒத்துக்கொள் பவர்கட்குள்ளேயே ஒருசில கொள்கையினர், ஐம்பொருள்களுள் விண் என்பது தனியே தெளிவாகப் பொறி புலன் களால் உணரப்படாமையால் விண்’ என்னும் ஒரு பொருளை ஒத்துக் கொள்ளாமல் மற்ற நான்கு பொருள் களை மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர். ஆயினும், மற்ற நான்கு பொருள்களும் இருக்கும் வெற்றிடத்தை ‘விண்’ என்னும் ஒரு பொருளாகக் கொண்டு, மூலப் பொருள்கள் (Elements) ஐந்து என்றே சொல்லலாம். சில கோள்களில் இந்த ஐந்து பொருள்களும் உள்ளன எனக் கூற முடியாது. இப்போது (1888 வரை) அறிந்துள்ள அறிவியல் ஆராய்ச்சியின்படி, நிலாவில் (சந்திரனில்) காற்றும் தண்ணிரும் இல்லையல்லவா? ஞாயிறு போன்ற நெருப்புக் கோளங்களில் தண்ணீர் என்னும் தனிப் பொருள் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. விண் வெளியில் பொறிபுலன்கள் உணரும்படியாக உள்ள பல் வேறு உலகப் பகுதிகளுள் சிலவற்றில் காற்று தீ, நீர், மண் ஆகிய நான்கு பொருள்களும் இருக்கலாம்; சிலவற்றில், இந்நான்கு பொருள்களுள் சில குறைந்தும் இருக்கலாம்.

மக்களாகிய நம் உடம்பும் சரி-அஃறிணைகளின் உடம்பும் சரி-இந்த ஐம்பொருள்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனவையேயாகும். உடம்பைப் பஞ்ச பூத பரிணாம சரீரம்’ என சம்சு கிருத மொழியில் கூறுவர் இதனை ஐம்பொருள் திரிபு உடல்’ எனத் தமிழில் வழங்கலாம். இதற்குச் சிறிது விளக்கம் தேவை அரிசியும் வெல்லமும் திரிந்து பண்ணியம் (பணியாரம்)என்னும் தின்பண்டமாக மாறுகின்றன. சோறு, உப்புமா,இட்டலி, தோசை, அப்பம், கொழுக்கட்டை, பிட்டு முதலிய உணவுப்பொருள்கள் அரிசியின் திரிபே (பரிணாமமே) ஆகும். பரிணாமம் என்றால், ஒன்று திரிந்து மற்றொன் றாக ஆவதாகும். இவ்வாறே, ஐம்பொருள்களும் (பஞ்ச பூதங்களும்) திரிந்து உடம்பாக மாறின. அதனாலேயே உடம்பு ஐம்பொருள் திரிபு (பஞ்ச பூத பரிணாம சரீரம், எனப்படுகின்றது. இனி. உடம்பில் ஐம்பொருள்களும் உள்ளவாற்றினை நோக்கலாம். விண்: உடம்பினுள் காற்றும் நீரும் தடை படாமல் போய் வரும் பகுதிகளை விண்ணின் கூறு எனலாம். எடுத்துக்காட்டாக. மூக்கின் இரு வாயில் களிலும் வெற்றிடமாகிய விண்ணின் கூறுஅமைந்துள்ளது எனக் கொள்ளலாமன்றோ? அடுத்தது காற்று: மூக்கின் வழியாகக் காற்று போய் வருவது தெரிந்ததே, வாய் வழி யாகக் காற்று போவதும் உண்டு; வெற்று (காலி) வயிற்றில் காற்று இருக்கும்; இந்த அமைப்பால்,உடம்பில் காற்றின் கூறு இருப்பது அறியப்படும்.

அடுத்தது தீ: எவ்வளவு தீனி போட்டாலும் எரித்து விடுகிறது என்று சொல்வது உலக வழக்கு; சில நேரத்தில் உடம்பைத் தொட்டால் கொதிக்கிறது; சில சமயம் மூக்கிலிருந்து வெப்பக் காற்று வருகிறது; சில நேரத்தில் கழிக்கும் சிறுநீர் சுடுகிறது. நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழுந்ததும் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால்; சுடுகிறது; நீண்ட நேரம் படுத் துறங்கிய இடத்திலே காலை வைத்தால் சுடுகிறது; உடம்பில் கட்டிய ஈரத்துணி உடம்பின் வெப்பத்தால் காய்ந்து விடுவதுண்டு; உடம்பில் எப்போதும் குறிப்பிட்ட அளவு வெப்பம் இருந்தால் தான் உயிர் வாழமுடியும்உடம்பில் வெப்பம் இல்லாவிடின் நேர்வது இறப்பே; எனவே, இவற்றைக் கொண்டு தீயின் கூறு இருப்பது அறியப்படும்.

நான்காவது நீர் : உடம்பில் நீர் இருக்கிறது என்ப தற்கு மிகுதியாகச் சான்று வேண்டா. உடம்பு முழு வதும் குருதி இருக்கிறது-அதில் நீர் இருக்கிறது. வாந்திபேதி (காலரா) நோயுற்றவரின் குருதியில் உள்ள நீர், குருதியினின்றும் பிரிந்து கழிச்சல் என்னும் பேருடன் வெளியேறுகிறது; அதை ஈடுகட்டவே. அந்நோயாளிக்கு ஊசி மூலம் நீர் ஏற்றப்படுகிறது; இல்லா விடின், குருதியோட்டம் தடைபட-அடைபட நோயாளி இறந்து போக நேரிடும். தண்ணிர் வெளியிலிருந்து வாய் வழியாகக் குடிக்கப்படுகிறது; வியர்வையாகவும் சிறு நீராகவும் தண்ணிர் வெளிவருகிறது. ஒரு பிடி பொரி மரவை வாயில் போட்டால், அதை அரைத்துக் கரைத்து உள்ளே அனுப்ப வாயிலிருந்து எவ்வளவோ நீர் சுரக்கிறது; உணவுப் பொருளைக் கண்டதும் நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொல்வதும் உண்டு. எனவே, இவற் றைக் கொண்டு, உடம்பில் நீர்க்கூறு உள்ளமை தெளிவாகும்.


இறுதியானது மண் ; உடம்பின் தசைப் பகுதிகள் மண்ணின் கூறு எனலாம். மண்ணில் என்னென்னவோ முளைக்கின்றன; அதுபோல, நகமும் மயிரும் முளைத்து வளர்வதைக் கொண்டு உடம்பில் மண்ணின் கூறு இருப்பது தெளியப்படும். அவ்வளவு ஏன்? உடலை (பிணத்தை) மண்ணுக்குள் புதைத்தால், அது மக்கி மண்ணோடு மண்ணாய் விடுவது கண் கூடாகும். -


மேற்கூறிய விளக்கங்களால், உடம்பு ஐந்து முதல் (மூலப்) பொருள்களின் திரிபு என்பது விளங்கும். இது சார்பான குறிப்பு ஒன்றைக் குடபுலவியனார் என்னும் தமிழ்ப் புலவரும் ஒரு பாடலில் கூறியுள்ளார். அப் பாடல் புறநானூறு என்னும் தமிழ் நூலில் உள்ளது. ‘தண்ணிர் இன்றி உடம்பு இல்லை; உடம்புக்கு இன்றி யமையாததான உணவு தந்தவர் உயிர் தந்தவராவர்; உணவு எனப்படுவது மண்ணும் தண்ணிரும் சேர்ந்தது; அந்த மண்ணும் தண்ணீரும் கலந்தவரே உடம்பும் உயிரும் பெற்றவர் ஆவார்’-என்பது புலவரின் பாடல் கருத்து:

‘நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது கிலத்தொடு நீரே
நீரும் கிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’.

என்பது அந்தப் புறநானூற்றுப் பாடல் (18) பகுதி ‘மண்ணும் நீரும் கலந்ததே உடம்பு’ என்னும் குறிப்பு இதனால் கிடைக்கிறது.

உடம்பின் பொல்லாமையையும் நில்லாமையையும் கூறும் வகையில் சித்தர்கள் பாடியுள்ள பாடல்கள் சிலவும் உடம்பின் பரிணாமக் கொள்கைக்குத் துணை செய் கின்றன. பாடல் பகுதிகள் சில வருமாறு:

‘ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்தே
    உதிரப் புனலிலே, உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
   வரகோட்டுக்கும் ஆகாதென் றாடாய்:பாம்பே’

‘ இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
    ஈரைந்து 10)மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினும் அந்தச் சூளை
    அரைக்காசுக்கு ஆகாதென் றாடாய் பாம்பே’

(மேலுள்ள இரண்டும் பாம்பாட்டி சித்தர் பாடல்கள்)

‘காயமே இது பொய்யடா
    காற்று அடைத்ததோர் பையடா
மாயனாம் குயவன் செய்த
    மண்ணுப் பாண்டம் ஒடடா'’ .

“நந்த வனத்தில் ஓர் ஆண்டி-அவன்
     நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
     கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி”

(நால்+ஆறு மாதம் = பத்து மாதக் கரு)

என்பன சித்தர் பாடல் பகுதிகள். மண், புனல் (நீர்), காற்று என்னும் மூலப் பொருள்களின் பரிணாமமே உடம்பு என்னும் குறிப்பு, இப்பாடல் பகுதிகளில் பொதிந்து கிடக்கிதது.

உலகமும் உடம்பும்

ஈண்டு, “அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்” - என்னும் முதுமொழி எண்ணத் தக்கது. அண்டம் என்றால் உலகம்; பிண்டம் என்றால் உடம்பு. உலகத்தில் உள்ள- உலகமாக உள்ள ஐந்து முதற் பொருள்களுமே (பஞ்ச பூதங்களுமே) உடம்பிலும் உள்ளன, என்பது இம். முதுமொழியின் கருத்தாகும். இதை நிறுவும் வகையில் உள்ள சம்சுகிருதப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. காதல் முற்றி முதிர்ந்து சாதல் கட்டத்துக்கு வந்துவிட்ட ஒருவன் கூறியதாக உள்ளது அந்தப் பாடல். ஈண்டு அதன் கருத்து வருமாறு:-

“யான் என் காதலியைப் பெறுவதற்கு முன்பே இறந்து போவேனே யாயின், என் உடம்பில் உள்ள ஐந்து முதற் பொருள்களும் அவள் வாழும் இடத்தில் உள்ள ஐந்து முதற் பொருள்களோடு கலந்து போவன வாகுக! என் உடம்பில் உள்ள விண் பகுதி, அவள் வாழும் இடத்தில் உள்ள விண்வெளியோடு கலப்பதாகுக! என் உடலுக்குள் உலவும் காற்றுப் பகுதி, அவள் வாழும் இடத்தில் வீசும் காற்றோடு கலப்பதாகுக! என். உடம்பின் நெருப்புப் பகுதி, அவள் பார்க்கும் முகக் கண்ணாடி ஒளி யுடன் ஒன்றுவ தாகுக! என் உடம்பில் இருக்கும் நீர்ப் பகுதி, அவள் நீராடும் பொய்கையில் போய்ச் சேர்வ தாகுக! என் உடம்பின் மண் பகுதி, அவள் நடமாடும் இடத்தில் உள்ள மண்ணோடு மண்ணாய் மறைவ தாகுக!-என்பது அந்தச் சம்சு கிருதப் பாடலின் கருத் தாகும்.

ஐந்து முதற் பொருள்களும் உடம்பில் உள்ளன என்னும் கருத்தைத் திருவள்ளுவனாரும் தெரிவித்துள் ளார். மனத்தில் வஞ்சகம் உடையவன் வெளியில் உண்மையானவன் போல் நடிக்கும் பொய் நடத்தையைக் கண்டு, அவனது உடம்பில் ஒன்றியிருக்கும் ஐந்து முதற் பொருள்களும் (பஞ்ச பூதங்களும்) உள்ளே எள்ளி நகையாடும்’-என்பது அவரது திருக்குறள் பாடல் கருத்து.

‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ககும்’. (271)

 

(அறத்துப்பால் - துறவறவியல் - கூடாவொழுக்கம்) என்பது அவரது பாடல்.

வள்ளுவர் குறட்பாவில் கூறியுள்ள இக் கருத்தினைப் பொதுமக்களின் வழக்காற்றிலும் கேட்கலாம். என் அஞ்சு பஞ்ச பூதத்துக்குச் சரியாகச் சத்தியமாகச் சொல்கிறேன்” என்றும், எதிராளியை நோக்கி ‘உன் அஞ்சு பஞ்சபூதத்திற்குச் சரியாக சத்தியம்செய்து சொல்வாயா?” என்றும், தத்தம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களின் மேல் ஆணையிட்டுப் பொதுமக்கள் ஒருவர்க்கு ஒருவர் உரையாடிக் கொள்வது வழக்கம். இந்த வழக்காற்றை, தமிழ்நாடு-தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் வட்டாரத்தில் யான் பலமுறை கேட்டிருக் கிறேன். பொருள் புரிந்தோ-புரியாமலோ, பொதுமக்கள் இவ்வாறு பேசுவது, வழி வழி மரபாய் விட்டது.

மேற்கூறியவற்றால், சைவ சித்தாந்த சமயத்தினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுளும் உயிரும் உண்மையல்ல; உலகம் ஒன்று மட்டுமே உண்மைப் பொருளாகும் என்பது தெளிவு. இளமையில் ஆழ்ந்த கடவுட் பற்றுடையவனாக இருந்த யான், பிறர் கூறியதைக் கேட்டோ, பிறர் எழுதியதைப் படித்தோ இந்த முடிவுக்கு வரவில்லை; உலக நடைமுறைகளை உற்று நோக்கிப் பல்லாண்டுகள் ஆழ்ந்து சிந்தித்ததனால் ஏற்பட்ட அனுபவ அறிவின் காரணமாகவே இப்போது இம்முடிவுக்கு வந்துள்ளேன்.

இயற்பொருள் வாதம்

உலகம் ஒன்று மட்டுமே உண்மையானது என்னும் கொள்கை புதிய தன்று; பண்டு தொட்டே பலரால் பின் பற்றப்பட்டு வரும் கொள்கையேயாகும். இந்தக் கொள்கையும் ஒரு மதம் போல் கருதப்படுகின்றது; இதற்கு உலோகாயத மதம் எனச் சம்சுகிருதத்திலும், ‘Materialism என ஆங்கிலத்திலும் பெயர்கள் வழங்கு கின்றன. சார்வாகர் என்பவர் இக்கொள்கையைப் பரப்பியதால் இதற்குச் சார்வாகம் (சார்வாக மதம்) என்னும் பெயரும் உண்டு. இதனை இயற் பொருள் வாதம் என அழகு தமிழில் அழைக்கலாம். பொறி புலன்களால் உணரப்படும் இயற்கைப் பொருளாகிய உலகத்தை மட்டுமே ஒத்துக் கொள்வதால், இயற் பொருள் வாதம் என்னும் பெயர் ஏற்புடைத்தே! இந்த உலோகாயத மதத்தின் கொள்கைகளாவன:

காட்சியளவையாக - பிரத்தியட்சமாக அறியப்படுவதே உண்மை. மூல முதற் பொருள்கள் (பூதங்கள்) ஐந்து அல்ல-காற்று, தீ, நீர், மண் என நான்கேயாகும். உடலே (உடலின் இயக்கமே உயிர் ஆகும். மறுமை (மறு உலக வாழ்வு) இல்லை. கடவுள் என ஒன்றும் இல்லை-என்பன உலோகாயதக் கொள்கைகள்.

இதற்கு நேர்க்காட்சி வாதம் (Positivism) என்ற பெயரும் உண்டு. கண்டதே காட்சி - கொண்டதே கோலம் ஆகும். பொறி புலன்கள் வாயிலாகவோ அறிவியல் அடிப்படையிலோ அறிய முடியாதவை உண்மையல்ல-என்கிறது இக் கொள்கை. இத்தகைய கொள்கையினர் பற்றிய குறிப்புகள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. திருக்காளத்திப் புராணம், திருவாச கம் முதலிய நூல்களின் ஆசிரியர்கள் இக்கொள்கை யினரைக் கண்டித்துள்ளனர். உலோகாயத மதத்தானைப் பாம்பு எனவும் அவன்து கொள்கையை நஞ்சு எனவும் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறிக் கண்டித்துள்ளார்.

“உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி”

(போற்றித் திருவகவல்-56-57)

 

 


என்பது பாடல் பகுதி. தத்துவ லிங்கதேவர் என்பவர் ‘தத்துவ நிசானு போக சாரம்’ என்னும் நூலில் (பக்கம் -259), ‘தேகமே ஆன்மா என்பவன் சார்வாகன்’ எனச் சார்வாகனுக்கு இலக்கணம் கூறியுள்ளார். உடம்பின் இயக்க நடைமுறையைத் தவிர, மனம், உயிர் என ஒன்றும் இல்லை எனக் கூறுபவர்கள் நடத்தைவாதக் காரர்கள்’ (Behaviourists) என்னும் பெயராலும் சுட்டப் படுகின்றனர். இத்தகு உலோகாயத மதக் கொள்கையைப் பற்றி, மாதைத் திருவேங்கடநாதரின் பிரபோத சந்திரோதயம்’ என்னும் நூலில் விரிவாகக் காணலாம், உலகம் மட்டுமே உண்மைப் பொருளாகும் என்னும் கொள்கை பலரால் மறுக்கப்படினும், இக்கொள்கையே சரியானது என்னும் உண்மை, இது காறும் மேலே கூறப்பட்டுள்ள விளக்கங்களால் தெளிவாகும். உலகத்துக்கு உலகில் உள்ள பொருள்களுக்கு என்றும் அழிவு இல்லை. ஆனால், ஒன்று திரிந்து மற்றொன்றாகும்; இஃது அழிவு அன்று - திரிபே. எனவே, உலகம் உண்மைப் பொருள் என்பது வெளிப்படை. 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

10. கடவுள் பிறந்த இயற்கை வரலாறு


உலகம் ஒன்று மட்டுமே உண்மை; கடவுள் என ஒரு பொருள் இல்லை எனில், கடவுள்’ என்னும் சொல் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்? பொருள் இல்லாமல் சொல் தோன்றியிருக்க முடியாதே! தொல்காப்பிய நூலில்

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ”

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளாரே! எல்லாச் சொற் களுமே பொருள் உடையன; குறிப்பிட்ட ஒரு பொருள் இல்லாமல் ஒரு சொல் தோன்ற முடியாது-என்பது இந் நூற்பாவின் கருத்து. எனவே, கடவுள் என்னும் ஒரு சொல் இருப்பதனால், அச்சொல்லால் குறிக்கப்பெறும் ஒரு பொருள் இருந்தே தீரவேண்டும்-என்ற வாதம் ஈண்டு எழுவது இயல்பே. இஃது உண்மைதான்! கடவுள் என்னும் பொருள் உண்டுதான்! ஆனால் அது கற்பனைப் பொருள் ஆகும்; மக்களால் இடையே படைக்கப்பட்ட பொருள் ஆகும். இயற்கை முறை வழிபாடுகள்

தொடக்க கால மக்களுக்குக் கடவுள் என்னும் ஒரு பொருளைப் பற்றிய அறிமுகம் இருந்திருக்க முடியாது. இப்போதும் ஒருவர் பிறப்பு முதல், இறப்பு வரை தனியிடத்தில் பிரித்து வைத்து வளர்க்கப்பெறின், அவருக்குக் கடவுள் பற்றிய அறிமுகமே இருக்க முடியாது. விலங்கு களைப் போல் காட்டுமிறாண்டிகளாக வாழ்ந்து வந்த தொடக்க கால மக்கள், வாழ்க்கையில் பல தொல்லைகளை எதிர் நோக்கினர் - சந்தித்தனர்; அத்தொல்லைகளை வெல்ல முடியாதவராய்த் திகைத்தனர். அந்நிலை யில், தம்மையும் மீறி-தமக்கும் மேலாக ஏதோ ஒர் ஆற்றல் இருப்பதாக உணர்ந்தனர்; உணர்வு நம்பிக்கை யாயிற்று. அந்த ஆற்றலின் உதவி கிடைத்தால் தொல்லைகளிலிருந்து - துன்பங்களிலிருந்து விடுபடலாம் -வெற்றி பெறலாம் என நம்பினர்; அந்த ஆற்றலையே கடவுள் என்னும் பொருளாகக் கற்பனை செய்தனர்; அதனால் கடவுள் உண்டாகிவிட்டார். கடவுள் பிறந்த வரலாறுகளுள் இஃது ஒருவகையாகும்.

நன்றி வழிபாடு

நமக்கு உதவி செய்தவர்களை நாம் மதிக்கிறோம்வணங்குகிறோம்-வாழ்த்துகிறோம். பிச்சைக்காரர்கள் சோறு இட்ட பெண்மணியைக் கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். இன்னும் அரிய பெரிய எடுத்துக் காட்டுகள் பல தர முடியும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம்-செடி-கொடி-புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர்வாழ்த்தினர். அப்பழக்கம் நாளடைவில் கடவுள் வழி பாடாக மாறியது. அவை இருக்கும் இடத்தில் ஏதோ ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்தனர்நம்பினர். அது நாளடைவில் கடவுள் வழிபாடாக மலர்ந்தது. இப்போதுள்ள மக்களுள் சிலரும், மரஞ் செடி கொடி புதர் உள்ள குறிப்பிட்ட இடத்தில் படையல் போட்டு வழிபாடு செய்வதைக் காணலாம். இம்மாதிரி வழிபாட்டை வாழையடிவாழையாக அன்று தொட்டு இன்று வரை சில குடும்பத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். எங்கள் குடும்பத்திலும் என் தாயார் இருக்கும்வரை இத்தகைய வழிபாடு ஒன்று செய்து வந்ததை யான் அறிவேன். அரசு-வேம்பு மரங் களைச் சுற்றி வந்து வழிபடும் வழக்கம் ஈண்டு நினைவு கூரத்தக்கது.

கோயில் எழுந்த வரலாறு:

மக்கள், மரஞ்செடி கொடி யடர்ந்த புதரின் எதிரே முதலில் படையல் போட்டனர்; பின்னர், மண்ணாலோ சாணத்தாலோ கல்லாலோ ஒருவகை உருவம் அமைத் துப் புதரின் எதிரே வைத்து, அதைக் கடவுளாக எண்ணிப் படையல் போட்டு வழிபட்டனர். பின்னர் நாளடைவில் இத்தகைய இடங்களைச் சுற்றிக் கட்டடம் கட்டிச் சிறிய கோயில்களை உருவாக்கினர். பிறகு பிறகு சிறிய கோயில்கள் பெரிய கோயில்களாயின. இந்தியாவில்-தமிழ் நாட்டில் கடவுள் பிறந்த வரலாறும் கோயில்கள் எழுந்த வரலாறும் இந்த அடிப்படையிலே நிகழ்ந்தன. இதற்குத் தமிழ் நாட்டில் உள்ள பல சிவன் கோயில்கள் சான்று பகரும். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் மாமரத்தின் அடியிலிருந்து மலர்ந்தது. சிதம்பரம் கோயில் தில்லை என்னும் மரத்தையும் மதுரைக் கோயில் கடம்ப மரத்தையும் அடிப்படை யாகக் கொண்டு எழுந்தன. மேலும் சில ஊர்களும் மரங்களும் முறையே வருமாறு: திருப்பனந்தாளும் திருப் பனையூரும் - பனை திருப்பெருந்துறை - குருந்தம். திருமுல்லை வாயில்-முல்லைப்புதர். திருவாதவூரும் திருவொற்றியூரும்-மகிழமரம். திருவாலங்காடும் திருக் குற்றாலமும்-பலா. திருவாலம் பொழில்-ஆலமரம். திருவாவடுதுறை-அரசு. திருவானைக்கா-நாவல். திருவிடை மருதூர்-மருதமரம். திருவீழி மிழலை-விழிச் செடி. திருவைகாவூரும் திருவோமாம்புலியூரும் வில்வம். திருப்பாதிரிப் புலியூர்-பாதிரி மரம். திருநெல்வேலிமூங்கில்புதர். திருவாரூர் - புற்றிடம். அவ்வவ்வூர் மரத் தைத் தலவிருட்சம் (பதிமரம்) எனல் மரபு. அரசும் வேம் பும் இணைந்த அடியில் பிள்ளையார்கோயில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இற்றைக்குச் சுமார் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் காணப்படும்.

“கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”

என்னும் தொடர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. கள்ளிச் செடியின் நிழலிலேகூட கடவுள் உரு அமைத்தது வியக்கத்தக்க தன்றோ? அடுத்து, அவரைப் போலவே பழம் பெரும் புலவராகிய மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல் (297) ஒன்றிலுள்ள

“சூர்முதல் இருந்த ஓமையம் புறவு”

என்னும் அடியும் ஈண்டு ஒப்புநோக்கற் பாற்று. காட்டில் ‘ஒமை’ என்னும் மரத்தின் அடியில் கடவுள் இருப்பதாகப் புலவர் கூறியுள்ளார்.

(சூர்=கடவுள்; முதல்=அடிமரம், புறவு=காடு.) மரத்தின் அடிப்பகுதியில் கடவுள் உரு அமைக்கப்பட் டிருந்தது என்பது இதன் குறிப்பு. கடவுள் சிலை செய்து வைத்த காலத்தைக் கண்டுபிடிக்கவியலாத மிகப் பழங் கோயில்களில் உள்ள கடவுள் சிலையைச் சுயம்பு’ என்று கூறிவிடுகின்றனர். சுயம்பு என்றால் தானாகத் தோன்றியது என்று பொருளாகும், சுயம்பு= தான்தோன்றி.

மலை வழிபாடு:

மற்றும், மக்கள் தமக்குப் பல பொருள்களைத் தரும் மலைகளிலும் தெய்வத் தன்மையைக் கண்டனர்; மலை மேலும் அடிவாரத்திலும் கோயில்கள் அமைத்தனர்; மலையைச்சுற்றி வந்து வழிபட்டனர்; மலைவலம் வருதலைக் கிரி பிரதட்சணம்’ என்னும் ஆரவாரமான சம்சுகிருதப் பெயரால் சுட்டினர். மலைக்கச் செய்யும் மலைக் கோயில்களின் மதிப்பு மலைபோலவே, உயர்ந்தது.

நீர் வழிபாடு:

தமக்கும் வயலுக்கும் நீர் தரும் ஆறுகளையும் தெய்வத் தன்மையுடையனவாகக் கருதி, கங்கை யம்மன், காவிரித்தாய் என்றெல்லாம் ஏற்றாற். போல் பெயர்கள் இட்டு மக்கள் வணங்கி வந்தனர்; ஆறுகளில் நீராடுவதைத் துாய செயலாகக் (புனிதமாகக்) கருதினர். ஆற்றங்கரைகளில் விழா எடுத்தனர். இந்தி, யர்கள் ஆறுகளைப் பெண் தெய்வமாக உருவகித்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒடும் பெரிய நீளமான நைல், (NILE) என்னும் ஆற்றை அங்குள்ள மக்கள் ஆண் தெய்வ மாகக் கருதி எங்கள் அப்பன் நீலன்’ என்பதுபோல் கூறி வழிபடுவார்களாம். மக்கள் ஆறுகளின் பெருமை கருதி ஆற்றங்கரைகளில் கோயில்கள் கட்டினர். இக் கோயில்கட்குப் பெருமை மிக உண்டு. தமிழ் மக்கள் தண்ணிரைத் தாயினும் மேலாக மதித்து வழிபட்டு வந்தனர் என்பது உண்மையே ‘தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழித்தலாகாது’ என்னும் பழமொழியும் எப்படியோ எழுந்து விட்டது’ இதனால், மக்கள் சிலர், நல்ல தண்ணீர்-கெட்ட தண்ணீர் என்று பார்க்காமல், எந்தத் தண்ணிராயிருப்பினும் உட்கொள்ளவேண்டும் எனத் தவறான கருத்து கொண்டுள்ளனர். இவ்வாறு தவறாக எண்ணிக் கண்ட கண்ட தண்ணிரை உட்கொண்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பழமொழியின் பொருளை இனி வேறு விதமாகக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு நல்ல கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஒன்று: நீர் நிலைகளிலும் நீரோட்டத்திலும் உள்ள தண்ணீரைக் கெடுக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் அறிவுரை முதலாவது கருத்து. இரண்டாவது: தண்ணீர் பயனற்ற இடங்களில் பாய்ந்தும் கடலில் போய்க் கலந்தும் வீணாவதற்கு இனியும் இடம் தர லாகாது. தண்ணிரை நீர்த்தேக்கங்களில் தேக்கியோ - குளம், குட்டை, ஏரிகளில் நிரப்பியோ வைத்துக் கொண்டு, வேண்டியபோது வேண்டிய அளவு வயலுக் கும் மற்ற மரம் செடி கொடி வகைகளுக்கும் பாய்ச்சிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - என்பது இரண்டாவது கருத்து. எனவே, தாயைப் போலவே, தண்ணீரையும் போற்றிக் காத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணிர் தருகின்ற மாமழை போற்றுதும்!


ஐயனார் கோயில்

தென்னிந்தியாவில் மலைப் பகுதியிலும் காட்டுப் பகுதியிலும் தோப்புகளிலும் சோலைகளிலும் ஐயனார் கோயில்களை அமைத்திருப்பதை ஈண்டு மறக்க முடியாது. ஞாயிறு வழிபாடு:

மக்கள் நிலத்திலே உள்ள ஆறு, மலை, காடு முதலிய வற்றோடு நின்றார்களா? மேலே தெரியும் ஞாயிறு, திங்கள், மேலிருந்து வரும் மழை ஆகியவற்றையும் அவை தரும் பெரும்பயன் கருதிப் போற்றி வணங்கினர். சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள்

“திங்களைப் போற்றுதும்-ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும்”

என்று கூறியிருப்பது ஈண்டு கருதத்தக்கது, இம் முப்பொருள்களுள் ஞாயிறே முதன்மையாதலின், அதனைப் பெரிய கடவுளாக்கி விட்டனர். சூரிய பகவான், சூரிய தேவன், சூரியநாராயணன் முதலிய பெயர்களால் அதனைக் குறிப்பிடலாயினர். அதோ எரிந்து கொண்டு போகும் சூரிய பகவான் எல்லாம் அறிவான் - அவன் கேட்டுத் தீர்ப்பு வழங்கட்டும் - அவன் ஆணையாகக் கூறுகிறேன்’, என்று ஆணையிடும் அளவுக்கு ஞாயிற்றைக் கடவுளாக உயர்த்தினர். அதற்குச் சிலைகளும் கோயில் களும் அமைத்து வழிபட்டனர். தமிழ்நாட்டில் சூரியனார் கோயில்’ என்ற பெயரில் ஒர் ஊரும் உள்ளது. நாடோறும் காலையில் ஞாயிற்றை வழிபடுவதும் தைப் பொங்கல் நாளில் ஞாயிற்றுக்குப் படையல் போடுவதும் தமிழ் மக்களின் வழக்கமாகும்.

இங்கு மட்டுமா? உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முறைகளில் ஞாயிறு வழிபாடு நடைபெறு கிறது. சீனா, அமெரிக்கக் கண்டம், ஐரோப்பா முதலிய பகுதிகளில் ஞாயிறு கோயில்கள் சிதைந்த வடிவில் இன்றும் உள்ளனவாம். பாபிலோனியா, எகிப்து, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளிலும் ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. ஜப்பான் மன்னரும் இந்தியாவின் மன்னர் பலரும் தம்மை ஞாயிறு குலத்தவர் என்று பெருமை பேசினர். சம்சுகிருத இருக்கு வேதம் உட்பட இந்திய மொழி நூல்கள் பல வற்றில் ஞாயிறு வழிபாடு பேசப்பட்டுள்ளது. இந்து மதத்தின் பிரிவுகளுள் செளரம் என்பதும் ஒன்று. சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் செளர சமயம் எனப்படும்,

அன்றாட நடைமுறையில், சூரிய நமஸ்காரம்’ என்பது, இந்தியாவில் மிகவும் பெரிதுபடுத்தப்படுகின்ற ஒன்றாகும். அறிவியல் அடிப்படையிலும் ஞாயிறு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றதன்றோ? ஞாயிறு இன்றி நாம் வாழ முடியுமா? மரம் செடி கொடிகள் உட்பட மற்றவையும் வாழமுடியுமா? ஞாயிறு வெப்பமும் . ஒளியும் வீசுவதனாலேயே எல்லாம் வாழமுடிகிறது. காலையில் ஞாயிற்றை நோக்கி வழிபடின் கண் ஒளி பெருகும். வழிபடுவதனால் பெருகுவதில்லை; ஞாயிற்றை நோக்குவதால் பெருகுகிறது. கண் கெட்ட பின் பார்த்துப் பயன் இல்லை. இதனால், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?’ என்ற பழமொழியும் எழுந்தது. எனவே, பண்டைக்காலம் தொட்டு மக்கள் ஞாயிற்றை ஒரு தெய்வமாகத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வருவதில் வியப்பில்லை.


திங்கள் வழிபாடு:

மக்கள் ஞாயிறு வழிபாட்டோடு திங்களையும் வழி பட்டனர். முழு நிலா வழிபாடும் பிறைநிலா வழிபாடும் தொன்றுதொட்டு நிகழ்பவை. மணமாகாக் கன்னிப் பெண்கள் பிறை நிலாவைத் தொழுவது மரபு என்னும் செய்தி தமிழ் நூல்களில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பிறை நிலாவை வழிபடுவது மக்களிடையே மிகவும் இன்றியமையாமை பெற்றுள்ளது. ஆயிரம் முறை மூன்றாம் பிறை நிலாவை வழிபட்டவர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஆயிரம் பிறை கண்டவர்’ என்று பெருமைப்படுத்தப் பெறுகிறார்.

ஒன்பான் கோள் வழிபாடு

மக்கள் ஞாயிறு, திங்கள் ஆகியவற்றோடு இன்னும் ஏழு கோள்களையும் (கிரகங்களையும்) இணைத் து : நவக்கிரக வழிபாடு (ஒன்பது கோள் வழிபாடு) என்னும் பெயரில் கோயில்களில் சிலைகள் செய்து வைத்து வழிபடு கின்றனர்: ஒன்பது கோள்களின் பெயர்கள் வருமாறு:1, ஞாயிறு (Sun), 2, திங்கள் (Moon), 3. செவ்வாய் (Mars), 4. புதன் (Mercury), 5. வியாழன் (Jupiter):6. வெள்ளி (Venus), 7. gads (Saturn), 8. இராகு (A Planet-caput Draconis), 9. கேது (A Planet—cauda Draconis) ஆகியவை ஒன்பான் கோள்கள் ஆகும். கோயில்களில் இந்த ஒன்பான் சிலைகளையும் மிகவும் நெருக்கமாக வரிசை மாற்றுமுறையில் அருகில்-அருகில் வைத்து, அந்தப் பகுதிக்குச் சனி ஈசுவரன் கோயில்’ என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த ‘சனி ஈசுவரன் கோயில் பகுதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்தக் கோள்களை (Planets) வழிபடும் மரபும் ஒருவகை இயற்கை வழிபாட்டு முறையாகும்.

பசு வழிபாடு:

மக்கள் தம்மைப் பால் தந்து வளர்க்கும் பசுக்களை அன்னையாகக் கருதி, கோமாதா என்பது போன்ற பெயர்கள் இட்டு வழிபடுவதும் இந்தியாவில் தொன்று: தொட்ட மரபு. வெள்ளிக்கிழமை தோறும் பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசிக் குங்குமப் பொட்டு இட்டுக் கர்ப்பூரம் கொளுத்தி வழிபடுவது வழக்கம். புது வீடு புகும்போது பசுவைப் பயன்படுத்துகின்றனர்; அவ்வாறே: மோட்ச வீடு புகுவதாக எண்ணிச் செய்யும் இறுதிச் சடங்காகிய கரும காரியத்தின் போதும் பசு பயன்படுத் கப்படுகிறது. நாடோறும் பசுக்களைத் தொட்டுக் கும்பிடுவது பலரது பழக்கம். தமிழ்நாட்டில் தைத் திங்கள் இரண்டாம் நாளை சனவரி 15ஆம் நாளை) மாட்டுப் பொங்கல் விழா நாளாகக் கொண்டு, மாடுகளைக் குளிப்பாட்டிப் பலவகையான ஒப்பனைகள் செய்து படையில் போட்டு வழிபடுவது தொன்று தொட்ட வழக்கம். பசுவதை கூடாது என இந்தியாவில் பலர் போராடுகின்றனர். பசு தெய்வமான வரலாறு இது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பாம்பு வழிபாடு:

நன்மை தரும் மாட்டுக்கு நன்றி கூறும் வகையில் வழிபாடு நடக்கிறது. அவ்வாறே, தீமை செயயக்கூடிய பாம்புக்கும் வழிபாடு நடைபெறுகிறது. தீமை செய்யா திருக்க வேண்டும் - கடித்து இறப்பு நேராதிருக்கச் செய்யவேண்டும் என்று நயந்து கெஞ்சி வேண்டிக் கொள்ளும் முறையில் பாம்புக்கு அவ்வழிபாடு நடத்தப் பெறுகிறது.

பாம்புப் புற்றில் பால் வார்ப்பதும், புற்றெதிரில் படையல் போடுவதும், அங்கே பால், முட்டை போன்ற பொருள்களை வைத்து விட்டு வருவதும் இந்திய நாட்டுப் பழக்கம். வீடுகளில் நல்ல பாம்பைக் கண்டாலும், அதனை அடிக்காமல், கர்ப்பூரம் கொளுத்திக் காட்டிப் படைத்து, பகவானே, எங்களை ஒன்றும் செய்யாமல் இவ்விடத்தினின்றும் அகன்று மறைவாயாக’ என்று வேண்டிக் கொள்வது மக்கள் மரபு. ஐம்பொருள் வழிபாடு

இச்செய்திகள் எல்லாம் மக்களிடையே எப்படி கடவுள் பற்றிய உணர்வு ஏற்பட்டது என்பதை விளக்கு வதற்கு உரிய தக்க சான்றுகள் ஆகும். பண்டைக்கால மக்கள் இம்மட்டில் நின்றார்களா? ஐந்து மூல முதற் பொருள்களையும் மேற்கூறியவாறே வழிபடலாயினர். இம்முதற் பொருள்களை மக்கள் வழிபட்டதன் நோக்கம் மூன்று எனக் கூறலாம்: தம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதம்மால் கட்டுப்படுத்த முடியாத பொருள்களாக இவை இருப்பதனால் ஏற்பட்ட மதிப்பின் காரணமாக வழிபடுவது முதல் நோக்கம்; இரண்டாவது: இப்பொருள்களால் அடையும் நன்மைகள் காரணமாக ஏற்பட்ட நன்றியுணர்வு; மூன்றாவது: இப் பொருள்களினால் சில நேரத்தில் ஏற்படும் பேரழிவுக்கும் பேரிழப்புக்கும் அஞ்சி நடுங்கி, இனியும் அவை நேராதிருக்கச் செய்ய வேண்டும் என நயந்து கெஞ்சி வேண்டி விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.


மழை எவ்வாறு தோன்றுகிறது என்பதை அறியா மையாலும் அது விண்ணிலிருந்து கீழே வருவதாலும் விண்ணே மழையைத் தருகிறது என எண்ணி அதற்கு நன்றி பாராட்டும் வகையிலும், அளவுக்கு மிஞ்சி மழை யைக் கொட்டி அழிவு செய்யலாகாது என வேண்டு கோள் விடுக்கும் வகையிலும் விண்’ என்னும் மூலமுதற் பொருளை மக்கள் வழிபட்டனர். அவ்விண்ணைப் பெண் ணாக உருவகித்து ஆகாய வாணி’ (வான மங்கை) எனப் பெயரும் தந்தனர். இப்பெயர் இப்போது இந்தியாவின் வானொலி அமைப்பின் பெயராக (ஆகாஷ் வாணி என) வழங்கப்படுகிறது.

அடுத்து,-அளவான காற்றால் நன்மையும் அளவு மீறிய புயல் காற்றால் தீமையும் விளைகின்றன. அளவான தீயால் நன்மையும் அளவு மீறிப் பற்றிப் படர்ந்து எல்லாப் பொருள்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கும் போது தீயால் அழிவும் உண்டாகின்றன. அளவான நல்ல நீரால் நன்மையும் அளவு மீறி வெள்ளமாகப் பெருக்கு எடுக்குங்கால் நீரால் பேரழிவும் ஏற்படுகின்றன. மண்ணால் குடியிருப்பு, உணவுப் பொருள்கள் முதலியன விளைவு முதலான நன்மைகளும், மண் சரிவு நிலநடுக்கம்-நிலப்பிளவு முதலிய தீமைகளும் நேர் கின்றன. எனவே, இம்மூல முதற் பொருள்களால் உண் டாகும் நன்மைகட்காக நன்றி செலுத்தும் வகையிலும், தீமை விளைக்கா திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையிலும், இவற்றைக் கடவுளாகக் கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். விண்ணைப் பெண்ணாக்கி ஆகாய வாணி’ எனப் பெயர் தந்தனர். ஆனால் காற்றை ஆண் தெய்வமாக்கி வாயு பகவான் (காற்றுக் கடவுள்) எனவும், நெருப்பையும் ஆண் தெய்வமாக்கி அக்கினி பகவான்’(நெருப்புக் கடவுள்) எனவும் பெயர்கள் ஈந்தனர் நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் (நீர்க்கடவுள்) என்னும் பெயரைச் சூட்டினர் மண் என்னும் முதற் பொருளைப் பெண் தெய்வமாக்கி, பூமாதேவி, நில மடந்தை, மண்மகள் என்றெல்லாம் பெயர்கள் வழங்கினர். பொதுவாக நாடுகள் பெண்பால் பெயர்களாகவே சுட்டப்படுகின்றன. தத்தம் மொழியைத் தாய் மொழி’ (Mother Tongue) என அழைப்பது போலவே, தத்தம் நாட்டைத் தாய்நாடு’ (Mother Land) எனப் பெண்ணாக-அன்னையாக அழைப்பது மக்கள் மரபு. இத்தகைய செய்திகளால், மக்கள் இயற்கையின் அடிப்படையில் பல்வேறு கடவுள்களைப் படைத்து விட்டனர். என்பது புலப்படும். பழைய படையலின் தொடர்பு


மிகப் பழங்காலத்து மக்கள் கடவுள் பெயரால் என்ன படையல் போட்டார்களோ-எவ்வாறு படையல் போட்டார்களோ, அம்முறையினை வாழையடி வாழையாக இக்காலத்திலும் சில குடும்பங்கள் பின்பற்றி வருவதைக் காணலாம். சில வழிபாடுகளின் போது, தேனும் தினைமாவும் படைத்தலும், தினைமாவால் மாவிளக்கு போடுதலும் செய்கின்றனர் கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகை நாளின் (கிருத்திகை) மறுநாளாகிய நாட்டுக் கார்த்திகை நாளிலும், தைத் திங்களின் இரண் டாம் நாளாகிய மாட்டுப் பொங்கல் நாளிலும், முருங்கைக் கீரை துவட்டுதல்-வாழைக்காய் பொரித்தல்கீரைத்தண்டு கூட்டு செய்தல்-பறங்கிக்காய் பொரியல் செய்தல்-கொழுக்கட்டை செய்தல்-வடையும் சர்க்கரைப் பொங்கலும் செய்தல் முதலியன, ஆண்டு தோறும் விடாமல் நடைபெறுகின்றன. இந்த இரண்டு நாள் களிலும் மரக்கறி உணவை (Wegetarian) வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர். மற்றும், இவ்விரு நாள்களிலும், காத்தவராயன் என்னும் தெய்வத்திற்குப் படைத்தல் (காத்தவராயன் படையல்) என்னும் பெயரால், காயும் கருவாடும் குழம்பு செய்தும்-ஆட்டுக்கறி குழம்பிட்டும்-மதுவகை வாங்கி வந்தும், மரக்கறி உணவு வைத்திருக்கும் இடத்திற்குச் சிறிது அப்பால் வேறோர் இடத்தில் தனியாக வைத்துப் படைப்பது வாடிக்கையான வழக்கம். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களும், வாழையடி வாழையாக வரும் வழக்கத்தை விடலாகாது என்பதற்காக மது வைத்துப் படைத்துப் பின்னர் அந்த மதுவை யாருக்காவது கொடுத்து விடுதல் மரபு. ஆக்கி அரித்துப் படைத்தல்

மேற்கூறிய இருவேறு நாள்களிலும் படைக்கும் படையலை ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்னும் ஒருவகை மரபுப் பெயரால் வழங்குதல், தமிழ்நாட்டுத் தென்னார்க்காடு மாவட்டத்தில் இன்றும் உள்ளது. ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்றால், பல வகைப் பச்சை உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பிவ் ஏற்றிப்பதம் செய்து-சமையல் செய்து-படைத்தல் என்று பொருளாகும். இந்தப் பெயரிலிருந்து அறியக் கூடியதாவது: :-மக்கள் ஒரு காவற்தில், உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பில் வைத்துப் பதம் செய்து படைக்காமல், பச்சையாகவே கடவுளுக்குப் படைத்தனர் என்பதாகும். கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியவற்றைப் பச்சையாகவே வைத்துப் படைப்பது இன்றும் உண்டு. ஈண்டு, மாங்குடிகிழார் என்னும் புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் (335) ஒன்றில் காணப்படுகின்ற

“கெல் உகுத்துப் பரவும் கடவுள்”

என்னும் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. பச்சை நெல்லை வைத்துப் படைத்த பண்டைய பழக்கம் இதனால் புலப்படும். இவையெல்லாம் பண்டைக்கால இயற்கை வழிபாட்டு முறையாகும்.

கூழ் படைத்தல்:

அடுத்துக் ‘கூழ் படைத்தல்’ என்பது குறிப்பிடத்தக்கது. கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய கூலங்களை (தானியங்களை) மாவாக அரைத்து, நீர்விட்டுக் கரைத்துத் துழவிக் காய்ச்சிய உணவு கூழ்” எனப்படும். இதனைக் கரைத்துக் குடிப்பர். ‘கூழ் உண்ணுதல்’ என்று சொல்வது மரபு அன்று; கூழ் குடித்தல்’ என்று கூறுவதே மரபு பண்டைக் காலத்தில், சோறு உண்ணாமல், கூழ் குடித்தலே பெரும்பான்மையான வழக்கம். வசதியுள்ளவர்கள் பகலில் கூழ்குடித்து, இரவில் சோறு உண்பது வழக்கம். வசதியற்றவர் இருவேலைகளிலுமே கூழ் குடிப்பர். இன்றும், ஏழைகளும் சிற்றுார்களில் வாழும் மக்கள் பலரும் கூழ் குடிப்பதைக் காணலாம். பண்டு, கரைத்துக் குடிக்கும் கூழே பெரும்பாலும் உணவாக இருந்ததால், பின்பு தோன்றிய எல்லா வகை ஆரவார உணவுக்கும் கூழ்” என்னும் பெயர் இலக்கியங்களில் ஏறிவிட்டது. கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (10) ஒன்றில் உள்ள

“கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்”

என்னும் பகுதியும், சமண முனிவர் பாடிய நாலடியார் என்னும் நூலின் பாடல் (62) ஒன்றில் உள்ள

“துகடிர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க”


என்னும் பகுதியும்,

“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”. (64)”

(அறத்துப்பால் - இல்லறவியல்-மக்கட்பேறு).

என்னும் திருக்குறள் பாடலும், கூழ் என்னும் சொல்லுக்கு உணவு என்னும் பொருளைத் தந்து கொண்டிருப்பதைக் காணலாம். சேந்தன் திவாகரநிகண்டு என்னும் நூலின் ஆசிரியராகிய திவாகரர் என்பவர், சொற்பொருள் கூறுகிற அந்நூலில், கூழ்” என்னும் செர்ல்லுக்குச்சோறு? என்றே பொருள் கூறலாயினர்:

“சொன்றி, கிமிரம், மடை கூழ், புழுக்கல்,
ஒன்றிய மூரல் சோறு எனஉரைப்பர்”.

(சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்த் தொகுதி 78)

என்பது அவரது நூற்பாப் பகுதி. திருவள்ளுவரோ இன்னும் ஒரு படி மேலே போய். உணவு தொட்ர்பானஉணவுப்பொருள்கள் எல்லாவற்றிற்குமே பொதுப்பெயர் ராகவும் கூழ் என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்:

“படைகுடி கூழ் அமைச்சு கட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”. (381)

(திருக்குறள் - பொருட்பால் இறைமாட்சி)

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”. (554) .

(திருக்குறள்-பொருட்பால்-கொடுங்கோன்மை) என்பன அவர் பாடல்கள்.

திருவள்ளுவரை அடியொற்றி,

‘படையும் குடியும் கூழும் அமைச்சும்
அரணும் நட்பும் அரசியல் ஆறே”. (12-90)

எனத் திவாகரரும் தம் நிகண்டு நூலில் கூறியுள்ளார். எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யாகிய (எள் +நெய்= எண்ணெய்) எண்ணெய் என்னும் பெயர், மற்ற எல்லா வகை நெய்களுக்கும் பொதுப் பெயராய் இன்றும் வழங்கப்படுவது போல, கூழ் என்னும் பெயரும், எல்லா வகை உணவுப் பொருள்கட்கும் பொதுப் பெயராயிற்று.

தமிழிலே யன்றித் தெலுங்கு இலக்கியத்திலும் ‘உணவு என்னும் பொருளில் கூழ்” என்னும் சொல் ஏறி விட்டது. கல், முள், மண் என்னும் சொற்களோடு ‘உ’ சாரியை சேர்த்துக் கல்லு, முள்ளு, மண்ணு, என்று சொல்வது போல, கூழ் என்பதோடும் ‘உ’ சாரியை சேர்த்துக் ‘கூழு' என்று தமிழில் வழங்குவது உண்டு. தமிழ் மொழியில் சில சொற்களில் (ழ) ழகரமா யிருப்பது, அதன் உடள் பிறப்புத் திராவிட மொழிகளாகிய கன்னடத்தில் (ள) ளகரமாகவும் தெலுங்கில்’ (ட) டகரமாகவும் ஒலிக்கப்படுவது ஆட்சியில் உள்ளது. தமிழில் உள்ள ஏழு என்பதைக் கன்னடத்தில் ஏளு, எனவும், தெலுங்கில் ஏடு” எனவும் ஒலிப்பர் மற்றும். தமிழில் உள்ள கோழி என்பதைக் கன்னடத்தில் கோளி எனவும், தெலுங்கில் கோடி எனவும் ஒலிப்பர். இவ்வாறே தமிழில் உள்ள கூழு உன்பதைக் கன்னடத்தில் ‘கூளு’ எனவும் தெலுங்கில் கூடு” எனவும் ஒலிப்பர். தெலுங்கு அறிஞராகிய வேமன்னர் என்பவர், தம் ‘வேமன்ன பத்தியம் என்னும் நூலின் பாடல்களில், கூடு (கூழு) என்னும் சொல்லைச் சிறப்பான உணவு என்னும் பொருளில் ஆண்டுள்ளார். பாடல் பகுதிகள் தமிழ் எழுத்தில் வருமாறு:-

“பப்பு லேனிகூடு பருலக ஸ்ஹயமெள
யப்பு லேணி வாடு யதிக பலுடு”

(அன்ன ரசம்-467)


என்பது ஒரு பாடலின் பகுதி. இதன் கருத்து. பருப்பு இல்லாத உணவு அயலவர்க்கு (இடப்படுதல்) ஆகாத தாகும்; கடன் இல்லாத மாந்தன் மிகவும் வல்லவனா வான்-என்பதாகும். மற்றுமொரு பாடல் பகுதி யினைக் காண்போம்:

“நெய்யி லேனி கூடு கிய்யான கனுவதி
ப்ரியமு லேனி கூடு பிண்டபு கூடயா”

(அன்ன ரசம்-469)


இதன் கருத்து நெய் இல்லாத உணவு ஒழுங்கற்றதாகும்; அன்பு இன்றி இடும் உணவு, பிண்டச் சோற்றுக்கு இணை யாகும்’-என்பதாகும். இவ்வாறு இலக்கிய ஆட்சிகள் இன்னும் பல தரலாம். பண்டு உணவாக இருந்த கூழே அன்று கடவுளுக்குப் படைக்கப்பட்டதால், அம்மரபை விடாமல், இன்றும் பல குடும்பத்தினர் கடவுளுக்குக் கூழ் படைக்கின்றனர். படைத்த கூழை ஏழைகட்கு அளிப்பதைக் கூழ் ஊற்றுத்ல் என்னும் தொடரால் குறிப்பிடுவது மரபு. தண்ணீர் விட்டுக் கரைத்த நீர்மப் பொருள் ஆதலின், ‘ஊற்றுதல்’ என்று கூறும் மரபு உண்டாயிற்று. இயற்கை வழிபாட்டு முறைக்கு இது பெரிய சான்றாகும். இனி, மேலும் சில படையல்களைப் பற்றிப் பார்ப்போம்.

பொங்கிப் படைத்தல் :

மிகப் பழங்காலத்தில் மக்கள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்தனர்; கஞ்சியில் உள்ள தண்ணீரைத் தனியாக இறுத்தும் குடித்தனர். தண்ணீரும் சோறுமாக உண்ட பழக்கத்தைத் தொடர்ந்து, பிற்காலத்தில் சிறப்பு உணவையும் நல்ல தண்ணீர் நல்ல கஞ்சி’ என்று கூறும் மரபு ஏற்பட்டது. ‘நல்ல தண்ணீர் இல்லாததனாலே-நல்ல கஞ்சி இல்லாததனாலே உடம்பு கெட்டு விட்டது'-என மக்கள் இன்றும் பேசிக்கொள்ளும் வழக்காற்றிலுள்ள நல்ல தண்ணிர்’, ‘நல்ல கஞ்சி’ என்பன, நல்ல சிறப்பு உணவையே குறிக்கின்றன. பண்டைக் காலத்தில் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கும் பழக்கத்திலிருந்து சிறிது முன்னேறி, கஞ்சி நீரை வடிக் , சோற்றைப் பொங்கித் தின்றனர். சோறு கொதிக்கும்போதே புளித் தண்ணிர், மிளகாய், உப்பு ஆகியவற்றை அதில் போட்டுப் பொங்கித் தின்றனர், சோறு பொங்கித் தின்னு, சொந்தக் கவி பண்ணு’ என்னும் முதுமொழியிலிருந்து, பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காற்றை அறியலாம். பண்டு ஏற்பட்ட :பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காறு, இப்போது: சிறப்பு உணவு செய்து உண்ணுவதைக் குறிக்கவும் பயன் படுத்தப்படுகிறது. பொங்கித் தின்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை கிடையாது’, ‘நான்தான் அவர்களுக்குப் பொங்கிப் போடுகிறேன்-என்னும் வழக்காறுகளில் உள்ள பொங்கி’ என்பது. சிறப்பு உணவு செய்தலையே குறிக்கிறது. பண்டு, சிறப்பு நாள்களில். கூழ் குடித்தலையும் கஞ்சி குடித்தலையும் நிறுத்தி, சோற்றைப் பொங்கித்தின்றனர். இன்றைய பொங்கல் விழாப் படையல், பழைய அடிப்படையில் எழுந்ததேயாகும்.

ஆண்டுதோறும் தைத்திங்களின் முதல் நாளில், இந்திய மக்களுள் பலர், ஏதாவது ஒரு பெயரில் ஒருவிழா எடுக்கின்றனர். தமிழர்கள் அன்றைக்குப் பெரும் பொங்கல் விழா என்று பெயரிட்டுப் படையல் செய்கின்றனர். இந்தப் பொங்கல் நாளன்று, சோற்றை வடிக்காமலோ அல்லது தண்ணிரைச் சரியாக நிறை கட்டி வைத்துச் சோற்றை நெற்றுப் பதமாக எடுக்காமலோ, சோற்றைக் கட்டியும் முட்டியும் ஆகப் பொங்குகின்றனர். வீட்டில் புதிய உலோகக் கல வகைகள் (பாத்திரங்கள்) எவ்வளவு இருப்பினும் அவற்றை விலக்கி, பழைய வழக்கப்படி புதிய மண்பாண்டங்கள் வாங்கி வந்து அவற்றிலேயே பொங்குகின்றனர்-குழம்பிடுகின்றனர். பண்டைக்கால மக்களுக்கு முதலில் புழுங்கல் அரிசி தெரிந்திருக்க முடியாது; பச்சை நெல்லைக் குத்தி எடுத்த பச்சை அரிசியே தெரிந்திருக்க முடியும்; நாளடைவிலேயே நெல்லைப் புழுக்கிப் புழுங்கல் அரிசி உண்டாக்கியிருப்பர். எனவே, பண்டைய மக்கள் அனைவரும் தொடக்கத்தில் பச்சையரிசியையே பொங்கித் தின்றிருப்பர். இந்தத் காலத்தில் புழுங்கல் அரிசியே உண்ணும் பெரும்பாலான தமிழர்கள். பெரும் பொங்கல் விழா நாளில், பண்டைக் கால வழ்க்கப்படி, பச்சையரிசியையே இட்டுப் பொங்கு கின்றனர். அந்தக் காலத்தில், குடியிருப்பு வசதி இன்மை யாலும், இது பெரிய படையல் ஆதலாலும், பெரும் பாலும் திறந்த வெளியிலேயே பொங்கியிருப்பர். அந்தப் பழக்கப்படி, இந்தக் காலத்திலும், பெரிய மாளிகை உடையவர்களும், திறந்தவெளி வாசலிலேயே பொங்குகின்றனர் - படைக்கின்றனர். திறந்தவெளி வாசல் வசதியில்லாதவர் சிலர், வீட்டுக்குள் பொங்கும் இடத்திற்கு மேலேயுள்ள சில ஒடுகளை எடுத்து விட்டுச் செயற்கை முறையில் தற்காலிகத் திறந்தவெளி உண்டாக்கிப் பொங்கியதை யான் பார்த் திருக்கிறேன். மற்றும் இக்காலத்துப் புதிய காய்கறி வகைகளை விலக்கிப் பழைய முறையில் வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், கருனைக் கிழங்கு, கரும்பு. மஞ்சள்கொத்து முதலியவற்றையே படையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்தக் காலத்தில் உணவுப் பொருள்களை வாழை இலையில் இட்டுப் படைக்கின்றோம். அந்தக் காலத்தில் பூசனி இலையில் இட்டுப் படைத்தனர். தமிழ்நாடு-தென்னார்க்காடு மாவட்டம்- கடலூர் வட்டப் பகுதியில், இந்தக் காலத்திலும், பெரும் பொங்கல் நாளில், உணவுப் பொருள்களைப் பூசனி இலையில் இட்டே பழைய வழக்கப்படி படைக் கின்றனர். பொங்கல் படையலின் வரலாறு இது. புரட்டாசித் திங்களின் சனிக் கிழமைகளில் திருமாலுக்குச் செய்யும் தளிகைப் படையல், புத்தாண்டு நாள் படையல் முதலியனவும் பண்டு தொட்டுவரும் அடிப்படையை ஒட்டியே நடைபெறுகின்றன.


இக்காலத்தில் புதுப் புதுப் பொருள்கள் தோன்றியிருப்பினும், அவற்றை விலக்கி, பழங்காலத்தில் பயன்படுத்திய பொருள்களையே இக்காலத்தும் தொடர்ந்து படையல் நாள்களில் மக்கள் பயன்படுத்துவதை நோக்குங்கால், பண்டைக்கால மக்கள், இயற்கையை ஒட்டியே கடவுள்களைப் படைத்தனர் - கடவுள்கட்குப் படையல் செய்தனர் என்பது வெளிப்படை. 

 


  1.  தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-பெயரியல்-1
  2.  சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - மங்கல வாழ்த்துப்பாடல்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

1. செயற்கை முறைக் கடவுள் வரலாறு


கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இதுகாறும் கூறப்பட்டது; அஃதாவது-தொடக்க கால மக்கள் இயற்கைப் பொருள்களைக் கடவுளாகக் கற்பனை செய்தனர்-இயற்கைப் பொருள்களிலே கடவுள் தன்மை என்னும் ஒருவகை ஆற்றல் இருப்பதாகக் கருதினர் என்ப் தான வரலாறு தரப்பட்டது. கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இருப்பது போலவே செயற்கை முறை வரலாறும் உண்டு. மாந்தர்க்குள்ளேயே அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய பெரியோர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதும் செத்தவர்களைத் தெய்வமாக மதித்து வழிபடுவதும் செயற்கை முறை வரலாறுகள் ஆகும். இவ்விரண்டினுள் செத்தவர்களையெல்லாம் தெய்வமாகக் கருதி வழிபடுவது மிகப் பெரிய அளவில்பரந்த அளவில் நடைபெறுகிறது.


செத்துத் தெய்வமாதல்:

நல்லவர்கள் ஆயினும் - தீயவர்களாயினும் - இறந்தவர்கள் அனைவரையும் அவரவர் உறவினர்கள் தெய்வ மாகக் கருதி வழிபடுதல் மரபாயிருக்கிறது. அவர் செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்று கூறுவது உலகியல் வழக்கு. செத்துப் பிணம் கிடந்த இடத்தில் படைப்பதும், பிணத்தைப் புதைத்த இடத்தில் (சமாதி மேடையில்) படைப்பதும், செத்த பின்னர் இறுதிச் சடங்கு நடக்கப்போகும் கடைசி நாள் வரையும் நாடோறும் படைப்பதும் மரபு. ஆண்டுக்கு ஒரு முறை வரும் இறந்த நாளில் நினைவு நாள் (திவசம்) கொண்டாடிச் சிறப்பாகப் படையல் செய்வதும் தொன்றுதொட்ட மரபாகும். உலகெங்கும் உள்ள கிறித்தவ சமயத்தினர், “கல்லறைத் திருநாள் (All Souis Day) என ஒரு நாள் குறிப்பிட்டு, அந்நாளில், செத்தவர்களைப் புதைத்துள்ள கல்லறைகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தும், சாம்பிராணி புகைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் வழிபாடு செய்வது மரபு. செத்தவர்கள் எத்தகையவராயினும், அவர்கள் தெய்வமாகிக் கடவுள் உலகத்தில் போய்க் கலந்துவிட்டனர் என்னும் பொருளில், அவரவர் உறவினர்கள், அவரவர் மதத்தின் மரபுக் கேற்ப, சிவலோக பதவியடைந்தார்-வைகுண்ட பதவி எய்தினார்-திருநாடு (மோட்ச உலகம்) அலங்கரித்தார் பரமபதம் சேர்ந்தார்-பரமண்டலம் அடைந்தார்-என்றெல்லாம் கூறுவது மரபு. இருப்பவர்களை நல்லபடி யாக வைக்கவேண்டும் என, இறந்தவர்களை நினனந்து இருப்பவர்கள் வேண்டிக்கொள்வதும் உண்டு. இச்செய்திகளால், செத்தவர்கள் தெய்வமாகிவிட்டனர் என மற்றவர்கள் எண்ணுகின்றனர் என்னும் கருத்து கிடைக்கிறது.


நடுகல் வழிபாடு

மறப்போர் புரிந்து மாண்ட வீரர்க்கும், வடக்கு இருந்து மாண்ட மாண்பினர்க்கும், கற்பிற் சிறந்த மகளிர்க்கும், அரும்பெருஞ் செயல் புரிந்த ஆன்றோர்க்கும் அவர்தம் நினைவாக அவர்கள் பெயரால் கல்நட்டு அக்கல்லைக் கடவுளாகக் கருதிப் பூசை செய்து வழி படுவது நடுகல் வழிபாடு’ எனப்படும்; இற்றைக்ரு (1988) இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தாகக் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் நூலில் ஆசிரியர் தொல்காப்பியனார் நடுகல் வழிபாட்டை ஆறு துறைப்படுத்திக் கூறியுள்ளார். அவை: காட்சி, கால் கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறுமாகும்.

ஃ காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர...’


என்பது தொல்காப்பிய நூற்பாப் பகுதி. அவற்றுள், காட்சி என்பது, கற்கள் நிறைந்த பகுதியிலிருந்து குறிப்பிட்ட நல்ல ஒரு கல்வினைக் கண்டு தெரிவு செய்த லாகும். கால்கோள் என்பது, தேர்ந்தெடுத்த கல்லினைக் கொண்டு வந்து வழிபாட்டுக்கு உரிய செயலைத் தொடங்குதலாகும். நீர்ப்படை என்பது கல்லினை நீரில் இட்டு வைத்தோ-நீர் விட்டோ தூய்மை செய்தலாகும். நடுதல் என்பது, கல்லிலே போர் மறவனது பெயரும் பெருமையும் பொறித்து, அவன் இறந்த இடத் திலோ அல்லது அவனது உடலைப்புதைத்த இடத்திலோ நட்டு, மயில் பீலியும் (தோகையும்) மாலையும் அணிவித்து ஊன்றச் செய்தலாகும். பெரும்படை என்பது, இக் காலத்தில் கோயிலில் செய்யும் குடமுழுக்கு (கும்பா பிஷேகம்) போன்ற சிறப்புக்களைச் செய்து படையல் போட்டுப் பெருமைப் படுத்தலாகும். வாழ்த்தல் என்பது, நட்ட கல்லைக் கடவுளாக மதித்து வணங்கி வாழ்த்துதல் ஆகும். இவ்வாறாக, செத்துப் போன வீர மறவர் தெய்வமாக்கப்பட்ட வரலாறு தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இற்றைக்குச் சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகக் கருதப்படும் ஐயனாரிதனார் என்பவர் புறப் பொருள் வெண்பாமாலை என்னும் தமது நூலில் இது பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.


‘கற்காண் டல்லே கற்கோள் நிலையே
கல்நீர்ப் படுத்தல் கல் நடுதல்லே
கன்முறை பழிச்சல் இல்கொண்டு புகுதல்’

 

எனச் சிறிது மாற்றத்துடன் இவரும் ஆறு துறைகளாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு துறையினையும் இரண்டடி கொண்ட வெண்பா ஒன்றாலும் லிரிவாக விளக்கியுள் ளார். அவை அனைத்தையும் ஈண்டு விரிப்பின் பெருகும். கற்கண்டால் என்பது தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள காட்சியாகும். கற்கோள்நிலை என்பது கால் கோள் ஆகும். கல் நீர்ப்படுத்தல் என்பது நீர்ப்படை யாகும்; ஐயனாரிதனார்.


கல்நீர்ப் படுத்தல் என்னும்துறையில், கல்லை நீரிலிட்டுத் தூய்மை செய்தல் என்னும் விளக்கத்துடன். இறந்து போன ஒவ்வொரு வீரரின் அடக்கத்துக்கு (சமாதிக்கு) நேராக ஒவ்வொரு கல்லை ஒழுங்கு செய்து வைத்தல் என்னும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளார். கல்நடுதல் என்பது நடுதல் ஆகும். கல்முறை பழிச்சல் என்னும் துறையில், தொல்காப்பியர் கூறியுள்ள பெரும் படை, வாழ்த்தல் என்னும் இரண்டு துறைகளையும் அடக்கி விட்டார். இலர் ஆறாவதாகக் கூறியுள்ள ‘இல் கொண்டு புகுதல்’ என்பது தொல்காப்பியத்தில் இல்லாத ஒன்றாகும். இல் என்பதற்குக் கோயில் (கோ இல்) என இவர் பொருள் செய்துள்ளார்; எனவே, ‘இல் கொண்டு புகுதல் என்றால், வீரனது நடுகல்லைச் சுற்றிக் கோயில் கட்டி உள் சென்று வழிபடுதல் என்று பொருளாகும். இவ்வாறாக, மாண்டு போன மற வர்க்குக் கல்நட்டுக் கோயில் கட்டி அவர்களைக் கடவு ளாக்கிய வரலாறு புறப்பொருள் வெண்பா மாலை என் னும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலை யும் இலக்கண நூல்களாகும். இவற்றில் சொல்லப் பட்டுள்ள இலக்கணச் செய்திகளுக்கு, அகநானூறு, புற நானூறு, திருக்குறள் முதலிய (இலக்கிய) நூல்களில் உள்ள சில பாடல்கள், இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்தின் உரையாசிரியராகிய நச்சினார்க் கினியர் என்பவர் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடா மலேயே பல பாடல்களை இந்த ஆறு துறைகளுக்கும் இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றை விரிப்பின் பெருகும்.

ஈண்டு, மதுரை மருதனிள நாகனாரால் எழுதப்பட்டு அகநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ள பாடல் பகுதியொன்றின் கருத்தைக் காணலாம்: போர் மறவர்களின் பெய ரும் பெருமையும் பொறித்து வழிதோறும் நடுகற்கள் நடப்பட்டுள்ளன; அவற்றின் மேல் மயில் பீலி (தோகை) மாலைபோல் சூட்டப்பெற்றுள்ளது; ஒல்வொரு கல்லின் முன்னும் வேல் ஊன்றி அவ்வேலின் மேல் கேடகப் பலகை சார்த்தப்பட்டுள்ளது; வீரனும் வேலும் கேடகமு மாகக் காட்சி யளிக்கும் அந்த இடம், ஒரு போர்க்களம் போல் தோன்றி அச்சம் தரத்தக்கதாக உள்ளதாம். இதோ அப்பாடல் பகுதி: -

‘ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குகிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்று முனை
கடுக்கும் வெகுவரு தகுங் கானம் ... ’

என்பது பாடல் பகுதி. நடுகல்லின் முன் வேலை ஊன்றி அவ்வேலின்மேல் கேடகப் பலகை சார்த்தப்பட்டிருப்ப தாக உரையாசிரியர்கள் உரை கூறினர்.

இதற்கு நாம் வேறு விதமாகவும் பொருள் கூறலாம். வீரன் வேலும் எதிரியின் வேலைத் தடுக்கும் கேடகப் பல கையும் ஏந்திக் கொண்டிருப்பது போல் சிலை செய்து நடப்பட்டுள்ளது-என்பதுதான் அந்தப் புதிய பொருள் . இப்பொருளால், வெற்றுக் கல்லை நடும் வழக்கம் மாறிச் சிலையாகச் செய்து நடும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்னும் கருத்து கிடைக்கிறதன்றோ? இப்பாடல் பகுதி யின் கருத்து பட்டினப்பாலை என்னும், நூலிலும் (78-79) உள்ளது.

அடுத்து, புறநானூற்றிலிருந்து இது தொடர்பான சில செய்யுட் பகுதிகளையும் கருத்துக்களையும் காண்போம் : முதலில், போரில் மாண்டு நடுகல்லாகிவிட்டபெரிய வள்ளலும் சிற்றரசனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சி’ என்பவனைக் குறித்து ஒளவையார் பாடியுள்ள புறப்பாடல் (புறம்=புறநானூறு) பகுதி (232) வருமாறு :

‘இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ!’

என்பது பாடல் பகுதி. கருத்து:- அதியமான் இல்லாத காலையும் மாலையும் எனக்கு இல்லை யாகுக! என் வாழ் நாளும் முடிவதாகுக! அவனது நடுகல்லிலே மயில் பீலியை சூட்டி, நாரால் அரித்து வடிகட்டப் பெற்ற மதுவைச் சிறிய கலத்தில் ஊற்றி அவனது நடுகல்லின்

  • அகநானூறு-மணிமிடை பவளம்-(131).

முன்னே வைத்தால், அதை அவன் எடுத்துப் பருகு வானோ-மாட்டானோ என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் முன் மது முதலியவற்றை வைத்துப் படைக்கும் மரபு உண்டு என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, வடமோதங் கிழார் என்பவர் பாடிய புறப்பாட்டுப் (260) பகுதி வருமாறு :

‘உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படம்செய் பந்தர்க் கல்மிசையதுவே”

என்பது பாடல் பகுதி. கருத்து:- பலரும் இருக்க இடம் கொள்ளாத சிறிய இடத்தில் வீரனுக்குக் கல் நடப் பட்டுள்ளது; அதில் அவனுடைய புகழ் வாய்ந்த பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மயில் பீலி அணியப் பட்டுள்ளது; கல்லின் மேலே நிழலுக்காகத் துணியால் பந்தர் (பந்தல்) போடப்பட்டுள்ளது'- என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் மேலே நிழலுக்காகப் பந்தல் போடப்பட்ட புதுச்செய்தி கிடைக்கிறது. பந்தல் போடுவது என்பது, கோயில் கட்டுவதின் தொடக்கச் செயலாகும். அடுத்து ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டுப் (261) பகுதி வருமாறு:-

‘நடுகல் ஆகிய
வெல்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம் கமையுறக் கலங்கிய
கழிகல மகடூஉ ..... ..

என்பது பாடல் பகுதி. கருத்து. மறவன் இறந்து நடுகல் ஆகிவிட்டமையால், அவனுடைய மனைவி. அணிகலன்களையும் கூந்தலையும் களைந்து மொட்டைத் தலையுடன் கைம்மை நோன்பு கொண்டுள்ளாள்’ என்பது கருத்து. அந்தோ கொடுமை! அடுத்து, பெயர் அறியப்படாத புலவர் ஒருவர் பாடிய புறப்பாட்டுப் (263) பகுதி வருமாறு:-

‘இரும்பறை இரவல சேறி யாயின்
தொழாதனை கழிதல் ஒம்புமதி வழாது . .
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே”

என்பது பாடல் பகுதி. கருத்து: ‘பறை கொட்டும் கலைஞனே! வீரனது நடுகல் இருக்கும் வழிப் பக்கம் செல் வாயாயின், அந்நடுகல்லைத் தொழாமல் விட்டுவிடாதே; தவறாமல் தொழுது செல்வாயாக’, என்பது கருத்து. இது, கலைஞன் ஒருவனுக்கு வேறொருவர் அறிவுறுத்துவது போல் அமைந்துள்ளது இப்பாடலால், நடுகல்லை, அவ்வழியே போபவர் வருபவர் எல்லாரும் தொழுவது வழக்கம் என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, உறையூர் இளம் பொன் வாணிகனார் பாட்டு (264) வருமாறு:


“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனிகட் டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவ ரோட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே”


என்பது பாடல். கருத்து: ‘வீரன் போர் புரிந்து மாண்டான்; அவனுக்குப் பருக்கைக் கற்கள் கலந்த மணல் குன்றின் மேல் கல் நட்டனர்; கல்லில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மரல் கீறித் தொடுத்த சிவந்த மலர் மாலையும் மயில் பீலியும் அணியப்பட்டுள்ளன. ஆனால்

இந்த வீர வள்ளல் மாண்டு நடுகல்லானதை அறியாமல் யாழ்ப் பாணரது சுற்றத்தார் இவனிடம் பரிசு பெற இன்றும் வருவார்களோ? - என்பது கருத்து. இப்பாட லால், வீரர்களும் வள்ளல்களாய் விளங்கியமை புல னாகும்; இத்தகையோர்க்குக் கல் நடுவது பொருத்தமே. கற்கள் கலந்த மணல் குன்றின் மேல் கல் நட்டமை, மலைக் கோயில்கள் உருவாக அடிகோலியதாகும். குன்றுதோறாடும் குமரனைப் பற்றிய செய்தி திருமுரு காற்றுப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, அள்ளூர் நன் முல்லையார் பாடிய புறப்பாடல் (306) பகுதி வருக :


“அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது”


என்பது பாடல் பகுதி. கருத்து : சிற்றுாரில் உள்ள பெண், நாளும் தவறாது நடு கல்லைக் கையால் தொழுது வழிபடுவாள்'- என்பது கருத்து. இதனாலும் நடுகல்லை வழிபடும் செய்தி பெறப்படுகிறது. அடுத்து, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடிய புறப்பாடல் (329) பகுதி வருமாறு :

“இல்லடு கள்ளின் சில்குடிச் சிறுர்ப்
புடைாடு கல்லின் நாள்பலி ஊட்டி
நன்னீ ராட்டி நெய்ந்கறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்”

 

என்பது பாடல் பகுதி. கருத்து:- “சிற்றுாரின் அருகில் உள்ள நடுகல் நாள்தோறும் நல்ல நீரால் தூய்மை செய்யப்படுகிறது; காலையில் பலி உணவு படைக்கப் பெறுகிறது; நெய்விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது; அந்நெய் விளக்கின் புகை, முகில் (மேகம்)போல் மேலெழுந்து தெருவெல்லாம் நறுமணம் வீசுகிறதுஎன்பது கருத்து. கோயில்களில் கடவுள் சிலையை நீராட்டி (அபிஷேகம் செய்து) நெய்விளக்கு ஏற்றி உணவு (நைவேத்தியம்) படைக்கும் இக்காலப் பழக்கம், அக்கால நடுகல் தெய்வ வழிபாட்டிலேயே தொடங்கப் பெற்று விட்டது என்னும் அரிய செய்தி இப்பாடலால் பெறப்படு: கிறது. அடுத்து, மாங்குடி கிழார் பாடிய புறப்பாடல் (335) பகுதி வருமாறு :

“ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”


என்பது பாடல். கருத்து: “எதிரியின் யானைகளைப் போரில் வெட்டி வீழ்த்தித் தானும் மாண்டுபோன மறவனது நடுகல்லை வழிபடுவதைத் தவிர, நெல் இட்டுப் படைத்து வழிபடும்படியாக வேறு கடவுள் இந்த ஊரில் இல்லை”- என்பது கருத்து ஊரில் கடவுள் என்பது, மாண்டவர்க்காக நட்ட நடுகல் மட்டுமேயாகும்; கடவுள். வழிபாடு என்பது நடுகல் வழிபாடு ஒன்றுமே யாகும்என்னும் கருத்து இப்பாடலால் பெறப்படுகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இவ்வாறு நடுகல் பற்றிய செய்தி உள்ள பாடல்கள் புறநானூற்றில் இன்னும் சில உள. விரிவு அஞ்சி விடுப்பாம். ஈண்டு இது தொடர்பான திருக்குறள் பா ஒன்றை மறக்க முடியாது. போர் மறவன் ஒருவன் பகைவரை நோக்கித் தன் தலைவனது மறப் பெருமை. யைப் புலப்படுத்துவதாக உள்ளது அப்பாடல்.

“என்னைமுன் கில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்னின்று கல்கின்ற வர்’ (771)”

என்பது பாடல். கருத்து :- என்-ஐ என்னை= என் தலைவன்) பகைவர்காள்! என் தலைவன் முன்னே நிற்கவுஞ் செய்யாதீர்கள்; என் தலைவன் முன் எதிர்த்து நின்று இறந்து நடுகல்லாய் நின்றவர் பலர்- என்பது கருத்து. இப்பாடலில் உள்ள இலக்கியக் கலைநயம் இன்பம் ஊட்டுகிறது. அந்நாளில் போரில் மாண்ட மறவர்கள் அனைவர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன என்பது இப்பாடலால் புலனாகிறது. மற்றும், இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார் பாடிய மலைபடு கடாம் என்னும் நூலில் நடுகல் பற்றியுள்ள பகுதி மிகவும் சுவை பயப்பதாயுள்ளது. அப்பகுதி.

‘நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்ஏசு கவலை எண்ணுமிகப் பலவே (387-89)

 

என்பது பாடல் பகுதி. கருத்து: புறமுதுகு காட்ட நாணி மறப்போர் புரிந்து மாண்டு புகழ்ப் பெயருடன் நடுகல்லில் தெய்வமாய் நிற்பவர்கள், போரில் புறமுதுகிட்டு அவ்வழியே ஒடும் கோழைகளைப் பார்த்து, இவர்கள் நம்மைப்போல் மறப்போர் புரிந்து மாளாமல் போருக்கு அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஒடு கின்றனரே என்று எள்ளி நகையாடுவர்'- என்பது கருத்து. நடுகற்கள், தோற்று ஒடுபவரைப் பார்த்து இகழும் அளவுக்கு உயிர்ப்பு (தெல்வத்தன்மை) உடையன என நம்பத்தக்கனவாயுள்ளன என்னும் செய்தி இப் பாடல் பகுதியால் பெறப்படுகிறது.

இதுகாறும் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பன்னுாற் பாடல்கள், நடுகற்கள் கடவுளாகக் கருதி வழி படப்பட்டன என்னும் செய்தியை விவரித்தன. நடு , கல்லைக் கடவுள்’ என்னும் சொல்லாலேயே சுட்டியுள்ள பாடல் ஒன்று அகநானூறு என்னும் நூலில் உள்ளது. அப்பாடலைப் பாடியவர் அம்மூவனார் என்பவர். அப் பாடலின் நடுகல் பற்றிய பகுதி வருமாறு :

[1] *

‘வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத் -
தோப்பிக் கள்ளொடு துருஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுகா றருஞ்சுரம்’

என்பது பாடல் (35) பகுதி கருத்து :- மறப்போர் செய்து மாண்டு மணல் குன்றின்மேல் நடுகல்லாய் நிற்கும் மறக் கடவுளை வழிபடுவதற்காக, அந்நடுகல்லின் மேல் மயில் பீலியை அழகாக அணிவித்து, துடி என் னும் பறையை முழக்கி, நெல்லிலிருந்து செய்யப்பெற்ற தோப்பி என்னும் கள்ளை வைத்து, செம்மறியாட்டைப் பலி கொடுத்துப் படையல் போடுவர்-என்பது கருத்து. நாட்டுக் கார்த்திகை நாளிலும் மாட்டுப் பொங்கல் நாளிலும், காத்தவராயன் படையல் என்னும் பெயரில் ஒரு தனியிடத்தில் மதுவும் ஆட்டுக்கறிச் சமையலும் வைத்துப் படையல் போடும் வழக்கம் இக்காலத்திலும் நடைபெறுகிறது என்னும் செய்தி முன்பே ஓரிடத்தில் விவரிக்கப்பெற்றுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது, இப்பாடலில், நடுகல் மறவர், கடவுள்’ என்னும் பெயரா லேயே சுட்டப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. துடி கொட்டுதலும் தோப்பிக் கள்ளொடு துருப் பலிகொடுத் தலும் இப்பாடலால் பெறப்படும் புதிய செய்திகளாகும், குன்றின்மேல் கோயில் எழுந்த வரலாறுக்கும் இப்பாட லில் அடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்து நூலின் ஐந்தாம் பத்தின் பதிகத்தில், கண்ணகிக்கு உரிய சிலைக் கல்,

‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (அடி-3)

எனக் கடவுள் கல்லாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிமேகலையிலும் கண்ணகிக் கல் தெய்வக் கல்’ (26-89) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், அகநானூற்றில் நடுகல்தொடர்பான சுவை யான செய்திகள் மேலும் சில உள. அவை வருமாறு :

“செக்காய் வருந்து பசிப் பினவொடு.
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை ..”

(அகம்-களிற்றியானை நிரை-53)

என்னும் சீத்தலைச் சாத்தனாரின் பாடல் பகுதியில், கோடையில்-பாலை நிலத்தில் ஆண் நாய் பெண் நாயு டன் நடுகல்லின் இனிய நிழலிலே தங்கியிருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது போல, கோடையில்-பாலை நிலத் தில் நடுகல்லின் நிழல் இனிமையாய் உள்ளதாம். அடுத்து,

‘சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் காட்பலிக் கூட்டும் சுரன்’

என்னும் எயினந்தை மகன் இளங்கீரனார்’ என்கிற புலவரின் பாடல் பகுதியின் அகம் -.மணிமிடைப் பவளம் -289) கருத்தாவது:-கற்குவியலில் வீரர்கள் நடுகற்களாய் உள்ளனர், அந்த நடுகல் மறவர்கட்குக் காட்டு மல்லிகை மலர்கள் காலை வழிபாட்டுப் பலியாகப் பயன்படுத்தப் படுகின்றனவாம். அடுத்து,

‘கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎழுதிர் நடுகல்
பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் புறவு.’

அகம் மணி மிடை பவளம் 297)

 

என்னும் மதுரை மருதனிள நாகனாரின் பாடல் பகுதி யின் கருத்தாவது:-பெயரும் பெருமையும் பொறிக்கப் பட்டுள்ள நடுகற்களில், மறவர் சிலர். தம் அம்புகளைக் கூராக்கத் தேய்த்துத் தீட்டினராம்; அதனால், நடுகற். களில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பல தேய்ந்து மறைந்து விட்டனவாம். அதனால், அவ்வழியே செல்ப வர்கள், நடுகற்களில் பொறிக்கப்ப்ட்டுள்ள உரையை முழுதும் படித்துப் புரிந்து கொள்ள முடிய வில்லையாம். இச் செய்தியினால், வழியே போபவர் வருபவர்கன் நடு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளவற்றைப் படித்துப் பார்ப் பது வழக்கம்-என்பது புலனாகும். அடுத்து, அதே. ஆசிரியர் பாடியுள்ள.

“சினவல் போகிய புண்கண் மாலை.
அத்தம் நடுகல் ஆளென உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர்
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்’

(அகம் நித்திலக் கோவை -365)

என்னும் பாடல் பகுதியின் கருத்தாவது:-இருள் தொடங்கிய மாலை நேரத்தில், ஒரு வழியே சென்று கொண்டிருந்த யானை ஒன்று, ஆங்கிருந்த நடுகல்லை ஆள் (மாந்தன்) என எண்ணிக் காலால் உதைத்ததால் கால் நகங்கள் ஒடிந்து விட்டனவாம். இச்செய்தியைக் கொண்டு, மாந்தர்-வடிவத்திலேயே மறவர்க்குச் சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தன என்னும் குறிப்பு புலப்படலாம். அடுத்து அதே புலவர் பாடியுள்ள

“கிரைகிலை நடுகல் பொருந்தி இமையாது
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
ஓடை யானை உயர்ந்தோ ராயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்”

 

(அகம்-நித் திலக் கோவை-387)

என்னும் பாடல் பகுதியின் கருத்தாவது:-வரிசையாக உள்ள நடுகற்களில் பதுங்கியுள்ள பல்லிகள் ஒலி எழுப்பு கின்றனவாம். அவ்வொலியைக் கேட்டுப் பெரும் படையு டைய பேரரசரும், நிமித்தம் (சகுனம்) சரியில்லை எனத் தம் ஊருக்குத் திரும்புவராம்.

இச் செய்தியால், பல்லிகள் தங்கும் அளவுக்கு நடுகற்கள் பழமை பெற்றிருந்தன என்பதும், அக்கால மக்களும் பல்லி சொல்லை நிமித்தமாக நம்பினர் என்ப தும் புலப்படும்.

வேண்டுதல்

இக்காலத்தில் மக்கள் தங்கட்கு இன்னது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது போலவே, அக்காலத்தில் மக்கள் தங்கட்கு வேண்டியதை அருளுமாறு நடுகல்லாகிய தெய்வத்தைத் தொழுது வேண்டிக் கொண்டுள்ளனர். இதை அறிய, புறநானூற்றிலுள்ள ஒரே ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொள்வோம்:

ஒரு சிற்றுாரில் இருந்த பெண் ஒருத்தி, போர் மறவனாகிய தன் கணவனும் அவன் தலைவனாகிய அரசனும் பகைவென்று நலம் பெற வேண்டும்-தான் விருந்து போற்ற வேண்டும்-இதற்கு அருள் புரிதல் வேண்டும் என்று வேண்டி'நடுகல்லைக் கையால் தொழுது வணங்கினாளாம். பாடல் வருக:

களிறு பொரக் கலங்கு கழன்முள்வேலி

அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது:
விருந்தெதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஓ·········· வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே-(306)

 

இக்காலத்திலும், செத்துக் கிடக்கும் பிணத்தை நோக்கி, உறவினர்கள், எங்களை நல்லபடியாக வைப் பாயாக’ என்று வேண்டிக் கொள்ளும் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

இவ்வாறு வீர நடுகல் வழிபாடு பற்றிய செய்திகள் இன்னும் பல தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன. வேறு நாடுகளிலும் இத்தகைய வீரர் வழிபாடு உண்டு. விரிவு அஞ்சி அவற்றை விடுப்பாம். இந்த நடுகல் வழிபாட்டுத் தோற்றமும் கடவுள் பிறந்த வரலாறுகளுள் ஒருவகை யாகும்.

கல்லெடுப்பு

அந்தக் காலத்தில் முகத்திலும் மார்பிலும் புண் ப்ட்டுப் போரில் இறத்தலை உயர்ந்த சாவாக-சிறந்த பேறாகக் கருதினர். போரில் இறந்தவர்களைக் கல் நட்டுக் கடவுளாக்கினர். அரச மரபினரோ, போர் மறவர்களோ போரில் புண்பட்டு இறவாமல் நோய் வாய்ப்பட்டு இறப்பின் அந்த இறப்பு தாழ்வாகக் கருதப் பட்டது. அதனால், போரில் புண்பட்டு இறவாமல் வேறு விதமாய் இறந்தவர்களையும். மார்பில் கத்தியால் கீறிக் காயம் உண்டாக்கிப் புதைத்து மேலேகல் நட்டனர். பண்டைக் காலத்தில் போர் அடிக்கடி நடைபெறும், அதனால், வீடுகள் தோறும் மறவர்கள் இருந்தனர். மாண்ட மறவர்க்குக் கல் நடும் பழக்கம், மற்றவர் அனைவருக்குமே கல் நடும் மரபாக மலர்ச்சி பெற்றது. அம்மரபு இந்தக் காலத்திலும் தொடர்கிறது. இப் போதும் இறந்து போனவர்க்கு இறுதிச் சடங்கு செய்யும் இடத்தில் ஒரு செங்கல்லோ மூன்று செங்கற்களோ நட்டுப் பொட்டு இட்டுப் பூச்சூட்டிப் படைக்கும் பழக்கம் பல குடும்பங்களில் உள்ளது. இதைத்தான் இக்கால மக்கள், கருமாதி-கல்லெடுப்பு என்கின்றனர். இம்முறையால், செத்தவர் எல்லாரும் தெய்வமாக்கப்படுகின்றனர் என அறியலாம்.

இத்தகைய கல் நாட்டு, கல்லெடுப்பு பற்றிய செய்தி. கள் இலக்கியங்களிலேயன்றிக் கல்வெட்டுகளிலும் கூறப் பட்டுள்ளன, வேண்டுமானால், இத்தகைய நடுகற் களைத் தமிழ்நாட்டில் தென்னார்க்காடு, வட ஆர்க்காடு சேலம், தருமபுரி முதலிய மாவட்டப் பகுதிகளிலும் மைசூர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இன்றும் காணலாம்.


வடக்கிருந்தோர் நடுகல்:

போரில் மாண்ட மறவர்க்கு நடுகல் எடுத்தல் போலவே, சிறந்த குறிக்கோள்களுக்காக வடதிசை நோக்கியமர்ந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தோர்க்கும் கல் நடும் மரபு அக்காலத்தில் இருந்தது. அதற்கு ஒர் எடுத்துக்காட்டு : கோப்பெருஞ்சோழன் என்பவன், இற்றைக்குச் (1988) சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டை ஆண்ட சோழமன்னன். அவன் தன் மைந்தருடன் மாறுகொண்டான். ஏதோ ஒரு குறிக் கோளுக்காக வடக்கிருந்தான். (வடக்கிருத்தல்=வட திசை நோக்கியமர்ந்து உயிர் போகும்வரை உண்ணா நோன்பு கொண்டிருத்தல்...) அவன்பால் பேரன்பு கொண்ட பொத்தியார் என்னும் புலவர் தாமும் அவ னுடன் வடக்கிருக்கச் சென்றார். அப்போது புலவரின் மனைவியார் நிறை சூல் கொண்டிருந்தார் போலும்! எனவே, பிள்ளை பிறந்த பின் வா எனக்கூறி மன்னன் புலவரை அனுப்பி விட்டான். பிள்ளை பிறந்தபின் புலவர் வருவதற்குள், மன்னன் மாண்டுவிட்டான். குறிக்கோள் வீரனான மன்னனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. பொத்தியார் வந்து மன்னனது நடுகல்லைக் கண்டு தமக்கும் இடம் கேட்டார். நடுகல் சிறிது விலகிக் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே புலவர்க்கும் இடம் கொடுத்ததாம். அஃதாவது பிறகு புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்திருக்கவேண்டும்-அவருக்கும் சோழனது நடுகல்லின் அருகிலேயே நடுகல் எடுத்திருக்கவேண்டும் என்பது புலனாகும்.

இச்செய்தியைப் புறநானூற்றுப் பாடல்கள் (221, 223) புலப்படுத்தும். அவை முறையே வருக:

‘வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலகம் அரங்தை தூங்கக்
கெடுவில் கல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (221)

‘பலர்க்கு கிழலாகி உலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடக்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட்பு உடையார் தம்முழைச் செலினே (223)

என்பன பாடல்கள். குறிக்கோளுக்காக உயிர் நீத்த கோப்பெருஞ் சோழனுக்குக் கல் எடுத்ததல்லாமல், நட்புக்காக உயிர் நீத்த புலவர் பொத்தியார்க்கும் கல் எடுத்தமை குறிப்பிடத் தக்கது. பொத்தியாரைப் போலவே, கோப்பெருஞ் சோழன் மாட்டுப் பெரு நட்பு கொண்டிருந்த பிசிராந்தையார் என்னும் புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்ததாக வரலாறு கூறுகின்றது.

கற்புக் கண்ணகி வழிபாடு

வீரத்துக்காகவும் உயரிய குறிக்கோளுக்காகவும் மாபெரு நட்புக்காகவும் உயிர் நீத்தோர்க்குக் கல் எடுத்ததல்லாமல், மறக்கற்புடைய மகளிர்க்கும் சிலை வைத்துக் கோயிலெடுத்து வழிபட்ட வரலாறு பண்டே நிகழ்ந் துள்ளது. ஒர் எடுத்துக்காட்டு:- தமிழ்நாட்டில் குற்ற மற்ற தன் கணவன் கோவலனைக் கொலை செய்வித்த பாண்டிய மன்னனோடு வாதிட்டு வழக்கில் வென்று இறுதியில் சேர நாடு சென்று கணவனது பிரிவாற்றாது உயிர் துறந்து மறக் கற்புடைய மகளாய் விளங்கிய கண்ணகி என்பவளுக்குச் சேரன் செங்குட்டுவன் என்னும் மன்னன் சிலை செய்து வைத்துக் கோயில் கட்டி வழி பட்ட வரலாறு தமிழ் மக்கள் அறிந்ததே. இவ்வரலாறு, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இக் காப்பியத்தின் மூன்றில் ஒரு பகுதியும் இறுதிப் பகுதியும் ஆகிய வஞ்சிக் காண்டம் முழுவதிலும் கண்ணகி வழிபாட்டு வரலாறே இடம்பெற்றுள்ளது. மன்னன் செங்குட்டுவன், இமயமலையிலிருந்து கல்வெட்டிக் கங்கை -யில் நீராட்டி, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய தனது சேர நாட்டிற்குக் கொண்டு வந்து சிலையாகச் செய்து நட்டுக் கோயில் எடுத்து வழிபட்டதாக வஞ்சிக் காண்ட வரலாறு கூறுகிறது. நடுகல் வழிபாடு தொடர்பாகத் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் கூறப்பட் டிருப்பதற்கு உரிய இலக்கியம் போலச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலும், காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப் படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம் தரு காதை (காதை-கதைப் பகுதி). என்னும் பகுதிகள் இடம் பெற்றிருப்பது எண்ணி இன்புறுதற்குரியது.

தமிழ் நாட்டில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டது போலவே, வேறு சில நாடுகளிலும் கண்ணகிக்குக் கோயில் எடுத்தனராம். இலங்கையில் கயவாகு மன்னன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த நூலின் மேலட்டைப் படத்தின் சிலை, இலங்கையில் உள்ளது. எனில், கண்ணகி வழிபாடு இலங்கையில் மிகவும் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது என்பதை அறியலாம். கண்ணகி முழுக் கடவுளாகச் சிலம்புக் காப்பியத்தில் ஆக்கப்பட்டுள்ளாள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டது போலவே, தன் தாய்க்கும். கோயில் கட்டி வழிபட்டானாம். பெற்றோருக்கும் சிறப்புச் செயல் புரிந்த மற்றோருக்கும் அவர்களை அடக்கம் செய்த இடங்களில் சிறு சிறு கோயில்கள் கட்டி வழிபடும் முறை இக்காலத்திலும் நடைபெறுகிற தல்லவா?


திரெளபதி வழிபாடு

செங்குட்டுவ மன்னன் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஊர்கள் பலவற்றிலும் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபாடு செய்யப் பெற்றது. வட இந்தியாவிலிருந்து பாரதக் கதை தென்னிந்தியாவில் பரவப் பரவ, கண்ணகியின் இடத்தைத் திரெளபதி பற்றிக் கொண்டாள். நாளடைவில் கண்ணகி வழிபாடு குறைந்து-பிறகு மறைந்து திரெளபதி வழிபாடு தமிழ். நாட்டில் பெரிய அளவில் பரவிற்று. பண்டொரு காலத் தில் வட இந்தியாவில் வாழ்ந்த பாண்டவ மன்னர்கள் ஐவர்க்கும் மனைவியாயிருந்தவள் திரெளபதி. அதனால் இவளை ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்று கூறுவர். ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனை மட்டுமே மணந்து கடைசி வரையும் கற்பு நெறி பிறழாதிருப்பதே தமிழ் நாட்டு மரபு. ஐவரை மணப்பினும் அழியாத பத்தினி என்னும் பெயர் பெறுவது வட இந்தியாவின் ஒரு பகுதி மரபு. தன் கணவன்மார் ஐவர்க்கும் பங்காளியும் பகைவனுமாகிய துரியோதனன் என்னும் பேரரசனை வீழ்த்தியதில் காட்டிய வீரம் பற்றியே திரெளபதி பத்தினித் தெய்வமானாள்; “திரெளபதி அம்மன்’ என்ற பெயருடன் கோயில் கட்டி வழிபடப் பெறுகிறாள். திரெளபதியம்மன் கோயில்கள் இந்தியாவில் ஏராளம்-ஏராளம். திரெளபதியம்மன் பெயரால் நடைபெறும் விழாக்கள் மிகப் பல. தெய்வம் பிறந்த வரலாறு இப்போது தெரியலாமே!


மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் என்னும் பெயரிலும் நாடெங்கும் கோயில்கள் உள. மாரியாத்தா என்ற பெயராலும் வழங்குவது உண்டு. அம்மன்-ஆத்தா என்றால் தாய் என்று பொருளாகும்; மாரி என்றால் மழையாகும். எனவே, மலழயைத் தந்து மக்களை வாழவைக்கும். தெய்வம் என்னும் பொருளில் மாரியம்மன், மாரியாத்தா என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை. கண்ணகியும் திரெளபதியும் போல மாரியம்மனும் மனிதப் பெண்ணே. திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகாவலி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது மற்றொரு கதை. சமதக்கிளி முனிவரின் மனைவி இரேணுகா தேவி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது வேறொரு கதை. இரேணுகாவின் மகன் பரசுராமன் தாய் செய்த ஒரு பெருங்குற்றம் பற்றி அவளைத் தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம்; எனவே சில இடங்களில் தலையை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்றாகும். இக்கதைகளை விரிப்பின் இன்னும் பெருகுமாதலின் இம்மட்டோடு விடுப்பாம் என்ன கதைகள் இவை! மழை தரும்படியாக வும் அம்மை (Small Pox) என்னும் நேர்யும் வாந்திபேதி ‘(cholera) என்னும் நோயும் வராமல் தடுத்துக் காக்கும் படியாகவும் மாரியம்மனை வேண்டி வழிபடுவது மக்கள் மரபாகும். மனிதர் தெய்வமாகும் வரலாற்றுக்கு இஃதும் ஒரு சான்றாகும்.

பூவாடைக்காரி வழிபாடு

திருமணம் ஆகிக் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டு கணவனுடன் வாழும் பெண்ணைக் கட்டு கழுத்தி’ (சுமங்கலி) எனல் தமிழர் மரபு. கணவனையிழந்த பெண்ணைக் கைம்பெண்’ எனல் மரபு. பெண் ஒருத்தி, கணவன் இருக்கும்போதே, கட்டு கழுத்தியாய் (சுமங்கலி யாய்) பூவுடனும் பொட்டுடனும் இறந்துவிடின், அவளுக்குப் பூவாடைக்காரி என்னும் பெயர் வழங்கிப் புதுப்புடவை எடுத்து வைத்துச் சிறப்பு உணவு வகைகள் செய்து ஆண்டுதோறும் படையல் போடுவது ஒரு சில குடும்பங்களின் மரபு. எங்கள் குடும்பத்தில் இஃது உண்டு. என் பாட்டியார் கட்டு கழுத்தியாய் இறந்து விட்டதால், அவருக்காக என் அன்னையார் ஆண்டுதோறும் ‘பூவாடைக்காரி வழிபாடு செய்து வந்தார்கள். பின்னர், என் தந்தையார் இறப்பதற்கு முன் அன்னையார் கட்டு கழுத்தியாய் இறந்துவிட்டதால் என் அன்னையாருக்காக என் மனைவி ஆண்டுதோறும் பூவாடைக்காரி படையல் போட்டு வழிபடுவது எங்கள் குடும்பத்தில் இன்றும் நடை பெற்று வருகிறது. செத்தவர் தெய்வமாகிறார் என்னும் கொள்கைக்கு இஃதும் ஒரு சான்று.

மாதா கோயில் வழிபாடு

பெருமைக்குரிய பெண்டிர் இறந்து விடின், அவருக்குக் கோயில் கட்டி வழிபடும் மரபு இந்து மதத்தில் மட்டும் உள்ளதன்று; இது கிறித்தவ மதத்திலும் உண்டு. ஏசுநாதரின் அன்னையாராகிய மரி-மேரி (Mary) என்னும் அம்மையாரை உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் வழிபடுவது கண்கூடு. கிறித்தவர்களின் கோயில் சர்ச்சு-church என ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. ஆனால், தமிழ் நாட்டில் அக்கோயில் “மாதா கோயில்” என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. மாதா என்பது ஏசுநாதரின் அன்னையாரைக் குறிக்கிறது. கிறித்தவர்கள் ஏசுநாதரை வழிபடுவது போலஅவருடைய அன்னை யாரை வழிபடுவது போலஅவருடைய தந்தையாராகிய சூசையப்பரையும் வழிபடுகின்றளர். யோசேப்பு-ஜோஸப் (Joseph)-ழொசே என்றெல்லாம் மொழிக்கு மொழி வேறு வேறு விதமாக அழைக்கப்படுபவர் தமிழில் சூசை - சூசையப்பர் என அழைக்கப் பெறுகிறார். இந்து மதத்தினர் ஏதாவது எழுதத் தொடங்குமுன், முருகன் துணை-வேலு மயிலுந் துணை-சிவமயம்-பூரீ ராம ஜெயம் - என்றெல்லாம் தலைப்பில் எழுதுவது போல, தமிழ் நாட்டுக் கிறித்தவர்கள் தலைப்பில் சேசு மரி சூசை துணை’ என்று எழுதுகின்றனர். சேசு = ஏசு நாதர்; மரி = அவர் தாயார்; சூசை = அவர் தந்தையார்.

மக்கள் கடவுளாக மதித்த் வழிபடுகின்ற இராமன், கண்ணன், புத்தர், ஏசு நாதர் போன்றோர் எல்லாரும் மக்களாய்ப் பிறந்து வாழ்ந்தவர் என்பதை மறந்துவிட முடியாது. இந்து மதத்தில், கன்னிமார், இயக்கி, காட்டேறி, இருசியம்மா-இருசியாத்தா, இரிசப்பன், சாத்தான், மாடசாமி, பாவாடை சாமி-பாவாடை ராயன் - பாவாடை, இடும்பன், மதுரை வீரன், முனியன், முனியண்டி-முனிசுவரன், மன்னார் சாமி, மாரி சாமி, காத்தவராயன் முதலியோர் சிறு தெய்வங்கள் எனப்படுவர். இவர்கட்கெல்லாம் சிலை வைத்தும் கோயில் எடுத்தும் வழிபாடு நடைபெறுகிறது. இவர்கள்,எல்லாரும் மக்களாய் வாழ்ந்து கடவுளாக மாறினவர்களே! மக்களாகிய இவர்கள் தெய்வங்களாக மாறினமை பற்றிய வரலாறுகன் பல உண்டு. ஈண்டு விரிப்பின் பெருகும். மதுரைவீரன் வரலாறு திரை ஒவியமாக (சினிமாவாக) எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள், மனித வீரன் ஒருவனே ‘மதுரை வீரன்’ என்னும் தெய்வமானான் என்பதை நன்கறிவர்.


  1.  அகநானூறு-களிற்றி யானை நிரை-35.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 12. மனிதரும் தெய்வம் ஆகலாம்


“மனிதரும் தெய்வம் ஆகலாம்” என்னும் தொடரில் உள்ள மனிதரும் என்னும் சொல்லில் உள்ள உம்மையின் பொருளை விளக்கப் பின்னே மூன்று செய்திகள் தரப்படும் :


ஒன்று: இற்றைக்கு (1988) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், கிரேக்க நாட்டில், டயோனியசு என்னும் பெரியார் ஒருவர் பட்டப் பகலில் கையில் விளக்கை வைத்துக் கொண்டு பலர் போகும் தெருவழியே ஏதோ தேடிக்கொண்டு சென்றாராம். அவரைக் கண்ட ஒருவர், பட்டப்பகலிலே கையில் விளக்கை வைத்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு அப்பெரியார், மனிதர் ஒருவராவது கிடைப்பாரா என மனிதன்ரத் தேடுகிறேன் என்று கூறினாராம்.


இரண்டு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவொற்றியூரில், நெல்லிக்காய்ப் பண்டாரத் தெருவில், உடையில்லாத அம்மணத் துறவி ஒருவர் ஒரு திண்ணையில் அமர்ந்துகொண்டு, தெருவே போகின்றவர் வருகின்றவர்களைப் பார்த்து, இதோ ஒரு நாய் போகிறது-இதோ ஒரு நரி போகிறது-இதோ ஒரு பன்றி போகிறது-இதோ ஒரு மிருகம் போகிறது-என்றெல் லாம் சொல்லிக் கொண்டிருந்தாராம், நடமாடிய மனிதர்கள் அவருக்கு மனிதர்களாகத் தெரியவில்லை. அங்கே நடமாடியவர்கள், இது ஏதோ ஒரு பைத்தியம்உளறுகிறது-என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்களாம். இந்தக் காலத்தில் அவ்வாறு கூறினால், துறவிக்கு அடி உதை கிடைக்கும்.


மூன்று: சைவ சமயச் சந்தான குரவர்கள் நால்வர் என்று கூறப்படுகின்றனர். மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார்-என்பவர்கள் அந்த நால்வராவர்.


இவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், தில்லை நடராசர் கோயில் பூசனை (பூஜை) புரியும் மரபினர். இவரை உமாபதி சிவம் என்றுதான் சொல்லவேண்டும். சிவாச்சாரியார் என்று சொல்வது தவறு என்று சிலர் சொல்கின்றனர். இதுதான் தவறு. சிவன் கோயில் பூசனை செய்பவர்களைச் சிவாச்சாரியார் என்று சொல்வது சைவ சித்தாந்த மரபு. இந்தச் சிவாச்சாரியார் ஒருநாள் தில்லைத் தெருவழியே பல்லக்கில் அமர்ந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்கு முன்னால், சிறப்பு மரபின்படிச் சிலர் தீவட்டி, கொடி முதலியன ஏந்திச் சென்றனராம். தெரு ஓரத்தில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் என்னும் அருளாளர், பட்ட கட்டையிலே பகல் குருடு ஏகுது காண்’ என்றாராம். பட்ட கட்டை என்பது பல்லக்கைக் குறிக்கிறது. பகுல் குருடு என்பது, பகலில் பிடித்துக் கொண்டு செல்லும் தீவட்டியைச் சாடுகிறது. இதைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் மெய்யறிவு பிறந்தவராய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி, மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவருக்கு மாணக்கராக (சீடராக) மாறினாராம். மேற்கூறிய மூன்று நிகழ்ச்சிகளையும் அறியும்போது மிக்க வியப்புணர்வு தோன்றுகிறது. கிரேக்க டயோனியசுக்கும் திருவொற்றியூர்த் துறவிக்கும் மனிதர்கள் மனிதர்களாகத் தெரியவில்லை. அதனால், அவர்கள் மனிதரைத் தேடுகிறேன் என்றும், நாய் போகிறது-நரி போகிறது என்றும் கூறியிருக்கின்றனர். இச்செய்திகளை அறியும்போது, ட்யோனியசும், ஒற்றியூர்த் துறவியும் உயர்ந்த உண்மைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார்கள் என அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது; பலர் அவர்களைப் பாராட்டவும் செய்கின்றனர்.


இங்கே நான் சொல்வது என்ன? டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் கூறிய கருத்து தவறானது; அவர்கள் உண்மையை உரைக்கவில்லை; பொய்யான கருத்தையே புகன்றுள்ளனர் என்பது என் கருத்து. இதற்கு உரிய விளக்கமாவது:-

கிரேக்க டயோனியசு உண்மையான மனிதர்கட்கு நடுவில் இருந்துகொண்டே, அவர்களை மனிதர்களாகப் புரிந்துகொள்ள முடியாமல், மனிதர்களைத் தேடுவதாகப் பொய்யான கருத்து புகன்றுள்ளார். ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாமல் விலங்குகள் எனத் தவறான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


யான் இவ்வாறு கூறுவது சிலர் அல்லது பலர்க்குத் திகைப்பாயிருக்கலாம். நான் சொல்லுவது என்ன? மனிதன் அயோக்கியன். அவன் இப்போது செய்யும் ஊழல்களை அப்போதும் செய்தான்-இனியும் எப்போதும் செய்ய இருக்கிறான். நல்ல பாம்பு எப்போதும் நல்ல பாம்பே மனிதன் எப்போதும் மனிதனே ஒரு நல்ல பாம்புக்கு நஞ்சு இருக்கிறதெனில், எல்லா நல்ல பாம்புகட்கும் அவ்வாறே இருக்கும். ஒரு மனிதன் ஊழல் செய்கிறான் என்றால், அந்த ஊழல் மனித இனத்தின் பொதுப்பண்பு-ஒருவனது ஊழலில் மனித இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பங்கு உண்டு, தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்தச் செகத்தினை அழித்திடுவோம்’ என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியிருப்பதின் உட்கருத்து, ஒரு மனிதனின் துன்பத்தில் மனித இனம் முழுவதற்கும் பங்கு உண்டு என்பதேயாம்.


எனவே, மனிதனிடத்தில் இப்போது உள்ளதற்கு மேல் மிகுதியான பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது. டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களையே பார்த்திருக்கின்றனர்-ஆனால், அவர்கள் மனிதரிடத்தில் தெய்வத் தன்மையை எதிர்பார்த்திருக்கிறார்கள். மனிதர் பொதுவாக எல்லாருக்கும் இருப்பதற்கும் மேற்பட்ட உயரிய பண்பை உடையவர்களாக விளங்கும்போது தெய்வத்தன்மை உடையவர்களாக மாறுகின்றனர். டயோனியசு மனிதரைத் தேடுகிறேன் என்று கூறாமல், மனிதர்க்கு நடுவே மனிதத் தெய்வத்தைத் தேடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.


மனிதர்களை நோக்கி நாய் போகிறது-நரிபோகிறது என்று கூறிய ஒற்றியூர்த் துறவி, அந்த வழியாக வடலூர் இராமலிங்க வள்ளலார் சென்று கொண்டிருந்த போது, அவரை நோக்கி, இதோ ஒரு மனிதர் போகிறார்’ என்று கூறினாராம். துறவி இவ்வாறு கூறாமல், இதோ ஒரு மனிதத் தெய்வம் போகிறது’ என்று கூறியிருக்க வேண்டும். இழிந்த பண்பினின்றும் படிப்படியாக விலகி உயர்ந்த பண்பைக் கடைப்பிடிக்கும் போது மனிதன் படிப்படியாகத் தெய்வ நிலைக்கு உயருகிறான். மற்ற மாந்தரினும் குறிப்பிட்ட சிலரிடம் உள்ள வியத்தகு பெருந்தன்மை அதாவது உயரிய பண்பு தெய்வத் தன்மை என் னும் பெயர் பெறுகிறது. அதை உடையவர் தெய்வமாக மதிக்கப் பெறுகிறார். இந்த அடிப்படையிலேயே வடலூர் இராமலிங்க வள்ளலார் தெய்வத் தன்மை பெற்றவராக மதிக்கப்படுகிறார். செருக்கான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த உமாபதி சிவாச்சாரியார், அந்த நிலையி லிருந்து கீழ் இறங்கி வந்து உயரிய அருளாளராக மாறியதும் தெய்வத் தன்மை அடைந்தவராகப் போற்றப்படுகிறார்.


பல்லைப் பிடுங்கிய பாம்பும், சர்க்கசு காட்சியில் வரும் யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய பழக்கப் படுத்தப்பட்ட விலங்குகளும் பிறர்க்குத் தீமை செய்யாதனவாய் இருப்பது போல், பண்படுத்தப்பட்ட மனிதன் மனிதத் தன்மையிலிருந்து தெய்வநிலைக்கு மாறுகிறான். நம்மால் வழிபடப்படுபவர்கள், இவ்வாறு, மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்தவர்களே.


‘மனிதரும் தெய்வம் ஆகலாம் என்ற தலைப்புக்கு இப்போது வருவோம். மனிதரும் என்பதில் உள்ள உம்மை இழிவு சிறப்பு உண்மையாரும். அதாவது மனிதரின் இழிவை-மட்டமான தன்மையை உணர்த்துவதாகும். அத்தகைய மட்டமான மனிதனும் உயரிய தெய்வம் ஆகலாம் என்பதையே, இந்தத் தலைப்பு அறி வுறுத்துகிறது. இத்தகைய மனிதத் தெய்வங்கட்குக் கோயில் எடுத்து வழிபடுகின்றோம்.


இது காறும் கூறியவற்றால், தெய்வங்கள் எல்லாம் மனிதர்களே என்பது புலனாகலாம். இதற்கு இன்னும் விளக்கமான சான்று வேண்டுமா? சரி, இதோ :


பெயர் பெற்ற பல திருக்கோயில்கள், பெரியார்களைப் புதைத்த, அடக்கத்தின் மேல் எழுந்தவையே! அடக்கத் தைச் (சமாதியைச்) சுற்றி எழுந்தவையே! பழநி மலைக் கோயிலில் போகர் என்னும் சித்தர் அடக்கம். திருவாவடுதுறைக் கோயில் பகுதியில் திருமூலர் என்னும் தவயோகி அடக்கம். மயிலம் மலைக் கோயிலில் பாலய சித்தர் அடக்கம். நாட்டரசன் கோட்டை என்னும் ஊரில் கம்பர் என்னும் பெரும் புலவரின் அடக்கத்தின் மேல் சிவலிங்கச் சிலை வைத்துக் கோயிலும் எழுப்பியுள்ளனர். இப்படியே இன்னும் பல சொல்லிக் கொண்டு போகலாம். இந்து மதத்தினர் என்றென்ன மற்ற மதத்தினரும் பெரியார்களின் அடக்கத்தை மதித்துப் போற்றுகின்றனர். மனிதர்க்குள் முதன்மையான நேர்மையாளன் எவனோ - அவனே கடவுள் - அவன் தான் எங்கள் அருகக் கடவுள்’ - என்பது ஒரு சார் சைன சமயக் கொள்கையாகும். எனவே, மனிதரும் தெய்வமாகலாம் என இழுபறியாகச் சொல்ல வேண்டியதில்லை; மனிதரே தெய்வம் என அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லலாம்.


இப்போது உலகினர் வழிபடும் கடவுளர் பட்டாளத்துள் பெரும்பாலான கடவுளர்கள் பெற்றோர்க்குப் பிள்ளையாயிருந்து வளர்ந்து வாழ்ந்தவர்களே. புத்தர் பிறந்தவர்; ஏசுநாதர் பிறந்தவர்; இராமர் பிறந்தவர்; கண்ணபிரான் பிறந்தவர். முருகனும் மூத்தபிள்ளையாரும் (விநாயகரும்) சிவன்-சிவை (பார்வதி) ஆகியோரின் பிள்ளைகளாம். இந்து மதத்தினர் சிறப்பாக வழிபடும் மூன்று தெய்வங்களுள் (மும்மூர்த்திகளுள்) நான்முகன் (பிரமன்) திருமாலின் (விஷ்ணுவின்) பிள்ளையாம். திருமாலோ பத்துப் பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தவர் எத்தனையோ பெற்றோர்ர்குப் பிள்ளையாகப் பிறந்தவர் எனப் புராணங்கள் புகலுகின்றன. நான்முகனும் திருமாலுமே பிள்ளைகளாய்ப் பிறந்தவர்கள். எனில், நான்முகன் மனைவி கலைமகளைப் பற்றியும் திருமாலின் மனைவி திருமகளைப் பற்றியும் பேசவேண்டியதில்லை. மும்மூர்த்திகளுள் இவ்விருவரும்போக மூன்றாமவராகிய சிவன் மட்டும் யாருக்கும் பிள்ளையாய்த் தோன்றி வளர்ந்து வாழவில்லையாம். ஆனால், சிவனுடைய மனைவி எனச் சொல்லப்படும் சிவை வெவ்வேறு காலத்தில், பர்வதராசன் மகள் (பார்வதி) ஆகவும், தட்சனுடைய மகள் (தாட்சாயணி) ஆகவும், மீனக் கொடியுடைய பாண்டிய மன்னனின் மகள் (மீனாட்சி) ஆகவும் தோன்றியுள்ளாள் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவன் மட்டும் எவருக்காவது பிள்ளையாய்த் தோன்றியதாக எந்தப் புராணமும் கூறவில்லை என்றே தோன்றுகிறது.

தயிழ் மொழியில் ‘பிள்ளைத் தமிழ்” என்னும் ஒருவகை நூல் உண்டு. அஃதாவது: ஏதாவது ஒரு தெய்வத்தையோ சிறப்புறச் செயல் புரிந்த பெரியாரையோ சிறு பிள்ளையாகக் கற்பனை செய்து கொண்டு, அந்தப் பிள்ளையின் இயக்கத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் (பத்துப்பத்து) நூறு பாடல்களைத் தமிழ்மொழியில் பாடியுள்ள நூலுக்குப் ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிவனைத் தவிர மற்ற தெய்வங்கள் பிள்ளையாய்த் தோன்றியிருந்தது உண்டாதலின், அத்தெய்வங்களின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு. சிவன் மட்டும் எவருக்கும் பிள்ளையாய்த் தோன்றாமையினால், அத்தெய்வத்தின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு அன்று.

இது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இளமையில் சைவ சித்தாந்தியாயிருந்த யான், சைவத்தின் மேல் சமயம் வேறில்லை, அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறொன்றும் இல்லை’ என்று இறுமாப்புடன் வாதிட்டுப் பேசுவது . வழக்கம். சைவ சமயத்தின் தலைமைப் பெருமையைப் பரப்புவதை எனது பத்தொன்பதாவது வயதிலேயே தொடங்கிவிட்டேன். சிவன் ஒருவ்னே பிள்ளையாய்ப் பிறக்காத தெய்வம். செத்துப் பிறக்கின்ற-பிறந்து சாகின்ற தெய்வங்களுக்கெல்லாம் தலைவன் சிவனே என்று யான் அப்போது பேசுவது வழக்கம்.


எனது இருபதாவது வயதில் ஒரு திங்கள் கிழமையில் (Monday)தலை முழுகுவதற்காக யான்வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். “சனி நீராடு என்னும் ஒளவையின் அறிவுரைப்படி, எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைச் சனிக்கிழமை தோறும் உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிப்பது தமிழ்நாட்டு மரபு. சனிக்கிழமைத் தலை முழுக்கு தவறி விட்டதால், அடுத்து வந்த திங்கட் கிழமையில் யான் வழக்கத்து மாறாக எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மடுகரை என்னும் ஊரிலிருந்து, எண்பது வயதுக்குமேல் முதிர்ந்த பெரியவர் ஒருவர். எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை நோக்கி, ஏன் தம்பி இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்கிறாய்? என்று வினவினார். இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டால் என்ன தவறு? என்று யான் பதிலுக்கு வினவினேன். இன்றைக்கு என்ன கிழமை? என்று கேட்டார் அவர். “திங்கள் கிழமை என்றேன் நான். திங்கள் கிழமை யில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?[1] என்று அவர் வினவினார். திங்கள் கிழமையில் தேய்த்துக்கொண்டால் என்ன? என்று கேட்டேன் நான். திங்கள் கிழமை சிவன் பிறந்த நாளாயிற்றே-சைவ சமயத்தவர்களாகிய நாம் திங்கள் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?-கூடாதே’ என்றார். அவர். உடனே யான், சிவன் கூடப் பிறந்தவர்தானா? என்று வியப்புடனும் வேதனையுடனும் வினவினேன். ஆமாம்.-ஆமாம் என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் அறைந்தார் அம்முதியவர். திங்கள் கிழமைகளில் சோம வார விரதம் என்ற பெயரில் சிவனுக்காக நோன்பு இருப்பது உனக்குத் தெரியாதா? என்றும் கேட்டு விட்டார் அப்பெரியவர். உடனே எனக்கு நாடி ஒடுங்கிவிட்டது. சிவன் கூடப் பிறந்தவர்தான் போலும்: என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது எனது வாய்.

இதனால், சிவனும் பிறந்தவரே என்பது தெளிவாயிற்று. சிவன் தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத முழுமுதற் கடவுள் எனச் சைவ சமய ஆத்திகர்கள் கூறுவர், ஆனால். மடுகரை முதியவர், பழுத்த ஆத்திகராயிருந்து கொண்டே ‘சிவனும் பிறந்தவர்’ என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் வேண்டும். எனவே, சுடவுளர்களாகக் கருதி வழிபடப்படுவோர் அனைவரும் மாந்தர்களே என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். சிவன், திருமால் பிரமன் போன்றோர். காலம் கணக்கிட்டுக்கூற முடியாத மிகப் பழங்காலத்திலே பிறந்து வாழ்ந்தவராக இருக்கக் கூடும்.

சைன சமயத்தவர் வழிபடும் சிவனும் பெளத்த சமயத்தினர் வழிபடும் புத்தரும் போன்றோர் காலம் கணக்கிட்டுக் கூறக்கூடிய பிற்காலத்தவர் என்பது அறிந்த செய்தி. கடவுளரின் பட்டியலைக் கூறவந்த மண்டல புருடர் தமது சூடாமணி நிகண்டு நூலின் பதினோராவது-ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி ககர எதுகை என்னும் பகுதியில்

பகவனே ஈ சன் மாயோன்
பங்கயன் சினனே புத்தன்

எனக் கூறியுள்ளார். பகவன் கடவுள். ஈசன் - சிவன். மாயோன்-திருமால். பங்கயன் - பிரமன். சினன்-சைனர் கடவுள். புத்தன் பெளத்தர் கடவுள். இந்த ஐவரையுமே மண்டல புருடர் சமனாக ஒரே ஏரில் கட்டியுள்ளார். இவர்களுள் சிவன் பிறப்பால் முற்பட்டவர் எனவும் புத்தர் பிறப்பர்ல் பிற்பட்டவர் எனவும் கொள்ளல் தகும், சைன சமயத்தவராகிய மண்டல புருடர், நடுநிலை பிறழாது, கால (Seniority) முதன்மையின்படி பட்டியல்படுத்தியுள்ள அழகு பாராட்டத்தக்கது. சினனுக்குப் பிற்பட்டவரே புத்தர் என்பது வரலாறு. இவர்களைப் போலவே அரும்பெருஞ் செயல்கள் புரிந்த பெரியார்களைக் கடவுளாக வழிபடும் மரபு இன்று வரையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இற்றைக்கு (1988) முன்னே சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்களாகிய நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களுக்கும், ஆழ்வார்கள் எனப்படும் வைணவ அடியார்களுக்கும், கோயில்களில் சிலை வைத்து வழிபாடு செய்து வருவதை மக்கள் அறிவர். வேறு சில மதங்களிலும் இம்மரபு உண்டு.


சிலைவைக்கும் வழக்கம்:

கடவுள் அடியார்கட்கும் அரசர்கட்கும் அவர்கள் இறந்தபின் சிலை வைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இக்காலத்தில், இலக்கியம், நுண்கவின் கலைகள், அரசியல், சமூகப் பணி முதலியவற்றுள் எந்தத் துறையில் அரும்பெருஞ்செயல் புரிந்தவர்க்கும் சிலை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

அக்காலத்தில் ஒருவர் இறந்த பின்பே அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. இக்காலத்திலோ, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே வைக்கும் அளவுக்குச் சிலை வைக்கும் வழக்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக் காலத்தில் இறந்த பின்பே சிலை வைப்பு நிகழ்ந்தது என்ப தற்கு ஒரு சான்று வருமாறு :


முன்னொரு காலத்தில் அயோத்தி நகரைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டைத் தசரதன் என்னும் பேரரசன் ஆண்டான். அவனுக்கு, இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தனர். அரசியல் சூழ்நிலை காரணமாக இராமனும் இலக்குவனும் காட்டுக்குப் போய் விட்டனர். மன்னனுக்கு மூத்த பிள்ளை இராமன் மீது பற்று மிகுதி. அவனது பிரிவாற்றாமையால் தசரத மன்னன் இறந்து விட்டான். பரதன் என்னும் மகன் கேகய நாட்டிலிருந்து கோசல நாட்டுக்குத் திரும்பினான். தந்தை தசரதன் இறந்து போனது பரதனுக்குத் தெரியாது: பரதன் அரண்மனை வாயிலுக்குள் புகுந்து உள்ளே போய்க்கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு பகுதி அவன் கண்ணுக்குத் தென்பட்டது. முன்னர் இறந்து போன மன்னர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதி தான் அது. அந்தப்பகுதியில் தந்தை தசரதனது சிலையும் வைக்கப்பட்டிருந்ததைப் பரதன் கண்டு திடுக்கிட்டான். தந்தை இறந்து விட்டார் போலும் என்று முதலில் ஐயுற்றான்.பின்னர் மற்றவரை வினவி உண்மையறிந்து அழுது அரற்றினான்.இது, ‘பாசகவி’ என்னும் கவிஞர் இயற்றிய பிரதிமா என்னும் சும்சுகிருத நாடகத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி.


இவ்வரலாற்றால், இறந்தவர்க்கே சிலை வைக்கும் வழக்கம் அக்காலத்தில் மரபாக இருந்தது என்பது புலனாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில், இறந்தவர்- இருப்பவர்-எல்லாருக்குமே சிலை வைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிலைகளாக நிற்பவர்கட்குள் யார் யார் எதிர் காலத்தில் கடவுளர்களாக மாற இருக் கின்றார்களோ - தெரியவில்லை.

இதுகாறும் பல்வேறு கோணங்களில் நின்று விளக்கிய சான்றுகளால், கட்வுள் என்பது ஒருவகைக்கற்பனைப் படைப்பே-அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய ஆன்றோர் களே கடவுளர்களாக ஆக்கப்பட்டனர்-அவர்கட்கு முன்பு, பல்வேறு இயற்கைப் பொருள்களே கடவுள்களாக வழிபடப்பட்டன-நாளடைவில் கடவுள் வழிபாடு படிப் படியாக வளர்ந்து, இப்பொழுது உள்ள பெரிய நிலையை அடைந்துவிட்டது-என்னும் உண்மை தெளிவாகும்.

வழிபாடு :

இப்போது மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் வணக்கம் செய்து கொள்கின்றனர். உயர்ந்த பண்பாளர்கள் தாழ்ந்த இயல்பினரைக் கண்டாலும் முறைப்படி வணக்கம் செய்கின்றனர். இதுவே இப்படி என்றால், தெய்வமாக மாறியவர்களை- மனிதத் தெய்வங்களை வணங்குவதில் தவறு ஏதும் இல்லை. அந்தத் தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதும் தவறு இல்லை. ஆனால், வழிபாடு என்னும் பெயரில், ஆரவாரச் செயல்களும் செலவுகளும் வேண்டா. வழிபாடு ஒன்றே போதும். அத்தெய்வங்களாக உயர்ந்தவர்களிடத்தில் இருந்த உயர் பண்பை, வழிபடுபவர்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். பக்தி என்னும் பெயரால் வழிபடும் பலரிடத்தில் பண்பு இல்லை. பக்தியினும் உயர் பண்பே இன்றியமையாதது. கடவுள் வழிபாடு செய்து கொண்டே இழி செயல்கள் புரிபவர்களினும், கடவுள் வழிபாடு செய்யாமல் உயரிய செயல்கள் புரிபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். கடவுள் வழிபாட்டின் நோக்கமும் பயனும் உயரிய நெறியில் நின்று ஒழுகி உயர் நிலை பெறுவதாகும்; அதுவே வீடுபேறு ஆகும்,


  1.  ஆத்திசூடி-16

கருத்து வழங்கிய கருவூல நூல்கள்


(குறிப்பு : முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும்.

2-மலரும் மாலையும்-கோவில் வழிபாடு-1 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

7-நல்வழி 34-ஒளவையார்

8-மணிமேகலை- : 70, 71-சீத்தலைச் சாத்தனார்,

9.புறநானூறு-194 - பக்குடுக்கை நன்கணியார் -

12-பாரதியார் பாடல்-பாரத மக்களின் தற்கால நிலைமை -1- சுப்பிரமணிய பாரதியார்

25-திருக்குறள்-169 திருவள்ளுவர்

திருக்குறள்-619, 620-திருவள்ளுவர்

29-கொன்றை வேந்தன்-16-ஒளவையார் 2

9-திருக்குறள்- 850 - திருவள்ளுவர்

44-திருவாசகம்-4 : 47-மாணிக்க வாசகர்

44-சைவ சமய நெறி-பொது-408 உரை-மறைஞான சம்பந்தர் 44.காஞ்சிப் புராணம்-கழுவா. 208-சிவஞான முனிவர்

45-திருக்குறள்-கடவுள் வாழ்த்து-2

48-திருநாவுக்கரசர் தேவாரம்-பொது

49.திருவாய் மொழி-3-5-10-நம்மாழ்வார்

49-திருவாசகம்-திருச்சதகம்-46-மாணிக்க வாசகர்

50-நீதிநூல்-வேதநாயகம் பிள்ளை

60-திருமந்திரம்-115-திருமூலர் -

60-தாயுமானவர் பாடல்

65-மலரும் மாலையும்-கோவில் வழிபாடுகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

66-பட்டினத்தார் பாடல்-பொது-6

67-சிவ வாக்கியர் பாடல்-520

71-திருமந்திரம்-724-திருமூலர்

73-பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்-177, 178 சேக்கிழார்

81-திருவாசகம்-ஆசைப்பத்து - 2 - மாணிக்க வாசகர்

82-சீவக சிந்தாமணி-கனக மாலையார் இலம்பகம்--21-திருத்தக்க தேவர்

82-பாகவதம்-5, 2 : 31-செவ்வைச் சூடுவார்

84-பெரிய புராணம்-தடுத்தாட் கொண்டபுராணம்-106 - சேக்கிழார்

85-திருமந்திரம்-2290-திரு மூலர்

86-திருக்குறள்-1316-திருவள்ளுவர்

95-புறநானூறு-18-குடபுல்வியனார்

95-பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

97-திருக்குறள்-271-திருவள்ளுவர் 99-திருவாசகம்-4 : 56, 57 - மாணிக்க வாசகர்

தொல்காப்பியம்-பெயரியல்-1-தெல்காப்பியார் 104-புறநானூறு-260-வடமோதங்கிழார்

104-அகநானூறு-297-மதுரை மருதனிள நாகனார்

107-சிலப்பதிகாரம்-மங்கல வாழ்த்துப் பாடல் இளங்கோவடிகள்

114-புறநானூறு-335-மாங்குடி கிழார்

115-புறம் 70-கோவூர் கிழார்

115-நாலடியார்-62 - சமண முனிவர்

115-திருக்குறள்-64-திருவள்ளுவர்

116-சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்த் தொகுதி-78-திவாகரர்

116-திருக்குறள்-381, 554-திருவள்ளுவர்

சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்கத் தொகுதி-908

117-வேமன்னபத்தியம்-அன்னரசம்-467, 469-வேமன்னர் * - 123-தொல்காப்பியம்-புறத்திணையியல் -5 தொல்காப்பியர்

124-புறப்பொருள் வெண்பாமாலை-பொதுவியற் படலம்-1-ஐயனாரிதனார் -

125-அகநானூறு-மணிமிடை பவளம்-131-மதுரை மருதனிள நாகனார்

126-புறநானூறு-232-ஒளவையார்

127-புறநானூறு-260-வடமோதங்கிழார்

127- " - 261-ஆவூர் மூலங்கிழார்

128- " - 263-(புலவர் பெயர் தெரியவில்லை)

128- "- 264-உறையூர் இளம்பொன் வாணிகனார்

129- " - 305-அள்ளுர்நன் முல்லையார்

129- " - 329-மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 130-புறம் - 335-மாங்குடிகிழார்

130-திருக்குறள்-771-திருவள்ளுவர்

131-மலைபடுகடாம்-387 - 89-இரணிய முட்டத்துப் பெருங் குன்றுார்ப் பெருங் கெளசிகனார்

132.அகநானூறு-35 - அம்மூவனார்

133-பதிற்றுப் பத்து-5-பதிகம்-3-பரணர்

133-அகம் 53 - சீத்தலைச் சாத்தனார்

133- , - 289-எயினந்தை மகன் இளங்கீரனார்

134.297-365-187-மதுரை மருதனிள் நாகனார்

136-புறநானூறு-306-அள்ளுர் நன்முல்லையார்

138-புறம்-221-123-பொத்தியார்

152-ஆத்திசூடி-16-ஒளவையார்

153-சூடாமணி நிகண்டு- ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி-ககர எதுகை-1 மண்டல புருடர்

155-பிரதிமா (வடமொழிநூல்)-பாசகவி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard