Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்
Permalink  
 


சிவ வழிபாட்டின் தொன்மையும்  உலகளாவிய விரிவும்

உலக மக்கள் அனைவரும் தத்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகும் பொதுவான ஒழுகலாறுகளுள் தெய்வ வழிபாடும் ஒன்றாகும். மக்கட் கூட்டத்தார் தாம்தாம் பிறந்து வாழும் நாடுகளின் வெப்பதட்ப அமைப்புக்கும் பிற சூழ்நிலைகட்கும் ஏற்ப வடிவாலும் நிறத்தாலும் கலை நாகரிகம் முதலியவற்றாலும் அறிவின்திறத்தாலும் படிப்படியே வளர்ச்சி பெற்று வந்துள்ளனர். உலகமுழுவதும் ஒன்று என எண்ணும் விரிந்தவுள்ளத்தினராய் உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தினர் எனக்கருதும் அளவு நாகரிகம் பரவியுள்ள இக்காலத்திலும் அறிவு முதிரா நிலையினராய் நாகரிக வளர்ச்சியின்றித் தனிமையுற்றுப் பல்வேறு குழுவினராய் வாழ்க்கை நிலைகளிற் கீழ்ப்பட்ட மக்கட் பிரிவினரும் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.

 

நாகரிகம் பெற்றார் பெறாதார் ஆகிய எல்லா மக்களிடையேயும் தம்மைப் பாதுகாத்து அருள்புரியும் தெய்வம் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கை நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றது. ஆகவே தெய்வங்கொள்கை யென்பது நாடு மொழி இனம் என்னும் வேறுபாடின்றி மக்கட்குலத்தார் அனைவர்க்கும் இயல்பாகத் தோன்றுவதோர் உணர்வு எனக்கொள்ள வேண்டியுளது. காணப்படும் இவ்வுலகில் எண்ணிறந்த அனைத்து உயிர்களும் தத் தமக்கேற்ற உடம்புடன் நிலைபெற்று வாழ்தற்கு இன்றியமையாதது உணவாகும். மன்னுயிர்கள் உடம்பொடு கூடி வாழ்தற்கு இன்றியமையாத உணவினும் சிறந்ததாக மக்கட்குலத்தாராற் கருதத்தகுவது தெய்வங் கொள்கையேயாகும். இந்நுட்பத்தினைத் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமது வாழ்க்கை யனுபவத்தால் தெளியவுணர்ந்திருந்தார்கள். தமிழ்ப் பொருளிலக்கணம் கூறும் முதல் கரு உரி என்னும் மூவகைப் பொருள்களில் கருப்பொருளை வகைப்படுத்துணர்த்தக்கருதிய ஆசிரியர் தொல்காப்பியனார், "தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவும் கருஎன மொழிப” எனத் தெய்வத்தினை உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத உணவினும் முதன்மையுடையதாகத் தமிழ் முன்னோர் எண்ணிய திறத்தினை நன்கு புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக மன்னுயிர்கள் பல்வேறுடம்புகளைப் பெற்றுப் படிப்படியாக வளர்ச்சி நிலை யெய்திய தொன்மைக்காலத்தே வாழ்ந்த மக்கட் கூட்டத்தார் கடல்கோள் புயல் நிலநடுக்கம் முதலாக இயற்கைப் பொருள்களால் நேரும் இடையூறுகளையும் புலி முதலிய கொடிய விலங்கினங்களாலும் பாம்பு முதலிய நச்சுயிர்களாலும் நேரும் இடர்களையும் எண்ணிப் பெரிதும் அஞ்சினர். இவ்விடையூறுகளைப் போக்குதற்குத் தம்பால் அன்புடைய ஆற்றலுடையார் யாரேனும் துணை செய்யமாட்டார்களா எனத் தம்மினும் மேலானதொரு பொருளின் துணையை நாடினர். இவ்வாறு மக்கள் உள்ளத்தே தோன்றிய அச்சத்தினாலும் உயிர்ப் பண்பாகிய அன்பினாலும் எல்லாவுயிர்கட்கும் துணைபுரியும் தெய்வம் என்பது ஒன்றுண்டு என்னும் உணர்வு மனவுணர்வினராகிய மக்களது மனத்தகத்தே அரும்பித் தோன்றியது. மக்களுள்ளத்தே கிளர்ந்தெழுந்த இத்தெய்வவுணர்வு, ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் சுடர் விட்டு விளங்குதற்கு இடமாகிய வானையும் கடல்சூழ்ந்த இவ்வுலகினையும் நிலமெங்கும் பரவி வாழும் எண்ணிறந்த உயிரினங்களையும் இயைத்து நோக்கும் பல்வேறு நம்பிக்கைகட்கும் நிலைக்களமாய் வளர்ந்தது; மக்கள் பெற்றுள்ள வாழ்வியலில் அழுந்தியறிதலாகிய அனுபவ அறிவின் பயனாகக் கிடைத்த உயர்ந்த தத்துவங்களோடு கூடிய பல்வேறு சமயங்களாக உலகெங்கும் விரிந்து பரவுவதாயிற்று. உலக மக்கள் காலந்தோறும் வளர்ச்சி பெற்று வரும் தம்முடைய வாழ்க்கை வளங்களுக்கேற்பத் தெய்வ வழிபாட்டிலும் அவ்வழிபாட்டினை அடியொற்றியுருவாகிய தத்துவவுனர்விலும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளார்கள். இவ்வாறு உலகெங்கும் பரவி வாழ்ந்த மக்கட்குலத்தாரது உணர்வுநிலை கட்கேற்ப அவர்களால் வழிபடப்பெறும் தெய்வங்களின் திருவுருவங்களும் அடையாளங்களும் வழிபாட்டுக்குரிய நிலையங்களாகிய திருக்கோயில்களும் பலவாக விரிவடைந்துள்ளன.

இங்ங்னம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களது வாழ்க்கையில் நிலவிவரும் தெய்வ வழிபாடுகள் சமய நெறியாகவும் அந்நெறிபற்றிய சிந்தனைகள் தத்துவங்களாகவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இந்நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் முதலிய அயலவர் கலப்பினால் தமிழ்ச் சமயநெறிகளில் அயலவர் நடைமுறைகள் சில இடம்பெற்றன எனக்கருத இடமுண்டு. இந்திய நிலப்பரப்பில் வழங்கும் திராவிட மொழிகளின் தொன்மையையும் அமைப்பையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் தமிழ்மொழி முதன்மை பெற்று விளங்குகின்றது; அதுபோலவே இந்திய நாட்டில் வாழும் பழங்குடி மக்களாகிய திராவிட இனத்தவரின் தொன்மைச் சமய அமைப்புகளையும் அவற்றின் தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் சைவசமயம் முதன்மை பெற்று விளங்குகின்றது.

சிந்துவெளியில் நிகழ்ந்துள்ள அகழ்வாராய்ச்சியினால் அறியப்படும் இந்திய நாகரிகம் என்பது இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையதாகும். அஃது இந்நாட்டில் ஆரியர் வருவதற்கு முன் நிலவிய திராவிடநாகரிகமே என்பது நடுநிலையுணர்வுடைய வரலாற்றாசிரியர்களால் உறுதி செய்யப்பெற்றுளது. இந்திய நாட்டின் வடபகுதியில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியாற் புலனாகும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னாட்டிற் சங்க இலக்கியங்களால் அறியப்படும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை இணைக்கும் முறையில் அமைந்தது, இவ்விரு நாகரிகங்களாலும் சிறப்பாகப் புலப்படுத்தப்படும் சைவசமய நெறியேயாகும். இதனால் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் சிந்துவெளி மக்களிடையே நிலவிய சிவ வழிபாடு தென்னாட்டில் வாழும் தமிழ் மக்களின் தொன்மை வரலாற்றொடு மிக நெருங்கிய தொடர்புடையதென்பது நன்கு துணியப்படும்.

சிந்துவெளியிற் பலவகையான வழிபாட்டு நெறிகள் காணப்படினும் அவற்றுட் சிறந்து விளங்குவது சிவ வழிபாடேயாகும். "மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருள்களால் நமக்குப் புலனாகும் செய்திகள் பலவற்றுள் முதன்மை வாய்ந்ததும் நிகரற்றதும் ஆகத் திகழ்வது சைவ சமயத்தின் வரலாறெனின் அது மிகையாகாது. செம்புக் காலத்திற்கும் கற்காலத்திற்கும் முற்பட்ட தொல் பழங்காலத்தில் சைவசமயத்தின் வரலாறு தொடங்குவதும், உலகப் பழம்பெருஞ்சமயங்களுள் மிகப் பழைய சமயமாகச் சைவசமயம் வீறுடன் நின்று நிலவுவதும் குறிப்பிடத் தக்கனவாகும்” என்பர் சர் ஜான்மார்ஷல் துரைமகனார்.

சைவசமய வரலாற்றைக் காலமுறைப்படிக் கருதி நோக்குங்கால் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் சிறந்து விளங்கிய மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் சமய வழிபாடு இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். இக்காலத்தில் தமிழகத்தில் நிலவிவரும் இலிங்க வழிபாடு, சக்தி வழிபாடு, பசுபதி வழிபாடு முதலியன இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையதாகிய சிந்துவெளி நாகரிகத்திற் சிறப்புடைய சமய நெறிகளாகத் திகழ்ந்தன என்பது சர் ஜான்மார்ஷல், ஹீராஸ் பாதிரியார் முதலிய ஆராய்ச்சியாளர்களின் துணியாகும். சிந்து வெளியிலே அகழ்ந்தெடுக்கப் பட்ட ஒவியங்கள், முத்திரைகள், களிமண் படிவங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சர் ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறியுள்ளார்.

"யோகிகட்கல்லாம் தலையாய யோகி சிவன்

அதனாலேயே அவருக்கு மகாதவசி, மகாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன. . . . . . . . . . சைவத்தைப் போலவே யோகநெறியும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகிமட்டும் அல்லர்; விலங்குகட்கெல்லாம் தலைவர் (பசுபதி); சிவனுக்குரிய இவ்வியல்பினையே சிவனைச் சுற்றி யானை புலி காண்டாமிருகம், எருது என்னும் நான்கு விலங்குகள் நிற்கும் தோற்றம் காட்டுகின்றது. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள் பிற்காலத்திற் சிவனது சிறப்புத் திருவுருவம் ஒன்றைக் குறிக்கும் நிலையில் மூவிலைச் சூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பிற்காலத்திலே சிவனுக்கு அமைந்த பல அமைப்புக்களின் தோற்றநிலைகளே சிந்து வெளி முத்திரைகளிற் காணப்படுகின்றன என நாம் கருதலாம்”.

அரப்பாவின் நாகரிகம் கி. மு. நாலாயிரத்திற்கும் மூவாயிரத்திற்கும் இடைப்பட்டது என்பர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். கி. மு. 2500-க்கும் கி. மு. 1500-க்கும் இடைப்பட்டது சிந்துவெளி நாகரிகம் எனவும் அஃது ஆரியர்களால் அழிக்கப்பட்டது எனவும் ஆரியர் இந்தியாவிற் குடியேறிய காலம் கி. மு. 1500 எனவும் சர் மார்ட்டிமர் வீலர்கூறுவர். சிந்துவெளி நாகரிகத்தின் மொகஞ்சதரோவின் கூறுகள் அந்நாகரிகத்தின் தொடக்க காலத்ததன்று; மொகஞ்சதாரோ காலத்தைக் காட்டிலும், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது முற்பட்டிருத்தல் வேண்டும் என்பர் பேராசிரியர் இராதாகுமுதமுகர்ஜி.

சிந்துவெளி மக்கள் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்திய திருவுருவம் சிவலிங்கங்களே. அரப்பாவில் மட்டும் சிறியனவும் பெரியனவுமாக ஏறக்குறைய ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. சிறிய சிவலிங்கங்களை அக்கால மக்கள் இக்காலத்து வீர சைவர்களைப்போன்று தங்கள் கழுத்திலும் கையிலும் கட்டிக்கொண்டிருத்தல் கூடும். இதனால் சைவ சமயத்திற்கேயுரிய சிவலிங்க வழிபாடு ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியிற் சிறந்து விளங்கியதெனபது நன்கு துணியப்படுதல் காணலாம்.

 

 


1. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல், 13.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்
Permalink  
 


அரப்பாவிற் கிடைத்துள்ள ஆண்சிலையொன்று இடது காலைத்துக்கி வலது காலையூன்றி நின்று நடம்புரியும் நிலையிற் காணப்படுகின்றது. இதனைச் சிவபெருமானுக் குரிய திருவுருவங்களில் ஒன்றான நடராசர் திருவுருவின் முதலுருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர்.

மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள பெண் வடிவங்களுள் குழந்தையை அனைத்தவண்ணம் உள்ள வடிவங்களும், அமைதியும் அருளும் பொலியும் நிலையில் அமைந்த அன்னை வடிவங்களும், காண்போர் அஞ்சத்தக்க முகத்தோற்றமுடைய பெண் வடிவங்களும் காணப்படு கின்றன. இவை முறையே பெண் தெய்வத்திற்குரிய ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்புரியும் சத்தியின் நிலையைக் குறிப்பன எனவும் பிற்காலத்தில் இந்து சமயத்தின் திராவிடக்கூறாக விளங்கும் சத்தி வழிபாட்டின் மூலக் கருவாகச் சிந்து வெளியின் தாய்த் தெய்வ வழிபாடு விளங்குகின்றதெனவும் மோனியர் வில்லியம் என்ற அறிஞர் கூறுவர்.

சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பெற்றுள்ள சில பொருள்களிற் காணப்படும் எழுத்துக்குறிகள் தமிழ் அமைப்புடையனவாகவுள்ளனவெனவும் அவை மழை மூன்(று) கண், நண்டுர், வேலூர், குரங்கர், மீனவர் முதலிய சொற்களைக் குறிக்கின்றன எனவும், பேரான்(ள்) எண்னாள், மூன்(று) கண் என்பன சிவனைக் குறிக்கின்றன எனவும் கருதுவர் உறீராஸ்பாதிரியார்.

மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள சுண்ணாம்புக்கல் முத்திரையொன்றில் யோகியின் உருவத்தின் இருமருங்கிலும் நாகர் இருவர் மண்டியிட்டு வணங்கும் உருவம் பொறிக்கப் பட்டிருத்தலால் மிகப்பழங்காலத்தில் சிவ வழிபாடு நாக வழிபாட்டுடன் தொடர்புடையதாய் உருவாகியதென்பது உய்த்துணரப்படும் என்பர் ஆராய்ச்சியாளர்.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களாக முதற் கண் தாய்த்தெய்வத்தையும் அடுத்தபடியாக மும் முகமுடைய கடவுளையும் மூன்றாவதாகச் சிவலிங்கத்தையும் சர் ஜான் மார்ஷல் என்பார் முறைப்படுத்திக் கூறியுள்ளார். பண்டைய திராவிட மக்களிற் பெரும்பாலோர் தாய்வழி யுரிமையாகிய தாயமுறையினையே கடைப்பிடித்தனர் எனவும் அது காரணமாகவே திராவிட மக்களிடையே தாய்த்தெய்வ வழிபாடு பெருவழக்காயிருந்ததெனவும் கூறுவர் சமூகவியல் அறிஞர். பெற்றோர் வழியே பிள்ளைகள் பெறும் பொருளுரிமை 'தாயம்’ என்ற சொல்லாற் சங்கச் செய்யுட்களில் வழங்கக் காண்கின்றோம். தாயம் என்ற இச்சொல் 'தாய்’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததென்பது இங்குக் கருதத்தகுவதாகும்.

சங்ககாலத் தமிழர்நாகரிகத்திற்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற்கும் இடையே சமய வழிபாடு பற்றிய தொடர்புகள் மிக நெருக்கமாகவுள்ளன. தமிழகத்தில் தொன்று தொட்டு நிலைபெற்றுவரும் சத்திவழிபாடும் இத்தொடர்பினை உறுதிப்படுத்துஞ் சான்றுகளாக அமைந்துள்ளன. சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் வரையப் பெற்றுள்ள எழுத்துக்குறிப்புக்கள் தமிழொடு தொடர்புடையனவாக ஆராய்ச்சியாளர்களாற் கருதப்படுகின்றன.

சிந்தனைக்கரிய சிவபரம்பொருளை மன்னுயிர்களின் சிந்தையிற் சுடர் விட்டு விளங்கும் சோதிப் பொருளாகவைத்து வழிபடும் நிலையில் முன்னைத் தவப்பெருஞ் செல்வர்களாற் பல்லாயிர ஆண்டுகட்குமுன் கண்டு வழிபடப்பெற்ற தொன்மை வாய்ந்தது, சிவலிங்கத் திருவுருவமாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடமாகிய வட்டக்கல் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையினையும் அதன் நடுவே நாட்டப்பெற்றுத் தூண்வடிவில் நிமிர்ந்து தோன்றும் பானம் நெஞ்சத் தாமரையின் உள்ளிருந்தெழுஞ் சோதியாய்ச் சுடர்விட்டொளிரும் சிவ பரம்பொருளையும் குறிக்கும் அடையாளங்களாகும்.

 

‘'எதுக்களாலும் எடுத்த மொழியாலுமிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி”

'மனத்துள்மாயனை மாசறுசோதியை'

"இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுகின்ற சோதியே?”

எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், உலக முதல்வனாகிய இறைவன் மன்னுயிர்களின் மனத்தகத்தெழுஞ் சோதியாகத் திகழுமாண்பினை நன்கு வலியுறுத்தல் காணலாம். அலகில் சோதியளாகிய முதல்வனை அகத்தே ஒளியுருவிற்கண்டு வழிபடும் அகப்பூசை முறைமையினை,

“மாதினையோர் கூறுகந்தாய்.....................

காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”

எனவரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் தெளிவாக அருளிச் செய்துள்ளார்.

உயிர்களின் நெஞ்சக்கமலத்தே கேழில் பரஞ்சோதியாய்க் கிளர்ந்து தோன்றும் சிவபரம்பொருளைத் தம் மனத்தகத்தே கண்டு வழிபட்டு, மகிழ்ந்த தவப்பெருஞ்செல்வர்கள் தாம் கண்ட அத்தெய்வக்காட்சியை உலகமக்கள் எல்லோரும் புறத்தே கண்டு வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் புறத்தே அமைத்துக் கொண்ட திருவுருவமே சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடம் உயிர்களின் நெஞ்சத்தாமரையின் உருவாகவும் அதன் நடுவே சுடருருவில் நிமிர்ந்து தோன்றும் பானம், காண்டற்கரிய கடவுள் தீவண்ணனாகச் சுடர்விட்டொளிரும் நிலையைப் புலப்படுத்தும் அருவமாகவும் திகழ்தலால் சிவலிங்கம் இறைவனுக்குரிய அருவுருவத் திருமேனியாயிற்று.

இந்நுட்பம்,

“சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே.”

எனவரும் திருவாசகத் தொடரால் இனிது புலனாம். எத்தகையோரும் காணவொண்ணாத அருவநிலையிலுள்ள இறைவனை அன்புடையார் எல்லாரும் புறத்தே அடையாளவுருவில் அருட்குறியாகக் கொண்டு வழிபாடு செய்தற்கு ஏற்றவண்ணம் அருவமும் உருவமுமாகிய இருதிறமும் விரவிய நிலையில் அமைந்த அருவுருவத் திருமேனியாக உலகமக்கள் எல்லோராலும் போற்றி வழிபடப் பெறுவதாயிற்று. இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனை அகத்திலும் புறத்திலும் வழிபட்டு உய்திபெறுதற்குரிய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம், காணவொண்ணாத அருவினுக்கும் காணப்படும் உருவினுக்கும் காரணமாகத் திகழ்வது காத்தற் றொழிலினனாகிய திருமாலும் படைத் தற்றொழிலினனாகிய நான்முகனும் தம்முள் மாறுகொண்டு இகலிய நிலையில் மனத்திற்கும் மாற்றத்திற்கும் முதல்வராகிய அவ்விருவரும் முறையே அடியும் முடியுந்தேடிக்கான வொண்ணாதவாறு நீண்ட தழற்பிழம்பாய்த் தோன்றியதும் அவ்விருவரும் தம் முனைப்படங்கி நாணி அன்புடையராய் வழிபட்டபோது அத்தழல் நடுவே இங்குற்றேன்’ என்று இலிங்க வடிவில் தோன்றியதும் ஆகிய பழஞ்செய்திகள் இலிங்கபுராணத்தே கூறப்பட்டன.

“செங்கணானும் பிரமனுந்தம்முளே

எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்

'இங்குற்றேன்' என்றிலிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடைப்புண்ணிய மூர்த்தியே”

எனவரும் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை, அட்ட மூர்த்தியாகிய இறைவனை அழல்நிற வண்ணனாகக் கொண்டு போற்றும் சிவலிங்கத் திருவுருவ அமைப்பினை இனிது

புலப்படுத்துவதாகும். இங்ஙனம் அருவுருவத்திருமேனியாகத் திகழும் சிவலிங்கத்தின் அமைப்பினையும் அதனை அகத்தும் புறத்தும் வழிபடுவார் அடையும் நற்பேற்றினையும் விளக்கும் நிலையில்,

“காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய்

நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்

நானாது நேடியமால் நான்முகனுங்கான நடுச்

சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்”

எனச் சேக்கிழார் நாயனார் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத்தகுவதாகும்.

உலகமுதல்வனாகிய இறைவனைத் தூண் வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாடு சங்க காலத்திற்கு முன் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பெற்ற தொன்மை வாய்ந்ததாகும். இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத இறைவனைச் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் மக்கள் எல்லோரும் ஒருங்கு கூடும் ஊர்ப்பொதுவிடங்களிற் பலரும் வழிபடும் நிலையில் தூண் வடிவில் நடுதறியாக நிறுத்தி வழிபடுதல் பண்டைத் தமிழர் மேற்கொண்ட முழுமுதற் கடவுள் வழிபாட்டு முறையாகும். ஒரு நாமம், ஒருருவம் ஒன்றுமில்லாத கடவுளைத் தூண்வடிவில் நிறுத்தி மக்கள் எல்லோரும் வேற்றுமையின்றி ஒன்றியிருந்து வழிபாடு செய்தற்குரிய தெய்வநிலையம் கந்துடைநிலை' எனவும் 'பொதியில்' எனவும் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுளது. ‘கந்து - தெய்வம் உறையும் தறி’ என்பர் நச்சினார்க்கினியர். கந்து ‘கந்தம்’ எனவும் வழங்கும்." எங்கும் நிறைந்த இறைவனைத் துளக்கமில்லாத கந்துருவில் (தூண் வடிவில்) நடுதறியாக நிறுத்தி வழிபட்டு வந்த இவ்வழிபாட்டு முறையே நாளடைவில் சிவலிங்க வழிபாடாக வளர்ச்சி பெற்றதெனத் தெரிகிறது. சிவபெருமானுக்குரியனவாக வழங்கும் சிறப்புப் பெயர்களுள் தானு (தூண்), கம்பன் என்பன. இறைவனைத் தூண்வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாட்டு முறையில் அமைந்த சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றிய காரணப்பெயர்களாகும்.

'நானமுடைவேதியனும் நாரணனும் காண்பரிய தாணு'

“கன்றாப்பூர் நடுதறி"

“பொழிலேழுந்தாங்கி நின்ற கற்றுண்காண்'

“மனந்திருத்தும் மழபாடி வயிரத்துணே”

'காலகாலனைக் கம்பன் எம்மானை'

“தனதன்நற்றேழா சங்கரா குலபாணியே

தானுவே.சிவனே"

என வரும் திருமுறைத்தொடர்கள் இக்கருத்தினை வலியுறுத்தும் சான்றாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற் குரியதாகும்.

நாடு நலம்பெறப் பகைவரொடு பொருதுவென்று தம் இன்னுயிர் துறந்து தெய்வநிலைபெற்ற தறுகண்மறவருடைய பெயரும் பீடும் பொறித்து நடப்பெற்ற கல்லினைத் தெய்வமாக நட்டுப் போற்றி வழிபடும் நடுகல்வழிபாடு, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைக் கற்றுானாக (நடுதறியாக) நிறுத்திப் போற்றும் சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றித் தோன்றியதெனக் கருத இடமுண்டு. வீரர்களை நினைவு கூரும் நடுகல் வழிபாட்டில் அவ்வீரர்களுக்கு விருப்பமான தோப்பிக்கள்ளொடு ஆட்டினைப் பலியாகக் கொடுத்து வழிபடுதல் மரபு. கந்துடை நிலையாகிய பொதியிலில் நிகழும் சிவலிங்க வழிபாட்டில் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் உள்நின்று அருள் சுரக்கும் பேரருளாளனும் அறவுருவினனும் ஆகிய இறைவனுக்கு ஒவ்வாத ஊனையும் கள்ளையும் விலக்கி எல்லாவுயிர்களிடத்தும் அன்புடையராய் அன்பே வடிவாகிய இறைவனை நினைவு கூர்ந்து போற்றும் நிலையில் அம்முதல்வனை நெல்லும் மலரும் தூவிப் போற்றும் தூய வழிபாட்டினை மேற்கொண்டொழுகுதல் தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் கடவுள் வழிபாட்டு நெறிமுறையாகும். தெய்வநிலை பெற்ற வீரர்க்கு ஊனும் கள்ளும் படைத்துப் போற்றும் நடுகல் வழிபாடும், உயிர்ப்பலியின்றி நறுமலர் தூவிப் போற்றும் கடவுள் வழிபாடும் ஆகிய இவ்விருதிற வழிபாடுகளும் நாட்டுப்புறங்களிலும் நகர் நடுவிலும் சங்ககாலத்திற் சிறப்பிடம் பெற்றிருந்தன என்பதும், மறக்குடியில் தோன்றிய மக்கள் தமக்குச் சிறப்புரிமையுடைய தெய்வ வழிபாடாக நடுகல் வழிபாட்டினை மேற்கொண்டனர் என்பதும்,

ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி,

ஒளிறேந்து மருப்பிற்களிறெறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவினல்லது

நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலமே”

என மறக்குடியினர் தாம் அணியும் பூவும், உண்ணும் உணவும், தமக்குப் பணி செய்யும் குடியும், வனங்குந் தெய்வமும் பற்றிக் கூறுமுறையிலமைந்த புறநானூற்றுப் பாட்டலால் இனிது புலனாகும். எனவே சங்க காலத்தில் மறமும் அறமும் பற்றிய மக்களது குடிநிலை வாழ்க்கைக்கு ஏற்ப வழிபடும் சிறு தெய்வ வழிபாடும் நெல்லும் மலரும் தூவி வழிபடும் பெருந்தெய்வ வழிபாடும் தமிழகத்தில் ஒப்ப நிகழ்ந்தன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

 

1. “காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே”

2. காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி, 17.

3.திருஞானசம்பந்தர் தேவாரம், 3. 54, 3.

4.திருநாவுக்கரசர். தேவாரம், 5. 15. 2.

5.மாணிக்கவாசகர், திருவாசகம், 395.

6.திருநாவுக்கரசர், தேவாரம், 6. 61.

7. மாணிக்கவாசகர், திருவாசகம், 396,

8. திருநாவுக்கரசர், தேவாரம், 5. 95.11.

9. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கிய நாயனார் புராணம், 8.

10. திருமுருகாற்றுப்படை, 226.

11. அகநானூறு, 167.

12. நச்சினார்க்கினியர். தொல், பொருள். புறத். 33.

13. புறநானூறு, 52.

14. திருஞானசம்பந்தர், தேவாரம், 1. 52.9.

15. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 6. 1.

16. மேலது. 6. 8. 1.

17. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 40, 6.

18. சுந்தரர், தேவாரம், 7. 61.1.

19. திருவிசைப்பா . 7.

20. புறநானூறு 335.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இருளிலும் குளிரிலும் கடுவெயிலிலும் அகப்பட்டு அல்லலுற்ற பண்டைக்கால மக்கள் இருள் நீங்க ஒளிவழங்கும் செஞ்ஞாயிற்றினையும் குளிர்நீக்கி வெம்மைதரும் தீயினையும் உடல்வெம்மை நீங்கத் தண்ணிலவு பொழியும் வென் திங்களையும் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டு போற்றி வழிபடுவாராயினர். ஞாயிறு திங்கள் தீ என்னும் இயற்கைப் பொருள்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் ஒளி வழிபாடுகளுள் முதற்கண்ணதாகிய ஞாயிற்று வழிபாடு என்பது உலகிற் பல சமயத்தாராலும் பன்னெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுமை வாய்ந்ததாகும். இவ்வுண்மை,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும்

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

ஒவற விமைக்குஞ் சேண்விளங்கவிரொளி"

எனச் செம்புலச் செல்வராகிய நக்கீரனார் தம்மாற் போற்றப் பெறும் முருகப்பெருமானது திருமேனியின் பேரொளிக்கு உவமையாக எடுத்தாளும் ஞாயிற்றினைப் பலர் புகழ் ஞாயிறு என அடைகொடுத்து ஒதினமையால் இனிது புலனாகும். பலர் புகழ் ஞாயிறு என்னும் இத்தொடர்க்கு ‘எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிறு என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்துள்ளார்.’ ஆசிரியர் தொல்காப்பியனாரும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகளுள் ஒன்றாக ஞாயிறு என்னும் பெயரைக் குறித்துள்ளார். எனவே ஞாயிற்று வழிபாடு என்பது உலக முழுவதும் பரவி வாழும் எல்லாச் சமயத்தாராலும் மேற்கொள்ளப் பெற்றுவரும் பொதுமை வாய்ந்ததாகப் பண்டைத் தமிழ் மக்களாற் கொள்ளப்பெற்றதென்பது நன்கு புலனாகும்.

பகல் செய்யும் ஞாயிற்றையும் இரவில் தண்ணொளி பரப்பும் திங்களையும் கடுங்குளிரை நீக்கி உணவினைப் பதஞ்செய்யும் தீயினையும் தெய்வமாகக் கருதிப் போற்றும் இயற்கைப் பொருள் வழிபாடு உலக மக்களிடையே முதன் முதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது உலகிற் பல நாடுகளிலும் நிலவி வரும் தொன்மை வழிபாட்டு முறைகளால் நன்கு துணியப்படும். மன்னுயிர்களுக்கு ஆக்கமும், அழிவும் நல்கும் ஆற்றல் வாய்ந்த ஞாயிறு திங்கள் தீ வளி மழை முதலிய இயற்கைப் பொருள்களையே தெய்வமெனக் கொண்டு வழிபட்ட பண்டைக்கால மக்கள், உலக இயக்கத்தினைக் கூர்ந்துணரும் அறிவும் இயற்கைப் பொருள்களால் அவ்வப் பொழுது நேரும் இடர்களிலிருந்து தப்புதற்குரிய ஆற்றலும் தம்முள்ளத்துக் கிளர்ந்தெழுந்த நிலையில் இப்பொருள்களெல்லாவற்றையும் தன்னகத்தடக்கியுள்ள அண்டத்தொகுதியினையும் உலகப்பரப்பில் வாழும் மன்னுயிர்த் தொகுதியினையும் இயக்கி நிற்பதொரு முழு முதற்பொருளாகிய தெய்வம் ஒன்றுண்டு எண்ணுத் தெளிவினைப் பெறுவாராயினர். இந்நிலையில் முன்னர் வழிபடப்பெற்ற ஞாயிறு திங்கள் தீ முதலிய இயற்கைப் பொருள்களனைத்தும் உலகுயிர்கள் எல்லாவற்றையும் உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் பெருந்தெய்வத்தின் பேருருவத்தின் அங்கங்களாகக் கொண்டனர். ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடர்களும் இறைவனுடைய கண்களாகவும் பல்லுயிர்களும் தங்கி வாழ்தற்கு ஆதாரமாகிய பெருநிலம் சேவடியாகவும் பரந்திடங்கொடுக்கும் விசும்பு மெய்யாகவும் கடலே உடையாகவும் அமைய இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் உலகமேயுருவமாகக் கொண்டு திகழ்கின்றான் எனத்தெளிந்து அம்முதல்வனது பேருருவ அமைப்பினைத் தம் உள்ளத்துட்கொண்டு வழிபடுவாராயினர். இத்தகைய பெருந்தெய்வத்தின் பேருருவ வழிபாட்டினை விளக்கும் நிலையில் அமைந்தது,

“மாநிலஞ் சேவடியாகத் தூநீர்

வளைநரல் பெளவம் உடுக்கை யாக

விசும்பு மெய்யாகத் திசைகை யாக

இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வ னென்ப

தீதற விளங்கிய திகிரி யோனே'

எனவரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

காண்டற்கு அரிய கடவுளை உயிர்களின் அகத்தும் உலகின் புறத்தும் ஒளியுருவில் வைத்து வணங்கும் வழிபாடு நம் நாட்டில் பன்னூறாண்டுகளாக நிலவி வருகின்றது. உலகின் புறத்தே ஒளிப்பிழம்பாகத் திகழும் ஞாயிற்றை இறைவன் திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு வழிபடும் வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். எல்லாம் வல்ல சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு, ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எண்பொருள்களையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டு திகழ்தலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி யென்னும் பெயர் வழங்குவதாயிற்று.

'அட்டமூர்த்தி அழகன்”

'நிலம் நீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன்

புலனாய அமைந்தனோ டெண்வகையாய்ப்புணர்ந்து

நின்றான்”

எனவரும் திருமுறைத் தொடர்கள் இறைவன் எண்பேருருவினனாகத் திகழுந் திறத்தினை நன்கு விளக்குவனவாகும். சிவபெருமானுக்குரிய எண்பேருருவங்களில் எல்லாருங்கான முதன்மை பெற்று உலகு விளங்கவிரொளியுடையதாய்த் திகழ்வது ஞாயிறொன்றேயாதலின் கதிரவன் வழிபாடு கற்றோர் கல்லாதார் ஆகிய எல்லா மக்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப் பெறுவதாயிற்று. இது குறித்தே பகலவன் வணக்கத்தின் மேலதான காயத்திரி மந்திரமாகிய இதனையே வேதியர் பலரும் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் ஒதிச் சிறப்பாக வழிபாடு செய்யக் காண்கிறோம். காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்ற பெயராற் போற்றப் பெறுவோன் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானேயென்பது மைத்திராயனியோப நிடதத்திலும் வடமொழி அமரநிகண்டிலும் தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. இந்நுட்பம்,

“அருக்கள் பாதம் வணங்குவரந்தியில்

அருக்கனாவா னரணுரு வல்லனோ

இருக்கு நான்மறை யீசனை யேதொழும்

கருத்தினைநினை யார்கன் மனவரே'

எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பாடலால் இனிது புலனாதல் காணலாம்.

இருக்கு வேதத்திலுள்ள பதிகங்கள் யாவும் ஆரிய மாந்தராலேயே இயற்றப்பெற்றன அல்ல. இந்திரன் வருணன் முதலான தம் படைத் தலைவர்களின் ஆவிகளின் மேல்ஆரியர் பாடிக் கொணர்ந்த பழம் பாடல்களோடு அவர்களை நன்னெறிப்படுத்தல் வேண்டி இங்குள்ள திராவிட முனிவர்கள் பாடிச் சேர்த்த பதிகங்களும் இருக்கு வேதத்தில் உள்ளன என்பதும், காயத்திரி மந்திரத்தை இயற்றி அதனை இருக்கு வேதத்திற் சேர்த்து அவ்வேதத்திற்கு உயிர்த்தன்மையும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னும் பரதகுல அரச முனிவரேயென்பதும் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகளார் முதலிய அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து கண்ட உண்மைகளாகும்."

வாழ்க்கைக்கு நலந்தரும் ஒளியும் வெம்மையும் வழங்கும் தீயினைத் தோற்றுவிக்க எண்ணிய பண்டைக்கால மக்கள், மரக்கட்டைகள் இரண்டினைக் கொண்டு ஒன்றோடொன்று உரசித் தேய்த்து நெருப்பினை உண்டாக்கி அதனாற் பச்சையுணவுப் பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும் அதனொளியால் இருள் செறிந்த இராப் பொழுதில் நச்சுயிர்கட்கும் கொலை விலங்குகட்கும் அஞ்சாது விலகியொழுகவும் தெரிந்துகொண்டார்கள். அத்தகைய நெருப்பின் ஒளிப்பிழம்பினையே தமக்கு அண்மையில் வளர்த்து மனக்களிப்புடன் வணங்கத் தலைப்பட்டனர். பெரிய மரத்தின் நிழலில் வட்டமாகக் குழியினைத் தோண்டி அதன்கண் தீயினை வளர்த்து அதற்கு நெற்பொரியும் மலரும் தூவி வழிபட்டனர். நாட் செல்லச்செல்ல அத்தீயினைத் தொடுதற்கும் நீராட்டி வழிபடுதற்கும் ஏற்ப அத்தீச்சுடரையொத்து நீண்டு குவிந்ததோர் சுடருருவினைக் கருங்கல்லில் அமைத்து வேள்விக் குண்டத்தைக் குறிக்கும் முறையில் வட்டவடிவில் அமைக்கப்பட்ட கருங்கற்பீடத்தில் சுடருருவாகிய அக்குழவியினை நிலைபெறச் செய்து நீராட்டி மலர்துவி உணவுபடைத்து வழிபட்டனர் எனவும் அத்திருவுருவே சிவலிங்கம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று எனவும் கருதுவர் மறைமலையடிகளார்."

வேள்விக்குண்டத்தில் தீயினை வளர்த்து வேதமந்திரங்கள் கூறித் திக்கடவுள் மூலமாக இந்திரன் முதலிய தேவர்கட்கு ஆடு முதலிய உயிர்களை வேள்விற் பலியிட்டு வனங்கும் தீ வழிபாடு ஆரிய வினத்தார்க்குரியதொன்றாகும். இவ்வழிபாட்டில் தீயே தெய்வமாகப் போற்றப் பெறுகின்றது. வேதமந்திரங்களால் வேள்வி செய்வோர் வேள்விக் குண்டத்தில் வளர்த்த தீயினையே தெய்வமாகக் கொண்டு போற்றுதல் சிறப்புடைய வழிபாடன்று எனவும், தூய தீயினையே தனது திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு மன்னுயிர்களுக்கு அருள்புரியும் தெய்வமாவான் அட்ட மூர்த்தியாகிய சிவபரம்பொருளே யாதலின் வேள்விக் குண்டத்தில் வளர்க்கப்பெறும் தீ இறைவன் திருமேனிகளுள் ஒன்றெனக் கொண்டு வழிபடுதலே பொருத்தமுடையது எனவும் இவ்வுண்மையுணராது செய்யப்படும் வேதவேள்விச் சடங்குகள் பயனற்றன எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது.

எரிபெ ருக்குவரவ்வெரி யீசன

துருவ ருக்கம தாவ துணர்கிலார்

அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே"

எனவரும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை யாகும்.

சிவலிங்க வழிபாடு வேதகாலத்திற்கு முற்பட்ட தென்றும் சிந்து மக்களிடையே பரவியிருந்ததென்றும் 'வைணவ சைவ சமயங்களின் ஆராய்ச்சி நூல் தெரிவிக்கின்றது. கற்காலப் பொருள்களில் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன என்பதால் வேதகாலத்திற்குமுற்பட்டது சிவலிங்க வழிபாடு என ஆர். ஜி. பந்தர்க்கரும் கருதுகின்றனர்.

மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப்பேரண்டத்தின் பெரும் பகுதியில் சிவலிங்க வழிபாடு சிறப்பாகப் பரவி இருந்திருக்கிறது. அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளில் நெடுங்காலமாகத் தழைத்தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன்முதலில் ஸ்பெயின் நாட்டவர் கண்டுபிடித்தபோது, தெய்வவழிபாட்டிற்கு மிகத் தூய்மையானதாகவும் சமய நெறிக்கு மிக உயர்ந்ததாகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டினை அவர்கள் அங்கே கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக் கூடுமெனக் கருதத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும் இணைந்துள்ளது என மேனாட்டுப் பேராசிரியராகிய வெஸ்ட்ரோப் என்னும் அறிஞர் சிறப்பித்துக் கூறியுள்ளார். பண்டைநாளில் உலக முழுவதும் பரவியிருந்த இச்சிவலிங்க வழிபாடு இப்பொழுது இந்திய நாட்டளவிலும் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் ஆங்காங்கே நிலைபெற்றுள்ளது.

தென்னாட்டில் குடிமல்லம், குடுமியான்மலை முதலிய இடங்களிலுள்ள சிவலிங்கங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டினவை என்பர் ஆராய்ச்சியாளர். அசோகர் கி. மு. 249ஆம் ஆண்டில் தம்மகள் சாருமதி என்பவளுடன் நேபாளத்திற்குச் சென்றபோது அங்குப் பசுபதிநாதர் என்னும் சிவபெருமான் பெயரால் பாசுபதச் சைவமிடம் ஒன்று இருந்ததாகவும் சாருமதி அம்மடத்திற்சேர்ந்து துறவு நிலையை மேற்கொண்டதாகவும் வரலாறு கூறுகின்றது. நேபாளம் இக்காலத்திலும் சைவ சமயத்தைப் போற்றும் நாடாக விளங்குகின்றது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரையுள்ள இந்தியப் பெருநிலப்பரப்பினுள் பன்னிரண்டு சோதிலிங்கங்கள் இக்காலத்தும் இந்நாட்டு மக்களால் சிறப்பாக வழிபடப் பெற்றுவருதல், சிவலிங்க வழிபாடு நாடு முழுவதும் பரவியுள்ள திறத்தினையும் இந்திய நாட்டில் உள்ள தெய்வ வழிபாடுகளுள் தொன்மையும் தலைமையும் வாய்ந்தது சிவலிங்க வழிபாடு என்பதனையும் நன்கு வலியுறுத்துவதாகும்.

இலிங்க அடையாளம் தீ மேனியனாகிய சிவபெருமானது ஒளிப்பிழம்பாகிய அருவுருவத் திருமேனி யைக் குறிப்பது, தமிழகத்தில் தொடக்க காலத்தில் நடுதறியாகத் துணுருவில் வழிபடப் பெற்றது, அண்டம் பிண்டம் அகண்டம் ஆகிய அனைத்திலும் அறியாமை இருளை நீக்கி ஞானவொளி பரப்பும் சோதிப் பிழம்பாகக் கருதி வழிபடப் பெறுவது. இவ்வுண்மை வடமொழியிலுள்ள இலிங்கபுராணத்தாலும் திருநாவுக்கரசர் அருளிய இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையாலும் இனிது விளங்கும்.

சைவ சமயத்திற் பிறந்து சிவபெருமனை வழிபட்டு வந்த தாய் தந்தை ஆகியோர்க்குத் தவப்புதல்வராகத் தோன்றியவர் ததாகதர் என்னும் சிறப்புப் பெயரினராகிய புத்தர் பெருமான். இவர் குழந்தையாயிருந்தபோது தம் தந்தையருடன் சிவபிரான் கோயிலுக்குச் சென்றதாகப் பழைய கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. கெளதமபுத்தராகிய இவர் தமது அரச வாழ்வினைத் துறந்து மன்னுயிர்கள்பால் அருளுடையராய் உலகம் உய்ய அறிவுரைகளை உபதேசித்து வந்தார். ஆரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்விகள் நிகழவொட்டாமல் தடுத்து அருளொழுக்க நெறியினை விரைந்து பரவச் செய்தார் என்பது வரலாறு.

புத்தசமயத்தினை இந்திய நாட்டிலும் கடல்கடந்த வெளிநாடுகளிலும் பரப்பிய வேந்தர் பெருமானாகிய அசோகன், சிவபெருமானையே வழிபட்டவன் என்பது வின்சன்ஸ்மித் என்னும் வரலாற்று ஆசிரியர் கூற்றால் இனிது விளங்கும்.

 

 

21. திருமுருகாற்றுப்படை 1-3.

22. நச்சினார்க்கினியர் உரை, திருமுருகாற்றுப்படை, 2.

23. தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல். கிளவியாக்கம், நூ. 57.

24. நற்றிணை, கடவுள் வாழ்த்து.

25. திருநாவுக்கரசர், தேவாரம்.

26. மாணிக்கவாசகர், திருவாசகம்.

27. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 8.

28. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 141.

29. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 142

30. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 7

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆரியர் இந்திய நாட்டிற் குடிபுகுதற்கு நெடுங் காலத்திற்கு முன்பே சிவலிங்க வழிபாடு சிறந்து விளங்கிய தென்பதற்குப் பஞ்சாப் மாநிலத்தில் அரப்பா, முகிஞ்தரோ ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப் பெற்றுள்ள சிவலிங்கங்களே சான்றாக உள்ளன. இந்நாட்டிற் குடி புகுந்த ஆரியரின் முன்னோர்கள் தீ மின்னல் இடி மழை முதலிய அஞ்சத்தகும் இயற்கைப் பொருள்களையும் தம் குல முன்னோராகிய இந்திரன் முதலியோரையும் தெய்வமாகக் கொண்டு தம் முன்னோர் பாடிய பாடற்றொகுதியாகிய வேதமந்திரங்களாற் பலவகை வேள்விகளைச் செய்து அவ்வேளவிகளிற் பசு ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று பலியாக இட்டு வழிபட்டனர். வேதநெறிப்படி ஆரியர்கள் நிகழ்த்திய இவ்வேள்விகள் யாவும் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே யென்னும் மெய்யுணர்வின் திறத்தாற் செய்யப்பட்டன அல்ல; பகைவர்காளல் தமக்கு நேரும் அச்சங்காரணமாகவும் தமது பகைவரையழித்து இவ்வுலகிற் பல்வேறு நுகர்ச்சிகளையும் தாமே பெற்று மகிழ்தல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் செய்யப்பட்டனவே. ஆரியர் இந்நாட்டிற் குடியமர்ந்தநிலையில் மக்கள் தாம்தாம் பெறவேண்டிய பதவிகளை விரும்பிப் பசு ஆடு முதலியவற்றைக் கொன்று ஊனுங்கள்ளும் படைத்துச் செய்யப்படும் வேள்விகளை இந்நாட்டிற்றோன்றிய அருளாளர்களாகிய கெளதம புத்தர், மகாவீரர் முதலிய பெருமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பெருமக்கள் கொலை வேள்விகளைக் கண்டித்து மக்களுள்ளத்தே மெய்யுணர்வும் எல்லாவுயிர்கட்கும் இன்னல் செய்யாமையாகிய அருளொழுக்கமும் நிலைபெறச் செய்தனர். உயிர்க்கொலை சூழும் வேதவேள்விகளைக் கண்டிக்கும் நிலையில் அப்பெருமக்களால் வடநாட்டில் அறிவுறுத்தப் பெற்ற தத்துவக் கொள்கைகள் முறையே பெளத்தமும் சமணமும் ஆகும். வடநாட்டிற் புத்த சமண மதங்களின் தாக்குதலால் வலிவிழந்த ஆரியர்களிற் சிலர் தென்னாடு போந்து எழுதாக்கிளவியாகத் தாம் ஒதிவரும் வேதமந்திரங்களின் பயிற்சியினால் தமிழ் வேந்தர்களால் நன்கு மதிக்கப்பெற்று இராசசூயம் முதலிய வேள்விகளைத் தமிழகத்திலும் செய்யத் தொடங்கினர். அந்நிலையில் வடநாட்டிற்றோன்றிய புத்தமத்தினைப் பின்பற்றிய சான்றோர்களும் சமண மதங்களைப் பின்பற்றிய சான்றோர்களும் தமிழகத்திற் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் நிலைகொண்டு அருட்பண்புக்கு மாறாக ஆரியர்கள் நிகழ்த்தும் வேத வேள்விகளைக் கண்டித்துரைப்பாராயினர். இவ்வாறு வடநாட்டிலும் தென்னாட்டிலும் வேத வேள்விகட்குக் கடுமையான எதிர்ப்புத் தோன்றுதலைக் கண்ட ஆரியர்கள் வேதநெறிப்படி வேள்விகளைச் செய்யும் வைதிக நெறியே தமக்குரியது எனக் கொண்ட தமது கோட்பாட்டினைச் சிறிது மாற்றிக் கொண்டு உலகுயிர்களை உள் நின்றியக்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என இந்நாட்டு முன்னோர் வலியுறுத்திய தெய்வங் கொள்கையினையும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிகிறது.

வேதம் அநாதி எனவும் அதன் கண் விதிக்கப்பட்ட வேள்விச் சடங்குகளே இம்மை மறுமையின்பங்களைத் தரவல்லன எனவும் கூறிவந்த வைதிக சமயத்தார் புத்த சமன மதங்களால் வேதவேள்விச் சடங்குகள் கடுமையாக மறுக்கப்பட்ட நிலையில் வேள்வியிற் பசுக்கொலையைப் பெரிதுந் தவிர்க்க முயன்றனர்; வேதங்கள் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்றனவே எனவும் சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஊன்பயிலாத தூய வேள்வி செய்தலே எல்லா நலங்களையும் தரும் எனவும் சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டு செய்யப்படும் வேள்வி நெய்யினால் வேட்கப்பெறும் ஊன் பயிலாவேள்வியாய் அமைதல் நன்றெனவும் கொண்டனர். தம் கொள்கைகளை யெதிர்த்த புத்தர் சமணர்களைத் தருக்கநூல் முறையில் வென்று தமிழகத்தில் நிலவிய தெய்வங்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமது வைதிக நெறியினையும் தமிழகத்தில் நிலைபெறச் செய்து கொண்டார்கள். இச்செய்தி,

"நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய் போகாது

ஒன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்து ஒரு முதுநூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளி'இ

மூவேழ்துறையு முட்டின்றுபோகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக

நிலைக்கொத்த நின் துணைத் துணைவியர்

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் திருந்தேந்துநிலை

என்றுங் காண்கதில் யாமே”

எனச் சோனாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பர்டிய புறநானூற்றுப் பாடலால் இனிது புலனாகும். இவ்வாறு வேதநெறியும் மிகுசைவத்துறையும் இணைந்து வளம்பெறவும் வைதிக சைவநெறியினைப் பழித்துரைக்கும் புத்தம்சமனம் முதலிய புறச்சமயங்கள் தலைமடங்கவும் தனது கல்வித் திறத்தாலும், தூய வேள்வியாலும் இறை வழிபாட்டினாலும் கடைச்சங்ககாலத்திற் புகழ் பரப்பி வாழ்ந்த அருமறையந்தனன் கவுனியர் கோத்திரத்திற் பிறந்த விண்னந்தாயன் என்பதனை மேலே காட்டிய புறப்பாடலில் ஆவூர் மூலங்கிழார் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு தமிழகத்திலே பண்டைக் காலத்திலேயே வைதிக சைவ நெறியினை மேற்கொண்டு வாழ்ந்த அந்தனன் விண்ணந்தாயன் பிறந்தகெளனிய கோத்திரத்தில் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கக் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் காழிப்பதியில் தோன்றிய அருளாசிரியர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்பது இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

இந்திய நாட்டில் முதன்முதற் குடியேறிய பழைய ஆரியர்கள் ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று ஊனுங் கள்ளும் படைத்துச் செய்த வேள்விகட்கும் புத்தசமண மதங்கள் தோன்றிக் கொலை வேள்விகளைக் கண்டித்த நிலையில் இடைக்காலத்தில் வாழ்ந்த நான்மறை முனிவர்கள் எல்லாம் வல்ல இறைவனைத் தீயுருவினனாக அமைத்து நெய்யினைச் சொரிந்து நெல்லும் மலரும் தூவி வழிபட்ட முத்திவேள்விகட்கும் இடையேயுள்ள வேறுபாடு பெரிதாகும். முன்னர்க் குறிக்கப்பட்ட பண்டை ஆரியர்களின் வேதவேள்வி கெளதமபுத்தர் மகாவீரர் முதலிய அருளாசிரியர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கொலை வேள்வியாகும். பின்னர்க் குறித்த நான்மறை முனிவர் இயற்றிய முத்திவேள்வி தீவண்ணனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு இயற்றப்பெறும் தூய வேள்வியாகும். இவை இவற்றிடையேயமைந்த அடிப்படையான வேறுபாடுகளாகும். ஆரியக் குழுவினனாகிய தக்கன் செய்த வேள்வி சிவபரம்பொருளையுடன்படாத நிலையிற் சிதைவுற்ற வைதிக வேள்வியாதலும் சங்க காலத்தில் தமிழ்நாட்டிற் கவுணியன்விண்னந்தாயன் செய்த வேள்வி சிவபெருமானைப் போற்றும் சைவவேள்வியாதலும் இங்கு நோக்கத்தக்கன. இந்திய நாட்டில் ஆரியர் குடியேறுவதற்குமுன் நிலைபெற்ற கடவுட் கொள்கை முதலிய திராவிடருடைய வாழ்க்கை முறைகளும் ஆரியருடைய வைதிக ஒழுகலாறுகளும் சங்ககாலத்திலும் அதனையொட்டிய காலத்திலும் தம்முள் ஒன்றோடொன்று உறழ்ந்து கலப்புற்ற திறத்தினைத் தென்னகத்தில் தோன்றிய தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலிய தமிழ்த் தொன்னூல்களும் வடநாட்டில் தோன்றிய உபநிடதம் முதலிய வடமொழி மெய்ந்நூல்களும் நன்கு புலப்படுத்துகின்றன.

வேதத்திற்குப் புறம்பாக வடநாட்டிற் கிளைத்தெழுந்த புத்தம் சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டிற் புகுந்து மெல்லமெல்லப் பெருவழக்குப் பெற்றதனைத் தொடர்ந்து ஆரியரது வைதிக சமயமும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலை பெறுதற்குரிய வழி வகைகளைக் காண்பதாயிற்று. வேதவழிப்பட்ட வேள்விச் சடங்குகளையே வற்புறுத்தி வந்த வைதிக சமயத்தார் தமது கொள்கை நாட்டில் தனித்து நிலைபெறுதற்குரிய வன்மையில்லாதது என்பதனைத் தெளிவாகவுனர்ந்து கொண்டு நெடுங்காலமாக இந்நாட்டு மக்களுள்ளத்திலே நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம், வைணவம் முதலிய தெய்வங் கொள்கையின் சார்பினைப் பெற்று நாட்டில் நிலையாக வேரூன்றி நிலைபெறுவாராயினர். வேதநெறிக்கு மாறான பெளத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் அரசியலாட்சியில் வேந்தர்களின் சார்பினைப் பெற்று வைதிக நெறியை மட்டுமன்றித் தமிழ் மக்களது தெய்வங்கொள்கையினையும் கீழ்ப்படுத்த முயன்ற பிற்காலத்தில் வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண மதங்களுக்கும் வைதிகநெறியோடினைந்த சைவ வைணவ சமயங்கட்கும் நேரடியான போர் மூண்டது. அதன் பயனாகப் புத்தம் சமனம் ஆகிய சமயங்கள் வீழ்ச்சியடைவனவாயின.

இடைக்காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் திராவிடச் சான்றோரையடுத்துப்பெற்ற மெய்ப்பொருளுணர்வினால் வேள்வியில் தாம் முன்னர்ச் செய்து போந்த பசுக்கொலையை ஒழித்துத் தமது வேள்விச் சடங்கினைக் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவாராயினர். அதன் பயனாக வேள்விக்குண்டத்திற்கும் அதன்கண் வளர்க்கப்பெற்ற தீச்சுடருக்கும் அறிகுறியாகச் சிவலிங்கத் திருமேனியையும் அதன் எதிரே இறைவனைச் சென்றணுகும் தூய உயிருக்கும் முன்னர் வேள்விக்களத்திலே வெட்டப்பட்ட மாட்டிற்கும் அதனைப் பலியிட்ட மேடைக்கும் அடையாளமாக நந்தியின் உருவையும், அதன் பின்னர்ப் பலிபீடத்தையும் கல்லிற் செய்து அமைத்தனர். ஆரியர் வருகைக்கு முன் பண்டைக் குடிமக்களால் மரநீழலிற் சிவலிங்கத் திருவுருவம் மட்டுமே வைத்து வழிபடப் பெற்றது. ஆரியக்குருமாரின் சேர்க்கையால் சிவலிங்கத்தின் முன் வேள்விக்குண்டமும் நந்தியும் பலிபீடமும் பிற்காலத்திற் சேர்த்தமைக்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்திற் சிவபெருமான் திருக்கோயிலிலுள்ள பலிபீட அமைப்பு குறிஞ்சித் தினையொழுகலாற்றில் முருகவேள் வழிபாட்டில் இடம் பெற்ற மறியறுத்தலும், புறத்தினை யொழுகலாற்றில் கொற்றவை வழிபாட்டில் இடம்பெற்ற அவிப்பலியும் ஆகியவற்றின் அடையாளமாகவும் அமைந்திருத்தல் கூடும்

31. புறநானூறு 166.

32. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 149.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆரியர் இந்திய நாட்டிற் குடிபுகுதற்கு நெடுங் காலத்திற்கு முன்பே சிவலிங்க வழிபாடு சிறந்து விளங்கிய தென்பதற்குப் பஞ்சாப் மாநிலத்தில் அரப்பா, முகிஞ்தரோ ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப் பெற்றுள்ள சிவலிங்கங்களே சான்றாக உள்ளன. இந்நாட்டிற் குடி புகுந்த ஆரியரின் முன்னோர்கள் தீ மின்னல் இடி மழை முதலிய அஞ்சத்தகும் இயற்கைப் பொருள்களையும் தம் குல முன்னோராகிய இந்திரன் முதலியோரையும் தெய்வமாகக் கொண்டு தம் முன்னோர் பாடிய பாடற்றொகுதியாகிய வேதமந்திரங்களாற் பலவகை வேள்விகளைச் செய்து அவ்வேளவிகளிற் பசு ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று பலியாக இட்டு வழிபட்டனர். வேதநெறிப்படி ஆரியர்கள் நிகழ்த்திய இவ்வேள்விகள் யாவும் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே யென்னும் மெய்யுணர்வின் திறத்தாற் செய்யப்பட்டன அல்ல; பகைவர்காளல் தமக்கு நேரும் அச்சங்காரணமாகவும் தமது பகைவரையழித்து இவ்வுலகிற் பல்வேறு நுகர்ச்சிகளையும் தாமே பெற்று மகிழ்தல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் செய்யப்பட்டனவே. ஆரியர் இந்நாட்டிற் குடியமர்ந்தநிலையில் மக்கள் தாம்தாம் பெறவேண்டிய பதவிகளை விரும்பிப் பசு ஆடு முதலியவற்றைக் கொன்று ஊனுங்கள்ளும் படைத்துச் செய்யப்படும் வேள்விகளை இந்நாட்டிற்றோன்றிய அருளாளர்களாகிய கெளதம புத்தர், மகாவீரர் முதலிய பெருமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பெருமக்கள் கொலை வேள்விகளைக் கண்டித்து மக்களுள்ளத்தே மெய்யுணர்வும் எல்லாவுயிர்கட்கும் இன்னல் செய்யாமையாகிய அருளொழுக்கமும் நிலைபெறச் செய்தனர். உயிர்க்கொலை சூழும் வேதவேள்விகளைக் கண்டிக்கும் நிலையில் அப்பெருமக்களால் வடநாட்டில் அறிவுறுத்தப் பெற்ற தத்துவக் கொள்கைகள் முறையே பெளத்தமும் சமணமும் ஆகும். வடநாட்டிற் புத்த சமண மதங்களின் தாக்குதலால் வலிவிழந்த ஆரியர்களிற் சிலர் தென்னாடு போந்து எழுதாக்கிளவியாகத் தாம் ஒதிவரும் வேதமந்திரங்களின் பயிற்சியினால் தமிழ் வேந்தர்களால் நன்கு மதிக்கப்பெற்று இராசசூயம் முதலிய வேள்விகளைத் தமிழகத்திலும் செய்யத் தொடங்கினர். அந்நிலையில் வடநாட்டிற்றோன்றிய புத்தமத்தினைப் பின்பற்றிய சான்றோர்களும் சமண மதங்களைப் பின்பற்றிய சான்றோர்களும் தமிழகத்திற் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் நிலைகொண்டு அருட்பண்புக்கு மாறாக ஆரியர்கள் நிகழ்த்தும் வேத வேள்விகளைக் கண்டித்துரைப்பாராயினர். இவ்வாறு வடநாட்டிலும் தென்னாட்டிலும் வேத வேள்விகட்குக் கடுமையான எதிர்ப்புத் தோன்றுதலைக் கண்ட ஆரியர்கள் வேதநெறிப்படி வேள்விகளைச் செய்யும் வைதிக நெறியே தமக்குரியது எனக் கொண்ட தமது கோட்பாட்டினைச் சிறிது மாற்றிக் கொண்டு உலகுயிர்களை உள் நின்றியக்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என இந்நாட்டு முன்னோர் வலியுறுத்திய தெய்வங் கொள்கையினையும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிகிறது.

வேதம் அநாதி எனவும் அதன் கண் விதிக்கப்பட்ட வேள்விச் சடங்குகளே இம்மை மறுமையின்பங்களைத் தரவல்லன எனவும் கூறிவந்த வைதிக சமயத்தார் புத்த சமன மதங்களால் வேதவேள்விச் சடங்குகள் கடுமையாக மறுக்கப்பட்ட நிலையில் வேள்வியிற் பசுக்கொலையைப் பெரிதுந் தவிர்க்க முயன்றனர்; வேதங்கள் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்றனவே எனவும் சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஊன்பயிலாத தூய வேள்வி செய்தலே எல்லா நலங்களையும் தரும் எனவும் சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டு செய்யப்படும் வேள்வி நெய்யினால் வேட்கப்பெறும் ஊன் பயிலாவேள்வியாய் அமைதல் நன்றெனவும் கொண்டனர். தம் கொள்கைகளை யெதிர்த்த புத்தர் சமணர்களைத் தருக்கநூல் முறையில் வென்று தமிழகத்தில் நிலவிய தெய்வங்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமது வைதிக நெறியினையும் தமிழகத்தில் நிலைபெறச் செய்து கொண்டார்கள். இச்செய்தி,

"நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய் போகாது

ஒன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்து ஒரு முதுநூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளி'இ

மூவேழ்துறையு முட்டின்றுபோகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக

நிலைக்கொத்த நின் துணைத் துணைவியர்

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் திருந்தேந்துநிலை

என்றுங் காண்கதில் யாமே”

எனச் சோனாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பர்டிய புறநானூற்றுப் பாடலால் இனிது புலனாகும். இவ்வாறு வேதநெறியும் மிகுசைவத்துறையும் இணைந்து வளம்பெறவும் வைதிக சைவநெறியினைப் பழித்துரைக்கும் புத்தம்சமனம் முதலிய புறச்சமயங்கள் தலைமடங்கவும் தனது கல்வித் திறத்தாலும், தூய வேள்வியாலும் இறை வழிபாட்டினாலும் கடைச்சங்ககாலத்திற் புகழ் பரப்பி வாழ்ந்த அருமறையந்தனன் கவுனியர் கோத்திரத்திற் பிறந்த விண்னந்தாயன் என்பதனை மேலே காட்டிய புறப்பாடலில் ஆவூர் மூலங்கிழார் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு தமிழகத்திலே பண்டைக் காலத்திலேயே வைதிக சைவ நெறியினை மேற்கொண்டு வாழ்ந்த அந்தனன் விண்ணந்தாயன் பிறந்தகெளனிய கோத்திரத்தில் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கக் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் காழிப்பதியில் தோன்றிய அருளாசிரியர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்பது இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

இந்திய நாட்டில் முதன்முதற் குடியேறிய பழைய ஆரியர்கள் ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று ஊனுங் கள்ளும் படைத்துச் செய்த வேள்விகட்கும் புத்தசமண மதங்கள் தோன்றிக் கொலை வேள்விகளைக் கண்டித்த நிலையில் இடைக்காலத்தில் வாழ்ந்த நான்மறை முனிவர்கள் எல்லாம் வல்ல இறைவனைத் தீயுருவினனாக அமைத்து நெய்யினைச் சொரிந்து நெல்லும் மலரும் தூவி வழிபட்ட முத்திவேள்விகட்கும் இடையேயுள்ள வேறுபாடு பெரிதாகும். முன்னர்க் குறிக்கப்பட்ட பண்டை ஆரியர்களின் வேதவேள்வி கெளதமபுத்தர் மகாவீரர் முதலிய அருளாசிரியர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கொலை வேள்வியாகும். பின்னர்க் குறித்த நான்மறை முனிவர் இயற்றிய முத்திவேள்வி தீவண்ணனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு இயற்றப்பெறும் தூய வேள்வியாகும். இவை இவற்றிடையேயமைந்த அடிப்படையான வேறுபாடுகளாகும். ஆரியக் குழுவினனாகிய தக்கன் செய்த வேள்வி சிவபரம்பொருளையுடன்படாத நிலையிற் சிதைவுற்ற வைதிக வேள்வியாதலும் சங்க காலத்தில் தமிழ்நாட்டிற் கவுணியன்விண்னந்தாயன் செய்த வேள்வி சிவபெருமானைப் போற்றும் சைவவேள்வியாதலும் இங்கு நோக்கத்தக்கன. இந்திய நாட்டில் ஆரியர் குடியேறுவதற்குமுன் நிலைபெற்ற கடவுட் கொள்கை முதலிய திராவிடருடைய வாழ்க்கை முறைகளும் ஆரியருடைய வைதிக ஒழுகலாறுகளும் சங்ககாலத்திலும் அதனையொட்டிய காலத்திலும் தம்முள் ஒன்றோடொன்று உறழ்ந்து கலப்புற்ற திறத்தினைத் தென்னகத்தில் தோன்றிய தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலிய தமிழ்த் தொன்னூல்களும் வடநாட்டில் தோன்றிய உபநிடதம் முதலிய வடமொழி மெய்ந்நூல்களும் நன்கு புலப்படுத்துகின்றன.

வேதத்திற்குப் புறம்பாக வடநாட்டிற் கிளைத்தெழுந்த புத்தம் சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டிற் புகுந்து மெல்லமெல்லப் பெருவழக்குப் பெற்றதனைத் தொடர்ந்து ஆரியரது வைதிக சமயமும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலை பெறுதற்குரிய வழி வகைகளைக் காண்பதாயிற்று. வேதவழிப்பட்ட வேள்விச் சடங்குகளையே வற்புறுத்தி வந்த வைதிக சமயத்தார் தமது கொள்கை நாட்டில் தனித்து நிலைபெறுதற்குரிய வன்மையில்லாதது என்பதனைத் தெளிவாகவுனர்ந்து கொண்டு நெடுங்காலமாக இந்நாட்டு மக்களுள்ளத்திலே நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம், வைணவம் முதலிய தெய்வங் கொள்கையின் சார்பினைப் பெற்று நாட்டில் நிலையாக வேரூன்றி நிலைபெறுவாராயினர். வேதநெறிக்கு மாறான பெளத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் அரசியலாட்சியில் வேந்தர்களின் சார்பினைப் பெற்று வைதிக நெறியை மட்டுமன்றித் தமிழ் மக்களது தெய்வங்கொள்கையினையும் கீழ்ப்படுத்த முயன்ற பிற்காலத்தில் வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண மதங்களுக்கும் வைதிகநெறியோடினைந்த சைவ வைணவ சமயங்கட்கும் நேரடியான போர் மூண்டது. அதன் பயனாகப் புத்தம் சமனம் ஆகிய சமயங்கள் வீழ்ச்சியடைவனவாயின.

இடைக்காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் திராவிடச் சான்றோரையடுத்துப்பெற்ற மெய்ப்பொருளுணர்வினால் வேள்வியில் தாம் முன்னர்ச் செய்து போந்த பசுக்கொலையை ஒழித்துத் தமது வேள்விச் சடங்கினைக் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவாராயினர். அதன் பயனாக வேள்விக்குண்டத்திற்கும் அதன்கண் வளர்க்கப்பெற்ற தீச்சுடருக்கும் அறிகுறியாகச் சிவலிங்கத் திருமேனியையும் அதன் எதிரே இறைவனைச் சென்றணுகும் தூய உயிருக்கும் முன்னர் வேள்விக்களத்திலே வெட்டப்பட்ட மாட்டிற்கும் அதனைப் பலியிட்ட மேடைக்கும் அடையாளமாக நந்தியின் உருவையும், அதன் பின்னர்ப் பலிபீடத்தையும் கல்லிற் செய்து அமைத்தனர். ஆரியர் வருகைக்கு முன் பண்டைக் குடிமக்களால் மரநீழலிற் சிவலிங்கத் திருவுருவம் மட்டுமே வைத்து வழிபடப் பெற்றது. ஆரியக்குருமாரின் சேர்க்கையால் சிவலிங்கத்தின் முன் வேள்விக்குண்டமும் நந்தியும் பலிபீடமும் பிற்காலத்திற் சேர்த்தமைக்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்திற் சிவபெருமான் திருக்கோயிலிலுள்ள பலிபீட அமைப்பு குறிஞ்சித் தினையொழுகலாற்றில் முருகவேள் வழிபாட்டில் இடம் பெற்ற மறியறுத்தலும், புறத்தினை யொழுகலாற்றில் கொற்றவை வழிபாட்டில் இடம்பெற்ற அவிப்பலியும் ஆகியவற்றின் அடையாளமாகவும் அமைந்திருத்தல் கூடும் எனக் கருதுதற்கும் இடமுண்டு.

சிவபெருமானைச் சிவலிங்கமாகிய அருவுருவத் திருமேனியிற் பொதுவிடங்களில் வைத்து வழிபட்ட முன்னோர்கள், காலஞ்செல்லச் செல்ல அம்முதல்வனுக் கெனத் தனிக்கோயில் அமைத்த நிலையில் சிவலிங்கத் திருவுருவின் முன்ன்ா நந்தியும் பலிபீடமும் இடம்பெறுவன வாயின. இவ்வழிபாட்டில் சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளைக் குறிப்பது. பலிபீடம் அம்முழுமுதற்கடவுளின் திருவருளைப்பெற விழைந்து செல்லும் ஒர் உயிர் தன்னைத் தோற்றமில் காலமாகப்பிணித்துள்ள பசுத்தன்மையாகிய யான் எனது என்னுஞ் செருக்கையும் வெட்டி வீழ்த்தும் ஓர் உயர்ந்த இடத்திற்கு அறிகுறியாகவும், பலிபீடத்தைக் கடந்து சிவலிங்கத்தின் எதிரிலே வைக்கப்பட்டிருக்கும் நந்தி அறியாமையும் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் திருவருட் பேற்றை நாடி முற்பட்ட துய உயிருக்கு அடையாளமாகவும் அமைக்கப் பெற்றனவாகும். இந்நுட்பம்,

"ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடலே றேனநிற்கும்

ஆய பலிபீடம் ஆகுநற் பாசம்

ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்க்கே”

எனவரும் திருமந்திரத்தால் நன்கு விளக்கப்பெற்றுள்ளது. சைவ சித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக்கணங்களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றது என்பதும், சிவலிங்கம், நந்தி, பலிபீடம் அமைந்த சிவாலயங்கள் திருமூலநாயனார் காலத்திற்கு முற்பட்ட தொன்மையுடையன என்பதும் இத்திருமந்திரப் பாடலால் நன்கு புலனாதல் காணலாம்.

31. புறநானூறு 166.

32. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 149.

33. திருமூலர், திருமந்திரம், 241.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திருக்கோயிலில் மூலத்தானமென்னும் கருவறையில் நிறுத்தப்பெற்றுள்ள சிவலிங்கம் முழுமுதற் கடவுளாகிய பதியையும், அதன் எதிரேயுள்ள நந்தி பதியை நாடிச் செல்லும் தூய உயிரான பசுவையும், அதன் பின்னேயுள்ள பலிபீடம் பசுவினால் தொடர்பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவமலாமாகிய பாசத்தையும் உயர்த்துவன என்பது மேற்குறித்த திருமந்திரத்தாற் புலனாகும்.

திருமூலநாயனார் காலத்துக்கு ஆயிரம் யாண்டு பிற்பட்ட காலப்பகுதியிலே சிவாகமங்களை வடமொழியில் எழுதிக் கோயிற் குருக்கள்மார் சிவபிரான் திருக்கோயில்களைச் சிவனடியார்களின் நெஞ்சத்தாமரையின் வடிவாகவும், அவர்களுடைய பருவுடம்பு, நுண்ணுடம்பு மூலவுடம்புகள் ஆகியவற்றின் அமைப்புடையதாகவும் அமைக்கும் முறைகளையும், அவற்றின்கண் வைகும் பரிவாரத் தெய்வங்களையும் அவற்றை வழிபடும் பூசனை முறைகளையும் மேலும் மேலும் பெருக்கி வரையலாயினர். ஆதிசைவக்குருக்கள்மார் பிற்காலத்திற் பெருக்கி வளர்த்த சிவாகம முறைகளின்படி அமைக்கப்பெற்ற சிவபிரான் திருக்கோயில்கள் தென்றமிழ் நாட்டில் மிகுதியாக வுள்ளன. இம்முறையிலன்றி இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்று மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. நந்தியும் பலிபீடமும் இல்லாமல் சிவலிங்கம் ஒன்று மட்டுமேயுள்ள மிகப்பழைய கோயில்க்ள் சிலவும் அருகிக் காணப்படுகின்றன என மறைமலையடிகளார் கூறும் தமிழகக் கோயிலமைப்பு முறை நுணுகி ஆராயத்தகுவதாகும்.

"சுவேதாரனியத்தில் உருத்திரனால் எரிக்கப்பட்டுயமன் மாய்ந்தாற்போலக் கரன் இராமனுடைய எரியம்பினால் தாக்கப்பட்டு இறந்தான்” என்ற செய்தி வான்மீக இராமாயணத்திற் குறிக்கப்பெற்றது. இதற்கு உரைவரைந்த தீர்த்தர் என்பவர், பழைய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருவெண்காடே சுவேதாரணியம் என்பது’ என்று விளக்கம் தந்துள்ளார். இதனால் காவிரிப்பூம் பட்டினத்தின் அருகிலுள்ள திருவெண்காடு என்ற ஊர், வான்மீகர் காலத்திலேயே சிவபெருமானுக்குரிய திருக் கோயிலைப் பெற்று விளங்கியது என்பது நன்கு புலனாகின்றது.

“அருச்சுனன் தீர்த்தயாத்திரையாகத் தெற்கே வந்து காவிரியில் நீராடினான், பின்னர்க் கடற்கரை வழியே பல புண்ணியத் தீர்த்தங்களையும் திருக்கோயில்களையும் கண்டு வழிபட்டு மனலூரை யடைந்தான்” என்ற செய்தி வியாசபாரதத்திற் குறிக்கப் பெற்றுளது. பாண்டியன் தன் மகளை மனக்க விரும்பிய அருச்சுனனை நோக்கி ‘'என் முன்னோர் சிவபெருமானை வழிபட்டு அவ்விறைவன் திருவருளால் ஒவ்வொரு பிள்ளையையே பெற்றனர். எனக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. அவளே நீ மணக்க விரும்பும் பெண்” எனக் கூறியதாகப் பாரதம் கூறுகின்றது. வடமொழியிலுள்ள ஆதி காவியமாகிய வான்மீக இராமாயணத்திலும் வியாசபாரதத்திலும் காவிரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் திருவெண்காடு முதலிய சிவத்தலங்களும் காலகாலர் முதலிய சிவமூர்த்தங்களும் மக்களால் முறையே வழிபடப்பெற்றமையும், தமிழகத்திற் பலவூர்களிற் சிவபெருமானுக்குத் திருக்கோயில்கள் இருந்தமையும் பாண்டியர் முதலிய தமிழ் வேந்தர்களும் தமிழ்நாட்டு மக்களும் சிவபெருமானைப் பூசனைப் புரிந்து பிள்ளைப் பேறு முதலாகத் தம் உள்ளத்து விரும்பியநற்பேறுகளை யெல்லாம் பெற்று மகிழ்ந்தனர் என்பது நன்கு புலனாதல் காணலாம்.

"சிந்துநதிப் பள்ளத்தாக்கில் அண்மைக் காலத்திற் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவலிங்க வழிபாடு பன்னெடுங்காலத்திற்கு முன் இவ்விந்தியப் பெருநிலத்தில் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் என்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இதுபற்றி மேனாட்டுப் பேராசிரியர் வெஸ்ட்ரோப் என்பவர் பின்வருமாறு கூறுவர் : -

மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப்பேரண்டத்தின் பெரும்பகுதியில் சிவலிங்க வழிபாடு பரவியிருந்திருக்கக்கூடிய அத்தகைய அளவில் பொதுவாகச் சிவலிங்க வழிபாடு நிலவியிருந்திருக்கிறது. ஏனெனில் அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய இந்நாடுகளில் பல காலங்களாகத் தழைத்தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன் முதலில் ஸ்பெயின் நாட்டவர் கண்டு பிடித்தபோது, அவர்கள் ஆங்கே தெய்வவழிபாட்டிற்கு மிகத் துய்மையானதும் சமயத்திற்கு மிக உயர்ந்ததும் ஆகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டைக் கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக்கூடுமெனக் கருத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும் இணைந்துள்ளது என்பர் 'சிவலிங்க வழிபாடு' என்னும் நூலுடையார்.

சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மட்டுமன்றி முன்னொரு காலத்தில் உலக முழுவதும் பரவியிருந்தமை யினை ஆராய்ச்சியறிஞர்கள் பலரும் தமது ஆய்வு நூல்களில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்கள். சிவலிங்க வணக்கம் முற்காலத்தில் ஆசியா, ஐரோப்பா, எகிப்து நாடுகளில் பரவியிருந்தது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ்’ எனப் பெயரிட்டு வழங்கினர். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாபஸ் என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தனர். 'பிரியாபஸ்’ என்பது இந்தியாவிற் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். அசா என்பவன் தன்னுடைய தாயைச் சிவலிங்கத்திற்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அவ்விலிங்கத்தை உடைத்தெறிந்தான் என்று விவிலிய மறை கூறுகின்றது. இலிங்கத்தின் முன்னால் பலிபீடத்தின் மீது சாம்பிராணி புகைக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாளில் பலி செலுத்தப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாள் என்பது இந்து சமயத்தாரது அமாவாசை நாளாகும். இஸ்ரவேலர் வழிபட்ட இடபக்கன்று சைவர்கள் வழிபடும் நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரிஸ் கடவுளின் ஊர்தியாகிய 'அப்பிஸ்' என்னும் இடபமும் நந்தியேயாகும்.

கொலோனல் என்பார் இலிங்க வழிபாட்டினை அரேபியரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள்ளார்.

சிவலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. அங்குள்ள கிறித்தவ ஆலயக் கட்டிடங்களில் இலிங்க வடிவங்களை இன்றும் கான லாம். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய திருவிழாவில் 129 முழவுயரமுடைய இலிங்கம் வீதிவலமாகக் கொண்டு சிந்து நதிமக்கள் வழிபட்ட சிவனேயாவர்.

இந்திய மக்களது சிவலிங்க வழிபாடு உலகிற் பல நாடுகளிலும் பரவியிருந்தமைக்குரிய சான்றுகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. சீனா, சப்பான், இந்துக் கடலின் தீவுகள், பசிபிக் கடலின் தீவுகள் முதலிய இடங்களில் சிவலிங்க வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடையிலேயும் இவ்வழிபாடு ஒரு காலத்திற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சிரிய, சின்ன ஆசிய பாபிலோனிய மக்களிடையிலும் இலிங்க வழிபாடு பரவியிருந்தமை விவிலியமறையால் அறியப்படுகின்றது. சில நாட் களுக்கு முன் பாபிலோன் நாட்டிற் சிவலிங்கங்கள் பல அகழ்ந்தெடுக்கப்பெற்றன. எகிப்தில் சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வனங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இலிங்க வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இவ்வனக்கத்தை ஒழிப்பதில் கிறித்தவக் குருமார் ஊக்கங் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்திற் கிறித்தவ ஆலயங்கள் பலவற்றுட் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. அவை சீலநாகிக் என வழங்குகின்றன. இப்பெயர் சிவலிங்கம் என்பதன் திரிபாகலாம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை காணப்பட்ட இடங்கள் உரோமர் வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திற் பரப்பியிருத்தல் கூடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 லிதுவேனியமக்கள் 14ஆம் நூற்றாண்டுவரையில் இலிங்க வணக்கத்தை மேற்கொண்டிருந்தனர். பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினர். திபேத்து, பூட்டான் என்னும் இடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகிறது. நேபாளம் அசோகர்க்கு நெடுங்காலந்தொட்டே சிவலிங்க வழிபாட்டுக்குச் சிறப்புரிமையுடைய நாடாகத் திகழ்ந்து வருகின்றது. இந்தோயிசம் என்னும் சப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானதாக இருந்துள்ளது. அமெரிக்காவில் பேரு கைத் தீவுகளில் சிவலிங்கம் வழிபடப் பெற்றது. இஸ்பானியர் முதன்முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது அங்குச் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றதைக் கண்டனர். ஆப்பிரிக்காவில் தகோமி என்னுமிடத்தில் இலிங்கம் லெங்பா என்ற பெயருடன் வழிபடப்பட்டது.

'பக்கஸ் கெயன்’ என்னும் கடவுள் கெபி என்னுந் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கஸ் கடவுளுக்கு இடபமும் புலியும் உரியன. அவர் புலித்தோலையுடுத்துக் கையில் திரிசூலத்தைத் தாங்கியிருந்தார். அவருடன் இடபமும் புலியும் சென்றன. அவருடைய கையில் நீரருந்தும் கமண்டலம் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோஸ், மெலோச், மெரதொக், ஆதோனியஸ், சிபா, சியஸ் என்னும் பெயர்களுடன் வழிபடப் பெற்றார். இதனால் கெயன் சிவன் எனவும் கெபி கெளரி எனவும் கருதலாம். ஆதோனியர் என்பது அர்த்தநாரீசுவரர் என்பர் வெஸ்ட்ரோப். துர்க்கம்மா எனப் பீடத்தில் எழுதப்பட்ட துர்க்கையின் வடிவம் ஒன்று சில நாட்களுக்கு முன் எகிப்திற் கண்டெடுக்கப்பெற்றது. யூதரது பெத்தெல் என்னும் கல் கடவுளாகக் கருதி வழிபடப் பெற்றது.

மெக்கா நகரின் கோயிலிலுள்ள காபா என்னும் கறுப்புக்கல் சிவலிங்க வடிவில் உள்ளது எனவும், அரேபியர் இதன்கன் பத்தியுடையராயிருத்தமையால் மகமது நபி ^

இதனை அழிக் து விட்டுவிட்டார் எனவும் கருத இடமுண்டு.

புத்த ஆலயங்களிலுள்ள தூபிகளும் தகோபாக்களும் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. நாகரிகம் பெற்றோர் பெறாதார் ஆகிய எல்லா மக்களாலும் பண்டை நாளிற் சிவலிங்க வழிபாடு மேற்கொள்ளப் பெற்றுளது.

சிவபிரான் திருக்கோயில்களின் கருவறையிற் சிவலிங்கத் திருவுருவம் ஒன்று மட்டுமே முதன்மையாக நிறுத்தப்படினும் அக்கருவறையை உள்ளடக்கிய விமானத்தின் வெளிப்புடைகளில் வலமிருந்து இடமாக ஆலமர்செல்வன் திருமால் நான்முகன் கொற்றவை முதலிய வேறுபல தெய்வப்படிமங்களும் இடம் பெற்றுள்ளன. கருவறையின் நடுவே அமைந்த சிவலிங்கம் அனற் கொழுந்தின் தோற்றமாகக் கொள்ளும் நிலையில் அமைந்துளது. 'திருவையாற கலாத செம்பொற் சோதி” எனவும், திகழொளியே சிவனே எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கனவாகும். அனற்பிழம்பின் செவ்வொளியைச் சிவனாகவும் அனலில் அடங்கித் தோன்றும் நீலவொளியை இறைவியாகவும் கருதி வழிபட்டனர். இம்முறையில் சிவலிங்கத் திருவுருவத்தின் பின்புறத்தில் அம்மையப்பர் திருவுருவம் இடம் பெறுவ தாயிற்று. சிவலிங்கத் திருவுருவம் அமைக்கப் பெற்றதற்கு நெடுங்காலம் பிற்பட்டு அமைக்கப்பெற்றதே அம்மையப்பர் திருவுருவம் என்பதும், இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையது சிவலிங்கத் திருவுருவம் என்பதும் அதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டு அமைக்கப்பெற்றது அம்மையப்பர் திருவுருவம் என்பதும் முகிஞ்சதரோ, அரப்பா முதலிய பண்டை நகரங்களை அகழ்ந்து அவற்றின்கண் இருந்த தெய்வத் திருவுருவங்களை எடுத்து வைத்துக் காட்டும் மேனாட்டாசிரியர் ஆய்வுரையினாலும் பண்டைத் தமிழ் நூலாராய்ச்சியாலும் நன்கு தெளியப்படும்.

சீர்காழித் திருக்கோயிலின் திருமலைமேல் அமைக்கப் பெற்றுள்ள திருத்தோணிச் சிகரத்தில் எழுந்தருளியுள்ள அம்மையப்பர் திருவுருவமும் பறம்புமலையாகிய திருக்கொடுங்குன்றத்தில் அமைந்துள்ள மங்கைபாகர் திருவுருவமும் எல்லாம்வல்ல இறைவனை அம்மையப்பர் திருவுருவில் அமைத்து வழிபடப்பெற்றுவரும் தொன்மை வாய்ந்தனவாகும். திருச்செங்கோடு என்னும் மலைமேல் வழிபடப்பெறும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம், உமையொருபாகர் வழிபாட்டின் தொன்மையினைப் புலப்படுத்துவதாகும்.

"தோலுந்துகிலுங் குழையும் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ”

என மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல் உமையொரு பாகர் திருக்கோலத்தின் எழில் நலத்தினையும் அதன் தொன்மையினையும் விரித்துப் போற்றுதல் காணலாம்.

தமிழகத்தில் மாயோன், சேயோன், கொற்றவை முதலாகப் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும், எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய பரம்பொருள் தன்னை வழிபடும் அன்பர்களின் உள்ளத்திற் கேற்ப மேற்கொண்ட அருள்வெளித் தோற்றமே என்னும் மெய்ம்மையினைத் தெளிந்துணர்ந்தவர்கள் சங்ககாலத் தமிழ் மக்கள். எனவே பல்வேறு வடிவங்களிற் பலவிடங்களிலும் மக்களால் மேற்கொள்ளப்படும் எல்லா வழிபாடுகளும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சார்ந்து பயன் விளைக்கும் என்பது பண்டைத் தமிழ் மக்களது தெளிவான தெய்வங் கொள்கையாய் அமைந்திருந்தது. இவ்வுண்மையை,

வேறுபல்லுருவிற் கடவுட்பேணியும்’

எனவும்,

'ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்

கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேயவேறுவேறு பெயரின்

எவ்வயினோயும் நீயே’

எனவும் வரும் சங்க இலக்கியங்களால் நன்கு துணியப்படும்.

இறைவனைத் தாயுந் தந்தையுமாகக் கருதி வழிபடும் நிலையில் தந்தையினும் தாயினை முந்தி வழிபடுதல் வேண்டும் என்னும் ஆர்வமுடையோர் மிகுதியாக அம்மைக்குத் தனிக் கோயில்கள் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் அமைக்கப்பெற்றன. காடுறையுலகமாகிய முல்லை நிலத்தின் தெய்வமாக நீலமேனி நெடியோன் வழிபடப்பெற்றது போலவே காடுகிழாளாகிய கொற்றவையும் நீலநிறம் வாய்ந்த திருமேனியுடையவளாகவும் ஆழியும் சங்கும் ஏந்திய கையினளாகவும் திருவுருவமைக்கப் பெற்று மாயோன் தங்கையாக வழிபடப்பெற்றாள். போரில் வெற்றி நல்குங் கொற்றவையாகிய அன்னையை அமைதி யளிக்கும் நிலையில் சிவனது இடப்பாகத்தில் அமர்ந்தருளிய உமையம்மையாகவும் இயைத்துப் போற்றும் உறவுமுறை சங்க காலத்திற்கு முன்னிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. சிவபெருமான் தனது சத்தியாகிய உமையம்மையினை ஒருருவிற்கொண்டு அர்த்தநாரீசுவரத் திருமேனியினராக மாதொருபாகராக அருள்புரிதல் போலவே உமையின் தமையன் எனப் போற்றப் பெறுந் திருமாலைத் தனது ஒரு பாகத்தடக்கிய நிலையில் சங்கரநாராயணன் எனச் சிவபெருமான் போற்றப்

பெறுகிறார்.

சிவனும் திருமாலும் ஒருருவினராகப் (சங்கர நாராயனராகப்) போற்றப் பெறும் இவ்வழிபாடு, சைவத் திருமுறைகளிலும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

'வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து

உருவுட னியைந்த தோற்றம் போல அந்தி வாணமொடு கடலணி கொளாஅ வந்த மாலை”

என வருந்தொடர் அந்திவானமும் கருங்கடலும் இயைந்த தோற்றத்திற்கு மாலொருபாகர் (சங்கர நாராயனர்) திருமேனியை மதுரைக் கண்னத்தனார் உவமை கூறியுள்ளார். எனவே மாதொருபாகர் திருமேனி கடைச்சங்ககாலந் தொட்டுத் தமிழகத்தில் வழிபடப் பெற்று வருகின்றதெனக் கருதவேண்டியுளது. சிவனும் திருமாலும் பொருளால் ஒன்றே என வலியுறுத்தும் முறையில் அமைந்த சங்கநாராயணர் திருவுருவம், அப்பனாகிய சிவனும் அம்மையாகிய சத்தியும் ஞாயிறும் அதன் கதிரும் போலப் பொருளால் ஒன்றேயென வற்புறுத்தும் உமையொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) திருவுருவ அமைப்பினை அடியொற்றிய தாகும். மாயோன் தங்கை மாயோள் எனவும் நாராயணன் தங்கை நாராயணி யெனவும் காத்தற் கடவுளாகிய திருமாலின் அமிசமாகக் கொண்டு போற்றப்பெறும் கொற்றவை சிவனுக்குரிய கொன்றையும் திருமாலுக்குரிய துளவமும் சேரத் தொடுத்த மலர் மாலையைச் சூடியவளாகவும் திருமால்போன்று ஆழியும் வளையும் ஏந்திய கையின ளாகவும் சிவபெருமானைப் போன்று நஞ்சுண்டு கறுத்த கண்டமுடையவளாகவும் சிவபெருமான் கூற்றிலும் திருமால் நிலையிலும் ஒருங்கு வைத்துச் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றப்பெற்றுள்ளமை காணலாம். சிவனும் உமையும் ஒருவராகத் திகழும் அர்த்தநாரீசுவரர் திருவுருவினைப் போன்றே சிவனுடன் திருமாலையொரு கூற்றினராகக் கொண்டு போற்றும் சங்கரநாராயணர் திருவுருவும் அன்பர்களால் ஒருருவாக இயைத் துப் போற்றப் பெறுவதாயிற்று. சிவ பரம்பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத்தன்மையில் வைத்து வனங்கப் பெறுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றே சிவனும் திருமாலும் என இருமை நிலையில் வைத்து வணங்கப் பெறுகின்றது என்னும் உண்மை மாதொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) மாலொருகூறர் (சங்கர நாராயணர்) ஆகிய திருவுருவ அமைப்புக்களால் இனிது புலனாகும்.

“கிழக்கே விடியற்காலையிலே இளஞ்செவ்வி யுடையதாய்ச் செஞ்சுடர் விரிந்து திகழக் கடலிடையே தோன்றும் ஞாயிறு, தன் கீழுள்ள கடல்நீர் நீலமும் பசுமையும் கலந்த நிறத்தினதாய்த் துலங்கா நிற்பக் கானப்படும் மிக அழகிய காட்சி, அழகேயுருவாகிய இறைவன் எழில்கிளர் தோகையினையுடைய நீலமயிலின்மேல் அமர்ந்து தோன்றினாற் போலும் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தி நிற்றலின், வைகறை விடியலில் மலர்தலையுலகின் மாயிருள் நீங்கத் தோன்றும் பலர்புகழ் செஞ்ஞாயிறே மைவரையுலகின் தெய்வமாகிய சேயோன கவும் கதிரவனுக்குக் கீழே என்றும் நீலநிறக் கடலே சேயோனது ஊர்தியாகிய மயிலாகவும் கருதிக் காலைக் கதிரவனைச் சேயோனாக எண்ணிப் போற்றுதல் தமிழ் ஞாலத்தவர் மரபாயிற்று. சேயோனாகிய முருகப் பெருமான் வைகறைப் பொழுதிலே மாயிருள் நீங்கத் தோன்றும் இளஞாயிற்றின் தோற்றமுடையவனாகத் திருமுருகாற்றுப்படையிற் போற்றப் பெற்றுள்ளமை அம்முதல்வன் என்றும் இளையோனாக உலக வாழ்க்கையிலீடுபடும் மக்கட் குலத்தார்க்கு மெய்யுணர்வென்னும் வேற்படையினால் அச்சமகற்றி அறிவும் ஆண்மையும் நல்கி அவர் தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் போற்றப்பெறும் செந்தமிழ்க் கடவுளாகத் திகழ்கின்றான்.

இனி, கதிர் சாயும் காலமாகிய மாலை வேளையில் மேற்கே காணப்படும் கதிரவனே தன் செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வானமுகட்டின் நாற்புறத்தும் செக்கர்ச் சடையெனச் சிவந்துமிளிர அம் முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெண்பிறையானது அவிர் சடைக்கற்றைமேல் நிவந்து தோன்றும் வெண்பிறையென விளங்கா நிற்கச் சிவனெனும் நா மந் தனக்கேயுடைய செம்மேனியம்மானை மனங்கொள்ளச் செய்யும் தெய்வத் தோற்றமுடையனாகத் திகழ்தலின் சிவநெறிச் செல்வர் களால் சிவன் எனவே வைத்து வழிபடப் பெறுவானாயினன். இவ்வுண்மை,

“அருக்கன்பா தம் வணங்குவர் அந்தியில்

அருக்கனாவான் அரனுருவல்லனோ”

எனவரும் அப்பர் அருள்மொழியினால் நன்கு புலனாதல் கானலாம்.

காலையில் தோன்றும் இளஞாயிறு, இருளிற் றுயிலும் மன்னுயிர்களைத் தன் ஒளிக்கதிர்களால் இருள் நீக்கி யெழுப்பிப் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் அச்சமகற்றி வெற்றி நல்கி வையத்து வாழ்வாங்கு வாழ்தற்கு உதவுமாறு போலவே, என்றும் இளையோனாகிய சேயோனும் மக்கட்குலத்தார் குற்றமற்ற கோட்பாடுகளால் தாம் தாம் மேற்கொண்ட தொழில்கள் வெற்றி பெற முடித்து வையத்து வாழ்வாங்கு வாழும் வண்ணம் அவர்தம் மனத்தகத்தே இளஞாயிறாகத் தோன்றி அவர்தம் அறியாமையிருளை நீக்கி அச்சந்தவிர்த்து அவர்கள் உள்ளத்தே எண்ணியவனைத்தையும் இனிதே முடித்தருள் கின்றான் எனச் செந்தமிழ்ப்பனுவல்கள் போற்றுகின்றன. ஆதலால் காலைக் கதிரவனது தோற்றம் முன்னியது முடித்தருளும் முருகப் பெருமானது தோற்றப் பொலிவுக்கு உவமையாயிற்று. பகலெல்லாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உழைத்து இளைத்த மக்கட்குலத்தார் தம் உடல் இளைப்பும் உள்ளக் கவலையும் நீங்கி ஒய்வுபெறும் நிலையில் மாலைப் பொழுதில் ஞாயிற்றின் தோற்றம் அமைதி வழங்குமாறு போன்று, உலக வாழ்க்கையிற் பலப்பல பிறவிகளையெடுத்து அல்லலுற்ற மாந்தர் ‘எம்பெருமானே எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தோம் எங்களது பிறவிப் பிணிப்பகற்றிப் பிறவாநெறியினை அளித்தருள்வாயாக’ என ஐம்பொறிகளையடக்கிய செம்புலச் செல்வர்களாய் மனங்குவிந்து போற்றி ஒருமைநிலைபெற்று அமைதிபெறும் நிலையில் அமைந்தது சிவவழிபாடாகும். எனவே, காலை இளஞாயிற்றின் தோற்றம் என்றும் இளையோனாகிய சேயோன் திருமேனியையும், மாலை ஞாயிற்றின் முதிர்ந்த செவ்வித்தாவிய அந்தி வானத் தோற்றம் முது முதல்வனாகிய சிவபெருமானது செம்மேனியையும் குறிப்பனவாக இலக்கியங்களிற் குறிக்கப்பெறுதலின் காலையிளங்கதிரவனை என்றும் இளையோனாகிய முருகன் எனவும் மாலை முதிர் கதிரவனை முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனவும் தமிழ் முன்னோர் கருதிப் போற்றினர் எனத் தெரிகிறது. காலை ஞாயிறும் மாலை ஞாயிறும் கால வேறுபாட்டால் இரு நிலையினதாகக் காணப்படினும் பொருளளவில் இரண்டும் ஒன்றேயாதல் போன்று சேயோனும் சிவனும் இருதெய்வங்களாக வைத்து வனங்கப்பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது  சேயோன் சிவன் என வழங்கும் பெயரொற்றுமையாலும் இனிது புலனாகின்றது. முருகனுக்குரிய சேயோன் என்னும் பெயர் செம்மை நிறம் வாய்ந்த திருமேனியையுடையான் என்னும் பொருளது. சிவன் என்னும் பெயரும் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே சொல்லொற்றுமையாலும் பொருளொற்றுமையாலும் சேயோனாகிய முருகனும் சிவனாகிய இறைவனும் ஒரே முழுமுதற் கடவுளாகக் கருதப்பெற்றமை காணலாம். குமரனாகிய முருகனும் அவன் தந்தையாகிய சிவனும் முழுமுதற் கடவுளின் இருவேறு கோலங்களே என்னும் மெய்ம்மையினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்ததே கந்தபுராண வரலாறாகும். முருகப் பெருமானைக் குறித்து வழங்கும் திருப்பெயர்களுள் ‘கந்தன்” என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு கந்தன் - துண்வடிவில் நிறுத்தப் பட்ட கந்தில் உறையும் தெய்வம் எனப் பொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு. “வல்வேற் கந்தன் நல்லிசை யுள்ளி” என வரும் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் ‘கந்தன்” என்பது சங்க காலத்திலேயே தெய்வப் பெயராக மக்களுக்கு இட்டு வழங்கப் பெற்ற தென்பது நன்கு உய்த்துணரப்படும்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனை நிலங்கடந்த நிலையில் முழுமுதற் கடவுளாகப் போற்றப்பெறும் சிவபெருமானுடைய திருமகனாகக் கொண்டு வழிபடும் நிலையேற்பட்டபின் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் முருகப் பெருமானது திருவுருவம் இடம்பெறுவதாயிற்று. இவ்வாறே முருகப் பெருமான் திருக்கோயில்களிலும் அம்முதல்வனது தந்தை என்ற முறையில் சிவலிங்கத் திருவுருவமும் தாய் என்ற முறையில் கொற்றவை திருவுருவமும் தாய்மாமன் என்ற முறையில் திருமால் திருவுருவமும் இடம் பெறுவனவாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாயாகிய திருச்செந்தில், திருவாவினன்குடி, திருவேரகம், திருச்செங்கோடு முதலிய குன்றுகள் சங்க காலத்தில் முருகப் பெருமானுக்குரிய சிறப்புடைய திருக்கோயில்களாக வழிப்டப்பெறும் தொன்மையுடையனவாகத் திகழ்கின்றன.

34. மாணிக்கவாசகர், திருவாசகம், திருக்கோத்தும்பி, 18. 35. பத்துப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, 5. 36. பரிபாடல், திருமால் 67 - 70,

37. அகநானூறு, 350.

38. திருநாவுக்கரசர், தேவாரம்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இற்றைக்கு ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முன் மதம் என்ற சொல் சமயக் கொள்கை என்ற பொருளில் வழங்கப் பெற்றிலது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் மணிமேகலையில்தான் ‘சமயம் என்ற சொல் முதன்முதல் ஆளப்பெற்றுளது. கடவுளைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ உயிர்களைப் பற்றியோ மக்கட் குழுவினர் கொண்ட கொள்கையினையும் தாம் தாம் மெய்யெனத் துணிந்துள்ள கொள்கை பற்றிய ஒழுகலாறு களையும் குறித்து வழங்கப் பெறுவதே சமயம் என்ற சொல்லாகும். பண்டைத் தமிழியல் நூலாகிய தொல் காப்பியத்திலும் அதன்பின்னர்த் தோன்றிய சங்கத் தொகை நூல்களிலும் மதம் என்ற சொல்லோ சமயம் என்ற சொல்லோ இடம்பெறவில்லை. பலவகைச் சமயங்களும் தோன்றி அவ்வச் சமயங்களின் பெயரால் தமிழ் மக்கள் தம்முள் தாம் பிரிவுபடுதற்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மையுடையன தொல்காப்பியமும் சங்கத் தொகை நூல்களும் என்பது நன்கு துணியப்படும்.

தொல்காப்பியனார் காலத்திலே மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும் கொற்றவை வழிபாடும் நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவ வழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப்பெற்றது. இவ்வழிபாடுகள் யாவும் பலதிறமக்களும் தம் தம் சூழ்நிலைக்கும் தாம்தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வ வழிபாடுகள் என்ற பொதுமை நெறி என்ற அளவில் நிகழ்ந்தனவேயன்றிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும் அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக் கொள்கையினை யுடைய சமயங்களாக அவை வழங்கப்பெறவில்லை. அதனால் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவை வேறுபட்டுக் காணப்படவில்லையென்பதும் இங்கு மனங்கொள்ளத்தகுவதாகும்.

இனி, கடைச் சங்க காலத்தையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னுங் காப்பியங்களில்தான் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமனமும் புத்தமும் வேதநெறிபற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித் தனிச் சமயங்களாக வேறுபடுத்துப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவுமுறைத் தொடர்புடையன வாகவும் இவற்றுட் சிவவழிபாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமை இவையன்றி ஞாயிற்று வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திரவிழா, காமவேள்விழா என்பன அக்காலத் தமிழ் மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும் தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும் தீதுநீர் வையை கங்கை ஆறாட்டும் கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இவ்விருகாப்பியங்களாலும் நன்குனரப்படும்.

வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத் தோன்றிய சமனபுத்த சமயங்கள், தத்தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேரூன்றின. வேரூன்றிய பின்னர்த் தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்துவிடாது, இங்குள்ள தெய்வங் கொள்கையினையும் புறம்பழிக்கத் தொடங்கின என்பது, சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில், தமிழகத்திற் பல்வேறு சமயவாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமய வுண்மைகளைக் குறித்து உறழ்ந்து பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழாக்காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப்பெற்றதென்பது,

"ஒட்டிய சமயத்துறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபம் பாங்கறிந்தேறுமின்”

என வரும் மணிமேகலைத் தொடரால் இனிது புலனாகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புக்களும் மத மாறுபாடுகளும் இததென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமையுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோ டொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின.

அசோகவேந்தன் காலந்தொடங்கிக் கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்தில் குடியேறி இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் தமிழ் வேந்தரது அரசுநிலை குலையத் தொடங்கிய நிலயில் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்துவந்த அயலவராகிய கருநட மன்னர் முதலியோரது துனைகொண்டு தம் சமயக்கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இனங்காத தமிழ் மக்களையெல்லாம் தம்மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தீய முறைகளையெல்லாம் கையாள்வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமன புத்த சமயத்தார்க்குமிடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் கொள்கையினையுடையார் பிறிதொரு கொள்கையாளரிடமிருந்து தம்மை வேறுபடுத்துத் தம்மை உயர்த்திக் கோடற்கும் தம் கொள்கையினை யுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறுபிரித்துக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயாவாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற வேரூன்றலாயிற்று. சமயம், மதம் என்ற பெயர்களும் அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும் ஒன்றுபட்ட பொதுமையுணர்வினராய், எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கிக் கொண்டு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலைபெற்ற சமன. புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின. அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு, அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில் எழுதப்பெற்றிருத்தலுமே உறுபெறுஞ்சான்றாகும். இதனை நன்குனர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச்சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்துபோகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார்." பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச்சண்டைக்காவது இடமில்லை என்பதனைச் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம்.

சிவலிங்க வழிபாடு இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனைத் துணுருவில் நிறுத்தி வழிபடும் அருவுருவ வணக்கமாதலின், அவ்வணக்கம் பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடாகவே கருதப் பெற்றுவந்ததெனக் கருதவேண்டியுள்ளது.

 

39. மணிமேகலை, 160 - 61.

40. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 22.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard