Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 40 செயற்பால தோரும் அறனே


Guru

Status: Offline
Posts: 7329
Date:
40 செயற்பால தோரும் அறனே
Permalink  
 


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:40)

பொழிப்பு: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே.
மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை: ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே.
('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவனுக்குச் செய்யத் தக்கது அறச் செயலே. தள்ளத்தக்கது பழிச்செயலே.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு செயல் பாலது ஓரும் அறனே; உயல் பாலது ஓரும் பழி.


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு:
பதவுரை: செயல்-செய்தல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-குறிக்கொண்டு கருதும்; அறனே-நல்வினையே; ஒருவற்கு-ஒவ்வொருவர்க்கு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே;
பரிதி: மனம் வாக்குக் காயங்களாலே செய்வதெல்லாந் தருமமே செய்க;
காலிங்கர்: ஈண்டுக் குறிக்கொண்டு செய்யத்தகுவதாகப் பெரியோர் கருதுகின்றது அறமான தொன்றுமே;
பரிமேலழகர்: ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே;

'ஒருவன் செய்யத்தக்கது அறமே' என்று இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் செய்யவேண்டுவது அறமே', 'ஒருவனுக்குச் செய்யத் தக்கது அறச் செயலே', 'ஒவ்வொருவரும் ஆராய்ந்து செய்யவேண்டிய காரியம் அறமே', 'செய்ய வேண்டியது அறமே' என்றபடி உரை பகன்றனர்.

ஒருவன் கருத்துடன் செய்ய வேண்டியது அறமே என்பது இப்பகுதியின் பொருள்.

உயற்பால தோரும் பழி:
பதவுரை: உயல்-ஒழிதல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-ஆராய்ந்துணரும்; பழி-தீவினை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பும் பகுதியது பழியே.
மணக்குடவர் கருத்துரை: மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
பரிதி: விடுவதாகின் பாவத்தை விடுவது என்றவாறு.
காலிங்கர்: தமக்கு நன்மையறிவார் ஒருவர்க்குப் பிறவித்துயரினின்றும் உய்யலாம்; அதனால் மிகவும் ஆராய்ந்து கொண்மின், பாவமாகிய பழியினை என்றவாறு.
பரிமேலழகர்: ஒழிதற்பான்மையது தீவினையே.
பரிமேலழகர் கருத்துரை: 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.

'நீக்கத்தக்கது பழியே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் விடவேண்டியது பழியே', 'தள்ளத்தக்கது பழிச்செயலே', 'செய்துவிடாமல் ஆராய்ந்து விலக்க வேண்டியது பழிவரக்கூடிய காரியங்களே', 'நீக்க வேண்டியது பழியே' என்றவாறு உரை தந்தனர்.

செய்துவிடாமல் ஆராய்ந்து நீக்க வேண்டியது பழி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கருத்துடன் செய்யவேண்டியது அறமே; ஆராய்ந்து விலக்க வேண்டியது பழியே என்னும் குறள்.

ஒருவன் குறிக்கொண்டு கருதி (ஓரும்) செய்யத்தக்கது அறமே; பழி ஆராய்ந்துணர்ந்து (ஓரும்) தள்ளத்தக்கது என்பது பாடலின் பொருள்.
'ஓரும்' என்ற சொல் குறிப்பது என்ன?

செயற்பாலது என்பது செய்யல்+பாலது என விரியும். பாலது என்பது பான்மையது அல்லது தன்மையது எனப் பொருள்படும். செயற்பாலது என்பதற்குச் செய்யத்தக்கது என்று பொருள் கொள்வர்.
அறனே என்ற சொல்லுக்கு அறச்செயல்களே என்று பொருள்.
ஒருவற்கு என்ற சொல் இங்கு ஒவ்வொருவருக்கும் என்ற பொருள் தருவது.
உயற்பாலது என்ற தொடர் ஒழிக்கத் தக்கவை, விலக்கத் தக்கவை,நீக்கத் தக்கவை, விடத்தக்கவை, தப்புதலுக்குரியன என்று பொருள் தரும்.
பழி என்பது பழிக்கத்தக்க செயல்களைக் குறிக்கும். இச்சொல் அறன் என்பதற்கு எதிர்ச் சொல்லாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.

எண்ணிச் செய்யத்தக்கவை அறமே, ஆராய்ந்து விலக்கத்தக்கன பழி சேர்க்கும் செயல்கள் என்று உறுதியுடன் கூறும் பாடல் இது.

ஒருவன் செய்யத்தகுவன யாவும் அறநெறிப்பட்ட அறசெயல்களே என்று முதல் வாக்கியத்தில் கூறப்பட்டது. அறச்செயலைத் தொடங்கும்முன் அதனைக் குறிக்கொண்டு கருதி உணர்ந்து அதன்கண் ஈடுபடல் வேண்டும் என்று இக்குறள் கூறுகிறது. செயற்பாலது அறம் ஒன்றே என்பதை வலியுறுத்த 'அறனே' என்னும் ஏகார ஒலியமைப்புடன் மொழிநடை அமைக்கப்பட்டது. 'அறனே' என்றதில் ஏகாரம் தேற்றமும் ஏற்றமும் தெளித்து நின்றது என்பர்.
ஒருவன் கைவிடத் தகுவன யாவும் பழியோடுபட்ட தீவினைகளே என்பது மற்ற வாக்கியம். செய்யத்தக்கது அறமெனில் செய்யத்தகாதது எது என்ற வினா எழும். அது பழி என்கிறார் வள்ளுவர். பழியாவது அறமல்லாதது; உயர்ந்தோரால் பழிக்கப்படுவது. அறன் என்பதன் பகைமுரணாகப் 'பழி'யையே குறள் கூறுகிறது என்பதை இங்கு அறியப்படுகிறது. அறத்தொடு முரண்படுவது பழி அல்லது இகழ்.
ஒருவன் ஆராய்ந்து பழிச் செயல்களிலிருந்து அதைச் செய்யாது காத்துக் கொண்டு, அறச் செயல்களில் குறிக்கொண்டு ஈடுபட வேண்டும் என்பது கருத்து. பழிச்செயல்களைச் செய்யாமல் தப்பித்துக் கொள்ளுவதும் வலியுறுத்தப் பெறுகிறது. 'உய்யல்' என்னும் சொல் பழி செய்யாது நிற்றல், பழி சூழநேரின் அதனை விடுத்து நீங்கல் என்னும் இரண்டு பொருளையும் நல்குவது (திரு வி க). அறனே என்று முதல் பகுதியில் சொல்லப்பட்டதால் பழியுடன் ஏகாரத்தை கூட்டி நீக்கத்தக்கன பழியே என்றும் விளக்குவர். செய்யத்தக்கன அறவினைகளே; ஆராய்ந்து உணர்ந்து செய்யாமல் காத்துக்கொள்ளவேண்டியது பழியே.

'ஓரும்' என்ற சொல் குறிப்பது என்ன?
ஓரும் என்பதனை மணக்குடவர், பரிமேலழகர் ஆகியோரும் இன்றைய உரையாளர்களில் பெரும்பான்மையோரும் (பொருளற்ற) அசைச் சொல்லாகக் கொண்டனர். மற்ற உரையாசிரியர்கள் 'குறிக்கொண்டு கருதி' என்றும் 'ஓர்ந்து காணும்' அதாவது 'ஆராய்ந்து அறியும்' என்றும் பொருள் தரும் சொல்லாகக் கொள்வர். இதன்படி செயற்பாலது ஓரும் அறனே என்றால் குறிக்கொண்டு கருதிச் செயத்தக்கது அறமே என்ற பொருள் தரும். அதுபோலவே உயற்பாலது ஓரும் பழி என்பதற்கு ஒழிதற்பாலன ஆராய்ந்து அறிந்த பழிதரும் செயல்கள் என்று பொருள்.
அறன் இன்னதென்றும், பழி இன்னதென்றும் ஓராது நடப்பது அறிவுடைமையாகாது.
'ஓரும்' என்ற ஒரே அசைநிலையை இரண்டு முறை குறட்பா ஒன்றில் பெய்ய ஆசிரியர் உளங்கொள்வாரோ என்பது சிந்திக்கத்தக்கது என்பார் திரு வி க. 'ஓரும்' என்பதை அசைநிலை என்று கொள்வதைவிட, காலிங்கர் உரைப்படி, முதலில் உள்ள 'ஓரும்' என்பதற்குக் குறிக்கொண்டு கருதி என்றும் பின்னுள்ள 'ஓரும்' என்பதற்கு 'ஆராய்ந்து உணரும்' என்றும் கொள்ளலாம்.

ஒருவன் கருத்துடன் செய்ய வேண்டியது அறமே; செய்துவிடாமல் ஆராய்ந்து நீக்க வேண்டியது பழி என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard