Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியத்தின் கால


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தொல்காப்பியத்தின் கால
Permalink  
 


தொல்காப்பியம்


 
Save
Share
 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, https://www.jeyamohan.in/16840/#.XunY_2gzaUk
நான் ரெங்கராஜன். தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு சந்தேகம், அபத்தமாகவும் இருக்கலாம்.
தொல்காப்பியம் படித்த போது ஒட்டகத்தைப் பற்றிய குறிப்பைக் கண்டேன். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் ஒட்டகம் இருக்கும் அளவிற்குப் பாலைவனம் இல்லை, இருந்திருப்பதாகவும் அறியவில்லை. அப்படியானால், ஒன்று ஒட்டகம் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். அல்லது அரபு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்க வேண்டும்.

அரபு மற்றும் ரோம நாட்டினருடன் வணிகம் கிபி 100 – 300 செழித்திருந்ததாகப் படித்திருக்கின்றேன். அப்படியானால் தொல்காப்பியம் கிபி 100 போல் எழுதப்பட்டதா ?

சங்க இலக்கியங்களில் ஒட்டகம் பற்றிய செய்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. புறநானூற்றில் நான் படித்த வரை ஒட்டகம் பற்றிச் சொல்லியிருப்பதாக நினைவில்லை. புறத்திற்குப் பிறகு தொல்காப்பியம் எழுதப்பட்டதா ? தொல்காப்பியத்தின் காலம் என்ன ?

நன்றி.

ரங்கராஜன்

அன்புள்ள ரங்கராஜன்

தொல்காப்பியத்தின் காலகட்டத்தைப் பின்னுக்குத்தள்ளியவர்கள் தமிழிய இயக்கத்தவர். அது உணர்ச்சிகர நம்பிக்கை மட்டுமே. வையாபுரிப்பிள்ளை மரபைச் சேர்ந்தவர்கள் தொல்காப்பியம் பிற்காலப்பிரதி என்றே நினைக்கிறார்கள்.வேதசகாயகுமார் எழுதியிருக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை பாடல்கள் மிகவும் தொன்மையானவை. அவை தொல்காப்பிய இலக்கணத்துக்குள் பின்னர் அடக்கப்பட்டவைதான். தொல்காப்பியம் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டகாலகட்டத்தில் உருவானது. அதாவது கிபி இரண்டு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற தொல்தமிழிலக்கியங்களைவிட அதிகமான சம்ஸ்கிருதக் கலப்பும் சம்ஸ்கிருத இலக்கணப்பாதிப்பும் கொண்டது

ஜெ

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும், 2

சங்க காலமும் இந்திய சிந்தனைமரபும் 1

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு


 
Save
Share
 

_MG_7004

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

 சில ஆண்டுகள் முன்பு ,ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் அவர்கள் தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றினை, திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது . காரணம் அவரது ஆய்வுக் குறிப்பு ஒன்று, அதன் உண்மை,  குறிப்பிட்ட சாதியாரின் சாதிமேன்மை கற்பிதம் ஒன்றுக்கு எதிராக இருந்ததே காரணம். அது குறித்து [ஒரு சிறு குறிப்பாக மட்டுமே ] வருத்தமுடன் தனது வயக்காட்டு இசக்கி நூலின் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார் ஆகா பெருமாள் . அந்தக் குறிப்பினை இன்றைய தேதிகளில் , தமிழ் சமூக ஆய்வுகள் , அதன் வழியே உருவாகும்,நிலைபெறும்  கருத்தியல் அடித்தளங்களை  எல்லாம், அறிவுத் தரப்பிடம் இருந்து ,அதிகாரத்தை  நோக்கி நகர சாதி ஒற்றுமையை பேணும் , சாதிச் சுமடர்கள் வன்முறை வழியே கைப்பற்றத் துவங்கி  இருப்பதன் அபாய அறிவிப்பு என்பதாகவே கொள்ள வேண்டும் .  இந்த தமிழ் நிலத்தை நேசிப்பவர் யாரும் ,சற்றே நின்று  நோக்கினால் கூட போதும் ,  திரிபுகளை, பிழையான குறிப்புகளை ,போலி கற்பிதங்களை, முழுப் பொய்களை    கோட்டான் போல கூவிக் கூவி, அதையும்  மீறிச்சென்று வன்முறை வழியே சமூக பொது மனத்தில் விதைக்க சாதிப்பற்றாளர்கள்  செய்யும் யத்தனங்கள்  கண்டு மனம் கூச  நேரும் .

 வடிகாது கொண்டதனால் தீர்த்தங்காரர் யாவும் எமது சாதியே என கூவுகிறது ஒரு ஆய்வுக் கட்டுரை,  மகாபலிபுரத்தை கட்டியவன் தனது சாதி சங்க தலைவனின் முப்பாட்டன் என்று கூவுகிறது மற்றொரு ஆய்வு கட்டுரை , மூவேந்தரும் தமது சாதியரே என்று இரண்டு சாதிகள் ஆய்வுத் தரவுகள் கொண்டு கட்டிப்புரண்டு கொண்டிருக்கிறது ,ராஜராஜ சோழன் என்ன சாதி என்று இன்னும் கால் நூற்றாண்டு கழித்து [அடிதடியில் மாய்ந்தபின்] எஞ்சிய சாதி கொண்டு அறிய நேரும் துர்பாக்கிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது .தமிழ் நிலத்தின் ஏழு  கோடி சாதிகளில் மிச்சமின்றி  எல்லா சாதியும் ஆண்ட சாதி ,சத்ரிய வம்சம் என்ற ,பெருமையை தேடிச் சென்று அள்ளிச் சூடிக் கொள்கிறார்கள் . இவர்களிடம் என்னதான் கோணல் ?  எழுத்தாளர் சுந்தரராமசாமி அவருக்கே உரிய கூர்மையான சொல் கொண்டு ஒரு நேர்காணலில் அதை சுட்டி இருக்கிறார் . தமிழர்கள் வசமிருக்கும் நிமிர்த்த இயலா கோணல் அவர்களின் தாழ்வுணர்ச்சி . என்பதே அது .

 இது தாழ்வுணர்ச்சி என்பதையே அறியாமல் ,அதை மேன்மை எனக்கொண்டு ,அந்த மேன்மைக்கு ஆதாரமாக இவர்கள் முதலில் சுட்டுவது சங்க இலக்கியத்தில் காணும் ஏதேனும்  சில குறிப்புகளாகவே இருக்கும் . உதாரணமாக

 பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை’

 இது பரிபாடலில் பெட்டன் நாகனார் என்பவர் எழுதிய பாடல் ,இந்த பாடலை அடிப்படையாக கொண்டு , ஆர்யப்பட்டர் இந்த பரிபாடலின் காலத்துக்கு பிந்தியவரே ஆகவே , சுழியம் என்பதை கண்டு பிடித்தவன் ,சங்க காலத்தில் வாழ்ந்த பெட்டன் நாகனார் எனும் தமிழனே [இவர் என்ன சாதி எனும் அடி தடி ,இவருக்கான இடம் அறிவுத் தளத்திலும் பண்பாட்டு தளத்திலும் உருவான பின் நிகழும் ] என்று அறுதி இட்டு கூறும் ஆய்வு சென்றவாரம் வாட்சப் குழும தமிழர்களை வந்து அடைந்து அறிவூட்டி புளகம் கொள்ள வைத்தது . இப்படி  சொந்த அரிப்பை சுகமாக சொறிந்து கொடுப்பது மட்டுமே ஆய்வுகள் ,அது மட்டும் போதும்  அதற்கு மாறான  உண்மை நிலையை பேசும் ஆய்வுகளை முன் வைப்பவர்களை மிரட்டி பின்வாங்க வைக்கும் சாதி அமைப்புகள்  ஒரு பக்கம் , சங்க இலக்கியம் பேசும் பூக்கள் வகை எத்தனை ,அதை மேயும் மாடுகளின் கால்கள் எண்ணிக்கை அதில்  எத்தனை என ,படிப்பவர் போட்டியை கக்க வைக்கும் ,பல்கலைகழக ஆய்வுகள் மறு பக்கம்    இவற்றுக்கு வெளியே நின்று , கொண்ட ஆய்வு பொருள் மீது உண்மையான அக்கறையுடனும் , அறிவார்ந்த நோக்குடனும் , விருப்பு வெறுப்பற்ற தன்மையுடனும் , விமர்சனப் பார்வையுடனும் ,சங்க இலக்கியங்களை இன்றைய காலத்தின் கோட்பாட்டுக் கருவி கொண்டு , பொருள்கோடல் நிகழ்துபவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்கள் .சாகச விரும்பிகள் மட்டுமே சென்று கால் பதிக்கும்  பனிபடு ,உயர் வரையின், ஒளி இமிழ்  சிகர முனையை போல , தமிழ் சமூக உருவாக்கத்தின் பின்புலம் நோக்கிய அறிதல்  ஆர்வமும் ,உழைப்பும் ,தேடிக் கண்டடையும் தீவிரமும் கொண்டவர்களுக்காக ,அவர்களுடன் உரையாட காத்திருக்கிறது ,  ராஜ் கௌதமன் அவர்களின்   பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் [தமிழினி இரண்டாம் பதிப்பு 2912]எனும் சமூக விமர்சன  நூல் .

 ‘ தமிழிலக்கிய மரபு இருபதுநூற்றாண்டு வரலாற்றுத் தொன்மை கொண்டது. அதற்கு மரபான ஒரு வரலாற்றுச் சித்திரமும் வைப்புமுறையும் உள்ளது.இருபதாம் நூற்றாண்டில் இவையனைத்தும் மாறின. அதை நாம் நவீனக் காலகட்டம் என்கிறோம்.

 இருபதாம்நூற்றாண்டு என்பது குடியாட்சியின் காலகட்டம். அனைத்துமக்களும் கல்வி கற்று அறிவுப்புலத்திற்கு வந்தனர். அனைவரும் அரசதிகாரத்தில் பங்குகொண்டனர். குலவழக்கங்களும் மதங்களும் கொண்டிருந்த இடத்தை புதிய அரசியல்கொள்கைகள் எடுத்துக்கொண்டன. அனைத்துத் தளங்களிலும் புதிய நோக்குகள் உருவாகி வந்தன. வரலாறும் வைப்புமுறையும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன.

  இந்த மாற்றத்திற்கு ஏற்ப உலகமெங்குமே அரசியல் ,சமூக வரலாறுகள் மாற்றியும் விரித்தும் எழுதப்பட்டன. அவற்றுக்கேற்ப இலக்கிய வரலாறும் இலக்கியக் கோட்பாடுகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றன. இவ்வாறு புதியநோக்கில் இலக்கியத்தை ஆராய்ந்து வரையறுக்கும் இலக்கியக் கோட்பாட்டாளர்கள் உருவாகி வந்தனர். ராஜ் கௌதமனுக்கு தமிழிலக்கிய மரபில் உள்ள இடம் என்பது அவர் தமிழிலக்கிய மரபை வகுத்தளித்த ஆய்வாளர்களில் முதன்மையான மூவரில் ஒருவர் என்பதே.’

 மேற்கண்ட வரிகள் ராஜ் கௌதமன் அவர்கள் குறித்த அறிமுக கட்டுரையில் ஜெயமோகன் எழுதி இருப்பவை . தமிழ் சங்க இலக்கியப்பிரதிகளை முதன் முதலாக அக் காலக்கட்டத்துக்கு உகந்த வகையில் பொருள் கோடல் நிகழ்த்த அடிப்படை அமைத்து தந்த தொல்காப்பியர் முதல் இக் காலக்கட்டத்துக்கு உரிய முறையில் பொருள்கோடல் நிகழ்த்த அடிப்படை அமைத்துக் கொடுத்த பேராசிரியர் ராஜ் கௌதமன் வரை , இந்த வரிசை நான்கு காலக்கட்டங்கள்  அடங்கியவை .  ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்/பாண்டியர் காலத்தில் நிகழ்ந்த முதல் பொருள் கோடல். அதற்கான காரணம் ,பின்புலங்கள் குறித்து இந்த நூலில் விரிவாக பேசுகிறார் நூலாசிரியர் . சோழப்பேரரசு அமைந்து விட்ட அடுத்த காலக்கட்டம் இரண்டாவது  . நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு , உ வே சாமிநாத ஐயர் போன்றோர் முயற்சியால் ‘வெளிப்பட்டு’ , மறைமலை அடிகள் போன்றோரால்  ‘தனித்தமிழ்’ இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்த பொருள்கோடல் நிகழ்ந்த மூன்றாம் காலக்கட்டம் . விளிம்பு நிலையில் நிற்கும் ஒவ்வொருவரும் தான் நிற்கும் நிலம் சார்ந்து ,அதில் தான் வேரோடி வாழ்ந்திர்க்கும் ஆழம் சார்ந்து ,இதுவரை அதிகார கருத்துக்களால்  கட்டப்பட்ட அனைத்தயும் ‘கலைத்தடுக்கி ‘  ,அந்த வேர் சென்று புதைந்து நிற்கும் ஆழம் நோக்கி ,நிகழ்ந்த ஆய்வுகளை அடங்கியது ராஜ் கௌதமன் அவர்களின் இந்த நூல் நிற்கும்   நான்காம் காலக்கட்டம் .

 ‘சங்க கால’அறிவு மரபிலும் ,அதன் பின்பு வந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் , தமிழ் நிலத்தின் அசல் சிந்தனைகளில் எவை எவை பேசப்பட்டன ,என்னவிதமான உரையாடலும் ,பொருள்கோடலும் நிகழ்ந்தன ,என்னவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன  அதன் பின்புலம் என்ன  ஆகிய புலங்களில் மையம் கொள்கிறது இந்த நூல் . பாணர் மரபில் துவங்கி ,புலவர் மரபுக்கு நகரும் ,வேடர் மரபில் துவங்கி வேந்தர் மரபுக்கு நகரும் சமூக சித்திரத்தை கொண்ட  , கிமு மூன்று முதல் ,கிபி இரண்டு வரையிலான காலக்கட்டத்தை உள்ளடக்கிய சங்க நூல்களை  களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டதொல்காப்பியம் கொண்டு  அவர்களுக்கு பின்னான  பல்லவர்/பாண்டியர்  காலத்தில்   முதல் பொருள்கோடல் நிகழ்ந்த வகையில் , உருவான புதிய நிலைகள் குறித்து ராஜ் கௌதமன் கவனம் குவிக்கிறார் .குறிப்பாக சங்க கால காமம் என்னவாக இருந்தது ,பிற்காலத்தில் அவற்றுக்குப் பொருள் வகுத்த தொல்காப்பிய காலத்தில் , அதன் வழியே காமம்  என்னவாக பரிமாணம் பெற்றது எனும் சித்திரத்தை அளிக்கும் முதல் கட்டுரை ,இந்த நூலின் பிற பத்து கட்டுரை அளவே காத்திரமானது .

  புணர்ச்சிக்கான ஏக்கம் ,புணர்ச்சிச் செயல்பாடு , புணர்ச்சி இன்பம் என மூன்று நிலைகளில் தொல்காப்பிய காலத்தில் பிரிவுபடும் காமமானது , சங்ககாலத்தில் எய்யப்பட்ட அம்பின் வழி போல ஒரே ஆற்றலும் கோடும் கொண்டதாக பிரிவற்றதாக துய்க்கபெற்றிருக்கிறது. கொண்ட காம வேட்கையின் அளவு ,கூடாமல் குறையாமல் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே சங்க கால நிலையாக இருந்திருக்கிறது .மாறாக சமூக உருவாக்க காரணிகளின் பின்புலத்தின் ஒன்றாக பெண்ணின் காமமும் கற்பும் தளைப்படும் போது.இந்த ஒரே செயல் முதற்சொன்ன மூன்று கூறுகளாக பிளவுபடுகிறது . முதல் கூறு வழியே அகவைய  உணர்சிகளில்  மேல் கீழ் தாழ்வும் ,இரண்டாம் கூறு வழியே கற்பு களவு போன்ற ஒழுக்கங்களும் ,மூன்றாம் கூறு வழியே  புறவய குல கலப்பின் மேல் கீழ் அடுக்கும் உருவாகும் விதத்தை ,  சமூக மாற்றம் நிகழும் வரிசைகிரமமான பாடல்கள் வழியே ,அதில் துலங்கும் குறிப்புகள் வழியே , மிஷேல் ப்ஹூகோ வின் கோட்பாட்டுப் பார்வை கொண்டு விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர் .

 அதன் தொடர்ச்சியாக பெண் என்பவளின் காமத்துடன் இயந்த வாழ்வு , துண்டு துண்டாக ,பூப்பு எய்துதல் ,திருமணம் ,குழந்தைப்பேறு ,கணவன் இறந்ததும் ஏற்கும் கைமை நோன்பு இவற்றின் வழியே உறையவைக்கப்பட்டு , இந்த உரை நிலை அடுக்குகள் வழியே ஒவ்வொரு குடியும் ,மேல் கீழ் என அமைத்த சமூக அடுக்கில் மேல் நோக்கி நகரும் சித்திரத்தை பல பாடல்களின் குறிப்பு வழியே அளிக்கிறார் .  அதை தொடர்ந்து உணவு என்பது ஐவகை நிலத்தை சேர்ந்த குடிகளிலும் என்னவாக இருந்தது , எவையெல்லாம் உண்ணப்பட்டன ,அதில் மேலானவை கீழானவை என எவை எல்லாம் பார்க்கப்பட்டன , எந்த உணவுகள் வணிகத்துக்கு உட்பட்டு ,உபரியை உருவாக்கி ,அரசு மற்றும் வர்க்க சமுதாயத்தை உருவாக்குவத்தில் பெரும்பங்கு ஆற்றின என்பதை ஆராய்ந்து சொல்கிறது மற்றொரு அத்யாயம் .  இனக்குழு என்பதில் இருந்து சாதி அடுக்கு வரை தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் , தீண்டாமை இருந்ததா ? வர்ணாசிரம அடிப்படையிலான பேதங்கள் சங்க காலத்தில் இருந்ததா என்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இந்த நூலின் தலையாய கட்டுரைகளில் இரண்டாவது .

 சுந்தர நாயனார் கதையில் சுந்தரருடன் ஒரு பாணர் வருவார் .சுந்தரர் சிவனைப்பாட ஒரு கோவிலுக்குள் நுழைவார் . நண்பரான பாணர் சமூக தடை காரணமாக வெளியிலேயே நிர்ப்பார் . உள்ளே சென்ற சுந்தரர் சிவபெருமான் வசம் முறையிடுவார் .அந்த சிவனே அசரீரி குரல் கொண்டு ,ஊரார் அறியும் வண்ணம் ,பாணரை கோவிலுக்குள் அழைப்பார் ,அழைத்ததோடு மட்டுமன்றி ,அந்த பாணர் நின்று பாட , சரியாசனம் ஒன்றும் அளிப்பார் .இப்படி ஒரு ஐதீக கதை உண்டு , இந்த கதையில் ,இந்த காலக்கட்டத்தில் கீழ்நிலையில் இருக்கும் பாணர் மரபு , சங்க இலக்கிய காலத்திலேயே தனது சமூக அடுக்கிலிருந்து சரிந்து கீழ் நிலைக்கு சென்று விட்ட சித்திரத்தை ,பல்வேறு பாடல்களின் குறிப்பு வழியே ராஜ் கௌதமன் சுட்டுகிறார் . பாணனை காட்டிலும் துடியன் கீழ் நிலையிலும் , அழுக்குத்துணி துவைப்போர் , சாவு வீட்டில் ஈமக் கடன் செய்வோர், பிரசவம் கண்ட பெண்ணுக்கு கட்டில் போன்ற பொருட்களை பின்னி அளித்து ஏவல் செய்வோர் இவர்கள் எல்லாம் இழிசினராக பார்க்கப்பட்ட சித்திரத்தை அளிக்கிறார் . சுவாரஸ்யமான தகவலாக , முருகு வந்து அல்லல் படும் இளம்பெண்,அவள் எந்தக் குடியாக இருந்தாலும்  அந்த நேரத்தில் மட்டும் புலைச்சி என்று இழிந்துரைக்கப்படமையை நூலாசிரியர் சுட்டுகிறார் . சங்ககாலத்தில் தமிழ் சமூகத்தில் அந்தணர்கள் நிலைபெற்று விட்டாலும் , இழிவு என்பது தொழிலின் பார்ப்பட்டு சுட்டபட்டதே அன்றி ,சாதியின் பார்ப்பட்டு அல்ல , இரண்டாவதாக சமூக அடுக்கில் இந்த தொழில் மேலானது ,இந்த தொழில் கீழானது எனும் வகையில் இழிவு பேசப்பட்டு இருக்கிறது .  வயலில் தூற்றிய நெல்லின் உமித்துகள்கள் காற்றில் பரத்து ,உப்பு விளையும் உப்பளத்தில் விழுந்து பாழ்படுத்துவதை தொடர்ந்து ,இரு குடி பெண்களும் செய்யும் தொழிலை இழி சொல்லால் பழிக்கும் பாடல் வரி குறிப்புகளை நூலாசிரியர் தருகிறார் .  கீழான தொழிலை செய்யும் எதிலார்கள் தமிழ் சமூகத்தில் எவ்வாறு தோற்றம் கொண்டனர் என்பதையும் , சங்க காலத்திலேயே பிராமணர்கள் தமிழ் நிலத்தில் ‘பண்பாட்டு கலப்பில் ‘இணைந்து விட்டிருந்த போதும் ,பல்லவர் காலத்திலும்  பிறகு வந்த அரசர்கள் காலத்திலும்  ,அரசு அதிகார உருவாக்க கருத்தியலில்  மனு நீதி தலைமை கொண்ட பிறகே ,துல்லியமாக வர்ண அடிப்படையில் குடிகள் சாதிகள் என  பிரிக்கப்பட்டு ,மேல் கீழ் அடுக்குகள் உருவாக்கப்பட்டு ,அவை உறயவைக்கப்பட்டு,  தீண்டாமைக்கான சாதி சொல்லி இழிவு செய்யும் நிலைக்கான சூழல் எழுந்தது என இந்த நூலின் வழியே ராஜ் கௌதமன் தனது கண்டடைதல்களை முன்வைக்கிறார் .  ஆசிரியர் அம்பேத்கர் இந்திய சூழலை ஆராய்ந்து  வந்தடைந்த அதே முடிவு , சங்க இலக்கிய பாடல்கள் வழியே துலங்கும்  ஆய்வு தரவுகள் கொண்டு ராஜ் கௌதமன் அவர்களும் வந்தடைகிறார் .

 தமிழ் சமூக உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் பங்களிப்பு சார்ந்த கட்டுரை இந்த நூலின் தலையாய கட்டுரைகளில் முதலாவது .  தொல்காப்பியம் சங்க இலக்கியங்களை தனது காலக்கட்டத்தில் பொருள் கோடல் நிகழ்த்த முக்கிய காரணம் ,சங்க இலக்கியகளில் உள்ள ஒரு விதமான தன்னுணர்வு . வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் உள்ள நிலத்தில் நாங்கள் இருக்கிறோம் ,அந்த நிலம் பனிபடு நெடுவரையை எல்லையாகக் கொண்ட பெரு நிலத்தின் ஒரு பகுதி எனும் தன்னுணர்வு அது . அதை தொகுத்து ,அகம் புறம் என்ற தத்துவ அடிப்படைகளை அளித்து , அக்காலத்தில் இந்திய நிலம் எங்கும் பரவி விரிந்து கொண்டிருந்த ,சமண , பௌத்த ,வைதீக  அறிவுத்தள உரையாடல்களுடன் ஒரு  பிணைப்பை உருவாக்கி அளித்ததே தொல்காப்பியத்தின் முதல் கொடை. இரண்டாவது கொடை ஒவ்வொரு திணைக்குமான தெய்வத்தை வகுத்தளித்தமை . உதாரணமாக குறிஞ்சி திணையை எடுத்துக்கொண்டால் ,எத்தனயோ  விதமான தெய்வங்கள் பலி கொடுத்து வணங்கப்படும் சித்திரங்கள் வருகிறது ,இந்த சின்னச் சின்ன பழங்குடி வணக்கங்களை தொகுத்து ,மேல்நிலையாக்கம் வழியே ஒரு மூல முதல் தெய்வமாக அனைத்தும் முருகனை சென்று சேரும் வகைமையை தொல்காப்பிய மரபே உருவாக்கி அளிக்கிறது . இந்த தனித்தன்மைகளில் கவனம் கொள்கிறது இந்த கட்டுரை .

 புனைவோ ஆய்வோ ஒரு நூலை இந்த வகைமையில்  இது கிளாசிக் என சொல்ல வைப்பது எந்த கூறு ?  அந்த நூல் எதைப் பேசுகிறதோ , அந்தப்புலதிலிருந்து அந்த நூலுக்கு வெளியில் நின்று , உங்களுடையதே ஆன ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு , அந்த நூலை அணுகிப் பார்த்தால் ,அந்த வினாவுக்கு அந்த நூல் தனது கட்டமைப்புக்குள் மறைபிரதியாகவேனும்  பொருத்தமான பதிலை வைத்திருந்தால், அது கிளாசிக் .உதாரணமாக இந்த நூலை நோக்கி ,நான் முன் வைத்த எனது கேள்வி , தொல்காப்பியம் வகுத்து வைக்கும் திணைகள் சார்ந்த வைப்பு முறை .

 முல்லை குறுஞ்சி மருத நெய்தலெனச் 

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே  [தபல். அக .5]

 பண்டைய மரபில் வைப்பு முறை மிக முக்கியமானது . இங்கே தொல்காப்பியம் சொல்லும் வைப்பு முறை காடு,மலை ,வயல் ,கடல் . தமிழ் நிலவியலின் படி வடவேங்கடம் முதல் தென் குமரி வரை எனக்கொண்டால் ,மலை ,லாடு,வயல், கடல் என்றுதான் வரவேண்டும் . ஆக எங்கே சிக்கல் ?  இந்த வினாவுக்கு விடையை ராஜ் கௌதமனின் நூல் தன்னுடைய கட்டமைப்புக்குள் கொண்டிருக்கிறது . அவர் வேட்டுவர் குடி சார்ந்த தனித்தன்மைகளை  ,அதன் தரவுகளை  சங்க இலக்கிய பாடல்கள் கொண்டு விளக்கும் போது ஒரு வலிமையான சித்திரத்தை முன்வைக்கிறார் .அது பண்டைய தமிழ் நிலத்தை சேர்ந்த குடிகளில் ,வேட்டுவர் குடி பிரதானமாக இரு வேட்டுவர் குடிகள் இணைந்த ஒன்று ,ஒரு வேட்டுவர் குடி ,வேங்கடமலைக்கு இந்தப்பக்கம் இருந்த காட்டை சேர்ந்த  குடி அவர்கள் பெயர் எயினர்.மற்றொரு குடி ,வேங்கட மலைக்கு அந்தப்பக்கம் இருந்த காட்டை செந்த குடி , அவர்களின் குடி பெயர் நீள் மொழி வடுக வேட்டுவர் .  [அன்று கன்னடம் தெலுங்கு இரண்டுமே வடுகர்தான்]  .இப்படி வேங்கட மலைக்கு அப்பால் இருந்த காட்டில் இருந்து இங்கு வந்து கலந்து விட்ட குடியாலும் ஆனதுதான் தமிழ் நிலம் . ஆம் வந்தேறி வடுகர்கள் அல்ல , பண்பாட்டு கலப்பின் ஒரு பகுதியாக வந்து கலந்து விட்ட வடுகர் . சங்கப் பாடல்கள் வழியே துலங்கும் இந்த சித்திரத்தை ,தொல்காப்பியத்தின் அந்த வைப்பு முறையுடன் ஒப்பு நோக்கினால் ,உண்மையில் தொல்காபியம் தமிழ் நிலத்துக்கு அளித்த கொடையின் ஆழம் விளங்கும் .

 இந்த நூலின் ஆய்வுப்புலத்துக்கு வெளியே ,இந்த நூலாசிரியர் சுட்டாத ஒரு முக்கியமான பண்பாட்டுக் கூறு ,தன்னியல்பாக எழுந்து வந்திருக்கிறது . சங்க காலத்தில் சாதி சொல்லி கீழ்மை செய்யும் நிலை இல்லை . பல்லவர் காலத்துக்குப் பிறகே மனுநீதி தலைமை கொண்ட பிறகே ,பிராமண மேலாதிக்கத்துக்குப் பிறகே இங்கே சாதிப் படிநிலை ,இழிவு செய்யும் கீழ்மைகள் நுழைகின்றன .சங்க கால தமிழ் சமூகத்தில் பண்பாட்டு கலப்பாக பிராமணர்கள் ஒன்று கலந்து விட்டனர் .இவை இந்த நூல் முன்வைக்கும் ஆய்வு தரவுகள் . இதற்க்கு அப்பால் இந்த அரசியல் மேட்டிமை அதிகார முகத்துக்கு அப்பால் பிராமனருக்கு இன்னொரு முகம் உண்டு . அது இந்த பாரதப் பெரு நிலத்தை ஊடும் பாவுமாக தனது ஆக்கப்பூர்வமான கருத்தியல் சரடு கொண்டு நெய்தது . பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மதுரா விஜயம் நூலில் ,மதுரையில் ஊருக்கு வெளியே , முப்புரி வேலில் மண்டை ஓடு செருகி வைத்து ,அத்தகு வேல்களால் வேலி அமைத்து அதற்குள் வாழ்ந்த கபாலிகர்கள் சித்திரம் வருகிறது . முப்புரி வேலில் செருகப்பட்ட அந்த மண்டை ஓடு,எலுமிச்சம்பழம் என்று மாற எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது .அந்த மாற்றத்தை பௌத்தமும் சமணமும் பிராமண தொகுக்கும் போக்கும் ,ஊடு பாவாக இந்த நிலமெங்கும் திரிந்து  உருவாக்கி அளித்த கொடை. இந்த நூலில் வேடர் குடியின் வாழ்வு எப்படிப்பட்டது என்று சித்தரிக்க ராஜ் கௌதமன் ஒரு பாடலை முன்வைக்கிறார் .அந்தப் பாடலில் வேடர்கள் ,பொன் வைத்திருப்பான் என நம்பி,வனத்தை கடந்து செல்லும்  ஒரு ஆளை கொலை செய்கிறார்கள் .அவனிடம் எதுவுமே இல்லை .அவன் ஒரு பிராமணன் .மேலதிகமாக நூலாசிரியர் கவனம் குறிக்காத ஒரு குறிப்பு அந்த பாடலில் வருகிறது .அது அந்த பிராமணன் ‘எதற்கோ ‘தூது செல்லும் முகமாக அந்த வனத்தை கடப்பவனாக இருக்கிறான் . இந்த குறிப்பின் வழியே  அரசியல் அதிகாரம் என்ற அசிங்கமான முகத்துக்கு வெளியே பிராமணர்கள் இங்கே தமிழ் நிலத்துக்கு செய்தது என்ன என்பதை ஒரு வாசகன் ,இந்த நூலின் கட்டமைப்பு வழியாகவே ஊகித்து விட முடியும் .

 கடலூர் சீனு

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

ராஜ் கௌதமனை அறிய…

ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும்பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

 

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

 

சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

 

சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

ராஜ் கௌதமனின் உலகம்

ராஜ் கௌதமனும் தலித்தியமும்

பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்?

— கேவிஆர்.

ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது.

பண்டைய படைப்புகளைப் பற்றி நாம் ஊகங்களால்தான் விவாதிக்க இயலும். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சாதாரணமாக ஒப்பிட்டால்கூட தொல்காப்பிய இலக்கணங்களை சங்கப்பாடல்கள் ஒரு பொருட்டாகவே கொண்டிருப்பனவல்ல என்பதையும் சொல்லப்போனால் ஆரம்பகால சங்கப்பாடல்களை ஒட்டியே தொல்காப்பியம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியும். தொல்காப்பியம் கண்டிப்பாக நற்றிணை குறுந்தொகை புறநாநூற்றுப் பாடல்களின் காலத்துக்குப் பிற்பட்டது. உதாரணமாக சங்கப்பாடல்களில் தொல்காப்பியத்தில் உள்ள ஒட்டகம் பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியத்தைவிட சங்கப்பாடல்களில் வடமொழிச்சொற்கள் மிகக் குறைவு.

மேலும் பிறப்பு அடிப்படையினாலான சமூகப் பிரிவினை சங்க காலத்தில் வலுவாக இருந்தது என்றாலும் இழிசினர் என ஒருவகை மக்களை வகுத்த முதல் மூலநூல் தொல்காப்பியமே. பேராசிரியர் ஜேசுதாசன் இதை மிக விரிவாகவே விளக்குவதுண்டு. கைக்கிளையும் பெருந்திணையும் [ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம்] இழிசினருக்கு [ஏவலர், வினைவலர்] உரியதென தொல்காப்பியர் வகுத்ததை சங்கப்பாடல்கள் ஏற்றிருந்தால் மாற்பித்தியாருக்கும் நக்கண்னையாருக்கும் எப்படி புறநாநூறில் இடம் வந்தது? கொல்லனும் குறவனும் எழுதிய நம் பெருமரபு எப்படி வினைவலனை இழிசினனாகக் கருதியிருக்க முடியும்?

சங்க இலக்கியங்களின் திணை, துறை பகுப்பு மட்டுமல்ல அகம், புறம் பகுப்புகூட மிகவும் ‘குத்துமதிப்பாகவே’ செய்யப்பட்டுள்லது. உதாரணமாக புறநாநூறில்வரும் மாற்பித்தியாரின் பாடல்களை மருதம் திணையில் குறுந்தொகையில் சேர்த்தால் என்ன இலக்கணப்பிழை வரும்? பல பாடல்கலை வரிகளை மட்டும்வைத்துப் பார்த்தால் திணை மாற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம்.

திணையை வகுத்த உடனேயே திணைமயக்கம் என்று ஒரு விதிமீறலை நம் மரபு அனுமதித்தது. இலக்கணத்தை வகுத்ததுமே ‘வழூஉ‘ என அதற்கு மாறானதையும் அங்கீகரித்தது. ‘பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளான’ சிலப்பதிகாரத்தின் வடிவம் அதற்கு முன் இல்லை. சிலப்பதிகாரமே அதை நம் மரபில் உருவாக்கியளித்தது. கம்பனின் சொற்புணர்ச்சி முறைகளின் பல்லாயிரக்கணக்கான புதியவழிகளை அதற்கு முந்தைய நூல்களில் காண முடியாது. ஒட்டக்கூத்தர் அதனாலேயே கம்பரைக் கவிஞராக ஏற்க மறுத்தார்.

அண்ணாமலைரெட்டியாரின் காவடிச் சிந்தையோ கோபால கிருஷ்ண பாரதியாரின் இசைப்பாடல்களையோ அக்காலப் பண்டிதர்கள் இலக்கியமாகவே கருதியதில்லை என்பதை உ.வே.சாமிநாதய்யரின் தன்வரலாறு காட்டுகிறது. அக்காலத்தில் இலக்கண சுத்தமான நூல்களாகக் கருதப்பட்டவை புராணங்களும் கலம்பகங்களும் அந்தாதிகளும்தான். அவற்றை இன்று நூலகங்களில்கூட காணமுடியாது. பாரதி எழுதியபோது அவர் அண்ணாமலை ரெட்டியாரையும் கோபாலகிருஷ்ண பாரதியையும் முன்னுதாரணமாகக் கொண்டார். பாரதி இலக்கணமறியாதவர் என்ற கடுமையான குற்றச்சாட்டு அக்காலத்திலிருந்தது. உ.வே.சாமி நாதய்யரே அக்கருத்தைக் கொண்டிருந்தார் என கி.வ.ஜகன்னாதன் ‘எனது ஆசிரியர்பிரான்’ நூலில் சொல்கிறார்.

இவர்களையெல்லாம் இன்று இலக்கணம் மீறாது எழுதியவர்கள் என்பீர்கள். காரணம் இன்று இலக்கணம் அவர்களையும் தழுவும்படி விரிந்துவிட்டது. இலக்கியம் கண்டதை இலக்கணம் ஏற்றுவிட்டது. இன்று எழுதுபவர்களை இலக்கணம் மீறுவதாகக் குற்றமும் சாட்டுவீர்கள்.

இரு கதைகளை நினைவூட்டுகிறேன். ஒன்று நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் கதை. திருவிளையாடல் படம் மூலம் ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய சித்தரமே இன்று நம் மேடைப் பேச்சாளர் மனதில் உள்ளது. ஆனால் நக்கீரனின் மூடத்தனத்தை தெளியவைக்கவே இறையனார் அகப்பொருளுரையை இயற்றினார் என்பதே உண்மையான கதை. காதலில் கனிந்த மனத்தைப் பொருத்தவரை கூந்தலுக்கு மட்டுமல்ல இப்பூமிக்கே இயற்கை நறுமணம் வந்துவிடும் என்ற தெளிவை அதன்மூலம் வரட்டு இலக்கணவாதியாகிய நக்கீரனுக்கு தென்னாடுடைய தமிழ்முதல்வன் சொல்லிக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த பரவசநிலையை கவிதை பறந்து சென்று தொடும்போது மெல்ல நகர்ந்தாவது இலக்கணம் அங்கே வந்துசேர்ந்தாக வேண்டும் என்பதே அகப்பொருள்கண்டவனின் கட்டளை.

இன்னொரு கதை கம்பனைப் பற்றியது. துமி என்ற சொல்லை தன் கவிதையில் கம்பன் கையாண்டிருப்பதை ஒட்டக்கூத்தர் கண்டிக்கிறார். அப்படியொரு சொல்லே தமிழில் இல்லை என்கிறார். உண்டு, அது மக்கள்மொழி என்கிறான் கம்பன். எங்குமே அப்படி ஒரு சொல் இல்லை என்று ஒட்டக்கூத்தர் மீண்டும் சாதிக்கிறார். உண்மையில் கம்பனின் நா அறியாமல் சொன்ன புதிய சொல் அது. அன்றுமாலை சோழன் மாறுவேடத்தில் நகருலா செல்லும்போது சாலையோரத்தில் ஒரு இடைச்சி வெண்ணை கடையும்போது அருகே அமர்ந்த குழந்தையிடம் ‘தள்ளிப்போ துமி தெறிக்கும்’ என்று சொன்னதை சோழன் கேட்டான். அச்சொல் மக்கள் சொல்லே என உணர்ந்து காவியத்துக்கு அனுமதி கொடுத்தான். உண்மையில் தன் புதல்வனின் சொல் பிழைக்கலாகாது என கலைமகளே முதற்சொல்லெழுதிய யானைமுக மருகன் துணையுடன் வந்து அப்படிச் சொன்னதாகக் கதை.

இக்கதை இரு பாடங்களை அளிக்கிறது.

அ] மாகாவியத்துக்குக்கூட இலக்கணமே இல்லையென்றாலும் மக்கள்மொழி போதும்.

ஆ] கவிஞன் படைப்பூக்க நிலையில் சொல்லிவிட்டால் கலைமகளே அதை ஏற்றாக வேண்டும்.

இவ்விரு கதைகளையும் நான் பல சம்ஸ்கிருத அறிஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். சம்ஸ்கிருத அறிஞர் ஏ.பி.சங்குண்ணி நாயர் சொன்னார், சம்ஸ்கிருதத்தில் குணாத்யனுக்கும் காளிதாசனுக்கும் பிறகு காவியத்தில் கலைமகள் தலையீடு மிகவும் குறைந்துவிட்டது; அவள் வந்திருந்தால் மண்டையில் குட்டி, காவியத்தை மண்ணிலும் மனதிலும் தேடு, ஏட்டிலும் இலக்கணத்திலும் தேடாதே என்று சொல்லியிருப்பாள் என்று.

இலக்கணம் எழுதியவற்றால் ஆன விதி. எழுதப்படும் ஆக்கத்தை அது ஒருபோதும் முற்றாகக் கட்டுப்படுத்தாது. கட்டுக்கு உட்பட்டு எழுதப்படுவது இலக்கியமேயல்ல. நேற்றின் தொடர்ச்சியே இன்று, ஆனால் நாளையின் ஒளி கொண்டதும் கூட. பேரிலக்கியம் இலக்கணத்தை உருவாக்கக் கூடியதே ஒழிய இலக்கணத்தால் ஆளப்படுவதல்ல.

இன்றைய இலக்கணவாதிகளை வெண்கலைமகளும் செம்பொன்மேனியனும் கைவிட்டுவிட்டார்கள் போலும். இல்லையேல் கனவிலாவது வந்து சொல்லியிருப்பார்கள், முழக்கோல் கொண்டு இலக்கியத்தை அளக்கமுடியாதென.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1


 
Save
Share
 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை ஓடவிட்டுக்கோண்டிருந்தார். ஏதோ ஒரு தமிழ் நாட்டுப்புறப்பாடல் ஒலித்தது. அக்காலத்தில் சொந்தமாகவே பாடி பதிவுசெய்து ஒலிநாடாவெளியிடும் மோகம் பரவலாக இருந்தது.

நல்ல கரடுமுரடான குரல், உரத்த உச்சகதிக்குரல். தப்பு அல்லது முழவு போன்ற ஏதோ வாத்தியத்தின் தோழமை. நாஞ்சில்வட்டாரவழக்கில் அமைந்த பாடல். அந்த ஓட்டுநர் குமரிமாவட்டத்தின் ஏதேனும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவருக்கு அந்தப்பாடல் வழியாக அவரது நிலமும் மனிதர்களும் மீண்டுவருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

பாடல் வரிகளை கவனித்தேன். காதல்தாபம்தான். காதலியின் உடலில் உள்ள நகைகளாக தன்னை காண்கிறான் காதலன்

கழுத்தில  ஆடுறேனே கண்ணம்மா- உன்
கவையிலே வளையறேனே கண்ணம்மா

நான் புன்னகைசெய்வதைக் கண்டு பாலகிருஷ்ணன் ”அந்த வரி என்ன?”என்றார். நான் விளக்கினேன். காதலியின் கழுத்தில் மாலையாக ஆடுகிறேன். அவளுடைய மார்புகளின் இடுக்கில் உள்ள வளைவில் நானும் வளைகிறேன். ”ஆ!”என்றார் பாலகிருஷ்ணன். பின்னர் ”நாட்டுப்புறப்பாடலின் செவ்வியல் கலந்தால் அது பிரிந்துதான் நிற்கும். ஆனால் சரியான உணர்ச்சிவேகத்துடன் அந்தக்கலவை நிகழ்ந்தால் இதைப்போல மிக அபூர்வமான ஓர் அழகு உருவாகும்” என்றார்.  

மதுகக்டைக்குப் போனதும் நான் அந்தவரியை எப்படி செவ்வியல் பண்புள்ளது என்று சொல்ல முடியும் என்றேன். அந்தப்பிரிவினை குத்துமதிப்பாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்று சொன்னார் பி.கெபாலகிருஷ்ணன். ஒரேவரியில் செவ்வியல்பண்பு என்றால் என்ன என்று விளக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஒரு படைப்பை கூர்ந்து கவனித்து சிந்தனைசெய்தும் கற்பனைசெய்தும்  ரசிகன் தன்னுடைய மனதில் வளர்த்து எடுத்தால் மட்டுமே அதன் அழகு கிடைக்கும் என்றால் அதுதான் செவ்வியல் பண்பு.

அப்படியானால் நாட்டார் பண்பை இதற்கு நேர் எதிரானதாகச் சொல்லலாம். கேட்கும் அனைவரிடமும் கேட்ட அக்கணத்திலேயே நேரடியாக உரையாட ஆரம்பிப்பதே நாட்டார் பண்பின் இயல்பு. அதில் நுண்பொருள் தளங்கள் இல்லை. அதற்கு ரசிகனின் நுண்ணுணர்வும் தேவையில்லை. நுண்ணுணர்வுள்ள ஒரு ரசிகன் அதன் வழியாக மேலும் மேலும் நகரமுடியக்கூடும். ஆனால் அது தன்னியல்பில் அப்பட்டமானது.

தொல்பிரதிகளைப் புரிந்துகொள்ள ‘நாட்டார் X செவ்வியல்’ என்ற பிரிவினையை  ஒரு நல்ல கருவியாக நாம் பயன்படுத்தலாம். எல்லா கருவிகளும் அக்கருவிகளின் எல்லைக்குட்பட்டவற்றையே கையாளமுடியும் என்ற  எச்சரிக்கையுடன் நாம் இதைச்செய்யவேண்டும். முதல்முற்றாக வகுத்துவிட எப்போதுமே முயலக்கூடாது.

செவ்வியல் என்பதன் ஐந்து அடிப்படை இலக்கணங்களை நான் இவ்வாறு அளிப்பேன்.

1. செவ்வியலில் ஆசிரியன் வலுவாக இருப்பான். அப்படைப்பின் வழியாக நாம் ஓர் ஆசிரியனின் இருப்பைச் சென்று அடைவோம் .அவன் அப்படைப்பில் நேரடியாக வெளிபப்ட மாட்டான். அவனுடைய உணர்ச்சிகள் வெளிபப்டாது. ஆனால் அவனுடைய தனித்தன்மை, அவனுடைய ஆளுமைத்திறன் அப்படைப்பில் இருக்கும்.

2. செவ்வியலை ரசிக்க தேர்ச்சிபெற்ற ரசிகன் அல்லது வாசகன் தேவை. ஒரு சமூகம் ரசனையிலும் வாசிப்பிலும் தொடர்ச்சியான பயிர்சியை தன் சமூகத்துக்கு அளிப்பதன் வழியாகவே செவ்வியலை ரசிப்பதற்கான சூழல் உருவாகிறது

3. செவ்வியலுக்கு திட்டவட்டமான வடிவ வரையறை இருக்கும் .செவ்வியல் அவ்வடிவத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்

4. செவ்வியல் ஒரு சமூகத்தின் கனவையும்  யதார்த்தத்தையும் சாராம்சப்படுத்தவும் பொதுமைப்படுத்தவும் முயலும்

5. செவ்வியல் எப்போதும் நுண்மைக்கு முயன்றபடி இருக்கும். ஆகவே ஒரு கட்டத்தில் பொதுவான விஷயங்களை நிரந்தரமாக ஆக்கிவிட்டு அதில் நுண்ணிய சுவைபேதத்தை உருவாக்குவதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தும்
 ஒரு சமூகத்தின் தொல்பிரதிகள் பெரும்பாலும் நாட்டார் பிரதிகளாகவே இருக்கும். அல்லது நாட்டார்த்தன்மை மேலோங்கிய பிரதிகளாக இருக்கும். நாட்டார்கலைகள் வழியாக ஒருசமூகம் இலக்கியத்த்துக்கும் நுண்கலைகளுக்கும் வந்த பின்னர்தான் மெல்ல மெல்ல செவ்வியல் அங்கெ உருவம் கொள்கிறது. நாட்டார் கலைகளின் வழியாக திரண்டு வரும் சில சாராம்சங்கள் விரிவான விவாதக்களத்தில் செம்மைப்படுத்தப்பட்டு செவ்வியலின் அடிப்படைகளாக ஆகின்றன.

ரிக்வேதத்தை ஒரு நாட்டார் பிரதி என்று சொல்லலாம். வேறு சொற்களில் அதை பண்படாபிரதி என்றும் சொல்வதுண்டு. மிகத்தொன்மையான ஒரு சமூகம் தன் பண்பாட்டுநினைவுகளை மொழிவடிவில் அழியாமல் பாதுகாக்கமுடிந்ததனால் அவை நமக்குக் கிடைக்கின்றன. ரிக்வேதத்தை ஒரு நூல் என்று சொல்வதைவிட ஒரு தொகுப்பு என்றே சொல்லவேண்டும்

ரிக்வேதத்தின் ஆரம்பகாலச் செய்யுட்கள் மிகநேரடியான பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனால் அதன் பிற்பகுதிகள் மெல்லமெல்ல செவ்வியல்த்தன்மை கொள்கின்றன. அதன் பத்தாவது மண்டலம் ஒரு பெரும் செவ்வியல் படைப்பா¡க உள்ளது. அந்த பரிணாமத்தை நாம் ரிக்வேதம் முழுக்க காண்கிறோம். வேதங்களுக்குப் பின்னர் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ள எல்லா ஆக்கங்களும் செவ்வியல்தன்மை கொண்டவைதான்.

தமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்கு கிடைக்கும் ஆகப்பழைய இலக்கியப்பிரதி என்றால் அது நற்றிணை,புறநாநூறு, குறுந்தொகை ஆகிய மூன்றும் ஆக இருக்கலாம். [தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும்] இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகி பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.

சமீபத்தில் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் முடிவுகள்கூட இந்த எண்ணத்தை உறுதிசெய்வதாகவே உள்லன. சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப்பரவலாக இருந்ததை காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்விகொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.

இன்னொரு ஆதாரத்தையும் சொல்லலாம். தமிழ் மரபின் புராதனமான சிற்ப வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. தென்றிசை முதல்வன் இன்று சிவபெருமானின் ஒரு தோற்றமாகக் கருதப்பட்டாலும்கூட அது ஆசிரியன் என்ற உருவகத்தின் சிலைவடிவம் என்பதே உண்மை. ஆலமர்ச் செல்வனாகிய தென்றிசைமுதல்வன் ஆசிரியன் என்பதை முதல் இறைவடிவாகக் கோண்ட ஒரு சமூகத்தின் நினைவு

ஆனால் உலகமெங்கும் நாம் செவ்வியலாக்கத்தையும் தத்துவமயமாக்கத்தையும் பிரித்துப்பார்க்க முடிவதில்லை. ஒரு சமூகம் தன் வளர்ச்சிப்போக்கில் சில தரிசனங்களைக் கண்டுகொள்கிறது. அவற்றை தர்க்கரீதியாக வகுத்துக்கோண்டு பொதுமைப்படுத்தி தத்துவமாக ஆக்கிக்கொள்கிறது. அந்தத் தத்துவங்கள் அந்த சமூகத்தின் அற- ஒழுக்க அடிப்படைகளை உருவாக்குகின்றன. இந்தப்போகின் உடன்விளைவாகவே செவ்வியலாக்கம் நிகழ்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. செவ்வியலாக்கம் என்பது தத்துவவளர்ச்சியின் வழிகாட்டி சக்தி என்று நான் சொல்வேன்.

நாம் சங்க காலகட்டத்தில் செவ்வியல் முழுமையைப் பார்க்கிறோம். அப்படியானால் அக்காலகட்டத்தின் தத்துவங்கள் என்ன? நமக்கு பழந்தமிழ் மரபில் இருந்து  உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்,  கீதை, சாங்கியகாரிகை, வைசேஷிகசூத்திரங்கள் போன்ற முழுமையான தத்துவ நூல் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி இருந்த நூல்களைப்பற்றிய தகவல்களும் இல்லை. அகத்தியம். ஐந்திரம் போன்ற இன்று கிடைக்காமல்போன நூல்கள் தத்துவ நூல்களே என்று சிலர் சொல்வதுண்டு.

இன்றையநிலையில் சங்க செவ்வியலை உருவாக்கிய தத்துவ வளர்ச்சிப்புலம் ஏது என்ற வினா மிக முக்கியமானது. அதற்கான பதிலின் அடிப்படையிலேயே நாம் இந்திய தத்துவ ஞானத்தின் பரிணாம சித்திரத்தில் தமிழ் மரபின் பங்களிப்பு என்ன என்பதை வகுக்க முடியும்

 [ 2 ]

 இந்த விவாதத்தில் நான் முனைவர் செ.சாரதாம்பாள் எழுதிய சங்கசெவ்வியல் என்ற ஆய்வுநூலை பரிந்துரைக்கிறேன். மரபான ஓர் ஆய்வுப்பாதையில்செல்லும் இந்த நூல்  தமிழண்ணல் அவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடாகும். இதில்செவ்வியல் என்றால் என்ன என்ற மேலைநாட்டு நோக்குகள் ஓர் அத்தியாயம் முழுக்க விரிவாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன.

சாரதாம்பாள் செவ்வியலுக்கு மேலைநாட்டில் சொல்லப்பட்ட வரையறைகளை இவ்வாறு அளிக்கிறார். கீழ்க்கண்ட இயல்புகளினால் ஒரு படைப்பை நாம் செவ்வியல் எனலாம்.

1  கிரேக்க உரோம இலக்கியத்தின் தொடர்பு இருப்பது

2  ஓர் இலக்கிய மரபில் முதன்மைத்தன்மையுடன் இருப்பது

3  தொன்மை

4  விரிவான ஒரு பாரம்பரியம் இருப்பது

5  பல்வேறுபட்ட பண்பாட்டுக்கூறுகள் இயைந்துசெல்லும் தன்மை

6  படைப்பாளியின் அந்தரங்கக் குரல் நேரடியாக வெளிப்படாமலிருத்தல்

7  ஏதோ ஒருவகையில் உலகளாவிய ஒரு தன்மை இருப்பது

8  இலக்கியகாலகட்டத்தின் ஒரு பகுதியின் பிரதிநிதியாக இருப்பது

9  அதன் கூறுகளுக்குள் தெளிவான காரணகாரிய தொடர்பு இருப்பது

10 உருவம் உள்ளடக்கம் இரண்டும் பொருந்தி வருதல்

11 இலக்கிய உத்திகள் இருத்தல்

12 விரிவான கற்பனைத்தன்மையுடன் இருப்பது, கற்பனையைக் கோருவது

13 திரும்பத்திரும்ப ஒன்றைச்செய்து மேம்படுத்தும் தன்மை

14 பெரும் கதைமாந்தர்களை உருவாக்கும் தன்மை

16 பிறகுவரும் படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்தல்

இவற்றில் எல்லா அம்சங்களும் சங்க இலக்கியங்களுக்கு பெரிதும் பொருந்திச்செல்கின்றன. ஒன்றைத்தவிர. காரணகாரிய தொடர்பு. காரணகாரிய தொடர்பு என்னும்போது அதை எளிய விளக்கமாக புரிந்துகொள்ளக் கூடாது. பிரபஞ்ச நிகழ்வை, அதன் உட்கூறுகளை முழுமையாக விளக்கும் தன்மை என்று அதைச் சொல்லவேண்டும். வாழ்க்கையை, மரணத்தை, சரிதவறுகளை, அறத்தைப் பற்றிய திட்டவட்டமான விளக்கம்.

சங்க இலக்கியத்தை நாம் படிக்கும்போது அத்தகைய ஒரு சீரான தத்துவ விளக்கத்தைக் காணமுடிவதில்லை. தனிவெளிப்பாடுகளாக உள்ள கருத்துக்களை இணைத்து நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் நமக்கு காப்பியங்கள் இல்லை. சங்கம் மருவியகாலகட்டத்திலேயே காப்பியங்கள் உருவாகின்றன. சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையினால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்று சொல்வது இன்னொரு விளக்கம்

மூன்று பெரும் காப்பியங்களிளும் திட்டவட்டமாகவே தத்துவார்த்தமான காரணகாரிய உறவு விளக்கப்பட்டிருக்கிறது. சிறந்த உதாரணம் சிலப்பதிகாரம். அதன் பாயிரத்திலேயே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்’ அதன் தத்துவ விளக்கமாகச் சொல்லப்பட்டுவிட்டது. காப்பியம் முழுக்க எல்லா தருணங்களிலும் கவுந்தி, மாடலமறையவன் போன்றவர்கள் மூலம் தத்துவ விளக்கம் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பௌத்த சமண தத்துவங்களே நம் காப்பியங்களுக்கு அடிப்படையாக  ஆயின.

சங்க காலத்தில் தத்துவ விவாதங்கள் நடந்தனவா? ரிக்வேதத்தை நோக்கும்போது அக்காலத்தில் பலவகையான தத்துவ விவாதங்கள் நடந்ததை நாம் பல்வேறு செய்யுட்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. ஆனால் சங்க காலத்தில் த்துவ விவாதத்துக்கான முறையான அமைப்புகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அரச சபைகளுக்கு வரும் புலவர்கள் அறவுரை கூறும் காட்சிகளை நாம் புறநாநூறில் காண்கிறோம். அவர்கள் நடுவே முரண்பட்டு விவாதிக்கும் முறைமை இருந்தமைக்கு ஆதாரம் இல்லை.

புறநாநூறில் உள்ள பொருண்மொழிக்காஞ்சி திணை பொதுவாக சிந்தனைகளை முன்வைக்கிறது. அதைச்சார்ந்த பல்வேறு தனிச்செய்யுடகளை தொகுத்து ஒரு தத்துவப்போக்கை ஊகிக்கும் வகையிலான ஆய்வுகள் தொடர்ச்சியாக தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் புறநாநூறில் உள்ள இப்பகுதியை தத்துவார்த்தமாக அணுகி விவாதிக்கும் போக்கு பொதுவாக நம்மிடம் குறைவே.

சங்கம் மருவிய காலகட்டத்தில் உருவான பெருங்காப்பியங்களில் மிக விரிவான தத்துவவிவாதங்கள் உள்ளன. அந்த தத்துவ விவாதங்கள் நிகழ்வதற்கான சபைகள் மற்றும் விவாதமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.  அது திடீரென்று நிகழ்ந்துவிடாது. ஆகவே சங்ககாலம் என நாம் வகுக்கும் ஐந்து நூற்றாண்டுக் காலகட்டத்தின் இறுதியில் பௌத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றி விரிவான தத்துவ விவாதங்களை உருவாக்கிவிட்டிருந்தன என்று ஊகிக்கலாம்.

இந்த நோக்கில் அணுகினால் சங்கப்பாடல்களில் உள்ள தத்துவக்கருத்துக்கள் சமண பௌத்த மதங்களின் ஆரம்பகால வடிவங்களால் உருவாக்கபப்ட்டவையாக இருக்கலாம். சமண மதத்தின் முன்னோடி வடிவமான ஆசீவகம் தமிழகத்தில் அழுத்தமாக வேரூன்றியிருந்தது என்று வலுவான ஆய்வுத்தரப்பு உண்டு. சங்ககால தத்துவ நோக்கின்  உச்சம் என்று கருதப்படும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஒரு முழுமையான ஆசீவக கொள்கைவிளக்கம் என்பதைக் காணலாம்.

இதற்கும் முற்காலத்திலேயே தமிழ்நாட்டில் செவ்வியல் உருவாகிவிட்டிருந்தது. அந்தச் செவ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த தத்துவக்கருத்துக்கள் என்ன? அவை வெளியே இருந்து வந்த சமண – பௌத்த கருத்துக்களுடன் விரிவான உரையாடலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே காப்பியங்களில் நாம் காணும் தத்துவ வளர்ச்சி நிகழ்ந்தது என்று ஊகிக்கலாம். அந்த தத்துவக்கருத்துக்கள் என்ன? அவற்றின் பரிணாமம் என்ன?

 10-3- 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆர்றிய உரை: முதல் பகுதி



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

 

[  3  ]

தொன்மையான சம்ஸ்கிருத மரபைப் பார்க்கும்போது விவாதம் அதன் அடிபப்டை இயல்பாக இருப்பதைக் காணமுடிகிறது. ‘சதஸ்’ என்னும் சபை எப்போதுமே முரண்படும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோத வழியமைக்கும் இடமாக இருந்துள்ளது. இதன் விளைவாக இரண்டு அறிவுத்துறைகள் சம்ஸ்கிருதத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன. ஒன்று, சொல்லாராய்ச்சி செய்யும் மீமாம்சை. விவாதத்துக்கான பொதுத்தளமான மொழியை துல்லியமாக வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டதனால்தான் இவ்வளர்ச்சி. அடுத்ததாக விவாதத்தின் மெய்காணும்முறைகளை வகுத்துரைக்கும் நியாய சாஸ்திரம்.

இந்த இரு துறைகளும் தொன்மையான கிரேக்க மரபிலும் பெரும் வளர்ச்சி கொண்டிருந்ததைக் காணலாம். காரணம் கிரேக்க மரபும் சம்ஸ்கிருத மரபைப்போலவே அடிப்படையில் உரையாடல்தன்மை விவாதத்தன்மை கொண்டது. ஆனாலும் கிரேக்கமரபின் ஆகப்பெரிய சாதனையாக இருப்பது அது தர்க்கவியலை வளர்த்து எடுத்த விதம்தான்.   

சங்ககாலத்துத் தமிழ் மரபைக் கவனிக்கும்போது முதலில் நாம் காணவேண்டியது அன்று தத்துவ விவாதமோ அதற்கான அமைப்போ இருந்ததாக ஆதாரம் இல்லை என்பதே. அதே சமயம் அறிஞர்களும் கவிஞர்களும் கூடியிருந்து அறிவாய்வுசெய்யும் அமைப்புகளைப் பற்றிய பல குறிப்புகள் சங்கப் பாடல்களில் உள்ளன.

‘தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

என்று மதுரைக்காஞ்சியிலும் [761-]
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலையிய பலர் புகழ் சிறப்பின்
புலவர்

என்று புறநாநூறிலும் [ 78] புலவர் சபைகள் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய கல்வியாளர் சபைகளையே தொல்காப்பியம் முதலிய நூல்களில் ‘என்ப’ என்றும் ‘என்மனார் புலவர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது என்று ஊகிக்கலாம்.

ஆக அவை இருந்திருக்கிறது, அறிவோர் இருந்திருக்கிறார்கள். ஆனால் தத்துவ விவாதங்கள் நடந்தன என்று மட்டும் சொல்ல முடிவதில்லை. இந்த தனித்தன்மையைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருக்கிறது.

சங்ககால வாழ்க்கையைப்பற்றி அப்பாடல்கள் அளிக்கும் சித்திரங்க¨ந்த் தொகுத்துக்கோண்டும் அவ்வப்போது நேரடியாக வரும் கருத்துக்களை வைத்தும் சங்ககாலத்தின் தத்துவ நிலைபாடு என்னவாக இருந்திருக்கமுடியும் என்று ஊகிக்கலாம்

சங்க காலப் பாடல்களில் நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டியது  அக்காலத்தில் நிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம்.  சங்க காலத்தில் ஆயர்களும் பரதவர்களும் நாடோடிகளும் இருந்தார்கள் என்றாலும் அடிபப்டையில் அது ஒரு வேளாண்மைச் சமூகம் என்று சொல்லல்லாம். வேளாண்மைச் சமூகத்தில் நிலம் எப்போதுமே முக்கியமானது. மேய்ச்சல் சமூகங்களைப்போல அவர்கள் நிலத்தை விட்டுவிட்டுச் செல்வதில்லை. அவர்களுக்கு வாழ்விடம் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. அது பிரபஞ்சத்திலிருந்து அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு துளி

.ஆகவே  ஊர் நீங்குதல் என்பது அவர்களைப்பொறுத்தவரை ஒருவகை மரணம். பூம்புகாரைச் சொல்லும்போது ‘பதியெழு அறியா பழங்குடி கெழீஇய என்று சொல்கிறது சிலப்பதிகாரம். ஊரை விட்டு விலகுதல் என்பது ஒரு இழிவாக அச்சமூகம் கருதியிருக்கிறது. நிலத்தை ஐந்துவகையாகப் பிரிந்த்து அதன் வழியாக இறைவனையும் மனிதர்களையும் மானுட வாழ்க்கையையும் ஐந்தாகக் கண்டது சங்க கால தமிழ் மனம்.

தமிழில் நிலம் உலகம் என்ற பொருளில் பயின்றுவருகிறது. நிலம் என்பது தத்துவம் கொள்ளும் விரிவான பொருளில் இயறகையே ஆகும். சங்ககாலப்பாடல்கள் இயற்கையின் சித்திரங்களையே தங்கள் கவித்துவத்துக்கான ஆதாரமாகக் கொண்டவை. இயற்கையே மனிதமனமாக தோற்றம் அளிக்கிறது சங்கப்பாடல்களில். துயரிலும் கலையிலும் நீங்காது கூடவே வரக்கூடிய இயற்கையை நாம் சங்கப்பாடல்களில் காண்கிறோம். சங்ககாலத்து விழாக்கள் இறைவனுடன் தொடர்புடையவையாக இல்லை. இயற்கையுடன் தொடர்புடையவை அவை. புதுப்புனலாட்டு, கொன்றை பூத்தல் போன்றவையே விழாவாக ஆகின்றன.

இயற்கை தமிழரின் முக்கியமான வழிபடுபொருள் என்பதை இன்றும் தமிழ்நாட்டு மதவழிபாட்டு முறைகளைக் கொண்டு சொல்லிவிடமுடியும். நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய கல்பதிட்டைகளாக இருந்திருக்கின்றன. அங்கிருந்து தான் அவை பேராலயங்களாக எழுந்தன. எல்லா கோயில்களுக்கும் தலவிருட்சங்கள் உள்ளன. நெல்லை என்றால் அது மூங்கில்காடுதான். வணங்கபப்ட்ட மூங்கில்காடுதான் நெல்லையப்பனாகி நெல்லை என்ற நகரமாகி வளர்ந்திருக்கிறது. ஆகவே தொன்மையான இயற்கை வழிபாட்டில் இருந்தே தமிழர்களின் தத்துவநிலைபாடு உருவாகி வந்திருக்கும் என்று கூறலாம்.

நாடனாலும் காடானாலும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று புறநாநூறில் ஔவையார் கூறுகிறார். நிலத்தை வைத்து வகுக்கப்பட்ட மானுடவாழ்க்கையின் நெறிகளுக்கு நிலத்தில் இருந்தே ஆதாரங்கள் கொள்ளப்பட்டிருக்கலாம். அதில் ஒன்றே தமிழர் சிந்தனையில் ஆழமாக வேரூன்றிய மறுபிறப்புக் கோட்பாடு.றிந்திய தத்துவ மரபின் தொல்காலத்தில் மறுபிறவிக் கோட்பாடு அழுத்தமாக இருந்தது என்று சொல்ல முடியாது. வேதகாலத்தில் அதில் ஒலிக்கும் பல குரல்களில் ஒன்றாகவே மறுபிறப்புசிந்தனையும் இருக்கிறது.

இதிகாசங்களை எடுத்துக்கொண்டால்கூட மறுபிறப்புக்கோட்பாடு வலுவாக இருப்பதகாச் சொல்ல முடியாது. இதிகாசங்களின் மையக்கதாபாத்திரங்களின் முற்பிறப்புகள் விரிவாகச் சொல்லப்பட்டதில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மையமுக்கியத்துவம் இல்லாத மறுபிறப்புக்கதைகள் பெரும்பாலும் பிற்காலச் சேர்க்கைகளாக இருக்கலாம் என்று சொல்பவர்கள் உண்டு. பொதுவாக மறுபிறப்புக் கோட்பாடு இந்திய தொல்பழங்கால நம்பிக்கைகளில் இருந்து மையத்தத்துவத்துக்கு வந்த ஒன்று.

டி.டி.கோஸாம்பி மறுபிறப்புக் கோட்பாடு என்பது வேளாண்சமூகங்களின் அடிப்படை பிரபஞ்ச உருவகங்களில் ஒன்றாக உள்ளது என்கிறார். இதை அவர்கள் பயிர்சுழற்சியை உருவகமாகக் கொண்டு அடைந்திருக்கலாம். பயிர் கதிர்முற்றி பழுத்து மறைகிறது. ஆனால் விதையிலிருந்து அது மீண்டும் எழுந்து வருகிறது. அதற்கு அழிவில்லை. அது ஒரு நிரந்தரமான சுழற்சி அதுபோன்றதே மானுடவாழ்க்கையும் என்பதே அந்த தரிசனம்.

இந்திய நிலப்பரப்பில் இருந்த பல்வேறு தொல்குடிகளில் இந்த இரு சிந்தனைப்போக்குகளும் வலுவாக இருந்து அவை மையப்போக்குக்கு சென்று சேர்ந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க முடியும். இயற்கை வழிபாடே ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியத்தின் அடிபப்டையாக அமைந்தது. நிலத்தை இயற்கையாகவும் இயற்கையை பிரம்மாண்ட வடிவில் பிரபஞ்சமாகவும் கண்டதே சாங்கியமாக ஆகியது. சாங்கியத்தின் மைய உருவகமே ஆதி இயற்கை [மூலப்பிரகிருதி] என்பதுதான். பிறவிச்சுழற்சி என்ற கருதுகோளும் அவ்வாறு மைய  விவாதத்திற்கு சென்றுசேர்ந்தது.

தமிழ்ச் சிந்தனை மரபின் அடிப்படைத்தனிச்சிறப்பாக இருப்பது அகம் -புறம் என்ற அதன் பிரிவினைதான். பின்னர் இந்த கருதுகோள்  அகப்புறம் புறப்புறம் என்று மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் அகம் புறம் என இரண்டாக பிரித்தது தமிழ் மரபு. அகம் நம் அகத்தில் நிகழ்கிறது. உணர்ச்சிகள் கனவுகள் எண்ணங்கள். ஆனால் அகம் நிகழ புறத்தின் பருப்பொருட்கள் தேவைப்படுகின்றன. சங்கப்பாடல்களைப் பார்த்தால் மிக நுண்மையான இயற்கைச் சித்திரங்கள் மனத்தைச் சொல்ல முற்படும் அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.

அதேபோல புறம் என்பது மானுட உணர்ச்சிகளினால் ஆன புறவாழ்க்கையாக உள்ளது. பின்னர் புறம் என்ற கருதுகோளை அறமும் பொருளும் இணைந்த ஒன்றாக தமிழ் மனம் பிரித்துக்கொண்டிருக்கிரது என்று சொல்லலாம். புறம் என்று சொல்லப்படும் பிரிவினையில் பொதுவாக இயற்கைச் சித்திரங்களை விட நிகழ்வுகளும் உணர்வுகளும்தான் அதிகமாக உள்ளன. வெளியே நாம் காண்பது அகத்தையே என்றும் அகமாக தோன்றுவது புறமே என்றும் புரிந்துகொண்ட ஒரு தரிசனத்தின் வெளிப்பாடுகளே சங்கப்பாடல்கள்.

இந்தமூன்று அடிப்படைகளில்தான் சங்ககாலத்தின் தத்துவம் அமைந்திருந்தது என்று ஊகிக்கலாம். சங்ககாலத்தில் பேசப்பட்ட காதல் மானம் வீரம் மூன்றுமே இந்த பிரபஞ்ச உருவகத்தின் மீதுதான் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் தொன்மையான இந்து தத்துவப் பண்பாட்டுக் கூறுகளின் நேரடிச் செல்வாக்கு நமக்குக் கிடைக்கும் ஆகப்பழைய சங்கபாடல்களிலேயே உள்ளது. வேத-வேதாந்தக் கருத்தியலுடன் உரையாடி வளர்ந்த நிலையில் இருக்கும் சிந்தனைகளாகவே நமக்கு சங்ககால பாடல்கள் காணக்கிடைக்கின்றன. வைதிகமரபில் இருந்து பெற்ற அறம்பொருளின்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்கள் [வாழ்க்கைச்சாரங்கள்] நம் சிந்தனையை பின்னர் வடிவமைத்தன.

அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றுக பெரும!

[புறம் 28]

என்று புரநாநூறு குறிப்பிடுகிறது. பின்னர் திருக்குறள் வழியாக இந்த தத்துவக் கட்டுமானம் தமிழ்ச்சிந்தனையின் அடிப்படையாக ஆகியது.

இங்கே கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அறமும் பொருளும் இன்பமும் மட்டுமே புருஷார்த்தங்களாக உள்ளன என்பது. இதற்கு இரு விளக்கங்கள் உள்ளன. அறமும்பொருளும் இன்பமும் அமைந்தால் அதுவே வீடுபேறு என்ற கருத்து தமிழுக்கு உரியது என்பது ஒன்று. வீடுபேறை முக்கியமான புருஷார்த்தமாக முன்வைக்கும் கோணம் வேதகாலத்துக்குப் பின்னர் தரிசனங்களின் காலகட்டத்தில்தான் உருவாகி வந்தது என்பதும், அதற்கு முன்னரே தமிழ்ப்பண்பாட்டுடன் வேதநெறியின் உரையாடல் நடந்துவிட்டது என்பது இன்னொன்று

வேதமரபுக்குப் பின்னர் தமிழ்ப்பண்பாட்டுடன் உரையாடியது ஆசீவகம்.பின்னர் சமணம். அதன்பின்னர் பௌத்தம். இந்த உரையாடல்களின் விளைவாக தமிழில் விரிவான தத்துவவிவாதங்கள் உருவாயின.  விளைவாக காப்பியங்கள் பிறந்தன

 [  4  ]

இந்தக் கோணத்தில் யோசிக்கும்போது காப்பியகாலகட்டத்துக்கு முன்பு ஏன் விரிவான தத்துவ விவாதங்கள் நிகழவில்லை, ஏன் முக்கியமான தத்துவநூல்கள் உருவாகவில்லை என்ற கேள்விக்கு ஒரு பதிலை ஊகிக்க முடியும்.

சம்ஸ்கிருத மரபில் ஏன் விரிவான தத்துவ விவாதங்கள் உருவாயின? வேதகாலத்திலேயே அந்தப்பண்பாடு வெளிப்பண்பாடுகளுடன் விரிவான உரையாடலுக்கு வந்திருக்கிறது. அது பிற பண்பாடுகளை நோக்கி விரிந்து அனைத்தையும் தன்னுள் இணைத்துக்கொள்ளும் தன்மையுடன் இருந்திருக்கிறது. நான்கு வேதங்களும் நான்குவகையான பண்பாடு உரையாடல்களின் விளைவுகள்.

இந்த உள்ளிழுக்கும் இயல்பு காரணமாக வேதப்பண்பாடும் வேதசிந்தனையும் பல்வேறு கருத்தியல் நெருக்கடிகளைச் சந்தித்தன. அந்நெருக்கடிகள் வழியாக அவை வந்தபோது விரிவான தீவிரமான தத்துவ விவாதத்துக்கான தேவை எழுந்தது. இதை வேதங்கள் முதல் காணலாம். அக்னி, காற்று, ஒளி, இரவுபகல்கள் போன்ற இயற்கையுருவகங்கள் சார்ந்த வழிபாட்டில் இருந்து  விஷ்ணு ருத்ரன் போன்ர தெய்வங்களை நோக்கி வருவதெ தொன்மையான ஒரு பண்பாட்டு பரிமாற்றத்தின் விளைவாகத்தான் இருக்க வேண்டும்.

பல்வேறு இறை உருவகங்கள் வழிபாட்டுமுறைகள் வேதப்பண்பாட்டுக்குள் , மழைக்கால குலத்தை நிரப்பும் ஓடைகள் போல , இந்திய நிலத்தில் இருந்து வந்துகொண்டே இருந்திருக்கின்றன. அவையனைத்தையும் ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்து சமரசப்புள்ளிகளைக் கண்டடைந்து மையப்படுத்தி தொகுக்கும் ஒரு பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடு தொய்வில்லாமல் நிகழ்ந்தது. அதைச் செய்த அறிவாளர் ரிஷிகள் எனப்பட்டார்கள். வேறு எந்த மரபிலும் காணக்கிடைக்காத இத்தனை ஆயிரம் அறிவாளர்களின் தேவை இவ்வாறு உருவானதே

இந்த தேடல் சென்றடைந்த மாபெரும் உருவகமே பிரம்மம். அனைத்தையும் உள்ளடக்கிய தூய தத்துவார்த்தமான கட்வுள் உருவகம். மானுடத்தின் முதல் தத்துவார்த்தமான இறையுருவகமும் இதுவே. அதன்பின் விவாதம் முழுமுற்றாக தூய தத்துவத்துக்குள் சென்றுவிட்டது. பிரம்மத்தை மையமாக்கி தன்னுள் வந்து சேரும் எல்லா சிந்தனைகளையும் தொகுக்கும் பெருமுயற்சியே மானுடத்தின் மாபெரும் தத்துவத்தொகுப்பை உருவாக்கியது

வேதகாலத்துக்குப் பின்னர் தரிசனங்களின் காலகட்டத்திலும் சரி, அதன்பின் அவைதிக மதங்களான பௌத்த சமண மதங்களின் காலகட்டத்திலும் சரி, கடைசியில் ஆங்கில ஆட்சியின்போது வந்த ஐரோப்பிய சிந்தனைப்போக்குகளின் காலகட்டத்திலும் சரி இந்திய தத்துவ விவாதங்களின் ஒரு தரப்பாக வேதாந்தம்தான் இருந்துவந்திருக்கிறது. அதன் விவாதம் ஒருபோதும் ஓயாமல் முன்செல்கிறது.

அத்தகைய ஒரு உள்ளிழுப்பு- தொகுப்புத்தன்மை தமிழ்ப்பண்பாடில் இல்லை. ஏற்கனவே கல்வியிலும் சிந்தனையிலும் முதிர்ந்து ஒரு செவ்வியல்தன்மையை அடைந்து விட்டிருந்த தமிழ்ப்பண்பாடு தன்னுள் தான் நிறைந்து அசைவற்று இருந்தது. அதை ‘ஒரு பதிஎழுவறியா பழங்குடி’ த்தன்மை எனலாம். ஆகவே அது புறப்பண்பாடுகளுடன் உரையாடவோ அவற்றை வென்று உள்ளடக்கவோ முயலவில்லை. அதற்கும் பிற தரப்புகளுக்கும் விரிவான விவாதமே நிகழவில்லை

சங்ககாலத்துக்கு முன்னரே வேதப்பண்பாடு தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் வைதீகர் எப்போதும் அன்னியராகவே சொல்லப்படுகிறார்கள். எப்போது வைதீகர்கள் குறிப்பிடபபுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் தவம், வேள்விச்செயல்,அவர்களின் வேதம் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு மதிப்புடனும் வழிபாடுட்டனும்தான் சொல்லபப்டுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் உறுப்பினராக சொல்லபப்டவில்லை.

அந்த வைதிகர்களிடமிருந்து வந்த வைதிகசிந்தனைகளில் இருந்து மூன்று புருஷார்த்தங்கள், வேள்விப்பயன் [அபூர்வம்] போன்ற சில தத்துவக் கருத்துக்களை தமிழ்ச்சிந்தனைகள் பெற்றுக்கொண்டிருந்தாலும்கூட விரிவான விவாதங்கள் நிகழ்ந்ததாகவோ அதன்மூலம் தத்துவநகர்வு உருவானதாகவோ சொல்லமுடியாது. நேர்மாறாக தமிழ்ச்சிந்தனையின் பலகூறுகளை வைதீகம் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கலாம் என்று படுகிறது.

பின்னர் ஆசீவக சமண பௌத்த மதங்கள் வந்தபோது அவை தன்னுள் நிறைவுற்றிருந்த தமிழ்ச்சிந்தனையின் சிம்மாசனங்களை அசைத்தன. தத்துவ அறைகூவல் விடுத்தன. அந்த சிந்தனைகளை உள்வாங்கும்படி தன்னை மாற்றியமைக்கும்கட்டாயம் தமிழுக்கு உருவானது. விளைவாக தத்துவமோதல்களும் விவாதங்களும் உருவாயின.

தன் தத்துவதரிசனங்களை விவாதங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டிய வரலாற்றுத்தருணம் தமிழ்பப்ண்பாட்டுக்கு அமையவில்லை என்று சொல்லலாம். கரைகவியா ஏரி போல அது அலையற்று நெடுங்காலம் அப்படியே இருந்தது. சிந்தனைகளை பிரசிந்தனைகளை எதிர்கொள்ளும் படைக்கருவியாக ஆக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு உருவாகவில்லை. சிந்தனைகளை முறைப்படுத்தி தொகுத்துக்கொள்ள வேண்டிய தேவை மட்டுமே உருவாகியது.ஆகவேதான் தொல்தமிழ்ப்பண்பாட்டின் அக்கறை இலக்கணங்களில் ஊன்றியிருந்தது.

தமிழில் பழங்கால அறிவோர் அவை என்று நாம் காண்பவை எல்லாமே இலக்கண அவைகளாகவும் இலக்கிய அரங்கேற்றக் கூடுகைகளாகவும் இருந்தன. இலக்கண நூல்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றாக உருவாகிக் கொண்டே இருந்தன. எல்லா கருத்தும் ஏற்கனவே சொல்லபப்ட்ட ஒன்றாக இருந்தது. தத்துவம் மத்தினால் கடைந்து உருட்டி வைக்கப்படவில்லை– அது இலக்கியம் என்னும் பாலில் கரைந்தநிலையிலேயே இருந்தது.

தமிழ்ச்சிந்தனையின் மையக்கருத்துக்களான இயற்கை வழிபாடு, பிறவிச்சுழற்சி மற்றும் அகப்புறம் ஆகிய மூன்றும் இந்திய சிந்தனைமரபில் தமிழிலிருந்து சென்று வலுப்பெற்றவை என்று சொல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பிந்தைய இரு கருத்துக்களும் பௌத்தத்தில் அழுத்தமாக வேரூன்றின. சூனியவாத பௌத்தமும் விக்ஞானவாத பௌத்தமும் அதிலிருந்தே உருவாகின. அவற்றில் இருந்து அத்வைதம் விசிஷ்டாத்வைதம் துவைதம் போன்ற பிற்கால வேதாந்தங்கள் உருவாயின. இவற்றை உருவாக்கிய அனைத்து சிந்தனையாளர்களும் தென்னிந்தியாவைச்சேர்ந்தவர்கள். பலர் காஞ்சியில் படித்தவர்கள். இந்திய சிந்தனை மரபில் இன்றுள்ள வேதாந்த ஞானம் என்பது பெரும்பாலும் தெற்கின் — தமிழகத்தின் — கொடை என்றால் அது மிகையல்ல.

நூல்

சங்கசெவ்வியல் டாக்டர் செ.சாரதாம்பாள். மீனாட்சி புத்தகநிலையம் 1992



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

களப்பிரர்


 

 

அன்புள்ள ஜெ,

நம் தமிழ் வரலாற்று நூல்களில் 300 வருட வரலாறு என்பது ‘களப்பிரர் காலம் இருண்டகாலம் ‘என்ற ஒற்றை வரியால் க்டந்துசெல்லபப்டுகிறது

இந்த தளத்தில் புதிய ஆய்வுகள் ஏதேனும்செய்யப்பட்டுள்ளனவா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? 300 வருடம் என்பது ஒரு வம்சம் அல்லது அரசாங்கம் முற்றிலும் வரலாற்றில் இருந்து மறைந்து போக முடியாத அளவுக்கு நீண்டது அல்லவா?

முகையூர்
அசதா

 

அன்புள்ள அசதா

களப்பிரர் காலத்தைப் பற்றி இப்போது அத்தகைய ஒற்றைவரி சொல்லப்படுவதில்லை– அதாவது அறிஞர் நடுவே. இப்போது ஏராளமான ஆய்வுகளும் புதிய ஊகங்களும் உருவாகி வந்துள்லன

ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றை எழுதியவர்கள் சைவ அறிஞர்கள். அவர்களுக்கு சமணம் மீது ஒரு கசப்பு எப்போதும் இருந்தது. தமிழ்நாட்டில் நடந்த சமண சைவ பூசல்கள் அதற்கு முக்கியமான காரணம். தமிழ்கச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் சமணர்கள்.

ஆகவே அவர்கள் பொதுவாக இரு விஷயங்களைச் செய்தார்கள் ஒன்று, சமணநூல்களை சைவநூல்கள் என விளக்கும் பெரும் விளக்கநூல்களை எழுதினார்கள். சிறந்த உதாரணம் கா.சு.பிள்ளை எழுதிய திருக்குறள் உரைவிளக்க நூல் இரண்டாவதாக சமண மதத்தின் வரலாற்று பங்களிப்பை பெரும்பாலும் வெற்றிடமாகவே விட்டுவிட்டார்கள்

களப்பிரர்கள் சமணர்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சமணர்கள் அக்காலத்தில் பெரிய ஆலயங்களை எழுப்பியதோ அவற்றில் கல்வெட்டுகளை பொறித்ததோ இல்லை. ஆரம்பகால தமிழ் வரலாறு பெரும்பாலும் நிவந்தங்களைப்பற்றிய கல்வெட்டுகளை சார்ந்தே எழுதபப்ட்டது. ஆகவே களப்பிரர் வரலாறு என்பது அனேகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதாவது அன்றைய வரலாற்றாய்வின் வழிகளில் அதை அறிய முடியவில்லை. ஆகவேதான் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வரி தோன்றியது

பின்னர் வரலாறு அரசியலுக்கான கருவியாக ஆகியது. தமிழர் என்ற அடையாள உருவாக்கத்துக்கு வரலாறு பயன்படுத்தப்பட்டது. அப்போது களப்பிரர்கள் மறக்கப்பட்டார்கள். மறுக்கவும் பட்டார்கள்

ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று

களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்

மேலும் நமது வரலாற்றாய்வு என்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் நிலத்துக்குள்ளும் சுருங்கி விட்டது. பிறமொழியும் பிற பண்பாடும் அறிந்த வரலாற்றாசிரியர்கள் மிகவும் குறைவே. ஆகவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ல சமண மரபைச் சேர்ந்த நூல்களைக் கணக்கில் கொன்டு தமிழக வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை

இருப்பினும் சில முக்கியமான நூல்கள் வந்துள்ளன. முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.  காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.

மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.

சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!

ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை

களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.

சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.

சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.

களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள் [குறிப்பாக முத்தரையர் போன்ற சாதிகள்] களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.

 ஆனால் அவர்களின் குலதெய்வங்கள் ஆசாரங்கள் ஆகியவற்றை வட இந்திய — குறிப்பாக ஆந்திர, கனன்டநாட்டு– குலதெய்வங்கள் ஆசாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்

 களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக்  கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard