Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்
Permalink  
 


 

சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்

தேமொழி

Jul 13, 2019

 
 
 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri-பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர். தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக, செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார் (இவரை குறித்து “தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்” – http://siragu.com/தமிழாய்வில்-முதலில்-முனை/ – என்ற சிறகு கட்டுரை வழியாக மேலும் அறியலாம்). உரையாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” (1930 ஆம் ஆண்டு) என்ற பெருமையும் உண்டு. தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும் என்ற தலைப்பில் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை எழுதினர். சமஸ்கிருத இலக்கிய வரலாறு, சமஸ்கிருத இலக்கண வரலாறு ஆகியவற்றைத் தமிழில் எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து “தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு” என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட பொழுது விவாதங்கள் வெடித்தன. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள் அவர்களின் திங்கள் இதழான தமிழ்ப் பொழில் மூலம் பல மறுப்புக் கட்டுரைகளை, மாற்றுக் கருத்துகளை, விளக்கங்களைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதிவு செய்து வந்தனர் என்பது சென்ற நூற்றாண்டின் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி.

siragu pssasthiri book1

செம்மொழிகளான தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தொன்றுதொட்டு இருந்துவரும் தொடர்பு இவரது ஆய்வுகளின் அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது. இருமொழிகளிலும் இலக்கண இலக்கியப் படைப்புகளையும் ஒப்பிடுவதில் தொடங்கிய இவரது முயற்சியின் தொடர்ச்சியில் உருவான மற்றொரு நூல் “சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்”. இந்நூலின் நோக்கம் சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள வைதீக சமயக் கருத்துகளைச் சங்க இலக்கியப்பாடல்களின் கருத்துகளுடன் ஒப்பிடுவது. டாக்டர். பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய இந்த ஒப்பீடு நூல், திருப்பனந்தாள் மடம் நல்கிய 400 ரூபாய் பொருளுதவியுடன் 500 பிரதிகள் அச்சிடப்பட்டு 1951 ஆண்டு வெளியிடப்பட்டது. எழுபது பக்கங்களைக் கொண்ட இந்த மிகச்சிறிய நூல் 1. சங்கநூல்கள், 2. வைதிகமார்க்கம், 3. சங்கநூல்களும் வைதிகமார்க்கமும் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் கருத்துகளைச் சற்றே விரிவாகக் காணுவது தமிழரின் பெருமைக்குரிய கருவூலமான சங்கப்பாடல்களில், தமிழுக்குச் செம்மொழி என்ற சிறப்பை நல்கிய சங்கப்பாடல்களில் ஆரிய வேத சமயத்தின் சமய அடிப்படைக் கருத்துகளின் தாக்கம் எந்த அளவு, அதுவும் எக்காலத்திலேயே இருந்துள்ளது என்ற தெளிவைக் கொடுக்கும். ஆய்வுத்திறனுக்காகப் புகழப்படுபவரும், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வல்லுநருமான சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் நூல்வழியே அதை அறிவது ஒரு பெருவாய்ப்பு.

siragu pssasthiri book(I)

முதல் பகுதி-சங்கநூல்கள்:

இப்பகுதி சங்கநூல்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தை 12 பக்கங்களில் தருகிறது. இதில் 1. தொல்காப்பியம், மற்றும் சங்க இலக்கியங்களான 2. பத்துப்பாட்டு, 3. எட்டுத்தொகை, 4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிய தேவையான அளவு அறிமுகம் கொடுக்கப்படுகிறது.

இந்த சங்க நூல்கள் அறிமுகப் பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி சொல்லும் சில முக்கியக் கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொல்காப்பியம் – தமிழில் எழுத்துக்கு இலக்கணம் கூறும் எழுத்ததிகாரம் வடமொழியில் ‘சிக்ஷா’ எனப்படும்; தமிழில் சொல்லுக்கு இலக்கணம் வகுக்கும் சொல்லதிகாரம் வடமொழியில் ‘வியாகரணம்’ எனப்படும்; தமிழில் செய்யுட்களின் பொருளுக்கு இலக்கணம் வகுக்கும் பொருளதிகாரம் செய்யுளின் கருப்பொருளின் அடிப்படையில் ‘அகம்’, ‘புறம்’ எனப் பிரிக்கிறது, ஐந்திணை ஒழுக்கம் மற்றும் செய்யுள் அமையும் இலக்கணத்தைக் கூறுகிறது. இது வடமொழியில் “அலங்காரசாஸ்திரம்” எனப்படுகிறது என்கிறார் (பக்கம்: 1-2).

பரிபாடல் – பண்டைய தமிழகத்திலிருந்த வைதீக ஒழுக்கங்களை மிகுதியும் அறிய முடிகிறது. இப்பாடல்களில் காணப் பெரும் முருகன் பிறப்பு, வைதீக ஒழுக்கம் போன்றவற்றை வடமொழியின் உபநிஷத்து மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் பயிற்சி இருந்தாலே பொருள் விளங்கும் (பக்கம்: 7) என்கிறார் நூலாசிரியர்.

திருக்குறள் – மகாபாரதத்தில் தர்மத்தை ‘பிரவிருத்தி தர்மம்’, ‘நிவிருத்தி தர்மம்’ என வியாசர் பிரித்தது போலவே, வள்ளுவரும் அறத்தை ‘இல்லறம்’, ‘துறவறம்’ எனப் பிரித்துள்ளார். மோட்சம் பெறுவதைக் கடவுள் வாழ்த்து, அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உணர்த்துகிறார் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி (பக்கம்: 9)

நாலடியார் – தொடர்ந்து நாலடியார் குறித்துக் குறிப்பிடும் பொழுது சமண நூலான இது அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறள் போலவே அமைந்ததுடன், திருக்குறள் கருத்துகளை விரிவாக விளக்கும் நூல் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இருப்பினும் திருக்குறளை மகாபாரத ‘பிரவிருத்தி தர்மம்’, ‘நிவிருத்தி தர்மம்’ பிரிவுகளைக் கொண்டது என்று குறிப்பிட்ட சுப்பிரமணிய சாஸ்திரி நாலடியாருக்கு அதனை நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (பக்கம்: 9).

பழமொழி நானூறு – இந்த சமண நூலும் திருக்குறள் கருத்துகளின் தொகுப்பே என்கிறார், சமண நூல் எனக் கூறினாலும் பின்னர் இதிலிருந்தும் சுப்பிரமணிய சாஸ்திரி வைதீக தொடர்பு காட்டுகிறார்.

(II)

இரண்டாம் பகுதி-வைதிகமார்க்கம்: நூலின் இப்பகுதி வைதிகமார்க்கம் என்றால் என்னவென்றும், அதன் கூறுகள் யாவை எனவும் ஒரு 9 பக்கங்களில் 1. வேதங்களும் அங்கங்களும், 2. மக்கட்பிரிப்பு, 3. மக்கட்தொழில், 4. மறுமை, 5. வழிபடு கடவுள், 6. ஊழும் வீடும் என்ற பக்கத் தலைப்புகளில் விவரிக்கிறது.

1. வேதங்களும் அங்கங்களும் :—

வேதம் என்பது, தேவதைகளை அழைக்கும் ‘மந்திரங்கள்” என்ற பகுதியையும், அவற்றுக்கு உரை கூறும் ‘பிராம்மணம்’ என்ற பகுதியையும் கொண்டது. மந்திரங்கள் தொகுக்கப்பட்ட தொகைநூல் ‘சம்ஹிதை’ எனப்படும். ருக் செய்யுளாகவும், யஜூர் வசனங்களாகவும், சாமவேதம் கீதங்களாகவும் உள்ளன. அதர்வ வேதம் ருக் அமைப்பை ஒட்டியது. இவற்றுடன், இவ்வேதங்களின் சாரங்களாக மோட்சம் அடையும் வழிகளைக் கூறும் பற்பல உபநிஷத்துகளையும் கொண்டதே வேத சமயம்.

இவற்றை முறைப்படி பின்பற்ற வேதாங்கங்களும், மக்கள் வைதீக தர்மத்தைப் பின்பற்ற வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரத இதிகாசங்களும் புராணங்களும் இயற்றப்பட்டன. வைதீக தர்மத்தை அறியும் இந்த நூல்களை அதன் ‘வகை/பிரிவுகளின்’ எண்ணிக்கையின் அடிப்படையில் ‘பதினான்குவித்யை’ என்பர்.

வைதிக மார்க்கம் சொல்லும் நால்வேதங்கள் (ருக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள்) குறித்து புறப்பாடல்களும் (புறம். 2, 15) கூறுகின்றன.

2. மக்கட்பிரிப்பு :—

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என மக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தின் ஆண்களுக்கும், சூத்திர பெண்களுக்கும் பிறந்தோர் ‘அநுலோமசாதியர்’ எனவும், இதன் மாற்று வடிவமாக முதல் மூன்று வர்ணத்தின் பெண்களுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறப்போர் ‘பிரதிலோமசாதியர்’ எனவும் அறியப்பட்டனர். ப்த்ருதேவதைக்கு செலுத்தவேண்டிய கடனைச் செலுத்த ஆண் வாரிசு இன்றியமையாமை என்ற கருத்தும் இந்த மார்க்கத்தின் பகுதி.

3. மக்கட்தொழில் :—

பிராமணர்களுக்கு ஆறு தொழில்களும் (வேதங்களைக் கற்றல், பிறர்க்குக் கற்பித்தல், யாகங்களைச் செய்தல், பிறருக்கு அவற்றைச் செய்வித்தல், தானம் கொடுத்தல், அதனைப் பெற்றுக் கொள்ளுதல்);

சத்திரியருக்கு ஐந்து தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், மக்களைக் காத்தல், குற்றமறிந்து தண்டித்தல்);

வைசியருக்கு ஆறு தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், பசுவைப் பாதுகாத்தல், உழவு, வணிகம்);

சூத்திரருக்கு உழவு, தச்சு, சிற்பம், நாட்டியம், மற்ற முதல் மூன்று பிரிவுக்கும் வழிபாடு செய்தல் போன்றவை விதிக்கப்பட்டன.

முதல் மூவருக்கும் வேதம் கற்க வேண்டும் என்பதால் உபநயனமும், அது ‘துவிஜ’ என்ற இருபிறப்பு உடையவர் தகுதியாகவும் கூறப்பட்டது. உபநயனத்திற்குப் பிறகுள்ள இரண்டாம் பிறப்பில் காயத்ரீ தாயாகவும், ஆசிரியர் தந்தையாகவும் கருதப்படுவார் என்பதால் காயத்ரீ ஜபம் செய்தல் அவர்கள் கடமையாகிறது. அவ்வாறு செய்தால் பிராமணர்கள் அறிவாலும், சத்திரியர்கள் உடல் பலத்தாலும், வைசியர்கள் செல்வ பலத்தாலும் சிறப்பான நிலை பெறமுடியும். அவ்வாறு பெறும் சிறப்பாலே பிறருக்கும் அவர்கள் உதவ இயலும்.

4. மறுமை :—

இறந்த பின் நல்வினை செய்தோர் சொர்கத்திற்கும், தீவினை செய்தோர் நரகத்திற்கும் செல்வர். மகன் செய்யும் ஈமச் சடங்கு இதற்கு வழியமைக்கும். பித்ருக்களுக்கு பிண்டமிடும் ஆண்மகனைப் பெறவேண்டியது பித்ருக்களுக்குத் தீர்க்க வேண்டிய கடன். சொர்க்கத்திலிருப்போர் தேவர்கள். தேவர்களின் அரசன் இந்திரன். இவர்களுக்கான உணவு மக்கள் பூமியில் நடத்தும் யாகத்தில் இடும் பொருள். யாகம் செய்து தீ வளர்த்து அதில் இடும் அவிர்பாகம் பொருளை அக்னி இந்திரனிடம் சேர்ப்பிப்பான். இந்த உதவிக்குத் தேவர்கள் மக்களுக்கு மழை தருவார்கள்.

5. வழிபடும் கடவுளர் :—

பிரும்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, பலராமன், கந்தன், போன்றவரும், இராமாயண மகாபாரத இதிகாசம் கூறும் கடவுளரும், புராணக் கதைகள் கூறும் கடவுளரும் எனப் பற்பலர் வேதசமயக் கடவுளர்.

6. ஊழும் வீடும் :—

மக்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைக்கும் தீமைக்கும் அவரவர் முற்பிறப்பில் அவர்கள் ஆற்றிய நன்மை தீமைகளே காரணம். அடுத்துவரும் பிறப்புகளில் நல்லநிலையை அடைய, இப்பிறப்பில் நன்மை செய்ய வேண்டும். கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவரை அடைய முயல வேண்டும். அதற்கு அறியாமையும், ஆசையும் தடைகளாக இருக்கும். அவற்றை அழித்து முக்தி நிலை அடைய வேண்டும். உயிருடன் இருக்கும்பொழுதே முக்தி பெற்றால் அது ஜீவன்முக்தி. பற்றற்று இருத்தல் முக்தியடையும் வழி என்பது போன்ற கருத்துகளை உபநிஷத்துகள் உணர்த்தும்.

மேற்காட்டியவை யாவும் சுப்பிரமணிய சாஸ்திரியால் வைதீக சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளாகக் காட்டப்படுபவை. வேதசமயக் கருத்துகளின் அறிவியல் தன்மையை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்
Permalink  
 


(III)மூன்றாம் பகுதி-சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்: சங்க நூல்களையும் வைதிக மார்க்கத்தையும் அடுத்துவரும் 49 பக்கங்களில் நூலின் இறுதிப்பகுதி ஒப்பிடுகிறது.

இப்பகுதியில் நூலின் இரண்டாம் பகுதியில் காட்டப்படும் ஆறு வேத சமயக் கூறுகளையும் சற்றே விரிவாக ஒப்பிட முற்படுகையில் எட்டு பக்கத்தலைப்புகளாக இப்பகுதி விரிகிறது. 1. வேதங்களும் அங்கங்களும், 2. வர்ணங்களும் ஆச்ரமங்களும், 3. அக்னிஹோத்ரமும் யாகங்களும், 4. இம்மையும் மறுமையும், 5. தெய்வங்கள், 6. ஊழ், 7. ஏனைய செய்திகள், 8. முக்தி. இப்பகுதியே நூலின் உட்கருத்தான ஒப்பிடுதலின் நோக்கம் என்பதால் இப்பகுதியை நாம் விரிவாக அறிந்து கொள்ளுதல் தேவையுமாகும்.

முதல் பகுதியில் இவையிவை சங்கநூல்கள் என அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த பகுதியில் இவையிவை வைதீக சமயத்தின் கூறுகள் என அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்ததாக, இந்த வைதீக சமயக் கூறுகள் சங்க இலக்கியங்களில் எங்கெங்கு தென்படுகின்றன எனவும், அந்த வைதீக சமயநெறிகள் கூறும் வடமொழி நூல்களில் அவை இருக்குமிடங்கள் எவை எனவும் மேற்கோள் காட்டி நிறுவுவதுதான் நூலின் இந்த மூன்றாம் பகுதி (சங்கப்பாடல்களைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் பாடலின் எண், ஒரே பாடலாக இருப்பின் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது).

1. வேதங்களும் அங்கங்களும் :—

திருமுருகாற்றுப்படை (179-182) நூலில், இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களை கற்றது கூறப்படுகிறது. ஒவ்வொரு வேதத்தையும் இருபிறப்பாளர் பன்னிரு ஆண்டுகளில் கற்பார் என்பது போன்ற செய்திகளை வடமொழியின் கௌதமதர்ம சூத்திர நூல் கூறும்.

புறநானூற்றுப் பாடல் (166) நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் சிவனிடமிருந்து தோன்றியதாகக் கூறும். இக்கருத்து உபநிஷத்து, வியாச சூத்திரத்திலும் காணப்படும் கருத்து.

பரிபாடல் (3) உலகின் உயிர்களும் அண்டமும் திருமாலிடம் இருந்து தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றன என்கிறது. இக்கருத்து கீதையிலும் காணப்படும் ஒன்றாகும். பரிபாடல் (2) வேதங்களால் கடவுள் அறியப்படுவதைக் கூறுகிறது. இதுவும் கீதையின் கருத்தே.

குறுந்தொகை பாடல் (156) வேதங்கள் எழுதப்படாமல் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதைக் கூறுகிறது. இதனை ‘கேள்வி’ என்று பதிற்றுப்பத்து (64, 70, 74, 361)பாடல்களும், பார்ப்பனர் வேதம் பாடுவதை மதுரைக் காஞ்சி பாடல் (468, 656 வரிகள்), பரிபாடல் (9) பாடல்களும், வேதங்கள் தர்மத்தைக் கூறுகின்றன என ஐங்குறுநூறு (387) பாடலும் கூறுகின்றன.

பார்ப்பனரே வேதம் கற்பித்தனர் என்பதைத் தொல்காப்பியம் (எழுத்து- 102), பரிபாடல் (2, 3), கலித்தொகை (126), திருக்குறள் (543), பெரும்பாணாற்றுப்படை (300), புறநானூறு (2), குறள் (560), திரிகடுகம் (70), நான்மணிக்கடிகை (89), இனியவை நாற்பது (8) ஆகியன கூறுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வேதம் குறிக்கும் வேள்விகளை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15), சோழன் கரிகாலன் (புறம் 224) ஆகியோர் செய்ததாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

2. வர்ணங்களும் ஆச்ரமங்களும் :—

தமிழரிடம் நால்வர்ண (பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர்) கருத்துகள் இருந்தன என்பதை;

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொல். பொருள். புறத்திணையியல் 20 சூத்திரம்)

தொல்காப்பிய பொருளதிகார சூத்திரங்கள் காட்டுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

நான்மறைகளும் அவற்றை ஓதுவது பார்ப்பனர் தொழில் என புறநானூறு (6, 26, 93, 221, 361), ஆசாரக்கோவை (53), சிறுபாணாற்றுப்படை (204), பட்டினப்பாலை (202), பதிற்றுப்பத்து (24, 64), நான்மணிக்கடிகை (33), ஐங்குறுநூறு (202), திருமுருகாற்றுப்படை (179-184), குறுந்தொகை (154) ஆகிய சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் அந்தணர் உயர்பிறப்பு எனவும், அவர்களது தொழில், பண்பு, தோற்றம் (குடுமி, பூணூல், கமண்டலம் தாங்கியிருத்தல்) ஆகியன காட்டப்படுவதைச் சுட்டுகிறார் ஆசிரியர். அவ்வாறே, தோல்வேலை செய்பவர் இழிபிறப்பாளர் இழிசினன் எனப் புறநானூற்றுப் பாடல்கள் (82, 170, 287) கூறுவதாகவும் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வடமொழி சாஸ்திரங்கள் காட்டும் 8 திருமண வகைகளைப் பெருந்திணை, களவு, கைக்கிளை என தொல்காப்பியர் களவியல் சூத்திரங்களில் (15,1, 14) வகைப்படுத்தியதாகக் கூறுகிறார். திருமணத்தில் தீயை வலம் வரும் குறிப்பு கலித்தொகை (69), ஏழடி பின் செல்வதைப் பொருநராற்றுப்படை (166) பாடல் வழியாகவும் காட்டுகிறார்.

மேலும், அகநானூற்றுப் (86) பாடலில் மக்களைப் பெற்ற வாலிழை மகளிர் நால்வர் திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதைச் சுட்டி, அவர்களை வேத திருமணத்தில் சுமங்கலிப் பெண்கள் வாழ்த்துவதுடன் ஒப்பிடுகிறார். பெண்ணை கொடையாகக் கொடுக்க யாருமில்லாத பொழுது பெண் தானே தன்னைக் கொடையாக்கலாம், முன்னர் முதல் மூன்று குலத்தோருக்கும் இருந்த வைதிக திருமண முறை, பிற்காலத்தில் நான்காம் குலத்தவரிடமும் பரவியது என்று குறிப்பிடும் தொல்காப்பியம் கற்பியல் (2, 3) சூத்திரங்களின் கருத்துகளுக்கு மகாபாரதம், ஆதிபர்வதம் (94, 13) வரிகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.

ருது காலத்தில் கணவன் மனைவியைப் பிரியக்கூடாது எனக் கெளதமரின் தர்ம சூத்திரமும் (1-5-1) , மனு தர்ம சாஸ்திரமும் (113, 46) சொல்வதைத் தொல்காப்பியம் கற்பியல் (46, 47) சூத்திரமும், திரிகடுகம் (17) பாடலும் கூறுவதாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இல்லறத்தில் இருப்போர் ஆற்ற வேண்டியவை ருஷி, தேவ, பிதிர் என 3 கடன்கள். வேதம் படித்தல், தேவர்களுக்கு ஹோமம் செய்தல், பிதிர் கடன் ஆற்ற ஆண்மக்களைப் பெறுதல் ஆகியவற்றால் இக்கடன்கள் நீங்கும் என யஜூர்வேத தைத்திரீய சம்கிதை கூறுகிறது. இதே கருத்துகள் திரிகடுகம் (34), புறநானூறு (2, 9), கலித்தொகை-நெய்தல்கலி (2), பெரும்பாணாற்றுப்படை (315-6), நற்றிணை (141), முல்லைப்பாட்டு (37-8), பொருநராற்றுப்படை (91), மதுரைக்காஞ்சி (463-474) இந்த கடன்களைப் பார்ப்பனர் கடைபிடிப்பதைக் குறிக்கின்றன. இதையே குறள் (41) இல்வாழ்வார் இயல்புடை மூவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனவும் கூறுகிறது. தென்புலத்தார் அல்லது பித்ருக்கள் தென்புலத்தில் வாழ்கின்றனர் என்ற கருத்து ‘தட்சிண பிதர’ என்று தைத்ரீய சம்ஹிதை கூறும் கருத்து. இதை மகாபாரதமும், கடோபநிஷத் ஆகியவையும் கூறுகின்றன.

3. அக்னிஹோத்ரமும் யாகங்களும் :—

இப்பகுதியில் பார்ப்பனர் காலை மாலை இடைவெளியில் தேவர் கடனை அடைக்க முத்தீவளர்த்தனர் என்பதை சங்கப்பாடல்களில் இருந்து காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. பார்ப்பனர் வேள்வி வளர்த்தனர் என்பதை அவர்களின் வாழ்வியல்முறை குறிக்கும் முந்தைய தலைப்பே அவர்களது கடனாகக் காட்டுவதால், கூறியது கூறல் விடுத்து, சுப்பிரமணிய சாஸ்திரி எந்த சங்கப்பாடல்களை இங்கு பார்ப்பனர்-வேள்வி வளர்த்தல் என்பதற்கு மேற்கோள்களாக காட்டுகிறார் எனக் குறிப்பிட்டுக் கடந்து செல்லுதலே சிறந்தது. புறநானூறு (2, 99, 122, 166), பட்டினப்பாலை (200), குறிஞ்சிப்பாட்டு (225), கலித்தொகை (36, 119), பதிற்றுப்பத்து (70, 74, 21), அகநானூறு(220, 361), பெரும்பாணாற்றுப்படை (315-6), திருமுருகாற்றுப்படை (94-6), சிறுபஞ்சமூலம்(33), கார்நாற்பது (7) ஆகியன வேள்வி குறித்துக் கூறும் சங்கப் பாடல்கள். வேள்விக் குண்டத்தின் கீழ் ஆமை வைப்பதாகத் தைத்திரீய சம்கிதை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (361), வேள்வித்தூணில் துணி சுற்றுவதாக பூர்வமீமாம்சை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (220), காட்டுகின்றன.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15, மதுரைக் காஞ்சி 759-863), சோழன் கரிகாலன் (புறம் 224), இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (புறம் 363, 400), நலங்கிள்ளி (புறம் 31, 32), சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப்பத்து 64, 70) ஆகியோர் வேள்விகள் செய்ததைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியர் பாண்டவ குலம் என்ற கருத்தில் கவுரியர் (புறம் 3, அகம் 342), பஞ்சவர் (அகம் 70, புறம் 58) எனவும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. சோழர்கள் தம்மைச் சிபியின் வழித்தோன்றல்கள் (புறம் 39, 43) என்றும் எண்ணினார். மூவேந்தர் தம்மை வைதீகம் கூறும் சத்திரியக் குலம் என்று கருதியதால் வேள்விகள் செய்யப் புகுந்தனர்.

4. இம்மையும் மறுமையும் :—

உடலும் உயிரும் கொண்ட உயிரினங்களுக்கு 1. ஸ்தூல சரீரம் உடலில் உயிர் இருக்கும் வரை உள்ள உடல் என்றும், 2. ஸுக்ஷ்மசரீரம் உயிர் முக்தி அடையும் வரை இருக்கும் என்றும், எல்லா உயிரும் ஸ்தூல சரீரம் விட்டு நீங்கும் என்பதும் இம்மை – மறுமை குறித்த வேத சமய நம்பிக்கை. உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு நிலையற்றது. அதாவது வாழ்க்கை நிலையற்றது. உடலிலிருந்து உயிரைப் பிரிப்பது ‘கூற்றம்’ ‘காலன்’ என்பது வைதீக சமயக் கருத்து.

கூற்றம் குறித்து மலைபடுகடாம் (209), புறநானூறு (4, 195), பதிற்றுப்பத்து (39), பரிபாடல் (5) ஆகிய பாடல்கள் கூறுகின்றன. உயிர் நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல மகன் பிண்டம் கொடுப்பார் என்பதைப் புறநானூறு (222, 246) பாடல்கள் காட்டுகிறது. இக்கருத்தை மகாபாரதமும் காட்டும். இம்மையில் செய்த வினைப்பயன் மறுமையில் துய்க்கப்படும் என்பதைப் புறநானூறு (29, 134), நான்மணிக்கடிகை (15) பாடல்கள் காட்டுகின்றன.

நல்வினை செய்தோர் சொர்க்கம் செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு (174), பரிபாடல் (19), திருக்குறள் (86) பாடல்கள் மூலம் அறியலாம். அவ்வாறே தீவினை செய்தோர் நரகம் செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு (5), குறுந்தொகை (292), குறள் (130) பாடல்கள் மூலம் அறியலாம். மேலும், பலன் கருதாது நல்வினை செய்யவேண்டும் என்று கீதை (2, 47) கூறும் கருத்தைப் புறநானூறு (134, 182), அகநானூறு (54), பதிற்றுப்பத்து (38) பாடல்கள் காட்டுகின்றன.

கணவனின் மறைவுக்குப் பிறகு மனைவி உடன்கட்டையேறும் நிகழ்வை புறநானூறு (62, 246) பாடல்களும், கைம்மை நோன்பு ஏற்பதை புறநானூறு (234) பாடல்களும் காட்டுகின்றன.

சொர்க்கம் என்பதை தேவருலகம், உயர்நிலையுலகம், மேலோருலகம், நாகம், வச்சிரத்தடக்கை நெடியோன் கோயில், பெரும்பெயருலகம், புத்தேணாடு, துறக்கம், சிறந்தோருலகம், இமையார் தேயம் என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன.

இந்திரன் — தேவருலகம் ஆளும் இந்திரனும் பல பெயர்களால் சங்கப்பாடல்களில் காட்டப்படுகின்றான். அவனுக்கு வேள்விகள் செய்யப்படுகிறது என்பதும் அவன் அகலிகையை வஞ்சித்த குற்றத்திற்காக கவுதமர் சாபம் பெற்றான் என்ற கதையும் பரிபாடல் (19) நூலில் காட்டப்படுகிறது. திருக்குறளும் (25) இந்திரனின் ஐம்புலன் அடக்கமின்மையைக் கூறுகிறது. தேவருலகில் வாழ்வோர் குறித்து புறநானூறு (174, 182, 377), குறள் (413), பட்டினப்பாலை (184), கலித்தொகை (2, 82), பதிற்றுப்பத்து (74, 89), அகநானூறு (136), பரிபாடல் (3) ஆகிய பாடல்கள் மூலம் அறியலாம்.

வருணன் — நெய்தல் தெய்வம் எனத் தொல்காப்பியம் (அகத். 5), மன்மதன் – இரதி பரிபாடல் (19) போன்ற பிற தேவருலக தேவதைகள் குறித்தும் சங்கப்பாடல்களில் குறிப்புக்கள் காணப்பெறுகின்றன.

5. தெய்வங்கள் :—

பிரும்மா, திருமால், சிவன், முருகன் தொடர்புகள் குறித்து மிகுதியாகவும், பலராமன், கொற்றவை குறித்து சிலவும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

பிரும்மா — பிரும்மா குறித்து கலித்தொகை (2), பெரும்பாணாற்றுப்படை(402-4), திருமுருகாற்றுப்படை(164-5), பரிபாடல் (8), இனியவை நாற்பது (1), இன்னாநாற்பது (1) பாடல்களிலும்;

திருமால் — திருமால் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), முல்லைப்பாட்டு(1-3), பெரும்பாணாற்றுப்படை (29-30), , கலித்தொகை (103, 104, 105, 124, 145), இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1), புறநானூறு (174), கார்நாற்பது (1), திணைமாலை(150-96), பரிபாடல் (4, 8, 13, 15, 49), மதுரைக் காஞ்சி (591) பாடல்களிலும் காணலாம். இப்பாடல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதப் பாடல்கள் கூறும் திருமாலுடன் கருத்தொற்றுமை கொண்டவை.

சிவன் — சிவன் குறித்து அகநானூறு (181, 220, 360), கலித்தொகை (2, 38, 103, 142, 150), புறநானூறு (6, 56, 91), இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1), பரிபாடல் (5, 8), மலைபடுகடாம் (83), திருமுருகாற்றுப்படை (151, 256), பழமொழி (124), மதுரைக் காஞ்சி (453) பாடல்களில் வைதிக சமயத்தின் தொடர்பு காட்டப்படுகிறது. இராவணன் கைலாயத்தைத் தூக்கிய கதையைக் கலித்தொகை (38) பாடலும்; சிவன் முப்புரம் எரித்த கதை புறநானூறு (55), பரிபாடல் (2, 5, 8, 9, 13, 82), கலித்தொகை (பாலை 1) பாடல்களில் இடம் பெறுகிறது. சிவன் முப்புரம் எரித்த இதே கதை மகாபாரதம் கர்ணபர்வத்தில் காணப்படுகிறது.

முருகன் — முருகன் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), அகநானூறு (59), புறநானூறு (23), கலித்தொகை (93), குறுந்தொகை (1), இன்னா நாற்பது (1) ஆகியவற்றிலும் முருகன் பிறப்பு குறித்து பரிபாடல் (5, 8, 9, 14, 17), திருமுருகாற்றுப்படை (151-173, 260) கூறும் புராணக்கதைகள் மகாபாரதம் அநுசாஸநபர்வம் (130,133), வநபர்வம் (227) பகுதியிலும், வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் (36, 37) பகுதியிலும் காணப்படுகின்றது. சூரபன்மனை முருகன் அழித்ததைப் பதிற்றுப்பத்து (11), புறநானூறு (23, 56), திருமுருகாற்றுப்படை (46), அகநானூறு (59), பரிபாடல் (4, 14) பாடல்கள் கூறுகின்றன. முருகன் வள்ளியை மணந்த கதை மகாபாரதத்தில் இல்லை.

பலராமன் — பலராமன் குறித்து புறநானூறு (56, 58), கலித்தொகை (104), பரிபாடல் (2), கார்நாற்பது (19), பழமொழி நானூறு (37), திணைமாலை நூற்றைம்பது (96) போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. பலராமன் குறித்த இப்பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழி நூல்களின் மேற்கோள் கொடுக்கவில்லை. வடமொழி நூல்கள் சொல்லும் பலராமன் தோற்றம் செயல்பாடு குறித்து சங்கப்பாடல்கள் சொல்லும் பலராமன் தொடர்பு காட்டவில்லை.

கொற்றவை — பாலைநிலத்துக் கொற்றவை குறித்து, அவள் பார்வதியின் மறுவுருவம் என்ற கருத்து திருமுருகாற்றுப்படை (258) , நெடுநல்வாடை (166) நூல்களில் இடம் பெறுகின்றன. கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. மகாபாரதத்தில் போர் துவங்குமுன் துர்கை துதிக்கப்படுகிறாள் எனக் குறிப்பிட்டு விடாரபர்வம் (8), பீஷ்ம பர்வம் (23) மேற்கோள்களை ஆசிரியர் கொடுக்கிறார். அந்த மேற்கோள் வரியிலேயே ‘ஆர்யே மந்திரவாஸிநி’ என்ற குறிப்பும் உள்ளது. பலராமன் பகுதி போல இப்பகுதியும் மிகச் சுருக்கமாகவே அமைந்துள்ளது.

6. ஊழ் :—

முற்பிறப்பின் வினைப்பயன்கள் இப்பிறவியில் தொடரும் என்பதும், அதனை ஊழ், தெய்வம், வினை, பால் என்ற சொற்களாலும் குறிப்பிடுகிறது வைதீக சமயம். தொல்காப்பியம் (கிளவி. 57), புறநானூறு (236), குறுந்தொகை (366), நற்றிணை (88), கலித்தொகை (118), குறள் (125, 380, 619) போன்ற சங்கப் பாடல்களில் வினை, வினைப்பயன் கருத்துகள் விரவியுள்ளன. இக்கருத்து மகாபாரதத்திலும் பலவிடங்களில் கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

இப்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பிலேயும் உறுத்தூட்டும் என்பதற்கு திணைமாலை நூற்றைம்பது (123) பாடலையும், அதே கருத்தைக் கொண்ட ஒரு வடமொழி தர்ம சாஸ்திர செய்யுளையும் கூறுகிறார். மேற்கொண்டு, வினைப்பயன் ஏழு பிறப்புகளிலும் தொடர்வது என்ற கருத்துக்கு குறள் (62, 125, 835, 396) பாடல்களைச் சுட்டும் ஆசிரியர் அதற்கு இணையான ‘ஏழ்பிறப்பு’ என்ற கருத்தாக்கம் கொண்ட வடமொழி செய்யுட்களை மேற்கோளாகக் காட்டினாரில்லை.

7. ஏனைய செய்திகள் :—

இப்பகுதியில்; இராமாயணக் கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (378), அகநானூறு (70), பழமொழி நானூறு (257) பாடல்களும்;

மகாபாரதத்தில் இடம்பெறும் பல்வேறு கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (2, 122), பெரும்பாணாற்றுப்படை (303, 415), கலித்தொகை (2, 25, 26, 52, 104), பழமொழி நானூறு (137, 356), சிறுபாணாற்றுப்படை (238), மதுரைக்காஞ்சி (202), பதிற்றுப்பத்து (31), பரிபாடல் (5), நெடுநல்வாடை (163) பாடல்களும் கொடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து வைதீக சமயக் கருத்துகள் கொண்ட ஆசாரக் கோவை (17, 24, 29, 35, 39, 43, 46, 83) பாடல்களுக்கு கெளதம தர்ம சூத்திரம் பாடல்கள் பலவற்றை மூலமாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

செய்த தீவினை சிலவற்றுக்குக் கழுவாய் (பரிகாரம்) இல்லை என்ற கருத்து மகாபாரதத்தில் வருவது போன்றே புறநானூறு (34) பாடலும் காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். முன்னோர் செய்த நல்வினை பின்னோரை காக்கும் எனப் புறநானூறு (102) பாடல் கூறுவதையும் சுட்டுகிறார் ஆசிரியர்.

வானியல் குறிப்புகள் கொண்ட புறநானூறு (117), பரிபாடல் (11) பாடல்களைக் காட்டும்பொழுது, ‘வானியல் குறிப்புகள்’ என்பவையே வேத சமயத்துடன் தொடர்பு கொண்டவை என்ற கருத்து ஆசிரியருக்கு உள்ளதாகத் தெரிகிறது. அவற்றுக்கு அவர் வடமொழி மேற்கோள்கள் காட்ட முற்படவில்லை. அவ்வாறே ‘வடக்கிருத்தல்’ என்ற வழக்கம் புறநானூறு (65), அகநானூறு (55) பாடல்கள் மூலம் காட்டப்படும்பொழுதும் வேத சமய மேற்கோள்கள் கொடுக்கப்பெறவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேலும், கௌதம தர்ம சூத்திரம் (1,7,1) மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்கிறது என்று கூறுவதுடன், அக்கருத்தை ‘வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’ என்ற புறநானூற்றுப் (183) பாடலுடனும், அதே கருத்தைக் கூறும் குறள் (409) பாடலுடனும் இணைத்து சான்றாகக் காட்டப்படுவது சற்றே திகைப்படைய செய்கிறது. இவ்விரு பாடல்களையுமே வேதசமயம் காட்டும் மக்கட்ப்பிரிவுகளையும் அதற்கான வாழ்வியலையும் மறுக்கும் பாடலாகவே நம்மில் பலர் அறிந்துள்ளோம்.

தொடர்ந்து இப்பகுதியில் (பக்கம்: 64), தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் போற்றப்பட்டது என்ற கருத்தைக் கொண்ட — புறநானூறு (183), பதிற்றுப்பத்து (38) பாடல்களை நுழைப்பது பொருத்தமற்று இருக்கிறது. எவ்வாறு தமிழர் வாழ்வியலில் நட்பு என்பதற்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு குறித்து வடமொழி மகாபாரதக் கதையிலிருந்து மேற்கோள் காட்டுவது பொருந்தாதோ, எவ்வாறு கடையேழு வள்ளல்கள் கொடைக்கு மகாபாரதக் கர்ணன் கதையை அடிப்படையாகக் காட்ட வழியில்லையோ அவ்வாறே மானிடவியல் கீழே வரக்கூடிய காதல், நட்பு, அன்பு, திருமணம், கொடை, வீரம், மரணம் போன்றவற்றுக்கும் தொடர்பு கொடுத்தல் பொருத்தமற்றது.

மனித உணர்வுகளின் வெளிப்பாடான செயல்பாடுகளை உலகின் பிற இடத்திலிருந்து மற்றொரு பகுதியினர் அறிந்து கொண்டார்கள் எனக் கூறுதல் ஏற்புடையதல்ல. அதன் அடியொற்றி நிகழும் நடைமுறைகளில் இடம்பெறும் அயல் பண்பாட்டுக் குறிப்புக்கள், அதற்கு இணையான கதைக் குறிப்புகள் மட்டுமே பொருத்தமாக இருக்க வழியுண்டு. பிறப்பு, வாழ்வு, இறப்பு போன்றவை உலகெங்குமுண்டு. அவற்றின் சடங்குகளில் அயல் பண்பாட்டுத் தாக்கத்தை மட்டுமே நாம் ஒப்பிடுகையில் கருத்தில் இருத்தவேண்டும். பசியெடுத்தால் உணவு உண்ணுதல், அதைப் பகிர்ந்துண்ணுதல் என்பவை எல்லாம் அடுத்தவர் கற்றுக் கொடுத்துத்தான் நாம் அறிந்தோம் என்பது எந்த அளவு ஏற்புடையதாக இருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும். சுனையில் உள்ள சிறிதளவு நீரையும் பெண்மான் குடிக்கட்டும் (ஐந்திணை ஐம்பது -38) என்று தானும் குடிப்பது போலப் பாவனை செய்து, பெண்மானை நீரைக் குடிக்க வைத்த ஆண்மான் செய்த விட்டுக் கொடுத்தலை அறிய எந்த வேத சமய நூல்களைக் கற்றது? என்ற கேள்வி இதற்குச் சரியான விடையைக் காட்டும்.

8. முக்தி :—

முக்தி என்பது இருவகைப்படும், அவை ‘விதேகமுக்தி’, ‘ஜீவமுக்தி’. இறந்தபின் அடையும் விதேகமுக்தியும் இருவகைப்படும். அது ‘அபராமுக்தி’ என்றும், ஜீவன் பிரும்மத்தோடு ஒன்றுபட்டால் ‘பராமுக்தி’ என்றும் அறியப்படும்.

முக்தியை அடையக் கடவுள் விரும்பும் ஒழுக்க நெறியில் நிற்கவேண்டும். அப்பொழுது அஞ்ஞானம் நீங்கி ஞானம் தோன்றும். திருக்குறள் பாடல்கள் அபராமுக்தியை (குறள் 3), பராமுக்தியை (குறள் 358) காட்டுகிறது என்கிறார் ஆசிரியர்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார் (குறள் 6), இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு (குறள் 352) ஆகிய ஒழுக்கநெறி பாடல்களின் கருத்துகள் கீதையின் கருத்துகள் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது.

கடோபநிஷத் விளக்கும் முக்தி என்பதை ‘செலவு’ என்ற சொல் மூலம் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (62) ‘புலம் பிரிந்துறையும் செலவு நீ நயந்தனை’ என விளக்குகிறார் என்று கூறும் ஆசிரியர் முக்தி என்பதும், செலவு என்பதும் ஒருபொருட்கிளவி என்றும் கூறுகிறார். அவ்வாறே ‘அந்நிலை’ என்ற சொல் பெரும்பாணாற்றுப்படையின் (466) ‘நில்லா உலகத்து நிலைமை தூக்கி அந்நிலை அணுக வேண்டி’ என்ற வரியில் முக்தியை விளக்குகிறது என்கிறார்.

அவ்வாறே, இப்பிறப்பிலேயே பற்றற்ற நிலையை அடைவது குறித்து கடோபநிஷத் மற்றும் மகாபாரதம் கூறும் கருத்துக்களைத் திருக்குறள் (370), மதுரைக் காஞ்சி (468-471) சிறுபஞ்சமூலம் (36) காட்டுகிறது என்று கூறும் ஆசிரியர் முடிவாக ……

“சங்கநூல்கள் பலவற்றுள் வைதிகமார்க்கமே உணர்த்தப்பட்டது என்பது அறியப்படும்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

இக்கருத்து எந்த அளவு ஏற்புடையது என்பது ஆராயத்தக்கது. சங்க நூல்களில் வைதீக சமய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்றும், வேத சமயத்தைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினர் என்பதுமே ஏற்கத் தக்கதாக இருக்கும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்களிலிருந்து, எத்தனை பாடல்களை ஆசிரியர் மேற்கோள் கொடுக்கிறார் என்ற ஒரு மீள்பார்வையே பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இதில் இடம் பெறாமையையும் காட்டும். அவ்வாறே வைதீக சமய நூலை மொழியாக்கம் செய்த ஆசாரக்கோவை நூலிலிருந்தே மேற்கோள் கொடுப்பதும் பொருந்தாமல் போகும்.

சமண சமயக் கருத்துகளோ புத்த சமயக் கருத்துகளோ வைதீக சமயத்திலிருந்து பிரிந்த காரணத்தால் அதே இம்மை, மறுமை, வீடுபேறு போன்ற கருத்துகளின் தாக்கத்தோடும், அதே தெய்வங்கள், தேவர்களின் கதைகளுடனும் இருக்கும். ஆனால் அவை வேதத்தை ஏற்ற சமயங்கள் எனக் கூற வழியில்லை என்பதையும் அறிவோம். இதற்கு ஆசிரியர் திருக்குறளை வைதீக சமயநூல் என்ற கோணத்தில் எடுத்துக் கொள்வதைச் சான்றாகக் காட்டலாம்.

சங்க நூல்களில் வைதீக சமய கருத்துகள் எவையெவை என அறிய இந்த நூல் ஒரு சிறந்த குறிப்பு நூல். இது சமய அடிப்படையில் சங்கப்பாடல்களை ஆராய்வோர் எவரும் படித்திருக்க வேண்டிய நூல் என்றால் அது மிகையன்று.

நூல் குறிப்பு:

சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்

ஆசிரியர் : சுப்பிரமணிய சாஸ்திரி, P. S.

பதிப்பாளர்: திருச்சி : யுனைடேட் பிரிண்டர்ஸ் லிமிடெட், அச்சுக்கூடம் , 1951

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdl0ly

[Source: Tamil Digital Library]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

 

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

முதலில் மிகவும் பிற்காலத்தில் தோன்றி நீண்டகாலம் நீடிக்காமல் என்றோ ஒழிந்துபோன ஆரியரை
பழம்பெருமை உடைய தமிழருக்கு எதிரியாகக் காட்டி
அவர்களை நாகரீகத்திலும் பழமையிலும் தமிழருக்கு சமமாக ஆக்குவதை நிறுத்துங்கள்.

பூணூல் என்பது தமிழர் பயன்படுத்தியதே!

ஆரியர் பூணூல் அணிந்திருந்ததாக எந்த சான்றும் இல்லை.

சொல்லப்போனால் பூணூல் ஒரு நாகரீக வளர்ச்சியின் அடையாளம்

அதாவது பருத்தி விவசாயம் செய்து அதிலிருந்து நூலெடுத்து தறி இயந்திரம் மூலம் ஆடை நெய்த குடி நாம் என்பதன் அடையாளம்.

காட்டுமிராண்டி ஆரியரால் இத்தனை நவீனமாக செயல்பட்டிருக்க முடியுமா?

தனது மேன்மையையும் அதிகாரத்தையும் காட்ட கேவலம் ஒரு நூல்தான் அணியவேண்டுமா?

(மேற்கண்ட சிந்தனையை
முன்வைத்தவர் ம.பொன்ராஜ் காலாடி அவர்கள்)

இது புரியாமல் எதற்கெடுத்தாலும் பூணூல் பூணூல் என்று கத்துவானேன்?

பூணின் நூல் என்பது வில்லின் நாண் எனவும் அது அளவைக்கு பயன்பட்டதையும்
முப்புரிநூல் பூணூல் கிடையாது எனவும் ஏற்கனவே சான்றுகளுடன் போட்டாயிற்று.

(தேடுக:- பூணூல் வில்லின் நாண் வேட்டொலி
தேடுக:- தொல்காப்பியம் முப்புரிநூல் பூணூலா வேட்டொலி)

இறந்துபோன ஆரியத்திற்கு பூணூலை மாட்டி அதை அறுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று இனப்பகை திராவிடம் சொல்கிறது.
உண்மையான பகைவரிடம் இருந்து நம்மை திசைதிருப்புகிறது.

மூளையுள்ள தமிழினம் யோசிக்கவேண்டுமா? இல்லையா?

சங்ககாலத்தில் நான்கு வகை குடிகளும் அதில் ஏற்றத்தாழ்வும் இருந்தனதான்.
ஆனால் ஏற்றத்தாழ்வு மிகமெல்லிய அளவே இருந்தது.

முதலில் குடியானது பிறப்பால் அமையாமல் செய்யும் தொழிலால் அமைந்தது.
அதாவது ஒரு விவசாயி மகன் கற்கவேண்டியதை கற்று பார்ப்பனராக முடியும்.
பிறகு ஒரே தொழில் புரிந்தோர் தமக்குள் திருமணம் செய்துகொண்டனர்.
தமது அடுத்த தலைமுறைக்கு அந்த தொழிலைக் கற்றுக்கொடுத்தனர்.
இது குடி அடையாளம் பிறப்புவழியாக அமையக் காரணமானது

குடியானது பிறப்பு அடையாளமாக மாறிய பிறகும் பார்ப்பனர் பிற சாதிகளை விட கொஞ்சமே கொஞ்சம் அதிக ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.
இதைப் பார்ப்பனீயம் எனலாம்.
பார்ப்பனீயம் பிற சாதிகளை ஒடுக்கியதில்லை.
(தேடுக:- இழிசினர் வேட்டொலி)

ஆனால் இந்த பார்ப்பனீயத்தை விட 100 மடங்கு கொடியது பிராமணீயமும் அதன் நால்வர்ண கொள்கையும்.

கி.பி.850 க்கு பிறகு தமிழக நதிக்கரை ஓரங்களில் கற்களால் பெருங்கோயில்கள் சோழர்களால் கட்டப்படுகின்றன.
  வேலைவாய்ப்பு கிடைப்பதால் சோழ நாட்டு பார்ப்பனர்கள் தமிழகம் முழுவதும் பரவுகின்றனர்.
(இதுவே பார்ப்பனர் பேசும் தமிழ் அவர்களின் வட்டார வழக்குடன் அதாவது சோழநாட்டு காவிரிக்கரை பாணியில் உள்ளது)

இதே வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வடக்கே இருந்த பிறமொழி பிராமணரும் தமிழகத்திற்கு வருகின்றனர்.
அவர்களுக்குத் வடமொழியில் பூசை செய்கிறார்கள்.
பிறகு கோயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பல தெய்வங்களுடன் பெரிதாகவும் முழுநேரமும் இயங்குமாறும் ஆக்கப்படுகின்றன.

பூசாரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அப்போது முதலில் பல்லவர்களும் பிறகு சோழர்களும் கங்கைக் கரையிலிருந்தும் நர்மதைக் கரையிலிருந்து பிறமொழிப் பிராமணர்களை அழைத்துவந்து குடியேற்றுகிறார்கள்.
இவர்கள் வடமா என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுடன் உள்ளே நுழைந்த வைதீக முறையையும் பிராமணீயத்தையும் பார்ப்பனர்கள் ஆகமம் என்ற முறையை உருவாக்கி தடுக்கிறார்கள்.
தமிழ் அரசர்கள் ஆண்டவரை ஆகம முறையே கோவில்களில் நடைமுறையில் இருந்தது.
இதன்படி யாரும் பூசாரி ஆகலாம்.
கடவுளின் பெயரால் யாரையும் தாழ்த்தமுடியாது.
(தேடுக: தமிழர் படைத்த ஆகமம் கேடயம் வேட்டொலி)

கருவறையில் பூசாரி மட்டுமே நுழையமுடியும் என்ற விதி கிடையாது.
தஞ்சை பெரியகோவில் லிங்கத்தை இறுத்தியவர் கருவூர்த் தேவர் என்பவர் ஆவார்.

வந்தேறி பிராமணர் யாரும் பூர்விக தமிழ்ப் பார்ப்பனருடன் ஒட்டிவோ கலக்கவோ இல்லை.
ஆனால் தமிழ்ப் பார்ப்பனர் பயன்படுத்தும் பட்டங்களை இவர்களும் பயன்படுத்துவதால் குழப்பம் நிலவுகிறது.

தமிழராட்சி நடந்தவரை கோயில்கள் பார்ப்பனர் நிர்வாகத்தில் இருந்ததில்லை
இராசராசன் காலத்தில் தஞ்சை பெரியகோவில் தலைமை பார்ப்பனரல்லாத பவணபிடாரர் என்பவரிடம் இருந்தது.
கடைசிப் பாண்டியன் காலத்தில் மதுரை மீனாட்சி கோவில் தலைமை அபிசேகப் பண்டாரம் என்பவரிடம் இருந்தது.

தமிழராட்சி வீழ்ந்து வேற்றின விஜயநகர ஆட்சி பரவிய பிறகுதான் பிராமணீயம் தமிழகத்தில் தலைதூக்குகிறது.
சாதிய ஏற்றத்தாழ்வு உச்சத்தை அடைந்து தீண்டாமை நடைமுறைக்கு வருகிறது.
(சோழர் காலத்து தீண்டாச்சேரி நோயாளிகள் பராமரிப்புப் பகுதி.
சேரி என்பது குடியிருப்பு என்றே பொருள்படும்.
பார்ப்பன சேரி கூட உண்டு)

கோவில்களில் இருந்து பார்ப்பனர், பறையர், பண்டாரம், பிடாரர், ஓதுவார் ஆகியோர் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் நிரப்பப்பட்டு தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.
(தேடுக:- பார்ப்பனர் தமிழில் ஏன் ஓதுவதில்லை வேட்டொலி
தேடுக:- தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?)

சமஸ்கிருதம் படித்து வைதீக பூசைமுறையை ஏற்று நாயக்கர் ஆட்சியில் சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர் தவிர பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வீழ்ந்துவிட்டனர்.
சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர்கூட தமிழைக் கைவிடவில்லை.
அவர்கள் தமது வட்டார வழக்கைக்கூட கைவிடவில்லை.
பார்ப்பனர் பேசும் தமிழ் தூய தமிழுக்கு நெருக்கமானது.
(தேடுக: பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே வேட்டொலி
தேடுக: வெதுப்பகம் வேட்டொலி)

ஆக அவாளும் நம்மவாளே!
அவிய்ங்களும் நம்மவிய்ங்களே!
அவியளும் நம்மவியளே!
அவுகளும் நம்மவுகளே!

நாயக்கர் ஆட்சியில் அனைத்து பதவிகளிலும் உயர்சாதியினரும் பிராமணரும் அமர்த்தப்படுகின்றனர்.
(தமிழராட்சியில் அவ்வாறு இல்லை.
தேடுக: கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர் வேட்டொலி
தேடுக: பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்)

இதோடு நில்லாது நாயக்கர் ஆட்சியில் நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் (அதிலும் குறிப்பாக பள்ளர்கள்) அளவுக்கதிகமாகச் சுரண்டப்பட்டனர்.
பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டன.
(தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி)

நாயக்கர்கள் தமிழை வெறுத்தனர்.
தமிழ்ப் புலவர்கள் ஆசிரியர்கள் மிகவும் வறிய நிலையை அடைந்தனர்.
அவர்களது தெலுங்கு கன்னட மொழி அப்போதுதான் உருவாகி ஆரம்பநிலையில் இருந்தது.
அதனால் தமிழை ஒழிக்கமுடியவில்லை.
(தேடுக: நாயக்கர் காலத்தில் தமிழ்)

தமிழ் இசை திருடப்பட்டு கர்நாடக சங்கீதம் ஆனது.
தமிழ்ப் பாடகர்கள் நடனமாடுவோர் என அத்தனை பேரும் வேலையிழந்தனர்.
(தேடுக: கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி)

ஆனால் இது அத்தனையையும் ஈடுகட்டியோர் பார்ப்பனரே !

ஆக 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நுழைந்த பிராமணீயத்தை 3500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆரியருடன் தொடர்புபடுத்துவது நகைப்பிற்குரியது.

பார்ப்பனர் நிறமாக இருப்பதை வைத்து ஆரியருடன் தொடர்புபடுத்துவோர் அது அவர்கள் தொழிலின் காரணமாக ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
ஆரியரின் தோற்றமும் பார்ப்பனரின் தோற்றமும் முற்றிலும் வேறுபட்டவை.
( தேடுக: மஞ்சள் முடி ஆரியர் வேட்டொலி)

சங்ககால அந்தணர் வேறு பார்ப்பனர் வேறு என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப்
" பார்ப்பார் " ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
" அந்தணர் " தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென
" ஐயர் " வாய்பூசுறார் ஆறு
(பாரிபாடல்-திரட்டு 2:50-63)

இப்பாடலில் பார்ப்பார், அந்தணர், ஐயர் ஆகிய மூவரும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்படுவதை உற்றுநோக்குக.

பார்ப்பனர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு தொடர்ந்து தொண்டு செய்தே வந்துள்ளனர்.
தமிழரில் 1% மட்டுமே இருக்கும் (2% பிற பிராமணர்) பார்ப்பனர் அளவுக்கு தமிழுக்கு தொண்டு செய்த வேறொரு சமூகத்தைக் காட்டமுடியாது.

வைணவத்தில் சாதீயத்தை பிராமணர் புகுத்தியபோது அதை எதிர்த்து அவர்களை வடகலை என்று ஒதுக்கி  தென்கலை என்ற (பெரும்பான்மை) பிரிவைத் தக்கவைத்தோர் பார்ப்பனர்கள் !
இருவருக்கும் இடையேயான மோதல் 1880 களில் பல வழக்குகள் நடந்து மேல்முறையீடு லண்டன் வரை சென்றது
ஆனாலும் தென்கலையே சரி என்று தீர்ப்பு வந்தது.

(தேடுக: தென்கலை ஐயங்கார் சாதி எதிர்ப்பு கொள்கை fbtamildata)
 
சக்கிலியரான பொம்மக்கா திம்மக்காவை காதலித்து மணந்த முத்துப்பட்டர் வரலாற்றில் உண்டு!

தாழ்த்தப்பட்டோருக்கு பூணூல் போட்ட பாரதியும் உண்டு!

மீனாட்சி கோவிலில் ஆலயநுழைவு நடத்திய வைத்தியநாத ஐயரும் வரலாற்றில் உண்டு!

மலையகத்தில் உழைக்கும் மக்களுக்காக தன் ஊரையும் தொழிலையும் விட்டுவிட்டு இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி தமிழ்த் தோட்டத் தொழிலாளருக்காகப் போராடிய கோதண்டராம நடேசையர் வரலாற்றில் உண்டு.

பிராமணரையும் பார்ப்பனரையும் குழப்பவேண்டாம்
திராவிட விசத்தை தலைக்கு ஏற்றிக்கொண்டு திரியவேண்டாம்.

ஆங்கிலேயர் காலத்தில் படித்து பதவிகளுக்கு வந்த தமிழ்ப் பார்ப்பனரை கீழே இறக்க வந்தேறிகள் உருவாக்கியதே திராவிடம்.

  நம்மை பிரித்தாள ஆங்கிலேயர் உருவாக்கி தமது நிழலில் வைத்திருந்ததே திராவிடம்!

தமிழகத்தின் முக்கால்வாசி நிலவுடைமையை கையில் வைத்திருக்கும் வந்தேறிகளின் அமோக ஆதரவுடன் வளர்ந்ததே திராவிடம்!

வந்தேறி உயர்சாதி வெறியர்களின் கூடாரமே திராவிடம்!

திராவிடம் எதிர்த்தது பார்ப்பனரையே! பிராமணரை அல்ல!
(தேடுக: திராவிடலு தொடர் வேட்டொலி)

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீதான பிற தமிழரின் பொறாமையே திராவிடத்தின் ஆணிவேர்.

quellen16k20.jpg

கைவிடுவோம் அந்த பொறாமையை!
பிடுங்கி எறிவோம் திராவிட ஆணிவேரை!

பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு அறிந்து கொள்வோம்!

உரக்கச் சொல்வோம் பார்ப்பனர் தமிழரே!

படம்: 1890 களில் எடுக்கப்பட்ட தில்லை அந்தணர் படம்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பார்ப்பனரை 'பார்ப்பான்' என்று அழைக்கும் இஸ்லாமிஸ்டுகள்!

 
பார்ப்பனரை 'பார்ப்பான்' என்று அழைப்பது வசைச்சொல்லாகி விட்டதாகவும், அவர்களை 'பார்ப்பான்' என்று அழைக்காமல் அந்தணர் என்று அழைக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 'பார்ப்பனர்' 'பார்ப்பான்' போன்ற பதங்களை பயன்படுத்துவது இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம் என்று கூட சொல்கிறார்கள்.

'பார்ப்பனர்' 'பார்ப்பான்' போன்ற சொற்களைப் பயன்படுத்தியவன் 'இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம்' கொண்டவனாயின், "பார்ப்பனர்" என்று யாரெல்லாம் எழுதுகிறார்களோ அவர்களைவரும் இஸ்லாமிஸ்ட் என்றே அறியப்படுவராம். இஸ்லாமிஸ்ட் 'எதேச்சாதிகார மனோபாவ'த்தைக் கட்டுடைப்பதற்காகக் கொஞ்சம் பட்டியல் பார்ப்போம்:


தொல்காப்பியர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறு வகையோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).

வள்ளுவர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (ஒழுக்கமுடமை 134).

நானூறு இஸ்லாமிஸ்ட்கள்:

"ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும் ..." (புறம் 9).
"பார்ப்பார்த் தப்பிய கொடுமை ..." (புறம் 34).
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..." (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப் பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24).

இளங்கோ எனும் இஸ்லாமிஸ்ட்:

"நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் றகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார் ..." (சிலப்பதிகாரம் 1:1:49)

சீத்தலைச் சாத்தனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி" ... (மணிமேகலை 22:41,42)

மரியாதை தெரியாத இஸ்லாமிஸ்ட் காளமேகம்:

”மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - …” (பாடல் 6).

மாடுதின்பான், பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).

டிஸ்கி: காற்புள்ளி இருப்பதை மறந்து "மாடு தின்பான் பார்ப்பான்" என்று வாசகர்கள் படித்துக் குழம்பிவிட வேண்டாம். இறுதிச் சொல்லைப் படித்து விட்டு முதற் சொல்லுக்குப் போக வேண்டிய லூப் வகைச் செய்யுளாகுமிது.
இதைக் "கடைமொழி மாற்று" என்று கூறுவர்.

பாரதி எனும் இஸ்லாமிஸ்ட்:

"பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சமூகம் - மறவன் பாட்டு 6 - பக்கம் 505).

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சுதந்திரப் பள்ளு - பக்கம் 181).

"சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் - அது
சாத்திரமன்று; சதியென்று கண்டோம்" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - ஸ்மிருதிகள் 13 - பக்கம் 679).

நெடுங்கண்ணனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே - (குறுந்தொகை-156)

நல்லாதனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் ..." (திரிகடுகம் 34)

பரஞ்சோதி முனிவர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின்
மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ..." (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
"சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).

மேற்காணும் பழைய இஸ்லாமிஸ்ட்கள் தவிர்த்து, நம் சமகால இஸ்லாமிஸ்ட்களும் நிறைய உள்ளனர்.

குந்தைவையின் சொற்களைப் 'பயன்படுத்திய' பாலகுமாரன் என்ற இஸ்லாமிஸ்ட்:

"சேரதேசத்துப் பார்ப்பனர்களால் மதுரையிலுள்ள வாலிபப் படை ஒன்று போருக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் போர் புதுவகையானது என்று சொல்லப் பட்டது. விடியற்காலை வேளை - அல்லது இருள் பரவும் நேரம் ஓடிவந்து தாக்கி விட்டு மறைந்து கொள்வார்கள். வீடுகளுக்கு நெருப்பு வைத்து விட்டுக் கொள்ளையடிப்பார்கள். மூன்று நான்கு குழந்தைகளாய் கயிற்றில் கட்டி, கொத்தாய் குதிரில் போட்டு ..." (உடையார் முதல் பாகம் - பக்கம் 388).

"தண்டச் சோறுண்ணும் பார்ப்பை"ப் 'பயன் படுத்தும்' பல நூறு இஸ்லாமிஸ்ட்கள் இணைய உலகில் இன்னும் வலம் வந்து கொண்டு தங்கள் எதேச்சாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றர். அவர்களையெல்லாம் பட்டியலிட்டால் இஸ்லாமிஸ்ட்டுகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, திண்ணையில் 'பயன் படுத்திய' இஸ்லாமிஸ்ட்களை மட்டும் இங்குத் தருகிறேன்:

//'சூத்திரற்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண் ' என்றான் பாரதி. 'இஸ்லாமியருக்கொரு நீதி; விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு வேறொரு நீதி , சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண் ' என்பதல்லவா இந்த நிலைமை// "சமரசமன்று : சதியென்று காண்!" என்ற தலைப்பில் திண்ணையில் எழுதி இஸ்லாமிஸ்ட் ஆனார் ஞானி [சுட்டி- 2].

//இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே// என்று திண்ணையில் எழுதிய எ.அ.பாலாவும் இஸ்லாமிஸ்ட்தான் [சுட்டி-3].

//பால் வேறு ,குலம் வேறு. அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர் என்பன பால்கள். பிள்ளை,முதலியார்,மறவர் இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர். அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக்குறிக்கும்// மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் கூற்றுகளைத் திண்ணையில் 'பயன் படுத்திய' எஸ்ஸார்சி ஐயமின்றி ஓர் இஸ்லாமிஸ்ட்டேதான் [சுட்டி-4].

//வடக்கே ராணுவம், காவல் துறை போன்ற உடல் வலிமை சார்ந்த பிரிவுகளில் பார்ப்பனர்கள் ஏராளமாக இடம்பெற்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பரிச்சயமான வட மாநிலச் சமூகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்கள் போர்க்குணம் மிக்கவர்களாகவும், தமது உடல் வலிமையின் காரணமாக மற்ற பிரிவினரால் மிகவும் மதிக்கத் தக்கவர்களாகவுமே இருந்தனர். அத்தகைய பார்ப்பனர்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்குத் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் இயலாமையினையும் சுய பச்சாதாபத்தையும் பார்க்கையில் ஆச்சரியமாகவும் வெறுப்பாகவுங்கூட இருந்தது. அந்தக் கால கட்டத்தில் வாய்ப்பேச்சளவிலும் எழுத்து மூலமாகவும் பார்ப்பனர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்த போதிலும் மிகவும் அபூர்வமாகவே அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. பார்ப்பனர் மீது மிகக் கடுமையான எதிர்ப் பிரசாரம் இருந்த போதிலும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்பதெல்லாம் எப்பொழுதேனும் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்களாகத்தான் இருக்கும். அவற்றுக்கு ஆளாகிறவர்களும் வறியவராய் நோஞ்சான்களான அப்பாவி அர்ச்சகர்களாகவோ, புரோகிதர்களாகவோ சமையல்காரர்களாகவோதான் இருப்பார்கள். ஒரு வக்கீலாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்க மாட்டார்கள்! ஆக பார்ப்பன வெறுப்பாளர்களின் தாக்குதலும் கையாலாகாத அப்பாவி பார்ப்பனர்கள் மீதுதான் நடக்கும்//

இதே திண்ணையில் "தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்" என்று தலைப்பே வைத்து, மேற்கண்டவாறு வரிக்கு வரி பார்ப்பனர் என்று 'பயன் படுத்தும்' தீவிர இஸ்லாமிஸ்ட் யாராயிருக்கும்? பார்ப்பனர் என்ற சொல்லைப் 'பயன் படுத்திய' எனக்கெதிராக வழக்காட வந்த, லாயர் நேச குமாருடைய க்ளையண்ட் மலர் மன்னன்தான் அது [சுட்டி-5].

விரிவஞ்சி "பார்ப்பனர்" விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி: திண்ணை - வஹ்ஹாபி


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

சாதியை மையமிட்ட கலகக்குரல்களின் வரலாறு  இரா. பழனிச்சாமி

மனிதன் பிறப்பு முதல் பல அனுபவங்களைச் சந்திக்கிறான். அவன் சந்திக்கும் மனிதர்களும்; அனுபவங்களும் அவனுக்குச் சாதகமாக அமையாத பொழுது ஏற்படும் விரக்தியின் மூலம் அவன் சந்தித்தவற்றிற்கு எதிர்ப்பான கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறான். அப்பகுதி மற்றையோரின் நடவடிக்கைகளை எதிர்த்த கலக நடவடிக்கையாக அமைந்து விடுகிறது. இக்கால நடவடிக்கை அவனுடன் தொடர்புடைய சாதி, பொருளாதாரம், பண்பாடு, அரசியல் என அனைத்து நிலைகளிலும் எதிரொலிக்கத் துவங்கிவிடுகிறது. இவ்வாறு எதிரொலிக்கத் தொடங்கிய சாதியை மையமிட்ட கலகக்குரல்களின் வரலாற்றைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. சமூக நலனுக்கு எதிரான பல பழக்க வழக்கங்கள் சமூகத்தின் ஏற்புடைமை பெற்றனவாகவும் உள்ளன. அத்தகைய ஏற்புடமையினைப் பெறுவதற்கு ஏதேனும் காரணங்களும் இருந்திருக்கலாம். எனினும், அத்தகைய பழக்க வழக்கங்கள் மக்களைப் பிரித்து வேறுபடுத்தும் போக்கினையும் கடைபிடிக்கின்றன, இதற்கு ஏற்புடமை பெற்ற சமூகச் சீர்கேட்டுப் பழக்கங்களுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் சாதி சமயத்தை முன்னிறுத்திய இந்திய மதச் சூழலில் கலகக்குரல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அக்குரல்கள் மக்களின் வாழ்க்கைத் தேவையுடன் இணைந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுவதால் மக்களின் அனைத்து நிலைகளிலும் எதிர்புணர்வு தோன்றுவதும் இயற்கையாக அமைந்து விடுகிறது.

இவ்வாறு தோன்றும் கலகக்குரல்களின் நோக்கம் மையத்தை விளிம்பை நோக்கிக் கொண்டு செல்வதல்ல. விளிம்பை மையத்தை நோக்கி அழைத்துச் செல்லும் அதே வேளையில் மையத்திலுள்ள தேவையில்லாத அம்சங்களையும் கட்டாயத்தில் திணிக்கப்பட்ட கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்தி மையத்தையும், விளிம்பையும் இணைக்கும் முயற்சியில் இத்தகைய குரல்கள் ஈடுபடுகின்றன. அம்முயற்சிகள் மையத்திலிருந்து விளிம்பை நோக்கிச் செல்லும் பொழுது சமரசமாகவும் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிச் செல்லும் பொழுது மேனிலையாக்கமாகவும் கருத்துருப் பெறுகின்றன. தமிழிலக்கிய வரலாற்றிலே சாதி பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் முதல் காண முடிகிறது சங்க இலக்கியங்களிலும், கவிகைப் புலையன் (கவி : 95) எரிகோல் கொள்ளும் இழிசன (புறம். 287), இழிசனன் குரலே (புறம். 289) பசைவிரல் புவைத்தி (அகம். 387) என்ற சொற்களின் வழியே சாதியின் இருப்புப் பற்றி அறியமுடிகிறது. என்றாலும் அக்காலத்தில் சாதியத்திற்கெதிரான கலகக்குரல்கள் ஓங்கி ஒலித்ததைக் காணமுடியவில்லை. அதற்கு அடுத்த காலகட்டமான நீதி நூல்கள் எழுந்த காலத்தில் சமூகம் பல்வேறு சமூகச் சீர்கேட்டுப் பழக்கங்களுக்கு ஆட்பட்டிருந்தது. எனவே தான் மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள் இயற்ற வேண்டிய கட்டாயத்தை சமூகச் சூழல்கள் ஏற்படுத்தியுள்ளன. அத்தருணத்தில் சாதிய அளவில் எழுந்த சில எதிர்ப்புக்களை சமப்படுத்துவதற்கென்று சமத்துவம் பேசும் ஒரு தன்மை மேலோங்கியது. இதனை,

''சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டோர் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி'' (நல்வழி : பாடல் 2)

என்பதன் மூலமும்,

''மேலிருந்தும் மேலார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லர் கீழல் லவர்'' (குறள் 973)

என்று திருவள்ளுவர் கூறுவதன் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. சாதிய எதிர்ப்புக்குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டங்களில் மையத்தில் இருப்போரும் சாதியத்திற்கெதிரான குரல்களை எழுப்ப வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. இதனை மையத்திலுள்ள ஏனையோரும் அங்கீகரிக்க வேண்டிய சூழலும் நிலவியுள்ளது. இதனை விளிம்பு நிலை மக்கள் திரளிடமிருந்து அதிகார மையங்களை நோக்கிய கலகக்குரல்கள் எழுவது என்பது சமூக வரலாற்று விதிகளில் ஒன்றாகும். அதிகார மையங்களுள் முரண்பாடுகள் தோன்றுவதும் வரலாற்று விதிதான் என தொ. பரமசிவன் குறிப்பிடுவதன் வழியே அறிய முடிகிறது. எனினும் உள்முரண்பாடுகளும் கூட உள்நோக்கத்திலேயே எழுந்துள்ளதையும் காணமுடிகிறது.

சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த பெரியவர்கள் தங்கள் சமய வளர்ச்சிக்கு ஒரு கருவியாக சாதியொழிப்பு என்பதைப் பேச வேண்டிய கட்டாயம் இருந்ததை அறியமுடிகிறது. எனவேதான் சாத்திரம் பல பேசும் சழக்கர்கள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என்று அப்பர் தமது சமயச் சித்தாந்தத்தை வளர்க்க, தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது சமயத்தில் ஒன்றிணைப்பதைக் காணமுடிகிறது. இவரைப்போன்றே நம்மாழ்வரும்,

''குலம்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து எத்தனை
நலம்தான் இல்லாத சண்டாளர் சண்டாளர்களாகிலும்
வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே'' (திருவாய்மொழி, பா. எண் : 2971)

எனப்பாடுவதன் மூலமும் சாதிப் பிரிவுகளை ஏற்றுக் கொள்வதை அறிகிறோம். வர்ணாசிரமத் தர்மப்படி நால்வர்ணத்தை ஏற்றுக் கொண்ட நம்மாழ்வார் அந்த நான்கிலும் குறிப்பிடாத கீழ்ச்சாதியினரையும் தம் அடியார்களாக ஏற்றுக் கொள்ளக் காரணம் அச்சண்டாளர்களும் திருமாலை வணங்குவதேயாகும் என்று தமது சமயத்தை மக்களிடம் பரப்பும் போக்கைக் கடைபிடிப்பதையே காண முடிகிறது. திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் அடியவர்கள் என ஏற்றுக் கொண்டால் கி.பி. 1900த்துக்குப் பிறகு ஏன் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்பதை மேலே கண்டவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் சைவ, வைணவ சமயங்கள் சார்பாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் எழுப்பிய சாதிய எதிர்ப்புக்குரல் என்பது சமயத்தை நிலை நிறுத்த எழுந்த குரல்களே என்பதை அறிய முடிகிறது. இதனை சிவன் அல்லது திருமால் வழிபாடு என்ற பெருநெறிக்குள் சாதி வேற்றுமை தேவையில்லை என்னும் சிந்தனை பேசப்பட வேண்டியதாயிற்று என தொ.பரமசிவன் கூறுவதன் மூலம் மேலும் உறுதி செய்யலாம்.

பக்தி இயக்க காலகட்டத்தில் சாதியம் இறுக்க மடைந்ததிருந்த பக்தி இயக்கங்களான சைவம், வைணவம் என்பனவற்றுள்ளும் சாதிய அடையாளத்தை முதன்மைப்படுத்தாத வைணவ இலக்கியங்களிலும், வைணவ மதத்தினருள்ளும் சித்தர்கள் போன்ற கலகக்காரர்களைக் காணமுடியவில்லை. இராமானுஜர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளையே காணமுடிகிறது. இதனை அறிவதற்கு இறைவனை அடைய ஆழ்வார்களும், நாயன்மார்களும் மேற்கொண்ட பக்தி மார்க்கமே நமக்குத் தெளிவுப்படுத்துவதாக அமைகிறது. பறையர் சாதியில் பிறந்த நந்தனார் பல துன்பங்களைச் சந்தித்து நாளை, நாளையென்று நாட்களைக் கடத்தி இறுதியாக இன்னல் தரும் இடிபிறவி இது, அம்பலத்தைக் காணத் தடை ஆயிற்றே என வருந்தித் துயில் கொண்ட இவரது கனவில் கூத்தர் பிரான் புன்முறுவலுடன் தோன்றி இப்பிறவி நீங்க எரியினிடை மூழ்கி முப்புரி நூல் மார்புடன் என்னை அடைவாயாக என இறைவன் கூறியதாகக் கூறுவதன் மூலம் சாதிய அடக்குமுறைகள் சைவ சமயத்தில் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இதனை மேலும் அறிய கண்ணப்பநாயனார் போன்ற தாழ்த்தப்பட்டவர்களின் தெய்வ தரிசனமும் உதவுகிறது. வைணவ சமயத்தில் மேலே கண்ட போக்கு இல்லை.

இங்கு இறைவனின் அருள் அனைவர்க்கும் ஒரே தன்மையுடன் கிடைக்கின்றது. பாணர் குலத்தவராகிய திருப்பாணாழ்வார் உறையூரில் பிறந்து திருமாலை வழிபட்டார். தான் தீண்டப்படாதவரென்பதால் காவிரியின் தென்கரையிலிருந்து வழிபட்ட அவரை, நாள்தோறும் காவிரியிலிருந்து நீர் கொணரும் அர்ச்சகரது கனவில் தோன்றித் தோளில் சுமந்து வருமாறு திருமால் பணித்தார். அவரும் அவ்வண்ணமே செய்ய ஆழ்வார் அறங்கனின் அழகைக் கண்ணாரக் கண்டு போற்றினார் எனத் தமிழண்ணல் குறிப்பிடுவதன் மூலம் அறிகிறோம். மேலே கண்ட அடியவர்களின் தெய்வத்தரிசனம் என்பது தெய்வத்துடன் மட்டும் தொடர்புடையதன்று. தெய்வத்தின் பெயரால் மறைந்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்டுவிக்கும் மையத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதன் மூலம் சாதியம் என்பது சமயங்களின் கூறாக உருவாக்கப்பட்ட வரலாற்றை ஓரளவு கணிக்கலாம். மேலே கண்டவற்றின் மூலம் சைவ சமயத்தில் சாதியத்தை இறுக்கமாக்குகிற போக்கு காணப்படுவதை அறிய முடிகிறது. எனவே தான் சைவ சமயத்தில் பின்பற்றப்பட்ட அடக்கு முறைகளுக்கெதிராக சித்தர்கள் என்ற கலகமரபுக்காரர்கள் குரல் கொடுப்பதைக் காண முடிகிறது. சித்தர்களை தெ.பொ.மீ. போன்றோர் கலகக்காரர்கள் எனப் பெயர் சுட்டுமளவிற்கு அவர்களின் குரல் கலகக்குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. சித்தர்களின் பாடல்களின் அடிநாதமாக சாதிய எதிர்ப்புக் குரல் தொடர்ந்து ஒலிப்பதைக் காண முடிகிறது.

சித்தர்கள் பல்வேறு தளங்களில் சாதியத்திற்கெதிராகக் குரல் எழுப்பினாலும் சமயத்தின் உள்ளேயிருந்து கொண்டு எழுப்பிய குரல்கள் சமூகத்தை அடியோடு மாற்றிவிடவில்லை. என்பதை, சித்தர்கள் சமயச் சிந்தனையைக் கடந்தவர்கள் அல்ல, சமய சடங்காச்சாரங்களைப் புறக்கணித்தவர்கள் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று குறிப்பிடும் பொழுது இவற்றை உணரலாம். ஆனால் சமயக்கட்டுக்கோப்புக்குள் வாழ்வியலை அமைத்துக் கொண்டு சமூகத்தின் வர்ணாசிரம, சாதிய வேறுபாடுகளைக் கட்டறுக்க நினைத்தனர். இதுவே இவர்களின் சமுத்துவ சிந்தனையுன் அடித்தளமும் பலவீனமுமாகும் என கோ.கேசவன் குறிப்பிடுவதன் மூலம் அறியலாம் எனினும் சாதியத்திற்கெதிராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பலமாகக் குரல் கொடுத்ததன் மூலம் சாதிபற்றிய விழிப்புணர்வுச் சிந்தனையை ஏற்படுத்தியவர்கள் சித்தர்களே என்பது மறுக்க முடியாத உண்மை நிலையாகும். எனவே தான் சித்தர்களை மதரீதியாக சமயப் பஞ்சமர்கள் என்று சைவர்கள் குறிப்பிட்டனர் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

சித்தர்களுக்குப் பின் சாதிய நெறியை நோக்கிக் குரல் கொடுத்தவர்களுள் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் ஆவார். இவரின் குரல் சாதிசமயச் சமூகத்திற்கெதிரான கலகக்குரலாக ஒலிப்பதை அடையாளம் காண முடிகிறது. எனவே இவரை€யும் சித்தர்களைப் போன்று சைவர்கள் ஒதுக்கிப் பார்த்தனர் என இராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய நூற்றாண்டு என கூறலாம் தமிழ் இலக்கியங்களிலும் இக்காலம் மறுமலர்ச்சிக் காலம் என அழைக்கப்படுகிறது. இக்கால கட்டங்களில் சாதியத்திற்கெதிராகப் பலர் குரல் எழுப்பியுள்ளனர். அவர்களுள் தமிழிலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ள பாரதியார், பாரதிதாசன் போன்றோர் முக்கியமானவர்கள் ஆவர். அந்தண குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சாதித் தீமைகளைத் சாடியதில் பாரதிக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு. அவர் தமது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களைத் தம்முடன் அரவணைத்துச் சென்றவர் என்பதை அறிய முடிகிறது. பாரதியார், சிவவாக்கியார் போன்ற சித்தர்களின் சாதிய எதிர்ப்புக் கருத்துக்களைத் தமது பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். எனவே தான் பாரதி சித்தர்களின் வரிசையில் வைத்து எண்ணிப் பார்க்கப்படுகிறார். இவரைப் போன்று பாரதிதாசனும் சாதி சமயத்திற்கெதிரான தமது குரலைப் பதிவு செய்துள்ளார் இவர்களைப் போன்று எண்ணற்ற கவிஞர்களும் அறிஞர்களும் சாதியத்தை மையமிட்ட இச்சமூக அமைப்பிற்கெதிராகக் கலகக் குரல்களை எழுப்பி வந்துள்ளனர் வருகின்றனர்.

இவ்வாறு காலங்காலமாகத் தமிழிலக்கியங்களில் எழுப்பப்பட்டுவந்த கலகக்குரல்கள் 1990க்குப் பிறகு வீறு கொண்டுள்ளது. மேலை நாட்டுக் கோட்பாடுகளின் வரவின் மூலம் புதிதாகக் கிளைத்த இலக்கிய வகைகளில் ஒன்றாகத் தலில் இலக்கியம் என்னும் வகை, தமிழிலக்கியப் பரப்பிலே வேர்விட்டு விழுதுபரப்பி வருகிறது. இவ்வகை இலக்கியம் வந்தவுடன் சாதியத்திற்கெதிரான பதிவுகள் தீவிரப்பட்டுள்ளன எனக் கூறலாம். எவையெல்லாம் இழிந்தவை என்று கருத்தாக்கம் ஏற்படுத்தப்பட்டு மக்களை அடக்கியாள வகை செய்தனவோ அத்தகைய தாழ்மைப்படுத்தப்பட்ட பண்புகள் இன்று சிறப்புப் பெற்றுள்ளன. கீழானவை எனக் கருதப்பட்டவை மனிதனின் சமூகத் தேவையுடன் இணைந்தவை எதார்த்தமானவை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. முன்பிருந்த இலக்கியங்களின் தன்மை சோதிக்கப்பட்டு தரமற்றவைகளை தலைகீழாக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், முன்பு எழுதப்பட்டவை மேட்டுக்குடிச் சாதியினரைத் திருப்திப்படுத்த என எழுந்த இயக்கியங்கள் முன்வைக்கின்றன. தம் சாதிப் பெருமையை பறைசாற்றும் அதே வேளையில் ஒட்டு மொத்த சாதியொழிப்பிற்கான குரலையும் முன்வைப்பதால் இவ்வகை இலக்கியத்தை கலக இலக்கியம் என்றும், மொழி நடையில் இழிவானதாகக் கருதப்பட்ட எதார்த்தமான பேச்சு மொழியைப் பதிவு செய்து சாதியத்திற்கெதிரான குரலைப்பதிவு செய்வதால் கலக மொழி என்றும் கட்டப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறு அவை அழைக்கப்படக் காரணம் சாதி - சமயத்திற்கெதிராகவும், மரபு வழியான பண்பாட்டிற்கெதிராகவும் தமது குரலைப் பதிவு செய்வதுடன், சாதிய அடையாளத்தை அழித்துச் சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க முயல்வதே என்பதையும் அறிய முடிகிறது.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

தமிழ்நாட்டில் புத்தர்
 சத்யபாமா
(இந்திய தொல்வியல் துறை) 

புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று உணரப்படும் தனிப்பட்ட மாந்தரின் வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மனிதநேயத்துடன் கூடிய அணுகுமுறையை போதிப்பது. மத அணுகு முறையில் அது நடுநிலைப் பாதையை உணரக் கோருகிறது. நான்கு மாபெரும் உண்மைகளை, அதனைச் சார்ந்துள்ள பன்னிரண்டு இணைப்புச் சங்கிலிகள் மற்றும் எட்டு முகம் கொண்ட புனிதப் பாதையையும் கொண்ட ‘ஆத்மா என்ற ஒன்று இல்லை’ என்ற ‘அனாத்மன்’ என்ற தத்துவத்தை அது பிரச்சாரம் செய்கிறது. சுருங்கக் கூறின், பார்ப்பனர்களின் மதத்திலிருந்து உருவான பல சமூக அநீதிகளுக்கு எதிராக கவுதம புத்தர் புரட்சி செய்தார் என்றும், சமத்துவ உணர்வையும் மனிதநேய அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்தார் என்றும் கூறலாம்.

ஒரு மனிதனின் தகுதி, அவனது மரபுவழி பண்பாட்டை விட அவனது ஒழுக்கம் நிறைந்த செயல்பாடுகளிலேயே எதிரொளிக்கிறது. இத்தகைய ஒழுக்கநெறிக் கோட்பாடு அசோக மாமன்னரால் மிகச் சிறந்த முறையில் பின்பற்றப்பட்டது. மகத நாட்டில் தோற்றம் பெற்ற புத்தமதத்தின் மிகச் சிறந்த கோட்பாடுகளை பாரதநாடு முழுவதிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் தனது மகன் மகேந்திரன் மூலம் இந்த மாமன்னர் பரப்பினார் என்பது அனைவரும் நன்கறிந்ததே. புத்த மதத்தின் மய்யக் கருவான தம்மத்தின் பெருமையைப் பற்றி தனது குடி மக்கள் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்ட அவர், தனது ராஜ்யம் முழுவதிலும் சாசனங்களையும், பிரகடனங்களையும் வெளியிட்டார் என்பதும் பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

இன்று நாம் அறிந்துள்ள அரசு ஆணைகள் போன்ற முதன் முதலாக பதிவு செய்யப் பட்ட ஆணைகள் இவை. பண்டைய தமிழ் ராஜ்யங்களான சோழர், சேரர், பாண்டியர் மற்றும் சத்யபுத்ரர்களின் எல்லையில் ஆட்சி செய்து வந்த அதியமான் என்பவரைப் பற்றி அண்மையில் உறுதியாக அடையாளம் காணப்பட்டு பதிவுகள் செய்யப்பட்ட ஆவணங்களாக இவற்றைக் கருதலாம். ஆவணப் பதிவுகள் இல்லாத போதும், இவ்வாறு தம்மத்தைப் பரப்பும் அசோகரின் மாபெரும் முயற்சியின் காரணமாக புத்தமதம் தமிழ் நாட்டில் தழைத்திருக்கக்கூடும் எனக் கொள்ளலாம்.

தொடர்ந்த பிற்காலங்களில், புத்தமதம் தமிழ் நாட்டில் தழைத்து விளங்கியது. தம்மத்தின் அசாதாரணமான போதனைகளை எடுத்துக் காட்டும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற காப்பியங்களில் இருந்து இது தெரிய வருகிறது. இந்த இரு காவியங்களின் காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய காவேரிப்பூம்பட்டினத்தில் ஒரு சிறு வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டதிலிருந்து இது உறுதியாகிறது.

இருண்ட காலத்தில் புகழ் பெற்று விளங்கிய மதம் புத்தமதம் என்பதை திருஞானசம்பந்தர் அதைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட பல அற்புதங்களில் இருந்தே தெளிவாக அறிந்து கொள்ளலாம். சுறுசுறுப்பாக இயங்கிய புத்த விஹாரம் ஒன்றையும், அதன் அருகே இடிந்து போயிருந்த தூபிகளையும் தான் கண்டதாகக் குறிப்பிட்டுள்ள சீன யாத்திரிகள் ஹ_வான் சுவாங் கின் குறிப்புகளில் இருந்து தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் புத்த மதம் தழைத் தோங்கி யிருந்தது என்பதையும், பின்னர் நலிவுற்றது என்பதையும் அறிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்திலும் கூட பல மாபெரும் சைவ வைணவ சமயத் தலைவர்களின் பக்தி இயக்கத்தின் பெரும் தாக்குதலுக்கு இலக்கானபோதும் புத்தமதம் அழியாமல் நிலைத்து நின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று மகாபலிபுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, புத்த மதம் சிறிது சிறிதாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்ற உண்மையையும் உணரலாம். பண்டைய காவேரிப்பூம்பட்டினமான மேலையூரில் கண்டெடுக்கப்பட்ட முதல் வெண்கல மாத்ரேயர் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது; அது பொன் முலாம் பூசப்பட்டிருந்தது.

நாகப்பட்டினம் சூளாமணி விஹாரத்தை ராஜராஜ சோழர் புதுப்பித்துக் கட்டித் தந்த செய்தியிலிருந்து தமிழ்நாட்டில் புத்த மதம் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆங்கிலேயர் இந்நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட பெரும் புயலில் இந்த புத்த விஹாரம் கடலில் மூழ்கிப் போகும் வரை, அது புகழ் பெற்று விளங்கியது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வெண்கல புத்தர் சிலைகள் இன்றும் சென்னை அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை நிர்மாணம் செய்யப்பட்ட புத்தரின் கற்சிலைகள் சோழ மண்டலம் மற்றும் தொண்டை மண்டலப் பகுதிகளிலுள்ள 150 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்திற்கு அளவற்ற, தடையற்ற, தீவிர ஆதரவு நிலவிய ஒரு காலத்தில், தமிழ் நாட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்ட புத்த மதச் சின்னங்களில் பெரும்பகுதி இவையே.

கிருஷ்ணா நதிப் பள்ளத் தாக்கில் கிடைத்தது போன்ற பண்டைய காலத்தைச் சேர்ந்த புத்த மதச் சிலைகள் அல்லது புத்த விஹார கட்டடங்கள் கொண்ட தொல் பொருள் ஆய்வுச் சான்றுகள் நமக்கு தமிழகத்தில் பெரும் அளவில் ஏதும் கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் அசோகரின் சில சாசனங்கள் இருந்த போதும், புத்த மதம் தொடர்பான பெரிய தொல்லியல் ஆதாரங்கள் ஏதும் இருக்கவில்லை. ஆனால் சன்னதி என்னுமிடத்திற்கு அருகே ஒரு மாபெரும் புத்த தூபி அண்மையில் இந்தியத் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டதைப் பெருமையுடன் நாம் குறிப்பிடலாம். அத்துடன் அசோக மன்னரின் உருவம் பதித்த கல் ஒன்றும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற புத்த மதச் சான்றுகளைத் தேடும் தொல்லியல் ஆய்வுக்காக பல இடங்களைத் தமிழ் நாட்டில் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். அவ்வாற செய்தால் தமிழ்நாட்டில் புத்த மதம் தழைத்திருந்தது பற்றிய மாபெரும் சான்றுகள் பல கண்டுபிடிக்கப்பட இயலும். நாளுக்கு நாள் கிராமப் பகுதிகள் நகரங்களாக மாறி வரும் நிலையில் இந்த ஆய்வுகளை விரைவில் மேற்கொள்வது நல்லது. தொல் பொருள் சான்றுகளுக்கு விவசாயத் தொழிலால் பெரும் பாதிப்பு ஏதும் நேர்ந்துவிடாது. ஆனால் தொழில் துறை இத்தகைய தொல்லியல் சான்றுகள் என்றுமே வெளிப்பட இயலாதபடி செய்து விடக்கூடும்.

தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல புத்தர் சிலைகள் இருப்பது நமக்கு தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் இவைகளைத் திருடிச் செல்வதற்கான சில முயற்சிகளும் நடந்துள்ளன. மக்களால் இன்றும் அந்த புத்தர் சிலைகள் வழிபடப்பட்டு வருகின்றன. இந்த புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களை ஆவணங்களில் பதிவு செய்து, அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.
செல்வ வளம் மிகுந்த கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அதிக அளவில் நம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காரணமாக இத்தகைய புத்த மத தொடர்பான சுற்றுலாத் தலங்கள் மிகுந்த வருவாய் அளிக்கும் வாய்ப்பு கொண்டவை என்பதை நமது சுற்றுலா அதிகாரிகள் நன்கு அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சுற்றுலாத் தலங்களை உருவாக்கி வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாம் பயன் படுத்திக் கொள்ள இயலாதா?

(11 2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு துவக்க விழாவில் கலந்து கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளர் திருமதி சத்யபாமா அவர்கள் ஆற்றிய உரை.)


புத்தர் தந்த பதில்

புத்தருடைய சுற்றுப் பயணத்தின்போது பிராமணர்களால் ‘பிரம்மா’ என்றும் ‘ஈசன்’ என்றும் ஒருவர் பற்றிச் சொல்லுகிறார்களே? அவர்கள் பற்றித் தங்கள் கருத்தென்ன?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

புத்தரின் பதில்

உலகம் பிரம்மனாலோ, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதைப் போற்றி வணங்க வேண்டுமென்றும் பிராமணர்கள் சொல்லித் திரிகிறார்களே’’ என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது.

‘வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம். பிக்குவே, நீ ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல்களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துப் பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்துக் கரையில் வைத்து விட்டு ‘என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை;. பிறர் நலம் பேணுவதாகும்.’’

நூல்: ‘இவர்தான் புத்தர்’’

உண்மை எதுவென்பதைத் தனக்கு உபதேசிக்கக் கூடிய ஆசிரியர்களைத் தேடி ஊர் ஊராக அலைந்தார். முதலில் அலரகலாமா என்ற ஞானியை அணுகினார். அவர் சித்தார்த்தரை சீடனாக ஏற்றுக் கொண்டு அவரிடம் கற்க வேண்டிய எல்லாவற்றையும் துறையறக் கற்றுத் தேறினார். அதன்பின் தனது குருவிடமே கேட்டார். “நீங்கள் எனக்குப் படிப்பித்தவற்றில் எவ்வளவுதூரம் நீங்களே அனுபவத்தில் கண்டு தேறியிருக்கிறீர்கள்?” அலரகலாமா சொன்னார் “எல்லாம் சூனியம்” என்ற படிக்கு மட்டும் தேறியிருக்கிறேன். உன்னைப் பொறுத்தளவில் எனக்கு எவ்வளவு ஞானமுண்டோ, தேர்ச்சியுண்டோ, சித்தியுண்டோ அந்தளவு உனக்கும் உண்டு. இருவரும் சேர்ந்து எனது சீடர்களை வழிநடத்துவோம்.”

ஆனால் சித்தார்த்தரோ அறுதியான உண்மை, நிர்வாணம் இவற்றைத் தேடிக் கொண்டிருந்தார். எனவே அவரை விட்டு நீங்கி இன்னொரு குருவைத் தேடிப் போனார். இப்படி ஆறு ஆண்டுகள் கடுமையான விரதம், நோன்பு, தபம் இவற்றைக் கடைப்பிடித்தார். அவர் கடைப்பிடித்த கடுமையான விரதம்பற்றி அவரே சொல்லுகிறார்.

அன்புள்ள இளவரசன்

இந்தப் பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் இருக்கிறது. பாடல் எண் 183. பாடியவர் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் என்ற பெயர் தாங்கிய பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். இவனைப் பிரித்துக் காட்ட ‘ஆரியப்படை’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவன் வடநாட்டுக்கு படையெடுத்து அங்குள்ள ஆரிய மன்னர்களை வென்றிருக்க வேண்டும்.

புறநானூற்றுக்கு பலர் உரை எழுதியுள்ளார்கள். இருந்தாலும் மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சித்தாந்த கலாநிதி அவ்வை க. நடராசன் அவர்கள் உரையெழுதி சைவ சித்தாந்த நூற்பதிவுக் கழகம் வெளியிட்ட புறநானுறு சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. இவர் ஓய்வு பெற்ற தமிழ்த் துறை கல்விப் பணிப்பாளர் அவ்வை நடராசனின் தந்தை.

இந்தப் பாடல் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறுகிறது. அதன் உரையைப் பார்ப்போம்.

உற்றுழி உதவியும் – தன் ஆசிரியற்கு ஓர் ஊறு பாடு உள்ளவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்,
உறுபொருள் கொடுத்தும் – மிக்க கொருளைக் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று – வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு அழகிது,
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் – அதற்கு எல்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்,
சிறப்பின் பாலால் – கல்வி சிறப்பால்
தாயும் மனந்திரியும் – தாயும் மனம் வேறுபடும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் – ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே
மூத்தோன் வருக என்னாது – மூத்தவன் வருக என்னாது,
அவருள் அறிவுடை யோன் ஆறு – அவருள் அறிவுடையேன் சென்ற நெறியிலே,
அரசும் செல்லும் – அரசனும் செல்வான்,
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்கின் – கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் கடும் – மேற்குலத்து ஒருவனும் இவன் கீழ்க் குலததானென்று பாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் என்றவாறு.
இங்கே நாற்பால் எதனைக் குறிக்கிறது? வேதம் மற்றும் மனு ஸ்மிருதி சொல்லும் ஆரிய வர்ண வேறுபாடான பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திர பிரிவையா? அல்லது தொல்காப்பியம் கூறும் அந்தணர், அரசர், வைசியர், வெள்ளாளர் பிரிவையா?

சங்க காலம் கிமு 300 – கி.பி. 100 என தோராயமாக கணக்கிடப்படுகிறது. ஆரியர் தென்னாட்டிற்கு கி.மு. 500 ஆண்டு தொடக்கம் வரத் தொடங்கி விட்டார்கள். சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ் அரசர்கள் பார்ப்பனர் சொற்படி யாகங்கள் செய்து, பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுக்க தொடங்கி விட்டார்கள்.
அதனால் தொழில் அடிப்படையில் குடிகள், குலங்கள் என்று இருந்த பிரிவு மறைந்து பிறப்பு அடிப்படையில் வர்ண பிரிவு தமிழ்மக்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது.

சங்க காலத்தின் முற்பகுதியில் எல்லோரும் குடி, குல, ஆண், பெண் வேறுபாடின்றி கல்வி கற்றிருந்தார்கள். அவர்கள் பாடிய சங்கப் பாடல்களே அதற்கு அகச் சான்றாக இருக்கின்றது.
இந்தப் பாடலில் கூட நாலாவது சாதிக்காரன் கல்வி கற்று முன்னுக்கு வருவான் என்றிருக்கிறது. பிற்காலத்தில் வேளாளர் நீங்கலாக மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆறுமுக நாவலர் தொடக்கிய பள்ளிக் கூடங்களில் தீண்டப்படாதார் என்கிற கீழ்ச் சாதியார் சேர்ந்து படிக்க முடியவில்லை!
சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வெவ்வேறு குடிகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இற்றை மேல் நாட்டார் தங்கள் குடும்பப் பெயரை (டீயமநசஇ ஊயசிநவெநசஇ ளுஅiவா) கடைசிப் பெயராக வைப்பது போல சங்கப் புலவர் தங்கள் ஊர்ப்பெயரோடு சில சமயம் குடிப் பெயரை அல்லது தொழில் பெயரை தங்கள் பெயருக்கு முன் வைத்திருந்தார்கள்.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார், சிறுகுடி கிழான் பண்ணன், குறமகள் இளவெயினி (குறத்தி குலம்), தங்காற் பொற்கொல்லனார், வெண்ணிக்; குயத்தியார் (குயவர் குலம்) மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன், மருதனிளநாகனார் நக்கீரனார் …………………….

எனவே ஆரியர்கள்தான் பிறப்பின் அடிப்படையில் வர்ணதர்மத்தை பரப்பினார்கள். பின்னர் இந்த நால்வர்ண அமைப்பு நாலாயிரம் சாதிகளாக பல்கிப் பெருகின.
தொல்காப்பியம்தான் தமிழில் கிடைக்கிற மிகப் பழமையான நூல். அது கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். அதில் எப்படி இந்த நாற்பால் அந்தணர், அரசர், வைசிகர், வெள்ளாளர் (நால் வர்ணத்தில் சூத்திரர்) பிரிவு இடம்பெற்றது?

மேலே குறிப்பிட்டதுபோல ஆரியர் வருகை கிமு 5 ஆம் நூற்றாண்டில் தொடங்கி விட்டது. அவர்களது செல்வாக்கு முதலில் அரண்மனையோடு தொடங்கியது. பின்னர் படித்த புலவர்கள் மத்தியில் அவர்களது செல்வாக்கு இடம்பெற்றது.

தொல்காப்பியத்தில் சொல்லப்படும் நாற்சாதி இடைச் செருக்கல் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மைபோல் தெரிகிறது. மரபியலில் மரம், செடி, கொடி, விலங்குகள் பற்றி சொல்லி வந்து திடீரென அந்தணர், அரசர், வைசிகர், வெள்ளாளர் பற்றி கூறப்படுகிறது.

வைசிகர் என்ற சொல் பிற்காலத்தையது. அதுவும் இது இடைச் செருக்கல் என்பதைக் காட்டுகிறது.

ஆரியக் கருத்துக்கள் இல்லாத சங்க நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன என அவ்வை துரைச்சாமி கூறுகிறார். மூன்று விழுக்காடு தன்னும் ஆரியக் கருத்துக்கள் இருக்கின்ற நூல்களே அழிவுக்குப் தப்பியன.

வள்ளுவர் உழவுத் தொழிலையே மேலான தொழில் என்கிறார். ஆனால் உழவுத் தொழில் செய்யும் வேளாண் மக்கள் நாலாவது சாதியாக தொல்காப்பியர் சொல்வது அது இடைச் செருக்கல் என்பதற்கான இன்னொரு காரணம்.

கையூட்டு என்பது பொருந்தாது. கையூட்டு என்றால் bribe.

புறநானூறு நூலை வாங்கிப் படித்து இந்தப் பாடலுக்குரிய விளக்கத்தைப் படித்துப் பார்க்கவும்.
அன்புடன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்

 
பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்:
தொடர்பியல் தளத்தில் திருமண சடங்கு மற்றும் உணவு

அ.ஆரோக்கியராஜ்

அறிமுகம்:
பண்பாடு என்பது மக்கள் வாழ்வியலின் தொகுக்கப்பட்ட ஒரு கருத்தியல் சார் நெறிமுறை வடிவமாகும். அது மக்களின் சமய நம்பிக்கை, வழக்காற்றியல், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மொழி, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றது. பண்பாட்டின் செயல் தன்மை என்பது ஒரு நபர்/இனக்குழு மற்றொரு நபர்/இனக்குழுவோடு தொடர்பு கொள்ளுதல், கூட்டு அடையாளங்களை உருவாக்குதல் ஆகியனவாக இருக்கின்றது. இதனை திருமண நிகழ்வினோடு ஒப்பிட்டு பார்க்கையில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையேயான சம்மந்தம் கலத்தல், மணமக்களுக்கு கணவன் மனைவி என்ற அடையாளம், பெற்றோருக்கு சம்பந்தி என்ற அடையாளங்களை உருவாக்குகின்றது. தொடர்பியல் என்பது ஒரு செய்தியை பரிமாறிக் கொள்ளுதல், அடையாள வேறுபாடுகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. தொடர்பியலுக்கும் பண்பாட்டிற்குமான உறவு என்பது மிக நுட்பமானது. பண்பாடு தொடர்பியல் வாயிலாக உருவாக்கப்படுகின்றது. தொடர்பியல் பண்பாட்டின் உட்கூறுகள் மூலம் நடைபெறுகின்றது. ”பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றது.” (தொ.பரமசிவன், 2016:96) அத்தகைய அசைவுகள் (சடங்குகள்) தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பண்பாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சடங்குகள் உள்ளன. அவற்றுள் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளும் அடங்கும். பண்பாடு என்பது தனித்து ஒரு முழுமையான தொடர்பியல் ஊடகமாக இருப்பதில்லை. பண்பாட்டுக்கும் தொடர்பியலுக்கும் இடையே ஒரு பற்றாக்குறை, போதாமை இருக்கின்றது. அதனை மிக நுட்பமாக நிறைவு செய்யும் ஒரு பற்றுக்கோளாக சடங்குகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு மொழியை ஒரு தொடர்பியல் கருவியாக கருதினால் அதனால் முழுமையான தொடர்பியலை தனித்தே நிகழ்த்த இயலாது. இரு வேறு மொழி பேசுபவர்களுக்கு இடையே எழும் சிக்கலைவிட ஒரே மொழி பேசும் குழுவினரிடையே கூட மொழியால் முழுமையாக தனித்தே இயங்க(தொடர்பு கொள்ள) முடியவில்லை. அதற்கு உருவகங்கள் போன்றவை தேவைப்படுகின்றன. தான் விரும்பும் தலைவனின் தன்மைகளை வெளிப்படுத்த மொழியால் இயலமுடியவில்லை. ‘புரட்சி புயல்’ ‘எழுச்சி சூரியன்’ போன்ற சொல்லாடல்கள் இதற்கு உதாரணம். ஒரு நடிகனை தலைவனை அவன் தன்மைகளை விளிக்க புயல், சூறாவளி, நட்சத்திரம், சூரியன், சிங்கம் போன்ற சொற்கள் தேவைப்படுகின்றன. இதனை மொழியின் குறைபாடு (Language Deficiency) என குறிப்பிடுகின்றனர். இங்கு மொழியின் செழுமையாக உருவகங்கள் இருக்கின்றன. அது போல ஒரே குமுகத்தினரிடையே கூட பண்பாடு முழுமையான தொடர்பியலை நிகழ்த்தவில்லை. இங்கு பண்பாட்டின் மேன்மை (Sublime) பொருந்திய ஒரு வடிவமாக சடங்குகள் திகழ்கின்றன. காதலர்கள் மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்தாலும், அதனை சமூக அளவில் அங்கீகரிக்க திருமணம் எனும் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்கள் கருதுகின்றனர். இங்கு சமூகவயமாதலில் மிக முக்கியமானதாக சடங்குகள் உள்ளன.

ஒரு தனி மனிதன் சமூகவயமாதலில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானதாக திகழ்கின்றது. குடும்ப அமைப்பினை உருவாக்குவதில் மிக முக்கியமான அம்சமாகவும், தமிழக பண்பாட்டில் மிக மதிப்புமிக்க ஒரு சடங்காகவும் திருமணம் இருக்கின்றது. கீழைத்தேய சமூகத்தில் துறவு நெறிகளை போதித்த பௌத்தம், சமணம் போன்ற சமயங்களை வீழ்த்த வைதீக சமயங்கள் மிக முக்கியமான கருத்தியலாக திருமணத்தினை முன்னிறுத்தியன என்ற புரிதல் திருமணத்தை இன்னும் அதிநுட்பமாக அறிந்து கொள்ள வழிவகை செய்யும். இன்று திருமணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பந்தி உணவு. இந்த கட்டுரை திருமணம் குறித்த சமூக விழுமியங்களையும் அது உணவில் பிரதிபலிக்கும் தன்மைகளையும் பண்பாட்டியல் ஆய்வுப் பார்வையில் விவரிக்க முயல்கின்றது. குறிப்பாக விருத்தாசலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழக்கத்தில் இருக்கும் ’கடலை உடைத்துக் கல்யாணம்’ என விளிக்கப்படும் திருமணங்களில் பந்தியில் இடம்பெறும் பொட்டுக்கடலை, வேர்கடலை மிட்டாய் போன்ற பயறு வகைகள் உருவாக்கும் தொடர்பியல் அசைவுகளையும் அது குறித்த உணவு பண்பாடு மற்றும் சமூக விழுமியங்கள் ஆகியவற்றை சமயங்களின் பின்னணியில் விவரிக்கின்றது.

தமிழர் திருமணம் எனும் கருத்தியல்:
தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளில் மிக பிரதானமான ஒன்றாக திருமணம் இருக்கின்றது. திருமணம், கலியாணம், இணையேற்பு விழா ஆகியன மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் சொற்களாகும். கலி+ஆணம் = கல்யாணம் என்ற இந்த சொல் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். ‘கலி’ என்பது மகிழ்ச்சி, எழுச்சி, விழா, வலி என்ற பொருளையும்; ’ஆணம்’ என்பதற்கு நேயம், பற்றுக்கோடு என்று பொருள் உண்டு. (அன்பு பொன்னோவியம், 2007:368) இதனை மங்கல நாள் என குறிப்பிடுகின்றனர். “இல்லற மல்லது நல்லற மன்று” என ஔவையாரும் “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” என திருவள்ளுவரும் வீடுபேற்றினையும் திருமண வாழ்வின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுகின்றனர்.
தமிழரிடையே கொடை மணம், களவு மணம், கவர்வு மணம் ஆகிய முறைகள் இருந்தன. (தேவநேயப்பாவணர், 2000:8) தொல்காப்பியத்தில் எண்வகை திருமண முறைகளை குறிப்பிடப்படுகின்றது. வட மொழி நூல்கள் பிரம்மம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தைவம், கந்தர்வம், ஆசுரம், ராட்சசம், பைசாசம் ஆகிய எண்வகை திருமண முறைகள் இருந்தன என குறிப்பிடுகின்றன. (அன்பு பொன்னோவியம், 2007) திருமண மரபு பரிணமித்த வரலாற்றில் மூன்று நிலைகள் இருந்தன என தொல்காப்பியம் சுட்டுகின்றன. 1. களவு, 2. நால்வருணத்தாருக்கும் ஒரே வகைச் சடங்கு, 3. சூத்திரருக்கு மட்டும் தனி சடங்கு. இதிலிருந்து வெளிப்படும் மிக முக்கியமான விடயம் ’சடங்கு’. இங்கு சமூக அமைப்பிற்கு தனது அதிகார படிநிலைகளை தக்க வைக்கும் ஒரு உத்தியாக ஆயுதமாக சடங்குகள் உருப்பெற்றதை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் எந்த வித சடங்குகளும் அற்ற களவு மணமுறை இருந்ததை காண முடிகின்றது. சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்கள் தமிழர்களிடையே கருத்துரு பெற ஆரம்பித்த பிறகு சடங்குகள் ஒரு புனிதத் தன்மை என்ற பெயரில் ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் தீ வளர்த்து, பார்ப்பனர்களைக் கொண்டு வேதம் ஓதி திருமண முறை இருந்ததை அறிய முடிகின்றது. கொடுப்பது, எடுப்பது என்ற சொல்லாடல்கள் பெற்றோர் நிச்சயித்த திருமணங்களை சுட்டுகின்றன. மணமுறை என்பது ஒவ்வொரு குமுகத்தினரிடையே வேறுபட்டு காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என வகுத்தனர். அகம் என்பது களவு, காதல் வாழ்க்கையையும், புறம் என்பது போர், பொருளீட்டல் போன்ற வீரம், உழைப்பு சார்ந்த வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன. அதன் பிறகு உருவான திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை வலியுறுத்திக் கூறின. இதில் மக்கள் வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை நெறிகள் வலியுறுத்தப்பட்டன. இதில் குடும்பம், இல்வாழ்க்கை, வீடு பேறு என்பவை வாழ்வின் ஓர் அம்சமாக இருந்தன. அதன் பிறகு உருவெடுத்த பக்தி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என குடும்ப அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். (தொ.பரமசிவன், 2016:99) சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் துறவு நெறியை போதித்தன. ஆனால் அவை மக்களிடையே செல்வாக்கு பெறவில்லை. தொல்காப்பியம் கணவனும் மனைவியும் வாழ்நாளின் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்து அறஞ்செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றது. சமணமும் பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவை போதித்த துறவு நெறி என்பது மக்களால் ஏற்கப்படாததாக இருந்தது. சமணம் பௌத்தம் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று என தொ.பரமசிவன் (2016) குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கங்களில் எழுச்சிக்கு பிறகு திருமணங்களில் வைதீக சடங்குகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.

அரசு-சமூக வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சமாக குடும்பங்களும் திருமண நிகழ்வுகளும் இருக்கின்றன. இன்று திருமணம் என்பது சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தொடர்ந்து ஒரு நிலைப்புத் தன்மையோடு இருக்கச் செய்யும் பண்பாட்டு ஒடுக்குக் கருவிகளாக திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ”ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என குடும்பத்தினை ஐக்கிய நாடுகளின் அமைப்பு வரையறை செய்துள்ளது. சமூக வயமாக்கலும் (Socialization) பண்பாட்டு வயமாக்கலும் (Enculturation) குடும்பத்தில் இருந்து தான் தொடங்குகின்றன. (பக்தவச்சல பாரதி, 2007:342) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சமூக மனிதனின் ஆதிக்கம் உறைந்து போய்க் கிடக்கின்றது. திருமணம் என்பது மனித வாழ்வினை முழுமையாக்கும் ஒரு கருத்தியல் என கருதப்படுகின்றது. இன்று பதின்ம வயதினைக் கடந்த ஒவ்வொருவருடைய பெற்றோரின் முக்கிய கடமையாக திருமணம் செய்து வைத்தல் இருக்கின்றது. பாலியல் ஒழுக்கத்தையும் தேவையையும் உறுதிபடுத்தும் ஒரு அமைப்பாக திருமணம் உள்ளது.

உணவு, சடங்கு, தொடர்பியல்:
இனக்குழு சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன. அச்சடங்குகள் இனக்குழு சமுதாயத்தை இயக்கின. இணைத்தன. அச்சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதி செய்தன. (சுப்ரமணியன், கா. 2011:10) இச்சடங்குகளில் பலி இடுதல், கூடி உண்ணுதல் போன்றவை தவறாமல் இடம் பெற்றிருந்தன. சமூக ஒருங்கிணைப்புக்கு அடிப்படையாக சடங்குகள் இருக்கின்றன. மக்கள் குழுவாக இணையும் பொழுது அங்கு ஒரு முக்கியச் செயல்பாடாக உணவு அமைந்துவிடுகின்றது. இது போல திருமண நிகழ்வுகளில் பந்தி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது. பந்தி என்பது வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்று பொருள். (ஆ. சிவசுப்ரமணியன், 2010:1) பொதுவாக எல்லா சமயத்தினரும் பந்தி உணவினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் சாதிய மேலாண்மை, பொருளாதார வேறுபாடு என்பவை மக்களிடையே, மக்கள் மீது ஓர் அதிகார/ஆதிக்கத்தினை உண்டு பண்ணியது. இசுலாமிய வழிபாட்டில் கந்தூரி விருந்திலும் நொன்புக் கஞ்சி வழங்குவதிலும் இத்தகைய வேறுபாடுகள் களையப்படுகின்றன என ஆ. சிவசுப்ரமணியன் (2010) குறிப்பிடுகின்றார். அம்மன் கோயில் கூழ் ஊற்றும் நிகழ்வுகூட இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமணம் எனும் நிகழ்வானது மணப்பேச்சு, மண உறுதி, மணவிழா என மூன்று நிலைகள் இருக்கின்றன. (தேவநேயப்பாவணர், 2000:17-19) மணவிழாவின் போது பந்தல், அரசாணிக்கால், காப்பு கட்டுதல் போன்ற முன்னிகழ்ச்சிகளும், தெய்வத்தின் முன்னிலையில் தாலி கட்டிக் கொள்ளுதல் (கரணம்), வந்தோருக்கு உணவளித்து தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவை கொடுத்தல் போன்ற பின்னிகழ்ச்சிகளும் முக்கியமான சடங்குகள் ஆகும். கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என அழைக்கப்படுகின்றது. வதுவை மணத்தில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அகநானூற்று பாடல் அளிக்கும் செய்தி
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை / பெருஞ்சோற் றமலை நிற்ப …” (அகநானூறு:86)
உளுத்தம் பருப்போடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ என இப்பாடல் பதிவு செய்கின்றது. அகநானூறு 136 வது பாடல் இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்சோற்றையும் அளித்தனர் என பதிவு செய்கின்றது. இன்று அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப உணவு பரிமாறுகின்றனர். திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்காயிராது. நாட்கணக்காயிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும் விருந்தளிப்பர் என தேவநேயப்பாவாணர் (2000) பதிவு செய்கின்றார்.

தமிழகத்தில் பெருவாரியான சமூத்தினரிடையே ‘கடைக்குட்டிக்கு கடலைமிட்டாய் கலியாணம்’ என்ற சொல்லாடல் வழக்கில் உள்ளது. திருமணம் என்பது பெற்றோர், பெரியோர் நடத்தி வைப்பதாகவே இருக்கின்றது. பெற்றோரின் மிக முக்கியமான கடமையாக தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் என கருதுகின்றனர். அப்படி எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைத்த பிறகு கடைசிப் பிள்ளையின் திருமணத்தின் போது பெற்றோர் தங்கள் வேலையை நிறைவேற்றிவிட்ட ஒரு திருப்தி அடைகின்றனர். அத்தகைய திருமணத்தில் பந்தியில் வழக்கமாக பரிமாறப்படுகின்ற உணவு வகைகளுடன் சேர்த்து கடலை மிட்டாய் அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவை வைப்பது வழக்கம். இதனை ’கடலை உடைச்சி கலியாணம்’ என்றும் விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிடுகின்றனர்.
பொட்டுக்கடலை அல்லது கடலை மிட்டாய் வைக்கப்படுவதின் காரணம், எங்கள் வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம் என்ற செய்தியை குறிக்கும் வகையில் இவை பரிமாறப்படுகின்றது. கொங்கு பகுதியினர் தரும் விளக்கம் என்பது, “இது கடைசி திருமணமன்று. அடுத்த இவர்கள் பிள்ளை பெற்று பேரக்குழந்தைகளின் திருமணமும் நடைபெறும். அதன் தொடர்ச்சியின் அறிவிப்பாக இவை பரிமாறப் படுகின்றன” என கூறுகின்றனர். இங்கு திருமணம் என்பது ஒரு குழுவுக்கான தொடர்பியல் தளம் என்ற அளவில் மட்டுமில்லாமல், குழுவிற்கு வெளியேயுமான தொடர்பியலை நிகழ்த்துகின்றது. அந்த தொடர்பியலை முழுமையாக்குபவையாக இத்தகைய சடங்குகள் இருக்கின்றன. அது உணவின் மூலம் மிக நுட்பமாக வெளிப்படுகின்றது.

இறுதியாக:
திருமணங்களில் பரிமாறப்படும் பந்தி உணவு தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. திருமணம், குடும்பம் ஆகியவற்றின் மூலம் வைதீக மதங்கள் செல்வாக்கு பெற ஆரம்பித்து அதனூடே ஆன சடங்குகள் மூலம் தனது ஆதிக்கத்தினை மக்கள் மீது செலுத்தி வருகின்றது. இதனை எதிர்த்து பின்னாட்களில் திருமண முறைகளில் சீர்திருத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தன. சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியார் பிராமணியத்தையும், மறைமலையடிகளும், திரு.வி.கலியாணசுந்தரனாரும் அஃதுடன் ஆரிய மொழியையும் எதிர்த்து புரட்சி செய்தனர். பெரியார் ஈ.வெ.ரா. இவற்றோடு வீண்சடங்குகளை விலக்கி, திருமணக் கரணத்தைத் (தாலி கட்டுதல்) திருத்தி புரட்சி செய்தார். தமிழர் பண்பாட்டில் இருந்து அந்நியப்பட்ட சடங்குகள் யாவும் தமிழர்களை ஒடுக்கி அதிகாரப் படிநிலைகளை உண்டு பண்ணும் ஒரு கருத்தியல் வடிவமாக இருக்கின்றது. அவ்வகையில் திருமணம் குறித்த சடங்குகள் சாதி வேறுபாடு, பெண்ணடிமை போன்ற கருத்தியல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

திருமணங்கள் என்பது வீடுகளில், ஊர் மந்தையில் நடைபெற்றன என நாட்டார் தரவுகளில் இருந்து அறிய முடிகின்றது. மக்களுக்கான பொதுவெளி மீதான உரிமைகள் மறுக்கப்பட ஆரம்பித்த போது இங்கு திருமண மண்டபங்கள் உருவாகின. திருமண பந்தியில் பல வகையான உணவு வகைகள் இடம் பெற ஆரம்பித்தன. ஆயினும் வீட்டின் கடைசிப் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் போது பந்தியில் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை போன்ற பயிறு வகைகளை வைக்கும் சடங்கு என்பது ஆதிப் பண்பாட்டின் ஒரு தொடர்சியாகக் கருதப்படுகின்றது. இது இறப்புச் சடங்கில் அளிக்கப்படும் பயிறு வகைகளுடன் ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடிகின்றது. பெற்றோர் தம் வாழ்வு முழுமை (முக்தி) பெற்றதாக கருதி இதை செய்வதாக கருத இயல்கின்றது.

துணை நூற்பட்டியல்:
அன்பு பொன்னோவியம். (2007). உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்.
சிவசுப்ரமணியன், ஆ. (2010). பிள்ளையார் அரசியல்: மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், பாவை பதிப்பகம்.
பரமசிவன், தொ. (2016) பண்பாட்டு அசைவுகள், முதல் பதிப்பு: 2001, காலச்சுவடு பதிப்பகம்.
பக்தவத்சலபாரதி, சீ. (2011) பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம்.
மாடசாமி, ச. (2015). தமிழர் திருமணம்: அன்று முதல் இன்று வரை, எட்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயம்.
தேவநேயப்பாவாணர், ஞா. (2000) தமிழர் திருமணம், பதிப்பாசிரியர்: அ. நக்கீரன், முதற்பதிப்பு:1956, தமிழ்மண் பதிப்பகம்.
சுப்ரமணியன், கா. (2011). சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸ், ப.10.  


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

S%2BVelvi%2B01.jpg S%2BVelvi%2B01a.jpgS%2BVelvi%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 S%2BVelvi%2B02a.jpg S%2BVelvi%2B03.jpgS%2BVelvi%2B03a.jpgS%2BVelvi%2B04.jpgS%2BVelvi%2B04a.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard