Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
Permalink  
 


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)

 

பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

 

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.

இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

 

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.

(மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

 

வ சுப மாணிக்கம் உரை: கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.

 

 

பொருள்கோள் வரிஅமைப்பு:

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

 

பதவுரை: மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.

 

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்:

பரிதி: வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்; [சந்தம்-சந்தஸ் என்னும் வேதஇசை]

காலிங்கர்: தனது குலமரபுக்கு முதற்காரணமாகிய தான் ஓதிய வேதத்தை மறந்தானாயினும் பின்னும் அஃது ஓதிக்கொளலாயிருக்கும்;

பரிமேலழகர்: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்;

பரிமேலழகர் குறிப்புரை: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார்.

 

'வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

 

இன்றைய ஆசிரியர்கள் 'பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஓதிப் பெறலாம்', 'நூலாய்பவன் தான் கற்ற கல்வியை மறந்து போனாலும் திரும்பவும் கற்றுக் கொள்ளலாம்', 'நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும். (அதனால் இழுக்கொன்றும் இல்லை.)', 'நூலை ஆராய்கின்றவன் தாம் கற்ற நூலை மறந்தாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

 

மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.

 

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.

மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிதி: ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அனுபவிக்க வேண்டும் என்றவாறு. [பிராயச்சித்தம் - பாவக்கழிவு; தோஷம் - குறை அல்லது பாவம்]

காலிங்கர்: மற்று அந்தணனது குலப்பண்பு தனது ஆசாரம் குறைபடவே கெடும் என்றவாறு.

பரிமேலழகர்: அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.

பரிமேலழகர்: சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

 

'பிராமணன் ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் கெட்டால் பாவக்கழிவு இல்லை' என்று பரிதியும் 'அந்தணது குலப்பண்பு ஒழுக்கம் குறைவுபடவே கெடும்' என்று காலிங்கரும் 'ஒழுக்கம் குன்ற அந்தணது வருணம் கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

 

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவன் குடிப்பிறப்பு ஒழுக்கம் குறையக் கெட்டுவிடும்', 'ஆனால் ஒழுக்கம் குறைதலால், சிறந்த அவன் குடிப்பிறப்பு அழிந்து போகும்', 'அவன் ஒழுக்கத்திற் குறைவுபட்டானாயின் அவனது குடியின் சிறப்பு அழிந்து படும்', 'ஆனால் மக்கட் பிறப்புக்குரிய நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

 

ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

 

நிறையுரை:

கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.

இங்கு சொல்லப்பட்ட பார்ப்பான் யார்?

 

மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனித வாழ்வே சீர்மை கெட்டுப்போய்விடும்.

 

தான் கற்ற நூலை மறந்தாலும் நூல்ஆராய்கின்றவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் பிறவியே பொருளற்றதாகிவிடுகிறது.

ஓத்து என்ற சொல் ஆரியர்களின் வேதத்தைக் குறிப்பது என்று பல உரையாளர்கள் கூறினர். தொன்றுதொட்டு ஒருவர்க்கு ஒருவரால் ஓதப்பட்டு வருவதாலும் ஓதி ஓதி உணரும் காரணத்தாலும் வேதத்திற்கு ஒத்து என்னும் பெயர் வழங்கப்படுகின்றது என்பர். பார்ப்பான் என்ற ஒருவகை இனத்தார்க்கு வேதம் ஓதுதல் மிக இன்றியமையாதது; வேதம் ஓதுதலை தமக்கே உரியதென்று அவர்கள் சொல்வர். அது அவர்களுக்கு என்று அவர்களாகவே விதித்துக்கொண்ட அறுவகை தொழில்களில் முதன்மையான ஒன்று (மற்றவை ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன). அதனால்தான் அவர்கள் வேதியர், மறையவர் எனப் பெயர் கொண்டனர்.

வேதம் ஓதுவதைக் கைவிட்ட பார்ப்பனர்களைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று காட்டுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, மறைநூல்களை ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாடல்களைப் பாடுவதை மேற்கொண்ட அந்தணர் வாழும் ஊர் ஒன்றைக் கண்டனர் எனக் கூறப்படுகிறது.

வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்

புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து (சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை 38-39: பொருள்: வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து (வரி - காமம் கண்ணிய இசைப் பாட்டு)). அக்கால மக்கள் வரிப்பாடல்களையே பெரிதும் விரும்பியதனால் பொருள் வருவாய் கருதி அவற்றைப் பாடினர் போலும் (காமாட்சி சீனிவாசன்).

பார்ப்பானை எடுத்துக்காட்டாக்கி 'பார்ப்பனர் ஒருவர் தாம் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அதை அவர் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்' என்ற கருத்தை சொல்கிறது என்று ஒருசாரார் இக்குறட்பொருளை விளக்குவர். இன்னும் சிலர் பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனக்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களை பார்ப்பனர் என்று மதிக்கக் கூடாது. பார்ப்பனக்குரியன அல்லாத மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதாகக் கூறுவர்.

 

மற்றொரு சாரார், இங்கு சொல்லப்பட்ட ஓத்து என்ற சொல் வேதத்தைக் குறிக்காது என்றும் அச்சொல்லுக்கு கற்று என்ற நேர்பொருளே கொள்ளவேண்டும் என்பர். 'ஓத்து மறப்பினும்' என்பதற்கு படித்ததை யெல்லாம் மறந்து போனாலும் என்றும். தினந்தினம் தவறாமல் ஓதவேண்டிய நேரங்களில் ஓத மறந்து விட்டாலும் என்றும் இவர்கள் பொருளுரைப்பர்.

பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூலை ஆராய்பவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளிலேயே அச்சொல் இப்பாடலில் ஆளப்பட்டது என்பவர்கள் ஓத்து என்பதற்கு கற்று என்றும் பார்ப்பான் என்பதற்கு நூலை ஆராய்பவன் என்று பொருள் கொண்டு நூலை ஆராய்ந்து பார்ப்பான் மறப்பினும் மீட்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் 'பார்ப்பானது பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்' என விளக்கம் செய்வர். ஒழுக்கம் குன்றின் அவனது பிறப்பு -மனிதப் பிறப்பே கெடும் அதாவது வாழ்க்கையே கெடும் என்று இவர்கள் பொருள் உரைப்பர்.

இரா சாரங்கபாணி "வள்ளுவனார் பார்ப்பான் வேதம் ஓதுதலை மறக்கலாகாது என்னும் கருத்துக்குச் சிறப்பளிக்கவில்லை. அதனை மறந்தாலும் மீண்டும் கற்கலாம்; ஆனால் அதனினும் ஒழுக்கமே சிறப்புடையது; அது கெட்டால் மக்கட்பிறப்பே கெடும் என ஒழுக்கத்தின் விழுப்பத்தை இக்குறளில் வலியுறுத்திக் காட்டுவர். வேதம் ஓதுதலினும் ஒழுக்க நெறி நிற்றல் விழுமிது என்பதனை வலியுறுத்துதலால் ஒருவகை இனத்தாரின் கொள்கையை மறுத்துத் தமிழர்க்குரிய ஒழுக்க நெறியை நாட்டியது தெரிகிறது. ‘நல்லா றெரினும் கொளல் தீது’ என்ற குறளும் ஆரியக் கொள்கையைக் குறிப்பான் மறுத்தல் காணலாம். ஒவ்வாத பிறர்தம் கொள்கைகளை மறுத்தல் வள்ளுவர் இயல்பு என்பதனை ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்னும் குறளானும் அறியலாம். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பதற்குப் பார்ப்பானது பிறப்புக்குரிய ஒழுக்கம் என வருணாசிரம தன்ம முறையில் பொருள் கொள்ளாமல் பார்ப்பான் பிறப்பு மக்கட்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும் எனக் கொள்வதே குறள் நெறிக்கு இயல்பாகும்" என்று இக்குறள் பற்றிக் கருத்துரைப்பார். இவ்விளக்கம் சிறப்பாக உள்ளது.

 

மணக்குடவர் தனது சிறப்புரையில் 'இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று' என்கிறார். இதன் பொருள் 'ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், ஒழுக்கமே சாலச் சிறந்தது' என்பது. இதுவே இக்குறள் கூறும் செய்தி. ஓதியதை யாரும் மறக்கவே கூடாது; மறந்தால் அதுவும் ஓர் ஒழுக்கக் குறைவாம் என்பதையும் இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது.

 

இங்கு சொல்லப்பட்டுள்ள பார்ப்பான் யார்?

 

வள்ளுவர் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்று சொல்விளக்கம் கூறுகிறார்.

'பார்ப்பார் என்பது ஆரியப்பார்ப்பனரையும் குறித்தல் இயல்பானது' என்பார் இரா சாரங்கபாணி.

'பார்ப்பான்: பார்த்தான், பார்க்கிறான், பார்ப்பான் எனப் பார்த்தல் தொழிலின், கால அடைவு வழி வந்த சொல்லே பார்ப்பான் என்னும் சொல். அது இந்நாள் கூறுவதுபோல் ஒரு குலப்பெயரன்று; நூல் கற்பார்க்கு வாய்ந்த பெயர் 'ஓதுவார்' என்பது போலப் பொதுமை சுட்டும் பெயரே; 'பொச்சாப்புப் பார்ப்பார் (285) என்பதில் வந்துள்ள 'பார்ப்பார்' என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே 'பார்ப்பான்' என்பதும் (134) தரும். நூல் (பொத்தகம்) படிப்பவன், கணியம் பார்ப்பவன், ஏடு பார்ப்பவன், தொடுகுறி பார்ப்பவன் என்பன போல ஆசிரியத் தொழில் பார்ப்பவனைக் குறித்தது' என்பது இளங்குமரன் தரும் விளக்கம்.

ரா பி சேதுப்பிள்ளை 'இக்குறளில் அமைந்திருக்கின்ற பார்ப்பான் என்னும் சொல்லிற்கு வேதியன் என்று உரையாசிரியர் பொருள் கொண்டுள்ளளர். ஆனால் வள்ளுவர் காலத்தில் அந்தணன், பார்ப்பான் என்ற சொற்களெல்லாம், சாதிப் பெயரை உணர்த்தாமல், காரணப் பெயர்களாகவே விளங்கின என்பது மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அழகிய செந்தண்மை பூண்டு ஒழுகிய அறவோன் அந்தணன் என்று அழைக்கப்பட்டாற்போல, நூல்களைப் பார்த்து பரிசீலனை செய்பவர் 'பார்ப்பார்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விரு சொற்களும் ஒரு சாதியைக் குறிக்கும் பெயர்களாய் அமைந்தன. இவ்வுண்மையை மனத்தில் கொண்டு மேற்கூறிய குறளின் பொருளை ஆராய்தல் இன்றியமையாததாகும்' எனக் குறித்துள்ளார்.

'பார்ப்பான்' என்ற சொல்லுக்குக் கற்பவன் என்று வ சுப மாணிக்கமும், நூல்கற்பான் என்று கா சுப்பிரமணியம் பிள்ளையும் நூலை ஆராய்கின்றவன் என்று சி இலக்குவனாரும் நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று குழந்தையும் தலைமை வேளாண் மரபுவழி நின்று தமிழ் மந்திரம் ஓதுபவர் எனக் கா அப்பாத்துரையும் பொருள் உரைத்தனர்.

ஆரிய பிராமணர் தம்மைப் பார்ப்பான் என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; அதை இழிவு என வெறுக்கின்றனர் என்ற பார்வையும் உள்ளது.

 

இங்குள்ள 'பார்ப்பான்' என்ற சொல்லுக்கு நூலை ஆராய்கின்றவன் என்பது பொருள்.

 

கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் கற்பவன் வாழ்வு கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

கற்றலினும் ஒழுக்கமுடைமை மேம்பாடானது.

பொழிப்பு

கற்றதை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்; பார்ப்பான் ஒழுக்கம் தவறினால் பிறப்பு கெட்டுவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 அதிகார (1)
நுதலியது அறிதல் அதிகார முறையே - பொருள். மரபி:110/2
 பார்ப்பான் (3)
தோழி தாயே பார்ப்பான் பாங்கன் - பொருள். கற்:52/1
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி - பொருள். செய்யு:189/1
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா - பொருள். செய்யு:190/3
 அந்தணர் (2)
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் - பொருள். கற்:5/15

 மேல்
 
    அந்தணர்க்கு (1)
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - பொருள். மரபி:70/2

 மேல்
 
    அந்தணாளர்க்கு (2)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு - பொருள். மரபி:72/1
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே - பொருள். மரபி:82/1

 மேல்
 
    அந்தம் (5)
இ என அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல். கிளவி:4/4
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் - பொருள். கற்:5/16
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் - பொருள். கற்:6/24
அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் - பொருள். பொருளி:49/1
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே - பொருள். மரபி:3/4   
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - பொருள். புறத்:35/6   
 மறை (5)
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும் - பொருள். கள:20/13
ஆய் பெரும் சிறப்பின் அரு மறை கிளத்தலின் - பொருள். கள:33/1
மறை மொழி கிளந்த மந்திரத்தான - பொருள். செய்யு:165/5
மறை என மொழிதல் மறையோர் ஆறே - பொருள். செய்யு:186/4
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் - பொருள். செய்யு:187/1

 மேல்
 
    மறைக்கும்-காலை (1)
மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் - சொல். எச்ச:47/1

 மேல்
 
    மறைத்தல் (1)
நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு - பொருள். மெய்ப்:13/2

 மேல்
 
    மறைத்தனர் (1)
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் - சொல். எச்ச:46/1

 மேல்
 
    மறைத்தே (1)
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
  அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் -    20/6

 மேல்
 
    மறைந்த (1)
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் - பொருள். கள:44/1

 மேல்
 
    மறைந்தவள் (1)
குறைந்து அவள் படரினும் மறைந்தவள் அருக - பொருள். கள:23/17

 மேல்
 
    மறைந்தவை (1)
பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல் - பொருள். மெய்ப்:24/5

 மேல்
 
    மறைந்து (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் - பொருள். கள:20/1

 மேல்
 
    மறைப்பினும் (2)
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - பொருள். கள:20/16
  பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி -    20/17
செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் - பொருள். கள:23/2

 மேல்
 
    மறைமொழி-தானே (1)
மறைமொழி-தானே மந்திரம் என்ப - பொருள். செய்யு:178/2

 மேல்
 
    மறைய (1)
நரம்பின் மறைய என்மனார் புலவர் - எழுத். நூல்:33/3

 மேல்
 
    மறையின் (1)
மறையின் வந்த மனையோள் செய்வினை - பொருள். கற்:10/4

 மேல்
 
    மறையுற (1)
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுற - பொருள். கள:23/7
  பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும் -    23/8

 மேல்
 
    மறையோர் (2)
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - பொருள். கள:1/4
மறை என மொழிதல் மறையோர் ஆறே - பொருள். செய்யு:186/4

அறிவதுவே (6)
ஒன்று அறிவது உற்று அறிவதுவே - பொருள். மரபி:27/1
  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே -    27/2
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே - பொருள். மரபி:27/2
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே - பொருள். மரபி:27/3
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே - பொருள். மரபி:27/4
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே - பொருள். மரபி:27/5
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே - பொருள். மரபி:27/6

 மேல்
 
    அறிவர் (3)
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் - பொருள். கற்:52/3
ஆணம் சான்ற அறிவர் கண்டோர் - பொருள். செய்யு:190/2
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி - பொருள். செய்யு:197/1

 மேல்
 
    அறிவர்க்கும் (1)
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய - பொருள். கற்:13/1

 மேல்
 
    அறிவன் (1)
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - பொருள். புறத்:20/50

அறத்து (1)
அறத்து இயல்பு மரபு இலள் தோழி என்ப - பொருள். பொருளி:12/2

 மேல்
 
    அறத்தொடு (1)
அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி - பொருள். பொருளி:12/1

 மேல்
 
    அறம் (5)
அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின் - பொருள். கள:29/1
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை - பொருள். கற்:6/21
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் - பொருள். கற்:51/3
தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல் - பொருள். மெய்ப்:24/1
அ நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய - பொருள். செய்யு:106/1

 மேல்
 
    அறன் (2)
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகை - பொருள். கள:23/41
அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல் - பொருள். மெய்ப்:22/8

 மேல்
 
    அறனும் (1)
இன்பமும் பொருளும் அறனும் என்று-ஆங்கு - பொருள். கள:1/1

 மேல்
 
    அறனே (1)
அன்பே அறனே இன்பம் நாணொடு - பொருள். பொருளி:21/1

 

 
தொல்காப்பியம் - தொடரடைவு

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கல்வியா? ஒழுக்கமா?

குறள் எண்:134

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.
( மறப்பினும்-மறந்து போனாலும்; ஒத்து-கற்று; கொளல் ஆகும் –பெறமுடியும்;: பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-பிறந் குடி; ஒழுக்கம்-நடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.)

பொருள் :
:
கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
.
தெளிந்தது :

வேதியர்களின் தலையாய பணிகள். வேதம் படித்து அதை பிறர்க்கு எடுத்துச் சொல்வது. ஒழுக்க அறநெறிகளைக் கடைப்பிடித்து எல்லோரையும் வழி நடத்துவது. சில வேளைகளில் வேத மந்திரங்கள் மறந்து போகக் கூடும். அதனால் பெரும் தவறு விளைவதில்லை.மீண்டும் கற்று ஓதுவதைத் தொடரலாம்.
ஆனால் அவர்கள் ஒழுக்கம் தவறி ஒழுக்கக் கேடான செயல்கள் செய்வாரானால் அவர்களால் அவர் பிறந்துவந்த வேதியர் குலத்துக்கு பெரும் பழி வந்து சேரும்.
கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் குடிப்பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
வேதங்கள் கற்பதினாலோ ஓதுவதினாலோ பெருமை இல்லை.ஒழுக்கமான நெறிகளைக் கடைப்பிடிப்பதினால் மட்டுமே அவர்கள் சார்ந்த குலத்திற்குப் பெருமை. (அந்தணர் என்போர் அறவோர் )கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது குறள்!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்

பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !

 
 

லகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப்  பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது.  `கடவுள்`  என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே).  வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே.  இங்கு `இறைவன்`  என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) .  தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – (குறள்50)

இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.

பரிமேலழகரின் உரைப்பாயிர அரசியல்:

திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” – (குறள்:35)

அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.

இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்:34)

மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.

இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).

பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972)

அதுமட்டுமல்ல, கொல்லாமையினை வலியுறுத்தும் குறள் எங்கே?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”. – (குறள் :260)

பார்ப்பனர்களை பசுக்களை கொன்று உண்ணுமாறு கூறும் மனுநீதி எங்கே?

“சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்”. – (மனுநீதி சுலோகம்:35).

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”. – (குறள் : 1039)

என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?

இவ்வாறு திருக்குறள் குறிப்பிடும் அறத்திற்கு முற்றிலும் முரணாக மனுநீதி காணப்பட, எவ்வாறு மனுநீதி முதலிய நூல்கள் விதித்ததுதான் அறம் என பரிமேலழகர் கூறுகின்றார்? வேறு ஒன்றுமில்லை, அவருடைய  பார்ப்பனச்சாதிப் பற்றே அவ்வாறு பச்சைப்பொய் சொல்லவைத்தது. இந்த பரிமேலழகர் கக்கிய நஞ்சின் நீட்சியே இன்றைய நாகசாமியின் ` Tirukkural – An Abridgement of Shaastras ` என்ற புத்தகம் ஆகும்.

திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் –
` Tirukkural – An Abridgement of Shaastras`

நாகசாமி என்பவர் Tirukkural – An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஓரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.

திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.

மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே  சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார்.

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” – (குறள் 2)

{தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – (காலை) வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்.}

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள் 3)

{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}

“வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு
யாண்டு மிடும்பை மில” (குறள் 4)

{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( பாதம்)வணங்க வேண்டும்}

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”. (குறள் 7)

{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர்  திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}

“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது” (குறள் (8)

{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)

தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?

“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”. (குறள் 9)

{எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன் அற்றது }

“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்”. (குறள் 10)

{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி  சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.

நாகசாமி .

பார்த்தீர்களா! வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார். இங்கு வள்ளுவன் காலின் பெருமைகளைப் பேசி சூத்திரர்களை உயர்ந்தவராகக் காட்டமுயல்கின்றார் என்பதல்ல, மாறாக முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கால்களின் பெருமையினை உவமையாகக் கையாண்டு புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினைத் தகர்த்து எறிகின்றார். இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள் 972)

மேற்கூறிய குறளில் `எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259)

என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.

“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)

என்ற குறள் வேறு  பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.

படிக்க:
♦ திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி
♦ இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன – ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள் : 423)

வி.இ. குகநாதன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard