Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் இந்துவா?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
நான் இந்துவா?
Permalink  
 


நான் இந்துவா?

 

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற வெளிசக்தி (external field) இல்லை என்ற உணர்வில் உறுதி ஏற்பட்டது. இதை சொல்வதற்குக் காரணம் நான் வறட்டு நாத்திகம் பேசுபவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே.மற்றபடி பாரதியின் ‘காணும் இடமெல்லாம் நான்’ என்னும் கோட்பாடு, ஐன்ஸ்டினின் ‘உலகம் ஒரு சுழற்சி’, ராமகிருஷ்ணரின் ‘நிர்சலனம்’ என்ற உணர்வு ஆகியவை புரியாவிட்டாலும் அவைகளில் உள்ளவைகளை என்னால் இப்போதைக்கு மறுக்க முடியவில்லை. புரியாததால் அல்லது அனுபவிக்காததால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. இப்போதைக்கு அவற்றை மதிக்க மட்டுமே முடிகிறது.

வேதங்களும், உபநிடங்களும் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை.

என்னுடைய இந்தக் கடிதம் அது குறித்தான என்னுடைய முயற்சியின் முதல் கட்டம் என்றே நினைக்கிறேன். கேள்வி நேரடியாக இல்லாவிட்டாலும், எனக்குத் தெரியும் பதில் அதை நோக்கிய பயணமாகவே இருக்கும். கேள்விக்கே வருகிறேன். நான் ஏன் இந்து?. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா?. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா? என்பது போல் கேள்விகளை எனக்குள் அவை எழுப்பும்.).

இந்து என்பதை வரையறுக்க முடியவில்லை என்ற ஒரு காரணமோ அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த, கிறிஸ்துவ, முஸ்லிமாக இல்லாதவர்கள் இந்து என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை?எனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.

எனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.

இப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து? அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா?

அது எங்கிருந்து என்னை நோக்கி வந்த மதம்? கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா? ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா? அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா?. மனிதனின் ஆதி காலத்தில் மதம் இருந்திருக்காது, எல்லா மதங்களுமே பிற்பாடு வந்ததுதான் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

என் கேள்வி என்னுடைய கிராமத்திற்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறை இல்லையா? அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா?. இப்போது என் தலைமுறையில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் கோவிலில் படைக்கும் உணவு குறித்தது. படித்த (அல்லது அப்படி கூறிக்கொள்ளும்) வட்டம் கோவிலில் அசைவம் சாப்பிடுவதைப் பாவம் போல் பார்க்கத் தலைப்படுகிறது. அவர்களுக்குப் பெரிய கோவில்கள் எனப்படும் கோவில்கள்தான் அழகுடனும், சக்தியுடனும், தெய்வாம்சத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம சாமிக்குப் பிடிச்சத நம்ம படைக்கிறோம் என்ற என் வாதம் அங்கு எடுபடவில்லை. (முற்றிலுமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி நான் அசைவத்தை மறுப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இது வேறு. வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் கோவிலில் ஒரு குற்ற உணர்வோடுதான் சாப்பிடுவார்கள் அல்லது மறுப்பார்கள்).

அதே போல நீத்தார் கடன் கொடுக்கு வழக்கம் எனக்குத் தெரிந்து என் தாத்தாவோ, பாட்டியோ செய்ததில்லை. இறந்த பதினாறாம் நாள் காரியம் செய்ததோடு சரி என்பது அவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது. இப்போது அந்த வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாற்றங்கள் நல்லதா தீயதா என்பதல்ல என் கேள்வி. என் கேள்வி கீதையும், வேதங்களும் எனக்கு பைபிள் அல்லது குரானைப் போல மட்டும்தானா? அல்லது எனக்கும் இவைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதுதான்.

தெளிவாகக் கேட்டு விட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அன்புடன்,
காளிராஜ்.

ஏரல் அருணாச்சல சாமி கோயில் முகப்பு[ஏரல் அருணாச்சல சுவாமி கோயில் முகப்பு]

அன்புள்ள காளிராஜ்,



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழ்நாட்டில் ஏராளமான படித்த அடித்தளப் பின்னணி கொண்ட இளைஞர்களிடம் உள்ள குழப்பம்தான் இது. இந்தக்குழப்பம் சென்ற பல வருடங்களாக திராவிட இயக்கங்களாலும் இடதுசாரிகளாலும் வளர்க்கப்படுகிறது. அவர்களுக்குப்பின்னால் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பெரும் நிறுவன வலிமையுடனும் பணபலத்துடனும் செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்கள் இந்த ஐயத்தை ஒரு கருத்துநிலையாக மாற்ற முயல்கிறார்கள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன், தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.

அந்த மாற்றம் நிகழக் காரணம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கம். அந்தக் கருத்தரங்கிலே நாட்டார்சாமிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாமிகள், இந்துமதம் ஒடுக்கும் சாமிகளின் மதம் என்ற பிரிவினை மிக எளிதாக நம் அறிவுஜீவிகளுக்குள் திணிக்கப்பட்டது. இதற்காகக் கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

அதைப்பற்றி நம் இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒருவரான ச.தமிழ்ச்செல்வன் சொல்வதைப் பாருங்கள். ‘பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ’சனங்களின் சாமிகள்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள், கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது. http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_04.html கவனியுங்கள். தன்னுடைய சொந்தக் குலதெய்வங்கள் , தான் வாழும் சமூகம் பற்றிய வரலாற்றை யார் எங்கிருந்துகொண்டுவந்து கொடுக்கவேண்டியிருக்கிறது இந்த அறிவுஜீவிகளுக்கு என்று.

இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம் இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மட்டும் கேட்கவில்லை. அந்த அமைப்பாளர்களின் மதம் அந்த சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிக்கிறதா, அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர அனுமதிக்கிறதா, முன்பு அவர்களிடம் மதம் மாறியவர்களின் குலதெய்வங்கள் என்னாயின, அப்படியென்றால் அச்சிறுதெய்வங்களை ஒடுக்கி அழிக்கும் உண்மையான ஒடுக்குமுறைமதம் எது? ஒரு மாணவர் மட்டும் எழுந்து அதைக் கேட்டார், அவர் வெளியேற்றப்பட்டார்.

நீங்கள் கேட்கும் இந்த கேள்வி உங்களை அறியாமல் உங்களுக்குள் விதைக்கப்பட்டுத் தொடர்ந்த பிரச்சாரம் மூலம் வளர்க்கப்படுவது, அதைச்செய்பவர்கள் மதமாற்ற சக்திகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். படிக்கும் வழக்கமுள்ள உங்களுக்கு இருக்கும் இந்த ஐயமும் சஞ்சலமும் படிக்காத உங்கள் தந்தைக்கு இருக்காது. அவருக்கு அவர் இந்துவா இல்லையா என்பதில் ஐயமே இருக்காது. உங்கள் கேள்விக்கான பதிலை இந்தப் பின்னணியை விளக்காமல் சொல்லமுடியாது என்பதால் இதைச் சொல்ல நேர்கிறது.

உங்கள் கேள்வியின் அடித்தளம் என்பது மதம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் வரையறை சார்ந்தது. மதம் என்றால் உறுதியான இறைக்கோட்பாடு, திட்டவட்டமான நிறுவன அமைப்பு, தெளிவாக எல்லை வகுக்கப்பட்ட ஆசாரங்கள் ஆகியவற்றைக்கொண்டதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் இன்று காணும் பெரும்பாலான மதங்கள் அப்படித்தான் உள்ளன. ஆனால் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தாது. மதம் என்பதை இன்னமும் விரிவான நெகிழ்வான வரையறையுடன் புரிந்துகொண்டால்தான் நம்மால் இந்தியவரலாற்றை மட்டுமல்ல, ஆசிய ஆப்ரிக்க வரலாறுகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

தெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மாறமுடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.

இரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறைசெய்திருப்பார்.ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன

இந்த மதங்கள் தங்கள் மதநிறுவனர் மற்றும் அவரது நூல் மீதான முழுமையான நம்பிக்கையை விசுவாசிகளிடம் கோரும். அதை ஏற்காத அனைவரும் அன்னியர் அல்லது பிறர் என வரையறைசெய்யப்பட்டிருப்பார்கள். அந்தப் பிறர் அவர்களின் சொந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முழுமையாகக் கைவிட்டுத் தங்களுடன் இணைய வேண்டுமென அவை வற்புறுத்தும். அதற்கான எல்லா முயற்சிகளையும் அந்த மதங்கள் செய்யும். அந்தக் கடமை ஒவ்வொரு விசுவாசிக்கும் அறைகூவப்பட்டிருக்கும். அதனடிப்படையிலேயே அவை வளர்கின்றன.

இவ்விரு வகை மதங்களுக்கும் அப்பால் வேறு இரு வகை மதங்கள் உண்டு. ஒன்று தத்துவ மதங்கள். உதாரணம், பௌத்தம் சமணம் போன்றவை. அவையும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவை நம்பிக்கையை முன்வைப்பதில்லை, தத்துவத்தையே முன்வைக்கின்றன. அவை முன்வைக்கும் இறைவன் கூட ஒரு தத்துவ உருவகமே. அவர்களின் பிரபஞ்சவிவரணை நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க அறைக்கூவுகின்றன. கன்ஃபூஷிய மதம், தாவோ மதம் போன்றவையும் இவ்வகைப்பட்டவையே

தீர்க்கதரிசன மதங்கள் பரவுவதற்கும் தத்துவ மதங்கள் பரவுவதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அவர்களின் பழைய நம்பிக்கைகளை, ஆசாரங்களை முழுக்க உதறிவிட்டுத் தங்களிடம் வரும்படி சொல்கின்றன. முழுமையான நம்பிக்கையுடன் தாங்கள் சொல்வதை முழுக்க ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிடுகின்றன. நீங்கள் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ ஆனால் உங்கள் பழைய மதத்தின், குலதெய்வங்களின், ஆசாரங்களின் எந்த அம்சத்தையும் மிச்சம்வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளில் சிறிதளவேனும் ஐயம் கொள்ளமுடியாது.

ஆனால் தத்துவமதங்கள் அப்படிச் சொல்வதில்லை. உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் அந்தத் தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே அவை முன்வைக்கின்றன. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். அவர் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.அதாவது அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை

ஆகவேதான் பௌத்தமதத்தை எடுத்துப்பார்த்தால் இலங்கை பௌத்தமும் திபெத்திய பௌத்தமும் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் வேறு வேறாக இருக்கிறது. தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. ஷிண்டோ மதத்தை லௌகீகத்துக்கும் பௌத்தத்தை ஆன்மீகத்துக்கும் ஜப்பானியர் பயன்படுத்தமுடிகிறது. ஆனால் சாராம்சமாக ஓடுவது பௌத்த தத்துவதரிசனம்தான். பௌத்தம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம்.

இன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த மதங்களை நாம் ஆபிரகாமிய தீர்க்கதரிசன மதங்களுடன் வழக்கமாக ஒப்பிடுகிறோம். ஆகவே இவற்றின் மையத்தரிசனம் என்ன, மையநூல் எது, இவை உருவாக்கும் ‘பிறர்’ யார் என்றெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம். நாமே இந்த மதங்களின் மையமும் எல்லையும் இதெல்லாம்தான் என முடிவெடுக்கிறோம். உடனே இதனுள் உள்ள பிறர் யார் என்று குழம்ப ஆரம்பிக்கிறோம். உங்கள் கேள்வியில் இருப்பதும் அந்தச் சிக்கலே.

தொகைமதங்களுக்கும் அதற்கு முன்னர் சொல்லப்பட்ட இனமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள், தத்துவ மதங்கள் ஆகியவற்றுக்கும் இடையே என்ன வேறுபாடு? பிற மூன்று மதங்களும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து விரிந்துகொண்டே இருப்பவை என்பதுதான். இனமதம் இனம்சார்ந்த ஒரு சுய அடையாளத்தை மையமாகக் கொண்டுள்ளது. தீர்க்கதரிசன மதங்கள் அந்த தீர்க்கதரிசியின் மெய்யியலை மையமாகக் கொண்டுள்ளன. தத்துவ மதங்கள் அந்த தத்துவதரிசனத்தை மையமாகக் கொண்டுள்ளன.

அந்த மையத்தை அவை பல்வேறு பிற நம்பிக்கைகளுடன், பிற சிந்தனைகளுடன் உரையாடச்செய்கின்றன. தீர்க்கதரிசன மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் வென்று அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன. தத்துவ மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் பிற சிந்தனைகளையும் தத்துவார்த்தமாக ஊடுருவி அவற்றின் மையத்தை மாற்றியமைத்துத் தன்னுடன் இழுத்துச்செல்கின்றன. அதாவது இரு வகைகளிலும் ஏற்கனவே இருந்த ஒரு மையமானது விளிம்புகள் நோக்கி பரவுகிறது.

உதாரணமாக சமணம் தென்னகத்துக்கு வந்தபோது இங்கிருந்த நாகவழிபாடு செய்யும் நாகர்களிடம் பரவியது. நாகர்களை அது சமண தத்துவத்தை ஏற்கசெய்தது. நாகர்களின் நாகவழிபாடு சமணத்தின் ஒரு பகுதியாக ஆகியது. பார்ஸ்வநாதரின் தலைக்குமேல் உள்ள ஐந்துதலை நாகம் நாகர்களின் கடவுள்தான். நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் அவர்களுடைய கோயில்.

ஆனால் தொகை மதங்கள் அவ்வாறு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மையப்புள்ளி இல்லாதவை. அவை மிகமிகத் தொன்மையானவை என்பதனால் பெரும்பாலும் அவற்றின் மூலம் என்ன,தோன்றிய இடமென்ன என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் பழங்குடி மரபுகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் இணைவதன்மூலமாகத் தொகைமதங்கள் உருவாகின்றன என்று சொல்லலாம்.

ஒரு விரிந்த நிலப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்க்கையில் இருந்து தனித்தனியான வழிபாட்டுமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவற்றை மதம் என்று சொல்லமுடியாது. அந்த மக்கள் பிற மக்கள் திரளுடன் தொடர்ந்து நெடுங்காலமாக உறவாடும்போது அவர்களின் நம்பிக்கைமுறைகள் உரையாடுகின்றன. கொண்டும் கொடுத்தும் வளர்கின்றன. இவர்களுக்குள் ஒரு பொதுமையம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மையம் இணைப்பின் மூலம் புதியதாக உருவாகிறது. இன்னொரு வழிபாட்டுமுறை இணையும்போது மூன்றுக்கும் பொதுவான மையம் உருவாகிறது.

இப்படி நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகள் இணைந்து இணைந்து தொகைமதம் உருவாகிறது. பெரும்பாலும் தொகைமதங்கள் அந்த இணைப்புச்செயலிலேயே தொடர்ந்து இருக்கின்றன. ஆகவே அவற்றின் மையம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த மக்களுக்குள் எந்தப் பிரிவு கருத்தியல் செல்வாக்குடன் இருக்கிறதோ, எது அதிகாரத்துடன் இருக்கிறதோ அதை நோக்கி மையம் நகர்கிறது.

இந்துமதம் என நாம் சொல்லும் இன்றுள்ள அமைப்பு ஆரம்பகாலம் முதலே இன்றுள்ள தொகைமதம் என்ற வடிவிலேயே உள்ளது. இந்துமதத்தின் மிகப்பழைமையான நூலான ரிக்வேதமே கூட இந்தத் தொகுப்புத்தன்மைக்கான உதாரணம்தான். அது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அல்லது ஆசாரத்தை அல்லது தத்துவத்தை முன்வைப்பது அல்ல. அதில் அன்றிருந்த பல்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் தத்துவங்களும் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் இணைவதையும் நாம் ரிக்வேதத்தில் காணலாம்.

ரிக்வேதத்தின் இறுதிப்பகுதியில் இந்த இணைப்பின் விளைவாக உருவாகி வந்த ஒரு தோராயமான பொதுமையம் உள்ளது. அதை பிரம்மம் என்று சொல்லலாம். அதாவது பிரபஞ்சசாரமான கருத்தை அல்லது ஆற்றலை ஒரு அறியமுடியாமையாக உருவகித்து அதன் வெளிப்பாடாக இந்தப் பிரபஞ்சத்தை உணர்வது. இப்படி ஒரு மையம் உருவானதுமே அந்த மையத்துக்கும் வேறு மையங்களுக்குமான உரையாடல் ஆரம்பித்துவிட்டது. அதையே நாம் உபநிடதகாலகட்டத்தில் காண்கிறோம்.

இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்துமதம் என்ற மையக்கட்டுமானம் பிற சிறிய கூறுகளை உள்ளிழுத்துக்கொள்கிறது என்று இதை சில இடதுசாரிகள் விளக்கினார்கள். அதையே பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளிழுக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் எந்த வழிபாட்டுமுறையும் தன் சுய அடையாளத்தை இழக்கவில்லை. இரண்டாயிரம் வருடம் முன்பு அவ்வாறு உள்ளே வந்த நம்பிக்கைகளும் தத்துவங்களும் கூட அப்படியேதான் இருக்கின்றன. மையம் என்று இவர்கள் சொல்வதை வந்தவைதான் மாற்றியமைத்துள்ளன. அப்படியென்றால் அது உள்ளிழுத்தல் அல்ல. அது உரையாடலும் சமரசமும் மட்டுமே.

வரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்தனை உள்ளே வந்தால் அவர்களுடன் சமரசம்செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.

*



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 உங்கள் கேள்வியை இந்த பின்னணியில் ஆராயுங்கள். ’நான் இந்துவா?’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா? சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா? அப்படியானால் இந்து என்பவர் யார்? எல்லாரும் சேர்ந்தால்தான் இந்து. தனியாக இருந்தால் சைவரோ வைணவரோ சாக்தரோதான்.

இந்துமதத்தில் உள்ளதாக உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஓர் இருமையை. அதாவது பெருமதம x நாட்டார் மதம் [Theological religion x Folk religion] முரண்பாடு. இது இங்குள்ள வழிபாட்டுமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் வழிமுறை, வெள்ளையர் உருவாக்கியது. ஆனால் இதைவைத்து இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் கொஞ்ச வருடம் முன்னால் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான். இன்று நாட்டார் தெய்வமாக இருப்பது பெருந்தெய்வத்துடன் இணைந்து பெருந்தெய்வமாக ஆகிக்கொண்டுமிருக்கும்.

சிவன் உங்கள் கருப்பசாமியைப்போல ஒரு நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்று சுடலைமாடசாமி அருள்மிகு சிவசுடலைமாடனாக ஆகிக்கொண்டிருக்கிறார். இந்தப் பரிணாமம் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் நேற்றைய கருப்பசாமியைக் கும்பிடலாம் அல்லது நாளைய சிவனைக் கும்பிடலாம். அதாவது பைபிளில் ஒரு அத்தியாயத்தில் கருப்பசாமியை சேர்த்துக்கொண்டு அவரைக் கடவுளாக ஆக்க முடியாது, அதற்கு பைபிளில் குரானில் இடமில்லை. கீதையில் முடியும். ஆம் அந்த அம்சமே தொகைமதங்களை உருவாக்குகிறது.

இனி நீங்கள் சொல்லும் தகவல்கள். அவை பெரும்பாலும் உங்களுடைய சொந்த மரபைப்பற்றிய உங்கள் அறியாமையையே காட்டுகின்றன. உங்களுக்குப் பெரும்பாலும் உங்கள் ஊர், தெய்வங்கள், வழிபாட்டுமுறை எதைப்பற்றியும் தெரியாது. நீங்கள் மற்ற எல்லா இளைஞர்களையும்போல இதிலெல்லாம் ஆர்வமில்லாமல் வளர்ந்து நகருக்கு வேலைக்கு வந்திருப்பீர்கள். அதன்பின் நீங்கள் அங்கே இங்கே படித்தறிந்த ஒரு கிராமத்தை கற்பனை செய்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்

உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.

இந்த தெய்வங்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் முந்நூறாண்டுகளாகவே கிடைக்கின்றன. நாட்டார் வாய்மொழி மரபில் அதற்கும் முன்னதாகவே இந்த தெய்வங்களைப்பற்றிய கதைகள் உள்ளன. சுடலைமாடசாமி கதைப்பாடல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருப்பசாமி வில்லுக்கதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நீங்கள் வாசித்துப்பார்க்கலாம். தென்னகத்து நாட்டார் தெய்வங்கள் அனேகமாக அனைத்துமே சைவ மரபைச் சேர்ந்தவை. இத்தெய்வங்களின் தெய்வமாக சிவன் சொல்லப்பட்டிருப்பான். அல்லது சிவனிடம் வரம் வாங்கி அவை தெய்வமாக ஆகியிருக்கும். அந்த தெய்வங்களைப்பற்றிய வில்லுப்பாட்டுகள் , கணியான்முடியேற்று முதலியவற்றில் அந்தக் கதைகள் இன்றும் பாடப்படுகின்றன.

நம் பண்பாட்டில் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நாட்டார்தெய்வம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, குறியீட்டு தெய்வம். அதாவது ஒரு நோயை குணப்படுத்த அல்லது விளைச்சலை அதிகரிக்க வழிபடப்படும் சிறுதெய்வம். மரங்கள் பாறைகள் ஆறுகள் போன்றவற்றை வழிபடுதல். இரண்டு, நீத்தார் வழிபாடு. அருங்கொலை செய்யப்பட்டவர்கள், போரில் இறந்தவர்கள் பிரசவத்தில் இறந்தவர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும்முகமாக அவர்களை தெய்வமாக ஆக்குதல். மூன்று மூத்தார் வழிபாடு, குலமூதாதையரைக் கடவுளாக்குதல். சாமியார்களை அடக்கம்செய்யுமிடங்கள் கோயிலாகின்றன

முதலில் இப்படி உருவாகும் தெய்வங்கள் அந்த தெய்வத்தை உருவாக்கிய ஒரு இனக்குழுவுக்குள் இருக்கின்றன. அந்த இனக்குழு பிற இனக்குழுக்களுடன் உறவாடும்போது அவை பிற தெய்வங்களுடன் இணைந்து பெருந்தெய்வங்களாகின்றன. இன்று நீங்கள் பெருந்தெய்வங்களாகக் காணும் எல்லா தெய்வங்களும் இப்படி உருவானவையே. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரிய தெய்வங்கள் மட்டுமே குலதெய்வங்களாக அவர்களுக்குள் மட்டும் நீடிக்கின்றன.

இந்த உறவாடல் ஆரம்பித்து எத்தனையோ தலைமுறையாகிவிட்டிருக்கும். சொல்லப்போனால் இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்

மெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.

ஆகவே நீங்கள் நினைப்பது போல உங்கள் தெய்வங்கள் இந்து பொதுமரபுடன் உறவே இல்லாமல் தனியாக எங்கோ அந்தரவெளியில் நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இந்து மதத்தின் பொது அமைப்புடன் உரையாடாமலும் இல்லை. அது உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். குலதெய்வங்கள் கூட அந்தக்குலம் சற்றே பெரிதாக பரவி விரிந்தால் இந்து பொது வழிபாட்டு மரபுக்குள் இணைந்துவிடும். பிறதெய்வங்கள் அனைத்துக்குமே இந்து மரபு சார்ந்த ஒரு வரலாற்று விளக்கம் இருக்கும். மறுமுறை செல்லும்போது விசாரித்துப்பாருங்கள்.

நம்முடைய சிறுதெய்வங்களைப்பொறுத்தவரை ஊரில் சிலரே அவற்றைப்பற்றிய அறிதலுள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்கு அக்கறை கிடையாது. இதற்கு என்ன காரணமென்றால் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த பெரும் பஞ்சங்களால் உருவான பண்பாட்டுப்பின்னடைவு. நம்மில் பெரும்பாலான குடும்பங்கள் அப்போது இடம்பெயர்ந்தவர்களாக இருப்போம். குலத்தின் வேர் வேறெங்கோ இருக்கும். விளைவாகக் குலதெய்வங்கள் கைவிடப்பட்டு மறக்கப்பட்டன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் அழிந்து போயின. மரபார்ந்த கதைகளும் ஞானமும் அழிந்தன. சென்றடைந்த இடங்களின் எளிய சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சின. நம்முடைய அப்பா தாத்தாக்கள் ஒரு பண்பாட்டு வெறுமையில் இருந்து மெல்ல அந்தந்த ஊர்களில் வேர்பிடித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது.

உங்கள் மதம் எது என்பதில் என்ன ஐயம்? காளிராஜ் என்பது வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெயர்? காளி ஒரு இந்து தெய்வம் என்றாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.திருசெந்தூர்கோயில் பற்றிச் சொன்னீர்கள். மிக எளிதாகவே இதை அறிய முடியும். உங்கள் சாதிக்குத் திருச்செந்தூர் திருவிழாவில் மண்டகப்படி போன்ற ஏதாவது சடங்கு செய்யும் உரிமை இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் பத்தாம்நூற்றாண்டு முதல் இருந்துவரும் ஒரு மாபெரும் கோயில்சார்ந்த இந்து [சைவ] மத அமைப்பின் உறுப்பினர்தான். உங்கள் சாதிக்குரிய வழிபாட்டை உங்கள் அப்பாவோ தாத்தாவோ செய்யவில்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைமட்டுமே.

எனக்கும் குலதெய்வம் உண்டு. இட்டகவேலி நீலியும் மேலாங்கோடு யட்சியும். அவர்களைத்தான் என் முன்னோர் வழிபட்டார்கள். அதேசமயம் அவர்கள் திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலின் பிரம்மாண்டமான அமைப்பிலும் ஒரு சிறுபகுதியாக இருந்தார்கள். எல்லா சாதிகளுக்கும் இந்த இரட்டை மதநம்பிக்கை இருக்கும். சிறுதெய்வங்கள் அவர்களுக்குரிய பிரத்யேகமான தெய்வங்களாக இருக்கும். பெருந்தெய்வக் கோயில்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்கள்.

வேதம் வெறும் சடங்குகளுக்குரிய நூலாகவே இங்கே கொள்ளப்பட்டது. ஆகவே சடங்குசெய்பவர்களே அதைப் படித்தார்கள். கீதையும் வேதாந்தமும் எல்லாருக்கும் உரியவையாக சொல்லப்படவில்லை. பக்தி, வழிபாடு போன்றவற்றைத் தாண்டி வந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்கானவை அவை. எல்லாச் சாதியினரிலும் அவற்றை அறிந்தவர்கள் மிகமிகச் சொற்பமே.

புராண இதிகாசங்கள் இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அவரவர்களுக்குரிய வடிவில் சொந்தமானவையாக இருந்தன. புராணக்கதைகளுக்கு ஒவ்வொரு சாதியிலும் அவரவர்க்குரிய வேறுபட்ட வடிவங்களே உண்டு. அடித்தள மக்களுக்குப் புராணம் அறிமுகம் இல்லை, அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம் , மதுரை இறையியல் கல்லூரி ஆகியவை உருவாக்கிய பித்தலாட்டம் மட்டுமே

தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்

ஸ்பெஷல்நாடகங்கள் வந்தபோது அவையும் புராண நாடகங்களையே போட்டன. ஊமைப்படம் வந்தபோதும் புராணப்படங்களே. உங்கள் கிராமம் அல்லது உங்கள் குடும்பம் மிக ஆச்சரியமானதாகவே இருக்கிறது. உண்மையிலேயே இவை எதையுமே கொஞ்சம்கூட அறியாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ விசித்திரமான பிரமையுலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய விசேஷநிலையைத் தனியாக ஆராயவேண்டுமே ஒழிய அதைக்கொண்டு இந்துமதத்தையோ தமிழ்ச்சமூகத்தையோ ஆராயமுடியாது.

நீங்கள் சொல்கிறீர்கள், இந்து வழிபாட்டுமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என. இது எதையுமே அறியாமல் வெறுமே செவிவழிப் பேச்சுகளை நம்பி சொல்லும் கூற்று. இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்.

கருப்பசாமிக்கு என்ன தொழுகையா செய்கிறீர்கள்? அல்லது கூட்டு ஜெப ஆராதனையா? தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா? அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன? அதைத்தான் பிஜி தீவிலும் தென்னாப்ரிக்காவிலும் நேப்பாளத்திலும் எல்லாம் இந்துக்கள் செய்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கும் அதுதான் செய்யப்படுகிறது. கருப்பசாமிக்கும் சுடலைக்கும் திருநீறுதான் பூசப்படுகிறது. கருப்பசாமிகோயிலுக்குச் சென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.

எந்த சிறுதெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துக்களின் தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட. இதுவே உண்மை. எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் என்பது அதை வழிபடும் சமூகம் எந்த அளவுக்குப் பெரியது, எந்த அளவுக்கு செல்வமும் படிப்பும் சமூகச் செல்வாக்கும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஒரு இனக்குழு எந்த அளவுக்கு சமூக இடத்தை அடைகிறதோ அந்த அளவுக்கு அந்த இனக்குழுவின் தெய்வம் பெருமரபுக்குள் முக்கியத்துவம் பெற்று இணைகிறது.

அதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள்? யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன? துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா? இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது.

நீங்கள்தான் உங்களை இந்து மதத்துக்குள் திணித்துக்கொள்கிறீர்கள். இது ஐயாயிரம் ஆறாயிரம் வருடத்து வரலாறு. ஒவ்வொரு இனக்குழுவும் சமூக அதிகாரத்துக்காகவே முட்டி மோதுகிறது. தன்னுடைய இடத்தை அது தேடுகிறது. அந்த இடத்தை அடைந்ததும் அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது. உடனே அவர்களின் தெய்வங்கள் மையம் பெறுகின்றன. நாடார்களின் பத்ரகாளிகோயில்கள் இன்று பெற்றிருக்கும் பெரும் முக்கியத்துவம், வன்னியர்களின் மாரியம்மன்கள் பெற்றுவரும் முக்கியத்துவம் அதற்கான கண்கூடான சாட்சி.

சாலையோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். புத்தம்புதிய அம்மன்களும் கருப்பசாமிகளும் கான்கிரீட்டில் எழுந்து நிற்பதைக் காண்பீர்கள். அந்த சாமிகளைக் கும்பிடும் இனக்குழுவில் கொஞ்சபேர் துபாய் போய் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரம் செய்து சம்பாதித்திருப்பார்கள். அவர்கள் சமூகப்படிநிலையில் மேலே சென்று அதிகாரத்தை அடைய அடைய அவர்களின் தெய்வம் இந்து மதத்தின் இன்றுள்ள மையம் நோக்கிச் செல்லும். அப்படி மையம் நோக்கிச் செல்லவேண்டுமென்றால் அது மையத்துடன் உரையாடவேண்டும். தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். மையத்தை அது கைப்பற்றவேண்டும். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது

உங்கள்கிராமத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகும்போது அவற்றின் தோற்றமும் சடங்குகளும் மாறுகின்றன. உயிர்ப்பலி கேட்கும் கருப்பசாமி பிரபஞ்சத்தை ஆளும் பரம்பொருளாக வழிபடப்படும்போது எல்லா உயிருக்கும் கருணை கொண்ட சாமியாக ஆகவேண்டியிருக்கிறது. அதன்பின் அதற்கு உயிர்ப்பலி கொடுக்க முடிவதில்லை. அது அருள்மிகு கருப்பசாமியாக ஆகிறது.

இதுசரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை. இதுதான் இந்தியப் பெருநிலத்தில் ஐயாயிரம் வருடப்பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கிறது. இப்படித்தான் இந்துமதம் உருவாகி வந்திருக்கிறது. இச்சமூகம் வளர்ந்து முன்னால் சென்றுகொண்டிருக்கிறது. இது பண்பாட்டு ஆதிக்கம் என்று கூச்சலிடும் நம் அறிவுஜீவிகள் வெட்கம் மானமில்லாமல் இந்த ஒட்டுமொத்த சிறுதெய்வ வழிபாட்டையே வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பஜனைபாடுகிறார்கள்.

ஆகவே நீங்கள் இந்துவா என்றால் ஆம் இந்துவே என்றுதான் சொல்வேன். இந்து மதம் என்பது எல்லை வகுக்கப்பட்ட ஒரு பிராந்தியம் அல்ல. பல்வேறு தரப்புகள் உரையாடிகொண்டே இருக்கும் ஒரு பரப்பு. உங்கள் தெய்வங்களும் நீங்களும் ஏற்கனவே அந்த இந்து மதப்பரப்புக்குள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் மேலும் மேலும் நீங்கள் பொதுப்போக்கு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்து மதத்துக்குள் மேலும் மேலும் ஆதிக்கம் கொண்டு தங்களை மையமாக ஆக்கிக்கொண்டிருக்கும் மக்கள்கூட்டத்தில் ஒருவர்.

ஜெ

மறுபிரசுரம் 2011 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கலாச்சார இந்து

 

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.

ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன்.

இக்காரணத்தால் நான் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் எனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது கிடையாது. யாராவது என்னை நீங்கள் நாத்திகனா என்று வினவும்போது அவர்களுக்குத் தக்கபடி “நான் அப்படிச் சொன்னேனா?” என்றோ அல்லது “அது நீங்கள் எவ்வாறு கடவுளை வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்றோ கூறி நழுவிவிடுவேன்.

நான் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்த விரும்பாமைக்கு அது என்னை எனது மரபில் இருந்து துண்டித்து விடுகின்றதோ என்ற எச்சரிக்கை உணர்வும் இன்னுமொரு முக்கியகாரணம்.

சைவ சித்தாந்தம் போன்ற தத்துவச்சாதனைகளையும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும், பண்ணிசையில் இருந்து வளர்ந்த கர்நாடக சங்கீத்தையும், இன்றும் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிநிற்கும் கோயில் ஒவியங்களையும், அற்புதமான சிற்பங்களையும், கட்டிடப் பொறியியலின் சாதனைகளாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களையும் மேலை நாட்டவர்களுக்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம்,ஆயிரம் மைல்களைக் கடந்து கடற்படை அனுப்பி வெற்றிபெற்ற ராஜராஜன்,ராஜேந்திரன் போன்ற பெருமன்னர்களில் இருந்து இறை நம்பிக்கையாளர்களான எனது எளிய உறவினர்கள் வரையிலானவர்களையும் கொண்ட எனது மரபை மறுத்து ஒரு பண்பாட்டு சுடுகாட்டிலும் நான்தான் புத்திசாலி என்ற ஆங்காரத்தின் உச்சியிலும் நாத்திகவாதி என்ற அடையாளம் என்னை கொண்டுபோய் சேர்த்துவிடுமோ என்ற அச்சம் எனக்குண்டு.

ஆயினும் எனது அடிப்படையான இயல்பின்படி நான் மதநம்பிக்கையை ஏற்றுக்கொண்டவனும் கிடையாது. சமூகத்தில் எமக்கு இனம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.ஆனால் நாம் எம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் தமிழன் என்று மட்டுமே அடையாளப்படுத்தி வந்துள்ளேன்.

ஆனால் எவராலோ குறிப்பாக எனது மத அடையாளம் கேட்கப்படும்போது பதில் அளிப்பது சிக்கலாகிவிடுகின்றது.இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. அதேவேளை நெறி சார்ந்து இந்து என்றோ துறை சார்ந்து சைவம் என்றோ அடையாளப்படுத்துவது மேலதிக விளக்கங்கள் அளிக்கப்படாதவிடத்து பின்பற்றும் ஒருவர் என்ற போலி அடையாளத்தை தோற்றுவிப்பதாகிவிடுகின்றது.

அண்மையில் ஒரான் பாமுக்கைப் (Orhan Pamuk) பற்றி வாசிக்கும்போது அவர் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லிம் (Cultural Muslim) என்று விபரிப்பதை அறிந்தேன். பண்பாட்டு முஸ்லிம் என்பது ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றாவிட்டாலும் அம்மதத்துடன் வரலாற்று மற்றும் கலாச்சாரரீதியான தொடர்பை கொண்டிருகின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றதென்று தெரிந்தது.இதற்கு இணையாக பண்பாட்டுக் கிறிஸ்தவர் என்ற சொல்லாடலும் இருக்கின்றது. ஆனால் பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் இல்லை.

நடைமுறைத் தளத்தில் பண்பாட்டு இந்து என்பது பயனுடையதாக இருக்ககூடும் எனினும், ஆழ்ந்த நோக்கில், இந்துமதம் என்பதே இவ்வாறான பலவகையான போக்குகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதால் தனியான பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அச்சொல் காணப்படாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும். எனினும் தெளிவான வரையறை கொண்ட சைவம் போன்ற உட்பிரிவுகளைப் பொறுத்தவரை பண்பாட்டுச் சைவர் போன்ற சொற்பதங்கள் குழப்பமளிக்கக் கூடியவையல்ல.

எனக்கிருந்த அடையாளப்பிரச்சனையை ஒரான் பாமுக் தீர்த்துவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தீரவில்லை போன்றுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ந.சிவேந்திரன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்புள்ள தம்பி சிவேந்திரன்,

ஒரு விஷயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். சென்ற பல வருடங்களில் உங்களைப்போல இத்தனை ஆழமான அடிப்படையான வினாக்களைக்கொண்ட கடிதங்களை மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். ஆகவே உங்களுடைய கடிதங்கள் ஒவ்வொன்றுமே மிக முக்கியமானவை என நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.

ஆகவே நான் உங்கள் வினாக்களுக்கு ஒரு விவாதத் தரப்பு என்ற நிலையில் என் பதில்களைச் சொல்கிறேன். என்னுடைய எல்லா பதில்களையும் அப்படித்தான் சொல்கிறேன் என்றாலும் உங்களிடம் இன்னும் அழுத்தமாக இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். உங்கள் சொந்தத் தேடல், சொந்த சிந்தனையில் நீங்கள் முன்னகரும்போது என்னுடைய வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். அது மட்டும் போதும்.

‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு நாம் ஓரான் பாமுக் வரை செல்லவேண்டிய தேவை இல்லை. இந்து மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதற்கிணையான எண்ணங்கள் இந்தியாவில் உருவாகிவிட்டன.

முதலில் அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அந்த மனநிலைகளையும் பார்ப்போம். வெள்ளையர்களுடன் இணைந்து வாழ்ந்த மேல்தட்டு, படித்த இந்துக்கள் ஒரு தர்மசங்கடத்தை அடைந்தார்கள். இந்துமதத்தை உதறவும் முடியாமல் தக்கவைக்கவும் முடியாமல் ஒரு பெரும் சிக்கலில் இருந்தார்கள்.

இந்துமதத்தின் ஆசாரங்களும், வழிபாட்டுமுறைகளும் அன்று வெள்ளையர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் பிரசாரம் உச்சகட்டவேகத்தில் இருந்தது அன்று. கல்விக்கூடங்களிலேயே அந்த விமர்சனங்களை கேட்டு வளர்ந்தவர்களாகவே அன்றைய படித்த இந்துக்கள் இருந்தார்கள்.

அந்த விமர்சனங்களை மதப்பிரசாரம் என்று எடுத்துக்கொள்ள படித்த இந்துக்கள் பழகினார்கள். அதைப்பற்றிய பல குறிப்புகளை நாம் அக்காலகட்டத்தைச் சித்தரிக்கும் வாழ்க்கைவரலாறுகளில் காணலாம். தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கிறித்தவம் நிகழ்த்திய மாபெரும் மானுட இன அழித்தொழிப்புகளைச் சுட்டிக்காட்டி அவர்களை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் ஐரோப்பிய நவீன தாராளவாத சிந்தனைகள், நவீன பகுத்தறிவுச் சிந்தனைகளின் வினாக்களை எதிர்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு நவீன ஐரோப்பா மீது பெரும் ஈடுபாடும் பக்தியும் இருந்தது. அவர்களின் ஆதர்ச புருஷர்களெல்லாமே அங்குதான் இருந்தார்கள். நவீன ஐரோப்பியச்சிந்தனைகளை அவர்கள் முறையாகக் கற்கவும் செய்தார்கள். மறுபக்கம் இந்து மரபின் சிந்தனைகளோ அவர்களுக்கு சரியாக அறிமுகமாகியிருக்கவில்லை. அவை வெறும் ஆசாரங்கள், நம்பிக்கைகள், புராணங்களாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தன. இந்துமதத்தில் அன்றிருந்த மானுடவிரோதமான ஆசாரங்களும் மூடத்தனமான சடங்குகளும் அவர்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தன.

ராஜா ராம்மோகன் ராய்

அன்றிருந்த படித்த வெள்ளையர்கூட இந்தியர்களை பழமையில் தேங்கிய மூட வழிபாடுகள் கொண்ட மக்களாகவே சித்தரித்தார்கள். குலக்குறி வழிபாடு [Totemism], மிருகவழிபாடு [Animism], பிரபஞ்சவழிபாடு [Pantheism], பலதெய்வ வழிபாடு [Polytheism], மாந்த்ரீகவழிபாடு [Shamanism] உருவ வழிபாடு [Idolatry] போன்று தங்களுக்கு முன்னரே தெரிந்த அபத்தமான அரைகுறையான சொல்லாட்சிகளால் இந்துமதத்தை அடையாளப்படுத்தினர். [இன்றும் கூட அந்தப் போக்கு அப்படியே தொடர்கிறது. இங்குள்ள பல ‘அறிவுஜீவிகள்’ அங்குள்ளவர்கள் எழுதிய நூல்களில் இருந்து பெற்ற இச்சொற்கள் வழியாகவே தங்கள் தந்தையரின் மதத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.]

இந்த படித்த இந்துக்கள் அவற்றிலிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பினர். வெள்ளையர்களின் கண்ணில் தங்களை நவீன மனிதாபிமான, ஜனநாயக, விழுமியங்கள் கொண்ட புதிய மக்களாக காட்டிக்கொள்ள்வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. ஆகவே அவர்கள் இந்து மதத்தை தங்கள் கோணத்தில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள முனைந்தார்கள். வெள்ளையர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்து ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்களும் நிராகரித்தார்கள். இவை அல்லாத ஓர் இந்துமதத்தை இந்து மரபுக்குள் இருந்து உருவாக்கிக்கொள்ள முயன்றார்கள்.

அக்காலகட்டத்தில் இந்துஞானநூல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. உண்மையிலேயே இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முயன்ற ஒருசில ஐரோப்பியரின் கடும் முயற்சி அவற்றுக்குப் பின்னாலிருந்தது. அம்மொழியாக்கங்கள் ஐரோப்பாவின் அறிவார்ந்த சிறு வட்டத்தில் புகழ்பெற்றன. அவற்றை ஆங்கிலம் வழியாகப் படித்த இந்துக்களுக்கு தங்கள் மரபின் வீச்சும் ஆழமும் புரிந்தது. ஆகவே அவற்றை மையமாகக் கொண்டு பிறவற்றை நிராகரித்து ஓர் இந்துமதத்தை உருவாக்க முற்பட்டார்கள்.

இந்த மனநிலையில் இருந்தே இந்து சீர்திருத்த இயக்கங்கள் ஆரம்பித்தன. மிகச்சிறந்த உதாரணமாக நாம் பிரம்ம சமாஜத்தைச் சொல்லலாம். பிரம்ம சமாஜம் உருவாக்க முயன்றது நவீன ஐரோப்பிய நோக்குக்கு உகந்த ஒரு இந்துமதத்தைத்தான். இந்து மதத்தின் அடிப்படையான தத்துவ விவாதங்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்கமுழுக்க கிறித்தவ பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு மதம்தான் பிரம்ம சமாஜம்.

பிரம்மசமாஜம் அன்று கல்கத்தா உயர்குடிகள் நடுவே பிரபலமாக இருந்திருக்கிறது. வெள்ளையர்களுடன் பழகுவதற்கு பிரம்ம சமாஜம் சிறந்த உபாயம் என்ற எண்ணம் இருந்தது. பிரம்மசமாஜிகள் ஆலயவழிபாடு, துறவு, பண்டிகைகள் போன்ற இந்துமத வழக்கங்களை எல்லாம் கடுமையாக நிராகரித்தார்கள். ஆங்கிலம் கற்ற இளைஞர்கள் பிரம்ம சமாஜத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினர்.

ஆகவே பிரம்மசமாஜத்தில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்துவிடுவார்களோ என்ற கிலி வங்காளப் பெற்றோர்களை ஆட்டிவைத்தது. பாரதியின் ஆறில் ஒருபங்கு போன்ற கதைகளில் இந்த அச்சத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

பிரம்மசமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தின் பகுதிகள் என்று சொல்லப்பட்ட பல மூடநம்பிக்கைகள் களையப்படுவதற்கும் தவறான ஆசாரங்கள் தடைசெய்யப்படவும் காரணமாக அமைந்தன என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டத்தில் இந்துமதத்தின் தனித்தன்மைகள் அனைத்தையுமே பிரம்மசமாஜம் அழிக்கிறதா என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. ஆகவே அதற்கு எதிரான சிந்தனைகள் உருவாயின. பிரம்மசமாஜம் அதன் எதிர்விளைவாக தீவிரமான மரபுவழிபாட்டு நோக்கை உருவாக்கியது. இதை நாம் தாகூரின் கோரா நாவலில் காணலாம்.

பின்னர் ஒரே ஒருநபர் தன் தனித்த ஆன்மீக வல்லமையால், மேதைமையால் பிரம்மசமாஜம் எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் பதில் சொன்னார். பிரம்மசமாஜம் என்ற அமைப்பு முழுமையாகவே மறையக் காரணமானார்– ராமகிருஷ்ண பரமஹம்சர்!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ராமகிருஷ்ணர் பிரம்மசமாஜம் உருவாக்கிய அந்தத் துடிப்பான படித்த இளைஞர்களையே தனக்கு சீடர்களாக ஆக்கினார். அவர்களில் மாணிக்கம் விவேகானந்தர்தான். அவர் பிரம்மசமாஜத்தின் மொழியில் பேசிய வேதாந்தி. பிரம்மசமாஜம் விவேகானந்தரை உக்கிரமாக எதிர்த்தது. அதன்பிரதிநிதியான மஜும்தார் என்பவர் அமெரிக்காவில்கூட விவேகானந்தரைப்பற்றி அவதூறுகளைப்பரப்ப அரும்பாடுபட்டார் என்பது வரலாறு. அதைமீறி இந்து மரபின் ஞானமும் பண்பாடும் அதன் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் இல்லை என்பதை விவேகானந்தர் நிறுவினார். இந்து மதம் அதன் அடிப்படைகள் ஏதும் சிதையாமலேயே நவீன உலகுக்குரியதாக முன்னால் வந்து நிற்க முடியும் என்று காட்டினார்.

ராஜா ராம்மோகன் ராயின் காலகட்டத்தில் இந்துப் பண்பாட்டை இந்து மதத்தில் இருந்து பிரித்துக் காண்பதற்கான முயற்சிகள், அது சம்பந்தமான விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஒருவன் இந்து மதத்தின் எந்த ஆசாரங்களையும் பின்பற்றாத இந்துவாக இருக்க முடியுமா என்ற வினா அன்று முக்கியமாக இருந்துள்ளது. கோரா நாவலை இது சமபந்தமான விவாதத்திற்கான தொடக்கமாக வாசித்துப்பார்க்கலாம்.

அதன்பின் அந்த வினாவை நாம் ஜவகர்லால் நேருவின் எழுத்துக்களில் காண்கிறோம். என் நினைவு சரியென்றால் கலாச்சார இந்து என்ற சொல்லாட்சியையே நான் நேருவின் எழுத்துக்களில் வாசித்திருக்கிறேன்.

நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர். அவரது நாத்திகமென்பது ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளில் பின்புலம் கொண்டது. அவர் அன்று ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த கிறித்தவ மதமறுப்புவாதத்தை தனக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்தார். குறிப்பாக அவரிடம் பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் பாதிப்பு அதிகம். கூடவே நேருவுக்கு ஐரோப்பிய இயற்கைவழிபாட்டு [Naturalism] மரபுகளிலும் ஈடுபாடு இருந்தது.

ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்பண்பாட்டின் தத்துவச்சிந்தனைகள், அழகியல், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர் உணர்ந்தார்.

நேரு

அதன்பொருட்டு அவர் கண்டடைந்த அடையாளமே கலாச்சார இந்து என்பது. அதாவது இந்துமதம் பல்லாயிரமாண்டு காலமாக உருவாக்கிய எல்லா சாதகமான பண்பாட்டுக்கூறுகளுக்கும் தன்னை வாரிசாக வைத்துக்கொள்ளுதல். அதே சமயம் கடவுள், ஆலயவழிபாடு, ஆசாரநம்பிக்கைகள் போன்றவற்றில் இருந்து முழுமையாகவே விலகியிருத்தல் என அதை வரையறுக்கலாம்.

நேரு யுகத்தின் பல முக்கியமான சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தங்களை அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். க.நா.சு. தன்னை கலாச்சார ரீதியாக மட்டும் இந்து என்று சொல்வதுண்டு. நான் முதன்முதலில் க.நா.சு.வை சந்தித்த கூட்டம் விஜில் என்ற இந்து அமைப்பால் நடத்தப்பட்டது. அதில் க.நா.சு. தன்னை கலாச்சார இந்து என சொல்லிக்கொண்டதைக் கேட்டுதான் அச்சொல்லையே நான் அறிந்துகொண்டேன்.

க.நா.சு.வைப்போலவே சுந்தர ராமசாமியும் தன்னை பண்பாட்டு அடிப்படையில் மட்டுமே இந்து என முன்வைத்தவர். நானறிந்து சுந்தர ராமசாமிக்கு இறைநம்பிக்கையோ மதப்பிடிப்போ இருந்ததில்லை. பி.கெ.பாலகிருஷ்ணன் அவரது கட்டுரைநூலில் தன்னை கலாச்சார இந்து என்கிறார். இந்தியச்சூழலில் டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற பலரை சுட்டிக்காட்ட முடியும். இன்றும் கூட இந்த அடையாளத்தை தனக்கெனக் கொண்ட பல சிந்தனையாளர்களைக் காணலாம்.

தமிழில் இந்து என்ற சொல்லை கலாச்சாரம் சார்ந்த பொருளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக முன்வைத்து வாதிட்டவர் என ஜெயகாந்தனைச் சொல்லலாம். ‘நான் நாத்திகன், ஆனால் இந்து’ என்று அவர் மேடைகளில் முழங்கியிருக்கிறார். கலாச்சார இந்து என்ற கருத்தை ஜெயகாந்தன் வெவ்வேறு கோணங்களில் விளக்கியிருக்கிறார்.

ஜெயகாந்தன்

ஆகவே பண்பாட்டு இந்து என்ற கருத்துநிலை புதியதல்ல. குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கொண்டது அது. இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி தொடர்ச்சியாக வளர்ந்து இன்றும் புழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்து நிலைப்பாடு அது. அதை நாம் பாவிக்கையில் எதற்காக, எந்தச் சூழலில் அதற்கான தேவை வருகிறது என்ற புரிதல் நமக்குத்தேவை.

பிரம்மசமாஜம் இந்துமதத்தை இரண்டாகப்பிரித்துக் காண்பதற்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? அன்றைய ஐரோப்பா தன் பார்வையில் இந்துமதம் என்ற ஓர் அமைப்பை உருவகித்துக்கொண்டது. அவர்கள் நோக்கில் அது பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, சாதி தீண்டாமை உயிர்ப்பலி முதலிய சமூக ஆசாரங்கள், பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள், பல்வேறு மூடநம்பிக்கைகள், பலவகையான மடங்கள், தீவிரமான பக்தி ஆகியவற்றாலான ஒரு ஒற்றை மதம்.

ஐரோப்பியர் அறிந்திருந்த மதங்கள் எல்லாமே ஒற்றைப்படையான ஒழுக்குள்ளவை, திட்டவட்டமான கட்டமைப்புள்ளவை. இந்துமதத்தையும் அவர்கள் அப்படி உருவகித்துக்கொண்டார்கள். அவர்கள் இந்துமதத்தை ஆராய ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமதம் அதன் இயல்பான பன்மைத்தன்மை கொண்டதாக, நெகிழ்வானதாகவே இருந்தது. ஐரோப்பியர் உருவகித்துக்கொண்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத உருவகத்தை அவர்களிடமிருந்தே நவீனக்கல்விபெற ஆரம்பித்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதுதான் நாம் இன்று அறியக்கூடிய இந்துமதம் உருவானது.

ஐரோப்பியர்களில் பெருவாரியானவர்களின் நோக்கில் இந்துமரபின் எல்லா கூறுகளும் ஒரே பேரமைப்பின் பகுதிகள். ஒன்றுடனொன்று இணைந்து இயங்கக்கூடியவை. அதாவது வேதாந்த தத்துவமும் உடன்கட்டை ஆசாரமும் ஒரே மதத்தின் இரு அம்சங்கள். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. உடன்கட்டை ஆசாரம் காட்டுமிராண்டித்தனமானது. ஆகையால் வேதாந்தமும் காட்டுமிராண்டித்தனமானதே. உடன்கட்டை போன்ற ஆசாரங்களை உருவாக்கி நிலைநாட்டுவது வேதாந்தத்தின் தத்துவமையமே. ஆகவே இந்துமதம் நிராகரிக்கப்படவேண்டும்.

இந்த ஒற்றைப்படையாக்கலை இந்து ஆசாரவாதிகள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர்களின் ஆசாரத்துக்கு இது மத அங்கீகாரத்தை அளிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை இந்துமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிரானது. ஆசாரம் பேசும் இந்து பழமைவாதிகளும் நாத்திகம் பேசும் இந்துமத எதிர்ப்பாளர்களும் இந்து மதம் பற்றியும் இந்து மரபு பற்றியும் கொண்டிருக்கும் உருவகம் ஒன்றே. அது ஐரோப்பியர்களால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்து பழமைவாதிகள் இந்துஞான மரபு என்பது வைதீக மரபே என வாதிடுவார்கள். அந்த வைதீகமே வேதாந்தம் என்பார்கள். வைதீக மரபின் எல்லா ஆசாரங்களுக்கும் வேதாந்தமே அடிப்படை என்பார்கள். தீண்டாமை உட்பட அனைத்து ஆசாரங்களையும் இந்துமததின் பிரிக்கமுடியாத பகுதிகள் என்பார்கள். வேதாந்தமும் அதில் அடக்கம் என்பார்கள். அதாவது இந்துமதம் என்ற அமைப்பின் உள்ளியக்கங்களை நிராகரித்து அதை தங்களுக்குச் சாதகமான ஒற்றைஅமைப்பாக முன்வைப்பார்கள். முன்னோர் சொன்ன ஒரு நெறி என இந்துமதத்தை வரையறை செய்வார்கள்.

அச்சு அசலாக அதையே இந்துமத விரோதிகளும் சொல்வார்கள். அவர்களுக்கும் வைதீக மரபே இந்துமதம். அதன் எல்லா ஆசாரங்களும் இந்துமதத்தில் இருந்து பிரிக்கமுடியாதவை. அதன் ஒருபகுதியே வேதாந்தம். அதன் ஆசாரங்களுக்கும் தத்துவங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே முரண்பாடுகளே இல்லை. அவை ஒன்றே! இவ்வாறு எளிமையான ஒரு எதிர்தரப்பு கிடைத்ததால்தான் நம்மூர் நாத்திகர்களால் விவாதிக்கமுடிகிறது.

ஆனால் உண்மையில் இந்து மரபு என்பது ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்டதுபோல ஒற்றைப்படையானது அல்ல. அது ஒன்றுடன் ஒன்று மறுத்து வாதிட்டு வளர்ந்த பல்வேறு ஞானத்தரப்புகளின் பெருந்தொகை. பன்மைத்தன்மையே அதன் அடையாளம். அதில் எந்த தத்துவத்தரப்புக்கும் மைய இடம் கிடையாது. அதன் அடிப்படை ஆசாரங்களோ, நம்பிக்கைகளோ, சடங்குகளோ அல்ல. அது மறுத்தும் ஏற்றும் பிளந்தும் இணைந்தும் தன் முரணியக்கம் மூலம் முன்னகரும் ஒரு ஞானவெளி.

மார்க்ஸிய ஆய்வுமுறையை முறையாகக் கடைப்பிடித்த வெகுசிலர் இந்த இயக்கத்தைச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமானவர் கெ.தாமோதரன். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் ஓர் எல்லைவரை. முரணியக்கம் என்ற கருதுகோள் அதற்கு அவர்களுக்கு உதவியிருக்கிறது. நம்மூரில் மார்க்ஸியதத்துவம் அறிந்த எவரும் இல்லை. அது இங்கே ஒரு கட்சிநம்பிக்கை மட்டுமே. இங்குள்ள மார்க்ஸியர் திராவிட இயக்கத்திடமிருந்து சித்தாந்தத்தை கற்றுக்கொள்பவர்கள் — தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்து குறிப்பாக.

இந்துஞானமரபு என்பது ஒட்டுமொத்தமாக அந்த விவாதக்களத்தையே சுட்டுகிறது.அதன் மிகப்பெரிய தரப்பாக இருப்பது வேதாந்தம். வேதாந்தத்தின் வளர்ச்சியடைந்த வடிவங்களே பிற்கால வேதாந்தங்களான அத்வைதம் முதலியன. அவையே இந்து தத்துவமரபின் சிகரங்கள். அவை ஆசாரங்களையோ வழிபாட்டுமுறைகளையோ அல்லது நம்பிக்கைகளையோ சார்ந்தவை அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்ததாக அறியப்படும் எந்த வழிபாட்டு மரபின் துணையும் இல்லாமல் நிற்க வேதாந்தத்தால் முடியும்.

விவேகானந்தர் வழியாக இந்திய நவீனச் சிந்தனைக் களத்தில் ஆணித்தரமாக இந்தக் கருத்து பதிவானதுமே ஒற்றைப்படையான இந்துமரபை உருவகித்திருந்த தரப்புகள் பின்வாங்க ஆரம்பித்தன. இந்துமதத்தை ‘சீர்திருத்தி’ மறுதொகுப்பு செய்து அதற்கு வெளியே இருந்து ஓர் ‘அறிவார்ந்த அமைப்பை’ உருவாக்க வேண்டியதில்லை என்ற கருத்து வலுப்பட்டது. அந்த அமைப்பு என்றுமே இந்துமரபுக்கு உள்ளேயே இருந்துவந்துள்ளது. இந்துமரபுக்குள் மேலும் அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பது உறுதிப்பட்டது. பிரம்மசமாஜம் உதிர்ந்தழிந்தது.

விவேகானந்தரின் குரலில் உள்ள பன்மைத்தன்மைக்கு இன்னும் அழுத்ததை அளித்தது நாராயணகுருவின் இயக்கம். அதுவும் வேதாந்தத்தையே முன்வைத்தது. ஆனால் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்ட எல்லா பழமையான ஆசாரங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அது வேதாந்தத்தை உபயோகித்தது.

இத்தகைய பன்மைநோக்குள்ள இந்துமதத் தரப்பை எதிர்கொள்ள நம்முடைய சம்பிரதாயமான இந்து எதிர்ப்பாளர்களால் முடிவதில்லை என்பதைக் காணலாம். அவர்கள் இந்தத் தரப்பையும் ஆசாரவாதத் தரப்பாக சித்தரித்துக்கொள்ளத்தான் முழுமூச்சாக முயல்வார்கள். அதன்பின் ஆசாரவாதத்திற்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் அவன் மேல் சுமத்துவார்கள்.

உதாரணமாக ஒருவர் தன்னை வேதாந்தி என்றும் இந்து என்றும் சொல்கிறார். வேதாந்த நோக்கில் நின்று அவர் இந்துமதத்தின் ஒட்டுமொத்த ஆசாரவாதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் முழுமையாக நிராகரிக்கிறார். நம் இந்து எதிர்ப்பாளர்கள் என்ன சொல்வார்கள்? அவரை எதிர்கொள்ள அவர்களால் முடியாது. இந்து மதம் மீது அவர்கள் சொல்லும் எந்த விமர்சனமும் அவருக்குப் பொருந்தாது.

ஆகவே அவர்கள் அவரை பொய்வேடம் போடும் ஆசார இந்து என்று அவதூறு செய்வார்கள். அவர் சாதிப்பிரிவினையை, மூடநம்பிக்கைகளை, மனிதாபிமானமற்ற அனைத்தையும் முற்றாக எதிர்த்து அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்தால்கூட அவரை சாதிவெறியர், மூடநம்பிக்கைகளைப் பரப்புபவர், மனிதாபிமானத்துக்கு எதிரான பழமைவாதி என்று முத்திரையிட்ட பின்பே அவரை விமர்சிப்பார்கள். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். நாராயணகுரு உட்பட.

இப்போது உங்கள் வினாவுக்கு வருகிறேன். நீங்கள் ஏன் பண்பாட்டு இந்து என ஓர் அடையாளத்தைத் தேடுகிறீர்கள்? விடை இதுதான். இந்து ஆசாரவாதிகளாலும் இந்து எதிர்ப்பாளர்களாலும் ஒருங்கே ஏற்கப்பட்டுள்ள ஒற்றைப்படையான இந்துமதம் என்ற உருவகத்தை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த இந்துமதத்துக்குள் இருக்க வேண்டுமென்றால்  இந்துமதத்தின் எல்லா நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் ஏற்றாகவேண்டும் என நீங்களும் நம்புகிறீர்கள்.

அது உங்களால் முடியாத காரியம். காரணம் உங்கள் தர்க்கபுத்தி, உங்கள் மனிதாபிமானம். ஆகவே இந்துமரபின் பண்பாட்டு அம்சங்களை மட்டும் வெளியே எடுத்து அவற்றை மட்டும் உங்களுடையதாகக் கொள்ள நினைக்கிறீர்கள். அவற்றை மட்டுமே கொண்டு உங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.

ஐரோப்பியர்களால் நம் மீது சுமத்தப்பட்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தச் சிக்கலே எழாது. இந்துமரபு என்பது ஒரு மாபெரும் விவாதக்களம். ஒரு பண்பாட்டுவெளி. அதில் நீங்கள் எந்தத் தரப்பையும் எடுத்துக்கொள்ளலாம். எதை எடுத்தாலும் நீங்கள் இந்துவாகவே இருக்கிறீர்கள்.

முழுமுற்றான ஆசார மறுப்புக்கு, முழுமையான நாத்திகவாதத்துக்கு இந்து மரபுக்குள் இடமிருக்கிறது. அதாவது நீங்கள் இந்து மதத்துக்கு ‘வெளியே’ போய் உருவாக்கிக்கொள்ளும் அந்தப் பண்பாட்டு அடையாளம் இருக்கிறதே அதற்கும் இந்து மதத்துக்குள் இடமிருக்கிறது. அந்தப் ‘பண்பாட்டு இந்து’வாக நீங்கள் உள்ளேயே இருக்க முடியும்.

அதாவது இந்துமதத்தின் இன்றுள்ள எந்த நூல்களையும் ஏற்காமல், எந்த அமைப்புக்குள்ளும் செல்லாமல், எந்த வழிபாட்டுமுறையையும் கடைப்பிடிக்காமல், எந்தக் கடவுளையும் நம்பாமல், எந்த ஆசாரங்களையும் ஒப்புக்கொள்ளாமல்கூட நீங்கள் இந்துவாக நீடிக்கமுடியும். இந்த மாபெரும் விவாதக்களத்தில் உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்கிக்கொண்டால் போதும். அதற்கு பலநூறு உதாரணங்கள் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் ராமலிங்க வள்ளலார். அவர் இந்துதானே? அவர் உருவாக்கிய சோதிவழிபாடு இந்துமதத்தின் அதுவரையிலான எல்லா தரப்பையும் முழுமையாக நிராகரித்து உருவானது அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இறுக்கமான தீர்க்கதரிசன மதங்களுக்குள் இந்த இடம் இல்லை. பாமுக் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லீம் என ஏன் சொல்ல நேர்கிறது? இஸ்லாம் என்பது திட்டவட்டமான எல்லைகள் கொண்ட ஒரு மதம். அதனுள் இருப்பவர் அல்லாவை, முகமதுவை, குரானை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அவர் இஸ்லாமியர் அல்ல. இல்லை என்னால் அந்த முழு விசுவாசத்தை அளிக்கமுடியாது, அதேசமயம் இஸ்லாம் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளில் உருவாக்கிய பண்பாட்டுமரபை என்னால் துறக்கவும் முடியாது என அவர் உணரும் நிலையில் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்கிறார். அப்படி ஒரு கட்டாயம் ஓர் இந்துவுக்கு எங்கே இருக்கிறது?

இந்து என்ற அடையாளத்தை விடுங்கள். சைவத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அதுவே ஒரு ஞானப்பரப்புதானே ஒழிய ஒருங்கிணைக்கப்பட்ட மதம் அல்ல. சைவ வழிபாட்டாளர்களிலேயே இன்று எத்தனை வகையானவர்கள் இருக்கிறார்கள்! தினம் திருவிளையாடல்புராணம் வாசித்து லிங்கபூசை செய்யும் சைவரும் உண்டு, சிவோஹம் [சிவம்அஹம் – நானே சிவன்] என உணர்ந்து தியானத்தில் அமரும் சைவரும் உண்டு இல்லையா? இருவேறு எல்லைகள்! சைவத்துக்கு ஆறு அகச்சமயங்கள் – சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என அறிந்திருப்பீர்கள். ஆறு சிவன்கள்!

வரலாற்று நோக்கில் சைவத்தை பொதுவாக மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, சைவ வழிபாட்டுமுறை. அதில் சிவலிங்கபூசை, உள்ளிட்ட பல சடங்குகள் உள்ளன. மிகத்தொன்மையானது அது. இரண்டு, சைவப்பெருமதம். கிபி நான்காம் நூற்றாண்டுவாக்கில் உருவாக ஆரம்பித்த மதம் இது. பல்வேறு தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டு சிவனின் எல்லா வடிவங்களையும் ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு இது வளர்ந்து வந்தது. பக்தி வழிபாட்டுமுறை இதன் மையப்போக்கு. நாம் இன்று சைவமென அறியும் பேரிலக்கியங்களும், கலைகளும், ஆலயங்களும் எல்லாம் இதன் ஆக்கங்கள்.

சைவசித்தாந்தம் காலத்தால் பிந்தியது. பத்தாம் நூற்றாண்டுவாக்கில்தான் அதன் தெளிவான வடிவங்கள் உருவாக ஆரம்பித்தன என்று சொல்லலாம். சைவசித்தாந்தத்தின் உயர்தத்துவதளம் என்பது மேலும் சில நூற்றாண்டுகள் கழித்தே உருவானது.

சைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.

ஒரு சிவபக்தருக்கு சிவன் என்றால் என்ன? பிரபஞ்சநாயகனாகிய இறைவன். உலகை ஆக்கி நடத்தி அழிப்பவன். அவனைப்பணிந்து அவனை இறைஞ்சி நல்வாழ்க்கையும் வாழ்க்கைநிறைவும் அடையலாம். ஆனால் ஒரு தூய் சைவசித்தாந்திக்கு சிவம் என்றால் என்ன? அவன் நோக்கில் பிரபஞ்சம் என்ற பேரில் அறியக்கிடைப்பது ஆற்றலின் முடிவற்ற வெளி. அதை அவன் சக்தி என்கிறான். அந்த சக்தியை செயல்தன்மை கொண்டதாக, படைப்புத்தன்மை கொண்டதாக, ஆக்கக்கூடிய பிரபஞ்ச சாரமான கருத்துநிலை ஒன்றுள்ளது. அதுவே சிவம்.

அந்த சிவத்தை அவன் வழிபட வேண்டியதில்லை. அதனிடம் அவன் இறைஞ்சவேண்டியதில்லை. அதற்கு உருவம் ஏதும் கற்பிக்கவேண்டியதில்லை. அந்த சிவத்தின் அலகிலா பெருநடனத்தை பிரபஞ்சத்திலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அவன் அறிந்துணர்ந்தால் போதும். அதுவே அவனுடைய நிறைநிலை. அவனுடைய விடுதலை. இங்கே மதநம்பிக்கை எங்கே வந்தது? இது ஒரு உயர்தத்துவ விவாதம் மட்டுமே. ஒட்டுமொத்த தரிசனம் நோக்கிச் செல்வதனால் இது ஆன்மீகம். இந்த தளத்தில் இருப்பவனும் சைவனே.

சைவனாக இருந்தால் திருநீறு பூசவேண்டும், தேவாரம் பாடவேண்டும், சிவபூசை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். அவற்றை முழுநம்பிக்கையுடன் செய்யமுடியாதென்பதனால் சைவத்தின் பண்பாட்டுக்கூறுகளை மட்டும் தக்கவைக்க நினைக்கிறீர்கள். அது சைவம் அளிக்கும் வெளியை அறியாததனால் தோன்றுவது என்பதையே சொல்லவந்தேன். அவை எதையுமே செய்யாமல் தூய தத்துவநிலையிலேயே நீங்கள் சைவனாக இருக்கமுடியும்.

சரி, சைவத்தின் இந்த தரிசனத்தை நிராகரித்து முழுமுற்றான நாத்திகக்கொள்கை நோக்கிச் சென்றால்? சைவமரபு புறச்சமயம் என வகுக்கும் லோகாதய மதத்துக்குச் சென்று சேர்கிறீர்கள். அதற்குள்ளும் பல தரப்புகள் உள்ளன.

இப்படிச் சொல்லலாம். ஒரு கோட்டை இருந்தால் நீங்கள் அதற்கு வெளியே வீடு கட்டிக்கொள்ளலாம். இது இயல்பாக உருவான ஓர் ஊர். ஊருக்கு வெளியே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டினால் ஊர் உங்கள் வீட்டையும் சேர்த்து பெரிதாகிறது அவ்வளவுதான்.

அதாவது இன்று நீங்களிருக்கும் நிலையில் உங்களுக்கு கலாச்சார இந்து போன்ற அடையாளங்கள் தேவை இல்லை. அப்படி உங்களை வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உங்களுக்குச் சைவமதம் மரபாக வந்திருக்கிறது. அதன் அன்றாடவழிபாட்டுத் தலத்துடன், கடவுள் உருவகத்துடன் நீங்கள் முழுமையாக இயைய முடியவில்லை என்பதற்காக அதை விட்டு வெளிவந்து கலாச்சார இந்து என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை. அதற்குள்ளேயே அந்த அன்றாட மத-ஆசார-வழிபாட்டுத் தளங்களை மீறி நீங்கள் மேலும் மேலும் முன்னகர இடமிருக்கிறது. ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.

அந்த உச்ச எல்லைக்குச் சென்றும் நீங்கள் நிறைவடையவில்லை என்றால், நீங்கள் சைவமோ இந்துமதமோ அளிக்கும் எல்லா ஆன்மீக-தத்துவ விளக்கங்களையும் முழுமையாகக் கற்று நிராகரித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் உங்களை நாத்திகர் என்று முழுமையாகவே உணர்கிறீர்கள் என்றால், அதேசமயம் இந்துஞானமரபுக்குள் உள்ள சார்வாகம் முதலிய நாத்திகத் தரப்புகளையும் முழுக்க நிராகரிக்கிறீர்கள் என்றால் மட்டும் நீங்கள் வெளியே செல்லலாம். கலாச்சார இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் ‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு என்றே நான் நினைக்கிறேன். இரு காரணங்கள்.

இந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என நாம் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை.

அவர்களை பௌத்தர்கள் சமணர்கள் சீக்கியர்களாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்துக்கள் என்று சொல்லமுடியும். சூபி வழிபாட்டுமுறைகளையும் அப்படிச் சொல்லலாம். குணங்குடி மஸ்தான் சாகிபு அல்லது பீர்முகமது அப்பா அல்லது உமறுப்புலவரின் பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை மேலே சொன்ன இந்துப்பண்பாட்டுத்தொகுப்பில் இருந்து வந்தவையே.

நாராயண குரு

இங்கே இந்துப்பண்பாடு என்ற சொல்லை, பேதங்களை உருவாக்குவதாக அல்ல, பேதங்களைக் களைவதாகவே பயன்படுத்தவேண்டும். அது எவருக்கும் சொந்தமானதல்ல. எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதும் அல்ல. இந்த மண்ணில் உள்ள நதிகளைப்போல மலைகளைப்போல காடுகளைப்போல இங்கே பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. ஜெயகாந்தன் ஒரு மேடையில் சொன்னது இது.

இரண்டாவதாக, ஒருவர் இந்துமரபின் எல்லா சிந்தனைகளுக்கும் அப்பால் முழுமையாகவே மேலைநாட்டுச் சிந்தனைகளைச் சார்ந்து தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அதேசமயம் இந்துப் பண்பாட்டுக்கூறுகளை இழக்கவும் விரும்பவில்லை என்றால் அவர் தன்னை கலாச்சார இந்து என அடையாளம் காட்டிக்கொள்ள முடியும்.

எப்படியானாலும் அது வசதியான சொல்லே. அதிலுள்ள முக்கியமான வசதி என்னவென்றால் இந்து என்ற சொல்லுக்கு எதிராக இங்கே மதமாற்ற அமைப்புகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் உருவாக்கப்பட்டிருக்கும் கடுமையான வெறுப்புக்கு அது ஒரு பதிலாக அமையும். ஓரான் பாமுக் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்று சொன்னால் அதை முற்போக்கானதுதான் என்பவர்கள், சிவேந்திரன் தன்னை பண்பாட்டு இந்து என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்தாக வேண்டுமல்லவா? அந்த வாய்ப்பை ஏன் தவறவிடவேண்டும்! :)))

ஜெ

முந்தைய கட்டுரைகள்


உருவரு


ஆன்மீகம் கடவுள் மதம்


இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்


மதங்களின் தொகுப்புத்தன்மை


கடவுள்நம்பிக்கை உண்டா?

 

உருவம்

உலகெலாம்

மலரில் இருந்து மணத்துக்கு

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

இருபுரிசாலை



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?

 

IMG_20181124_213034

 

அன்புள்ள ஜெ,

 

திருச்சி st. Joseph கல்லூரியில் வரும் 07-dec-2018 அன்று நடைபெற உள்ள ” தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன் கொடுமைகள்” என்ற கருத்தரங்கம் பற்றி உங்கள் கருத்தென்ன?

 

விவாத தலைப்புகள் பற்றி தனியாக இணைத்துள்ளேன்.

 

இதை தமிழ்நாடு bjp யின் H.ராஜா எதிர்க்கிறார். இதனை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்கிறார்.

 

  1. இது இந்து மதத்தின் மீதான தாக்குதலா?

 

  1. இதை ஒரு கிறிஸ்தவ நிறுவன தில் (அ) நிறுவனத்தால் செய்யலாமா? இது இலக்கணம் என்ற பெயரில் மறைமுகமாக இந்து மதம் அல்லது non-abrahamic மதத்தை விமர்சிக்கும் போக்கா?

 

தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

-கோகுல்

IMG_20181124_213037

அன்புள்ள கோகுல்

 

இந்தத் தலைப்புக்கள் எந்த வகையிலும் தவறானவை அல்ல. ஒரு கல்வித்துறை ஆய்வுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. தலித் ஆய்வுகள் மற்றும் விளிம்புநிலை ஆய்வுகள் பொதுவாகவே மரபை எதிர்நிலையில் வைத்துப் பார்ப்பவைதான். இது பெண்ணிலை நோக்கிலான ஆய்வுநோக்கு. அந்த வகையான ஆய்வுகள் புதிய திறப்புகளை அளிப்பவை. தமிழில் ராஜ் கௌதமன் போன்றவர்கள் முழுமையான மரபு எதிர்ப்பு நோக்குகளை முன்வைத்தவர்கள்

.

மரபின்மீதான, சூழலின் மீதான விமர்சனம் இல்லாமல் கலை இல்லை. இலக்கியம் இல்லை. சமூகசீர்திருத்தம் இல்லை. சமூக ஆய்வே நிகழமுடியாது. அதில் கலைத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் கல்வித்துறைக்கும் வெளியே இருந்து எவரும் கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது. அத்தகைய கட்டுப்பாடுகள் பண்பாட்டின் கடிவாளத்தை சிலரிடம் அளிப்பதாகவே முடியும். அது மிகப்பெரிய தேக்கநிலையை, அழிவை உருவாக்கும்.

 

கட்டற்றதோ உள்நோக்கம் கொண்டதோ ஆன ஆய்வுகள் கூட தடுக்கப்படக்கூடாது. அவற்றின் உள்நோக்கமோ அல்லது கட்டின்மையோ அடையாளம் காணப்படலாம். சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படலாம். கறாரான ஆய்வுரீதியான மறுப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பண்பாட்டுத்தளத்தில் எந்த விமர்சனத்திற்கும் இடமிருக்கவேண்டும். ஆகவே இந்த விமர்சனக் கருத்தரங்கு நிகழ்வதன் மீது எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

 

ஆனால் இச்செயலை அறிவுலகம் அடையாளம்காண வேண்டும் என விழைகிறேன். இந்த நிறுவனம் – தூய வளனார் கல்லூரி , ஆழமான மதப்பரப்பு நோக்கம் கொண்டது. அதன் பார்வையில் அறிவார்ந்த சமநிலையும் எப்போதும் இருப்பதில்லை. அதாவது இது கல்விநிறுவனம் என்றபேரில் இயங்கும் மதநிறுவனம். அந்நிலையில் இதன் ஆய்வுநோக்கை உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்..

 

இப்படி இவர்கள் நாட்டார் தெய்வங்களைப் பற்றியும் இந்துமதங்களுக்கு இடையே உள்ள கருத்துப்போர்களைப் பற்றியும் சென்றகாலங்களில் உருவாக்கிய திரிபுக்கொள்கைகள்தான் பின்னர் அறிவுஜீவிகளால் அனைத்து ஊடங்களிலும் பேசப்பட்டன. இன்று சமூக வலைத்தளங்களின் மையக்கருத்தியலாக உள்ளன. இவர்கள் திட்டமிட்டுச் செயல்படும் ஒரு ஆற்றல்மிக்க கருத்துமையம்.

 

ஆகவே எந்தவகையான நேர்மையான ஆய்வு நோக்கமும் இவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. சமயங்களில் என இவர்கள் கூறும்போது அது இந்திய மதங்களை மட்டுமே சுட்டும் – இந்துமதத்தை விட பெண்ணடிமைக் கருத்துக்களின்  தொகையாக இருந்துகொன்டிருக்கும் கிறித்தவ மதப்பிரிவுகளை அல்ல.ஆதாமின் விலாவில் இருந்து ஏவாள் உருவானாள் என்னும் தொன்மமே உலக அளவில் பெண்ணடிமைத்தனத்தின் அச்சாக இன்றும் இருப்பது என ஒரு கட்டுரை இந்த கல்லூரியில் எவரேனும் வாசித்துவிட முடியுமா?

 

இத்தகைய கருத்தரங்குகளின் அமைப்பையே நீங்கள் கவனிக்கலாம். கருத்துச் சுதந்திரம், விவாதம் என்றெல்லாம் இவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கே சுட்டப்பட்டிருக்கும் கட்டுரைகள் அனைத்துமே ஒரே கோணம் கொண்டவை, ஒரே குரலில் பேசுபவை என்பதைக் காணலாம். இத்தனை ஆய்வாளர்கள் இப்படி ஒற்றைக்கருத்தை எப்படி வந்தடைந்தார்கள்? அவர்கள் எப்படி இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டார்கள்? மாற்றுத்தரப்பே இல்லாமல் நிகழும் இதை விவாதம் என்றுகொள்ள முடியுமா? இது நேரடியான பிரச்சாரம் மட்டுமே.

 

இத்தகைய அரங்குகளில் அந்த அரங்கை ஒருங்கிணைப்பவர்களின் நோக்கத்தைப்புரிந்துகொண்டு மேலும் மேலும் ஒரே குரலில் பேசுபவர்களையே காணமுடியும். பலவகைப்பட்ட தலைப்புகள் இருக்கும். பலவகையான பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பேசுவார்கள். ஆனால் முடிவுகள் ஒன்றே. வேறெங்கும் இத்தகைய ஒற்றைக்கோணத்தை நம்மால் பார்க்கமுடியாது. சிறிய மாற்றுக்குரல்கள் கூட கடுமையாக ஒடுக்கப்படுமென்பதனால் அவை எழுவதே இல்லை.

 

பண்பாட்டு இயக்கத்தின் நுண்ணிய முரணியக்கம் பற்றியோ,  பண்பாட்டுக்கும் சூழலுக்குமான உறவுகளைப்பற்றியோ இத்தகைய ஒற்றைப்படையான டமாரப்பிரச்சாரத்தில் எவருமே பேசிவிட முடியாது. மேலும் இவர்களுக்கு தேவை விவாதம் அல்ல, இவர்கள் உருவாக்கும் ஒற்றைப்படைக்கருத்தைப் பெற்றுக்கொண்டு மேலே கொண்டுசெல்லும் நோய்பரப்பிக் கொசுக்களையே. தமிழகநாட்டார் தெய்வங்களைப்பற்றி தூய சவேரியார் கல்லூரி உருவாக்கிய அரைகுறைக்கருத்துக்களும் திரிபுகளும் இப்படித்தான் இருபதாண்டுகளில் நம் பொதுப்புத்தியில் நிலைநிறுத்தப்பட்டன. இடதுசாரிகள் அந்தப்பரப்பலைத் தலைமேற்கொண்டு செய்தார்கள்.

 

இது இந்து மதத்தின் மீதான தாக்குதல் அல்ல. தொல்காப்பியமும் புறநாநூறும் சிலப்பதிகாரமும் இந்து நூல்கள் அல்ல. இது தமிழ்மரபு மீதான தாக்குதல்தான். இவர்கள் சென்றகாலங்களில் இந்து மரபை எதிர்க்க தமிழ்மரபை எதிர்விசையாகக் கட்டமைத்தனர். அந்தக் கருத்துநிலை வலுவாக வேரூன்றியபின் தமிழ்மரபுக்கு எதிராக நாட்டார் மரபை முன்னிறுத்தினார்கள். ஏற்கனவே நாட்டார்மரபு பிசாசுவழிபாடு என இவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது இப்போது தமிழ் மரபை தீயது, இருள்நிறைந்தது என சித்தரிக்கிறார்கள். இந்தப்பட்டியலில் தேம்பாவணியோ  இரட்சணிய யாத்ரீகமோ சீறாப்புராணமோ குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களோ இல்லை என்பதைக் கவனியுங்கள்.இவர்கள் பார்வையில் கீழைநாட்டு நூல்கள்  அனைத்துமே சாத்தானின் சொற்களால் ஆனவைதான்.திருக்குறளாக இருந்தாலும் சரி.

 

உண்மையில் கருத்தளவில் எனக்கு இத்தலைப்புக்களுடன்கூட எந்த முரண்பாடும் இல்லை. பழைமையை விமர்சனம் செய்யவே நானும் முயல்வேன். நானும் சங்க காலத்து வாழ்க்கையின் பெண் ஒடுக்குமுறைகள் பற்றி, பழந்தமிழ் இலக்கியத்தின் பெண்கள் மீதான அணுகுமுறைபற்றி விமர்சனங்களை எழுதியிருக்கிறேன். இதற்கு ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கவேன்டியவர்கள் தமிழ் தமிழ் என பொற்காலக் கதைகள் பேசுபவர்கள். திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் மாய்ந்து மாய்ந்து உரை எழுதியவர்கள்.தமிழ்த்தேசியக்கூப்பாடு போடுபவர்கள். ஆனால் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலான அமைப்புகள், சிந்தனையாளர்களின் அன்னதாதா இந்த அமைப்புதான்

 

இவர்களின் பார்வையும் ஓர் ஆய்வாளனின் பார்வையும் எங்கே முரண்படுகின்றன? ஆய்வாளன் இறந்தகாலத்தின் கருத்தியல்போதாமைகளை, பிழைகளை ஒரு நீண்ட பரிணாமத்தின் பகுதியாக அணுகுவான். இவர்கள் அதை தங்கள் மதப்பிரச்சாரத்தால் மீட்கப்படவேண்டிய’ காட்டுமிராண்டிக்கூட்டத்தின் பண்பாடு என அடையாளப்படுத்துவார்கள். அடித்தளத்தில் அந்த அடையாளப்படுத்தலை வைத்துக்கொண்டு மேலே பெண்ணியம் தலித்தியம் விளிம்புநிலைக் கதையாடல்கள் என கல்வித்துறை பாவலாக்களை காட்டுவார்கள். இவர்களின் இந்த முன்வரைவை ஒட்டி பெரும்பாலும் இந்துப் பேராசிரியர்களைக் கொண்டே கட்டுரைகளை எழுதி முன்வைப்பார்கள். மேலோட்டமாக கல்வித்துறை ஆய்வாகத் திகழும், நடைமுறைவிளைவில் தமிழர்கள் தங்கள் பண்பாடு காட்டுமிராண்டிப்பண்பாடு என நினைக்கச்செய்யமுடியும்

 

இன்னும் ஐந்தாண்டுகளில் இதே குரல்  ‘பொதுவான’ ‘முற்போக்கான’ ஆய்வாளர்களின் குரலாக ஆவதைக் காண்பீர்கள். மேலும் பத்தாண்டுகளில் சமூக வலைத்தளங்களின் மையக்கருத்தியலாகவும் இது ஆகும். தமிழகம் இப்படித்தான் சிந்திக்க வழிகாட்டப்படுகிறது

 

ஆனால் இந்த வகையான செயல்பாடுகளுக்கு எதிரான செயல்பாடு என்பது இவர்களைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ள வைப்பதும் தானே ஒழிய இதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு முச்சந்தி அரசியலில் இறங்கி இவர்களை நியாயப்படுத்தும் நிலையை உருவாக்குவதல்ல என்பதே என் எண்ணம். ஏனென்றால் விமர்சனத்தை புண்படுத்தலாக பார்ப்பது எந்த அமைப்பையும் தேக்கமுறச் செய்யும். சிந்தனையின் அடுத்தபடிகள் நிகழாமலேயே ஆக்கும். நாம் இருநிலை வெறுப்பியல்களின் நடுவே நின்றுகொண்டிருக்கிறோம். உண்மை எப்போதும் தனித வழிகொண்டது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

 

ஜெ

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தாமஸ் ஒரு கருத்தரங்கு

 

அன்புள்ள ஜெ,

இந்த போஸ்டரை இணையத்தில் பார்த்தேன். இந்தக்கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஸ்புக்கில் இந்துமதம் என்பது புனித தாமஸால் உருவாக்கப்பட்ட ஆதிகிறித்தவம் என்றும் அதை பிராமணர்கள் கைப்பற்றிக்கொண்டு இந்துமதமாக ஆக்கிவிட்டார்கள் என்றும் இவர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேன்.

ராமகிருஷ்ணன்

foto

அன்புள்ள ராமகிருஷ்ணன்

இதைப்பற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள்

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்


புனித தோமையர் ஓர் அறிமுகம்


தாமஸ் ஞானி கடிதம்


ஞானியின் பதில்

தாமஸ் குமரிமைந்தன் கடிதம்


தாமஸ் கடிதங்கள்


தாமஸ் கடிதங்கள்


ஆத்திச்சூடி ஒரு கிறித்தவநூலே


ஆர்ச் பிஷப் ரெவெ சின்னப்பா அவர்களின் கடிதம்

*

இந்தத்தரப்பு மிகுந்த கேலிக்குரியதாக இன்று தோற்றமளிக்கலாம். நம்மில் பலர் சிரித்துவிட்டும் விலகிச்செல்லலாம். நாம் கவனிக்கவேண்டியது இரண்டு விஷயங்கள்.

dr-m-deivanayagam.jpgதெய்வநாயகம்

இதேபோல இந்தியாவின் பழைய வரலாறு குறித்து உருவாக்கி பரப்பப்பட்ட ஒரு பொய்க்கதைதான் ஆரிய திராவிட இனவாதம். இதை விவேகானந்தர் முதல் அம்பேத்கர் வரை எந்த இந்திய சிந்தனையாளரும் ஆதரித்ததில்லை. அப்பட்டமான மோசடி என்றே சொல்லிவந்தனர். கேலிக்குரிய சிந்தனையாகவே ஐம்பதாண்டுக்காலம் அது கருதப்பட்டது. அடுத்த ஐம்பதாண்டுக்காலத்தில் அதை மாற்றமுடியாத உண்மையாக நிறுவி விட்டனர். இன்று அறிவியல்பூர்வமான தொல்பொருள்தரவுகள் வழியாக அச்சிந்தனைக்கு அடிப்படையே இல்லை என நிறுவப்பட்டுவிட்டபின்னரும் கல்வித்துறை முழுக்க அது நீடிக்கிறது. அரசியல் அதனடிப்படையில் நிகழ்கிறது. பிடிவாதமாக அது பல அதிகாரபூர்வ தரப்புகளில் பேணப்படுகிறது

இன்று நாம் ஆப்ரிக்கா குறித்தும் சீனாகுறித்தும் கொண்டுள்ள பல வரலாற்றுச்சித்திரங்கள் இத்தகைய உள்நோக்கம்கொண்ட பொய்ப்பிரச்சாரம் சலிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டமையின் விளைவுகளே. இந்த வகையான இனவாதம் கிறித்தவ மிஷனரிகளில் ஒருசாராரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதன் விளைவே ஆப்ரிக்காவில் ரவாண்டா, உகாண்டா, எதியோப்பியா, நைஜீரியா, காங்கோ, சியரா லியோன், கென்யா போன்ற நாடுகளில் உருவான மாபெரும் மானுடப்படுகொலைகள்.

தெய்வநாயகம் என்பவரால் முன்வைக்கப்படும் மிக அபத்தமான இச்சிந்தனையைப் பரப்ப பலநூறு நூல்கள் இதற்குள் தமிழில் எழுதப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நேரடியாகச் சொல்லப்போனால் பகடிசெய்வதாகவே நினைப்பார்கள். ஆனால் பல கருத்தரங்குகள் மேலைநாடுகளிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவிட்டன. இந்தியாவின் முதன்மைக் கல்வியாளர்களில் பலர் இக்கருத்தரங்குகளில் பங்கெடுத்து இந்த தரப்பை ஆதரித்து பேசியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பல்கலைகளில் இந்த கேனத்தனத்தையே ஒரு சிந்தனைத்தரப்பாக முன்வைத்து முனைவர்பட்ட ஆய்வேடுகளை அளிக்க ஒப்புதல்பெற்றிருக்கிறார்கள். இன்னும் சிலவருடங்களில் நாம் இவற்றை ‘கல்வித்துறை’ கொள்கைகளாக கற்கத்தான் போகிறோம்.

இந்தப் போஸ்டரைப்பார்க்கையில் இந்த அபத்தத்துக்கு வாட்டிகன் அனுமதி இல்லாததனால் இதில் ஆர்வம் காட்டிய சில கத்தோலிக்க துறவிகள் பின்வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இது சீர்திருத்தச் சபைகளின் ‘அதிகாரபூர்வ’ தரப்பாக உள்ளது. சீர்திருத்தச்ச்பை போதகர்கள் எல்லாருமே இதை மேடைகளில் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் வெண்டி டானிகரின் இந்துக்களைப்பற்றிய ‘வரலாற்று’ நூலிலும் இந்தத் தரப்பு ‘ஆய்வு உண்மை’யாக முன்வைக்கப்பட்டிருந்தது. அந்நூலை இந்துக்களை பற்றிய முதன்மையான வரலாற்று நூலாகச் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.அதாவது இங்குள்ள முற்போக்கு அறிவுஜீவிகளில் ஒருசாரார் இதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக அதைச்செய்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் அடைந்த வெற்றியெல்லாம் அப்பிரச்சார வல்லமைவழியாகத்தான். நாம் அபத்தநகைச்சுவை என நினைக்கும் ஒரு விஷயம் காலப்போக்கில் நம் வரலாறாகவே ஆகிவிடும். தாமஸ் பிராமணர்களால் குத்திக்கொல்லப்பட்டார் என்ற வரலாறு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொல்லிச்சொல்லியே நிறுவப்பட்டு இன்று மறுக்கமுடியாததாக ஆகிவிட்டிருப்பதுபோல.

திரும்பத்திரும்ப நாமும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

ஜெ


தெய்வநாயகம் அவர்களின் பக்கம்

தாமஸ் தொன்மம் ஒரு தளம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard