Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் இறைக் கொள்கை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவரின் இறைக் கொள்கை
Permalink  
 


 

திருவள்ளுவரின் இறைக் கொள்கை

Image result for thiruvalluvar painting

திருவள்ளுவரின் இறைக் கொள்கை

திருவள்ளுவரின் திருக்குறள் சாதி, சமயம், இனம், மொழி கடந்து காலத்தை வென்று நிற்கும் நூல். பல சமயத்தினரும் தம்தம் மறைநூல் என மதித்துப் போற்றும் ஒப்பற்ற அறநூல். உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இறைமைக் கோட்பாடுகளைக் கூறிப் பிணக்கில்லாப் பெரும்பயன் விளைவிக்கும் சிறந்த நூல். திருக்குறள் உலகப் பொதுமறையாய், உயர்வேதமாய்க் கருதப்படுகின்றது.

வள்ளுவரின் இறைக் கொள்கை யாது? கடவுள் வாழ்த்து இடைச் செருகலா? பிற்காலச் சமய நம்பிக்கையினர் புனைந்துரைத்ததா? கடவுள் வாழ்த்து இடைச் செருகலன்று. வள்ளுவர் இறைமையில் நம்பிக்கையுடையவர். திருவள்ளுவரின் இறைவன், உருவ மற்றவன். திருவடிகளாகக் காணப்பட வேண்டியவன்.

“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

     பகவன் முதற்றே உலகு”       (1)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகமும் கடவுளை முதலாக உடையது. அகரம் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம். அகரமின்றி ஒலி பிறக்காது. பிறவொலி பிறப்பதற்கு அகரம் துணையாகின்றது. அகரம் ஒவ்வோர் எழுத்திற்கும் உடன் துணையாக நின்று உதவுவது. எல்லாப் பேச்சு ஒலிகளுக்கும் அகரம், முதலும், துணையும், முடிவும் ஆக நிற்பது. அதுபோல, வையகமும் எல்லா உலகங்களும் நிறைந்த வானகமும் இறைவனடியாகத் தோன்றி, இறைவன் துணையால் காக்கப் பெற்று, இறைவனால் ஒடுங்கும் என்ற உண்மையையும் இவ்வுவமையால் அறிய முடிகின்றது. இறைவனே மூலமும், முதலுமாய் இருக்கின்றான் என்ற உண்மையை அறிவியல் கண்ணோட்டத்தோடு அகரம் என்ற உவமையால் அழகுற எடுத்துக்காட்டுகின்றார் வள்ளுவர். எழுத்துக்கெல்லாம் அகரமே முதலாகும். அதுபோல, உலகனைத்துக்கும், ஐம்பூதங்களுக்கும் முதலாகும் ஆதி பகவன் தனக்குத் தானே முதலாகும்.

வாழ்வு இனிமை மிக்கதாய், இன்பம் நிறைந்ததாய், உடல் நலமும், உள்ள நலமும் பெற்று, உள்ளம் மகிழ்வும் அமைதியும் நிறைந்ததாய் நிறைவாழ்வு வாழ அனைவரும் விரும்புகின்றோம். நடைமுறை வாழ்வில் நாம் விரும்பியபடி வாழ முடிகின்றதா?

வாழ்வில் இன்பம் எவ்வளவு இயற்கையோ அதுபோலத் துன்பமும் துயரும் இயற்கை. இன்பமும், துன்பமும் இரவும் பகலும் போல் மாறி மாறி வரும். யாரும் துன்பத்திலிருந்து, கவலையிலிருந்து தப்பிக்க முடியாது. தோல்வியும், ஏமாற்றமும், சோர்வும், அச்சமும் நேரும்போது, ‘வாழ முடியுமா?’ என்று கலங்கும்போது, உயராற்றலுடைய இடையூறுகளை, இடுக்கண்களை அழிக்கும் மேலான, எல்லா வல்லமையும் நிறைந்த, ஆற்றல் மிக்க உயர்துணையை, உயிர்த்துணையை நம்பிக்கையோடு நாடுகின்றோம். “இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627) என்ற நம்பிக்கை, இறைவனைத் துணைக் கொண்டால்தான் முடியும். தொடர் நினைவின் வலிமை தரும் நம்பிக்கை நமக்கு ஆற்றலைத் தருகின்றது; ஆறுதல் தருகின்றது; கவலையைப் போக்குகின்றது. எவ்வகையாலும் தனக்கு நிகரில்லாத அருளாளன் தாளைச் சேர்ந்தார்க்கு அல்லாது மனத்தின்கண் நிகழும் எல்லாத் துன்பங்களையும், துயரங்களையும் நீக்கவியலாது.

ஏழை, எளியவர், துன்பமும், துயரும் உடையவர் மட்டுமன்றி, ஆற்றலும், பெருமையும் மிக்க அரசாள்பவர் களும், முற்றும் துறந்த துறவியர், பெருஞ்செல்வர்கள், அறிஞர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள், வலிமை மிக்கவர் என அனைவரும் தங்கள் நிலையிலிருந்து தாழாது வாழவும், மேலும் மேலும் உயரவும், எதிர்பாராத விபத்து, ஆபத்துக்கள், மனத்தில் தோன்றும் அச்சங்கள் இவை களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், எல்லா மனக்கவலைகளை மாற்றிடவும் இறைவன் துணையை நாடுகின்றனர். கடவுளை மறுப்பவர்களும் உயிரச்சம் ஏற்படும்போதும், பதவியிழக்க நேரிடும்போதும் தங்களைக் காத்துக் கொள்ளப் பெரும் நம்பிக்கையோடு இறைவனை இரகசியமாகப் பற்றிக் கொள்கின்றார்கள்.

முதலில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், காலம் மாறும் போது, துன்பங்கள், துயரங்கள் அடுக்கடுக்காய் நேரிடும்போது, நோய்களால் பாதிக்கப்படும்போது, தாழ்வு நேரும்போது, நண்பர்களால், உறவினர்களால் கைவிடப் படும்போது, தனக்கு நிகரில்லாதவன் தாளைப் பற்றிக் கொள்கின்றார்கள். அறிவின் துணை மட்டும் கொண்டு நாத்திகம் பேசுகின்றவர்களும், துன்பங்கள் பேரிடியாகத் தாக்கிப் பேரிடர் ஏற்படும் போது, இதயத்தால் உணர்ந்து உண்மை அனுபவத்தால் தெளிவுபெற்றுத் தங்கள் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட வாலறிவனின் அற்புத ஆற்றலை உணர்ந்து மாற்றம் பெறுகின்றார்கள். மனக்கவலையை மாற்ற வல்லவன் எல்லா வல்லமையும் நிறைந்த இறைவனே என்று உணர்கின்றனர்; இயற்கையின் பேராற்றலை உணர்கின்றனர்.

“தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் வீற்றிருக்கின்றான். இறைவன் தூயவர் உள்ளத்தில் மாட்சியுடன் ஆட்சி செய்கின்றான். இறைவன் என்றால் எங்கும், எதிலும் நிறைந்து தங்கியிருப்பவன் என்று பொருள். கடவுள் என்றால் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்தும் கடந்தும், எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருக்கும் இறைவன் பெரும் கொடைஞன்; பேரருள் மிக்கவன். வேண்டத்தக்கது அறிந்து வேண்டுவன எல்லாம் நல்குபவன்; வேண்டிய வேண்டியாங்கு செய்தலால் செய்தவம், ஈண்டு முயலப்படும். இறைவனை நோக்கி முயன்று தவம் செய்தால், இடைவிடாது உழைத்தால் வேண்டியதை வேண்டியபடி பெறலாம் என்று வள்ளுவர் உறுதியளிக்கின்றார்.

‘மலர்மிசை ஏகினான்’ என்பது பரிமேலழகர் கருத்துப்படி அன்பால் நினைப்பவரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைத்த வடிவோடு சேறலே ஆகும். அன்பாய் நினைப்பவர் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய இறைவனை வழிபடுவோர் இம்மையிலும் நீடுவாழ்ந்து, மேலுலகிலும் நலம்பெற்று வாழ்வர். நிலமிசை, மிசைநிலம் என்று மாற்றிப் பொருள் கண்டால் நிலமிசை என்பது இம்மை உலகில் என்றும், மிசைநிலம் என்பது மேலுலகில் எனவும் பொருள் தரும்.

இறைவன் எல்லாவற்றுள்ளும் நிறைவுள்ளவன். அதனால் தனக்கு எதிலும் வேண்டுதல், வேண்டாமை, விருப்பு, வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்கு என்றும் துன்பங்கள், துயர்கள் தோன்றா.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

     யாண்டும் இடும்பை இல”      (4)

இறைவன் ஐந்து அவாக்களும் நீங்கப்பெற்றவன்; ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; இறைவன் தன்னை வழிபடுவோரின் ஐந்து புலன்களின் வழியாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துபவன் அத்தூயவனது உண்மையான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவார் நீடிய புகழுடன் வாழ்வர்.

இறைவனின் நல்லியல்புகளைப் பின்பற்றி ஒல்லும் வகையால் அறவினை செய்வோரிடம், புகழ்மிக்க நற்பணி ஆற்றுபவர்களிடம் அறிவை மயங்கச் செய்யும், செருக்கை ஏற்படுத்தும் நல்வினையும் தீவினையும் சேரா.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

     பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”        (5)

இறைவன் பொறிவாயில் ஐந்தவித்தான்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் இல்லாதவன்.

ஒழுக்கமே கடவுள் தன்மையை வளர்ப்பது

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

     உயிரினும் ஓம்பப் படும்”            (131)

ஒழுக்கமே உயிர். பொய்தீர் ஒழுக்க நெறியே வள்ளுவர் போற்றும் உயர்வாழ்வு. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. நல்லொழுக்கம் நல்லறமாகிய விளைச்சலுக்கு விதைக்கப் படும் விதை. தீய ஒழுக்கம் அப்பொழுது மட்டுமன்றி எப்பொழுதும் தீராத துன்பம் தரும். ஒழுக்க நெறி வாழ்தலே தெய்வ வாழ்வு; இன்ப வாழ்வு; இனிய வாழ்வு.

‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தில் வள்ளுவர் அறத்தின் ஆற்றலையும், பெருமையையும் விரிவாகக் கூறுகின்றார். சிறப்பாகிய வீடுபேற்றையும், செல்வச் செழிப்பையும் வழங்குவது அறநெறியாகும். இவ்வறத்தைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“அறத்தான் வருவதே இன்பம்;மற்று எல்லாம்

 புறத்த புகழும் இல”               (39)

அறச்செயலால் வருவதே இன்பம். அறச்செயலே புகழ் தரும். அறத்திற்கு மாறானது இன்பம் தந்தாலும், துன்பம் ஆகும்; புகழையும் பெருமையையும் கெடுக்கும்.

அறக்கடவுள் நன்மை செய்பவருக்கு நன்மையையும், புகழையும், இன்பத்தையும் நல்குவார். தீமை செய்பவரை, அறவாழியாகிய படைக்கலம் அழிக்கும்; தீயோரை ஒடுக்கும்; ஒறுக்கும்.

“என்பு இலதனை வெயில்போலக் காயுமே

     அன்பு இலதனை அறம்”       (77)

“மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்

     அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” (204)

அறக்கடவுளாகிய இறைவன் மறத்தை, தீமையை அழித்து, நன்மையாகிய அறத்தைக் காப்பான். அறக் கடவுளாக விளங்கும் அந்தணனாகிய இறைவன் அடி போற்றி நடப்பவர், மற்றைப் பொருளும் இன்பமுமாகிய கடல்களை இறைவன் துணைகொண்டு எளிதாகக் கடந்து செல்வர். மற்றவர் பிற துன்பக் கடலில் இருந்து மீளமுடியாது துன்புறுவர்.

‘எண்குணத்தான்’ என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல்வேறு பொருள் கூறுகின்றார்கள். பரிமேலழகர், பரிதியார், மணக்குடவர் ஆகியோர் எட்டுக் குணங்களை யுடையவன் என்று பொருள் கொள்கின்றனர்.

தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை எட்டுக் குணங்களாம்.

எட்டுக்குணங்களையும் ஏற்றுக்கொண்டு திரு.வி.க. அவர்கள் அடியாரால் எண்ணப்படும் குணங்களை உடையவன் என்ற சிறப்புப் பொருளும் கண்டார்.

‘எண்குணத்தான்’ என்பதற்கு எளிமை வாய்ந்த குணமுடையான், அன்பருக்கு எளியன் என்ற பொருளும் உண்டு. எண் என்னும் அடி திருக்குறளில் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

“எண்பொருள வாகச் செலச் சொல்லி” (424)

“எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப”         (991)

“எண்பதத்தான் ஓராமுறை செய்யா மன்னவன்”  (548)

இக்குறள்களில் வரும் ‘எண்’ என்ற சொல் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இறைவன் அடிகள், யான், எனது என்னும் செருக்கறுத்து அருளும். அவ்வடிகளை வணங்குவதே செருக்கு அறுக்க உதவும் குணமாகும்.

தலைநிமிர்வு முனைப்பிற்கு அறிகுறி

தலை, தாளை வணங்குவது தாழ்மைக்கு அறிகுறி

மேலேயுள்ள தலை, இறைவனின் கீழேயுள்ள திருவடிகளில் விழுவது செருக்கும், முனைப்பும் சாய்ந்து விழுந்து ஒடுங்குதலைத் தெரிவிப்பது என்கிறார் திரு.வி.க.

எண்குணத்தான் : ஆதிபகவன் மூலம் அருளப்பட்ட வேதம்.

மனிதன் தலை உயிரின் அறிவையே குறிக்கும். தலையாகிய சிற்றறிவு, தாளாகிய வேதமுடன் பொருந்த வேண்டும். இன்றேல், கற்றதனால் பெற்ற அறிவில் பயனில்லை என்பார் கா.அப்பாத்துரையார்.

இயங்காத உடல், பேசாத வாய், மோவாத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் ஏதும் விளையாது. அதுபோல எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயனற்றது ஆகும்.

“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

     தாளை வணங்காத் தலை”           (9)

திருவள்ளுவர் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்; ஓருயிர் பல பிறப்பு எடுக்கும் என்று கருதுபவர். இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்கள், இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்கள், பிறவியாகிய பெருங் கடலைக் கடக்க முடியும்; மற்றவர் அப்பிறவிக் கடலைக் கடக்கமுடியாது.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

     இறைவன்அடி சேரா தார்”           (10)

திருவள்ளுவர் அறக்கடலாய் விளங்கும் இறைவனைச் சார்ந்து பேரா இயற்கை பெற்று இனிது வாழ, பிறவாநிலை பெற்றுப் பேரின்பம் காணக் காட்டும் வழிமுறைகள் யாவை?

இறைவன் ஒருவன் உண்டு என்று உணர்ந்து வாழ வேண்டும். துன்பங்கள், துயரங்கள் நீங்கி இன்புற்று வாழ, நிலமிசை புகழோடு நீடு வாழ, அச்சம், ஆபத்து நீங்கி வாழ, இறைவனின் துணை வேண்டும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்வில் பயனடைய, பிறப்பு முதல் இறப்பு வரை தெய்வநிலை பெற இறைவன் திருவடிகளின் துணை வேண்டும்.

கடவுள் பெயரால் நடைபெறும் சடங்குகள், சரியை, கிரியை வழிபாடு ஆகியவற்றைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி யாதொரு செய்தியும் திருவள்ளுவர் கூறவில்லை.

வாழ்க்கை, அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அறத்தோடு பொருந்தி நற்செயல்கள் செய்தால் எல்லா நன்மைகளும் ஆக்கமும், உணர்வும் நாடி வந்து சேரும். அறச்செயல் செய்யாது மறந்துவிட்டால் தீமையும், கேடும் நாடாமலே தேடி வந்து சேரும்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

 மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”    (32)

மனம் மாசற்றதாக இருந்தால்தான், – பொறாமை, நியாயம் இல்லாத பேராசை, தன்னையே அழிக்கும் கடுங்கோபம், கடுமையான இன்னாச்சொற்கள் ஆகியவை களிலிருந்து நீங்கியிருந்தால்தான் – உண்மையால் நிறைந்திருந்தால்தான் – இறைவன் நம் மனத்தகத்தே வீற்றிருப்பான்.

திருவள்ளுவர் வலியுறுத்தும் அடிப்படை நெறிகள் யாவை? பொய்யாமை (வாய்மை), கொல்லாமை, பிறர் உயிர்களைத் துன்பம் செய்யாது போற்றி வாழ்தல், அன்பும் அருளும் கொண்டு வாழ்தல், குடும்பத்திற்கும், உலகிற்கும் உரிய கடமைகள் செய்து பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றற்று வாழ்தல், விதித்த நற்கடமைகள் ஆற்றல், விலக்கியன ஒழித்தல், அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையுடைய சான்றோர்களாய், இயன்ற வகையெல்லாம் அறப்பணிகள் செய்து வாழ்தல், அச்சமே கீழ் மக்கள் ஆசாரம் ஆதலால் மேன்மக்களாய் அஞ்சாமை அல்லால் துணைவேண்டா என அச்சமற்று வாழ்தல், அஞ்ச வேண்டிய பழிக்கு அஞ்சி மானத்தோடு வாழ்தல், நிலையாமை உணர்ந்து நிலைத்த செயல்கள் ஆற்றி, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிந்து வாழ்ந்து மெய்யுணர்வு பெற்று இம்மையில் புகழோடு வாழ்ந்து, பிறவா நிலை பெற்று, என்றும் பேரின்பம், பேரானந்தம் பெற்று வாழ்தலே வாழ்வில் புகழோடு பயனுற வாழ்ந்திட திருவள்ளுவர் காட்டும் நெறி ஆகும்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

முதல்நிலையில் சிறந்த நல்லறம் கொல்லாமையே. அதனை அடுத்த நல்லறம் பொய்யாமை போற்றி வாய்மையை மேற்கொள்ளுதல்.

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி.”      (356)

இவ்வுலகில் உண்மை உணர்த்தும் நூல்களைக் கற்று மெய்ப்பொருளைக் கண்டவர்கள் பிறவா நெறிக்கு முயல்வர்.

“பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

     செம்பொருள் காண்பது அறிவு.” (358)

மனத்தைச் செம்மைப்படுத்துவது செம்பொருள். செம்பொருள்தான் கடவுள். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் இறைவன் திருவருளை நாட வேண்டும்.

“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

     துன்பத்துள் துன்பம் கெடின்.”        (369)

ஆசை என்று சொல்லப்படுகின்ற துன்பத்தின் துன்பம் கெடின், இன்பம் இடையறாது வந்து சேரும்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

     பேரா இயற்கை தரும்.”        (370)

ஒருகாலும் நிறைவு பெறாத இயல்பினையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிடின், அவ்வாறு ஆசையை நீக்கிய நிலையே பிறவா நிலையைத் தரும். ஆசைகள் அற்ற நிலையிலே வீடுபேறு அடையலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

அனுப்பியவர் சிகாமணிI ⋅ ஒக்டோபர் 5, 2011 – நன்றி

thiruதிருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.

பொருண்மைச் சிறப்பு

சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் ”தமிழனுக்குரியது” என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட் சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ் நாகனார் ”எல்லாப் பொருளும் இதன் பால் உள” என்று தெளிந்துரைத்துள்ளார். இவை வள்ளுவத்தின் காலமும் எல்லையும் கடந்து நுண்பொருட்ச் சிறப்பை உணர்த்துவன.

வாழ்வியல் பதிவு

வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்வியல் கூறுகளை காட்டும் பதிவுகளாக உள்ளது.இதனை

சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.

என்னும் அறிஞர் கருத்தினால் அறியலாம். வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தருவன.

மானிடப் பண்பு இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் – வாழ்க்கை, வழி நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது திருக்குறள்

என்னும் முத்தமிழ் அறிஞரின் கருத்தும் வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல் என்பதை உறுதிப்படுத்துகிறது.

முதன்மைப் பயன்

உயிரினத்தின் உச்சியில் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி, அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப் பயனுடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும், ஓட்டமும் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவுபெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கிறது.

பன்முகப்பார்வை

தனி மனிதநிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள், எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற அமைத்து ஒரு முழுமையான வாழ்வியல் கருத்தாக்கத்தை வள்ளுவம் தந்துள்ளது.

தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாய் இருந்து வந்த மரபுத்தளைகளை உடைத்து, மனிதப் பழக்க வழக்கங்களை மாற்றித் தனிமனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார்.

மரபுகளைத் தகர்த்தல்

மது அருந்துதலும் புலால் உண்ணுதலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கம் என்னும் நிலையை மாற்றி மனித மனத்தினை, வாழ்வின் பயனைத் தடம்மாற்றும் தவறுகள் என வள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும எனவும்

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்தது உண்ணும் மன்னே

என்றும் கள்ளுண்டுகளித்தலையும், கள்ளுண்ணல் பெருமித வாழ்வாக இருந்த மரபுகளையும் பின்பற்றக் கூடிய ஒழுக்கமாய்க் காட்டும் வழக்கினை மாற்றி அதனைச் சமுதாயத் தீமையாக உரைத்தவர் வள்ளுவர்.

”உண்ணற்க கள்ளை” என்றும் அது ”ஈன்றாள் முகத்தேயும் இன்னாதது” எனவும் ”நஞ்சுண்பார் கள் உண்பவர்” என்றெல்லாம் மது அருந்துதலின் தீமையை உணர்த்தித் தனிமனித வாழ்வு சிறக்கும் நெறியைக் காட்டியுள்ளார் வள்ளுவர் எனலாம்.

புலால் உண்பது மனித நெறி அல்ல என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. இன்றைய மனிதர்களின் உணவு முறையில் சைவ உணவே சிறந்தது என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலைநாட்டு உணவியல் வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தெய்வப் புலவர் வள்ளுவர் ”புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்துள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை விளக்கமுறச் செய்துள்ளார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்னும் குறட்பா மனிதன் உயர்வதற்கான வழியைக் காட்டுகிறது. இன்றைய தமிழக அரசு உயிர்க்கொலை, உயிர்ப் பலி கூடாது எனச் சட்டம் கொண்டு வந்துள்ள நிகழ்காலச் சூழலில் வள்ளுவரின் வாழ்வியல் நெறி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதலாம். அன்பு, பண்பு, நட்பு போன்ற வாழ்வியல் இலக்குகளை எளிய முறையில் மனித மனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனி மனித வாழ்க்கையை வள்ளுவர் பண்படுத்தியுள்ளார்.

அறநெறிப்பட்ட வாழ்க்கை

மனித வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து முக்கியத்துவம் மிக்கதாக அமைய வேண்டும். மனித மனங்களை விரிவுபடுத்தி அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது திருக்குறளின் நோக்காகவும் உள்ளது.

மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித வாழ்க்கை நெறி என்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

என்னும் குறட்பா இதனை உணர்த்துகிறது. அறம் என்பது பற்றிய இலக்கிய மரபுசார் கருத்தாக்கத்தை வள்ளுவர் மாற்றியமைக்கிறார்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்

என்னும் காப்பியக் கருத்தினை மறு ஆய்வு செய்து அறத்திற்குப் புதிய விளக்கங்களைத் தந்தவர் வள்ளுவர். மனத்தூய்மை, ஈகை, காதல் என்னும் தூயநெறிகளை வாழ்வியல் அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணர்த்தியுள்ளார்.

வாய்மை

திருக்குறள் அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் அடையும் இழிவினையும் திறம்படக் காட்டுகிறது. ”வாய்மை” என்பதே தலையாய அறம் என்கிறது வள்ளுவம். பொய்மை கோலோச்சும் இக்கால மனித சமுதாயத்திற்கு வள்ளுவர் கருத்துக்கள் மலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாகக் கொள்ளலாம். அறங்களில் எல்லாம் வாய்மையே சிறப்புடையது என்பதை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
என்னும் குறட்பாவால் அறிய முடிகிறது.

மும்மை அறம்

மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் மூன்று அறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

1. ஆன்மீக அறம்; 2. ஈதல் அறம்; 3. காதல் அறம்

கடவுளை ”அறிவு, ஆற்றல், அப்பாற்பட்ட நிலை” என்றும் கருதுகோள் நிலையில் வைத்து மனித ஒருமைக்கும் சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். முதற் குறட்பாவில் ”உலகு” என நினைவூட்டி உலகளாவிய நேயத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு, அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தை தந்துள்ளது. இதனை,

வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம், காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு; இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்! என்னும் அறிஞர் கருத்தும் இதனைத் தெளிவுபடுத்தும்.

ஈதலறம்

மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை. பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்தவனாகிவிடுவான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகைக் குணமே உயிரின் ஊதியம் என்பர்.

ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு

கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

காதலறம்

காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண்-பெண் உறவையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவு நிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி, அன்பெனும் நெறிக்குள், மனங்களின் சங்கமத்திற்குள், மாசுபடாத வாழ்வியல் படிநிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி ”மனிதம்” அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவர் தந்துள்ளார்.

பிறன்மனை நயத்தலையும், பரத்தையர் உறவையும், பெருங்குற்றமாகச் சொல்லி அன்புடைய காமத்தைச் சமுதாய அறமாகத் தந்துள்ளார்.

ஆண் – பெண் சமனியம்

ஆண் – பெண் உறவு நிலை, திருமணத்திற்கு முன்னும் பின்னுமாகக் காதல் நிலை ஆகிய செய்திகளைக் குறள் விரிவாகப் பேசுகிறது. ஆண் – பெண் சமத்துவம் வள்ளுவரின் கொள்கையாகக் காணப்படுகிறது.

ஆண் மேலாதிக்க காலத்தில், அதற்கெதிரான, துணிவுடைய சிந்தனைகளை வழங்கியுள்ள வள்ளுவரின் அணுகுமுறை புரட்சிகரமானது. பெண்களின் உரிமைக்காகவும், உலகியல் மாற்றத்திற்காகவும் அவர் பாடுபட்டுள்ளார். பெண் ஆணுக்கு இணையானவள். ஆற்றல் மிக்கவள் என்பதை,

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை என்று ஆற்றலும் அறிவும் நிறையும் மிக்க பெண்களை உலகுக்கு உருவாக்கித் தந்தவர் வள்ளுவர் எனலாம். இத்தகைய வள்ளுவரின் வழிகாட்டல்தான் பிற்காலத்தில் பாவலன் பாரதியை ”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று பாட வைத்தது எனலாம.

சமுதாயக் கொடுமைகள்

சாதி, மதத்தின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயக் கொடுமைகள். இதனை மாற்ற வள்ளுவரின் குறட்பாக்கள் முனைந்துள்ளன. பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறையை வள்ளுவம் எதிர்க்கிறது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என ஓங்கி ஒலிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்னும் குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராக அடையாளம் காட்டுகிறது.

பகுத்தறிவு நோக்கு

வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் ”பகுத்தறிவாளர்” எனக் கூறலாம். எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்னும் குறட்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

மானுடத்தின் மலர்ச்சி

வள்ளுவரின் நெம்புகோல் அடிகள் மானுடத்தின் மலர்ச்சி எனலாம். மரபுகளைத் தகர்த்துப் புதுமையை நிலை நிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாக இருக்கிறது.
அந்தணர் என்போர் அறவோர்

அன்பின் வழியது உயிர்நிலை
மனநலம் மன்னுயிர்க்குக் காக்கம்
அறத்தால் வருவதே இன்பம்
என்றெல்லாம் உயரிய சிந்தனைகளை வழங்கி மனித வாழ்க்கையை மலர்ச்சியடையச் செய்தவர் வள்ளுவர் ஒருவரே எனலாம்.

அடிக்குறிப்புகள்

1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.

2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் – பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.

3. ந. முருகேச பாண்டியன், ”திருவள்ளுவர் என்ற மனிதர்”, வள்ளுவம் இதழ் (வைகாசி – ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே – 2000.

4. மு. கருணாநிதி, ”திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்”, கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.

5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.

6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.

7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.

8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி – சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11.

முனைவர் நா. தனராசன்
முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை
ம.இரா. அரசினர் கலைக் கல்லூரி
மன்னார்குடி – 614 001.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 1:

கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழாஅர்    குறள் 2:

மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்       குறள் 3:

இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.  குறள் 4:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5

ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்.  குறள் 6

தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.  குறள் 9

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார் குறள் 10:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவுகுறள் 358

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.      குறள் 356

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்  மருளானாம் மாணாப் பிறப்பு      குறள் 351

 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்    குறள் 362

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே  பேரா இயற்கை தரும். குறள் 370:

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Kural%2BiRaimai%2B01.png

Kural%2Bthorram%2B-02.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Kural%2Bthorram%2B-03.png

Kural%2Bthorram%2B-04.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Kural%2Bthorram%2B-05.png

Kural%2Bthorram%2B-06.png



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard