Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொங்கலோ பொங்கல்! இராம.கி.


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பொங்கலோ பொங்கல்! இராம.கி.
Permalink  
 


பொங்கலோ பொங்கல்!

(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, அங்கு பதியப்பட்டது.)
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல, சரியானபடி அறிய, இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இவ்விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும், இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முற்காலத்தில் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ”ஏகலோடி” என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்புறுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; புவிக் கோளத்திற் கற்பிக்கும் ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவதாகும். இந்த வான் நடுவரையை, இன்னொரு விதமாய், விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்றும் சொல்லுவதுண்டு.
விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களும் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த விசும்பு வட்டம், ஏகலோடி என்ற இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல்” என்று புழங்கும் வினைச்சொல் ”சாய்ந்து இருத்தல்” என்ற பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” என்றால், ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருள் கொள்ளும்) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்தும் நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வரப் போவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.
இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.
ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.
இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம் சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் செல்லச் செல்ல இந்த ஒக்க நாட்கள் சிறிது சிறிதாக முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.
இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுகிறது (=ஏற்படுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் சொல்லுவார்கள்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.
இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் காலங்களையும்க் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பதே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.
நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். நில்லயன முறையின்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இந்தக் காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.
இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும்.
அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.
இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)
மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.
அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் ”பொங்கல் விழாவை கி.பி.285 ற்கு முன் தமிழர் என்ன சொல்லிக் கொண்டாடினர்?” என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான விடையை, விழாவைக் கொண்டாடும் முறையிலிருந்து புரிந்து கொள்ளலாம். பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.
இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். ”அந்த வேறு எது?” என்பது அடுத்த கேள்வி.
[இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]
[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே.
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்
முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியற்காரர்.)
கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப் பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம்.
இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]
”சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும்?” என்பதை இனிப் பார்ப்போம்.
கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.
இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலிற் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)
எந்தவொரு சூரிய ஆண்டுத் தொடக்கமும் (tropical year beginning) பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும்.
இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும். (சாய் என்பது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று மேலை நாடுகளிற் sine ஆகி நிற்கிறது.)
பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது சூரியனின் வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. அப்படியானால் தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது என்ற பொருளையே ஏரணத்தின் மூலம் நாம் பெறுகிறோம். ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பெரும்பொழுதுகளுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.
பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.
பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----
என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.
அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.
சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]
இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!
கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
பொங்கலோ பொங்கல்!
அன்புடன்,
இராம.கி.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு,   தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு!

நக்கீரன்

சனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின்  தொடக்க  நாளாக  டிசெம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்தெம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.

இங்கிலாந்தில், சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12 ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25  ஆண்டுத் தொடக்கமாக இருந்தது.

இன்று கிறித்தவர்கள் மட்டுமல்ல  முழு உலகத்தினரும் சாதி சமய வேறுபாடின்றி சனவரி 01 புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

பல இனத்தவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடு கிறார்கள்.  யப்பானியர்கள் தங்கள் புத்தாண்டை சனவரி 14 இல்தான் கொண்டாடி வந்தார்கள். இப்பவும் கொண்டாடுகிறார்கள் ஆனால் இன்று சனவரி 01 முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது.

தமிழர்கள் 3 புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். சனவரி 01, சனவரி 14 (தை 01) மற்றது  ஏப்ரில் 14 (சித்திரை 01) புத்தாண்டாகக்  கொண்டாடுகிறார்கள்.

தமிழ் மாதங்கள் - தமிழ் விக்கிப்பீடியா

இராசிச் சக்கரம்

தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்கள் சனவரி முதல் நாள் நள்ளிரவில் நடை திறக்கிறார்கள்.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக்  கொண்டாடுவதற்குக் காரணம் அன்றுதான் தலை  இராசியான   மேட இராசி,  அசுவனி அல்லது பரணி நட்சத்திரம்  முதல்பாகத்தில்  உதிக்கிறது. இந்த ஆண்டு பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. 

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகக் இன்று கருதப்படுகிறது.

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. காரணம்  இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. புவி ஞாயிறை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் எடுக்கிறது.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.  சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும்  இளவேனில் காலம் தொடக்கமும் ஆகும்.

ஆன்மீக தேடல்கள்...: ஜோதிடத்தில் சித்தர்களின் முக்கிய பங்கு

சூரியனைச் சுற்றிவரும் பூமி,  சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்புவிசை காரணமாக தளம்பல் ஏற்பட்டு அதன் சுற்றுப் பாதையில் ஓர் ஆண்டில் 50.51 ஆர்க் நொடிகள் பின்னோக்கி நகர்கிறது. மொத்தம் 72 ஆண்டுகளில் 1 பாகை பின்னால் சென்று விடுகிறது. இதனால் இன்று இளவேனில்  காலம்  புவியின் பின்னோக்கல் காரணமாக மார்ச் 21 இல் தொடங்கிவிடுகிறது. வானியலாளர்களின் கணிப்பின்படி சூரியன் ஏப்ரில் 19 அன்றுதான் மேட இராசிக்குள் நுழைகிறது.

மங்கலரகமான பிலவ புத்தாண்டு, 13.4.21 அன்று நள்ளிரவுக்குப் பிறகு (14.4.21 அதிகாலை) 1:32 மணிக்குப் பிறக்கிறது. இதேவேளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2 மணி 31 நிமிடத்தில் பிலவ ஆண்டு பிறக்க இருக்கிறது.

சித்திரை முதல்நாளை சிங்கள மக்களும் புத்தாண்டாகக் கொண்டாடு கிறார்கள். காரணம் அவர்களது முன்னோர்களான நாகர்கள் வைதீக (இந்து) மதத்தினராக இருந்தவர்கள்.  மூத்த சிவனின் மகனான தேவநம்பியதீசன் (கிமு. 307 –  கிமு 267 ) பவுத்த மதத்தைத் தழுவிக் கொண்ட முதல் அரசனாவான். ஆனால் இந்துக்களின் காலக் கணிப்பே தொடர்ந்து இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு  வந்திருக்கிறது.

இந்து சமய தமிழர்களைப் போலவே பவுத்த சமய சிங்களவர்களும் சித்திரைப் புத்தாண்டன்று  அதிகாலையில் மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து பவுத்த விகாரைக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் வழக்கத்தில் இருக்கிறது.

தொடங்குகிறது. தமிழர் Science - சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல... | فيسبوك

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக் கருத்து தமிழ்நாட்டில் 1970, 80 களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், இன்றுள்ள 60 ஆண்டு வட்டத்தில் காலத்தை சரியாகக் கணிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகள் முடிந்தவுடன் மறுபடியும் முதல் ஆண்டில் இருந்து தொடங்க வேண்டும். தொடர்ச்சி இல்லை.  இந்த ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன.

 இந்த 60 ஆண்டுகளது பெயர்கள்  தமிழில் இருக்கவில்லை.  எனவே  காலத்தைக் கணிக்க ஒரு தொடர் ஆண்டு தேவைப்பட்டது.  1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து,

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. தை முதல்நாளே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம். அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.

எனத்  தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு அதற்கான அரசாணையை  2008 இல் பிறப்பித்தது.   இப்போது நடக்கும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2052  ஆகும். 

ஆனால் 2011 இல் பதவிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலன  அதிமுக அரசு முன்னைய அரசாணையை  அகற்றி   சித்திரை முதல்நாளே புத்தாண்டின் தொடக்கம் எனச்  சட்டம் இயற்றியது. இதனால் தமிழர்கள் இரண்டு புத்தாண்டுகளை – சித்திரைப் புத்தாண்டு, தைத் தமிழ்ப் புத்தாண்டு – கொண்டாடிவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தை முதல் நாளைத்  தமிழ்த் தேசியத் திருநாள் என அறிவிப்போம் எனச் சொல்லியுள்ளது.

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போல திருவள்ளுவர் ஆண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரை 01 சூரியன் மேட இராசிக்குள் நுழைவது போல தை முதல் நாள் (சனவரி 14) சூரியன் தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தை மகர இராசியில் தொடங்குகிறது. வட மொழியில் அதனை மகர சங்கராந்தி என அழைப்பர்.

புவியில் உள்ள ஒரு இடத்தை சுட்டிக் காட்டுவதற்கு  மூன்று கோடுகளை வானியலாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். முதல் கோடு புவியை வடக்குத் தெற்கென இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோடு (equator) ஆகும்.  இரண்டாவது கோடு நெடுவரை அல்லது நெடுக்கோடு (meridian or line of longitude). இது புவியின் பரப்பில் கற்பனையான பெருவட்டத்தில் பாதியாகும். இவற்றின் ஒருமுனை வட துருவத்திலும் மற்றொரு முனை தென் துருவத்திலும் முடிகின்றன. இவை  ஒரே அளவிலான நெடுக்கோடுகள் அனைத்தையும் இணைக்கின்ற கோடாகும்.

மூன்றாவது கோடு  குறுக்குக்கோடு  (latitude) ஆகும். இந்த  மூன்று கோடுகளை வைத்து உலகில் உள்ள ஓர் புள்ளியின் அமைவிடத்தைப் பெறலாம். ஒவ்வொரு நிரைகோடும் அனைத்து நிலநேர்க்கோட்டு வட்டங்களும் செங்குத்தானவை. எடுத்துக்காட்டாக இலங்கையின் அமைவிடம் நெடுக்கோடு 79.50 பாகை கிழக்கு,  குறுக்குக்கோடு 6.54 பாகை வடக்கு ஆகும்.

சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு  கணக்கிடும் முறையில்  இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு.

1. வெப்பமண்டல  ஆண்டு

சூரியன் மேட இராசியில் நுழைந்து  திரும்ப மேட இராசியில்  வந்தடையும் காலம்  வெப்பமண்டல (சாயன) ஆண்டு என்று அழைக்கப்படுகிறது (Tropical revolution of Earth around the sun).  வெப்ப மண்டல ஆண்டு என்பது  சராவரி 365 நாள்,  5 மணி, 48 நாடி, 45 வினாடிகளைக் கொண்டதாகும். இது ஆண்டுக்கு ஆண்டு சிறிது வேறுபடலாம்.

2. நட்சத்திர மண்டல  ஆண்டு

ஞாயிறு இயக்கம் தொடங்குவது   மேட இராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் நுழையும் காலம்.  முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி ஆகும். தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்  ஒருவருடம் ஆகும் (Sidereal revolution of Earth around the Sun). இதில் நட்சத்திர ஆண்டு என்பது ஞாயிறு  என்பது சராசரியாக 365 நாள், 6 மணி, 9 நாடி, 9.5  வினாடிகளைக் கொண்டதாகும். இந்த முறையை  இந்திய மாநிலங்கள் ஆன தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா மற்றும்  மேற்கு வங்கம் பின்பற்றுகின்றன.

இந்தியாவில் வெளியாகும்  திருக்கணித பஞ்சாங்கங்கள் எல்லாம்  நாசா விண்வெளி நிறுவனம் வெளியிடும் Ephemeris கோப்புகளை வைத்துத்தான் காலத்தைக் கணிக்கின்றன. கிரகரணங்கள் பற்றிய தரவுகள் இந்தக் கோப்புகளில்தான் காணப்படுகின்றன. எத்தனை கோப்புகள் வைத்திருக்கிறார்கள்? கடந்த 9,000 ஆண்டுகளில் இராசிகள், நட்சந்திரங்கள் பற்றிய இருப்பு, ஓட்டம் பற்றிய தகவல்களை கணித்து வைத்திருக்கிறார்கள். அதாவது கிமு 5000 தொடக்கம் கிபி 3999 ஆண்டுவரை கணித்து வைத்திருக்கிறார்கள்!

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் ஞாயிற்றின் ஓட்டத்தை வைத்து முதன் முதலில் ஓர் ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236 இல் கண்டு பிடித்தார்கள். அதனைப் பின்பற்றியே கிமு 44 இல் யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது.

 ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 48 மணித்துளிகள், 45.51 வினாடிகள் (365.242189) கொண்டது ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் யூலியன் ஆண்டு 10.8 வினாடிகள் நீண்டுவிட்டது. இந்த நேர வேறுபாட்டால் கிபி 1582 அளவில் 10 நாட்கள் (1582 – 325)/120 =10) அதிகமாகிவிட்டது. இந்த வேறுபாட்டை  போப்பாண்டவர் கிறகோறி (Gregory)  4 ஒக்தோபர் 1582 க்குப் பின்னர் 15 ஒக்தோபர் 1582  எனக் குறைத்துவிட்டார்.   அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.

தொல்காப்பியர் ஒரு ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். மேலும் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி  ஆகும். இது 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.

சித்திரை முதல் நாளை புத்தாண்டு என்று கொண்டாடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்ததில்லை. இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். எப்போது ஆண்டுத் தொடக்கம் சித்திரைக்கு மாறியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா சித்திரை மாதம் முழுநிலா அன்று கொண்டாடப்பட்டது.

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றை ஒரு  தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில், திருவள்ளுவர் உட்பட,  பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

மேலே கூறியவாறு தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும்.  இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை. ஒருவர் பிரபவ ஆண்டில் பிறந்தார் என்றால் எந்தப் பிரபவ ஆண்டு என்பது தெரியாமல் இருந்தது. ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

எனவே சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் அதே வேளை தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் – திருவள்ளுவர் ஆண்டின் – தொடக்கம் எனக் கொண்டாடுவோம்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

free panchang

Written by Santanam Nagarajan

Research Article no. 1707; dated 11 March 2015
by ச.நாகராஜன்
தமிழக அரசு தை மாதத்தை புத்தாண்டு துவக்கமாக அறிவித்தவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது; பலரும் தவறைச் சுட்டிக் காட்டிய பின் இந்த அறிவிப்பு காலாவதியாகி தற்போது தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே வழக்கம் போலத் துவக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
– ச.நாகராஜன்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?

புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

tamil years

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.

இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

new-year-tamil-cards

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!

இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை ‘பிறக்க இருக்கும் புத்தாண்டு’ ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!

southindiacitiesbig

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.

ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!

வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.

270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!

இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.

இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சித்திரைப் புத்தாண்டும் பை என்ற மாறிலியும்

 

சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்?  தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும்.  தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்?  நமக்குத் தெரியாது.

சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம்.  கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன்.  அதே போல், சித்திரை வேண்டாம் என்பவர்களுக்கும் இது சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு, ஜெயலலிதா மீது கடுப்பு என்பவைதான் உந்துதல்.

போகட்டும்.  ஆனால், சித்திரைப் புத்தாண்டைத் தாக்குபவர்கள் ஒரு புராணக் கதையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இது அறிவியலுக்குப் புறம்பானது;  பழங்குப்பை;  ஆங்கில, திருவள்ளுவர் ஆண்டுகளைப் போலத் தொடர்ந்து வராமல், சுழற்சி முறையில் வருவது முட்டாள்தனம்; என்றெல்லாம் வாதிடுகிறார்கள்.

இயற்கையின் நிலை சுழற்சி நிலைதான்.  இதுதான் முற்கால மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.  பருவங்கள் சுழல்கின்றன.  பருவநிலையை வைத்து, வானிலையை ஓரளவு கணிக்கலாம்.  அதை வைத்துப் பருவத்தே பயிர் செய்யலாம்.  கதிரவன், கோள்கள், விண்மீன்கள், நிலவு என்று விண்ணில் மிதக்கும் உருவங்களைப் பார்த்து வருங்காலத்தை ஓரளவுக்குக் கணிக்கலாம் என்று மனிதன் கண்டு பிடித்தது மிகப்பெரும் சாதனை.

மேலைநாட்டு (ஆங்கில) ஆண்டு முறை அல்லது கிறித்தவ ஆண்டு முறை ஒன்றும் மிகப்பெரிய அறிவியல் சாதனை அல்ல.  அதிலும் எண்ணற்ற பிழைகள் இருந்தன. 1582ம் ஆண்டில் போப் கிரெகொரி ஆட்சியில்தான் பிழைகளைத் திருத்தி இன்றைய நிலையை எட்டி இருக்கிறார்கள். (http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar)

தமிழ் ஆண்டு முறை நிச்சயமாக வடவர்களிடமிருந்து இரவல் வாங்கியதுதான்.  இதில் ஐயம் இல்லை.  இன்றைக்கு நாம் பெரும்பாலும் கிரெகொரியன் ஆண்டு முறையைத்தானே பின்பற்றுகிறோம்.  அது எப்படி நமக்கு வசதியாக இருக்கிறதோ, அதே போல்தான் பழங்காலத் தமிழர்கள் வடவர்களிடமிருந்து ஆண்டு முறையை வாங்கிக் கொண்டார்கள்.  அநத ஆண்டுப் பெயர்களுக்கு எவரோ புராணக் கதையைக் கற்பித்ததால் மட்டும் அது அறிவியலுக்குப் புறம்பானது ஆகாது.

திருவள்ளுவர் ஆண்டு முறை என்று சொல்லும் முறையும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது ஆகாது.  முதலில், திருவள்ளுவர் ஆண்டு முறை என்பதே 20ம் நூற்றாண்டில் படைத்ததுதான்.  இது வடவர்களின் சுழற்சி ஆண்டு முறையை மறுத்து, மேலையர்களின் தொடர்ச்சி ஆண்டு முறையைப் பின்பற்றி, திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னால் என்று கணித்து, தை முதல் நாளை ஆண்டின் முதல் நாளாய்க் கொண்டு வருவது.  திருவள்ளுவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதற்குச் சரியான அறிவியல் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை.  தமிழறிஞர்களுக்கும் தெரியாது.  தற்காலத் தமிழறிஞர்கள், திருவள்ளுவரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு ஆண்டு முறையை அறிவியலின் அடிப்படையில் அமைக்க முடியும்?  சரி, திருவள்ளுவருக்கு முன்னர், சங்கத் தமிழர்கள் எந்த ஆண்டு முறையைப் பின்பற்றினார்கள்? இந்தத் தொடராண்டு முறையின் சிக்கலே அதுதான்.  ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும்.  அந்தப் புள்ளிக்கு முன்னால் என்ன என்று கேட்டால் திணற வேண்டும்.
SuryaSiddhanta.JPG

சரி அதை விடுங்கள்.  வடவரிடமிருந்து இரவல் பெற்ற இந்து ஆண்டு முறைக்கு வருவோம்.  அது என்ன பெரிய அறிவியல் முறையில் கணித்ததா என்று கேட்டால், ஆமாம், நிச்சயமாக என்று சொல்லலாம். தமிழர்கள் பின்பற்றும் இந்து ஆண்டு முறை, சூரிய சித்தாந்தம் என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.  இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கூகிள் நூல் தொகுப்பில் கிடைக்கிறது. (http://books.google.com/books?id=bPUXKcHQw2EC&pg=PA2&dq=surya+siddhanta&hl=en&sa=X&ei=qUSHT5uwIcfniALh08CyAg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=surya%20siddhanta&f=false) ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கிப் படியுங்கள்.  ஆண்டு முறை வரிசையைப் பிழையில்லாமல் துல்லியமாகக் கணக்கிடுவது எளிதல்ல.  மேலை நாட்டவர்கள் 1500 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை 1582ல்தான் திருத்தினார்கள்.  இந்து ஆண்டு முறையை வழி வகுக்கும் சூரிய சித்தாந்தம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் படைத்துப் பின்னர் பலர் அதைத் திருத்தி 12ம் நூற்றாண்டுக்குள் முறைப் படுத்தப் பட்டது என்கிறது விக்கிப்பீடியா (http://en.wikipedia.org/wiki/Surya_Siddhanta).

அதில் இருக்கும் குறிப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் உலகின் அறிவியல் உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காலக்கணக்கை மிகத் துல்லியமாகவே கணக்கிட்டிருக்கிறது.  அந்தக் கணக்குகள் அலுப்புத் தட்டுபவை என்பவர்களுக்கு வேறு ஒரு கொசுறு கொடுக்கலாம்.

உலகம் உருண்டையா தட்டையா என்று மேலைநாடுகள் வெகுகாலம் தடுமாறிக் கொண்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  எகிப்தியர்களும், கிரேக்கர்களும் உருண்டையான உலகத்தின் சுற்றளவைப் பண்டைக்காலத்திலேயே அளவிடக் கற்றுக் கொண்டிருந்தாலும், இடைக்கால ஐரோப்பியர்களுக்கு அதெல்லாம் மறந்து விட்டிருந்தது.  உலகம் தட்டையானது என்று கிறித்தவப் பாதிரிமார்கள் கற்பித்ததை 16ம் நூற்றாண்டில் கலிலியோ பிறந்துதான் மறுதலிக்க வேண்டியிருந்தது. அப்படிச் சொன்னது தெய்வக் குற்றம் என்று கிறித்தவ மதகுரு அவரைத் தள்ளி வைத்தார்.

ஆனால், சூரிய சித்தாந்தம் கோள்களின் நிலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகும் போது, போகிற போக்கில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவையும் கணக்கிடச் சூத்திரம் தருகிறது.  அதாவது பூமி உருண்டையானது என்பதை இயல்பாக எடுத்துக் கொள்கிறது. இது ஒன்றும் தெய்வக் குற்றம் இல்லை.

பூமியின் விட்டம்  = வி =
பூமியின் சுற்றளவு = சு =  வர்க்கமூலம் (_/10 * வி),

அதாவது பை என்ற மாறிலியை பத்தின் வர்க்க மூலம் அல்லது 1.3163 என்று எடை போட்டிருக்கிறார்கள்.  பிறகு, சைன், கோசைன் பட்டியல்களின் மூலம் இதை இன்னும் திருத்தி பை என்ற மாறிலி (10800/3438) அல்லது 3.14136 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீங்கள் கூகிளில் pi என்று தேடினால் 3.14159265 என்ற விடை வரும். பண்டைய இந்தியர்கள் இவ்வளவு துல்லியமாக சைன், கோசைன் பட்டியல் மட்டுமல்லாமல், பை என்ற மாறிலியையும் கணித்ததால்தான், அவர்களால் ஆண்டு முறையில் பிழை அவ்வளவாக இல்லாமல் கணக்கிட முடிந்தது.  இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று புறந்தள்ளுவது பொருத்தமற்றது.

சரி, சரி, இதெல்லாம், பாட்டி கதை.  இப்போதுதான் அணுக்கடியாரமே வந்து விட்டதே.  இன்னும் ஏன் இதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று கேட்கலாம்தாம்.  இன்றைய தமிழ் ஆண்டு முறையும் இந்திய அரசின் ஆண்டு முறைக் கணக்கோடு இணங்கி அணுக்கடியாரக் கணக்கை எல்லாம் ஏற்றுக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பதுதான்!  பழைய பஞ்சாங்கத்தை விடுங்காணும்.  இந்தச் சுழற்சி முறையை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும், அதிலும் ஏன் விக்கிரம, சக ஆண்டு என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா?  சரி, வடநாட்டு மன்னர்கள் பெயரில் இருக்கும் ஆண்டு முறை வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள்.  திருவள்ளுவர் போலச் சரியான காலம் கணக்கிட முடியாத தமிழ்ப் புலவர்களை விட்டு விட்டு, அதியமான், பாரி போன்ற தமிழ்ப் பெருவள்ளல்களின் காலக் கணக்கை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன்?

அது என்ன 60 ஆண்டு சுழற்சி?  அது வியாழன் என்ற கோள் ஒரு முறை கதிரவனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.  அதை இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  பருவகாலம் போல், இந்தச் சுழற்சி முறையிலும் வானிலைக் குறிப்புகள் பொதிந்திருக்கின்றன.  “தாது வருஷப் பஞ்சம்” என்பது போல ஆண்டின் பெயரை வைத்து ஆண்டுப் பலன்களைச் சொல்பவர்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வந்திருப்பவற்றை வைத்துப் பலன் சொல்லுகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தச் சுழற்சிகள், இன்னும் எத்தனை எத்தனை வட்டங்களுக்குள்ளோ, வெளியோ விரிந்து போகின்றன என்று பார்க்க வேண்டும். எல் நினோ(El Nino), லா நினா (La Nina) போன்ற பெருநீரோட்டங்கள் உலகளாவிய வானிலையைப் பாதிப்பது போல் இன்னும் என்னென்ன சுழற்சிகள் இருந்திருக்கின்றன என்று ஒப்பு நோக்க வேண்டும்.

தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் சித்திரைத் திருநாளைக் கொண்டாடிவிட்டு, மேம்போக்காகப் பலன் பார்ப்பதோடு சரி.  சுழற்சி முறை, தொடர்ச்சி முறை, என்பதை எல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பதெல்லாம் மறந்தாகி விட்டது.  ஆங்கில ஆண்டு முறைதாம் நம் வாழ்க்கை என்றாகி விட்டதே.  நம்மவர்கள் முறைகள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுகிறோம்.  புராணக் குப்பைகளுக்குள்ளும் வைரங்கள் ஏதாவது புதைந்திருக்கின்றனவா என்று பகுத்து அறிவோமே!

கொண்டாடுபவர்களுக்கு, இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard