Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்
Permalink  
 


தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்

உலக மக்களால் மதிக்கத்தகும் பொருள்கள் எல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என மூவகைப் பொருள்களாகப் பண்டைத் தமிழாசிரியர்கள் பகுத்து ஆராய்ந்தனர். அவற்றுள் முதற் பொருள் என்றது மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு நிலைக் களமாகவுள்ள நிலமும் காலமும் ஆகிய இருதிறப் பொருள்களையும், கருப்பொருள் என்றது நிலமும் காலமுமாகிய அம்முதற்பொருள்களையிடமாகக் கொண்டு அவற்றின் சார்பிற் கருக்கொண்டு தோன்றும் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள உயிர்ப் பொருள்களையும் உயிரல் பொருள்களையும். உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் ஆகிய யாவும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளை நிலைக் களமாகப் பெற்றுக் கருக்கொண்டு தோன்றுவனவாதலின் கருப்பொருள் எனப்பட்டன. இவ்வுலகில் மெய்வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறியறிவுடன் மனவுணர்வு எனப்படும் ஆறாவதறிவினையும் பெற்றுள்ள உயர்தினை மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகளே உரிப்பொருள் என வழங்கப்படும். மக்கட் குலத்தார் வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப அவர்தம் உள்ளத்துணர்வு களும் செயல்முறைகளும் ஒரொழுங்குபெற அமைதல் இயல்பு. இந்நுட்பத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் நன்குனர்ந்து வெளியிட்டுள்ளார்கள் என்பதினை மேற்கூறிய முதல்கரு உரி என்னும் மூவகைப் பொருட்டாகுபாட்டால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். மாந்தர் வாழும் நிலத்தியல்புக்கேற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வக் கொள்கையும் வழிபாட்டு நெறிகளும் அவற்றின் வழிப்பட்ட தத்துவக் கொள்கைகளுந் தோன்றி நிலைபெறுவனவாதலின் தெய்வக் கொள்கையினை அவ்வந்நிலத்துக்குரிய கருப்பொருள் வகைகளுள் முதன்மையுடையதாகப் பண்டைத் தமிழியல் நூலாசிரியர்கள் பகுத்துரைத்துள்ளார்கள். ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

தெய்வம் உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவுங் கருவென மொழிப

எனவரும் நூற்பாவில் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத உணவுக்கு முன் உயிர்க்குயிராக வழிபடப்பெறுந் தெய்வத்தை முதலாவதாக வைத்து எண்ணியுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தகுவதாகும்.

தமிழகத்திற் பண்டைநாளிற் காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்தில் மாயோன் எனப் போற்றப்பெறும் திருமால் வழிபாடும், மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் எனப் போற்றப்பெறும் செவ்வேள்வழிபாடும், வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதநிலத்தில் வேந்தன் (இந்திரன்) வழிபாடும், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும் தோன்றி வழங்கின. நானிலமக்களும் தாம் தாம் வாழும் நிலத்திற்கேற்ப அமைத்துக்கொண்ட இத்தெய்வ வழிபாடுகளை,

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

என வரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் வகுத்துக் கூறியுள்ளார். நானில மக்களும் தாம் தாம் வாழும் நிலத்தியல்புக்கேற்ப வகுத்தமைத்துக் கொண்டன.மேற்குறித்த தெய்வ வழிபாடுகள் என்பதும், இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வங்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் பண்டைத் தமிழ் நூலோர் கருத்தன்று என்பதும் மேல் எடுத்துக் காட்டிய தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனாம். மேற்குறித்த தெய்வப் பெயர்களுள் மாயோன், சேயோன் என நிறப்பண்பு பற்றிய பெயர்களும் வழங்கப் பெறுதலாலும் நிறப்பண்பு வடிவினை நிலைக்களமாகக் கொண்டல்லது புலப்படாதாதலானும் இத்தெய்வங்களுக்குத் திருவுருவமைத்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடையதென்பது நன்கு துணியப்படும்.

காடுறையுலகமாகிய முல்லை நிலத்துக்கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் நோயின்றி வளர்ந்து பாற்பயன் தருதல் வேண்டிக் காயாம் பூவண்ணனாகிய மாயோனைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும், மைவரை யுலகமாகிய குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் மலரின் உள்ளிருந்தெழும் நறுமணம் போன்று உயிர்க்குயிராய் விளங்குந் தெய்வமனமாகிய வெறியினையறியுஞ் சிறப்புடைய வேலனையழைத்து வெறியாடல் நிகழ்த்திச் செங்காந்தள் நிற வண்ணனாகிய செவ்வேளை வழிபடுதலும், மருதநிலத்து வாழும் உழவர்கள் முறை செய்து காப்பாற்றும் இறைவனென மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த வேந்தனை வழிபடுதலும்,நெய்தல் நிலத்துப் பரதவர் தமது வலைவளஞ் சிறத்தல் வேண்டிக் கடற்றொய்வமாகிய வருணனை வழிபடுதலும் பண்டைநாளில் தமிழகத்து நானில மக்கள் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகளாகும். இவ்வழிபாடுகளோடு அச்சமகற்றி வென்றி நல்கும் கொற்றவையாகிய பழையோள் வழிபாடும் தறுகண்மை மிக்க தமிழ் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. குறிஞ்சிநிலத் தெய்வமாகக் கொண்டு போற்றப் பெறும் முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை அம் முதல்வனை வழிபடும் வேலன்மேல் ஏற்றி வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்ற தொடராலும், காயாமலர்வண்ணனாகிய மாயோனது காத்தற் சிறப்பினை "மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின், தாவாவிழுப்புகழ்ப் பூவை நிலை என்ற தொடராலும், கொற்றவை வழிபாட்டின் பயனாகப் போர்மறவர்க்குளவாகும் தறுகண் உணர்வினைச் ‘சிறந்த கொற்றவை நிலை’ என்ற தொடராலும் தொல்காப்பியப் புறத்தினையியலில் ஆசிரியர் தொல் காப்பியினார் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

தெய்வம் அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கூ!ப்படினும் எல்லாப்பொருள்களினும் சிறந்ததாக மக்களால் முதற்கண் போற்றத்தக்கது என்னும் மெய்ம்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மறவாது பேணி வந்துள்ளார்கள். அதுபற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார் முதல் பொருள் வகையாகிய நானிலத்தினையெண்ணும் பொழுது மாயோன் மேய காடுறையுலகம் சேயோன் மேயமைவரையுலகம் என்றாங்கு அவ்வந் நிலத்திற்குரிய தெய்வத்தை முன்னிறுத்தியும், கருப்பொருள்களை என்னுமிடத்துத் தெய்வம் உனாவே என்றாங்குத் தெய்வத்தை முதற்கண் வைத்தும் மக்களால் வழிபடுதற்குரிய தெய்வத்தின் சிறப்பினை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

கருப்பொருள்பற்றிய நிகழ்ச்சியினைத் தலைவன் தலைவி முதலிய அகத்தினை மாந்தரது ஒழுகலாற்றிற்கு உவமையாகக் கொண்டு உய்த்துணரும்படிச் செய்யுள் செய்யும் புலவராற் கருதியமைக்கப் பெறுவது உள்ளுறையுவமம் எனப்படும். 'யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன் புலப்படக் கூறாத பொருளும் ஒத்துப் புலப்படுவதாக எனக் கருதிய புலவன் தன்னுள்ளக் கருத்துப் படிப்போர்க்கு இனிது புலனாகும் வண்ணம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சொற்கள் அமையத் தான் பாடிய செய்யுளில் உய்த்துணர வைத்தல் உள்ளுறையுவமம் எனப்படும். கருப்பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு இவ்வுவமை பிறக்குங்கால் அக்கருப்பொருள்பாலமைந்த நன்றுந் தீ துமாகிய செயல்களை உள்ளுறையாற் புலப்படுத்தக் கருதிய அகத்தினை மாந்தர் செயல்களுக்கு ஒப்புமையினைக் கருதியுணரும் நிலையுண்டாகும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தின் செயல்களை உவமையாக எடுத்துரைப்பின் மக்களால் நன்கு மதித்துப் போற்றப்பெறும் தெய்வத்தின் மாண்புகள் இவ்வொப்புமை வாயிலாகச் சிதைவுறுதல் கூடும். இந்நுட்பத்தினை நன்குனர்ந்த முன்னைத் தமிழ்ச் சான்றோர் தெய்வமாகிய கருப்பொருளை நிலைக்களனாகக் கொண்டு உள்ளுறை கூறுதல் கூடாதென்றும் தெய்வம் நீங்கலாகவுள்ள ஏனைய கருப்பொருள்களையிடனாகக் கொண்டே உள்ளுறையுவமை கூறுதல் வேண்டுமென்றும் வரையறை செய்தார்கள். இவ்வரையறையினை,

“உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்

கொள்ளு மென்ப குறியறிந்தோரே”

என வரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட பண்டைத் தமிழ்மக்கள் தெய்வங் கொள்கையிற் கொண்டிருந்த நன் மதிப்பும் தொல்காப்பியனார் தெய்வங் கொண்டுள்ள உறுதிப்பாடும் நன்கு புலனாதல் காணலாம்.

தமது நாட்டில் உரிமை வாழ்வினைப் பேணிக் காக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் போர்க்களத்துப் பகைவரோடு பொருது உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட தறுகண் வீரரை நாட்டுமக்கள் தெய்வமாக எண்ணி வழிபடுதற் பொருட்டு அவர்தம் பெயரும் பீடும் பொறித்தற்குரிய கல்லினைத் தேர்ந்து காணுதலும் பின்னர் அங்ங்ணம் பொறிக்கப் பெற்ற கல்லினை நீர்ப்படுத்தலும், நடுதலும், கோட்டம் செய்தலும், அதனை வாழ்த்துதலும் பண்டைத் தமிழர் கொண்டொழுகிய வீர வணக்கம் ஆகும்.

இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத நிலையில் உலகுயிர்களின் உள்ளும் புறம்பும் கலந்து நின் இ! இயக்கி நிற்கும் பேரறிவுப் பொருளாகிய இறைவனைக் ‘கடவுள்' என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித் துள்ளார். கடவுதல் - செலுத்துதல். அனுமுதல் அண்டமீறாகிய பொருள்களையும் உயிர்த் தொகுதிகளையும் அகத்தும் புறத்தும் ஊடுருவி நின்று ஒர் ஒழுங்குமுறையிற் செலுத்துதல் பற்றி முழுமுதற் பொருளாகிய அது கடவுள் என்னும் பெயருடையதாயிற்று. இறைவன் இயவுள் என்னும் பெயரும் இப்பொருளில் வழங்கப்பெறுவதேயாகும். இவ்வாறே இறைவன் என்பதும் கடவுளைக் குறித்த பெயரேயாகும். யாண்டும் பொருள்கள்தோறும் நீக்கமற நிறைந்து விளங்குதல் கடவுளின் இயல்பேயாதலின் இறை என்பதும் கடவுளைக் குறித்து வழங்கும் பெயரேயாகும். இறை - யாண்டும் நீக்கமறத் தங்கிய பொருள். இறை - இறுத்தல்; தங்குதல், உயிர்ப்பொருள், உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருந்து அவற்றை இயக்கி நிற்கும் முழுமுதற்பொருளையே கடவுள், இயவுள், இறை எனப் பல பெயர்களாலும் தமிழ் முன்னோர்கள் போற்றியுள்ளார்கள். கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயர்களுள் ஒன்றாகிய இறை என்பதன் அடியாகப் பிறந்தது இறைவன் என்பதாகும். இச்சொல் வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவனைப் போன்று, யாவர்மாட்டும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடையனாகி அறவோரை அளித்தும் அறமிலா தாரையொறுத்தும் ஆளவல்ல வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. “செருவகத்திறைவன் வீழ்ந்தென” எனவரும் தொல்காப்பியத் தொடரில் இறைவன் என்ற சொல் நாடாளும் வேந்தனைக் குறித்து நிற்றல் காணலாம். இச்சொல் முதன்முதலிற் கடவுளைக் குறித்த பெயராயிருந்து பின்னர்க் கடவுள் நிலையில் மதிக்கத்தக்க வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. இந்நுட்பம்,

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் பெறும்”

என வரும் திருக்குறளால் நன்கு புலனாதல் அறியத் தகுவதாகும். தான் அறநெறியிற் சிறிதும் பிறழாது நின்று தன் குடிமக்களைப் பிறர் நலியாமற் பாதுகாத்தலையும் செய்யும் அரசன், பிறப்பினால் மகனேயாயினும் அவனது செயலின் உயர்வினாலே கண்கண்ட கடவுள் என மக்கட் குலத்தாராற் சிறப்பித்துப் போற்றப்பெறுவான் என்பது இத்திருக்குறளின் பொருளாகும். இதனால் இறையெனப்படும் கடவுள் வேறு மன்னன் வேறு என்பதும் இறையென்பதும் கடவுளைக் குறித்த பெயர் என்பதும் இப்பெயர் மன்னனைக் குறித்து வழங்கப்பெறுதல் உபசார வழக்கேயென்பதும் இவ்வாறு மன்னனைக் கடவுளாக மதித்துப் போற்றும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கிய தொன்மையுடையதென்பதும் இவ்வழக்கம் திருவள்ளுவர் காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றிருந்ததென்பதும் நன்கு துணியப்படும்.

மக்களால் செய்யப்படும் உழவுக்கும் பிற தொழில் கட்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் சொல், நிலைபெறுதல் என்னும் பொருளுடைய “மன்' என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த காரணப் பெயராகும். இந்நுட்பம் மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை எனவரும் திருக்குறளால் இனிது புலனாகும். மக்களது நல்வாழ்வு நிலை பெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன், மன்னன் என நன்கு மதிக்கப்பெற்றான். அதனால் அவனது குடும்பமும் நாட்டில் வழிவழியாக நிலைபெற்று வருவதாயிற்று. “மக்கட் குலத்தாரது உடம்பை வளர்ப்பனவாகிய நெல் முதலிய உணவுப் பொருள்களோ அவை விளைதற்கு உறுதுனையாகிய நீரோ இவ்வுலகில் உயிர்வாழ்வினை நிலைபெறச் செய்யும் ஆற்றலுடையன அல்ல; மக்களை ஒரு நெறிப்படுத்தித் தம்முள் வேற்றுமை யின்றி அன்பினாற் கலந்து வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே மலர்தலை யுலகிற்கு உயிராவான்” எனத் தமிழ் முன்னோர் எண்ணினார்கள். அவர்கள் எண்ணிய வண்ணமே அக்காலத் தமிழ் வேந்தர்களும் தம் நாட்டு மக்களின் இன்னுயிர் போன்று நாட்டிற்கு இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சி புரிந்தார்கள். இங்ங்ண்ம் அரசியல் நாகரிகம் உருப்பெறுதற் கிடனாகிய மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள் பசியும் பிணியும் பகையும் தோன்றாதவாறு தமது நாட்டினைப் பேணிக் காக்கும் கடமையினை மேற்கொண்ட மன்னனையே தெய்வம் என மதித்துப் போற்றினார்கள். அவர்கள் போற்றுதற்குரிய வகையில் அக்காலத் தமிழ் வேந்தர்களும் தாம் குடிமக்களின்  இன்னுயிர் என இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சிபுரிந்தனர். நாகரிகம் உருப்பெற்று வளர்தற்குரிய மருதநில மக்கள் தம் நாட்டு வேந்தனையே தெய்வமென எண்ணி அவனது ஆனை வழி ஒழுகினமையால் வேந்தன் மேய தீம்புனலுலகம்’ என்ற தொடரால் மருதநிலத்துக்குத் தெய்வமாவான் அந்நிலத்து வேந்தனே எனத் தொல்காப்பியனார் குறிப்பிடுவாராயினர். வேந்தனைக் காத்தற்கடவுளாகிய திருமாலாகக் கருதிப் போற்றும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கியுளது. இவ்வழிபாட்டு முறையினை,

"மாயோன் மேயமன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப்பூவை நிலை”

என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணரவைத்தமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். ஆநிரையைக் காத்த நீலமேனிநெடியோனாகிய மாயவன் திருமேனியோடு உவமித்துக் காட்டிடத்து அலரும் காயாம்பூவினைப் புகழ்வது பூவைநிலையென்னுந் துறையாகும். மேற்குறித்த தொல்காப்பியத் தொடர்க்கு,

"மாயோனைட் பொருந்திய நிலைபெற்ற பெருஞ்சிறப்பினையுடைய கெடாத புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதல்” எனப் பொருள் கூறிய இளம்பூரண அடிகள், 'பூவை (காயம்பூ) மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தையொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல், உன்னங்கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு” என விளக்கமும் தருவர். “இஃது உரையன்று என்பார் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவை நிலையென்ப. வேறுகடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க, என்னை?

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல் S.

2. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 50.

3. திருக்குறள், 388.

4. தொல்காப்பியம், பொருளதிகாரம், நூ. 3.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்
Permalink  
 


'ஏற்றுர்தியானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றி னொவ்வாரே

கூற்றக் கணிச்சியான் கண்மூன்றிரண்டேயாம்

ஆற்றலசால் வானவன் கண்'

என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க” என மற்றொருசாரார் கருத்தினையும் இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டியுள்ளமை, திருமாலுடன் மன்னனையுவமித்துக் கூறும் நிலையில் தொல்காப்பியனார் கூறிய பூவை நிலையென்னுந்துறை, திருமாலேயன்றி ஏனைத் தெய்வங்களையும் மன்னரோடு, உவமித்துக் கூறும் முறையிற் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற திறத்தைக் குறிப்பிடுவதாகும். மேற்குறித்த இளம்பூரணருரையினையும் அவர் பிறர் கூறுவதாகக் காட்டிய பிறிதோருரையினையும் மனத்திற் கொண்ட நச்சினார்க்கினியர், இவ்விரண்டுரைகளையும் தொல்காப்பியனார் கருத்தெனவே கொண்டு “மாயோன் விழுப்புகழ்,மேயபெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ் மன்பூவை நிலை” எனக் கொண்டு கூட்டி ‘மாயவனுடைய காத்தற் புகழையும் ஏனோர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னுந் தொழில்களையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலை” என உரைவரைந்து ‘ஏற்றுவலனுயரிய (புறம்56) எனவரும் புறப்பாடலை இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

காடுறையுலகமாகிய முல்லைநிலத்து அலருங் காயம்பூ, நீலமேனி நெடியோனாகிய மாயோனது திருமேனியின் நிறத்தினை நினைவுபடுத்துவதாக லின், பூவையென்னும் அப்பூவினைப் புகழ்தல் மாயோனைப் புகழ்தலாய் அத்தெய்வத்தினது காத்தற்றொழிலைத் தனக்குரிய முறைமையாகக் கொண்ட மன்னனது பெருஞ்சிறப்பினை விரித்துரைக்கும் புறத்தினைத் துறையாயிற்று. மாயோனாகிய தெய்வத்தோடு மன்னனை யுவமித்தலே பூவைநிலை யென்னுந் துறையாமென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். இக்கருத்தினை யடியொற்றியே, 

பால்பிரிந்திசையா புயர்திணை மேன”

எனவரும் சூத்திரமாகும். "காலமும் உலகப்பகுதியும் உயிரும் உடம்பும் பால்வரை தெய்வமும் வினையும் பூதமும் ஞாயிறும் திங்களும் சொல்லும் என எண்ணப்பெற்ற இப் பத் துடனே இவைபோன்ற பொருள்களிற் பயின்று வருவன பிறவும் ஆகிய சொற்களெல்லாம் ஐம்பாலுள் இன்னபால் எனப் பிரிந்து இசைப்பன அல்ல, பொதுவாக உயர்திணைப் பொருள்மேல் நிகழ்வனவாம்” என்பது இந்நூற்பாவின் பொருளாகும்.

“இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தனவெல்லாம் தெய்வத்தையே உணர்த்தின வாதலின் தெய்வம் என்பதனைத் தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக்கிளவியும் (தொல்-கிளவி-4) என்பதனான் உயர் தினையென்பது பெற்றாம். இவையெல்லாந் தெய்வ மென்னும் உயர்தினைப் பொருளையுணர்த்தினவேனுந் தெய்வம் என்னுஞ் சொல் அஃறினை வாசகமாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளுமென்றார். இச் சொற்கள் கூறுகின்ற பொழுதே தத்தம் உயர் தினைப்பபாற் பொருளே தோற்றுவித்து நிற்றலின் ஆகுபெயரன்மை யுணர்க. காலம் என்றது காலக்கடவுளை. உலகம் என்றது உலகத்தாரை. அறஞ்செய்து துறக்கம் புக்கான், உயிர்நீத்து. ஒரு மகன் கிடந்தான் என உயிரும் உடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களேயாயின. இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின் பால்வரை தெய்வமென்றார். வினை இருவினைத் தெய்வம். சொல்நாமகளாகிய தெய்வம்” என நச்சினார்க்கினியர் இச் சூத்திரப் பொருளை விளக்கியுள்ளார். 'வினை என்பது அறத்தெய்வம்’ என்பர் சேனாவரையர்.

“காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ; ; ; ; ; ; ; உள்ளதோர் பொருள். உலகம் என்பது கீழும் நடுவுமாகி எல்லாவுயிருந் தோற்றுதற்கு இடம: . பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப் பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய தன்மையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினையென்பது ஊழ். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது; அச்சொல்லினான் இயன்ற மந்திரம் விட முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று” என்பது தெய்வச்சிலையார் கூறும் பொருள் விளக்கமாகும்.

இவ்வுரையினைக் கூர்ந்து நோக்குங்கால் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேலாகச் சைவசித்தாந்தங் கூறும் தத்துவங்களிற் சில காலமுலகம்’ எனத் தொடங்கும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் இடம்பெற்றுள்ளமை காணலாம். உலகத் தொகுதிக்கு முதற் காரணமாய் என்றும் நிலைபேறுடையதாய் அறிவில்லாத சடப்பொருளாய் வைப்பாற்றலாய் இறைவனது விரிவுக்குள் அடங்கியதாய் உள்பொருளாய் அருவாய் உள்ளது மாயை. மா என்பது ஒடுங்குதல்; யா என்பதுவருதல். இவ்வுலகம் ஒடுங்குதற்கும் மீளத் தோன்றுதற்கும் நிலைக்களமாயுள்ள பொருள் மாயையாதலின் அது மாயா என்னும் வடமொழிப்பெயராற் குறிக்கப்பட்டு ஆவீறு ஐயாதல் என்னும் தமிழிலக்கண மரபின்படி மாயை எனத் திரிந்து வழங்குவதாயிற்று. மாயா என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு மாய் ஆ எனப் பிரித்து இவ்வுலகம் மாய்தற்கும் (ஒடுங்குதற்கும்) ஆதற்கும் (மீளத் தோன்றுதற்கும்) நிலைக்களமானது எனப் பொருள் விளக்கந் தருதலும் உண்டு.

உயிரறிவிற்குப் புலப்படும் பொருளின் புடை பெயர்ச்சிகள் யாவும் காலம் என்னும் அருவப் பொருளின் வரையறைக்கு உட்பட்டு நிகழ்தலின் காலம் என்பது ஒரு தத்துவமாக வழங்கப்பெற்று வருகிறது. காலம் என்பது ஒன்றாய் நித்தமாய் உள்ளது என்பர் நையாயிகர் முதலியோர். அதனை மறுத்துப் பல வாய் ஏகதேசமாய் நிலையற்றதாய் உள்ளது காலம் என்பர் சைவசித்தாந்திகள். காலம் ஒன்றாயிருக்குமானால் நடத்தல் முதலிய தொழில்களும் இறப்பு நிகழ்வு முதலியவற்றால் வேறுபடுதலின்றி ஒன்றே யாதல் வேண்டும். அவ்வாறன்றி இறப்பு நிகழ்வு முதலியனவாய் நிகழுந் தொழிற் பாகுபாட்டிற்குக் காரனம் காலத்தினது பாகுபாடேயாதலின் காலம் பலவாதல் அறிக என விளக்கந்தருவர் சிவஞானமுனிவர். ஞாயிற்றின் செலவு முதலிய செயற்கையாலன்றித் தொழிலின் தொடக்கம் அதன் நிகழ்வு அதன் முடிவு ஆகிய இயற்கையால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எனப் பலவகையாகப் பகுக்கப் படுதலின் காலம் ஒன்றெனக் கூறுதல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

"இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்

சிறப்புடை மரபின் அம்முக் காலமும்”

எனக் காலம் மூன்றெனக் குறித்துள்ளமை காணலாம். இவ்வாறு காலம் பலவேறு வகைப்படும் என்பது பெறப்படவே காலம் என்பது தம்முட் பலவுமாய்ச் சடமுமாகலின் அது தோன்றி நின்றழியும் நிலையில் பொருளே யென்பதும் அதுபற்றி விரிவின்றிச் சுருங்கிய ஏகதேசப் பொருள் என்பதும் தாமே பெறப்படும். இத்தகைய காலவரையறையின் அகப்படாது நிற்பதே நிலையுடைய பொருளாகும். காலம் நிலையில்பொருள் எனக் கொள்வது பற்றிக் காலங்கடந்த நிலையுடைய பொருள் உண்டெனக் கோடற்கு எத்தகைய தடையுமில்லை.

'காலம் உலகம்’ எனவரும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் காலம் என்றது, உயர்தினை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் உணர்வுடைப்பொருளாதலிள் அஃது அழிதல் மாலைத்தாய் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னுப் பகுப்பினாற் பலவாய் அறிவில் பொருளாயுள்ள காலத்தினைக் குறியாது அதனை உலகுயிர்களின் நிகழ்ச்சிகளில் வைத்துத் தொழிற்படுத்தும் உணர்வினதாகிய தெய்வ ஆற்றலையே குறிப்பதாகும். இந்நுட்பம் ‘காலம் என்றது காலக்கடவுளை” என நச்சினார்க்கினியரும், 'காலம் என்பது முன்னும் பின்னும் நடுவுமாகி என்றும் உள்ளதோர் பொருள்” எனத் தெய்வச்சிலையாரும் தரும் உரைவிளக்கங்களால் இனிது புலனாம். இங்கு உலகம்’ என்றது நிலம் தீ நீர் வளி விசும் போடைந்தும் கலந்த திரட்சியாகிய அறிவில்பொருளைக் குறியாது அத்திரட்சி மேலும் கீழும் நடுவுமாய்விரிந்து எல்லாவுயிருந்தோற்றுதற்கு இடந்தரும்வண்ணம் அதனை உள்ளும் புறம்பும் உடனிருந்து இயக்கும் உணர்வுடைய தெய்வ ஆற்றலைக் குறித்ததென்பது தெய்வச்சிலையார் உரைவிளக்கத்தால் நன்கு புலனாம். இங்கு உயிர் என்றது உயிர்களின் அறிவு விளக்கத்தைச் சுட்டி நிற்றலின் உயர்தினையாயிற்று. ஈண்டு 'உடம்பு’ என்பது இவ்வுலகில் நிலையிலதாய் அழியுந்தன்மையாதாகிய ஐம்பூதச் சேர்க்கையாலாகிய அறிவில்லாத துலவுடம்பினைக் குறியாது மனம் புத்தி அகங்காரம் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் எண்வகைப் பொருள்களால் இயன்று வினையினாற் கட்டுப்பட்டு நுண்ணிதாய் ஒர் உயிர் மேற்கொள்ளுதற்குரிய எல்லாப்பிறப்பிற்கும் உள்ளாகி நிற்கும் நுண்ணுடம்பினைக் குறித்த இச்சொல் ஆகுபெயராய் அவ்வுடம்பினை உள்நின்றியக்கும் உணர்வாற்றலைக் குறித்ததெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

'காலம் உலகம்’ என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தில் 'பால்வரை தெய்வம்’ என்பதும் வினை’ என்பதும் தனித்தனியே எண்ணப்பெற்றிருத்தலால் பால்வரை தெய்வம் என்பது வேறு வினை என்பது வேறு என்பது நன்கு துணியப்படும். 'பால்வரை தெய்வம் என்பது ஆனும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள்” எனத் தெய்வச்சிலையாரும்,"எல்லோர்க்கும் இன்பத்துன்பத்திற்குக் காரணமாக இரு வினையையும் வகுப்பது” எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பொருள் வரைந்துள்ளார்கள். எனவே இச்சொல், கடவுளாகிய முழுமுதற்பொருளையே குறித்து நின்ற தென்பது தொல்காப்பியவுரையாசிரியர் அனைவர்க்கும் உடன்பாடாதல் தெளிவு. இதனையடுத்து வினையெனச் கட்டப்பட்டது ஊழ் என்பது எல்லாவுரையாசிரியர்க்கும் ஒத்த முடியாதலால், முன்னுள்ள பால்வரை தெய்வம்' என்பதற்கு ஊழ்வினை எனப்பொருள் கூறுதல் பொருந்தாதென்பது நன்கு துணியப்படும்.

'ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ட

மிக்கோ னாயினுங் கடிவரையின்றே”

(தொல். பொருள். நூ. 90)

என வருஞ் சூத்திரத்தில் ஊழ்முறையாகிய பாலின் இயல்பினையும் அதன் வகையினையும் அதனையிடமாகக் கொண்டு நிகழும் தெய்வத்தின் ஆணையினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளார். உயிர்களை அன்புடையாரோடும் இன்ப நுகர்ச்சிகளோடும் ஒன்று விப்பதுவும் வேறுபடுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படுமென்றும், அவற்றுள் ஒன்றுவித்தலால் மேன்மேல் உயர்த்தும் நல்லூழ் உயர்ந்தபால்’ எனச் சிறப்பித்துரைக்கப்படும் என்றும் அத்தகைய உயர்ந்த பாலினை இடமாகக் கொண்டு நிகழும் இறைவனது ஆனையினால் உருவுந் திருவு முதலிய நலங்களால் தம்முள் ஒப்புடையாராகிய தலைவனுந் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் காண்பர் என்றும் மேற்காட்டிய களவியற் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. இங்குக் கூறப்பட்ட இருவகைப் பாலினும் ஒன்றுவிக்கும் பாலினை ஆகூழ் எனவும் வேறுபடுத்தும் பாலினைப் போகூழ் எனவும் ஊழ் என்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர். குறிப்பிட்டு விளக்கியுள்ளார். திருக்குறள் ஊழ் என்னும் அதிகாரத்திலும் இத்தொல்காப்பியச் சூத்திாத்திலும் இடம் பெற்றுள்ள குறிப்புக்களை ஒப்பிட்டு நோக்குங்கால் இச்சூத்திரத்தில் “ஒன்றே வேறேயென்று இருபால் என்றது ஆகூழ், போகூழ் என்னும் இருவகையூழினையே யென்பது நன்கு விளங்கும். எனவே பால்வரை தெய்வம் என்ற தொடர்க்கு ‘எல்லார்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது எனச் சேனாவரையரும்  நச்சினார்க்கினியரும் வரைந்துள்ள பொருள் விளக்கமே தொல்காப்பியனார் கருத்தினைப் பிறழாது புலப்படுத்துவ தாகும். இத்தொடரில் பாலது ஆணை’ என்றது, உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய வினைப்பயனை வினைசெய்த உயிர்களே தப்பாது நகரும்படி நுகர்விக்கும் இறைவனது ஆணையாகிய நியதியினை. இதனால் உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளாகிய இருவினைகளும் இன்பம் துன்பம் என்னும் பயனை விளைப்பன என்பதும் அவ்விருவகைப் பயன்களையும் வினை செய்த உயிர்களே தப்பாமல் நுகரும்படி நுகர்விக்கும் முதல்வன் ஒருவன் உளன் என்பதும் அங்ங்னம் முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியே பாலது ஆனை எனப்படும் என்பதும் நன்கு புலனாதல் காணலாம். பன்னெடுங்காலத்திற்கு முன் ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய இத்தத்துவவுண்மைகளை,

“செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுஞ் சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”

எனவரும் பாடலிற் சேக்கிழார் நாயனார் வகைப்பட விரித்துரைத்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுனரத் தகுவதாகும்.

தொல்காப்பியனார் குறித்த 'பால்வரை தெய்வம்’ என்ற தொடர், 'பால்’ எனப்படும் ஊழ் வேறு, அதனை வினை செய்த உயிர்களே நுகரும்படி செய்யும் தெய்வம் வேறு என்னும் மெய்ம்மையினை விளக்குவதாகும். இங்குத் தெய்வம் என்றது இறைவனை. தெய்வத்தால் வகுக்கப் பெறும் முறைமையே பால் எனவும் வகை எனவும் ஊழ் எனவும் வழங்கப்படும். இந்நுட்பத்தினை,

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.”

என வருந் திருக்குறளில் தெய்வப்புலவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை காணலாம். ஊழ்வினை தானேயுருக் கொண்டுவந்து வினை செய்தாரைத் தொடர்ந்து பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்று எனவும், எல்லாப் பொருள்களையும் ஒழுங்கு பெற இயக்கியருளும் இறைவன் வகுத்த முறைமையே ஊழ் எனப்படும் எனவும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்தவகை' என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும் வகுத்த வகை'யென்றது அம்முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற் போன்று வகுத்தது வகையென்றாயிற்று.

தெய்வத்தின் இயல்பினை விரித்துரைக்கக் கருதிய தொல்காப்பியனார். பால்வரை தெய்வம்' என்ற தொடரால் தெய்வத்தினைக் குறித்தார். அவ்வாசிரியர் குறிப்பின் வண்ணம் ஊழின் இயல்பினை விளக்கக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்த வகை’ என அதனை விரித்துரைத்தார். எனவே 'பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியனார் கூறியதும் வகுத்தான் எனத் திருவள்ளுவர் கூறியதும் இறைவனேயே என்பது நன்கு புலனாம். ஒருயிர் செய்த வினையின் பயன் பிறிதோ ருயிரின்கட் செல்லாமல் வினை செய்தவுயிரையே வினையின் பயன் சென்று சேரும்படி வகுத்து நுகர்வித்தல், வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவன் செய்யும் முறைமை யாதலின் வகுத்தான்’ என்ற பெயராற் கடவுளைக் குறித்தார். இத்தொடரில் வகை யென்றது கடவுளால் வகுத்து நுகர்விக்கப்படும் வினைப்பயனாகிய ஊழினை. ஊழைப் பற்றிய இக்கொள்கையினை,

“யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத்தானமைத்த

ஊழின் வலியதொன் றென்னை

என வருந்தொடரால் திருவாதவூரடிகள் விளக்கியதிறம் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

 

5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 58,

6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல், 3.

7. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கியநாயனார் புராணம் 5.

8. திருக்குறள், 377.

9. மாணிக்கவாசகர், திருக்கோவையார், 350.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்
Permalink  
 


விருப்பம் அறிவு செயல் என்னும் மூவகை ஆற்றலும் ஒரளவு விளங்கப்பெற்று உலக நுகர்ச்சியில் ஈடுபடும் மக்கட்குலத்தாரிற் பெரும்பாலார் இன்ப நுகர்ச்சியில் விருப்பும் துன்ப நுகர்ச்சியில் வெறுப்பும் உடையராய்ப் பிறர் செய்த நல்வினைப்பயனைத் தாம் நுகரவும் தாம் செய்த தீவினைப் பயன்கள் தம்மைத் தொடராதவாறு விலகி யொழுகவும் முயலுதலை இவ்வுலகியல் நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே காண்கின்றோம். இங்ங்னம் ஒருவர் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை வேறொருவர் கவர்ந்து கொள்ளாதவாறும் தாம் நுகர்தற்குரிய தீவினைப் பயனாகிய துன்பத்தை நெகிழ விட்டுத் தப்பியோடாதவாறும் அவரவர் செய்த இருவினைகளின் பயன்களை அவரவரே நுகரும்படி அரசன் ஆணைபோல் வரையறுத்துச் செலுத்துவது இறைவனது ஆணையாகும். இறைவனது முறைசெய்தற் றன்மையாகிய ஆனை அந்தந்த உயிர்கள் செய்த இருவினைப் பயன்களை முன்னிட்டு அவ்வச் செயல்களைச் செய்வ தாகலின், ஊழினைத் துணையாகக் கொண்டு செயல்புரியும் இறைவனது ஆற்றலைப் பாலது ஆணை’ என்றார் தொல்காப்பியனார். பால் ஊழ் வகை நியதி விதி என்பன ஒருபொருட் கிளவி, ஒருபாற்கோடாது நடுநின்று ஆட்சிபுரியும் அரசனது ஆனை நிகழாதாயின் எளியோர் பொருளை வலியோர் கவர்ந்து கொள்வர். அதுபோல எல்லாப் பொருளையும் வகுத்து இயக்குபவனாகிய முதல்வனது ஆனையாகிய முறை நிகழாக்கால் ஒருவர் செய்த நல்வினைப் பயனை வேறொருவர் கவர்ந்து கொள்ளவும் தாம் செய்த தீவினைப் பயனைப் பிறர் மேற்சுமத்தவும் இடமுண்டாகும். இருவினையும் உணர்வற்றனவாதலின் அவை உயிர்கட்கு நுகர்ச்சியைத் தருதல் மாத்திரமேயன்றி அந்நுகர்ச்சிவினை செய்தானையே சென்றடையும்படிச் செய்விக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே உயிர்களுக்கு இருவினைப் பயன் முதல்வனது ஆனையினால் வரும் என்பதே பொருத்தமுடையதாகும். அரசன் தன் ஆணையை ஏனை அதிகாரிகள் பால் வைத்து அவர்களைக் கொண்டு அவ்வத்தொழில் செய்விக்குமாறு போல இறைவனும் தனது ஆணையை இருவினையின் மேல் வைத்து அது கருவியாக இருவினைப் பயன்களை உயிர்கட்கு அருத்துவன். இக்கருத்தினை மனத்துட்கொண்டே 'பால்வரை தெய்வம்’ என்ற தொடரால் தொல்காப்பியய்ர இைைறவனைக் குறித்துள்ளார். உழவர் செய்யுந் தொழிலுக்குத் தக்க பயனை அத்தொழில் நிகழ்ச்சிக்கு ஆதாரமாகிய விளைநிலம் விளைவிப்பதன்றி அவ்வுழவுத் தொழில் தானே விளைவிக்கமாட்டாது. அது போலவே உனவும் வித்துமாகத் தொன்று தொட்டு வரும் வினைப் பயன்களை உயிர்கட்குக் கூட்டுவிப்பவன் முதல்வனேயன்றி வினைதானே கூட்டுவிக்கும் ஆற்றலுடையதன்று என்பதே தமிழ் முன்னோர் நுனித்துணர்ந்த தத்துவக் கொள்கையாகும். தெய்வத்தைக் குறித்தும் வினையினைக் குறித்தும் தொல்காப்பியனார் காலத் தமிழ் மக்கள் கொண்ட இத்துணிவினைப் 'பால் வரை தெய்வம்’ என வரும் தொல்காப்பியத் தொடர் நன்கு புலப்படுத்தல் காணலாம்.

உலகுயிர்களை இயக்கும் முழுமுதற்பொருளாகிய கடவுளை வழிபட்டுப் போற்றுதல் மக்களது தலையாய கட ைமயென்பதும் வழிபடுதெய்வத்தின் திருவருளால் குறைவற்றபெருஞ் செல்வத்துடன் தம் குடும்பம் வாழையடி வாழையென இவ்வுலகில் நெடுங்காலம் நிலைபெற்று வளர இனிது வாழலாம் என்பதும் ஆகியவுண்மையினை முன்னைத்தமிழ்ச் சான்றோர் மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்கள். நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறங்காப்ப இல்லற முதலிய நல்லறங்களாற் பழியின்றிப் புகழுடன் பூத்த செல்வமொடு புதல்வரைப் பெற்றுப் புதல்வரும் இத்தன்மையராகி நீடு வாழ்மின் என்று தம்பால் அன்புடையாரைத் தெய்வத்தின் திருவருளைத் துணைக் கொண்டு வாழ்த்தினார்கள். இவ்வாறு தெய்வத்தைப் பாதுகாவலாகப் புறத்தே நிலை பெறச் செய்து அத் தெய்வத்தின் திருவருளால் நீடுவாழ்மின் என வாழ்த்தும் வாழ்த்தியல் புறநிலைவாழ்த்து என வழங்கப் பெற்றது. எடுத்துக் கொண்ட செயல் இனிது நிறைவேறுதற்குக் காரணமாகிய கடவுள் தோன்றாத்துணையாய் நின்று நின்னைத் துன்பந் தொடராதவாறு நின்னைப் புறங்காப்பப் பழிதீர்ந்த செல்வத்தோடு வழிபவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துதலால் இது புறநிலை வாழ்த்து என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வாழ்த்தியல் துள்ளலோசைத்தாகிய கலிப்பாவிலும் தூங்கலோசைத்தாகிய வஞ்சிப்பாவினும் பாடப் பெறாது. இவையொழிந்த பாவினுள் வரும் என்பதனை,

“வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா"

என வருஞ் சூத்திரத்தால் ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துள்ளார். எனவே இப்புறநிலைவாழ்த்துப் பொருண்மை வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் கலந்த மருட்பாவினும் தொல்காப்பியனார் காலத்திற் பாடப்பெற்றதென்பது நன்கு தெளியப்படும். இச்சூத்திரத்தில் வாழ்த்தப் பெறுவோனை நிற்புறங்காப்ப என முன்னியொருமையிற் கூறி வாழ்த்தியல் முடியில் “பொலிமின்’ என முன்னிலைப் பன்மையாற் கூறியதன் நோக்கம், வாழ்த்தப் பெறுவோனது வாழ்வின் சிறப்பியல்பு அவனுடைய சுற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய தாதலின் அவனை மட்டும் வாழ்த்துமளவில் நின்று விடாது அவனுடைய மனைவி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தாரொடுங்கூட்டி 'நீடுவாழ்மின்’ எனப் பன்மை நிலையில் வாழ்த்திப் பாடுதல் வேண்டும் என்னும் புலமை நெறியினை அறிவுறுத்தல் கருதியதாகும். இவ்வாறு புறநிலைவாழ்த்தின் இலக்கணங்கூறுமுகமாகக் கடவுள் வழிபாட்டால் மக்கட் குலத்தார்க்கு உளவாகும் நற்பயன்களைத் தொல்காப்பியினார் அறிவுறுத்திய திறம் உளங்கொளற்பாலதாகும்.

வழிபடுதெய்வத்திற்குத் திருவுருவமைத்து அத்திரு வருவத்தின் முன்னின்று பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செழும்பாடல்களாற் போற்றிப் பரவுதல் தமிழ் முன்னோர் மேற்கொண்டொழுகிய வழிபாட்டு முறையாகும். அங்ங்ணம் முன்னிலைக்கண் நின்று தெய்வத்தைப் பரவிப் போற்றுதற்கு வாய்ப்பாகிய யாப்பமைதியுடைய செய்யுள் கலிப்பாவகை நான்கனுள் ஒத்தாழிசைக் கலியுள் ஒன்றாக அடங்கும். அவ்வாறு தெய்வத்தை முன்னிலைப் படுத்துப்பரவும் ஒத்தாழிசைக்கலி வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும். தெய்வத்தைப் பரவிப் போற்றும் இத்தகைய செய்யுளின் அமைப்பினை,

“அவற்றுள்

ஒத்தாழிசைக்கலி இருவகைத் தாகும்”


“ஏனையொன்றே

தேவர்ப்பராவுதல் முன்னிலைக் கண்ணே”

"அதுவே

வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே"

என வரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறித்துள்ளார். தெய்வத்தைப் பரவுதற்குரிய வண்ணகம் ஒரு பாகு ஆகியவற்றுள் வண்ணகத்தில் இடம் பெறும் தரவு, தாழிசை எண், வாரம் (சுரிதம்) என்னும் உறுப்புக்கள் பற்றியும் ஒருபோகின் வகையாகிய கொச்சகவொருபோகு அம்போதரங்கவொருபோகு ஆகியவற்றின் அமைப்புப் பற்றியும் செய்யுளியல் 135 முதல் 146 முடியவுள்ள சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார்.

இனி, தெய்வநம்பிக்கை காரணமாக மக்களிடையே நிகழுஞ் செயல் முறைகள் பற்றியும் தொல்காப்பியனார் தமது நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். மக்கள் தம் உள்ளக் கருத்தைப் பிறர்க்கு வற்புறுத்தி உறுதிமொழி கூறுமுகமாக வழிபடு தெய்வத்தின் முன் னிலையிற் சூளுறவு செய்து தெளிவுபடுத்தல் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் உலகியல் நடைமுறையாகும். இம்முறையினை முன்தேற்று' (சொல்லதிகாரம்-383) என்ற சொல, ல ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் நின்று சூளுறுவோர் தாம் சொல்லிய உறுதிமொழியிலிருந்து தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவர்க்குத் துன்பம் விளைக்கும் என்பதனை இன்னாத் தொல்சூள்’ (தொல்கற்பியல்-6) என்ற தொடரால் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். நல்லுழின் ஆனையால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடிய இயற்கைப் புணர்ச்சியிலே தலைவன், தெய்வத்தின் முன்னிலையில் தலைவியை நோக்கி “நின்னைப்பிரியேன்” எனச் சொல்லிய உறுதிமொழியில் தவறினானாக, அதனை எண்ணிய தலைவி தன் தலைவனது தவறினால் பெருந்தீங்கு விளையும் என வருந்திய காலத்துத் தோழி தலைவனை அணுகி 'நீ சூளுறவில் தவறியதால் உளவாம் ஏதத்திற்கு அஞ்சி யாம் பெரிதும் வருந்துகின்றோம்’ எனத் தலைமகளின் துயரத்தை எடுத்துக் கூறி வருந்துதலும் உண்டு. தோழி கூற்று நிகழ்த்தும் இடங்களைத் தொகுத்துரைக்குமிடத்து சூள்வயிற்றிறத்தாள் சோர்வு கண்டழியினும் எனவரும் தொடரால் தொல்காப்பியனார் இச்செய்தியினைக் குறித்துள்ளமை காணலாம்.

நற்றாய் தன்மகள் தலைமகனோடு உடன்போகிய காலத்துத் தன் மகளது பிரிவினால் வருந்தித் தன்னையும் தன்மகளாகிய தலைவியையும் அவள் காதலனாகிய தலைவனையும் குறித்துத் தனக்கும் அவ்விருவர்க்கும் உளவாகும் நன்மையும் தீமையும் அச்சமும் அவ்விருவரும் தன்னை வந்து சார்தலும் ஆகிய நிகழ்ச்சிகளை நிலைபெற்ற நிமித்தம், நற்சொல், தெய்வம் என்பவற்றோடு பொருத்திப் பார்த்து “இதற்கு முன் இன்ன தன்மையராய் இருந்தார், இப்பொழுது இன்னநிலையில் இருக்கிறார்கள், இனிமேல் இன்னநிலையினர் ஆவர்' எனத் தலைவியின் ஆருயிர்த் தோழியை நோக்கியும் கண்டோரை நோக்கியும் புலம்புதல் உலகியலிற் காலந்தோறும் காணப்படும் நிகழ்ச்சியாகும். இச்செய்தியினை,

'தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி

மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ் சார்தலென்

றன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ

முன்னிய காலம் மூன்றொடு விளக்கித்

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றாய் புலம்பலும்

ஆகிய கிளவியும் அவ்வழியுரிய"

எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் துன்பம் நேர்ந்தபோது தமது மக்கள் தெய்வத்தை எண்ணிப் புலம்புதல் உண்டு என்பது இச்சூத்திரத்தால் நன்கு புலனாதல் காணலாம்.

குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தம் வாழ்க்கையில் நேரும் துன்பத்தை நீக்கவும் விரும்பிய நன்மைகளைப் பெறவும் வேண்டி, நெல்லினாற் கட்டுப்பார்த்தும் கழங்கு பார்த்தும் முருகப் பெருமானை வழிபாடு செய்யும் பூசகனாகிய வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்தி அவ்விழாவில் வேலன்மேல் தெய்வம் உற்று நிகழ்ந்தனவும் நிகழ்வனவும் உரைத்தருள உற்றன அறியும் முறை மலைவாணர் வழக்கமாகும். வெறியென்பது மனம் என்னும் பொருளுடைய சொல்லாகும். அச்சொல் தெய்வமனமாகிய முருகு என்னும் சிறப்புப் பொருளில் தமிழ்த் தொன்னூல் களில் வழங்கப் பெற்றுளது. மலரின்கண் உள்ளிருந்து தோன்றும் நறுமண்ம் போன்று வழிபடுவாருள்ளத்திலிருந்து தோன்றும் தெய்வவுணர்வாகிய முருகு வழிபடும் அவர்தம் மெய்யினும் வெளிப்பட்டு விளங்கும் இயல்பினை வெறி' என வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். தம் தொழுகுலமாக வழிபடப்பெறும் முருகப் பெருமான் வேலேந்தியாடும் பூசகனாகிய வேலன்மேல் ஆவேசித்து நின்று தம் குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் நிகழ்வனவற்றை அறிவித்தருளல் வேண்டும் என்னும் விருப்பத்துடன் முருகப் பெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடு வெறியாட்டு என வழங்கப்பெறும். இவ்வழிபாட்டின் பயனாக ஒத்த அன்பினராகிய காதலரிருவரிடையே மறைவில் நிகழ்ந்தனவும் தெய்வத்தால் வெளியாகி விடுதல் உண்டு. இவ்வாறு தெய்வ வழிபாட்டின் பயனாக நிகழும் நிகழ்வுகளை, "கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும்

ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்"

எனவும்,

“வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்"

எனவும் வரும் தொடர்களால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார்.

தெய்வங்கொள்கை என்பது, வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடைய முதியோருள்ளத்தில் மட்டுமன்றி வாழ்க்கையினைத் தொடங்குதற்குரிய இளம் பருவத்தினராய தலைவி, தோழி முதலியோருள்ளத்திலும் ஒப்பத் தோன்றும் இயல்பினதாகும். இன்னது விளையும் என்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக் காலத்தே ஒருவனும் ஒருத்தியு மாகிய அன்புடையார் இருவர் நண்பு செய்தொழுகுங்கால், அவர்கள் வருந்தாவண்ணம் அவ்விருவர்க்குந் தோன்றாத் துணையாய் நின்று அருள் புரிவதோள் முழுமுதற் பொருளாகிய கடவுள் உண்டு எனவுனர்ந்த தோழி அவ்விருவர்க்குந் திருமணம் விரைவில் நிறைவேறுமாறு அருள்புரிதல் வேண்டும் எனக் கடவுளை ஏத்தி வழிபடுதல் இயல்பு. இங்ங்ணம் தலைவியின் வாழ்வோடு ஒன்றிய உள்ளத்தினள்ாகிய தோழியின் அன்புரிமை பற்றிய இவ்வழிபாட்டினை விளக்குவது,

“நாமக் காலத் துண்டெனத் தோழி

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்”

என வரும் தொல்காப்பியத் தொடராகும்.

 

10. தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல், 106.

11. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 127.

12. மேலது. 133.

13. மேலது. 134.

14. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல், 39.

 15. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 25.

16. மேலது, 2.

 



-- Edited by admin on Sunday 12th of April 2020 06:26:40 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்
Permalink  
 


மனை மாட்சியிற் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் மணஞ் செய்து கொள்ளுதல் வேண்டிக் கடவுளைப் பரவிப் போற்றிய தோழி, தான் வேண்டிய வண்ணமே அவ்விருவர்க்கும் திருமணம் நிறைவேறிய நிலையில் தனது வேண்டுகோளினை ஏற்று அருள் புரிந்த தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் என விரும்புதல் இயல்பு. இவ்விருப்பத்தினை,

“அற்றமில்லாக்

கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்”

எனவருந்தொடரில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுவர்.

தலைவனை மணந்து கொண்டு கற்புக்கடம் பூண்ட தலைமகள் தன் கனவற்குத் தொ(மகுலமாகிய தெய்வத்தின் பால் அச்சமுடைவாய் அன்பினாற் பணிந்தொழுகுதல் முறையாகும். இவ்வழிபாட்டு முறையினைத் தெய்வம் அஞ்சல்' என்னும் மெய்ப்பாடாக மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.

தலைவன் தலைவியைப் பெற்றோரறியாதவாறு உடன்போக்கில் அழைத்துச் சென்றபோது தலைவியின் பிரிவால் வருந்திய செவிலித்தாய், தலைவனுடன் போகிய தலைமகட்கு வழியில் எத்தகைய தீங்கும் நேராதவாறு அருள்புரிதல் வேண்டும் எனத் தான் வழிபடு தெய்வத்தை இறைஞ்சிப் போற்றுதல் இயல்பு. இவ்வாறு செவிலித்தாய் தெய்வத் ை வழிபடுத்திறத்தினைத் தெய்வம் வாழ்த்தல்' (களவு - 25) என வருந்தொடரில் ஆசிரியர் குறித்துள்ளார். இங்கு எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டுணர்வு சிறப்பிடம் பெற்று விளங்கினமை நன்கு புலனாதல் காணலாம்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாட்டிற்கமைந்த சிறப்பும் இங்கு நினைக்கத்ததகுவதாகும். வேந்தனது வெற்றிக்கு அடையாளமாகிய கொடியானது ஏனை வேந்தர் கொடியினும் மேற்பட்டு விளங்குதலும் அரசன் பகைவரது அரனையழித்தலும் மன்னன் தன்னையடைந்தோர் அனைவர்க்கும் வரையாது வழங்குதலும் எனக் குற்றமற்ற சிறப்பினால் முற்படப் புகழ்தற்குரிய புறத்தினைத் துறைகள் மூன்றையுங் குறித்து நல்லிைைசப் புலவர்கள் பாடுதற்குரிய பாடாண் தினை பற்றிய பாடல்கள் எல்லாவுயிர்கட்குந் தோன்றாத் துணையாய் நின்று இன்னருள் சுரக்கும் முழுமுதற்கடவுளை வாழ்த்திய குறிப்புடன் கலந்து வருவனவாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனைப் புகழ்ந்து பாடும் இப்பாடல்களில் அரசனது முறைமைக்கு உறுதுனையாகிய இறைவனை வாழ்த்திப் போற்றும் பகுதியும் இடம்பெறும் என்பதனை,

“கொடிநிலை கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். ஒரு நாட்டின் அரசியல் வாழ்வில் வேந்தர்கட்கு உளவாகும் வெற்றிகட்கெல்லாம் உயிர்க்குயிராய் விளங்கும் கடவுளின் திருவருளே உறுதுணையாய் நின்று உதவுந்திறத்தைப் புலத்துறைமுற்றிய சான்றோர் வேந்தர் முதலியோர்க்கு நன்கனம் அறிவுறுத்தி அவர்களுடைய உள்ளத்தைத் திருத்துதல் வேண்டும் என்பது தொல்காப்பியனார் கருத்தாகும் என்பதனை இச்சூத்திரத்தால் நன்குணரலாம்,

இனி, எல்லாம் வல்ல கடவுளைத் தன் ஆருயிர்த் தலைவனாகவும் உயிராகிய தன்னை அவனையடைய விரும்பிய தலைவியாகவும் எண்ணி இன்றியமையாத அன்புரிமையினால் கடவுளைக் காதற்கேண்மையிற் போற்றி வழிபடும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் நிலை பெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இச்செய்தி,

'காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்'

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் உய்த்துனரப்படும்.

இத்துறைப் பொருளாகக் கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்பது புறப்பொருள் வெண்பா மாலையாலும் தொல்காப்பிய இளம்பூரணருரையாலும் நன்கு தெளியப்படும்.

உயிர்வாழ்க்கைக்கு நிலைக்களமாகக் காணப்படும் இவ்வுலகம் நிலம் நீர், தீ வளி, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையாலாகியது என்பதனை

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகமாதலின்"

எனவரும் தொடரிற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். பலவேறு அவயவப் பகுப்புடையதாய் ஐம்பொறி வாயிலாகச் சுட்டியறியப்படும் தன்மை இவ்வுலகின்பாற் காணப்படுதலின் இவ்வுலகம் என்றும் ஒரியல்பினதாய் விளங்கும் நிலை பேறுடையதன்று என்பர் அறிவர். இதன் இயல்பினை

"காஞ்சிதானே பெருந்திணைப்புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்

நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"

எனவரும் நூற்பாவில் நில்லாவுலகம்’ என்ற தொடரால் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளார். பருப்பொருளாகக் காணப்படும் இவ்வுலகம் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவற்றைத் தன்னகத்தே யடக்கியுள்ள அண்டங்கள் ஆகிய காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலமாய்க் காரணமாகிய நுண்பொருளை உலகம் எனவும் உலக இயக்கத்திற்கு உறுதுணையாகிய காலம் என்னும் தத்துவத்தைக் காலம்’ எனவும் காலம் உலகம்’ என்னும் முதற்குறிப்புடைய சொல்லதிகாரச் சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது. நிலமும் காலமும் சிய தத்துவங்கள் இரண்டும் மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு திலைக்கள மாதலால் இவற்றை 'முதற்பொருள் என்ற பெயரால் தமிழ் முன்னோர் வழங்குவாராயினர். இப்பெயர் வழக்கின் தொன்மையினை,

“முதலெனப்படுவது நிலம்பொழுதி திரண்டின்

இயல்பென மொழிட இயல்புணர்ந்தோரே'

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரலாம். இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற தொல்காப்பியத் தொடர்களின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், உலகம் என்பது இல்பொருளன்று, காலம் என்னும் பொருளுடன் தொடர்புடையதாய் அடிக்கடி நிலைமாறுமியல்பினதாகிய உள்பொருளே என்பது தொல்காப்பியனார் கொள்கையாதல் நன்கு புலனாகும்.

இவ்வாறு கடவுள் உலகம் என்னும் இருவேறு பொருளுண்மையைச் சுட்டிய தொல்காப்பியனார் இவற்றின் வேறாக உயிர் என்பதனைத் தனித்தன்மையுடைய பொருளாகக் கொண்டு அவ்வுயிர்கள் பலவெனத் தம்நூலுள் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். உயிர்கள் தோற்றமில் காலமாக நிலைபெற்று வரும் தொன்மையுடையன என்பதும் எக்காலத்தும் அழிவில்லன என்பதும் அவைதாம் பெற்றுள்ள பொறிகளின் குறைவு மிகுதிகட்கேற்ப, குறைந்தும் மிக்கும் தோன்றும் பல்வேறு அறிவு நிலைகளையுடையன என்பதும் அழிவில்லன என்பதும் பண்டைத்தமிழர் கொள்கையாகும். உயிர்கள் ஒரு காலத்திற் படைக்கப்பெறாது தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள உள்பொருள் என்பதனைத் 'தொல்லுயிர்’ (தொல், புறத், 17) எனவரும் தொடரில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். உயிர்கள் அழிவின்றி என்றும் நிலைபேறுடையனவாதலின் அவற்றை “மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு. உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறிவின் திறத்தால் அறுவகையாகப் பகுத்துரைப்பர் தொல்காப்பியனார். எனவே உயிர் என்பது அறிவு என்னும் வெறும் பண்பன்று: அறிதற்பண்பினையுடைய குணிப்பொருளாம் என்பது தொல்காப்பியனார் கொள்கையாதல் உய்த்துணரப்படும். "உயிர் எத்தன்மைத்து? என்று வினாய வழி, உணர்தற் றன்மைத்து என்றல் செவ்வன் இறையாம்” என்பர் சேனாவரையர். உணருந்தன்மையுடையது எதுவோ அதுவே உயிர் என வழங்கப்பெறும் என்பது இவ்வுரைவிளக்கத்தால் நன்கு விளங்கும். பொறிகளால் மிக்கும் குறைந்தும் காணப்படும் பல்வேறு உடம்புகளைப் பெற்று வாழும் எல்லாவுயிர்கட்கும் அறியுந்தன்மையென்பது பொது வியல்பாகும். உயிர்கள் தாந்தாம் பெற்றுள்ள உடம்பின்கண் அமைந்த கண் செவி முதலிய அறிதற் கருவிகளின் குறைவுமிகுதிகட்கேற்ப அவற்றின் உணர்ச்சி வாயில்கள் வேறுபடும் நீர்மையனவாம். இவ்வுலகிற் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள அறிவுடைப் பொருள்கள் யாவும் உயிர்களேயாம். எனினும் அவற்றின் அறிவு அவை பெற்றுள்ள பொறிகளின் குறைவுமிகுதிகட் கேற்பக் குறைந்தும் வளர்ந்தும் அமைந்த இயல்பினைத் தொல்காப்பிய னார்க்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் நுணுகி யாராய்ந்து கண்டார்கள். அவ்வாராய்ச்சியின் பயனாக எல்லாவுயிர்களையும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையாகப் பகுத்துள்ளனர்.

கானாமரயினவாகிய உயிர்களைக் காணப்படும் நிலையில் அவை பெற்றுள்ள உடம்பினாற் கருதியுணர்ந்து உடம்பின்கண் அமைந்த அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் பற்றியும் அகக்கருவியாகிய மனம் பற்றியும் அறுவகை யுயிர்களாகத் தமிழ் முன்னோர் பகுத்த முறையினை ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் ஒன்றறிவதுவே உற்றறிவது” என்பது முதலாகவுள்ள ஏழு சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார். புல் மரம் எனப்படும் தாவரங்கள் தொட்டால் உணரும் ஊற்றுணர்வு ஒன்றேயுடையன. ஆதலின் அவை ஓரறிவுயிர்கள். நத்தை சங்கு இப்பி முதலியன பிறிதொன்று தம்மைத்தாக்கிய போது உடம்பினால் உற்றறியும் ஊற்றுணர்வும் உணவினைச் சுவைத்தறியும் நாவுணர்வும் உடைமையின் அவை ஈரறிவுயிர்களாகும். கரையான் எறும்பு முதலியன முற்குறித்த ஊற்றுணர்வு சுவையுணர்வு என்னும் இரண்டுடன் மோந்தறிதலாகிய மூக்குனர்வும் உடைமையின்  மூவறிவுயிர்கள் எனப்படும். நண்டு, தும்பி யென்பன முற்குறித்த மூவறிவுடன் கண்ணுணர்வும் ஒருங்குடையன வாதலின் நாலறிவுயிர்கள் எனப்படும். நாற்கால் விலங்கும் பறவையும் முன்னர்க்கூறிய நாலறிவுடன் ஒசையறிதலாகிய செவியுணர்வும் ஒருங்கு பெற்றமையின் ஐயறிவுயிர்கள் எனப்படும். முற்குறித்த ஐம்பொறியுணர்வுகளோடு நன்றுந் தீதும் பகுத்துனரும் ஆறாவதறிவாகிய மனவுணர்வு மக்களுயிர்க்கே சிறப்புரிமையுடையதாதலின் மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர். இங்கு வகைப்படுத்துணர்த்திய அறுவகை யுயிர்ப்பாகுபாடுகளுள் எடுத்துரைக்கப் பட்டனவேயன்றி அவற்றின் நிலையினவாகவும் ஒத்த பிறப்பினவாகவும் வருவன பிறவும் உள்ளன என்பார் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என்றார். இங்ங்னம் உயிர்த்தொகுதியினை அறுவகையாகப் பகுத்துரைக்கும் பகுப்பு முறை தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் நெறிப்படுத்தப்பட்ட தொன்மை வாய்ந்தது என அறிவுறுத்துவார் நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்றார்.

இவ்வாறு அறிவின் திறம்பற்றி அறுவகையாகப் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர்கட்கும் இன்.த்தின்பால் வேட்கை நிகழ்தல் இயல்பு என்பதனை,

“எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉ மேவற்றாகும்”

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். எனவே அறிவும் விருப்பமும் அவைபற்றிய செயல்வகையும் ஆகிய மூவகையாற்றல்களும் ஒருங்குடையன உயிர்கள் என்பதும் உயிர்கட்கமைந்த ஆற்றல்கள் அவை பெற்றுள்ள கருவிகரணங்களின் எல்லையுட்பட்டு அடங்கும் குறைவுடையன என்பதும் ஒருவாற்றால் ஆசிரியர் உய்த்துணர வைத்தாராயிற்று.

 

17. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 27.

18. மேலது, 23.

19. கால்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 86.

20. தெ ல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 18.

21. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 4.

22. தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், 28.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அறியும் ஆற்றல் வாய்ந்த உயிரும் அறியும் தன்மையில்லாத உடம்பும் தம்முள் வேறுபட்ட இருவேறு பொருள்களே என்பதனை, காலம் உலகம் உயிரே உடம்பே' எனவும் 'உடம்பும் உயிரும் வாடியக்காலும்’ எனவும் எனவரும் தொடர்களால் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தி யுள்ளமை உயிரியல்பு பற்றிய ஆய்வுக்கு அரண் செய்வதாகும். எழுத்திலக்கண முனர்த்தக்கருதிய தொல்லாசிரியர்கள் உயிர்போல தானே இயங்குந்தன்மையது உயிரெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் எழுத்துக்களுக்குப் பெயர் கூறிய பெற்றியினை உற்று நோக்குங்கால் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட 5ழ் முன்னோரது மெய்யுணர்வின் திட்பமும் நுட்பமும் இனிது புலனாதல் காணலாம்.

உயிர், தான் நின்றவுடம்பினை விட்டுப் பிரிந்து செல்லும் இயல்பினதென்பதனைச் சென்ற வுயிரின் நின்ற யாக்கை என்னுத் தொடராலும், கால வரையறையுட்பட்ட உடம்பினின்றும் உயிரைப் பிரிப்பதொரு தெய்வ ஆற்றல் உண்டென்பதும் அதனை மாற்றும் ஆற்றல் உயிர்கட்கு இல்லையென்பதும் ஆகியவுண்மையினை மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என்ற தொடராலும் இவ்வுலகிற் பலரும் மாய்ந்தொழியத் தான்மட்டும் மாயாதிருந்து யாக்கை நிலையாமையை விளக்கும் அடையாளமாக எஞ்சி நிற்பது ஈமப் புறங்காடுமட்டுமே யென்பதனை, மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் சொல்லாக் காடு வாழ்த்து’ என வரும் துறைப் பொருளாலும் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறே மன்னாப் பொருட் பிணி என்பதனால் செல்வ நிலையாமையையும் 'இளமையதருமை என்பதனால் இளமை நிலையாமை யையும் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளமை உளங்கொளத் தகுவதாகும்.

இவ்வுலகம், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை எனப் பல்லாற்றானும் நிலையாதென்பதனை நன்குனர்ந்தவர் இவ்வுலகியல் வாழ்வினை நிலையற்றதெனக் கருதி விலகியொழுகுதல் கூடாதென்பதும், இவ்வாறு ஒருநிலையில் நில்லாத உலகியற் கூறுகளைப் பற்றுக்கோடாகப் பற்றி நின்றே உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையுடைய நற்பொருள்களைத் தேடிக் கொள்ளுதல் வேண்டுமென்பதும் தொல்காப்பியர் கொள்கையாகும். இங்ங்னம் உலக வாழ்க்கையில் நேரும் பலவகைத் தடைகளை யெதிர்த்துநின்று நிலையாத பொருள்களைச் சாதனமாகக் கொண்டு நிலையுடையன வற்றை யெய்துதலே காஞ்சித் தினையென்னும் ஒழுகலாறாகும். இதனியல்பினை,

"காஞ்சிதானே பெருந்திணைப்புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாத் நானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"

எனவரும் சூத்திரத்தால் ஆசிரியர் விளக்கியுள்ளார். ‘எதிருன்றல் காஞ்சி' என்னும் பன்னிருபடல நூலாசிரியர் கொள்கையும் இவ்வாசிரியரது கருத்தினை அடியொற்றி யமைந்ததேயாகும்.

மக்கட்குலத்தாரை உயர்தினையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாகும். தெய்வவழிபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது வாழ்வியலறங்களிற் பிறழாத ந்ல்லொழுக்கமேயாதலின் கடவுள் வழிபாட்டுநெறியினைப் பொய்தீர் ஒழுக்க நெறி' எனக் குறித்தார் தெய்வப்புலவர். உயர்தினை மாந்தர் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வினைப் பெறுதற்கு உறுதுனையாவது ஒழுக்கமேயாதலின் அதனைத் தம் உயிரினுஞ் சிறந்ததாகத் தமிழ் முன்னோர் கடைப்பிடித் தொழுகினர். ஒழுக்கநெறியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ்மக்களின் குடும்ப வாழ்வும் அரசியல் வாழ்வும் உருப்பெற்று வளர்ந்தன. இவ்வுலக வாழ்க்கையினை வரம்பு அமைத்து வளர்ப்பதே ஒழுக்கநெறியாதலின் அது ‘கட்டமையொழுக்கம்’ எனப் பெற்றது. ஒழுக்க நெறியிற் சிறிதும் வழுவாது வாழுஞ் சான்றோர்களின் சால்பினது வெற்றி உலகமக்கள் எல்லாராலும் பாராட்டிப் போற்றுதற்குரிய நல்லறிவின் தோற்றமாதலின் அது ‘கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை எனப்பட்டது. கண்ணுமை என்றது கண்ணின் தன்மையாகிய காட்சியினை: அஃது ஈண்டு நல்லறிவின் தோற்றமாகிய செயற்பாட்டினைக் குறித்து நின்றது. ஒழுக்கத்தால் உயர்ந்த பெருமக்களைச் சார்ந்து அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியினைக் கடைப்பிடித்தொழுகலும் தெய்வ வழிபாட்டின் சார்புடையதேயாகும். அறவோராகிய அந்தணர்பாலும் சான்றோர் கண்ணும் அழியாச் சிறப்புடைய பெரியோரிடத்தும் இவ்வாறு ஒழுகுதல் வேண்டும் என ஒருவர் ஒருவர்க்கு அறிவுறுத்தும் முறைமையினை அந்தனர் திறத்தும் சான்றோர்திறத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு’ என்பர் தொல்காப்பியனார்.

ஒழுக்கத்தைப் பேணாது தலைவன் வழுவியது கண்ட தலைவி, தன் கணவனது பழிநிலைக்கு நானுந் திறத்தினைப் 'பேனா ஒழுக்கம் நானிய பொருளினும்’ என்ற தொடராலும், பெரியோர்க்கு 'ஒழுக்கமே பெரியது” என்பதனைத் தோழி அறிவுறுத்துமியல்பினைப் பெரியோ ரொழுக்கம் பெரிது எனக்கிளந்து என்ற தொடராலும் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்ததென்பது தொல்காப்பியனார் துணியாகும். இத்தகைய நல்லொழுக்க நெறியினைக் குறிக்கொண்டு போற்றாது ஒருவர் பிறர்க்குச் செய்த கொடுஞ்செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்பது உலகவாழ்க்கையிற் பலரும் தெளிந்து கூறும் வினையுணர்வு பற்றிய நம்பிக்கையாகும். ஒருவர் செய்த கொடுஞ் செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்னும் இவ்வுண்மையினைக் கொடியோர் கொடுமை சுடும் எனத் தம் காலத்து வழங்கிய பழமொழியின் வாயிலாகத் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் வாழும் நன்மக்களால் அறிவுறுத்தப்பெறும் வாழ்வியல் முறைகளை நிலைக்களமாகக் கொண்டு அந்நாட்டுமக்கள் தம் வாழ்க்கையனுபவத்திற் கண்டுணர்ந்த தத்துவவுண்மைகள் இவையென அறிந்து கொள்ளுதல் எளிதாகும். மக்கள் தம் வாழ்க்கையின் உறதிப்பொருள் களாகக் கொள்ளுதற்குரியன அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். இவ்வுறுதிப்பொருள்களை 'அறமுதலாகிய மும்முதற்பொருள்” எனவும் இன்ட'. பொருளும் அறனும் என்றாங்க’ எனவும் குறிப்பிடுவர் தொல்காப்பியர். அவற்து. இன்பம் என்பது எல்லா வுயிர்களாலும் விரும்பப்பெறும் நுகர்தல் வேட்கையாகும். பொருள் என்பது முற்குறித்த இன்பத்திற்குக் காரணமாக அறிவுடைய நன்மக்களால் ஈட்டப்பெறுவதாகும். அறம் என்பது, வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை ஈட்டுந்திறத்திற் பிறர்க்குத் தீங்கு நேராதவாறு மாசற்ற மனமொழிமெய்களாற் செய்யப்பெறுஞ் செயல்முறையாகும். நுகர்தல் வேட்கை முறைபற்றி 'இன்பமும் பொருளும் அறனும் எனவும் செய்கை முறைபற்றி அறம் பொருள் இன்பம் எனவும் எண்ணுதல் மரபு.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற்

- - • 232.4 &#1355 & i-i-io

என நுகர்தல் முறை பற்றியும்

"அந்நிலை மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப"

எனச் செய்கை முறை பற்றியும் மும்முதற்பொருள்களாகிய உறுதிப்பொருள்களை எண்ணியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றைத் தவிர அறிவுடைய் மக்களால் விரும்பி மதித்தற்குரியன பிற இன்மையின் இம்மூன்றையும் மும்முதற்பொருள்’ எனச் சிறப்பித்துரைத்தார். அறத்தினாற் பொருளையீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக்களது நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு மூன்று பகுதியாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் அமைப்பினை மூன்றன் பகுதி' எனத் தொகுத்துரைப்பர் தொல்காப்பியர். உலகப் பொதுமறை யாசிரியராகிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த முறையே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால்களாகத் திருக்குறளை வகுத்தருளிச் செய்தமை இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும்.

இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் தமிழ்மக்களது குடும்ப வாழ்க்கையினையும் சமுதாய வாழ்க்கையினையும் புலப்படுத்தும் வாழ்க்கை நூலாகவும் திகழ்கின்றது. தொல்காப்பியனார் காலத்து வாழ்ந்த தமிழ் முன்னோர் தம் வாழ்க்கையிற் கண்டுனர்ந்து கடைப் பிடித்தொழுகிய தத்துவவுண்மைகளும் செயல்முறைகளும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பிறப்பிற் குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்புக்களிலும் தொடர்ந்து துணைபுரிவனவாகிய அறச்செயல்களும் பிறப்பறமுயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் மக்கள் வாழ்க்கையின் கூறுகள் என முன்னைத் தமிழ்ச் சான்றோர் ஆராய்ந்து வெளியிட்டுள் ளார்கள். அன்பிற் சிறந்த கனவனும் மனைவியுமாக வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்துச் சுற்றத்தாரைப்பேனி விருந்தோம்பி எல்லோர்க்கும் ஆதரவாக வாழ்வதே இம்மை வாழ்வாகும். இவ்வாறு கணவனும் மனைவியுமாக இல்லின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தினோர் தாம் நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் நுகர்ந்து மனநிறைவுடையராய் முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இங்ங்னம் ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தலாகிய இத்துய ஒழுகலாற்றினைக் காமம் நீத்த பால்’ என வாகைத்தினைக்குரிய துறைகளுள் ஒன்றாக வைத்துரைப்பர் தொல்காப்பியர். “காமம் நீத்த பால்’ என்றது, உரன் என்னும் அங்குசத்தால் ஐம்புலக்களிறுகளை வென்றடக்கிய வீரத்தினைப் புலப்படுத்தும் வெற்றிச் செயலாதலின் வாகைத் தினைக்குரிய துறைகளுள் எண்ணப்பெறுவதாயிற்று. இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையாதன எனத் தெளிந்து எல்லா வுயிர்களிடத்தும் இரக்கமுடையராய் செம்பொருளாகிய முழுமுதற்பொருளின் அருளையே சார்பாகப் பற்றிக் கொண்டு உலகப்பற்றினைத் துறந்து ஒழுகுதல் துறவுநிலை யாகும். இத்துறவினை வாகைத்திணைக்குரிய துறைகளுள் அருளொடு புணர்ந்த அகற்சி என்ற துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர்.

குற்றமும் குனமும் விரவிய நிலையில் நிகழ்வதே உலகியல் வாழ்வு. வாழ்க்கையில் நேரும் குற்றங்களை நீக்கிக் குனங்களால் உயர்ந்து வாழ்க்கையிற் பெறும் மேதகவே வாழ்க்கையின் வெற்றியாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்பன மக்களிடத்தே காணப்படும் அறுவகைக் குற்றங்களாகும். வெல்லுதற்கு அரிய உட்பகையாயிருந்து வாழ்க்கையில் துன்பம் விளைப்பன இக்குற்றங்களாகும். இவ்வறுவகைக் குற்றங்களையும் சான்றோர் தம் உள்ளத்துறுதியாலும் அறிவின் திண்மையாலும் வென்று மேம்படுத்திறத்தினை ‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’ என்னும் துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். உட்பகையாகிய இக் குற்றங்களை அரும்பகை எனத் தொல்காப்பியனார் கூறியது போலவே குற்றமே அற்றந்தரூஉம் பகை' எனத் திருவள்ளுவரும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை காணலாம். மக்களது நல்வாழ்வினைச் சிதைப்பன மனத்தின்கண் தோன்றும் தீயநினைவுகளேயென்பதும் அத்தகைய மனமாசுகளைக் களைய வல்ல நல்லுனர் வுடையவர்களே ஆற்றல் மிக்க நன்மக்கள் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது, ‘அரும்பகை தாங்கும் ஆற்றலானும்’ எனவரும் இத்தொல்காப்பியத் தொடரால் நன்கு துணியப்படும்.

23. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 18. 

24. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 1. 25. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 105.

ஆசை. ச. சா. வ. 8



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 உலக வாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் மனந்து மனையறம் நிகழ்த்தி அன்பிற்சிறந்து வாழ்ந்ததன் பயனாக அவ்விருவரையும் அடுத்து வரும் பிறவியிலும் கணவனும் மனைவியுமாகப் பொருத்தி வாழும் வண்ணம் ஒன்று சேர்ப்பதும் அன்பின்மை காரணமாக அவ்விருவரையும் பிரித்து வேறாக்குவதும் என ஊழ் இருவகைப்படும். கணவன் மனைவியென்னும் அவ்விருவர் உள்ளமும் அன்பினாற் சிறந்து பிறப்புத்தோறும் நல்வினைக்கண்ணே ஒற்றித்து நிற்றலால் உயர்ந்ததன் மேற்செல்லும் மன நிகழ்ச்சி அவ்விருவர்க்கும் உண்டாகிய மறுபிறப்பினும் அவ்விருவரை யும் ஒன்று சேர்க்கும் பாலாய் ஆகூழ் எனப்படும். இப்பிறப்பிற் கணவனும் மனைவியுமாகக் கலந்துவாழ்வோர் தம்முள் அன்பின்றிப் பினங்கியொழுகுவராயின், அவரிடையே தோன்றிய மனவேறுவாடு, அவ்விருவரையும் மறுபிறப்பிற் கூடாதவாறு பிரிக்கும் பாலாய் வேறுபடுத்துவதாகும். இது போகூழ் எனப்படும். அன்புடையார் இருவருள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றிய நல்வினையின் உயர்ச்சியினாலே அவ்விருவரையும் மறுபிறவியிலும் கூட்டுவதாகிய உயர்ந்த நல்லூழின் ஆணையினாலே ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்படுவர் என்பது தமிழ் முன்னோர் துணிபாகும். இவ்வுண்மையினை,

“ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ட”

எனவரும் சூத்திரத்தினாலும், பொறியின் யாத்தபுணர்ச்சி’ என்ற தொடராலும் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். இவ்வாறு தொல்காப்பியனார் ஊழின்திறத்தை விரித் துரைத்த லால் அவ்வூழ் முதிர்ந்து பயனளித்தற்குரிய மறுபிறப்புண் டென்பதும் அவர் தமக் குடன்பாடாதல் நன்கு தெளியப்படும்.

கணவனும் மனைவியுமாக மனையின்கண் இருந்து இல்லறமென்னும் நல்லறத்தினைச் சிறப்புற நிகழ்த்தும் கடமையினை மேற்கொண்ட காதலர் இருவரும் ஐம்புல வின்பங்களை ஆரத் துய்த்து மனவமைதிபெற்ற நிலைமைக்கண் மனையறத்திற்குப் பாதுகாவலாகிய ಉತ್ತ5TTು நிறைவு பெற்ற அறத்தையே விரும்பிய சுற்றத்தாருடன் உயிரினுஞ் சிறந்த முழுமுதற்பொருளாகிய செம்பொருளின் அருளியல்பினை உணர்ந்தோர்பாற் கேட்டுணர்ந்து, ஒருநெறிய மனத்திற்கொண்டு போற்றி மகிழ்தலே அவ்விருவரும் இதுகாறும் அன்பினால் நிகழ்த்திய மனைவாழ்க்கையின் முடிந்த பயனாகும் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியருளிய மெய்யுணர்வுக் கொள்கையாகும். தமிழ் முன்னோர் வீடுபேற்று நெறிபற்றிய இக்கொள்கை,

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

எனவரும் தொல்காப்பியனார் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம். எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங்குதல் தனக்குவமையில்லாத இறைவனது இயல்பாதலின் உயிர்கட்குத் தோன்றாத்துணையாய் நின்று அருள்புரியும் கடவுளைச் சிறந்தது’ என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். தனக்குத் தோற்றக்கேடுக ளின்றி என்றும் உள்ளதாய்த் தன்பால் ஒன்றும் ஊடுருவ இயலாமையால் தூயதாய்த் தனக்கு எத்தகைய விகாரமும் இன்றி என்றும் ஒருபெற்றியதாய் உலகுயிர்கள் தோறும் செறிந்து நிற்றல் முழுமுதற் கடவுளின் இயல்பாதல் கருதி அதனைச் செம்பொருள்” என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடுவர். ‘சிறந்தது எனத் தொல்காப்பியனார் குறித்ததனையே திருவள்ளுவரும் செம்பொருள் என்ற சொல்லாற் குறித்துள்ளார் என்பதற்கு,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காணப தறிவு”

என்புழிச் சிறப்பென்னுஞ் செம்பொருள் என அடைபுணர்த் தோதியதே சான்றாகும். தொல்காப்பியனார் முதலிய முன்னைச் சான்றோர்களாற் சிறந்தது எனப் போற்றி யுரைக்கப்படும் முழுமுதற் பொருள் என்பார் சிறப்பென்னுஞ் செம்பொருள்” என்றார் வள்ளுவர். இல்லறவாழ்வில் நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் எஞ்சாமல் நுகர்ந்து உள்ளத்தமைதியுற்ற நன்மக்கள் என்றும் அழியாத பேரின்பப் பொருளாய்ச் சிறந்து விளங்கும் செம்பொருளை இடைவிடாது சிந்தித்து மீண்டும் பிறவிச் சூழலிற் றிரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன்னெறியினைத் தலைப்படுதலே அன்பின் ஐந்தினையொழுகலாற்றின் முடிந்த பயனாகும் என்பது மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரத்தின் கருத்தாகும்.

ஒத்த அன்பினராய் மனையறம் நிகழ்த்தி வாழ்ந்தவர்கள் பிறவிப்பிணிப்பினை நீங்கி வீடுபெறுங் கருத்துடையராய் இவ்வுலகிற் பற்றினை விட்டொழித்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய்த் துறவற நெறியாகிய அருள் வாழ்வினை மேற்கொள்ளுதல் பண்டைத் தமிழர் வாழ்வியலிற் கண்ட சிறப்பியல்பாகும். இதனை அருளொடுபுனர்ந்த அகற்சி என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி நாடாள் வேந்தர்களும் தங்கள் அரச பதவியினைத் துறத்தலுண்டு. இவ்வாறு முடிமன்னர்கள் வீடுபேற்றினை விரும்பித் தமது அரச பதவியினைத் துறக்கும் நிகழ்ச்சியினைக் கட்டில் நீத்த பால்’ என வாகைத்தினையுள் ஒரு துறையாகக் கூறுவர் தொல்காப்பியனார். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தன் அரச பதவியினைத் துறந்து காடு போந்த வரலாறு பதிற்றுப்பத்தின் மூன்றாம்பத்தின் பதிகத்துட் குறிக்கப்பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும்.

நீராடல், நிலத்திடைக்கிடத்தல், தோலுடுத்தல், சடை புனைதல், எரியோம்பல், ஊரடையாமை, கடவுள் வழிபாடு, விருந்தோம்பல் எனத் தவஞ்செய்வார்க்குரிய இயல்புகள் எண்வகையாகச் சொல்லப்பட்டன. தவஞ்செய்வார்க்குரிய எண்வகைச் செயல்முறைகளை நாலிரு வழக்கிற் றாபதப்பக்கம் என்பர் தொல்காப்பியர். ‘நாலிரு வழக்கிற் றாபதப்பக்கம் என்பது யோகியர்க்குரிய இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்னும் எண்வகையோக வுறுப்புக்களைக் குறித்ததாகக் கொள்வதும் உண்டு.

26. தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல், 51.

27. திருக்குறள், 358.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard