Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
Permalink  
 


 இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (குறள் :41 இல்வாழ்க்கை)
மணவாழ்க்கை நடத்துபவன் ‘இல்வாழ்வான் ‘ எனப்படுவான் .அதற்கு முன்பும் அவன் இல்லில் இருந்தாலும் இல்வாழ்வான் என்ற பெயர் இல்லை. மணம் ஆகுமுன் அவன் மாணவன் . ஆன பின் மனைவாழ்வான். அவ்வாழ்வு முதிர்ந்த வழி வனத்தன் .அது கடந்த போது மாதவன் .இவையே பிரமச்சாரி, கிரகஸ்தன், வானப்பிரஸ்தன் , சந்நியாசி என்று நான்கு வாழ்க்கை நிலைகளாக பாரத நாட்டில் வழங்கி வந்தன.
மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின் கண்ணே நின்றவொரு துணை அதாவது பிரமச்சாரி, தவசி, துறவியாகிய மூவர் என்றார். தானமாகிய இல்லறஞ் செய்யும் அவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன், ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாமல் உணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமல் உய்த்து விடுவாரை.
பரிமேலழகர் உரை கூறினார்: இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; அற இயல்பினையுடைய ஏனைய மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
ஏனைய மூவர் என்பவர், ஆச்சாரியனிடத்தினின்று ஓதுதலும், விரதங்காத்தலும் ஆகிய பிரமச்சரிய ஒழுக்கத்தானும், இல்லத்தை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னையிருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலியன உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.
வைதிக தர்மம் மனித வாழ்வில் நான்கு ஆசிரமங்களைப் (நிலைகளைப்)போற்றுகிறது.

1. பிரம்மசரியம் – திருமணத்திற்கு முன்பு வாழும் மாணவ வாழ்க்கை
2. கிருஹஸ்தம் - இல்லறத்தார்
3. வானப்பிரஸ்தம் – இல்லறத்தில் வாழும் பிள்ளைகளை விட்டு நீங்கி வனத்தில் சென்று அகத்தவத்தில் வாழும் முதிய பெற்றோர்
4. சன்யாசம் – துறவறத்தார்
சமண மதம் இரண்டே இரண்டு ஆசிரமங்களைத் தான் போற்றுகிறது. ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம்.. பரிமேலழகர் திருவள்ளுவரைச் சமணர் என்று கருதியதாலேயே, முன்னையிருவரையும், அதாவது பிரம்மச்சரியரையும், வானபிரஸ்தரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார் என்று உரை எழுதினார்.
பரிமேலழகர் உரைக்குக் குறிப்புரை வழங்கிய வை.மு.கோபாலகிருஷ்ண மாச்சாரியார், “பரிமேலழகர் இம்மூவரையும் குறித்த போதிலும் , அது வள்ளுவர் தன் உள்ளக் கருத்திற்குப் புறம்பானதே என்பதை உணர்ந்தவராய், ‘இவருள் முன்னையிருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார்’ என்று விளக்கம் கொடுக்கிறார். திருவள்ளுவர் இல்லறம், துறவறம் என்னும் இருவகை ஆசிரமங்களையே வகுத்துக் கொண்டார் ஆதலால், மற்றை இரண்டு ஆசிரமங்களையும் கூட்டி’மூவர்க்கும்’ என்பது , பிறர் மதத்தை அங்கீகரித்ததாயிற்று” என்று கூறுகிறார்.
நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே ‘நல்லாற்றின் நின்ற துணை’ என்கிறார்,
இல்வாழ்வான் என்பவன் குடும்பம் நடத்துபவன், நல்லாற்றின் நின்ற என்றால் நல்ல அறவழியில் செல்கின்ற என்று பொருள். சமுதாயத்தில் நல்ல அறநெறியில் செல்வது அதாவது அறவழியில் செல்வோருக்குத் துணையாக இருப்பது இல்வாழ்வானினுடைய பொறுப்பு என்று வள்ளுவர் கூறுகிறார். தன் குடும்பத்தை பராமரிப்பது இல்வாழ்வானின் கடமை, எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக் பிரித்துக் குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் –
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (42)

களைகண் ஆனவர்களால் (காப்பவர்களால்) கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவாய் நின்று வேண்டுவன செய்தலாலும், வயிறாறப் புசிக்க உணவு கிடைக்காத வறியவர்களுக்கு உணவு முதலியன கொடுத்து உதவி செய்தலானும் , ஆதரவின்றித் தன்பால் வந்து உயிர் நீத்தார்க்கு நீர்க்கடன் முதலியன செய்து அவர்கள் நல்லுலகு செல்ல வழி செய்தலானும் இல்வாழ்வான் என்பான் அவர்களுக்குத் துணையாவான் என்று இக்குறளிலே வள்ளுவர் கூறுகிறார்.

அடுத்த குறள் –
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43)
எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அமைத்து அனைத்து குடும்ப உறுப்பினரையும் தனியாகப் பிரித்துக் கூறிவிட்டார்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார் என்று பொருள் கொள்ளலாம். ஓரேருழவனார் இயற்றிய புறநானூற்றுப் பாடலில்
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே! (புறநானூறு 193)

இதன் பொருள் ; தோலை உரித்துத் திருப்பிப் போட்டதைப் போல வெண்மையான நெடிய உவர்நிலத்தில் ஒரு வேடனிடமிருந்து தப்பியோடும் மானைப்போல் எங்கேயாவது தப்பியோடி பிழைத்துக் கொள்ளலாம் என ஒரு மனிதன் நினைத்தால், சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லைக் கொண்டு எந்தக் குறளிலும் சொல்லவே இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் பாரத தத்துவ ஞான மரபு வழியினர், என்பதைச் சான்றோர் ஒத்துக்கொள்வர்., அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மாணவர், வானபிரஸ்தர் என்னும் அகத்தவத்தினர், துறவியர் ஆகிய மூவர்க்கும் துணையாக இருப்பது இல்வாழ்க்கையில் ஈடுபட்டோர் கடமையாகும் என்று கூறுகிறார்.

சில உரையாசிரியர்கள்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43)

என்ற பாடலில் வருகின்ற ‘தான்’ என்பது இல்வாழ்வானை மட்டும் குறியாது அவனது குடும்பத்தைக் குறிக்குமாதலின், அதன்கண் மனைவி, மக்கள், பெற்றோர் முதலிய குடும்ப உறுப்பினர்களை அடக்குவதே முறையாகும் என்றும், மற்றும் சில உரையாசிரியர்கள் மனைவி, மக்கள், பெற்றோர் என்பவர்கள் அக்குறளில் காணப்பெறும் ஒக்கலில் அடங்குவர் என்றும்கூறி, நாம் எடுத்துக் கொண்ட குறள் கூறும் ‘இயல்புடைய மூவர்’ மனைவி, மக்கள், பெற்றோர் என்பதை ஒப்பமாட்டார்கள். ஆனால் அக்குறளிலுள்ள 'தான்' என்பது இல்வாழ்வானைக் குறிக்கும். மேலும். அதிலுள்ள 'ஒக்கல்' என்பது இம்மூவர் தவிர்த்த சுற்றம் எனக்கொள்வதில் இழுக்கில்லை.
தொகைநூல்களின் துணைகொண்டு ஒப்பியல் நோக்கில் 'இயல்புடைய மூவரை' இனம் காண முயலும்போது வேறு மூவர் தென்படுகின்றனர். கேளிர், கிளைஞர், கேளல் கேளிர் ஆகியோரே இல்வாழ்வான் தாங்க வேண்டியவர் எனத் தொகையிலக்கியம் வலியுறுத்தும் மூவர் ஆவர்.
கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலில்,

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு" (அகம்.- 93)

என்ற அடிகளில் பொருளீட்டச் செல்வதாக இல்லறத் தலைவன் உரைக்கிறான். கேளிர் துன்பம் நீங்கிக்; கிளைஞர் உண்டு; கேளல் கேளிர் அதாவது சுற்றத்தார் அல்லாதார் நம்மோடு அன்புடன் பொருந்தவும் ஆகிய காரணங்களுக்காக மனைவியைப் பிரியும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு, ஊக்கத்துடன் பொருளீட்டச் செல்வதாகத் தன் நெஞ்சோடு கூறுகிறான்.

மேற்சுட்டிய மூவருள் சுற்றம் எனப்படும் கேளிருள் முதல் நிலை உறவினர், அடங்குவர். ‘கிளை’ என்போர் இரண்டாம் நிலைச் சுற்றம், நட்பினர் மற்றும் இனத்தவர் ஆவர். கேள்+அல் கேளிர் என்றால் உறவினர் அல்லாதார் அதாவது பகைவரும், அயலாரும் ஆவர். இம்மூவரையும் ‘இயல்புடைய மூவர்’ என்று முழுமையாகவோ ஓரளவிற்கோ வலியுறுத்தும் சங்கப் பாடல்கள் பல உள.

இருங்கோன் ஒல்லையாயப் செங்கண்ணனார் பாடிய மற்றொரு அகநானூற்றுப் பாடலில்
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல" (அகம்.- 279)

என்ற உணர்வு வெளிப்பாட்டைக் கூறும் இப்பாடலில்,; நண்பர்கள் செல்வமில்லாது தவிப்பதும்; சுற்றத்தார் துன்பம் அடைவதும்; பகைவர் வளமாகப் பெருமிதத்துடன் இருப்பதும்; ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டு பொறுத்திருக்க இயலாதவை என்னும் கருத்து உள்ளது. முன்னர்ச் சுட்டிய ‘கேள்’ இங்கு நண்பர், கேளிர் என்று இரண்டாகப் பிரிந்து விளக்கம் பெறுகிறது. ஒட்டாது உறையும் கேளல் கேளிர் செல்வச்செருக்கால் அன்பின்றி இருப்பது இல்வாழ்வான் பொருள் தேடிச் செல்வதற்குரிய ஒரு காரணம் ஆகின்றது. செல்வம் சேர்ந்தால் அவரும் அன்பு கெழுமியவர் ஆவர்.
இல்லறத்தார் மட்டுமே பொருள் ஈட்டும் வலிமையுடையவர். மாணவரும், அகத்தவத்தினரும், துறவியரும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு பிறர் கையை எதிர்பார்த்திருப்பவர். எனவே திருவள்ளுவர் காலச் சமுதாய வாழ்வில் இல்வாழ்வார் தாம் ஈட்டும் பொருளில் ஒரு பகுதியை இம்மூவருக்கும் செலவிட்டு அவர்களுக்குத் துணையாக இருத்தல் அவர்கள் கடமையாகிறது என்று வள்ளுவர் கூறுகிறார்.
அக்கால மாணவர் தற்கால மாணவர் போல் பெற்றோருடன் வீட்டிலிருந்து பள்ளி சென்று கல்வி கற்பதில்லை. அவர்கள் தங்கள் ஆச்சாரியருடன் அவரது இல்லத்திலேயே தங்கியிருந்து குருகுலக் கல்வி கற்றார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, ஆசிரியர் கட்டணம் மற்றும் அவசியப் பொருட்கள் அனைத்தையும் அளித்து, பெற்றோராகிய இல்வாழ்வாரே பராமரித்தல் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் தன்மை மறைந்து கிடக்கிறது என சனாதன தர்மம் சொல்கிறது. அப்படி மறைந்து கிடக்கும் கடவுள் தன்மையை எல்லா மனிதர்களும் தானாகவே உணர்ந்து கொள்ள முடிவதில்லை. எதாவது ஒரு புறத்துண்டுதல் வேண்டும். எனவே மனிதனுடைய அறிவு கண்ணை திறப்பதற்கு பிரம்மச்சரியம் அல்லது மாணவப்பருவம் என்ற அறம் வலியுறுத்தப்படுகிறது.
பெண்கள் ஆண்களை தொடாமலும், ஆண்கள் பெண்களை நாடாமலும் இருப்பது மட்டுமல்ல பிரம்மச்சரியம். நல்ல அறங்களைக் கற்றுகொள்ளுதல், உலக ஞானம் பெறுதல், வாழ்க்கை முறைகளை அறிதல், தனது வாழ்க்கையை மேம்படுத்த பொருளீட்டும் செயல்களை புரிவதற்கான தொழில்நுட்ப பயிற்சியை பெறுதல் ஆகிய எல்லாமே பிரம்மச்சரிய நிலையில் அடங்கி விடுகிறது.
வித்தைகளை கற்றுக் கொண்டேயிருப்பது மட்டும் வாழும் முறையாகாது. கற்றவற்றை கசடறக் கற்று வாழ்ந்து காட்ட வேண்டும். எனவே ஒரு மனிதன் ஏழு வயது முதல் பத்தொன்பது வயது வரை கற்பதை கற்றுவிட்டு உலக வாழ்க்கைக்குள் நுழைவதே இல்லறம் ஆகும்.
இந்த அறத்தை மேற்கொள்ளும் போது தனிமனிதனாக இருந்தவன் தனது வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள வேண்டும். ஆண், பெண் சேர்க்கை என்பது வெறும் உடல் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கே ஆகும்.பிரம்மச்சரியத்தை விட்டு இல்லறத்தானாக மாறும் ஆண் தனது அறிவை நல்ல வழியில் செலவிட்டுப் பொருள் தேட வேண்டும்.
காரணம் இல்வாழ்வாரை நம்பியே சமூகம் இருக்கிறது. அரசாங்கத்திற்கு வரிகட்டுவதும், வணிக பொருட்கள் விற்பனையாவதும், மாணவர்களும், வாழ்க்கையை துறந்த சன்னியாசிகளும் நம்பியிருப்பது இல்லாறத்தாரையே ஆகும். இப்படிப்பட்ட அறமே இல்லறமாகும்..
நல்ல பிள்ளைகளை பெற்று நல்ல விதத்தில் பொருள் ஈட்டி சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற ஒத்தாசைகளை செய்து முடித்த பிறகு மனிதர்கள் நடுத்தர வயதைத் தாண்டி முதுமை தலைகாட்டியவுடன்.அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட்டு ஒதுங்கி ஓய்வெடுப்பதே வானபிரஸ்தம் அல்லது அகத்தவம் எனப்படுகிறது.
எளிய வாழ்க்கையும் இறைவழிபாட்டையும் தனது வாழ்க்கை துணையுடன் ஊருக்குள் இருந்தோ, ஊருக்கு வெளியே சென்றோ மேற்கொள்ள வேண்டியது அகத்தவத்தினரின் கடமையாகும்.
பரம்பொருள் ஒன்றே நித்தியமானது. புலன்களால் அனுபவிக்கும் எல்லாம் அநித்தியமானது என்பதை உணர்ந்து, இவ்வுலகு சார்ந்த பற்றுகளையெல்லாம் விட்டு, மனதை அடக்கி, மூச்சை தேக்கி உடலை, ஒடுக்கி வாழ்வதே துறவறமாகும்.
சந்நியாசத்தை மேற்கொள்ளுதல் என்பது உலகத்தை புறக்கணிப்பது ஆகாது. நமக்கு யாவும் சொந்தம் என்ற நிலையிலிருந்து மாறி, உலகுக்கு நாம் சொந்தம் என்ற நிலைக்கு வருவதே துறவறம் ஆகும். சகல உயிர்களையும் தன் உயிர் போல் மதித்து, உலகப் பற்றினை ஒழித்து பரம்பொருளைப் பற்றிக்கொண்டு வாழ்வது துறவறம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350) என்று வள்ளுவரே கூறியிருக்கிறார்.

இந்த நான்கு வகை அறங்களை கடைபிடிப்பதற்கு எந்த காலகட்டம் சிறந்தது. திருமணம் செய்து கொள்வதை பொறுத்தா, பணம் சம்பாதிப்பதை பொறுத்தா என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழலாம்.
சாகும் நிமிடம் வரை படித்துக் கொண்டே இருந்தாலும் பள்ளி படிப்புக்கென்று ஒரு வயது இருக்கிறது. அதிகபட்சமாக முப்பது வயதுக்கு மேலும் பாடசாலை சென்று படிப்பது அவ்வளவு நன்றாக இராது. எனவே இல்லறத்தான் என்ற தகுதியை அதிக பட்சம் முப்பது வயதிலாவது மனிதன் பெற வேண்டும்.
அப்படி பெற்ற பிறகு தனது பிள்ளைகள் பொறுப்புக்கு வந்தபிறகும் ஓடிக்கொண்டேயிருப்பவன் ஆசைகளை வளர்த்துக் கொண்டு அற்ப வாழ்க்கை வாழ்பவன் ஆகும். இல்லறம் நடத்தும் தன் பிள்ளைகளுக்குச் சுமையாக இராமல் அக்கால முதியோர் வானப்பிரஸ்தம் அல்லது அகத்தவம் சென்றார்கள். இல்லறத்தாராகிய பிள்ளைகள் அவ்வப்போது சென்று அவர்களைச் சந்தித்து அகத்தவத்தினராகிய பெற்றோருக்கு வேண்டிய உணவு, உடை, உறையுள் மற்றும் பிற தேவைகளை நிறைவு செய்வார்கள். அக்காலத்தில் அரசர்கள் கூட அகத்தவம் சென்றார்கள். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்
கம்பராமாயணத்தில் தசரதன் ஒருநாள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும்போது காதோரம் நரைமுடி தென்பட்டதை அடுத்து, தனக்கு முதுமை வந்து கொண்டிருப்பதை உணர்ந்து தன் மூத்த மகனாகிய இராமனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு வானப்பிரஸ்தம் செல்லத் தீர்மானிக்கிறான்.
மன்னனே அவனியை மகனுக் கீந்துநீ
பன்னருந்த வம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினிற் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர் மயிர் (க.ரா. அயோத்தியா காண்டம், 2)

என்ற கம்பனது இந்தப் பாடல் அடிகள் தெளிவு படுத்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
Permalink  
 


தற்காலத்திலும் இம்முறை வழக்கிலிருந்தால் முதியோரான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருக்க மாட்டார்கள், பிள்ளைகளும் பெற்றோருடன் மனத்தாங்கல் கொண்டு அவர்களை முதியோர் விடுதிகளில் கொண்டு சேர்க்கின்ற அவலமும் நிகழாது.
துறவறத்தை ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் என்கிறது சனாதன தர்மம். சமண பௌத்த சமயங்களும் அதையே கூறுகின்றன. காரணம் ஒருவனுக்கு ஞானம் இந்த வயதில்தான் பிறக்கும் என்று எப்படி வரையரை செய்ய முடியும்? இல்வாழ்வார்தாம் துறவிகளின் வாழ்க்கைக்கும் துணை நிற்கவேண்டும். இல்லறத்தார் ஆதரவின்றி துறவிகள் தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு, உடை போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.

இதனை அறநெறிச்சாரம் என்ற நூல்,

“நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி – யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்” (அறநெறிச்சாரம் 15)

என்று துறவறத்தாரை இல்லறத்தார் போற்றவேண்டும் என்றும், இல்லறத்தாருக்குத் துறவறத்தார் துணைப் புரியவேண்டும் என்று வலியுறுத்திப் பேசுவதைக் காணலாம்.
மாணவர், அகத்தவத்தினர், துறவிகள் ஆகிய மூவரையும்தான் வள்ளுவர் ‘இயல்புடைய மூவர்’ என்று கூறுகிறார் என்று கொள்ள வேண்டும்.
ஆனால், நல்லாற்றின் நின்ற இந்த இயல்புடைய மூவர்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - என்பதை சமூகத்தில் சான்றோர்கள் ஏற்றுக் கொண்ட போதும், 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் காலனி ஆதிக்க சிந்தனையில் ஊறிய தமிழறிஞர்கள் ‘இயல்புடைய மூவர்’ என்ற தொடருக்குச் செய்த விசித்திரமான ஊகங்கள் பின் வருமாறு:

மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர் என்று பேராசிரியர் வ. சுப. மாணிக்கம்,
இரா. சாரங்கபாணி, புலவர் குழந்தை ஆகியோர் உரை எழுதினார்கள்.

இளையர், முதியோர், பெண்கள் என்று ச. தண்டபாணி தேசிகர் கூறினார்.

உறவினர், நண்பர், ஏழைகள் என்று நாமக்கல் இராமலிங்கம். பிள்ளை குறிப்பிட்டார்.

பண்பு வாய்ந்த ஊர்மன்றத் தலைவராகிய மூவர் என்று திரு.வி.க. எழுதினார்.

பார்ப்பான், அரசன், வணிகன் என்று தேவநேயப் பாவாணர் உரை எழுதினார்.

சைவர், வைணவர், வைதிகர் அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் என்று
மு .கோவிந்தசாமி கூறினார்.

அறவோர், ஒழுக்கத்து நீத்தார், அந்தணர் என்றார் கா அப்பாத்துரையார்

மாணவர், தொண்டர், அறிவர் என்றார் சி இலக்குவனார்

தாய், தந்தை, தாரம் என்று கூறினார்கள் வ. உ. சி. மற்றும் இரா. இளங்குமரனார், ஆகியோர்.

தாய், தந்தை, ஆசிரியர் என்று உரை எழுதினார் பாரதிதாசன்.

பெற்றோர், துணைவி, மக்கள் என்று கு. ச. ஆனந்தன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி மற்றும் திருக்குறள் முனிசாமி ஆகியோர் கூறியிருக்கின்றார்கள்.

கிறித்தவ சமயத்தில் ‘மூவொரு கடவுள்’ (Trinity ) என்ற கோட்பாட்டில் குறிப்பிடப் பட்ட பிதா, மகன், பரிசுத்த ஆவி என்று மு.தெய்வநாயகம் கூறினார்.

கல்வி நிலை, மனத் தவநிலை, துறவுநிலை நிற்பார் என்று கா. சு. பிள்ளை, மட்டும் பரிமேலழகரை ஒட்டி உரை கூறியிருக்கிறார்.

இயல்புடைய மூவர் என்பது தேவநேயப் பாவாணர் கூறியது போல பார்ப்பான், அரசன், வணிகன் என்றால் பொருந்துமா? பொருந்தாது. ஏனெனில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பது தொழிலைக் குறிக்கும்.. தொழில் வேறு. அறம் வேறு. இல்வாழ்க்கையாகிய அறம் – எல்லாத் தொழிலாளர்களுக்குமே உரிய பொதுவான அறமேயாகும். இல்வாழ்வானுக்குரிய தொழில்களில் வேளாண்மையாகிய உழவுத்தொழிலும் ஒன்று. அதே நேரத்தில் உழவுத்தொழில் மட்டுமே இல்வாழ்வானுக்கு உரியதும் அன்று. .உழவன் இல்வாழ்வானாக இருக்கலாம். இல்வாழ்வான் உழவனாகவும் இருக்கலாம். அதற்காக, இல்வாழ்வான் என்பவன் உழவுத்தொழில் செய்பவன் மட்டுமே எனக் கொண்டால் மற்றத் தொழிலாளர் அத்தனை பேரும் துறவிகளா? தொழில் செய்யாமல் வருமானம் இன்றி இருக்கின்றார்களா? என்ற கேள்விகள் வந்து விடுகின்றன. மேலும் மேல்வருணத்தார் மூவரையும் ‘இயல்புடைய மூவர்’ என்று கூறினால் இல்வாழ்வார் அத்தனை பேரும் நான்காவது வருணத்தாரா என்ற கேள்வியும் வந்துவிடும்!

மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர் என்று பேராசிரியர் வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, புலவர் குழந்தை ஆகியோர் கூறினார்கள். திருவள்ளுவர் காலத்தில் ஒரு மனிதன் எப்படி மூவேந்தருக்கும் கடப்பாடு உடையவனாக இருந்திருப்பான்? மூவேந்தர்களும் ஒரே ஊரை ஆட்சி செய்தார்கள் என்று எந்த இலக்கியமும் கூறவில்லை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தும், தமிழ் மொழியிலேயே திருக்குறளை எழுதியிருந்தும் தமிழ் என்றோ, தமிழன் என்றோ, தமிழ்நாடு என்றோ, மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் என்றோ, அவர்கள் ஊரையோ குறிப்பிடவில்லை. இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழனும் அந்த இடத்திற்குரிய அரசன் ஒருவனின் குடிமகனாக வாழ்ந்திருப்பானே தவிர, மூன்று அரசர்களுக்கும் குடிமகனாக வாழ்ந்த வரலாறு இல்லை. மூவர் என்பது மூவேந்தர் என்பதை ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால் கூட, மூவரசர்களிடமும் இல்வாழ்க்கை உண்டு அல்லவா? எனவே, இல்வாழ்வான் என்பதிலேயே மூவேந்தர்களும் அடங்கி விடுவார்கள் அல்லவா?

இளையர், முதியோர், பெண்கள் என்று ச தண்டபாணி தேசிகர் கூறினார். பெண்களைத் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறார். இளையோரிலும் முதியோரிலும் பெண்கள் இருக்கமாட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது.

சைவர், வைணவர், வைதிகர் அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் என்று
மு .கோவிந்தசாமி கூறினார். சைவரிலும் வைணவரிலும் வைதிகத்தைக் கடைப்பிடிப்பவரைக் காண்பதில்லயா? அரசன், ஆசான், ஆன்றோர் என்று வைத்துக் கொண்டாலும், ஆன்றோர் ஆசானாக இருப்பதில்லையா?

கா. அப்பாத்துரையார் கூறுவது போல இயல்புடைய மூவர் -அறவோர், ஒழுக்கத்து நீத்தார், அந்தணர் என்பது பொருந்துமா? பொருந்தாது ஏனெனில், அறவழியில் வாழ்வோர் அனைவரும் அந்தணர்களேயாவர். திருவள்ளுவரே,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” (30) எனக் கூறிவிட்டார்.

எனவே தனியாக அறவோர் என்றோ அல்லது அந்தணர் என்றோ பிரித்துக் கூறவேண்டியதில்லை.

திருவள்ளுவர் கிறித்தவ மதப் போதனைகளைப் புனித தோமாவிடமிருந்து கற்று அவற்றைச் சார்ந்தே திருக்குறளை இயற்றினார் என்ற கருத்தைப் பரப்பி வந்த மு. தெய்வநாயகம் என்பார், பிதாவாகிய கடவுள், மகனாகிய இயேசு கிறித்து, பரிசுத்த ஆவி என்னும் மூவரும்தான் வள்ளுவர் கருதிய இயல்புடைய மூவர் என்ற கருத்தில் “இல்வாழ்வானை, இயல்புடைய மூவராகிய கடவுளுக்குத் துணை என வள்ளுவர் கூறுகின்றாரோ என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது” என்று எழுதினார். கி.பி.325 ல் துருக்கியில் உள்ள நைசியா என்னும் நகரத்தில் ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் தலைமையில் நடைபெற்ற நைசியா மாநாட்டில் (Council of Nicaea ) கிறித்தவ மறையியல் அறிஞர்கள் மற்றும் பேராயர்கள் 318 பேர் கூடி வாக்கெடுப்பின் மூலம் பிதா, மகன் ஆகியோருடன் பரிசுத்த ஆவியையும் சேர்த்துக் கொண்டார்கள் என்பது வரலாறு. அதற்கு முன்னர் கிறித்தவ சமயத்தில் “மூவொரு கடவுள்” ( Trinity) என்ற கோட்பாடு கிடையாது. விவிலியத்தின் முதற்பகுதியான பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி என்பதும், ‘மூவொரு கடவுள்’ என்ற கோட்பாடும் எங்குமே கூறப்படவில்லை. திருவள்ளுவரின் காலம் புனித தோமா இந்தியாவுக்கு வந்த கி.பி. முதல் நூற்றாண்டு என்று மு.தெய்வநாயகம் அவர்களே கூறுகிறார். ஆனால் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘பரிசுத்த ஆவியை’ பிதா, மகன் ஆகியோருடன் சேர்த்து முதல் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் இயல்புடைய மூவர் என்று எவ்வாறு கூறிவார் என்பது தெரியவில்லை.
கு. ச. ஆனந்தன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, திருக்குறள் முனிசாமி முதலிய, பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தமிழறிஞர்கள், பிரம்மச்சரியர், வானப்பிரஸ்தர், சந்நியாசிகள் என்ற வாழ்க்கைப் பிரிவுகள் வடவர் கொண்டுவந்தது என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு, இயல்புடைய மூவர் – என்பதற்குப் பெற்றோர், மனைவி, மக்கள் என்று குடும்ப உறுப்பினர்களைக் கொணர்ந்தார்கள். அதன் பின்னர் கிளிப்பிள்ளைகள் போல் பின்னர் வந்த பல உரையாசிரியர்களும் அப்படியே உரை செய்தனர்.

பேராசிரியர் மோகனராசு அவர்கள் எழுதுகிறார்: “ யான் ‘இயல்புடைய மூவர்’ என்பதற்கு 375 உரையாசிரியர்கள் கூறும் உரைகளைத் தரவுகளாகக் கொண்டு வகைதொகை செய்து ஆழமாக நடுநிலையோடு ஆராய்ந்தேன்.. அவற்றை 20 தொடர்களாக தொலைவரியில் உள்ள ‘வள்ளுவர் குரல்’ குடும்பத் தளத்தில் வழங்கி வந்துள்ளேன். அந்த ஆய்வு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. திருக்குறள் உரையாசிரியர்களால் இயல்புடைய மூவர் என்ற தொடருக்குப் பெரிதும் ஏற்கப்பட்ட பொருட்கள் இரண்டு.

1) பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி.
2) பெற்றோர், மனைவி, மக்கள்.

இவற்றுள், முதற் பொருள் காலந்தோறும் தேய்ந்து, ஏற்க இயலாது போவதையும், பெற்றோர் , மனைவி, மக்கள் என்பதே ஏற்கத் தக்க பொருளாக அமைவதையும் காட்டியுள்ளேன்” என்று கூறுகிறார்.

பேராசிரியர் மோகனராசு அவர்கள் மிகச் சிறந்த தமிழறிஞர். திருக்குறளை ஆழமாகக் கற்றவர், பல ஆண்டுகளாக ஆய்வு செய்கிறவர். தமிழ் இலக்கியங்களிலும் மிகுந்த புலமை பெற்றவர். ஆனால் திராவிட சிந்தனையால் மெய்யியல் அறிவை புறக்கணிப்பவர்.
பிரம்மச்சரியம் என்ற குருகுல வாழ்க்கை மற்றும் வானப்பிரஸ்தம் என்ற முதியோர் அகத்தவம் என்னும் நிலைகள் தற்கால வாழ்க்கையில் இல்லாமல் தேய்ந்து போயிருக்கலாம். அதனால் வள்ளுவர் கூறிய ‘இயல்புடைய மூவர்’ என்ற தொடர் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போகலாம். அதற்காக, வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறாகப் பொருள் கூறுவது, கூறியவர் எப்பேர்ப்பட்ட தமிழறிஞராக இருப்பினும் ஏற்புடையது அல்ல என்பதைச் சான்றோர் ஒப்புக் கொள்வர். வள்ளுவர் கூறியதற்கெல்லாம் தற்கால வாழ்க்கைக்குத் தக்கபடி உரை எழுதிக் கொண்டு போனால் அது திருக்குறள் உரையாக இருக்காது.

திருக்குறளை அது இயற்றப்பட்ட காலத்தில் வைத்தே பொருள் கூறும் மரபு இருந்தது.
பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர், போன்ற பழந்தமிழ்ச் சான்றோர் வெவ்வேறு சமயப் பிரிவுகளைச் சார்ந்தோராய் இருந்தும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்த நேரிய உரைகள் அனைத்தும், ஒவ்வொரு குறட்பாவிலும் திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணருவதில் மட்டுமே நோக்கம் கொண்டிருந்தன. இதனையே நடுநிலையாளரும் போற்றினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் மொழியின் மறு கட்டமைப்புக் காலத்தில் அந்த மரபு புறக்கணிக்கப்பட்டு, உரையாசிரியர்கள் தாங்கள் பயின்று வந்த சிந்தனையின் பாங்கில் விளக்கங்கள் எழுதினார்கள். திருக்குறள் எடுப்பார் கைப்பிள்ளை ஆனது. அதனால் இயல்புடைய மூவர் யார் என்ற கேள்விக்குப் பல அறிஞர்களால் பெற்றோர், மனைவி, மக்கள் என்று மேம்போக்காக உரை எழுதப்பட்டது. இல்லறத்தான் தன் குடும்பத்தினருக்குத் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கூறுவதற்குத் திருவள்ளுவர் ஒரு திருக்குறள் எழுதவேண்டிய அவசியமில்லை.
இல்வாழ்வான் என்ற சொல்லின் விருத்தாந்தத்தைப் பார்ப்போம். இல்வாழ்வில் உள்ளோரின் முதல் கடமை விருந்தோம்பல். சிலப்பதிகாரத்தில் அதைச் செய்யும் தகுதியைக் கணவன் கோவலன் பிரிவால் இழந்தேன் என கண்ணகி கூறுவாள்.

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
(6. கொலைக்களக் காதை –சிலப்பதிகாரம்)
ஒரு ஆண் தனித்து இருந்தாலும், பெண் தனித்து இருந்தாலும் விருந்தினர் வரமாட்டார். ஆணும், பெண்ணும் சேர்ந்த இல்லறத்தாராக இருக்கும் போது மட்டுமே விருந்தினர் வருவர். விருந்தோம்பல் மட்டுமல்ல, தங்களை நாடிவந்த சுற்றத்தாரைப் பேணுதலும் இல்லத்தலைவியாகிய மனைவியின் தலையாய கடமை என்பதை தொல்காப்பியர்,
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல் பொருள். கற்பியல் 11)

எனும் நூற்பா வழி விளக்குகிறார்.
ஆதலால் இல்வாழ்வானாகிய குடும்பத் தலைவன் தன் மனைவியோடு இணைந்தே அல்லது இல்லாள் தன் கணவனோடு இணந்தே விருந்தோம்பலைச் செய்வார்கள். தனித்தனியே செய்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. எனவே இல்வாழ்வான் என்பது குடும்பத்தலைவன் மட்டுமல்ல, கணவன் மனைவி இருவரையும் சேர்த்தே கொள்ளல் வேண்டும். இயல்புடைய மூவருக்கும் ஆற்றும் கடமைகளும் விருந்தோம்பலைப் போன்றதே. ஆகையால் பகுத்தறிவு பேசும் உரையாசிரியர்கள் கூறும் இயல்புடைய மூவரான பெற்றோர், மனைவி, மக்கள் என்பதில் மனைவியைக் கணவனோடு சேர்த்து விட்டால் இருவரே மிஞ்சுவர். இயல்புடைய மூவர் இயல்புடைய இருவராகி விடுவர் !

இல்வாழ்வான் என்ற சொல் வருகின்ற இரண்டு குறட்பாக்களையும் பாருங்கள்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (42)

இவ்விரண்டு குறள்களிலும் இல்வாழ்வான் என்பது கணவன் மனைவி கொண்ட குடும்பத்தையுமே குறிக்கிறது எனலாம். இதை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மெய்ந்நிலை மயக்கத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொடுத்ததும் ஆகும்

‘இல்வாழ்வான் என்பான்’ (குறள். 41)

‘தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்’ (குறள். 144)

‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ (கலித்தொகை. 10)

என ஒருமைப்பெயர்கள் ஒருமையளவோடு நில்லாது பன்மைப் பெயரையும் சுட்டுதல், மெய்ந்நிலை மயக்கின் ஆகுதலாம்.
(தொல். சொல். 449 நச்சினார்க்கினியர். உரை)

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (குறள். 381) என்று குறள் கூறுகிறது.

தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் (17:21) வரும்
‘பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்”

என்ற அடிக்கு நச்சினார்க்கினியர் “அரசர்க்குரிய வாகிய படை குடி கூழ் அமைக்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவும் ஆகிய பொருள் திறத்துப்பட்ட வாகைப் பகுதியானும் பக்கமென்று அதனால் மெய்ப்பொருள் உணர்த்தலும் கொள்க” எனக்கூறியுள்ள உரையில் ஆறு அங்கங்களில் அரண் என்பது இல்லை. இளம்பூரணர் கூறியவாறு ‘புதல்வரைப் பெறுவன’ என்பதைச் சேர்த்துக் கொண்டுள்ளார். இதனால் நச்சினார்க்கினியருக்கு அரசு அங்கங்களில் ஒன்றாக அரண் என்பது கருதத் தக்கது அன்று என்பது பொருளன்று.

தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில்,

‘மெய்ந்நிலை மயக்கி னாஅ குதவும்” (தொல். சொல். எச்சவியல் 53)

என்னும் அடிக்கு எழுதிய உரையில், ‘நட்பு அரண் ஆறும் உடையான்’ என்றாற் போல்வன எல்லாம் ஒருமைப் பொருள் கூறிற்றேனும் பன்மைப் பொருளை உணர்த்தலின் மெய்ந்நிலை மயக்கம் ஆயிற்று என்பர். மெய்ந்நிலை மயக்கமாவது பொருள்நிலை மயக்கம் கூறுதல்.

வள்ளுவர் பாயிரத்தில் கடைசியாக அறன் வலியுறுத்தல் வைத்துள்ளது, வள்ளுவத்தின் திரள் பொருளே ஆகும். ஒவ்வொரு செயலிலும் அறம் செய்ய வேண்டும் என்பதற்கு, அதன் பின்பாக இல்வாழ்க்கையை அதாவது மனைவி மக்களோடு அறம் செய்யவே என வலியுறுத்தவே வைத்துள்ளார்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற வள்ளுவர், ‘நல்லாற்றின்’ என்று கூறி, அந்த நல்லாறு என்பது வானுறையும் தெய்வ உலகில் வைக்கப் படுதலே என முடிக்கிறார்.
ஜான் மார்ஷல் என்பவர் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று அறிஞரும் தொல்லியல் ஆய்வாளரும் ஆவர். அவர் சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வு செய்து ‘மொகஞ்ஜோ தாரோ மற்றும் சிந்து நாகரிகம்’ என்ற பெயரில் மூன்று தொகுதிகளாக 1931 ல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.
இதன் தமிழாக்கம்:

சிந்து வெளி “[ஹரப்பன்] மதம் இப்போதும் இந்தியர்களால் பின்பற்றப் படுகின்ற இந்து மதத்திலிருந்து வேறுபடுவதைப் போலவே இல்லை .... மொஹென்ஜோ-தாரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு இடங்களில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகம் ஒரு தொடக்க நிலை நாகரிகம் இல்லை, ஆனால் ஏற்கனவே இந்திய மண்ணில் காலம் காலமாய் முதிர்ந்த மற்றும் ஒரே மாதிரியான பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக வழங்கி வந்ததற்கான மனித முயற்சிகளின் பின்னால் உள்ளன ...என்பதாகத் தெரிகிறது. ” - ஜான் மார்ஷல், மொஹென்தாரோ மற்றும் சிந்து நாகரிகம் (லண்டன், 1931, 3 தொகுதிகள்.), தொகுதி. I, பக்க. vi-viii.
மெய்யியல் மரபை ஆரியர் திராவிடர் என்று இரண்டு இனங்களாகப் பிரித்துப் பரப்பியது கால்டுவெல் போன்ற சில வெளிநாட்டவரின் சுயநலம் படிந்த ஊகங்கள் என்பதைத் தொல்லியல் நிபுணர் ஜான் மார்ஷலின் கூற்று மிகத் தெளிவாய் நிரூபிக்கிறது.
இயல்புடைய மூவர் என்பது மாணவர், அகத்தவத்து முதியோர் மற்றும் துறவிகள் என்பதே வள்ளுவரின் கருத்து என்பது தெளிவாகிறது. ஏனெனில் இல்வாழ்வார் என்போர் பொருள் ஈட்டும் நிலையில் உள்ளோர். மற்ற மூவரும் பொருள் ஈட்டுவதில்லை. எனவே இம்மூன்று வகையினருக்கும் உணவும், உறையுளும், மருந்தும் அளித்துப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இல்வாழ்வோருக்கு உள்ளது.
மனு நீதி 3:78
यस्मात् त्रयोऽप्याश्रमिणो ज्ञानेनान्नेन चान्वहम् ।
गृहस्थेनैव धार्यन्ते तस्माज् ज्येष्ठाश्रमो गृही ॥ 3: 78 ||
யஸ்மாத் த்ரயோ அப்யாஷ்ரமிணோ ஞானேன அன்நேன ச அந்வகம் |
கிரஹஸ்தேன் ஏவ தார்யந்தே தஸ்மாஜ் ஜ்யேஸ்டாஷ்ரமோ க்ரிஹி ||
இல்லறத்தில் நிற்பவன் ஏனைய மூன்று நிலைகளிலும் உள்ளவர்களுக்கு உணவு ஈந்தும், வேதஞானம் பெற உதவி செய்தும் அவர்களை ஓம்புதலால், அவனே நால்வகை ஆசிரமத்தாருள்ளும் தலைமை பெறுகிறான்.” (மனு நீதி 3: 78)
வேதங்களையும், சாத்திரங்களையும் நன்றாக ஓதியுணர்ந்த திருவள்ளுவர் பெருமான் மனு நீதியில் கூறப்பட்டுள்ள இச்சுலோகத்தின் கருத்தை எடுத்தாண்டு இரண்டு குறட்பாக்களைச் செய்திருக்கிறார். இச்சுலோகத்தின் முதற்பகுதியின் கருத்தை அப்படியே மாற்றமில்லாமல்,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை (41)

என்று கொடுத்திருப்பதால்,இயல்புடைய மூவர் யார் என்று வள்ளுவர் கருதுவது தெள்ளத் தெளிவாகிறது.

மேலும் ஒரு சான்றாக மேற்கூறிய மனு நீதியின் சுலோகத்தின் இறுதிப் பகுதியான “இல்லறத்தில் நிற்பவன் மாணவர், இல்வாழ்வார், அகத்தவத்தினர், துறவிகள் என்னும் நால்வகை நிலையினருள்ளும் தலைமை பெறுகிறான்” என்ற கருத்தைத், திருவள்ளுவர்,

இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை (47)

என்ற குறளில் வைத்துக் கூறுவதைக் காணலாம். இக்குறளில் ‘முயல்வாருள் எல்லாம் தலை’ என்ற தொடருக்குக் காலிங்கர் மட்டுமே சரியான உரை தந்திருக்கிறார். அவர் சொல்கிறார் : ‘இல்லறத்தான் பிற மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவரைக் காட்டிலும் தலையாவான் என்றவாறு’ .[ பிற மூன்று ஒழுக்கம் என்பது - கல்விநிலை, அகத்தவ நிலை, தவ நிலை ஆகிய மூன்று நிலைகள் ].

இக்குறளை ‘இல்வாழ்க்கை வாழ்வான் என்பான் இயல்பினால் முயல்வாருள் எல்லாம் தலை’ என்று பிரித்துப் படித்தால், ‘இயல்பினால் முயல்வார்’ என்ற தொடர் வருகிறது. அதற்கு மனு நீதியில் கூறியுள்ள நான்கு ஆசிரமத்தார் என்பதை இயற்கையாக அமைந்த நான்கு வாழ்க்கை நிலைகளில் நின்று அறத்தை நிலைநாட்ட முயல்கின்றவர் என்று பொருள் கொண்டால் மாணவர், இல்வாழ்வார், அகத்தவத்தினர் மற்றும் துறவிகள் என்பது வெள்ளிடை மலை.

மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சொராஷ்ட்டிர மதத்தின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவிலும் (Zend Avesta) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மனு நீதியின் காலம் கி.மு. 1280 என்று சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir W.Jones), என்ற ஆய்வாளரும், கி.மு. 900 என்று எல்ஃபின்ஸ்டொன் (Elphinstone), என்ற ஆய்வாளரும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று எம். எம். பி. வி. கேன் (M.M.P.V.Kane) என்ற ஆய்வாளரும் குறிப்பிட்டுள்ளார்கள். எப்படியிருந்தாலும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட திருக்குறளுக்கு முன்னரே மனு நீதி எழுதப்பட்டது என்பது உறுதி.

எனவே திருவள்ளுவர்,ன் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை (41)

என்ற குறளை, மனு நீதியில் கூறப்பட்ட கருத்தினை எடுத்தாண்டே இயற்றியுள்ளார் என்பதும், அதனால் ‘இயல்புடைய மூவர்’ என்ற சொற்றொடர் மாணவர், அகத்தவத்தினர், துறவிகள் என்ற மூவரே என்பதும் நிறுவப்படுகிறது.
----------------------------------



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இயல்புடைய மூவர்

 
 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )
இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும்   நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்

நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார்,

 இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன்,   நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்  இல்வாழ்வான் என்பான் துணை), அடுத்த குறள் - ஐம்புலத்தார் ஓம்பல் எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அனைத்து குடும்ப உறுப்பினரையும் போட்டு விட்டார்.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லை குறளில் சொல்லவே   இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர்,  அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை.
Iyalpudaiya%2Bmuuvar%2B1aa%2B%25281%2529

 நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்
Iyalpudaiya%2Bmuuvar%2B1p%2B%25281%2529.

Iyalpudaiya%2Bmuuvar%2B1aag%2B%25281%252
 
குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள்  சமணர் உரை உட்பட கூறினர்.
 
திருவள்ளுவர் மிகத் தெளிவாய் ஒருவர் இவ்வுலகில் வாழ்வது எளியோர்க்கு உதவி புகழ் பெறவே என்பார். 
 
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
 
இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள். 
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                         6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
                                 - திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் - ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் 
அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் - மு கோவிந்தசாமி
 அறவோர், நீத்தார்,  அந்தணர் - கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் - சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்

பெற்றோர், துணைவி, மக்கள் 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் -கா சு பிள்ளை

குடும்பத்தாரைப் பிரித்து தாய், தந்தை, மனைவி, மகன் என்றெல்லாம் பிரிப்பதோ, தொடர்பற்று ஜாதிகளை திணிக்கும் கிறிஸ்துவ வெறி தேவநேயர் உரைகளோ வள்ளுவர் உள்ளம் இல்லை.

தமிழர் மெய்யியல் மரபு, வேதங்கள், இறை வணக்கம் என்பதை மாற்ற எத்தனை பாடுபடல்- எல்லாருமே  கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திருவள்ளுவர் 1330 குறளில் இல்லறம் என்ற சொல்லை சொல்லவே இல்லை, தன் குடும்பத்தோடு வாழ்வது அன்பிற்கானது, இங்கு அவர் சொன்னது - இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. வள்ளுவர் காட்டும் நல்லாறு ஈதலும் - விருந்தோம்பலும். எனவே - மனைவி, மக்கள், பெற்றோர் என்பது வள்ளுவத்தின் தன்மைக்கு எதிரானது

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள் 231: புகழ்

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222:ஈகை

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 81:விருந்தோம்பல்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: :விருந்தோம்பல்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard