Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்
Permalink  
 


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை

(அதிகாரம்:உழவு குறள் எண்:1031)

பொழிப்பு: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.



மணக்குடவர் உரை: உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது.
இஃது உழவு வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.
(ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் உலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது. ஆதலால் எங்கு சுற்றியும் உழவுத் தொழிலே தலையாய தொழில். உலகம் பல்வேறு முயற்சிகளின் பின் சுற்றினாலும் உழவினாலாய உணவு தேவை என்பதால் எல்லா முயற்சிகளும் உழவுத் தொழிலுக்குப் பின்னே தான் என்று கூறியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:
பதவுரை: சுழன்றும்-செய்து திரிந்தும்; ஏர்-ஏருடையார்; பின்னது-வழியது; உலகம்-உலகமக்கள்.

பொருள்: பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் உலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது.

இத்தொடர்க்கான உரையில் மணக்குடவர் 'உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்' அதாவது உழவைத் தவிர்த்து மற்ற தொழில்கள் செய்தாலும் முடிவில் உழவுத் தொழிலை நம்பி வரவேண்டி இருக்கிறது என்கிறார்.
காலிங்கர், 'கடலோடியும் மலை ஏறியும் காடுமண்டியும் நாடு பரந்தும் ஓடித்திரிதலே அன்றியும் உண்பான் பொருட்டு இதனைப் பிற பிற முயன்று அலம்வந்தும் அதனால் ஒரு பயனும் இல்லை; ஆதலால் ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்' -வாழ்வாதாரத்துக்காக கடல், மலை, காடு நாடு என ஓடி அலைந்தாலும் பயனில்லை. உழவே பயனுள்ளது என்று உரை பகர்கின்றார்.
பரிதியார், 'பூமியைப் பிரதட்சணம் பண்ணின தர்மமும், உழவு செய்து கொடுத்த தர்மத்திற்கு நிகரில்லை'- உலகத்தையே சுற்றி வந்தாலும் உழவினால் வரும் தருமத்திற்கு இணையில்லை என்கிறார்.
பரிமேலழகர் 'உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்'- உடல் உழைப்பு மிகையாக உள்ளது என்று அஞ்சி வேறு தொழில்களை நாடிச் சென்றாலும் கடைசியில் உழவை நம்பியே இந்த உலகம் உள்ளது' என்றார். இவ்வாறாக பழைய ஆசிரியர்கள் அனைவரும் வள்ளுவர் உள்ளம் அறிந்து ஏற்புடைய உரை வழங்கியுள்ளனர்.

உழவே உலகை உயிருடன் வாழவைக்கின்ற தொழில்; உழவுத் தொழில் நடைபெறாவிடின், விளை பொருள்கள் குறையும்; உலகம் வாழ முடியாது. வேறு எந்தத் தொழில்களும் நடைபெறமாட்டா. உலகம் ஏரினால் விளையும் பொருளையே எதிர்பார்த்து நிற்கின்றது; எவ்வகைத் தொழில்களைச் செய்வோராயினும் அவர்கள் அனைவரும் ஏருழவர் பின்னால் நிற்பவரே என்பது கருத்து.

அதனால் உழன்றும் உழவே தலை:
பதவுரை: அதனால்-அதன் காரணமாக; உழன்றும்-துன்பம் துய்த்தும்; உழவே-பயிர்த்தொழிலே; தலை-முதன்மை.

பொருள்: ஆதலால் இன்னல்கள் உடைத்தாயினும் உழவுத் தொழிலே தலைமையுடைத்து.

உழவர்கள் உடல் உழைப்பைத் தருபவர்கள்; வெயில், மழை, பனி ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுத்து உணவை விளவித்துத் தருபவர்கள். அப்படியிருந்தும் நவீன வேளாணமைக் கருவிகள் பயன்படுத்தப்படும் இன்றைய நாளிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கப் பெறாதவர்களாகவே உள்ளனர். இது காலம் காலமாய் உழவர்கள் அனுபவித்துவரும் துன்ப நிலையாகும். ஆயினும் எத்துணைத் துன்பங்களைச் சந்தித்தாலும் உழவே தலையான தொழில் என்று செவ்விதாய்ச் சொல்கிறார் திருவள்ளுவர்.

'பயிர்த் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்ட கடைத்தொழிலாகும்’ என்று சமயநூல்கள் கூறிய நேரத்தில் உழவே தலையான தொழில் என்று தெள்ளிதின் கூறியவர் வள்ளுவர். மற்ற தொழில்களைக் கடை என்று பொருள் தருமாறு வள்ளுவர் இங்கு கூறியுள்ளார் என்பார் பரிமேலழகர் - "வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்று கூறினார்" என்பது அவரது விளக்கவுரை.

உழவுத்தொழிலின் சிறப்பு கூறப்படுகிறது. உலகத்தவர் பிறதொழில்களைச் செய்து திரிந்தாலும் முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர்பார்ப்பர். ஆகையால் இன்னல்கள் ஏற்பட்டாலும் உழவே தலையாய தொழில் என உறுதிபடச் சொல்லப்பட்டுள்ளது.



நிறையுரை:
வேறு எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், உலகத்தார், உணவை உற்பத்தி செய்யும் உழவரின் பின்னால்தான் செல்லவேண்டும் என்கிறார் வள்ளுவர். எத்தொழில் ஆனாலும் அது உழவுக்கு அடுத்துதான் என்பது கருத்து.

இன்றும் ஏனைய தொழில்களைவிட உழவுத் தொழில் தனிச் சிறப்புக் கொண்டதாக உள்ளது. உலகப் பொருளாதாரம் நிலத்தையும் நிலம் சார்ந்த உழவுத் தொழிலாலும் முன்னேற்றம் கண்டதைத் தாண்டி விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. வேளாண் பொருளாதாரத்தைத் தொடர்ந்து சில நாடுகள் பெரும் கனிமத் தொழில்களால் பொருள் மேம்பாடு அடைந்தன. அதன்பின் மின்னணு சார்ந்த தொழில்களால் சில நாடுகள் சிறப்படைந்தன. இப்பொழுது தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களால் வளரும் நாடுகள் சிலவும் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனாலும் எதைச் சார்ந்த பொருளாதாரம் ஆனாலும் ஒரு நாடு தம் உணவுத் தேவைக்குத் தானே விளைக்க வேண்டும் அல்லது விளைபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளை நம்பித்தான் உள்ளன என்பதை யார் மறுக்க இயலும்? வணிகத்தையும், வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதரத்தையும் நம்பிய நாடுகள் உணவு விளைவிக்கும் நாடுகளிடமிருந்து விளை பொருட்கள் பெற முடியா நிலை ஏற்பட்டால் என்னவாகும்? அவை கடிதில் அழிந்து போகும்.
உழவுத் தொழிலின் இன்றியமையாமையையும், அதன் சமுதாயப் பயன்பாட்டையும் கருதியே வள்ளுவர் அதைப் போற்றி அதுதான் தலைசிறந்த தொழில் என்று உழவை முதன்மைத் தொழிலாக உயர்ந்தேத்திப் பேசுகிறார்.

உடல் உழைப்பு குறைவான தொழில்களில் ஊதியம் மிகுதி என்பது உண்மைதான். இருப்பினும் அவற்றிற்குச் சிறப்புத் தர வள்ளுவர் மனம் ஒப்பவில்லை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அன்றோ? எனவே உழவே தலை என்கிறார்.

 

உழவுத் தொழிலின்றி உலகம் நடவாது என்று அதன் இன்றியமையாச் சிறப்பு கூறும் பா இது.

 

பொழிப்பு

உலகம் மற்று எவ்வழிகளில் முயன்றாலும் உழவுக்குப் பின்னேதான்; கடின உழைப்பைக் கொண்டாலும் உழவுத் தொழிலே தலையானது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

104. உழவு

அஃதாவது அரசனுக்கும் அவனுடைய குடிகட்கும் அல்லது ஒரு நாட்டு மாந்தர்க்கெல்லாம் இன்றியமையாத உணவை விளைப்பதும், கைத்தொழிற்கும் வாணிகத்திற்கும் ஓரளவு கரணிமாயிருப்பதும், அரசியல் நடத்தற்கு வேண்டும் இறையிற் பெரும் பகுதியை நல்குவதும். குடிகளுட் சிறந்த வேளாளர் என்னும் வகுப்பார்க் குரியதும், ஆன பயிர்த்தோழில். அது உழுதலாகிய அதன் முதல் வினை பற்றி உழவு எனப்பட்டது. உழவுத் தொழிலைப் பாண்டியம் என்பது இலக்கிய வழக்கு. பாண்டி- எருது. பண்டியின் துணையாற் செய்யப்படுவது பாண்டியம். "பகடு நடந்த கூழ்" என்று நாலடியார் (2) கூறுதல் காண்க. அரசர்குடி உட்பட எல்லாக்குடிகளும் வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் இன்றியமையாதாதலின், இது குடிசெயல் வகையின்பின் வைக்கப்பட்டது.

"சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து இது மேற்குடியுயர்தற் கேதுவென்ற ஆள்வினை வகையாதலின், குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது" என்னும் பரிமேலழகர் அதிகாரப் பாயிரம், ஆரிய முறை தழுவியதும் பொருளொடு பொருந்தாதது மாதலின், ஈண்டைக்கு ஏற்கா தென்க.

 

l2100tn1.gifl2100tn0.gifl2100tn3.gifl2100tn1.gif
சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழங்து முழவே தலை.

 

சுழன்றும் உலகம் ஏர்ப் பின்னது- உழவுத் தொழிலால் உண்டாகும் உடல் வருத்தம் நோக்கி வேறு பல்வகைத் தொழில்களைச் செய்து திரிந்தாலும், அதன் பின்னும் வேளாரல்லாத உலகத்தா ரெல்லாரும் உழவுத் தொழிலின் வழிப்பட்டவரே; அதனால் உழந்தும் உழவே தலை- ஆதலால், எல்லா வருத்தமுமுற்றும் உழவுத் தொழிலே உலகில் தலையாயதாம்.

பிற தொழில்களாற் பொருள் தேடிய பின்பும் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவின்பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியிருத்தலின், 'சுழன்று மேர்ப் பின்ன துலகம்' என்றும், பிற தொழில்கள் வருத்தமின்றிச் செய்வன வேனும் கடைப்பட்டவையென்பது தோன்ற 'உழவே தலை' என்றும் கூறினார். 'ஏர்' ஆகு பெயர். 'உலகம்' வரையறுத்த ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை உம்மை யிரண்டனுள், முன்னது எச்சத்தின் பாற்பட்ட பின்மை; பின்னது இழிவின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

 

உழவார் உலகத்தார்க்கு ஆணி- உழவுத் தொழிலைச் செய்வார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்; அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அத்தொழிலைச் செய்யும் வலிமையின்றிப் பிற தொழில்களை மேற்கொள்வாரை யெல்லாம் தாங்குதலால்.

தேரோட்டத்திற்கு அச்சாணி போல உலக நடப்பிற்கு உழவர் இன்றியமையாதவராதலின் 'ஆணி' யென்றார். தொழில் பற்றிய நூல் வகுப்பாருள்,உழவராகிய வேளாளரும் ஏனை வகுப்பார் போன்றே இருபிரிவார். அவர் சிறுநிலமே யுடைமையால் தாமே உழுதுண்பாரும் பெருநில முடைமையாற் பிறரைக் கொண்டு உழுவித்துண்பாரும் ஆவர். அவ்விருபிரிவாரும் முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும். வெண்களமர் அல்லது வெள்ளாளர் என்றும், பெயர் பெறுவர். வேளாளர் என்பது அவ்விரு பிரிவார்க்கும் பொதுப் பெயராம். விருந்தோம்பி வேளாணமை செய்பவர் வேளாளர். 'உலகத்தார்' என்றது இங்கு உழவரல்லாதாரை. உலகத்தாரைத் தேரென்னாமையால் இங்குள்ளது ஒரு மருங் குருவகம்.

மணக்குடவ காலிங்க பரிதி பரிப்பெருமாளர் நால்வரும், 'அஃதாற்றார் தொழுவாரே யெல்லாம் பொறுத்து,' என்று பாடங்கொண்டுள்ளனர் அதற்கு "அதனைச் செய்யாதாரே (செய்யாதவர்) பிறர் பெருமிதத்தினால். செய்வன வெல்லாம் பொறுத்து தொழுதுநிற்பார்." என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் உரை, ஏனையிருவருரையும் இதையொத்ததே.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

 

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்- எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே, உரிமையுடன் வாழ்பவராவர்; மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர்- மற்றோரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே.

உழவர் தம் விருப்பப்படியும் பிறர் விருப்பப்டியும் தொழில் செய்பவர் என்பது கருத்து. இது மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்கு ஏற்காது. தொல்காப்பியர் காலத்தில் அஃறிணையைக் குறித்த எல்லாம் என்னும் சொல் திருவள்ளுவர் காலத்தில் உயர்திணையையுங் குறித்தது வழக்குப் பற்றிய திணை வழுவமைதி. ஏகாரம் பிரிநிலை.

பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர்

 

அலகு உடை நீழலவர்- நெல்லை விளைக்கும் ஈர நெஞ்சத்தாரான உழவர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க்காண்பர்- பல வேற்றரசரின் குடை நிழலின்கீழுள்ள நாடுகளையும் தம் அரசன் குடைக்கீழ்க் கொண்டுவருவர்.

அரசனுக்கு ஆறிலொரு கடமை யிறுப்பதனாலும் போர்க் காலத்திற் படைமறவராகச் சென்று பொருது வெற்றி விளைத்தலாலும், பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் என்றார்.

"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல"
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

(1581)

"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்"
வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே,

 

(1582)

என்பன தொல்காப்பியம்.

"பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே."


என்றார் வெள்ளைக்குடி நாகனார்.(புறம், 35)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் ,........


என்றார் இளங்கோவடிகள் (சிலப், 10;146-50). அலகு கதிர். அது இங்கு ஆகுபெயராய் நெல்லைக் குறித்தது. உடைய என்பது உடை எனக் குறைந்து நின்றது. 'நீழலவர்' என்றது இரப்போர்க் கெல்லாம் ஈயும் தண்ணளிபற்றி. 'குடை நீழல்' (நாடு) 'குடை' (ஆட்சி) என்பன ஆகுபெயர்கள். 'தங்குடை' என்றது ஒற்றுமையும் அன்பும் பற்றி, மணக்குடவரும் பரிப்பெருமாளரும் அலகுடை என்று பகுத்து, 'குடையில்லா' என்றும் 'குடையல்லாத' என்றும் முறையே பொருள் கூறுவர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

 

கை செய்து ஊண் மாலையவர் இரவார்-தம் கையால் உழுதுண்டலை இயல்பாக வுடைய உழவர் பிறரிடம் தாம் ஒன்றையும் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்-தம்மை யிரப்பவர்க்கெல்லாம் அவர் வேண்டியதொன்றை இல்லையென்னாது ஈவர்.

’கை செய்து’ என்னும் மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கு, உழவு என்னும் செய்பொருள் அதிகாரத்தால் வந்தது. ’கைசெய் தூண் மாலை யவர்’ என்பது, ஒரு காலும் வற்றாத வருவாயுடையவரென்னும் ஏதுவைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது. "மாலை யியல்பே". என்றார் தொல்காப்பியர் ('சொல். உரி. 15). அது இன்று மானை என்று நெல்லை நாட்டில் உலகவழக்காக வழங்குகின்றது.

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம்
விட்டேமென் பார்க்கு நிலை.

 

உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.

உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

 

தொடிப்புழுதி கஃசா உணக்கின்- ஒரு நிலத்தை யுழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அந்நிலத்திற் செய்த பயிர் கைப்பிடியெருவுந் தேவையின்றிச் செழித்து வளரும்.

பிடித்து ஒருபிடிக்குள் அடங்கியது. உம்மை இழிவு சிறப்பு. 'புழுதி' என்றமையால் உழுதபின் கட்டியடித்தலும் பரம்படித்தலும் பெறப்படும்.

ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு.

 

ஏரினும் எரு இடுதல் நன்று- பயிர் செய்யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; கட்டபின்- அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; நீரினும் அதன் காப்பு நன்று- உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம்.

'ஏர்' ஆகுபொருளது. காத்தல் பட்டிமாடு பறவைகள் திருடர் பகைவர் முதலியவற்றால் அழிவும் இழப்பும் நேராவாறு காவல் செய்தல். உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், காவல் செய்தல் ஆகிய முதன்மையான வினைகளை முறைப்படி குறிக்கும் போதே அவற்றை ஒப்புநோக்கிச் சிறந்தவற்றை விதந்து கூறினார். 'ஆல்' அசைநிலை.

செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்
தில்லாளி னூடி விடும்.

 

கிழவன் செல்லான் இருப்பின்- நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டியவற்றைச் செய்யாது வீட்டிற் சோம்பியிருப்பின்' நிலம், இல்லாளிற் புலந்து ஊடிவிடும்-அவன் நன்செய் அல்லது புன்செய், அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப்படையாகச் சடைத்துக் கொள்ளும்.

செல்லுதல் ஆகுவினை; அஃதாவது சென்று கவனித்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்தல். அவை முற்கூறியவற்றொடு, பூச்சி புழு நோய்கட்கு மருந்து தெளித்தல், வெள்ளத்தாலுடைந்த வரப்புத்திருத்துதல், வரப்புத்திறந்து மிகை நீரை வெளியேற்றுதல், பள்ளம் விழுந்த இடங்கடக்கு மண்கொட்டுதல்,காற்றாலும் மழையாலுஞ் சாய்ந்த கதிர்களை நிமிர்த்திக் கட்டுதல் முதலியன. "உடையவன் போகா வேலை ஒருமுழங்கட்டை." யாதலால், நில முடையான் தானே செல்லவேண்டுமென்பதற்குக் 'கிழவன்' என்றார். தன்னிடத்துவந்து தன்னைப்பேணாத கணவனொடு மனைவி ஊடுவதுபோல் தன்னிடத்துவந்து நாள்தோறும் தன்னைக் கவனியாத நிலக்கிழவனொடு நிலம் ஊடிவிடும் என்றது, விளையுளின்மையால் அவன் நுக்ர்ச்சியிழத்தல் நோக்கி, 'அலகுடை நீழலவர்' என்று நெல்விளைப்போரை விதந்து கூறியமையால், 'இல்லாளி னூடிவிடும்' என்பது. மனைவி ஊடுதல் மருதநிலத்திற்குச் சிறந்ததென்னும் அகப்பொருளிலக்கணக் கொள்கையைக் குறிப்பாக வுணர்த்தும். இம்மூன்று குறளாலும் உழவுத்தொழில் செய்யும் வகை கூறப்பட்டது.

இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
னிலமென்னு நல்லா ணகும்.

 

இலம் என்று ஆசைஇ இருப்பாரைக் காணின் யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும்- நிலமகள் என்னுந் தாய் தனக்குள் சிரிப்பாள்.

வறியவரெல்லாரும் நிலத்தை யுழுது பயிர்விளைத்தால், உணவு பெறுவதோடு அவர் வறுமையும் நீங்கும் என்பது கருத்து. நிலமகள் மாந்தரெல்லாருக்குந் தாயாயிருப்பதனாலும், அவளிடம் போதிய அளவு நிலமிருப்பதனாலும், உழவுத்தொழிலை மேற்கொள்ளாத ஏழைச் சோம்பேறிகளைக் கண்டு அவள் எள்ளி நகையாடுவதாகக் கூறினார். நல்லாள் எனபது கண்ணிற்கு நன்மையாகிய அழகுபற்றிப் பெண்ணிற்கு ஏற்பட்டதொரு பெயர். அச்சொல் இங்குப் பெண்பாலாகிய தாயைக் குறித்தது. 'அசைஇ' சொல்லிசை யளபெடை. 'இரப்பாரை' என்பது மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர் கொண்ட பாடம். உழவுத்தொழில் செய்யாதவர் வறுமையடைவர் என்பதால், அடுத்த அதிகாரத்திற்கு இங்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண்டைக் காலத்தில் மக்கள்தொகை மிகாது விளைநிலம் மிக்கிருந்ததனால் "இலமென்றசைஇ...........நல்லா ணகும்," என்று கூறினார் ஆசிரியர். அந்நிலைமையையே.

"வித்துமேரு முளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கு மேழையும் பதரே."


என்னும் வெற்றிவேற்கைச் செய்யுளும் (68) குறிக்கும். ஆயின் இக்கூற்று, மக்கள்தொகை வரம்பிறந்தோடி எண்ணிலா வுழவர் அங்கைநிலமு மின்றி அங்கலாய்க்கும் இக்காலத்திற்கு, எள்ளளவும் ஏற்காது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard