Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி Poorna chandran


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி Poorna chandran
Permalink  
 


தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

thamiz01
க. பூரணச்சந்திரன், திருச்சி. 

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு புறநிலையிலான, ஆய்வு பற்றிய ஆய்வாக-metaresearch ஆக இக்கட்டுரையை, இக்-கட்டு-உரையை, இக்கட்டு-உரையை நான் அமைக்கவில்லை. மாறாக, தமிழ் ஆய்வுபற்றிய எனது சில மனப் பதிவுகளை-எண்ணங்களை இங்குக்கூற நினைக்கிறேன்.

தமிழ் ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறதா இல்லையா? ஆமாம் என்று அடித்துக் கூறவும் முடியாத, இல்லை என்று அறவே ஒதுக்கிவிடவும் இயலாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இவ்வாறு சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலில் வளர்ந்துள்ளதா என்ற கேள்வி, எங்கிருந்து, எந்தக் கட்டத்திலிருந்து என்ற கேள்வியை உள்ளடக்கியது. சங்ககாலத்திலிருந்து வளர்ந்திருக்கிறதா? 18ஆம் நூற்றாண்டிலிருந்தா? 19ஆம் நூற்றாண்டிலிருந்தா? 2001இலிருந்தா? எங்கிருந்து? பொதுக்கருத்துநிலையில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து என்று பெரும்பாலும் பொருள் கொள்கின்றனர் பலர்.

இரண்டாவது, மாற்றம் என்பது எந்தத் துறையிலும்-வாழ்க்கையின் அத்த னைக் களங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் மாற்றம் என்பது வளர்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்றம் போலவே இறக்கமும் மாற்றம்தான். ஒரு துறையில் கட்டாயமாக ஏற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இறக்கமும் இருக்கலாம்.

இவை ஒருபுறம் இருக்க, ஆராய்ச்சி, திறனாய்வு இரண்டிற்குமான வேறுபாடுகளை முதலில் நோக்கவேண்டும். ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் research, criticism என்ற சொற்களில் எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆனால் தமிழில் ஆய்வு, திறனாய்வு என்ற இருசொற்களிலும் ஆய்வு என்ற சொல் இடம்பெறுகிறது. இது குழப்பத்திற்கு ஓரளவு வித்திடுகிறது. இரண்டின் அடிப்படைகளும் வெவ்வேறு. இரண்டையும் ஒன்றாக இணைத்துப்பார்க்கத் தேவைஇல்லை. நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது The Scholar Critic என்ற அரிய நூலைப்படித்தேன். ஆசிரியர் பெயர் Bates அல்லது Bateson என்று ஞாபகம். அது இருதுறைகளையும் இணைத்து விரிவாக நோக்கிய ஒரு நூல்.
நடுநிலை நோக்கு என்பதே இயலாத ஒன்று என்று இன்று பின்னமைப்பிய வாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் நடுநிலை நோக்கினை அவாவுகின்ற நிலையிலேனும் எழுவதுதான் ஆராய்ச்சி. திறனாய்வு அப்படியில்லை. அதில் மதிப்பீடுதான் முக்கியமானது.

தனது கருத்தைச் சொல்லும் ஒருவர், அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவேண்டும் என்பதுதான் திறனாய்வு. ஆராய்ச்சியிலும் முடிவுரைத்தல் உண்டு என்றாலும் அதன் தன்மை வேறு. ஆராய்ச்சியில் இலக்கியப் பண்பு சார்ந்த திறனாய்வு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தமிழ் ஆராய்ச்சியின் துறைகள், களங்கள் பலவாக இன்றைக்கு விரிந்துள்ளன. மொழியியல்சார்ந்த ஆய்வு, ஒப்பிலக்கியம் போன்ற துறைகள் புதிதாக உருவாயின. அறிவியல் தமிழ் நான்காம் தமிழ் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அமைப்பியம் பின்னமைப்பியம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிய நோக்கு பல புதிய சிந்தனைப்பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது.

ஆய்வு வரலாற்றைச் சொல்லுகின்ற நூல்கள் சிலவற்றை புதுவைப்பல்கலைக் கழகப் பேராசிரியர் மதியழகன் தமது தமிழாய்வு திறனாய்வு வரலாறு என்ற நூலில் கொடுத்துள்ளார். ஆனால் அப்பட்டியல் குறையுடையது. தனிநாயக அடிகள், தி.முருக ரத்தனம், அன்னி தாமஸ், தமிழண்ணல், அ.அ. மணவாளன் போன்றவர்கள் செய்த அடைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். “பழைய இலக்கிய இதழ்களான செந்தமிழ், செந் தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் போன்றவற்றில் இடம்பெற்ற கட்டுரைகளைத் தொகுத்து மதிப்பீடு செய்தால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய திறனாய்வுப்போக்கை உணரமுடியும்” என்றும் சொல்கிறார். ஏற்கெனவே செந்தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் அடைவை (பெயர்கள்-ஆசிரியர்-ஆண்டு மட்டும்) மதுரைத் தமிழ்ச்சங்கமே வெளியிட்டுள்ளது. சிறந்ததொரு தேர்ந்தெடுத்த அடைவினை பா.ரா. சுப்பிரமணியன் தொகுத்திருக்கிறார். இவையிரண்டும் நூல்களாக வெளிவந்துள்ளன. அதே அடிப்படையில் நான் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்த கட்டுரைகளை (1925-1980) நான் தொகுத்திருக்கிறேன். இது நூல்வடிவம் பெறவில்லையாயினும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. பலர் இதைப் பயன் படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சி, தமிழ்ப்பொழிலின் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துவ தற்காக மேற்கொண்ட எனது பிஎச். டி. ஆய்வின் (தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு) ஒரு பகுதி. ஆனால், தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி ஆகியவற்றில் ஆய்வுமேற்கொள்வோர் அதன் வாயிலாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய ஆய்வுப்போக்கினை உணரமுடியுமே தவிர, திறனாய்வுப் போக்கினை உணரமுடியாது. நாம் இன்று திறனாய்வு என்ற சொல்லை எந்த அர்த்தத்தில் கையாளுகின்றோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் செய்யவில்லை. தமிழ்ப்பொழில் இதழை மதிப்பிட்ட எனது ஆய்வேட்டின் முடிவுகளில் மிகத் தெளிவான ஒன்று, அவ்விதழ் இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளுக்கு உதவியுள்ளது, ஆனால் திறனாய்வு நோக்கு அதில் அறவே இல்லை என்பது. வருத்தத்துக்குரிய செய்தி, செந்தமிழ்ச் செல்வி இதழ்க்கட்டுரைகள் இதுவரை இப்படித் தொகுக்கப் பெறவில்லை.
தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டுவரை அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் அடைவை வெளியிட்டுள்ளார்.

மேலும் மதியழகன் தமது நூலின் முன்னுரையில் க. பஞ்சாங்கத்தின் நூலைக் குறிப்பிட்டுள்ளார். 1983இலேயே அதைவிட விரிவாக எழுதப்பட்ட-ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்புதான் வெளியிடப்பட்ட எனது தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலைக் குறிப்பிடவில்லை. பக்.20-21இல் திறனாய்வுக் கோட்பாடுகள் குறித்த நூல்கள் என்பதிலும் என்னுடைய அமைப்புமையவாதம், செய்தித்தொடர்பியல் கொள்கைகள் (குறியியல் கோட்பாடுகள் பற்றியது) என்னும் நூல்கள் சேர்க்கப்பெற வில்லை.

(அடிக்குறிப்பு-மதியழகன் நூலைப்பற்றி இங்கே குறிப்பிட்டதனால், இக்கருத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. ப.92இல் “பின்நவீனத்துவ நோக்கில் பண்டைய இலக்கியங்களை அணுகிய க.பூரணச்சந்திரன் சங்க இலக்கியங்களுக்குப் புதிய விளக் கங்கள் கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் இலக்கிய விமரிசனம் செய்யவில்லை என்று கூறிவிட்டுப் புதிய நோக்கில் விமரிசனம் செய்திருப்பது எடுத்துக்கொண்ட பின்நவீனத்துவக் கொள்கைக்கு முரண்பட்டதாகவே தோன்றுகிறது” என்று அவர் தமது நூலில் கூறியிருக்கிறார். இங்கு அவரிடம் ஒரு கருத்துக்குழப்பம் காணப்படு கிறது. அமைப்பியம், பின்னமைப்பியம் போன்றவை தத்துவங்கள் மட்டுமல்ல, அவற்றின் அடிப்படையிலான விமரிசனமுறைகளும்கூட. தகர்ப்பமைப்பும் பின்ன மைப்பிய முறைக்குத் தொடர்புடைய ஒன்றுதான். அவற்றின் அடிப்படையில் விமரிசனம் செய்கிறோம். பின்நவீனத்துவம் என்பது ஒரு படைப்பு முறை. நான் எங்கும் பின்நவீனத்துவ நோக்கில் விமரிசனம் செய்கிறேன் என்று குறிப் பிடவே இல்லை. குறியியல், பின்னமைப்பிய, தகர்ப்பமைப்பு நோக்கில் விமரிசனம் செய்வதா கவே கூறியுள்ளேன் என்பதை அன்புகூர்ந்து நோக்கவும். மேலும் இந்தக் கோளாறு பிரேம்-ரமேஷ்-சாரு போன்றோர் நூல்களில்தான் உண்டு. பின்னமைப்பியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் வேறுபாடு தெரியாமல், ‘பின்நவீனத்துவ நோக்கில் இது’, ‘பின் நவீனத்துவநோக்கில் அது’ என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதுபவர்கள் கட்டுரைகளை மதியழகன் காணவும். மேலும் அதே பக்கத்தில் “அமைப்பியல் பின்னமைப்பியல் போன்றவை தத்துவங்களை, மையங்களை விமரிசிக்க வந்தவையாகும்” என்ற தொடரும் இடம் பெற்றுள்ளது. அமைப்பியத்திற்கு மையம் உண்டு. அதனால்தான் எனது முதல் நூலுக்கு அமைப்புமையவாதமும் பின்னமைப்புவாதமும் என்று பெயர்வைத்தேன். இரண்டாவது, எந்த ஒரு தத்துவமும் இன்னொரு தத்துவத்தை விமரிசிப்பதே ஆகும்.)

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில், ஆய்வடங்கல்கள், நூலடைவுகள் ஆகியவற்றிற் கான சிறப்பிடம் உண்டு. ஆனால் தமிழ் ஆராய்ச்சி வரலாறு என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் குறையுடையனவாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய ஆராய்ச்சி சமய/மத ஆராய்ச்சி. இது செய்யுள் வடிவில், மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களிலேயே தொடங்கி விட்டது. நீலகேசி உரையாசிரியர், சிவஞான முனிவர் போன்ற உரையாசிரியர்கள் இந்த விஷயத்தில் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர். தங்கள் மதக் கருத்துகளை வலியுறுத்துதல் (சுபக்கம்), பிறமதக் கருத்துகளை ஆராய்ந்து மறுத்தல்(பரபக்கம்) அல்லது ஒரோவழி உடன்படுதல் இந்த ஆராய்ச்சியின் சாராம்சம். வீரமாமுனிவர் காலம் முதல் இது பரவலாக வெளிப்பட்டது. தங்கள் கொள்கைகளை ஆதரித்தும், சைவ வைணவக் கொள்கைகளை மறுத்தும் கிறித்துவர்கள் எழுத, அவை தவறு என்று சித்தாந்த வித்தகர்களாகிய சிவஞான முனிவர் போன்ற தமிழ் அறிஞர்கள் எழுத, ஒரே களேபரம்தான். குறிப்பான ஒரு விஷயம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சண்டையைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப்பட்ட மத ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

கால அடிப்படையில் தமிழ்மொழியில் இரண்டாவதாகத் தோன்றிய ஆராய்ச்சி, இலக்கிய இலக்கண உரைகள். பலபேர் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வு முன்னோடிகள் என்று தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் கள். உரையாசிரியர்களின் நோக்கில் மதிப்பீடு கிடையாது. மதிப்பீட்டுக்கு அடிப்படை யான ஒப்பீடும் கிடையாது. ஆனால் எடுத்துக்கொண்ட நூலின் அமைப்பை விவரித் தல், அதில் இலக்கண ஆய்வு அடிப்படையில் குறிப்புரைகள் தருதல், பொருள்கோள் முறையைத் தெரிவித்தல், தங்கள் நோக்கில் விரிவான அல்லது செறிவான உரையை வழங்குதல் போன்ற தன்மைகள் உண்டு. இவை யாவும் ஆராய்ச்சியின்பாற் பட்டவை. (மதஅடிப்படையில் சுயஸ்தாபனமும் பரநிராகரணமும் செய்த நீலகேசி உரையாசிரியர் முதலியவர்களையும் இங்கே இணைத்து நோக்கினால், உரையாசிரியர்கள்தான் நமது முதல் ஆராய்ச்சியாளர்கள்.)
உரையாசிரியர்களுக்கும் அக்காலக் கவிஞர்களுக்கும் துணையாக எத்தனையோ மடங்கள், ஆதீனங்கள் இருந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஏறத்தாழ உ.வே. சுவாமிநாதையர் காலம் வரை ஆதீனங்கள்தான் தமிழ்க்கல்விமுறையையும், படைப்பு முறையையும் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. குறிப்பிட்ட வகைப் படிப்பு முறை என் பதே பின்னர் எவ்வகையான தமிழ் இலக்கியங்கள் காப்பாற்றப்படவேண்டும், படிக்கப் படவேண்டும் என்பதற்கான அளவுகோலாக மாறியிருக்கும்.

மேற்கண்ட இருவகை முயற்சிகளுக்கும் பின்னால் தோன்றியவை பதிப்பு முயற்சிகள். பதிப்புகளில் பலவித ஆய்வுக்குறிப்புகள் உண்டு. முதன்முதலில் தமிழில் அச்சுப்பதிப்பான நூல் திருக்குறள். 1812ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை அக்காலத்தில் வெளியிட்டவர்கள் தாங்கள் அதைப் பிழைநீக்கிய சுத்தப் பதிப்பாகக் கொண்டுவர எத்தனை முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதைக் குறித்திருக்கி றார்கள். மூலப்பதிப்பாய்வு தோன்றும் முன்னரே சுத்தப்பதிப்பு என்பதை மேற் கொள்ள இவர்கள் செய்த முயற்சிகள் அருமையானவை.
அதற்குப் பிறகு தொடங்கிய ஆராய்ச்சி கால ஆராய்ச்சிதான். சுந்தரம் பிள்ளை காலத்திலேயே கால ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. கால ஆராய்ச்சியோடு சமூக வருணனைப் பார்வையும் சேர்ந்துகொண்டது வி. கனகசபைப் பிள்ளை போன்றவர்க ளால். இந்தப் போக்கு 1950வரை தொடர்ந்தது. சாணக்கியனின் நூலுக்குப் பின்னால் திருக்குறள் எழுந்து அதைக் காப்பியடித்ததா? திருக்குறளுக்குப் பின்னால் கௌடில் யம் எழுந்ததா போன்ற ஆய்வுகளை 1960கள் வரை கண்டிருக்கிறேன்.

ஒப்பிலக்கியம் என்றதொரு புதிய துறை 1980வாக்கில் தமிழ்த்துறைகளில் புகுந் தது. கால ஆராய்ச்சி கொண்டு இது முன்னதா, அது முன்னதா என்று ஆராய்ச்சி செய்வது ஒப்பிலக்கிய ஆய்வே அல்ல என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

காலஆராய்ச்சியை ஒட்டி எழுந்த இன்னொரு விஷயம் புதியஉரை எழுதுவது. இதுவும் 1950கள் வரை தொடர்ந்தது. உ.வே. சாமிநாதையர், இரா. இராகவையங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, சோமசுந்தரனார் போன்ற சிலர்இத்துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளனர். பிறகு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு உரை எழுதுதல் என்ற விஷயம் தூங்கிவிட்டது. இப்போது பழைய உரைப்பதிப்புகள் எவையும் கிடைப்பதில்லை என்ற நிலையில் மீண்டும் உயிர்பெற்று இன்றைக்குத் தக்கார்-தகவிலார் யாவரும் சங்கஇலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை உரையெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கால ஆராய்ச்சியோடு ஒட்டிய ஆய்வு ஒப்பிலக்கிய ஆய்வு. இலக்கிய வரலாற் றாய்வுதான் பின்னர் ஒப்பிலக்கிய ஆய்வாக உருவெடுத்தது என்பதையும் மனத்திற் கொள்ளவேண்டும். தமிழில் கால ஆராய்ச்சி இலக்கிய வரலாற்று ஆய்வாகவோ ஒப்பி லக்கிய ஆய்வாகவோ சிறப்பாக உருப்பெறவில்லை. இது ஏன் என்பதை ஓரளவு கா. சிவத்தம்பி தமது தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார். அவரும் முழுஅளவில் ஆராயவில்லை.
எந்த இலக்கிய ஆராய்ச்சிக்கும் அடிப்படை இலக்கியவரலாறுதான். தமிழில் இலக்கிய வரலாற்று நூல்களே இல்லை என்பது ஒரு முக்கியமான குறை. இந்தி மொழியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அது அண்மையில் தோன்றிய மொழி என்று நம் தமிழாசிரியர்கள் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தியின் இலக்கிய வரலாற்றைச் சொல்கின்ற விரிவான நூல்கள் பல உள்ளன. ஆயிரம் பக்க அளவில் விரிவாக எழுதப்பட்ட இந்தி இலக்கியவரலாற்று நூலை நானே பயன்படுத்தியிருக்கி றேன். தமிழில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒரே இலக்கிய வரலாற்று நூல் மு. அருணாசலத்தினுடையது மட்டும்தான். அதுவும் 9ஆம் நூற்றாண்டுமுதல் 16ஆம் நூற் றாண்டுவரைதான் உள்ளது. பிறகு சிற்சில குறிப்பிட்ட போக்கிலான நூல்கள்-மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் பௌத்தமும் தமிழும் போன்றவை உள்ளன. மற்றபடி பூரணலிங்கம் பிள்ளை, கா.சு. பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரன் முதல் ஜேசுதாசன், மு. வரதராசன் வரை எழுதியவை அனைத்தும் குறிப்புகளே. அதற்குப்பின் இளங்கலைத் தேர்வுப்பாடத்திட்டப் பட்டியல் நோக்கைத் தாண்டி நமது இலக்கிய வரலாற்று நூல்கள் முன்னேறவில்லை. உண்மை யில் நாம் செம்மொழி என்பதை நிறுவவேண்டுமானால் இன்று தேவையானது மிக விரிவான உண்மையான நேர்மையான ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூல்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்களின் ஆய்வுப் பணி குறிப்பிடத்தக்கது. எத்தனையோ தமிழ்ச்சங்கங்கள் சென்ற நூற்றாண்டில் எழுந் தன. மிகவும் குறிப்பிடத் தக்கவை மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி சைவசித்தாந்த சபை, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள். 1912ஆம் ஆண்டு அளவிலேயே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றைத் தோற்றுவிக்கவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அவ்வாறு முன் வைத்தவர்களில் மிகமுக்கியமானவர் பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளை. 1924-25 அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றியபோது அதுவே தமிழ்ப் பல்கலைக்கழகம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பற்றிய செய்திகளைத் தமிழ்ப் பொழில் இதழ்களில் காணலாம்.
பிறகு தமிழிசை வளர்ச்சிக்கென, தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்குவதற் கெனச் சில அமைப்புகள் எழுந்தன. தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குவதில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பணி மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று. தனி மனிதர்கள் என்ற அளவில் நீ. கந்தசாமிப் பிள்ளையும், கோவை கலைக்கதிர்இதழ் தாமோதரனும் பெரும் பணியாற்றியுள்ளனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பல தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்ஆய்வு, தமிழ்க் கலைச்சொற்கள் போன்றவற் றிற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குறிப்பாக யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்பு (மணவை முஸ்தபா பல ஆண்டுகள் இதன் ஆசிரியராக இருந்தார்) தந்திருக் கும் உலகளாவிய விவரங்கள் மிகுதி. தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே பலவகையான இதழ்கள்-சாதி சார்ந்தவை, பெண்கள் சார்ந்தவை, அறிவியல் சார்ந் தவை என்றெல்லாம் எழுந்தவை-ஆற்றியுள்ள பணிகளும் மிகுதி. சிற்றிதழ்களைப் பொறுத்தவரை, அவை திறனாய்வை வளர்த்த அளவு ஆராய்ச்சிக்குப் பணியாற்ற வில்லை. அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், சித்தாந்தம் போன்ற இதழ்களையோ, அண்மைக்கால ஆராய்ச்சி, இக்காலச் சமூகவியல் போன்ற இதழ்க ளையோ சிற்றிதழ்கள் என்று நோக்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது.

இப்படி நோக்கிக்கொண்டே நாம் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதிக்கு வந்துவிட்டோம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக் கழகம் போன்றவை தோன்றின. முன்பேஆராய்ச்சியாளர்கள் பல்கலைக்கழக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாகத்தான் ஓரளவு இருந்தனர் என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றுபவர்களையே முற்றிலும் சார்ந்ததாகி விட்டது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஆய்வுக்குத் தேவையான உதவி, கொடை போன்றவை எளிதில் கிடைத்தமை நன்மை. ஆய்வு ஆழமாக இல்லாமல் சிமெண்டுத் தரையில் தண்ணீர் பரவுவதைப்போன்று பயனின்றி அகன்று போய்விட்டது மிகப் பெரிய குறை.

1966இல் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடங்கியது. இதன் வாயிலாகப் பல நாட்டுத் தமிழ் ஆர்வலர்களின், ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது நன்மை. ஆனால் ஒட்டுமொத்தமான விளைவு என்று நோக்கினால் இவற்றில் செல விடப்படும் தொகைக்கும் ஆய்வுக்கும் எவ்விதத் தொடர்புமே இல்லை.
கல்லூரிகளிலிருந்து பியூசி என்ற வகுப்பு நீக்கப்பட்டது முதலாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு யுஜிசி உதவிபுரியும் ஆய்வுப்படிப்புகள், எஃப்ஐபி போன்ற வசதிகள் ஆகியவை கிடைத்தன. ஆனால் இவற்றால் என்ன பயன் விளைந்தது என்பதை நேர்மையாக எவரேனும் மதிப்பிட வேண்டும். என் கண்ணோட்டத்தில், குப்பைகள் பெருகின. தகுதியற்றவர்கள் மிகவும் உயர்ந்த பட்டங்களையும் அதனால் உயர்ந்த பதவிகளையும் பெற்றனர். அதனால் இன்னும் தரமற்ற, தகுதியற்ற ஆய்வுகள் பெருகின. இது ஒரு விஷச்சுழல் அல்லவா? இன்றைய மாணவர்கள்தானே நாளைய ஆசிரியர்கள், நெறியாளர்கள்? இவர்கள் எல்லாரும் எழுதுவதற்காகவே இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் முதலிய மன்றங்கள் தொடங்கப்பட்டன. பலன் என்ன?
தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழக மானியக்குழு சார்பிலும் முதலில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அவை பிறகு தேசியக் கருத்தரங்குகள் ஆயின. தொண்ணு£றுகளில் அவை சர்வதேசக் கருத்தரங்குகளாயின. ஆனால் கட்டுரைகளின் தரம் என்னமோ தொடக்கத்தில் இருந்த அளவுக்கும் குறைவுதான்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது தனிப்பட்டோர் முயற்சிகளே நல்ல ஆய்வுகளாக நிற்கின்றன. செல்வக்கேசவராய முதலியார், மறைமலையடிகள், மு. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, மயிலை. சீனி. வேங்கடசாமி, ந.மு. வேங்கட சாமி நாட்டார், வே. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று எத்தனையோ பெயர்கள் நமக்கு நினைவில் வருகின்றன. அவர்கள் காலத்தைத்தாண்டி சற்றே பின்னால் வந்தால் தெ.பொ.மீ,-மு.வ. சகாப்தம் ஆரம்பமாகிறது. சமகாலத்தில் வானமாமலை, பேராசிரியர் இராமகிருஷ்ணன் போன்ற சில மார்க்சிய அறிஞர்கள் சிறந்த ஆய்வுகளை அளித்துள்ளனர். இலங்கையிலிருந்தும் ஆ. வேலுப்பிள்ளை, க. கைலா சபதி, கா. சிவத்தம்பி, நுஃமான், சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் வழி பல நூல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகக் குறைவு-தனிப்பட்டோர் ஆர்வமே சிறந்த பலன் தந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

சிலர் குறிப்பிட்ட தனித்துறைகளைத் தங்களுக்கெனத் தேர்ந்துகொண்டு சிறந்த பணியாற்றியுள்ளனர். வடமொழி இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்த கு. சுந்தரமூர்த்தி, பக்தி இலக்கியங்களை மட்டுமே ஆராய்ந்த வெள்ளை வாரணன், ப. அருணாசலம், சிற்றிலக்கிய ஆய்வைச் செய்த ந. வீ. ஜெயராமன், நாட்டார் இலக்கிய ஆய்வை முன்னெடுத்துச்சென்ற லூர்து, கிறித்துவஇலக்கிய ஆய்வை மட்டுமே மேற் கொண்ட இன்னாசி, மார்க்சியநோக்கில் சிற்றிலக்கியங்களைப் பார்த்த கோ. கேசவன், மொழியியல் நோக்கில் கவிதையாக்கத்தை விளக்கும் செ.வை. சண்முகம் போன்று எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம். தலித்திய நோக்கில் மட்டுமே எழுதும் ராஜ்கௌதமன் போன்றோரையும் இதில் சேர்க்கலாம். நான் நினைவில் வந்த பெயர் களைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தனியாகத் தொகுக்கப்பட வேண்டியதோர் பட்டியல்.

தமிழ்த்துறைக்குத் தொடர்பற்ற அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி, அம்பை போன்றவர்களும் ஆய்வில் ஈடுபட்டனர். பழங்கருத்தாக்கங்கள் சிலவற்றை உடைப்ப தில் இவர்களின் ஆய்வுகள் பயன்பட்டுள்ளன. குறிப்பாக அம்பை தமது பிஎச்.டி பட்ட ஆய்வுக்கெனத் தந்த A face behind the mask என்பது தமிழ்ப் பெண் சிறுகதையாளர்கள் பற்றிய, பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட சிறந்த ஆய்வுநூல்.

அண்மைக்காலத்தில், மார்க்சிய நோக்கு, தலித்திய நோக்கு, பெண்ணிய நோக்கு போன்றவற்றின் நோக்கில் பல ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இவற்றின் தகுதியை மதிப்பிடுவது அவசியம். பல நூல்களில் ஆழமில்லை. சில கூறியதுகூறலாக வே இருக்கின்றன. அண்மைக்காலத்தில் சங்க இலக்கியங்களைத் தகர்க்கும் பலரும் ஒரேமாதிரியான கருத்துகளையே கூறிவருகின்றனர். பன்முகநோக்கும் அதற்குத் தேவையான உழைப்பும் இன்மையே காரணம்.
இக்கட்டுரைத் தொடக்கத்தில் ஆய்வு வளர்ந்துள்ளதா இல்லையா என்பது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டேன். இதுவரை ஓரளவு ஆய்வு வளர்ந்துள்ளது என்பது விரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இனி இதன் மறு தலையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழிலக்கிய ஆய்வு வளரவில்லை என்று கூற மிக முக்கியமான ஒரு காரணம், தமிழில் உள்ளடக்க ஆய்வு பெருகிய அளவுக்கு உருவ ஆய்வு பெருகவில்லை என்பது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு இலக்கிய ஆராய்ச்சியை நோக்கும்போது, குறிப்பிட்ட நூல் அல்லது இலக்கியம் என்ன சொல்கிறது என்பதை வைத்துப் பெரும்பாலும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களே தவிர, அது எப்படி இலக்கியமாகியிருக்கிறது என்பதைப் பலரும் ஆராய்ந்ததில்லை. ஒருபுறம் உள்ளடக்கம்-உருவம் என்று பிரிப்பது தவறு என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அந்த இலக்கியம் காட்டும் வீடு, நாடு, காடு, மாடு என்று ஆராயத்தான் நமது ஆய்வாளர்களுக்குத் தெரியும்.

இதன் விளைவு தமிழ் ஆய்வு மாணவர்களை மிகவும் பாதித்திருக்கிறது. புதுப் புது நூலாகத் தேடி அதன் உள்ளடக்கம் என்ன என்று எம்.ஃபில்லுக்கும் பிஎச்.டிக்கும் ஆலாய்ப் பறப்பார்கள். பழைய இலக்கியங்களிலேயே செய்யக்கூடிய பணிகள் ஏராள மாக உள்ளன என்பதை அறியமாட்டார்கள். நற்றிணையின் மொழியமைப்பு, வாக்கிய அமைப்பு பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியபோது இரா. கோதண்டராமன் அதை மிகவும் பாராட்டி, இத்தகைய கட்டுரைகள் ஏராளமாக வெளிவரவேண்டும் என்றார். இத்தனை சங்க நூல்கள் இருக்கின்றனவே, அவற்றின் மொழியமைப்பு, வாக்கிய அல் லது தொடரமைப்பு, உள்கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றி எவரேனும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா? தலைப்பைத் தேடி ஏன் அலையவேண்டும்?

இன்னொன்று, ஆய்வுசெய்யும் மாணவர்களின் சோம்பேறித்தனம். “சார், ஏதா வது ஈசியா நாவல் இருந்தா குடுங்க ஆய்வு செய்யலாம். இலக்கணம், பழைய இலக் கியமெல்லாம் கஷ்டம்” என்று நிறைய மாணவர்கள் சொல்வதை நான் கண்டிருக் கிறேன். ஏறத்தாழ இருபதாண்டுகள் இருக்கும். எனக்கென்று ஒதுக்கப்பட்ட எம்.ஃபில் மாணவர் ஒருவர் வந்தார். ‘என்ன படித்திருக்கிறாய்? எதில் உனக்கு ஆர்வம்?’ என்ற பொதுவான கேள்விகளை நாம் கேட்பது வழக்கம்தானே? அவருக்குத் தமிழின் எந்த இலக்கியத்திலும்-செய்யுள், உரைநடை எதிலும் ஆர்வமில்லை. கடைசியில் நான் அவருக்கு வாலியின் திரைப்படப் பாடல்களை ஆய்வுத் தலைப்பாகத் தர நேரிட்டது.

இன்று நாம் ஒரு நூற்றாண்டுக்காலத்தில் உருவான பல கருத்தாக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில்இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட கருத்து உருவா வதற்குச் சமூகரீதியாகச் சில காரணங்கள் உண்டு. எதுவும் தானாக வரலாற்றில் முளைப்பதில்லை. அதுபோல வரலாற்றுரீதியான காரணங்கள் சிலவற்றால் தமிழின் பெருமை, முதன்மை பேசவேண்டிய ஒரு தேவை முன்பு இருந்தது. சில இயக்கங்கள் தோன்றியதற்குப் பலவித காரணங்கள் இருந்தன. உதாரணமாகத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் போன்ற வற்றைச் சொல்லலாம். ஆனால் ஓர் இயக்கம் எல்லையற்றுக் காலத்தில் நிற்கமுடியாது. எல்லா இயக்கங்களும் காலத்திற்குக் கட்டுப்பட்டவை-காலம் மாறினால் மாறிவிடுபவை. அதுபோலத் தனித்தமிழ் இயக்க மும் திராவிட இயக்கமும் இன்று காலாவதியாகிவிட்டன.

தமிழ்இயக்கங்கள் வரலாற்றில் உருவான விதத்தைப் பற்றிப் பலர் பல நூல் களில் பேசியிருக்கிறார்கள். எனதுநோக்கில் சுருக்கமாக அவற்றை முன் வைத்து மேற் செல்கிறேன்.
19ஆம்நூற்றாண்டில் இரண்டுவிஷயங்கள் தமிழரின் வாழ்க்கையை பாதித்தன. ஒன்று ஆங்கிலம், இன்னொன்று சமஸ்கிருதம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள், பாஷை. அதன் இலக்கியவளம், பிற வளங்கள், கலாச்சாரம் முதலியவற்றை உள்ளடக்கியது. இன்னொன்று சமஸ்கிருதத்தின் முதன்மையை ஐரோப் பியர்கள் ஏற்றுக்கொண்ட நிலை. இவையிரண்டும் தமிழர்களின் தன்மானத்தை பங்கப்படுத்துவதாக இருந்தன. இவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நல்லவேளையாக தமிழர்களுக்குச் சாதகமாகவும் மூன்று விஷயங்கள் வாய்த் தன. சமஸ்கிருதத்திலிருந்தே அத்தனை இந்திய மொழிகளும் பிறந்தன என்ற கருத்து அக்காலத்தில் நிலவியது. விண்டர்நிட்ஸ் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய இந்திய இலக்கிய வரலாற்றிலும்கூட இப்படித்தான் குறிப்பிடுகிறார். இப்படிப் பட்ட சமயத்தில் திராவிட மொழிக்குடும்பம் என்பது தனியானது, தமிழ் அதில் மூத்த மொழி என்ற அந்தஸ்தினை நாம் பெற்றோம். இதற்கு உதவியாக இருந்தவர் கால்டுவெல். இன்னொன்று சங்க இலக்கியங்களின் பதிப்பு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சுவாமிநாதையர் உள்ளிட்ட பல பதிப்பாசிரியர்கள். மூன்றாவது, சிந்து வெளி நாகரிகத்தின் வெளிப்பாடு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சர் ஜான் மார் ஷலும் ஹீராஸ் பாதிரியாரும். இதனுடன், ஆரியர்கள் கி.மு. 3500 வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த வந்தேறிகள் என்ற சரித்திரக் கருத்து. இவை தமிழர்களின் தன் மானத்தைக் காப்பாற்றின.

இவற்றின் விளைவாக எழுந்தவை தனித்தமிழ் இயக்கமும் தமிழிசை இயக் கமும். இவை சாராத ஒரு சமூக, அரசியல் நிகழ்வு, இட ஒதுக்கீட்டிற்கென ஏற்பட்ட நீதிக்கட்சி. இரண்டிற்கும் பொதுவானது அக்கால வேளாளர்கள் நிலைப்பாடு அல்லது மனப்பான்மை. இவையிரண்டிலும் அவர்களுக்கு உடன்பாடு இருந்தது. இரண்டிற்கு மெனத் தனித்தனியே இயங்கியவர்கள்கூடச் சில மேடைகளில் ஒருங்கே நின்றார்கள். உதாரணமாகத் தமிழிசை இயக்கத்தில், தனித் தமிழ் இயக்கம் சார்ந்தவர்களும் நீதிக் கட்சி சார்ந்தவர்களும் உடன்பட்டு இயங்கியதைக் காணமுடிந்தது.
திரு.வி.க. போன்றவர்கள் இவற்றை முழுதும் உடன்படாவிட்டாலும் பார்ப்ப னர்களைத் தனிமைப்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்ணாக இருந்தார்கள். மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த சாதிகளுக்குரிய தலைவர்கள் சிலர் அக்காலத்தில் இருந்த போதிலும் அவர்களை இந்த இயக்கங்கள் சேர்த்துக்கொள்ள நினைக்கவில்லை-அவற் றை பாதிக்குமளவிற்கு அவர்களை முக்கியமானவர்களாகக் கருதவில்லை. நீதிக்கட்சி அழியும் நிலையில் திராவிட இயக்கம் தோன்றிவிட்டது.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலேயே சில தமிழறிஞர்கள் வெளிப் படையாகத் தங்கள் நிலைப்பாட்டைக் கூறியதில்லை. உதாரணமாக 20ஆம் நூற் றாண்டில் தமிழ் ஆராய்ச்சியைப் பெரிதும் பாதித்தவர்களான டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும், டாக்டர் மு. வரதராசனாரும். இவர்கள் நூல்கள் இவர்களை திராவிட இயக்கச் சார்பானவர்களாகக் காட்டுகின்றன. அக்காலத்தில் சங்க இலக் கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை திராவிட இயக்கச் சார் பான நூல்களாகக் கருதப்பட்டன. பிற காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவை சமஸ்கிருதத் தொடர்பினால் கெட்டுப்போனவை என்ற கருத்து நிலவி யது. அக்காலத் தமிழ் அறிஞர்கள் முன்சொல்லப்பட்ட நூல்களையே பெரிதும் ஆராய்ந்திருப்பதைக் காணலாம்.

மாறாக, காங்கிரஸ் கட்சியில் ஆதியிலிருந்தே பார்ப்பன ஆதிக்கம் இருந்தது. அதனால் அவர்கள் கம்பராமாயண ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்கள். ஏறத் தாழ 1960வரை கம்பராமாயண ஆய்வில் ஈடுபட்டவர்களை நோக்கினால், கம்பன்விழா நடத்தியவர்களை நோக்கினால் அவர்கள் யாவருமே காங்கிரஸ்கட்சி சார்ந்தவர்களாக இருப்பதைக் காணலாம்.

அவர்களும்கூட வில்லிபாரதத்தை மதிக்கவில்லை. காரணம் அது வேளாளர் சார்புடைய, கிராம மக்கள் சார்புடைய நூல். நமது கிராம மக்களின் நாட்டுப்புற தெய்வங்கள், கலைகள் ஆகியவற்றின் சார்பு வில்லிபாரதத்தை ஒட்டியதாக இருப்ப தைக் காணலாம். திரௌபதியம்மன் நாட்டாரின் முக்கிய தெய்வங்களில் ஒருத்தி. கோடைகாலங்களிலெல்லாம் வடக்குத் தமிழ்நாட்டு கிராமங்களில் பாரதக்கதை படிக் கப்பட்டதை, தெருக்கூத்தாக நடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். ராமசாமி கிருஷ்ணசாமி என்றெல்லாம் பெயர்வைத்துக்கொள்ளும் ஐயர்களும் ஐயங்கார்களும் தருமன், அருச்சுனன், சகாதேவன் என்று பெயர்வைத்துக்கொள்ளமாட்டார்கள். அவை தாழ்ந்த சாதிக்குரிய பெயர்கள். பெயரளவில் மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டு நடைமுறையில் அப்படியில்லை.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் நமது தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் சாதியநோக்கு-வகுப்புவாத நோக்கு முதலிலிருந்தே பாதித்துவந்திருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் இந்த நோக்கு வளர்ப்பதற்கு மாறாகக் கெடுத்துவிட்டது.

பெரியாருக்குத் தமிழின்மீது பெரிய அபிமானம் இருந்ததாகச் சொல்ல முடி யாது. அவர்கூட சங்க இலக்கியம், திருக்குறள் பற்றி ஓரளவுதான் சாதகமாகப் பேசி யிருக்கிறார். சிலப்பதிகாரத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான நூல்கள் யாவும் பொதுவாக மக்களையும், குறிப்பாகப் பெண்களையும் ஒடுக்குவதற் காகத் தோன்றியவையே என்பது அவர் கருத்து. ஆனால் தமிழ்ப் பெருமை பேச விரும்புபவர்களால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒதுக்க முடியாது. கம்பராமாயணத்தையும் புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் பக்திப்பாக்களையும் அவர்கள் ஒதுக்கினார்கள்.

பாரதியார் இதற்கு விதிவிலக்கு. அவரை ஒருவாறு திராவிட இயக்கத்தவரும் அல்லாதவர்களும் ஏற்றுக்கொண்டனர். திராவிட இயக்கத்தினர் அவரை ஒரு சீர் திருத்தவாதியாகக் கண்டனர். பிறர் அவரை தேசியவாதியாகக் கண்டனர். திராவிட இயக்கத்தினரின் canon சங்கஇலக்கியம்-திருக்குறள்-இரட்டைக் காப்பியங்கள்-தமிழ் சார்ந்த சில சிற்றிலக்கியங்கள்-பாரதி-பாரதிதாசன் என்று அமைந்தது. பார்ப்பன நோக்குடையவர்களின் canon (திருக்குறள்)-சமய இலக்கியங்கள்-கம்பராமாயணம்-புரா ணங்கள்-பாரதி என்று அமைந்தது. (இதில் பாரதிதாசனும் அவர் பரம்பரை யினரும் இடம்பெற மாட்டார்கள்). 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இவற்றை மீறிப் பொதுநிலையில் செயல்பட்ட சில ஆராய்ச்சியாளர்களாக வையாபுரிப்பிள்ளை, மயிலை.சீனி. வேங்கடசாமி போன்ற ஒருசிலரை மட்டுமே அக் காலத்தில் குறிப்பிடமுடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து தமிழ் ஆராய்ச்சியை இரண்டு போக்குகள் கட்டுப்படுத்தின. ஒன்று வரலாற்று ஆய்வு. இன்னொன்று உரை எழுதுதல். இவற்றில் சைவநோக்கு கலந்திருந்தது. இருநோக்குடையவர்களும் தங்கள் கருத்துகளைப் பெருமளவு பரிமாறிக் கொண்டனர். இதற்கு அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம் போன்ற இதழ்கள் உதவி யாக இருந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் சதாசிவப் பண் டாரத்தார்-ஒளவை.சு.துரை சாமிப்பிள்ளை-வெள்ளைவாரணன் மூவரும் ஒன்றாகவே வலம்வருவதைப் பலர் கண்டு சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைவாரணன் என்னி டம் நேரிலும் கூறியிருக்கிறார். முதல்வர் வரலாற்றாசிரியர் என்பதும், இரண்டாமவர் உரையாசிரியர் என்பதும் மூன்றாமவர் சைவஇலக்கிய ஆய்வாளர் என்பதும் நாம் அறிந்தது. இது அக்காலப் பொதுப்போக்கு. (விதிவிலக்குகள் இருந்தன-அவற்றிற்குள் நான் இப்போது புகவில்லை).

சைவசைமய-உரையாசிரிய-வரலாற்றாசிரியக் கூட்டணி தமிழில் உருவாக்கிய பொதுப்புத்தி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இக்கூட்டணியின் விளைவாக, உரு வான பொதுக்கருத்தாக்கங்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்.

1. தமிழின் தனித்தன்மை. சமஸ்கிருதம்இன்றி இந்தியாவில் தனித்தியங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றே என்ற தற்பெருமை இதில் அடக்கம். இது வரலாற்றுப் பூர்வமானது. ஒரு வேளை சங்கஇலக்கியம் தோன்றிய காலத்தில் இக்கருத்துக்கு நியாயம் இருந்தி ருக்கலாம். இத்தற்பெருமைக்கு இன்று எந்தவித நியாயமும் இல்லை. தொல்காப்பியம் சங்கஇலக்கியம் தொடங்கியே சமஸ்கிருதத்தின் கலப்பு நிகழ்ந்திருப்பதைக் காண்கி றோம். பிராகிருதம், தெலுங்கு முதலியவற்றின் கலப்பும் உள்ளது. சமஸ்கிருத மொழி யைப் பாராட்டுபவர்கள்தான் தாங்கள் தான்தோன்றிகள், பிற மொழிக் கலப்பற்ற வர்கள், தேவபாஷைக்காரர்கள் என்று முட்டாள்தனமாக நினைத்தால் நாமும் முட்டா ளாக வேண்டிய அவசியம் என்ன?எந்தச் சமூகத்திலும் பிற சமூகங்களுடைய-பிறமொழிகளுடைய கலப்பு இருக் கத்தான் செய்யும். கலப்பை இழிவாக நினைப்பது தவறான மனப்பான்மை. உண்மை யில் கலப்புதான் இயல்பானது. இன்றும் நாகர்கோவில் கன்யாகுமரி தமிழில் மலையா ளக்கலப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. சென்னைத் தமிழில் உருது, தெலுங்குக் கலப்பு இருக்கிறது. அதிலும் நாம் பேதம் பாராட்டுகிறோம். மலையாளம் தமிழிலிருந்து தோன்றி யது, சேரநாடு பழங்காலத்தில் செந்தமிழ்நாடு என்ற எண்ணம் இருப்பதால், பேசுபவர் கள் அனைத்து சாதியினருமாக இருப்பதால் குமரி வட்டாரவழக்கைக் குறை சொல்வ தில்லை. திரைப்படம் முதற்கொண்டு மலையாளக் கலப்பை ஏற்றுக்கொண்டு பாராட் டுகிறோம். தெலுங்கரை வடுகரென்றும், உருதுவை எங்கிருந்தோ வந்தவர்கள் (‘துலுக் கர்கள்’) பேசியமொழி என்றும் நினைத்ததாலும், இவற்றைக் கலந்து பேசியவர்கள் பொருளாதார, சாதிஅடிப்படையில் தாழ்ந்தவர்களாக இருந்ததாலும், சென்னைமொழி இழிவானதென்று நினைக்கிறோம். அங்கு எழுந்த கலைகளும், கானாப்பாட்டுகளும் இழிந்தவை என்ற எண்ணம் நெடுங்காலம் நிலவியது. இப்போது சற்றே மனப் பான்மை மாற்றம் காணப்படுகிறது.தனித்தமிழ் இயக்கம் சொல்லுருவாக்கத்தில் மட்டும் சில நன்மைகளைச் செய் தது. ஆனால் தமிழ் ஆய்வுப்போக்கை அறவே கெடுத்துவிட்டது. அறிவியல் மனப்பான் மையின்றியே மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகியவற்றை அணுகும் முறையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு மாபெரும் சான்று தேவநேயப் பாவாணரின் ஆய்வுமுறை. இன்றைய கணிப்பொறிக் காலத்தில் தமிழின் பழம்பெருமை பேசுவ தற்குத் தவிர வேறு எதற்கு இது பயன்பட்டிருக்கிறது?

2. காலமுதன்மை. முன்னரே கால ஆய்வு பெருவரவாக இருந்த நிலை பற்றிப் பேசி யிருக்கிறோம். கால ஆய்வுசெய்தால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தியது என்று சொல்லிவிடுவது பழந்தமிழ் ஆய்வுகளின் வழக்கம். எத்தனை தமிழ் அறிஞர்கள் சிவபெருமானும் முருகப்பெருமானும் இருந்து தமிழாய்ந்த காலத்தைப்பற்றித் தங்கள் ஆய்வுநூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்! எது பொய் எது உண்மை என்றே அறியாதவர்கள்-பாவம். சமயநம்பிக்கை அவர்களின் ஆய்வுப்போக்கைக் குலைத்து விட்டது. சமயநம்பிக்கையால் ஆய்வுப்போக்கு குலைந்த ஒரு மாபெரும் நூலுக்கு உதா ரணம், மறைமலையடிகள் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆய்வு.
சமஸ்கிருதத்தை விட நாங்கள் முந்தியாக்கும் என்று சொல்லமுனைந்த தமிழ்ப் பற்றுக்கு ஆராய்ச்சி பலியாகிவிட்டது.

3.பழம்பெருமை பேசுதல். சங்ககாலம் பொற்காலம் என்று தமிழ்அறிஞர்களும், சோழர்காலம் பொற்காலம் என்று பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்களும், பக்திக்காலம் பொற்காலம் என்று சமயம்சார்ந்தவர்களும் நீண்டகாலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றும் இப்படிப்பட்டவர்கள் உண்டு. இதனால் ஆகப்போவது என்ன? என் தாத்தாவுக்கு யானை இருந்தது, ஆனால் நான் பிச்சைக்காரன் என்ப வனை யாரேனும் மதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இன்று நமது வளர்ச்சி என்ன, சாதனை என்ன என்பதுதான் பிறர் நம்மை மதிப்பிடும் முறை. நமது பழம் பெருமை, கலாச்சாரப் பெருமை என்பது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சாதன மாகவே இருக்கவேண்டும்.

4. இங்கு இல்லாதது இல்லை இளங்குமரா என்ற மூடமனப்பான்மை. பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவதைப்போல, சமஸ்கிருத பக்தர்கள் எல்லாம் வேதத்திலிருந்து வந்தது என்பதைப்போல, மார்க்சியவாதிகள் எல்லாவற்றையும் மார்க்ஸ் முன்னரே சொல்லி விட்டார் என்பதைப்போல, பெரும்பாலும் தமிழ் ஆய்வினைத் தொடங்குபவர்கள்-குறிப்பாக பிஎச்.டி. ஆய்வளார்கள் தொல்காப்பியத்திலிருந்துதான் எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பித்தால்தான் அவர்களுடைய வழிகாட்டிமார்கள் விடுவார்கள். சிறுகதையா, தொல்காப்பியத்தில் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறது. புதுக்கவிதையா, தொல்காப்பியத்தில் அதன் இலக்கணம் இருக்கிறது. நகைச்சுவைக் கட்டுரையா, தொல்காப்பியம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறது…எல்லாவற்றையும் தொல் காப்பியம் சொல்லிவிட்டதென்றால் உனக்கு என்ன வேலை இங்கே? அப்படி எல்லாவற்றையும் ஒருவன் சொல்லிவிட முடியுமா? காலம் எவ்வளவு மாறுதல்களை உண்டாக்கும்? நானும் என் பங்குக்குச் சொல்லிவிடுகிறேன், இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தொல்காப்பியர் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று சொல்லியிருக்கிறார். போதுமா?
நமக்கென்று உள்ள பாரம்பரியத்தை நான் மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. ஆனால் அந்தக் கலைகளின் அஸ்திவாரங்கள்தானும் எங்கே? சமஸ்கிருதக்காரன் நாடகக்கலை பற்றிப் பேசினால் அவனிடம் இருநூறு நாடகங்கள்-பாஸன் எழுதியவை முதலாக காளிதாசன் எழுதியவை முதலாக இருக்கின்றன. இலக்கிய வரலாற்றுப் புத்தகங்களில் தமிழில் நாடகம் இருந்தது என்று சாதிக்க நமது தமிழ் ஆசிரியர்கள் படும் பாட்டைப் பார்க்கும்போதெல்லாம் மனசு நோகிறது. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன தமிழ்நூல்கள் என்று பட்டியல் எழுதிப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்.

5. தவறான சரித்திர ஏற்புகள். குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம் என்றெல்லாம் கப்சா விட்டார்கள் நமது சரித்திர ஆசிரியர்கள். அங்குதான் தமிழினமே தோன்றியது, தமிழ்தான் உலகின் மூத்தமொழி என்று போய்விட்டார்கள் நமது ஆய்வாளர்கள். எத்தனை புதுமைப்பித்தன்கள் உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கா என்று கிண்டலடித்தாலும் புத்திவராது நமக்கு. இன்றைக்கும் மங்கோலிய பாஷைக்கும் ஜப்பா னிய பாஷைக்கும் மூலம் தமிழ் என்பவர்கள் இருக்கிறார்கள். பெரியபெரிய உலகளா விய ஆராய்ச்சி நிறுவனங்களை வைத்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

6. சைவசித்தாந்தம் பற்றிய பெருமை. தமிழர்களின் பங்களிப்பு சைவசித்தாந்தம் என்ப வர்கள் உண்டு. சைவம் இந்தியாவின் பிறபகுதிகளில் மேன்மையோடு இல்லாமையால் ஒருவேளை இக்கருத்து உண்மையோ என்ற ஐயம் எழுகிறது. ஆனால் அதுவும் வட மொழிசார்ந்த ஒரு பாஷையில்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஏன்?

7. அறநோக்கு. பழங்காலத்தில் அறம்பொருள் இன்பம்வீடு அடைதல் நூற்பயனே என்று சொன்னாலும் சொன்னான், நாம் எல்லா நூல்களிலும்-குறிப்பாக இலக்கிய நூல்களில் அறங்களைத் தேடியே வாழ்நாளைக் கழிக்கிறோம். ஆனால் நம் வாழ்க் கையில்தான் அறம் இல்லை. இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை மேற்கொண்டுவிட்டால் பிறகு எப்படி மதிப்பிடமுடியும்?
இதெல்லாம் இப்படியிருக்க, திராவிட இயக்கங்கள் தமிழ் ஆராய்ச்சியை எங்கே கொண்டுவிட்டிருக்கின்றன? ‘பேசுவது மானம் இடைபேணுவது காமம்’ என்பான் கம்பன். சுயமரியாதைவீரர்கள் பேச்சில்தான் சுயமரியாதையே தவிர, நிஜத்தில் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவதுதான் அவர்கள் கலாச்சாரம் ஆயிற்று. தமிழர்கள் காலில் மட்டுமல்ல-எங்கே பதவி பணம் கிடைக்குமோ அங்கெல்லாம் காலில் விழுந் தார்கள். தமிழர்கள் மானத்தை அடியோடு விலை பேசினார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆனால் தமிழ்நாட்டில் என்றைக்குமே ஜனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்த காலத்திலேயே கைதூக்குவதற்கென்று மட்டுமே எம்எல்ஏ ஆனவர்கள்-ஆக்கப்பட்டவர்கள் உண்டு. பின்னர் அதுவே வாடிக் கையாயிற்று. ஜனநாயகம் இல்லாத கூட்டத்தின் மத்தியில் ஆராய்ச்சி எப்படி வளரும்?
இறக்கும்போதும் இரண்டு மதத்தலைவர்களை இருபுறமும் வைத்துக்கொண்டு நான் இயேசுவைப்போல இறக்கிறேன் என்று நையாண்டி செய்த இங்கர்சால் எங்கே? இங்கர்சால் பற்றி எழுதிக் கொட்டியவர்கள்-கடவுள் இல்லை என்று கத்தியவர்கள்-கடைசியில் ஓட்டுவாங்குவதற்காக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’தான் எங்கள் கொள்கை என்று உளறிய தமிழ் திராவிட மானஸ்தர்கள் எங்கே? நேர்மையற்ற சமூகத்தில் ஆராய்ச்சி பிறக்காது. திறனாய்வு கருவிலேயே கலைந்துவிடும்.

பெரும்பாலும் இன்றைக்கு ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் எல்லாம் இதனால் பின்னால் என்ன லாபம் கிடைக்கும் என்ற நோக்கோடுதான் இறங்குகிறார்கள். யாரைப்பற்றிய தலைப்பு எடுத்தால் விற்கும்? பணம் பாராட்டு பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலே மனத்தைவிட்டபிறகு ஆராய்ச்சிக்கு எங்கே போவது? அல்லது குழு மனப்பான்மையோடு ஆராய்ச்சி என்ற பெயரில் குப்பைகளை உருவாக்குகிறார் கள். குழுமனப்பான்மை எப்படி ஆராய்ச்சியில் கெடுதலை விளைவிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

எங்கள் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர். இரா. ஜெய்சங்கர் என்று பெயர். அவரது பிஎச்.டி ஆய்வேட்டைத் தமிழில் சமூகவியல் திறனாய்வு என்ற பெயரில் நூலாக தாயறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் (2007). சமூகவியல் ஆராய்ச்சியாளர்களாகப் பன்னிரண்டு பேரையும் ஒரு கட்டுரைத் தொகுப் பாளரையும் சொல்லியிருக்கிறார். அவரது வரிசை இது-க.ப. அறவாணன், அன்னி தாமஸ், ஈஸ்வரப் பிள்ளை, (இவர்களுக்குப் பின்) கோ. கேசவன், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, சிலம்பு நா. செல்வராசு, (மறுபடி இவர்களுக்குப் பின்) தொ. பரமசிவன், சி. இ. மறைமலை, பெ. மாதையன், (மீண்டும் இவர்களுக்குப் பின்) நா. வானமாமலை, ஆ. வேலுப்பிள்ளை, கடைசியாக ஞா. ஸ்டீபன் என்பவர். இவர்களில் உண்மையான சமூகவியல் திறனாய்வாளர்கள் யார், அவர்களுடைய பங்களிப்பு என்ன, பொருத்த மான வரிசைமுறை என்ன என்பது உங்களுக்கே தெரியும். இது அவரது திறனாய்வுக் கருத்தாக இருந்தால் நான் பொருட்படுத்தமாட்டேன். க.நா.சு. எப்போதும் ஒரு பட்டி யல் வெளியிடுவதுபோல, இவருக்கும் ஒரு பட்டியல் என்று விட்டுவிடுவேன். இது ஆய்வு-பிஎச்.டி. ஆய்வு. இதை ஏற்றுக்கொள்ள மூன்று தேர்வாளர்கள், ஒரு புறத் தேர் வாளர். எங்கே சொல்வது இப்படிப்பட்ட வேதனைகளை? இதனால் யாருக்கு எவ்வ ளவு லாபம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், எதிர்கால மாணவர்களுக்கு இது தவறான வழிகாட்டுதல் அல்லவா?
தன் கருத்தைத் தீர்க்கமான ஆய்வுக்குப் பின்னரே சரியான முறையில் வெளியி டும் திறன் ஆராய்ச்சியாளனுக்கு வேண்டும். அது எப்படியிருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமுதாயத்திற்கு வேண்டும். நன்கு ஆராயப்பட்ட இன்றைய கருத்தும் அல்லது கண்டுபிடிப்பும் நாளை தவறாகலாம். அத்தன்மையை உடன்பட்டுத் தான் ஆய்வுக்களத்தில் இறங்குகிறோம். அறிவியல் துறையிலேயே நியூட்டனின் கருத்து களைத் தூக்கி எறிந்தார் ஐன்ஸ்டீன். ரூதர்ஃபோர்டின் கருத்துகளைப் பொய்யாக் கினார் ஹைசன்பெர்க்.

ஆய்வுசெய்பவர்களுக்குப் பணிவு அவசியம். நியூட்டன் ஒருசமயம் சொன்னா ராம்-”நான் கடற் கரையில் கூழாங்கற்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை” என்று. பௌதிகத்தில் ஒளிபற்றிய அடிப்படைகள் யாவற்றையும் கண்டறிந்த மேதை-ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த பேரறிவாளர்-கால்குலஸ் என்ற கணிதத் துறையையே உருவாக்கிய வித்தகர்-அவரது தன்னடக்கம் அது. நம்மையும் ஆராய்ச்சி யாளர்கள் என்று சொல்லிக் கொள்ள நாக்கூசுகிறது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னொப்பில் என்னையும் என்று பாடிய கதைதான்.

நேர்மையான ஆய்வுக்குப் பின் தங்கள் மனத்தில் பட்ட கருத்துகளை-சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது, இல்லை என்ற பயமின்றி-தர்க்கரீதியாக முன்வைத்தவர்கள் யாரா னாலும் அவர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள்தான் என்ற வரையறையை வைத்துக் கொண்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தமிழ் ஆய்வாளர்களைத் தேடினால் அப்போது நமக்குக் கிடைப்பவர்கள் நல்ல ஆய்வாளர்களாக இருக்கக்கூடும்.

1980 வாக்கில் தமிழியல் என்ற ஒரு சொல் புழக்கத்துக்கு வந்தது. அதை ஆங்கிலத்தில் Tamilology என்று பெயர்த்துக் கொண்டனர். நான் முதுகலை படிக்கும் போதுதான் என்று நினைக்கிறேன்-ஒரு நூல்-அதன் தொகுப்பாசிரியர்களில் வ.சுப. மாணிக்கமும் ஒருவர்- Glimpses of Tamillogy என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ்க்கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அந்தத் தலைப்பு அப்போது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.
எனக்குப் பிடிக்காத பல சொற்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றில் வாழ்வி யல், தமிழியல் என்பவை முக்கியமானவை. அது என்ன வாழ்வியல்? Is there any subject called Lifeology?வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் அது தத்துவம்- philosophy or metaphysics தான். அதேபோலத்தான் தமிழியலும். எல்லாத் துறைகளிலும் தமிழைவிடப் பன்மடங்கு மிக அதிகமான நூல்களைக் கொண்டிருக்கும் மொழி ஆங் கிலம் என்பதை அநேகமாக ஒப்புக் கொள்வீர்கள். Is there any field called Englishology? நண்பர் மதியழகன்கூட தமது நூலில் “தமிழ் ஆராய்ச்சி வரலாற்றை வெறும் இலக்கிய ஆய்வு வரலாறாக இல்லாமல் தமிழியல் ஆய்வு வரலாறாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றும் “தமிழியல் ஆய்வு புதிய பரிமாணத்தை அடையக்கூடும்” என்றும் எழுதியிருக்கிறார்.
தமிழியல் என்பது கல்வெட்டுக்கல்வி, சுவடியியல் தொடங்கி அறிவாராய்ச்சி யியல் வரை எல்லாவற்றையும் அடக்குவதற்குக் கொண்டுவரப் பட்ட ஒரு எல்லா மடக்கி- holdall சொல். முதலில் இப்படி அடக்கினாலே ஆய்வு வளராது. கல்வெட்டு, அந்தத் துறையில் கற்ற நிபுணர்கள் செய்யவேண்டிய பணி. இதில் தமிழ் வாத்தியாருக்கு என்ன வேலை?
தமிழ் இலக்கியம் இலக்கணம் படித்தவர்கள் அத்துடன் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் தமிழ் எவ்வளவோ வளர்ந்திருக்கும். தொல்காப்பியத்தை ஆராய்ச்சி செய்கிறாயா, செய். சிலப்பதிகாரத்தை ஆராய்கிறாயா, செய். அல்லது இக்காலத் தமிழிலக்கியத்தை-புதிதாக வந்த நாவலையோ சிறுகதையையோ கவிதை யையோ ஆராய்கின்றாயா, செய். அதைவிட்டுக் கல்வெட்டு ஆய்வில், சமூகவியலில், உளவியலில், கோயில் கட்டடக்கலையில், தமிழக வரலாற்றில், தமிழ் இசையில், நாடகத்தில், இவற்றிலெல்லாம் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு என்ன வேலை? அது அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள் செய்யவேண்டிய காரியம் அல்லவா?
உதாரணமாக, ஆங்கிலத்தில் சிறந்த ஆய்வாளர்களோ திறனாய்வாளர்களோ அவ்வளவு எளிதாக A sociological approach என்றோ A psychological approach என்றோ போட்டுக்கொள்ள மாட்டார்கள். சமூகவியல் நோக்கு என்று போட்டுக் கொண்டால் முறையாக அந்தத் துறையில் படித்துக் குறிப்பிட்ட ஒருவருடைய நோக்கில்-உதாரண மாக எமில் டர்க்ஹீம், அல்லது மாக்ஸ் வெபர் அல்லது டால்காட் பார்சன்ஸ் போன் றோர் ஒருவருடைய பார்வையில்-ஒரு குறிப்பிட்டநோக்கில் ஆய்வைச் செய்வார்கள். நமது ஆய்வேடுகளில் போல சமூகவியல் ஆய்வு என்று போட்டுவிட்டு ஒரு சமூக வியல் அறிஞரின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளாமல் குடும்பம், பெண்ணின் நிலை என்று பொத்தாம் பொதுவாக எழுதிக்கொண்டு போகமாட்டார்கள்.

சமூகவியல் நோக்கில் என்று போடப்பட்ட ஆய்வேடுகளை உருவாக்கிய பல மாணவர்களை நான் உசாவியபோது அவர்கள் படித்தது பத்து-பதினொன்று-பன்னி ரண்டாம் வகுப்புக்குரிய பாடநூல்களுக்குமேல் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த தமிழில் அவ்வளவு தரத்தில்தான் நூல்கள் கிடைத்தன.
இந்த நிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில்-பிற துறையினர் ஆர்வம் காட்டவில்லை என்பதனால், தமிழ் அறிஞர்களிலேயே ஒரு சிலர் வரலாறு, கோயில், கட்டடக்கலை, இசை, நாடகம் போன்ற தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அப்படிப் பட்ட பொது ஆய்வுக்காலம் முடிந்துவிட்டது. உதாரணமாக இன்று யாரும் வ.சுப. மாணிக்கம் ஆய்வு செய்தது போல தமிழ்க்காதல் என்ற ஒட்டுமொத்தமான தலைப்பில் செய்யமுடியாது. அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். இப்போது நாம் தனித்தனித் துறைகளாகப் பகுத்து நுணுக்கமான ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று வரலாற்று வரைவியலில் சீனிவாச ஐயங்காரையும் கே.கே. பிள் ளையையும் தரமான வரலாற்றறிஞர்களாக ஏற்பதில்லை.
தமிழியல் மாயைக்கு இன்னொரு காரணம் முத்தமிழ் என்ற சொல். நான் வெறுக்கும் சொற்களில் இன்னொன்று. ஏதோ ஒரு காலத்தில் தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லி எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துவிட்டார்கள். அது என்ன முத்தமிழ்? இசையும் நாடகமும் எந்த மொழியில் இல்லை? எங்கேயாவது மூவாங்கிலம், மூஇந்தி (திரிஹிந்தி) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஏன், ஆங்கிலமொழிக்கென இசை இல்லையா? நாடகம் இல்லையா? கேட் டால் இது தமிழின் தனித்தன்மை என்பார்கள்.

இயல்-தமிழ்தான். இலக்கியம் தமிழ்தான். இலக்கணம் தமிழ்த்துறை சார்ந்தது தான். இசை எப்படித் தமிழ்த்துறை சார்ந்தது ஆகும்? இசை தனிக்கலை அல்லவா? அதில் வன்மை பெறவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை யில் இசையை-அது கர்நாடக இசையோ, இந்துஸ்தானியோ, மேற்கத்திய இசையோ எதுவாயினும் கற்கவேண்டும் அல்லவா? தமிழ் மட்டும் படித்தவன் இசையில் சொல்வ தற்கு என்ன இருக்கிறது? 72 மேளகர்த்தா ராகங்களின் அமைப்பையும் பாடும் முறை யையும் தெரியாமல் சும்மா பழங்காலத்தில் அந்த இலக்கணம் இருந்தது, இந்தப் பண் இருந்தது என்று சொல்வதற்குமேல் என்ன செய்துவிடமுடியும்?
அதேபோல் தான் நாடகத்திலும். நாடகம் என்பது அரங்கக்கலை என்ற உண் மையே தெரியாமல் மனோன்மணீயத்தைப் பின்பற்றி மேடைக்குச் சம்பந்தமில்லாமல் ஸ்கிரிப்ட் எழுதியவர்கள் எல்லாம் இங்கே நாடகாசிரியர்கள். விஷயம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறைகூறியபோது படிப்பதற்குரிய நாடகங்கள் (அப்படி ஒரு பிரிவே உண்மையில் கிடையாது) இவை என்று பகுத்து ஆராய்ச்சி வேறு செய்யத் தொடங்கி விட்டார்கள். தமிழ்க் கவிதை நாடகங்கள் என்ற தலைப்பில் ஒரு பழங் கல்லூரி ஆசிரியர் ஆய்வே நிகழ்த்தியிருக்கிறார். கவிதையோ உரைநடையோ விஷயமல்ல. அது நாடகமா என்பதுதான் விஷயம். அரங்கக் கலை என்பது ஸ்கிரிப்ட் கற்பனையில் தயாரிப்பது மட்டுமல்ல. ஒப்பனையிலிருந்து, ஒளிஒலி அரங்க அமைப்பிலிருந்து நடிப் பிலிருந்து எத்தனை விஷயங்கள் அதில் இருக்கின்றன? பெக்கட் எழுதிய சில நாடகங் களில் காட்சிகள்தான் உண்டு. வார்த்தைகளே கிடையாது. இம்மாதிரி பேச்சுமொழி யற்ற-ஆனால உடல்மொழி மட்டும் கொண்ட நாடகங்களை நம் முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஆராய்வார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

அவரவர் வேலையை அவரவர் நேர்மையாகச் செய்தாலே போதும், உலகம் மிகவும் பரிசுத்தமான இடமாகிவிடும். இன்னொருவரது வேலையை நாம் ஏற்றுச் செய்யவோ, பிறருக்கு அறிவு கொளுத்தவோ தேவையில்லை.
ஒருகாலத்தில் தொல்காப்பியம் வாழ்க்கைக்கு இலக்கணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கைக்கு யாரால் இலக்கணம் வகுக்க முடியும்? வாழ்க்கை என்ன ஒரு சிமிழில் அடைத்துவிடக்கூடியதா அல்லது சில அறக்கோட்பாடுகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடியதா? காலத்திற்குக் காலம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன? இவற்றையெல்லாம் எவராலேனும் ஒரு சிறுநூலுக்குள் அடைக்கமுடியுமா? தொல் காப்பியம் கவிதைக்கு-அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த கவிதைகக்கு-இலக்கணம். அவ்வளவுதான். இந்தக் காலத்திற்கே தொல்காப்பிய இலக்கணத்தைப் பயன்படுத்தமுடியுமா என்பது கேள்விக்குறி. தொல்காப்பியத்தில் எல்லாம் இருக்கிறது என்பவனின் மூடத்தனம், வேதத்தில் எல்லாம் இருக்கிறது என்று சொல்பவனின் மூடத்தனத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல.
மேற்கண்ட காரணங்களாலும் பின்னால்வரும் காரணங்களாலும் தமிழ் ஆய் வில் துல்லியம் குறைந்து இப்போது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆய்வின் துல் லியமும், ஆய்வுப்பொருளின் துல்லியமும் மிகவும் அவசியம். மேலே கூறப்பட்ட உதா ரணம்-பின்னமைப்பியம், பின்நவீனத்துவம் என்பவற்றைப் பலரும் குழப்பிக்கொள்வ தும் துல்லியமின்மைதான். அமைப்பியம் என்பதற்கு பதிலாக அமைப்பியல் என்றா லும் துல்லியமின்மைதான். தமிழில் கலைச்சொற்களின் துல்லியத்தைப் பற்றியோ, ஆய்வின் துல்லியத்தைப் பற்றியோ கவலைப்பட ஒருவருமில்லை. பிரபலமான ஒருவர் எழுதிவிட்டால் அப்படியே பின்பற்றுவது என்றாகிவிட்டது. எல்லாம் மரபுவழுக்கள் தான். வழுஅமைதியாக ஆக்கிக்கொள்க.

1975இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் சேர்ந்த நான் 2007இல் 32ஆண்டுகள் கழித்து ஓய்வு பெற்றேன். இந்த 32 ஆண்டுகளில் அநேகமாகப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கென எழுதிய கட்டுரைகள் ஆறு அல்லது ஏழு இருக்கலாம். அவையும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கென எழுதப்பட்டவை. உதாரணமாக எங்கள் கல்லூரியிலேயே இரண்டு முறை பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற விழா நடந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நான் எழுதியிருக்கிறேன். நான் பிஎச்.டி ஆய்வுசெய்யத் தொடங்கியபோது எனது தலைப்பை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை வரையுமாறு எனது நெறியாளர் கூறினார். அதற்காக ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதினேன். ஒருமுறை புதுதில்லியில் தமிழாசிரியர் மன்றம் நிகழ்ந்தபோது அதற் காகவே எழுதப்பட்ட கட்டுரை, ரஷ்ய உருவவியலின் கூறுகளை அறிமுகப்படுத்து கின்ற கட்டுரை. ஆனால் இப்போதெல்லாம் தமிழாசிரியர்கள் பல்கலைக்கழகத் தமிழா சிரியர் மன்றத்திற்கு ஆண்டுதவறாமல் கட்டுரை வரைகிறார்கள். காரணம் வேறொன் றுமல்ல-அக்கட்டுரைகள் யுஜிசியினால் அவர்களது படைப்பாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அவ்வளவுதான்.
யுஜிசி ஊதியக்குழுவின் பரிந்துரைகளையட்டி அந்த ஊதிய விகிதங்களை அறிமுகப்படுத்தியபோது அவர்களுடைய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந் தம் நேரிட்டது. அதனால் சில ஆய்வுக்கட்டுரைகளை ஆசிரியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்றானது. பின்னர் பிஎச்.டி. பட்டம் பெற்றோர் நெறியாளராகப் பணியாற்றவும் கட்டுரைகள், நூல்கள் தேவைப்பட்டன.

இடையில் மாலைநேரக் கல்லூரிகள் வந்தன. அவை பின்னர் சுயநிதிக் கல்லூரிகள் ஆயின. அவற்றில் வேலைசெய்பவர்களுக்கு யுஜிசி ஊதியம் பெறக்கூடிய அரசாங்க அல்லது உதவிபெறும் கல்லூரிப்பதவிகளில் சேர்வது ஒரு கனவு. அதனால் அவர்கள் நெட், ஸ்லெட் போன்றவற்றை எழுதநேரிட்டது மட்டுமல்ல, டி.ஆர்.பியின் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகவே நூல்களை எழுதவேண்டிய அவசியம் நேரிட்டது. டிஆர்பியில் தேர்ச்சிபெற வேண்டி, எனது மாணவர் ஒருவர் (தெரிந்தே அது உருபைப் பயன்படுத்துகிறேன்) தம்முடைய பிஎச்.டி. ஆய்வேட்டைப் பகுத்து ஆறு நூல்களாக வெளியிட்டது நினைவிருக்கிறது. எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக- கணக்குக் காட்டுவதற்காக எழுதுபவர்களின் எழுத்தில் எவ்வளவு ஆய்வு நேர்மை, ஆய்வு மனப்பான்மை யெல்லாம் இருக்கும்?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நெறியாளர்கள் செய்யும் ஊழல். தங்களுக் குள் குழுக்கள் அமைத்துக் கொண்டு உன்னுடைய மாணவனை நான் தள்ளிவிடுகி றேன், என்னுடைய மாணவனை நீ குறைசொல்லாதே என்பதுபோல-பண்டப்பரிவர்த் தனையில் இறங்குகிறார்கள். நேர்மையாக மதிப்பீடு செய்பவரை ஒருவரும் மதிப்பதும் இல்லை, அவருக்கு ஆய்வேடு செல்வதும் இல்லை.

இவை யாவற்றிற்கும் மேலாக, ஆராய்ச்சி பொதுப்புத்தியினால் எடைபோடப் படுகிறது. அவர் மனத்தைப் புண்படுத்தக்கூடாது, இவர் மனத்தை பாதிக்கக்கூடாது, மதச்சார்பாளர்களை அவமதிக்கக்கூடாது, இந்தக் கட்சியை எதிர்க்கக்கூடாது, அந்தக் கட்சியைக் குறைசொல்லக்கூடாது என்ற நிலை. எல்லாம் எப்படியோ போகட்டும், எதுக்கய்யா நமக்கு வம்பு? முதலில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்தானே?
ஆக இன்றைய நிலை, நான் பல ஆண்டுகளாக என் மாணவர்களிடையே சொல்வதுபோல, 100 பக்கம் எழுதினால் முதுகலை திட்டக்கட்டுரை, 200 பக்கம் எழுதினால் எம்.ஃபில் ஆய்வு. 300 பக்கம் எழுதிவிட்டால் பிஎச்.டி ஆய்வேடு. தலைப்பு உள்ளடக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆய்வுநெறிமுறை பற்றிக் கவலையே இல்லை. அப்புறம் ஆய்வு எப்படி தமி ழில் வளரும்? அதுகூடப் போகட்டும், தமிழ் ஆய்வைப் பற்றிப் பிறதுறையாளர்கள் இடையே என்ன மதிப்பு இருக்கும்? தங்கள் மதிப்பைக் குறைத்துக்கொள்வதோடு, தமி ழின் மதிப்பையும் குறைத்து, இறுதியில் தமிழ் படிப்பதில் கஷ்டம் என்ன இருக்கிறது என்ற கேலிக்கு மொழியை ஆளாக்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழாசிரியர்களை யும் ஆய்வாளர்களையும் பார்த்தவர்கள் உயர் அதிகாரிகள் ஆகும் வாய்ப்பு நேரிட்டால் தமிழ்க்கல்விக்கு என்ன மரியாதை தருவார்கள்? கடைசியாகத் தமிழாசிரியரின் நிலை கமலாம்பாள் சரித்திரத் தில் வரும் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையின் நிலைதான்.

நாம் என்ன செய்தாலும் அது நம்மை மட்டுமல்ல, தமிழின் நிலையையும் பாதிக் கும் என்ற உணர்வு இருந்தால் ஒழுங்காகவே தமிழ் வளரும், தமிழ்க் கல்வி வளரும், தமிழ் ஆராய்ச்சி வளரும். ஆனால் சுயநலம் மிகுந்த இக்காலத்தில் இதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் யார்? தமிழ்ச்சாதியில், தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோம். அதிலும் தமிழ் கற்கவும் தொடங்கிவிட்டோம். நாம் செய்யும் எல்லாக்காரியங்களும் தமிழின் மதிப்பையும் தமிழ்நாட்டின் மதிப்பையும் தமிழர்களின் மதிப்பையும் பாதிக்கக்கூடி யவை என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் காலம் மாறும்.

555882_475200095840939_39838795_n-1

 

 

Critical analysis on

மேற்கு நாட்டில் ஆய்வு வளர்ச்சி எந்த அளவு பெருகியுள்ளது

ஆய்வு நெறிமுறைகள்
ஆய்வு வளர்ச்சியில் சிறுபத்திரிகைகள் என்ன பங்களிப்புச் செய்தன?
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு போன்ற மாநாடுகள்
தனியார் அமைப்புகள், நிறுவனங்கள்
தமிழ் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கென சில தமிழ் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
ஆசிய ஆய்வு நிறுவனம்
இதேபோல ஆண்டுதோறும் ஒருமுறையாவது எழுதவைக்கின்ற
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
மதுரையில் இதையட்டி இன்னொன்று தோன்றியது
பல்கலைக்கழக அமைப்புகள்
ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்
பல்கலைக்கழக ஆய்வேடுகள்வையை மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் தோன்றிய முன்னோடி அமைப்பு
பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆண்டுதோறும் இரண்டு ஆசிரியக் கருத்தரங்கங்கள்
அவற்றைத் தொகுத்து வெளியிடுதல்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மருதம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். இதுபோல அந்தந்தப் பல்கலைக்கழகம், கல்லூரி அவற்றின் ஆய்வுஅமைப்புகளுக்கும் வெளியீடுகளுக்கும் பெயர்களை நிர்ணயித்துக்கொண்டன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard