Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 082 தீ நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
082 தீ நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தீ நட்பு 
விலக்கத்தக்க தீயோர் நட்பு
குறள் திறன்-0811 குறள் திறன்-0812 குறள் திறன்-0813 குறள் திறன்-0814 குறள் திறன்-0815
குறள் திறன்-0816 குறள் திறன்-0817 குறள் திறன்-0818 குறள் திறன்-0819 குறள் திறன்-0820

openQuotes.jpgஅஃதாவது, பொறுக்கப்படாத குற்றமுள்ளதாயும் எப்போதும் தீமையே செய்வதாயுமுள்ள தீயோர் நட்பு.
- தேவநேயப் பாவாணர்

 

தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு. கெட்ட குணமுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கூறும் அதிகாரம். ஒருவருடன் நட்பு உண்டானபின் பிரிவது கடினமான செயலாம். ஒப்பிலார் கேண்மை என்ன தீமை செய்யும் என்பதை அறிந்துகொண்டால் விலக்குவதா கூட்டுவதா என்பதைத் தெளியலாம். தீய நண்பர்கள் என அறிந்தபின்னர் அந்நட்பை விலக்குதல்‌ நல்லது எனச் சொல்லப்படுகிறது,

தீ நட்பு

சென்ற அதிகாரமான பழைமையில், எவ்வளவு தவறுகள் செய்தாலும் விடமுடியாத நட்புப்பற்றிச் சொல்லப்பட்டது. இங்கு அதற்குமாறாக தீமை உண்டாக்கக்கூடிய நட்புத் தொடர்புகளை விலக்கிக் கொள்க என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது 'நட்பாடுபவர் பொறுக்கக் கூடிய பிழைசெய்தால் பழைமை பற்றிப் பொறுக்க; இல்லையேல் விடுக' என்ற கருத்தை வழங்குகிறது இவ்வதிகாரம்.
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு (நட்பாராய்தல் 793 பொருள்: குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க) எனக்‌ குற்றமுடையாரை ஆராய்ந்து விடுக்க என நட்பாராய்தலில் சுருங்கச்‌ சொல்லப்பட்டது. அதை விரித்து விளக்கவேண்டும் என்ற நோக்கில்‌, குற்றமுடையாரைத்‌ தீ நட்பினர்‌, கூடா நட்பினர்‌ எனப் பிரித்து இந்த அதிகாரத்திலும்‌ அடுத்த‌ அதிகாரத்திலும்‌ முறையே விளக்கிக்‌ கூறப்படுகின்ற‌ன.
நட்பு, கேண்மை, தொடர்பு என்னும்‌ சொற்களோடு தீமையைக்‌ குறிக்கும்‌ வெவ்வேறு அடைமொழிகளைச்‌ சேர்த்து, தீ நட்பு அதிகாரப்‌ பெயர்ப்‌ பொருளை வள்ளுவர்‌ தெளிவிக்கின்றார்‌. பண்பிலார்‌ கேண்மை, ஒப்பிலார்‌ கேண்மை, கல்லாமா அன்னார், சிறியவர்‌ புன்கேண்மை, பேதை நட்பு, நகைவகையராகிய நட்பு, வினைவேறு சொல்வேறு பட்டார்‌ தொடர்பு, மன்றிற் பழிப்பார் தொடர்பு என்பன போன்ற தொடர்கள்‌ மூலம் தீ நட்பு விளக்கப்படுகிறது.
கெழுமிக் குற்றம்புரிவாரது தீங்கை உணர்த்துவது தீநட்பு பாடல் தொகுதி. உரிமை பற்றிய அன்பு இல்லாமல், அறிந்தே தீங்கு செய்பவர்களின் நட்பை விட்டொழிக்கலாம் எனச் அறிவுறுத்தப்படுகிறது.

எவ்வளவுதான் ஆராய்ந்து நட்புகொண்டாலும், சிலரின் உண்மையான குணநலன்கள் காலம் செல்லச்செல்ல வெளிப்பட்டேவிடும். தமது உள்நோக்கங்களைத் திறமையாக மறைத்து நம்பிக்கைக்குரிய நண்பரைப்போல காட்டிக்கொள்பவர் போன்றோரின் உறவு தீ நட்பு என வகைப்படுத்தப்படுகிறது. நட்பதில் விழிப்புடன் தடுக்க வேண்டியதொடர்புகளாக இவ்வதிகாரம் கூறுவன:
அளவு கடந்த அன்பைக் காட்டுவது போல் இருந்தாலும் நல்ல பண்புகளைப் பெறாதவர்களின் நட்பு.
தங்களுக்குப் பயனளிக்கும் சில செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நட்புகளை உருவாக்கித் தன்னலம் ஒன்றையே கருதி நட்புகொள்வோர்.
பொருள் கவர்வதிலேயே குறியாய் இருக்கும் இழிதகை நட்பினர்.
போர்க்களத்தில் முதுகில் இருந்த வீரனைத் தள்ளிவிட்டுத் தப்பிஓடும் குதிரையைப்போன்றோரது நம்பகத்தன்மையற்ற உறவு,
உதவி செய்யும் மனப்பான்மையே இல்லாதவருடனான உறவு.
அறிவு திரிந்தவருடனான கெழுமுதல்.
களிப்பும் பொழுதுபோக்கிற்காகவே கூடுபவரது நட்பு.
கூடவே இருந்து குழிபறிப்பவருடனான நெருக்கம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரது கசப்பான கெழுமுதல்,
வீட்டிற்குள் நயமாகப் பேசிவிட்டு, பொது இடங்களில் பழிச்சொல் கூறுவோரது கேண்மை.
இத்தகையோருடனான நட்பை வளரவிடக்கூடாது, அது இருந்தால் என்ன அதை இழந்தால் என்ன. கள்வர்க்கு இணையான நட்பு தேவையா?, நட்பின்றித் தனியாகவே இருக்கலாம், நட்பை அடைவது விட அடையாதிருப்பது நல்லது, இவர்களின் நட்பைவிட, பகைவரால் வரும் துன்பம் பெரிதல்ல, சொல்லாமல் கொள்ளாமல் தளரவிடுக, இதுபோன்ற தீநட்பைக் கனவில்கூட கருதிப்பார்க்கக் கூடாது, பக்கத்திலே நெருங்க விடாதீர் என்பன இவ்வதிகாரம் வழங்கும் அறிவுரைகள்.

தீ நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 811ஆம் குறள் பருகுவார்போல் ஆர்வம் மிகக் காட்டினாலும் குணக்கேடர் நட்பு வளர்வதைவிடக் குறைதல் நல்லது என்கிறது.
  • 812ஆம் குறள் ஏதேனும் கிடைக்குமானால் பழகி, இல்லையானால் விலகிவிடும் பொருந்தாதோர் நட்பு பெற்றாலென்ன இழந்தாலென்ன? எனக் கேட்கிறது.
  • 813ஆம் குறள் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்து வந்துள்ள நட்டாரும் கிடைப்பதைப் பற்றிக் கொள்ளும் குணம் உடையவரும் திருடரும் தம்முள் சமம் எனச் சொல்கிறது.
  • 814ஆம் குறள் போர்க்களத்தின் இடையில் கீழே தள்ளிவிட்டுச் செல்லும், திருத்தம் பெறாத குதிரையை ஒத்தவரின் உறவைவிடத் தனியாக இருத்தல் மேல் என்கிறது.
  • 815ஆம் குறள் நட்புச் செய்தும் காவல் ஆகாத சிறுமைக்குணம் கொண்டோரின் கெட்ட நட்பு பெறுவதைவிட பெறாமலே இருத்தல் நல்லது எனச் சொல்கிறது.
  • 816ஆம் குறள் அறிவில்லாதவனுடனான மிக நெருக்கமான நட்பைவிட, அறிவுடையாரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது என்கிறது.
  • 817ஆம் குறள் கேளிக்கைகளில் மட்டும் ஈடுபாடு கொண்டவரது நட்பைக் காட்டிலும் பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை கிடைக்கலாம் எனச் சொல்கிறது.
  • 818ஆம் முடிக்கக் கூடிய செயலையும் கெடுப்பவரின் நட்பினைச் சொல்லாதே நழுவவிடுக என்கிறது.
  • 819ஆம் செயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தருமே என்கிறது.
  • 820ஆவது வீட்டுக்குள் குலவிப் பேசிவிட்டு பலர் கூடியிருக்கும் அவையில் இகழ்ந்து கூறுவாரது நட்பு சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க என்கிறது.

 

தீ நட்பு அதிகாரச் சிறப்பியல்புகள்

தனக்கான செயல் நிறைவேறும்வரை நட்புக்கொண்டு செயல் முடிந்ததும் கழட்டிக்கொண்டு செல்பவரது நட்பைப் பெற்றால் என்ன அடையாவிட்டால் என்ன என்று கேட்பது உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் (812) என்னும் குறள். தன்னலம் ஒன்றனையே கருதும் நட்பாளர் தேவையில்லை.

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் (817) என்னும் பாடல் பொழுதுபோக்கிற்காக மட்டும் நட்பாடுபவர்களைப் பற்றிச் சொல்வது. இவர்களுடனான தொடர்பு தீய பழக்கங்களுக்கு வழிவகுத்து குடிமுழுதும் கெடுக்குமென்பதனாலேயே பத்தடுத்த கோடி என்னும் பேரெண் குறிக்கப்பெற்றது.

ஐயகோ! கனவில்கூட அத்தொடர்பு வரக்கூடாது! என்னுமளவு வெறுபுண்டாக்குவது செய்வது ஒன்று; சொல்வது ஒன்றாக உள்ளோரது செய்கை. அதைச் சொல்வதுகனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு(819) என்னும் பாடல்.

உள்ளுள் நடித்து நெருக்கம் காட்டி வெளியில் பழிப்பவர் தொடர்பை பக்கத்திலேயே அணுக விடவேண்டாம் என்று அறிவுரை சொல்வது எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு (820) என்ற குறள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard