Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழகிய மரம்


Guru

Status: Offline
Posts: 7344
Date:
அழகிய மரம்
Permalink  
 


அழகிய மரம் நூலின் முன்னுரை | தரம்பால், தமிழில்: BR மகாதேவன்

 

(The Beautiful Tree என்ற தன்
நூலுக்கு தரம்பால் எழுதிய முன்னுரை
யின் தமிழாக்கம்.)
 
dharam1.jpg
 

 


(தரம்பால்)

 
இந்தியக் கல்வியின்
வரலாறுபற்றி, குறிப்பாக 1930-40களில், ஏராளமான ஆய்வு நூல்கள் வெளியாகின. ஒருவகையில்
பார்த்தால், பிரிட்டிஷ் அதிகாரிகளாகவும் அறிஞர்களாகவுமிருந்தவர்கள் 19ம் நூற்றாண்டின்
மத்தியிலேயே இது தொடர்பாக எழுத ஆரம்பித்திருந்தனர். எனினும் இவற்றில் பெரும்பாலானவை
பழங்கால இந்தியாவைப் பற்றியவையாக இருந்தன. சில நேரங்களில் 10-12ம் நூற்றாண்டுகள் பற்றியவையாக
இருந்தன. எஞ்சியவை பிரிட்டிஷாரின் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தியாவில் கல்வி
எப்படி இருந்தது என்பது பற்றி எழுதப்பட்டவை. பழங்காலக் கல்வி அமைப்புகள் (நாலந்தா அல்லது
தட்சசீலத்தில் இருந்தவை போன்று) பற்றிய விரிவான ஆய்வுபூர்வமான படைப்புகள் நீங்கலாக
ஏ.எஸ்.அல்டேகர்1 போன்றோர் எழுதிய, பழங்காலம் பற்றிய பொதுவான பல படைப்புகள்
வெளியாகின. அதற்குப் பிந்தைய காலம் பற்றியும் பல படைப்புகள் வெளியாகியுள்ளன: இந்திய
அரசால் வெளியிடப்பட்டு சமீபத்தில் மறுபதிப்பும் கண்ட செலக்ஷன்ஸ் ஃபிரம் எஜுகேஷனல் ரெக்கார்ட்ஸ்
(இரண்டு தொகுதிகள்),2 எஸ்.நூருல்லா, ஜே.பி. நாயக் போன்றோரின் படைப்புகள்
ஆகியவற்றை இந்த இடத்தில் குறிப்பிடலாம்.3 இவர்கள் தமது படைப்பை, ‘கடந்த
160 வருடங்களிலான இந்தியக் கல்வியின் வரலாற்றை விரிவாக, ஆவணபூர்வமாக, இந்தியக் கோணத்தில்
எழுதுவதற்கான முயற்சி’ என்று (அந்த நூல் பேசும் காலகட்டம் மற்றும் அது எந்தக் கோணத்தில்
ஆராயப் பட்டிருக்கிறது என்பது பற்றிச் சுட்டிக்காட்டும்வகையில்) குறிப்பிட்டிருக்கின்றனர்.4
 
ஒருவகையில் அகடெமிக்
ஆய்வு அம்சம் சற்றுக் குறைவாக இருந்தபோதிலும் 1939ல் பண்டிட் சுந்தர்லால் எழுதிய பிரமாண்டப்
படைப்பு மிக அதிக வாசகர்களைச் சென்றடைந்தது.5 அவர் எழுதிய நூலில் சுமார்
40 பக்கங்கள் கொண்ட 36வது அத்தியாயத்தின் தலைப்பு ‘இந்திய பாரம்பரியக் கல்வியின் அழித்தொழிப்பு.’
ஏராளமான பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள்காட்டிப் பேசும் அந்த நூல் கிட்டத்தட்ட 100 ஆண்டு
கால வரலாற்றை விவரிக்கிறது: ஜூன் 1814ல் இந்தியாவுக்கான கவர்னர் ஜெனரலுக்கு இங்கிலாந்தில்
இருந்து வந்த அறிக்கையில் ஆரம்பித்து மாக்ஸ் முல்லருடைய கருத்துகள் வரை பேசுகிறது.
1909ல் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் கேர் ஹார்டி எழுதியவையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் கையெழுத்து ஆவணப் பிரதிகள் எளிதில் கிடைத்திருக்கவில்லை.
எனவே, அன்றைய தேதியில் அச்சில் இருந்தவற்றை மட்டுமே வைத்து அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும் ‘பாரத் மேம் அங்ரேஜி ராஜ்’ (பாரதத்தில் ஆங்கிலேயர் ஆட்சி) என்ற அந்த
அத்தியாயம் 18-19ம் நூற்றாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்விபற்றிய மிக மிக முக்கியமான
படைப்பாகத் திகழ்கிறது.
 
13ம் நூற்றாண்டில்
ஆரம்பித்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிவரையிலான காலகட்டத்து வரலாறு அல்லது கல்விபற்றி
மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் கல்வி பற்றி எஸ்.எம். ஜாஃபர் எழுதிய
படைப்பு6 போன்றவை எல்லாம் இருக்கின்றன; பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்தியாவில்
கல்வி பற்றியும் 18-19ம் நூற்றாண்டுகளில் சிதைந்த நிலையில் இருந்த இந்தியப் பாரம்பரியக்
கல்வி பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிற்சில தகவல்களும் அத்தியாயங்களும் கல்வி
வரலாறு பற்றிய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் இருக்கும் 643 பக்கங்களில்
நூருல்லாவும் நாயக்கும் சுமார் 43 பக்கங்களை 19ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இருந்த
இந்தியக் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்கள்.7 அந்தக் கல்வியின் வீச்சு,
தன்மைபற்றிய பிற்கால பிரிட்டிஷாரின் சில கருத்துகளை அந்த நூலில் கேள்விக்கு உட்படுத்தியுமிருக்கிறார்கள்.
 
19ம் நூற்றாண்டின்
ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் இருந்த கல்வி பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான படைப்புகளும்
அதுதொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் முன்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
முதலாவதாக, முன்னாள் கிறிஸ்தவ மத போதகரான வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள்.8
வங்காளம், பிகார் முதலான பகுதிகளில் 1835-38 காலகட்டத்திலிருந்த பாரம்பரியக் கல்வி
பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்த ஆவணங்கள் மிக அதிகக் கவனம் பெற்றன. இரண்டாவதாக,
பம்பாய் பிரஸிடென்ஸியில் 1820களில் இருந்த இந்தியப் பாரம்பரியக் கல்வி பற்றி பிரிட்டிஷ்
அதிகாரிகள் நடத்திய ஆய்வு முடிவுகள்.9 மூன்றாவதாக 1822-25 காலகட்டத்தில்
மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்தியக் கல்வி தொடர்பான மிக விரிவான பிரிட்டிஷ் ஆய்வு முடிவுகள்.10
வடக்கே ஒரிஸாவின் கஞ்சம் பகுதியில் ஆரம்பித்து தெற்கே திருநெல்வேலி வரையிலும் மேற்கே
மலபார் வரையிலுமான பகுதிகள் மதராஸ் பிரஸிடென்ஸியில் அப்போது இருந்தன. இதே விஷயம் தொடர்பான
பிற்காலத்திய ஆவணம் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி தொடர்பாக ஜி.டபிள்யூ. லெய்ட்னர் தொகுத்தவை.11
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்
லெய்ட்னரின் படைப்பு பிரிட்டிஷாரின் கொள்கை முடிவுகளை மிகக் கடுமையாக வெளிப்படையாக
விமர்சிக்கிறது. இவரது நூல் இவர் சொந்தமாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் முந்திய பிரிட்டிஷ்
அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. பஞ்சாப் பகுதியில் பாரம்பரியக்
கல்வியின் நசிவுக்கு மட்டுமல்லாமல் அதன் அழித்தொழிப்புக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளே
காரணம் என்று அது சொல்கிறது.
 
ஆடம்மின் ஆய்வுகளும்
வேறு சில மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களின் ஆய்வுகளும்12 இந்தியப் பாரம்பரியக்
கல்வியின் அழிவுக்கு பிரிட்டிஷார்தான் காரணம் என்றே தெரிவிக்கின்றன. எனினும், அந்த
விமர்சனங்கள் மிகவும் நாசூக்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கனவான்களுக்கும் உகந்த
மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன (லெய்ட்னர் பிரிட்டிஷ் அதிகாரிதான் என்றாலும் அவர்
‘ஆங்கிலேயர் அல்லர்’)13
 
அக் 20, 1931ல்
மகாத்மா காந்தி லண்டனில் இருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில்
ஒரு நீண்ட உரை ஆற்றினார். அதில், ‘இந்தியாவில் கல்வி கடந்த 50 -100 வருடங்களாக அழிந்துவருகிறது;
அதற்கு பிரிட்டிஷாரே காரணம்’ என்று தெரிவித்தார். ஆடம், லெய்ட்னர் போன்ற பலர் தெரிவித்த
கருத்துகளுக்கும் இந்தியர்கள் பல காலமாகச் சொல்லிவந்த கருத்துகளுக்கும் காந்தியின்
உரை பெரும் வலுவை ஊட்டியது. அதைத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியப்
பாரம்பரியக் கல்வி தொடர்பான மேலே சொன்ன ஆவணங்களுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் வந்தது.
தனி நபர் என்ற வகையிலும் பிரிட்டிஷ் அரசின் சார்பாகவும் சர் ஃபிலிப் ஹெர்டாக்கிடமிருந்து
காந்திக்கு உடனே மறுப்பு எழுந்தது. அவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளராகவும்
ஆக்ஸிலரி கமிட்டி ஆஃப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷனின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார்.
காந்தியின் கூற்றுக்கு ‘அச்சில் வெளியான துல்லியமான ஆதாரங்கள் இருக்கின்றனவா’ என்று
கேட்டார்.14
 
காந்திஜியும் (இந்தக்
காலகட்டத்தில் சிறையில் அதிக காலம் கழிக்க வேண்டியிருந்தது) அவருடைய சக போராளிகளும்
அளித்த பதில்களினால் திருப்தியடையாத ஹெர்டாக், நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் இன்ஸ்டிடியூட்
ஆஃப் எஜுகேஷனில் ஆற்றிய மூன்று தொடர் உரைகளில் காந்திஜியின் கூற்றை மறுத்து விரிவாகப்
பேசினார். 1939ல் தனது அந்த உரைகளையும் வேறு சில ஆதாரங்களையும் சேர்த்துப் புத்தகமாக
வெளியிட்டார்.15
 
காந்திஜியையும்
பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களையும் மறுதலித்தவர்களில் ஹெர்டாக் முதல் நபர் அல்ல;
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையும் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேசியபடி பலரும்
பயணித்திருந்த பாதையை அப்படியே பின்பற்றுபவராகவேதான் இருந்தார். விக்டோரிய இங்கிலாந்தின்
தந்தை என்று பாராட்டப்பட்ட வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மூலமாக பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப்
காமன்ஸில் 125 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்ட பாதை அது.16 ஹெர்டாகைப்
போலவே அவருடைய காலகட்டத்தைச் சேர்ந்த டபிள்யூ ஹெச் மோர்லாந்தும் முன்பு இதுபோல் பேசியிருக்கிறார்.
‘இப்போது இருப்பதைவிட அக்பர், ஜஹாங்கீர் காலகட்டத்தில் பஞ்சம் வெள்ளம் போன்றவை இல்லாத
இயல்பான காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி கிடைத்தது’ என்று வின்சென்ட் ஸ்மித்
கூறியிருந்ததை மோர்லாந்து மறுத்திருந்தார்.17 மோர்லாந்து ஓய்வு பெற்ற வருவாய்
அதிகாரி என்ற நிலையில் இருந்து இந்தியாவின் பொருளாதார வரலாற்று ஆசிரியர் என்ற நிலைக்கு
மாற ஸ்மித் முன்வைத்த சவால் ஒருவகையில் காரணமாக அமைந்தது.18 1940கள் வரை,
உலகை நாகரிகப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சுமந்தவர்கள் என்ற வகையில், பிரிட்டிஷார்
இந்தியாவில் (அல்லது வேறு இடங்களில்) ஆட்சி செய்த 200 ஆண்டுகாலத்தில் அவர்களால் திட்டமிடப்பட்ட
அல்லது திட்டமிடப்படாத செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருக்கவில்லை.
 
இந்தப் புத்தகத்தில்
மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ்
எஜுகே ஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966ல்தான் இதை முதலில் பார்த்தேன்.
முன்பே சொன்னதுபோல் 1831-32லேயே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின்
சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள் மதராஸ் பிரஸிடென்ஸி டிஸ்ட்ரிக்ட்
ஆவணங்களிலும் பிரஸிடென்ஸி ரெவின்யூ ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன,
லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும்.
எனினும் இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன.
இதே காலகட்டத்தைச் சேர்ந்த மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்டங்கள் பற்றிய ஆய்வு ஏடுகள்கூட
இந்த ஆய்வுத் தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆய்வு
ஏடுகள் சிற்சில இடங்களில் கல்வி தொடர்பான குறிப்புகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றன.
 
பிரிட்டிஷாரின்
ஆட்சியைக் குறைகூறுவதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. 18ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டம்,
19ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் உண்மைநிலை என்ன என்பதை
இந்த ஆவணங்களில் இருந்து முடிந்தவரை தெரிந்துகொள்வதற்கான முயற்சியே இது. இந்திய சமூகம்,
அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்கவழக்கங்கள், பிற நிறுவனங்கள், அவற்றின் பலங்கள், பலவீனங்கள்
ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே. 18ம் நூற்றாண்டில்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இண்டியன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் த எய்டீன்த்
செஞ்சுரி)19, இந்தியப் பாரம்பரியத்தில் ஒத்துழையாமை அணுகு முறை (சிவில்
டிஸொபீடியன்ஸ் இன் இந்தியன் டிரடிஷன்)20 என்ற முந்தைய நூல்களின் பாணியிலேயே
இந்த நூலும் இந்தியாவின் வேறொரு பரிமாணத்தை சித்திரித்துக் காட்டுகிறது. அந்தக் கால
கட்டத்து நிலைமையோடு இந்த ஆய்வுகளைப் பொருத்திப் பார்ப்பதோடு, பிரிட்டனில் 19ம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் லேசாகக் கோடிகாட்டுகிறது.
 
ஏராளமான நண்பர்கள்
இந்த ஆய்வுப் பணியில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். பல ஆலோசனைகள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களுடைய ஆதரவும் ஊக்கமும் இல்லாதிருந்தால்
இந்தப் புத்தகம் உருவாகியிருக்கவே முடியாது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில் என்ன பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பது தொடர்பான என் ஆய்வுகளுக்கு
உதவும் வகையில் ஆக்ஸ்ஃபோர்டு ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்காக அவர்களுக்கு
நன்றி. அதுபோலவே இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி அண்ட் ரெக்கார்ட்ஸுக்கும் நன்றி. காந்தி –
ஹெர்டாக் இடையிலான உரையாடலுக்கான பிரதிகளைத் தந்து உதவியதற்காக திரு மார்டின் மோயருக்கு
விசேஷ நன்றி.
 
1972-73 காலகட்டத்தில்
எனக்கு சீனியர் ஃபெலோஷிப் தந்ததற்காக ஏ.என்.சின்ஹா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ்க்கு
(பாட்னா) என் நன்றி. வாரணாசியைச் சேர்ந்த காந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டடீஸ், புது
டில்லியின் காந்தி பீஸ் ஃபவுண்டேஷன், த காந்தி சேவா சங்கம், சேவாகிராம், புது தில்லையைச்
சேர்ந்த அசோசியேஷன் ஆஃப் வாலண்டரி ஏஜென்ஸிஸ் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் என அனைத்து அமைப்புகளும்
தேவைப்படும் நேரங்களில் எனக்கு உதவிகள் புரிந்தன. அதற்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
 
இந்தப் புத்தகத்தில்
பின்னிணைப்பாக இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி தொடர்பான ஆவணங்களை இந்தியா ஆஃபீஸ்
நூலகத்தில்தான் முதலில் பார்த்தேன். எனினும் தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் இருந்தே
அவற்றை மறு பிரசுரம் செய்திருக்கிறேன். முன்பு அது மெட்ராஸ் ரெக்கார்டு அலுவகம் என்ற
பெயரில் இருந்தது. இதற்கும் அவர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மிக அதிக சிரமம்
எடுத்துக்கொண்ட அந்த ஆவணக்காப்பகத்தின் பணியாளர்களுக்கும் நன்றி. அலெக்சாண்டர் வாக்கரின்
குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எடின்பர்க்கில் இருக்கும் ஸ்காட்லாந்து
தேசிய நூலகத்தில் இருக்கும் வாக்கர் ஆஃப் பௌலாந்து பேப்பர்ஸ் அறிக்கையில் இருந்து அது
எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தேசிய நூலகத்துக்கு என் நன்றி. ஸ்காட்லாந்து ரெக்கார்டு
அலுவலகம், எடின்பர்க் பல்கலை, அலகாபாத்தில் இருக்கும் உத்தரபிரதேச அரசு ஆவணக்காப்பகம்
ஆகியவற்றுக்கும் நன்றி.
 
சேவாகிராமின் ‘ஆஸ்ரம்
பிரதிஸ்தான்’ இந்தப் புத்தகத்தை எழுத இடவசதியும் பிற வசதிகளும் செய்துகொடுத்து அவர்களில்
ஒருவராகவே என்னை அன்புடன் நடத்தியது. காந்திஜியின் குடிலுக்கு அருகில் அமர்ந்தபடி இந்த
நூலை எழுதி முடித்தது மிகப் பெரிய பாக்கியமே.
 
*
 
இந்த மொழிபெயர்ப்பின்
மூல ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பான The Beautiful Tree (அழகிய மரம்) மகாத்மா காந்தி
லண்டனில் சாத்தம் ஹவுஸில் அக், 20, 1931ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
 
‘பிரிட்டிஷ்
நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் யதார்த்த நிலையை வளர்த்தெடுக்காமல்
அவற்றை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டார்கள். மண்ணைத் தோண்டி வேரை வெளியில் எடுத்து
மரத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள்.
அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது.’
 
18ம் நூற்றாண்டில்
இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற துணைத் தலைப்பும் பொருத்தமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி ஆவணங்கள்
1822-25ல் தொகுக்கப்பட்டவை. எனினும் அந்தத் தகவல்கள் அதைவிடப் பழமையான கல்வி அமைப்பு
பற்றியே பேசுகின்றன. அந்தக் கல்வி அமைப்புதான் 18ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது.
அதன் பிறகு அது வெகு விரைவில் அழிந்துவிட்டது. ஆடம்மின் ஆய்வறிக்கை 19ம் நூற்றாண்டின்
நான்காவது பத்தாண்டில் நடந்த இந்திய பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்றன.
 
– தரம்பால்
பிப்ரவரி 19, 1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்,
சேவா கிராமம்.
 
 
 
1. ஏ.எஸ். அட்லேகர்:
எஜுகேஷன் இன் ஏன்சியண்ட் இந்தியா. இரண்டாம் பதிப்பு., பனாரஸ், 1944.
 
2. இந்திய தேசிய
ஆவணக்காப்பகம்: செலக்ஷன்ஸ் ஃப்ரம் தி எஜுகேஷனல் ரெகார்ட்ஸ்: I: 1781-1839, II –
1840-1859, ஹெச்.ஷார்ப் மற்றும் ஜே.ஏ.ரிச்சி எழுதியது, 1920, 1922 (மறுபதிப்பு
1965).
 
3. சையது நூருல்லா
மற்றும் ஜே.பி.நாயக்: ஹ்ஸ்டரி ஆஃப் எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் தி பிரிட்டிஷ் பீரியட்.,
பம்பாய், 1943.
 
4. அதே நூல் முன்னுரை.
 
5. பாரத் மேம் அங்கிரேஜி
ராஜ் (ஹிந்தியில்). இந்த நூலின் முதல் பதிப்பு 1929ல் வெளியானதுமே தடை செய்யப்பட்டது.
1939ல் மூன்று தொகுதிகளாக (1780 பக்) மீண்டும் வெளியிடப்பட்டது. மிக விரிவன தகவல்களைக்
கொண்டிருக்கும், மறுபதிப்பு காணாத அந்த நூல் இன்று அரிய க்ளாசிக் படைப்பாக ஆகிவிட்டிருக்கிறது.
 
6. எஸ்.எம்.ஜாஃபர்: எஜுகேஷன் இன் முஸ்லிம் இந்தியா, பெஷாவர், 1936.
 
7. ஹிஸ்டரி ஆஃப் எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் பிரிட்டிஷ் பீரியட்., 1943
 
8. டபிள்யூ. ஆடம்: ரிப்போர்ட்ஸ் ஆன் தி ஸ்டேட் ஆஃப் எஜுகேஷன் இன் பெங்கால் 1835 அண்ட் 1838. அனந்தநாத் பாசு எடிட் செய்தது., மறு பதிப்பு கல்கத்தா 1941.
 
9. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பேப்பர்ஸ், 1831-1832., தொகுதி 9.
 
10. அதே படைப்பு., பக் 413-417, 500-507.
 
11. ஜி.டபிள்யூ. லெட்னர்: ஹிஸ்டரி ஆஃப் இண்டிஜினஸ் எஜுகேஷன் இன் த பஞ்சாப் சின்ஸ் அனெக்சேஷன் அண்ட் இன் 1882, 1883; (பஞ்சாப், மொழித்துறை, மறு பிரசுரம், பட்டியாலா, 1973).
 
12. மதராஸ் கலெக்டர்கள் அறிக்கை, பின்னிணைப்பு A(i)&(xxx)
 
13. ஃபிலிப் ஹெர்டாக்: சம் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எஜுகேஷன் பாஸ்ட் அண்ட் ப்ரசன்ட்., ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்., முன்னுரை.
 
14. இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி: எம்.எஸ்.எஸ். இ.யு.ஆர். டி 551., காந்திக்கு ஹெர்டாக் அனுப்பிய கடிதம்:
21.10.1930.
 
15. Hartog: op. cit.
 
16. ஹன்ஸார்ட்:
ஜூன் 22 மற்றும் ஜூலை 1, 1813. 17. வி.ஏ.ஸ்மித்:
அக்பர் தி கிரேட் மொகல், க்ளியர்டன் பிரஸ், 1917, பக் 394. 18. லண்டன்: ஜர்னல்
ஆஃப் தி ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி, 1917, பக் 815-825. 19. இந்தியன் சயின்ஸ்
அண்ட் டெக்னாலஜி இன் தி எய்டீந்த் செஞ்சுரி: சம் காண்டம்பரரி ஈரோப்பியன் அக்கவுண்ட்ஸ்
(அதர் இந்தியா பிரஸ்) கோவா 2000. 20. சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்
இன் இந்தியன் டிரடிஷன்: வித் சம் எர்லி நைண்டீந்த் செஞ்சுரி டாக்குமெண்ட்ஸ், அதர் இந்தியா
பிரஸ்., கோவா, 2000.


__________________


Guru

Status: Offline
Posts: 7344
Date:
Permalink  
 

3.18 நூல் அறிமுகம்: அழகிய மரம்

-ஸ்ரீ.பக்தவத்சலம்

அழகிய மரம்



அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்)

தமிழினி வெளியீடு ,

25-பி, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்ஸர் பிளாசா, 

769, அண்ணா சாலை, சென்னை- 2

தொலைபேசி: 044- 2849 0027  அலைபேசி: 93442  90920

விலை: ரூ. 450


சாதிகள் ஒழிய வேண்டும்; ஆனால், இடஒதுக்கீட்டிற்காக சாதிகள் தொடர வேண்டும் என்ற முரண்பட்ட வாதத்திற்கு வலுவாகக் கூறப்படும் ஒரே காரணம்,  ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சாதியின் அடிப்படையில் கல்வியுரிமை மறுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் முன்னேற வேண்டும். ஆகவே, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே.

உண்மையில் பண்டைய பாரதத்தில் சாதிகளின் அடிப்படையில்தான் மக்களுக்குக் கல்வியறிவு வழங்கப்பட்டதா? குறிப்பிட்ட மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்றார்களா? கல்வியைக் கற்றுக் கொள்ளும் உரிமை சிறுபான்மையினர்களுக்கு மறுக்கப்பட்டதா? கல்விச் சாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பாடத்திட்டங்கள் எப்படியிருந்தன- என்ற பல கேள்விகளுக்கு விடைதேடும் விதமாக ஆராய்ச்சி மனநிலையில் எழுதப்பட்ட நூல் ‘அழகிய மரம்’

18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.

காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள்,  ஆங்கிலத்தில்  ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள்  ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்.

தரம்பால்

“பிரிட்டிஷார் பாரதம் வருவதற்கு முன்பு இங்கு இயல்பாயிருந்த நிலையிலிருந்து கல்வியை வளர்க்காமல், மண்ணைத் தோண்டி வேருடன் பிடுங்கி ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது”  என்பது, பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறையை அழித்த பிரிட்டிஷார் பற்றி காந்தியடிகள் கூறிய கருத்து.

பள்ளிகளில் பதிலளிக்காத மாணவனைப் பார்த்து ஆசிரியர் “ஏண்டா மரமாட்டம் நிக்கிற?” என்பார். அவர் குறிப்பிடும் மரம், ஏதும் துளிர்க்காத வெட்டப்பட்ட மரம். ஆனால், இது அழகிய மரம். தான் துளிர்விட்ட நிலத்தில் வேரூன்றி, திசையெட்டும் கிளைபரப்பி, காய்கனி ஈந்து, நிழல் விரிந்து, பல்லுயிர்களும் பயனடைய நிலைத்து நிற்பதே அழகிய மரம்.

கல்வி என்பதும் மரம் போன்றதே. தன் சமூகத்தின் பாரம்பரியத்தில் வேரூன்றி, பல்லறிவு விரிந்து தேடி, பெற்ற பயன்களை சமூகத்திற்கு வழங்கி, சமூகத்தை நலமுடனும், உயிர்ப்புடனும் இயங்கச் செய்வதே, ஒருவர் கற்ற கல்வியின் பயனாக இருக்க முடியும் என்பதால், கல்வி தொடர்பான இந்நூலிற்கு அழகிய மரம் எனத் தலைப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமானதே.

இடஒதுக்கிடு கோரிக்கை முதல், இன்று பேசப்படும்  ‘நீட்’ தேர்வு புறக்கணிப்பு வரை திராவிட அரசியலுக்கான முழுக் காரணமாக இருப்பது தங்களை இரண்டாயிரம் வருடங்களாகப் படிக்க விடவில்லை; பிராமணர்கள் மட்டும் படித்து அரசு வேலைகளைப் பெற்று பயனடைந்தனர் என்பதாகும். ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைதானா என ஆராய்ந்து,  கீழ்க்கண்ட முடிவுகளை இந்நூல் நம்முன் வைக்கிறது:

  1. பிரிட்டிஷார் பாரதம் வரும் முன்னரே, உலகின் பிற பகுதிகளில் இருந்த கல்வி நிலையை விட மேலான நிலையில் நமது கல்வி இருந்திருக்கிறது.
  2. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாக கல்வி கற்றதால், மேல்வகுப்பு மாணவர்களே கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து பாடங்களைக் கற்பித்திருக்கிறார்கள். இம்முறையின் மூலமாக அம்மாணவர்களுக்கு, மாணவப் பருவத்திலேயே ஆசிரியராகக் கற்பிக்கும் திறனும் வாய்த்து விடுகிறது.
  3. சமஸ்கிருதமும், அண்டைப்பகுதி மொழிகளும் கற்றுத் தரப்பட்டாலும் தாய்மொழிக் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
  4. மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் கல்வி மையங்களுக்கான பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது.
  5. வர்த்தக நோக்கில் பாரதத்திற்குள் நுழைந்த பிரிட்டிஷார் பாரதப் பாரம்பரியப் பள்ளிகளுக்கு கிடைத்து வந்த அரசு உதவிகள் அனைத்தையும் நிறுத்தினர். அரசு உதவியை நம்பி இயங்கி வந்த ஏராளமான குருகுலங்கள், திண்ணைப் பள்ளிகள், மதரஸாக்கள், பாரசீக அரபுப் பள்ளிகள் என அனைத்துமே ஒரு தலைமுறைக்குள் அழிந்தன.
  6. பிரிட்டிஷார் அறிமுகப் படுத்திய கல்வி முறையானது பள்ளிக் கட்டடங்களுக்கே முக்கியத்துவம் அளித்தது. கட்டடம்- கட்டணம் என்ற நோக்கத்தில் முறைப்படுத்தப்பட்ட கல்வி முறையில், பாரதிய இடைநிலை, கடைநிலை சாதியினர் கல்வி முறையில் பிந்தங்கிப் போக நேர்ந்தது. பிரிட்டிஷாரின் 200 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கடைநிலை, இடை நிலை சாதியினருக்கு ஏற்பட்ட பின்னடைவையே திராவிட அரசியல் சக்திகள் 2000 ஆண்டுகால பார்ப்பன சதியாகக் குறிப்பிட்டு வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கல்விச்சாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் கல்வி முறை தற்போதுகூட மக்களை ஈர்க்கின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட நவீன வடிவிலான கட்டடங்கள், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், தங்குமிட வசதி, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள் வீட்டு வாசலுக்கே வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுதல்…, இப்படி பல வசதிகளை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அதற்கேற்ப உயர் கட்டணங்களையும் வசூலிக்கும் நிலையில், வசதியான மாணவர்களே அந்நிறுவனங்களில் கல்வியைப் பெறும் இன்றைய சூழலில், வசதியற்ற மாணவர்களுக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்படுவதையும் கல்வியாளர்கள் கவனத்தில் கொண்டால் அன்று நிகழ்ந்த இது போன்ற பாதிப்புகளையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  7. அப்படியானால், அந்த 200 ஆண்டு கால பிரிட்டிஷார் ஆட்சியில் பிராமணர்கள் மட்டும் முன்னேறினர் என்பது சாதி முன்னுரிமையால் அல்ல; பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னிலையில் இருந்ததுதான் என்பதையும் இந்நூல் குறிப்பிடுகிறது.
  8. இந்நூலில் அக்காலகட்டத்திலிருந்த பள்ளி, கல்லூரிகளின் விபரங்கள், அங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கைகள் சாதிவாரியாக, மதவாரியாக பல அட்டவணைகளில் அரசு ஆவணங்களில் காணப்படும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1800-களில் பிரிட்டனில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை விட பாரதத்தில் அதிகமாயிருந்தது மட்டுமல்ல; பிரிட்டனில் கற்றுத் தரப்பட்ட பாடங்களை விட பாரதத்தில் கற்றுத் தரப்பட்ட பாடங்கள் உயர்வாக இருந்திருக்கின்றன. சாதிவாரியாக மாணவர்களின் எண்ணிக்கையை வகைப்படுத்தும் ஒரு அட்டவணைப்படி மொத்த மாணவர்களில் பிராமண சாதி மாணவர்கள் 19.40%, க்ஷத்ரிய மாணவர்கள் 0.31%, வைசியர்கள் 8.78%, சூத்திரர்கள் 49.58%, பிறசாதியினர் 14.96%, முஸ்லிம்கள் 6.94% என்ற விகிதங்களில் கல்வி கற்றவர்கள் இருந்தனர். இந்த புள்ளி விவரங்களின்படி பிராமணர்களைவிட சூத்திர மாணவர்களின் எண்ணிக்கையானது 30% அதிகமாக உள்ளதை அறியலாம். உண்மை நிலை இப்படியிருக்க, சூத்திரர்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்டது என்ற பொய்யான தகவல்களை இன்றளவும் பரப்பி வருவது வெட்கக் கேடானது. இது நம் முன்னோர்களின் அறநிலையை அவமானப்படுத்துவது போன்றது.

இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை திட்டமிட்டுப் பரப்புகின்றவர்களுக்கு தக்க பதிலாய் சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல்,  பொருத்தமான இக்காலகட்டத்தில் வெளிவந்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் கூறுவது போல, உண்மையில் இந்தப் புத்தகம் காலம் தாழ்த்தி தமிழில் வந்திருக்கும் ஒன்றுதான். காலம் தாழ்த்தி வந்ததன் காரணமாக, பாரதத்தின் பாரம்பரியக் கல்வியை அழித்து, ஆங்கிலக் கல்வியை நிலைபெறச் செய்து, பிராமண அறிவுத் தரப்பை அப்புறப்படுத்தி, திராவிட வெறுப்புக் கருத்தியல் முன்னிலை பெற்றது வருந்தத்தக்கது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற நூல் வெளிவந்திருக்குமானால் திராவிட வெறுப்புக் கருத்தியல் மற்றும் அதன் அரசியல் வெற்றி ஆகியவற்றைத் தடுத்திருக்கலாம். ஆகவேதான் மஹாதேவன் கூறுகிறார்: “ இந்தப் புத்தகத்தை இதுநாள்வரை மொழிபெயர்க்காமல் இருந்தவர்களுக்கு கோபம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இந்நூலெங்கும் பலபுள்ளிவிவரங்கள் பரவிக் காணபடுவதில் நூலாசிரியரின் கடின உழைப்பு தென்படுகிறது. ஒரு பெரிய பலாப்பழத்தில் உள்ள சுளைகளை மட்டுமல்லாது, மேல்புறத்தோலில் உள்ள முட்களையும் எண்ணிக் குறிப்பிடுவது எவ்வளவு கடினமோ, அவ்வளவுக் கடினமான உழைப்பை புள்ளிவிவரங்களைத் தொகுப்பதில் ஆசிரியர் மெனக்கெட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நூலிற்கு மதிப்புரையென்பது மீண்டுமொருமுறை பலாத்தோலின் முட்களை எண்ணுவது போன்றதொரு கடினமான செயலே என்பதால், இந்நூலில் கவனிக்கப்படவேண்டிய முக்கியக் குறிப்புகளை மட்டும் பலாச்சுளைகளாகத் தொகுத்தளிக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் வரை பாரதத்தில் விரிவான பரந்துபட்ட கல்வி அமைப்பு இருந்திருக்கிறது. பாரத கைவினைத் தொழில்கள் அழிக்கப்பட்டு பாரதக் கிராமங்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டது தொடர்பாக ஏராளமான படைப்புகள் வெளியாகின. ஆனால் மேற்கத்திய மயமாக்கப்பட்ட பாரதீயர்களின் மத்தியில் மார்க்ஸியர்கள், ஃபேபியர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள் ஆகியோரின் பார்வையானது வில்லியம் வில்பர் ஃபோர், ஜேம்ஸ் மில், காரல் மார்க்ஸ் ஆகியோருடைய எண்ணத்தைப் போலவே இந்தக் குற்றச்சாட்டுகளையும், உண்மைகளையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளாகவே கருதின. பிரிட்டிஷாரின் மீதான விமர்சனங்கள் உண்மையாகவே இருந்தாலும் தேவையற்றவை என்று ஒதுக்கித் தள்ளின.

பாரதப் பாரம்பரியக் கல்வி பற்றிய பெல்லாரி ஆட்சியரின் அறிக்கை பல கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டப்பட்டிருகிறது. அதில் அவர் குறிப்பிடுவதாவது:

“ஐரோப்பிய பொருட்களின் வருகையால் உள்ளூர் தொழிலாளர் வர்க்கங்கள் வெகுவாக நசிந்துவிட்டன. ஐரோப்பியர்கள் பாரதத்தில் தற்காலிக முதலீடு செய்வது கூட சட்டத்தால் தடுக்கப்பட்டதால் பாரதப் பணமானது தினம் தினம் உறிஞ்சப்பட்டு வறுமைக்குள் வீழ்ந்துவிட்டது. இதனால் கிராமங்களில் முன்பிருந்த பள்ளிகளில் இப்போது ஒன்றுகூட இல்லை”.  (ஆட்சியரின் இக்குறிப்பிலிருந்து பாரதத்தில் கல்வி முடக்கப்பட்டதற்கு சாதியம் காரணமல்ல என்பது புலப்படுகிறது).

“குழந்தைகள் ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அன்றைய தினம் ஆசிரியர்களும், பிற மாணவர்களும் புதிதாக பள்ளியில் சேரும் மாணவனின் வீட்டில் ஒன்று கூடுகிறார்கள். கணபதி விக்ரஹத்தின் முன்பு அனைவரும் அமர்ந்து பிரார்த்திக்கின்றனர். ஆசிரியர் மாணவரின் கையைப் பிடித்து அரிசியில் இறைவனின் பெயரை விரலால் எழுத வைக்கிறார். பெற்றோரின் வசதிக்கேற்ப ஆசிரியருக்கு தானங்கள் தரப்படுகின்றன”.

இது பெல்லாரி ஆட்சியர் அளித்த அறிக்கையின் ஒரு பகுதி:

“எனது கஜானாவிலிருந்து பிராமணர்களுக்கு கணிசமான தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இது இந்து ஆட்சியாளர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மானியங்கள் எந்தவித நிபந்தனையின் பேரிலும் தரப்படவில்லை. கற்றறிந்த பண்டிதர்கள், ஞானிகளின் ஆசி அரசுக்கு வேண்டும் என்ற நம்பிக்கையிலும், மரியாதையிலுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும், இந்த மானியங்களைப் பெற்ற அனைவருமே ஏதாவது ஒரு அறிவியலைக் கற்றுத் தரும் கல்வி மையத்தை நடத்தி வந்திருக்கிறார்கள்”.

இது சேலம் ஆட்சியர் குறிப்பு:

“இந்துப் பள்ளிகளில் ஒரு மாணவருடைய கல்விக்கு ஆகும் செலவு ஆண்டுக்கு மூன்று ரூபாய், முஸல்மான் பள்ளிகளில் 15-20 ரூபாய் வரை ஆகிறது. எந்த இந்துப் பள்ளிக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை. முஸல்மான் பள்ளிக்கு மட்டும் ஆண்டுக்கு 20 ரூபாய் கிடைக்கும் வகையில் நிலமானியம் இருக்கிறது”.

இது குண்டூர் ஆட்சியர் குறிப்பு:

“மாணவர்கள் காலை ஆறு மணிக்கு பள்ளிக்கு வருகிறார்கள். 9 மணி வரை கல்வி கற்கிறார்கள். காலை உணவை வீடுகளில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பள்ளிக்குத் திரும்புகிறார்கள். மதியம் இரண்டு மூன்று மணி வரையில் பள்ளியில் இருக்கிறார்கள். பின் மதியத்தில் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் பள்ளிக்குத் திரும்புகிறார்கள். அதன்பிறகு இரவு ஏழுமணி வரையில் பள்ளியில் இருக்கிறார்கள். தமக்குரிய ஆசிரியர்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் வேறு கிராமங்களில் உள்ள ஆசிரியர்களை நாடி கல்வி கற்கின்றனர். அவ்வாறு பயில நேரும் மாணவன் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அந்த மாணவனின் உணவுத் தேவைகளை அந்த கிராமத்தினரே மனமுவந்து அளிக்கின்றனர்”.

பாரதத்தில் 1776-1789 வரையிருந்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய குறிப்பு:

“பாரதிய இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படும் பிற பாடங்கள்- கவிதை, காவியம், வாள்சண்டை, களறிப்பயிற்று, தாவரவியல், மற்றும் மருத்துவம், கடல் பயணம், நவசாஸ்திரம், பந்துகளி, சதுரங்கம், கோலடி, தர்க்க சாஸ்திரம், ஜோதிடம், சட்டம், ஸ்வாத்யா, மௌனம்.  மாணவர்கள் கல்வி கற்கும் பருவத்தில் பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்க வேண்டும். பெண் வாசனையின்றி வாழ வேண்டும். தத்துவப் பாடத்தின் முதல்படி நிலையென்பது ஐந்து வருடங்கள் கடுமையான மௌன விரதம் இருப்பதென்பதே. பிதகோரஸ் இந்தத் தத்துவக் கல்வி முறையை பாரதீய தத்துவ ஆசிரியர்களிடமிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய மாணவர்களையும் இதுபோல் ஐந்து வருடங்கள் மவுன விரதம் இருக்கச் சொன்னார்”.

பாரம்பரிய பாரதத்தில் அனைத்து சாதியினருக்கும் கல்வி கற்றுத் தரப்பட்டிருக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு மக்கள் விரும்பி உதவி அளித்திருக்கின்றனர். பலவகைகளிலும் சிறப்புற்று பரந்து விரிந்து ஆலமரம் போலிருந்த அழகிய மரமானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் தன் விருப்பத்திற்கேற்ப வெட்டிச் சீர்படுத்தி தொட்டியில் வளர்க்கப்படும் போன்சாய் மரம் போல இன்றைய கல்வி முறையாக மாற்றப்பட்டிருப்பதை, இந்நூலை முழுமையாகப் படித்தபின் புரிந்து கொள்ள முடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7344
Date:
Permalink  
 

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

‘எண்’ என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

-திருக்குறள் – பொருட்பால் – அரசு இயல் – கல்வி

நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருசிறிய Fabrication Industry இல் Quality Control பிரிவில் ஒரு சிறிய உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தேன். Metals, Materials, Fabrication, Welding, Casting, Defects என பணி இருந்தது .

ஒரு நாள் ஒரு வார்ப்பினை (Casting) Inspection செய்ய வந்த Inspector (Authorized Inspector- Lloyds Register) சொன்னார்:

“ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் ! நாம் இந்தக் காலகட்டத்தில் உலோகவியலில் (Metallurgy ) மகத்தான உயர் ஆய்வுகள் மூலம் வியத்தகு முன்னேன்றங்களை கண்டுள்ளோம் , இருந்தும்கூட Defect free Castings உற்பத்தி பண்ணுவது என்பது பல சமயங்களில் கடினமாக உள்ளது . 12௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது . அதன் மீது ஆயிரம் ஆண்டுகளாக மலர்கள் , அபிஷேகத் திரவியங்களை ( பால் , தயிர் , பஞ்சாமிர்தம் தேன் , பலவகையான பழச்சாறுகள் , இளநீர் , நெய் , திருமஞ்சனப் பொடி, திருநீறு , வில்வப்பொடி ) என மேலே கொட்டுகிறோம் .இந்தத் திரவியங்களில் பலவிதமன Acids & Alkalies உள்ளன , ஆனால் ஏதோ ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion , cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன ! நமது முன்னோர்கள் அறிந்து வைத்த மகத்தான இந்த உலோகவியல் அறிவியலை ( Metallurgy ) என்னவென்று சொல்லுவது ?”

உண்மைதான் !

பாரதத்தின் குறிப்பாக தமிழகப் பண்பாட்டைப் பற்றிய சிறிய அளவில் அறிமுகம் உள்ள ஒரு வெளிநாட்டினர் உடன் நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தால் , உடனடியாக அவர் நினவு கூறுவது நமது கோவில் கட்டிடகலை , கற்சிற்பங்கள் மற்றும் ஐம்பொன் உலோக சிலைகளின் பற்றிதான் . Structural Engineering , Architecture , Geology , Carpentry , Stone- Masonry, Metallurgy போன்ற அறிவியல் துறைகளில் நமது முன்னோர்கள் ஆழ்ந்த படிப்பும் செய்முறைத் திறனும் இல்லை என்றால் , இந்த மகத்தான படைப்புகளை உருவாக்கி இருக்க முடியாது அல்லவா ?

‘ திருமகள் போல ‘என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜராஜ சோழனை ( Raja Raja I ) ‘ பார்ப்பன அடிமை ‘ என்று வந்தேறிய சமயத்தை தழுவிய ஒரு பிரமுகர் அறிக்கை வெளி இட்டார் . அப்பட்டமான ஓர் இந்து விரோத அறிக்கை அது .

பார்ப்பன அடிமை ‘ என்று இகழப்பட்ட மனனர் தம் காலத்திய அனைத்து சமயங்களையும் ஒன்றாகவே பாவித்து நிவந்தங்கள் கொடுத்தவர் , அது மட்டுமல்ல அந்த பிற்கால சோழ அரசர்கள்தான் இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் . இன்றும் கூட அவை வேளாண்மைக்கு உயிர் நாடியாக உள்ளன . ( ஓர் உதாரணம் : தக்கோலப் போரில் ‘ யானை மேல் துஞ்சியத் தேவர் ‘ என பெயர் பெற்ற இளவரசர் ராஜாதித்தர் தம் தந்தை பராந்தகர் – அவருக்கு வீர நாராயணர் என்ற பெயர் உண்டு – அவர் பெயரில் கடல் போன்ற வீர நாரயண ஏரியை – தற்போது – வீராணம் ஏரியை உருவாக்கினார் ) . அதில் இன்று விளைவித்த நெல் – அரசியை கூட மேலே சொன்ன நபர் இன்றும் கூட தின்று கொண்டு இருக்கலாம் . மேலும் , இந்த நீர் ஆதாரங்களை உருவாக்கிட  Gelogy, Earth Sciences, Water Management போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் ஏதேனும் ஆதாரக் கல்வி பெற்று இராமல், இந்த மகத்தான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி இருக்க முடியுமா?

‘திருமன்னி வளர‘ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜேந்திர சோழரின் (Rajendra I) திருவாலங்காட்டு செப்பேடு, அவரது கடல் கடந்து சென்ற படையெடுப்பபு பற்றிக் கூறுகிறது. மேலும் இத்தகு படையெடுப்புகளுக்கு நிலையான ஒரு சோழ ராணுவம் யானைப் படை, குதிரைப்படை இருந்துள்ளது . இதற்கு தேவையான Naval Architecture , Ocean Engineering, Veterinary Sciences போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் சிறந்த அறிவு பெற்று இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை

மகாத்மா காந்தி 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு சென்றார் . அந்த ஆண்டு அக்டோபர் 2௦ ஆம் தேதி லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ (Saatham House) உள்ள இன்ஸ்டிட்டுஉட் ஆப் இன்டர்நேஷனல் இல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) ஓர் ஆவேசமிக்க உரை நிகழ்த்தினார் . அதில் பிரிட்டிஷாரின் இந்தியக் காலனிய ஏகாதிபத்திய அணுகுமுறை இந்தியவை பல விஷயங்களில் சீரழிய செய்து விட்டது என்றார். குறிப்பாக பாரதத்தின் பண்டையக் கல்வி முறை பிரிட்டிஷாரின் போக்கால் மாபெரும் பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார் .

காந்திஜி கூறினார் :

“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.

டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச்செயலாளரும் ,ஆக்ஸிலரி கமிட்டி அப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷன் சேர்மனாகவும் (Auxiliary Committee of Indian Statuary Commission Chairman) பதவிகள் வகித்த சர் பிலிப் ஹெர்டாக் , காந்திஜியின் கூற்றை மறுத்து அவருக்கு கடிதம் எழுதினர் . ‘’ பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போக்கால் , பாரதத்தில் நிலவிய பண்டைய கல்வி முறை சீரழிந்தது ‘’ என்ற காந்திஜியின் குற்றசாட்டுக்கு ஆதாரங்கள் கேட்டார் . 1931 ஆம் தொடங்கி 1938 ஆம் ஆண்டுவரை சர் பிலிப் ஹெர்டாக் தொடர்ந்து காந்திஜிக்கு கடிதங்களை எழுதி வந்தார் . காந்திஜியினால் ஆதாரங்களை கொடுக்க இயலவில்லை . தான் சொன்னது சரி என்று தனது மனது நம்புவதாகவும் , ஆனால் ஆதாரங்கள் ஏதும் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்து விட்டார் .

இந்த இடத்தில நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் . மகாத்மா காந்தி அவருக்கே உரித்தான , இயல்பான நமது நாட்டைப் பற்றிய புரிந்துணர்வினாலும் , அவரது உள்ளார்ந்த ஆன்மீகவயமான ஞானத்தாலும் நமது கல்விமுறை பற்றிக் கூறினாலும் , அந்த சமயத்தில் அவரால் ஆதாரங்களை தர இயலவில்லை . ஆனாலும் அவர் சொன்னது சரியே எனப் பின்னர் நடந்த நிகழ்சிகள் தெரிவிகின்றன . ( இந்தப் புரிதல் காந்திஜிக்கும் , மகான் அரவிந்தருக்கும் இருந்தது , ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்).

ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் . அப்பொழுது சர் பிலிப் ஹெர்டாக் காந்திஜியிடம் பாரத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்த ஆதாரங்களை கேட்டு அது காந்திஜினால் தர இயலவில்லையோ , அந்த ஆவணங்கள் பிரிட்டிஷ் நூல் நிலையத்தில் இருப்பதைக் கண்ணுற்றார். மிகுந்த சிரமத்தின் பேரில் , அந்த ஆதாரங்களை ஸ்ரீ சீதாராம் கோயலின் உதவியுடன் 1983 ஆம் ஆண்டு ‘ அழகிய மரம் ‘ ( The Beautiful Tree – Indigenous Indian Education in the Eighteenth Century ) என்ற ஒரு நூலாக வெளியிட்டார் .

அந்த நூலின் கருத்துக்கள் என்ன ?

1822 ஆம் ஆண்டு மதராஸ் ப்ர்சடேன்சி (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !

ஏனென்றால் , 1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தன் ஆன்மீகவயமான உள்ளுணர்வினால் பாரதத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்தவிதமான தரவுகள் இன்றி , லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) பேசியதை நிருபிக்கும் வகையில் அந்த ஆய்வு அறிக்கை இருந்தது .

மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :

– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன

– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன

– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்

– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .

– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .

– இந்தக் கல்வி முறை பற்றி ‘ தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ ‘ மகாமஹோஉபாதியாய ‘ ‘ தமிழ்த் தாத்தா’  உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘ என் சரித்திரம் ‘ என்ற நூலில் விவரித்துள்ள ‘ இளமைக் கல்வி ‘ என்ற அத்தியாத்தில் காணப்படுவது போல உள்ளது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). நான் இந்த மிக நீண்ட பதிவு போடுவதற்கே இந்தத் தகவல் மட்டுமே காரணம் .

ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.

எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ – இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும் ?

‘மனு ஸ்ம்ருதி‘ – இங்கே வேலை செய்யவில்லை போலும் ?

இறுதியாக ,

ஏராளமான தகவல்கள் இந்த ‘ அழகிய மரம் ‘ என்ற நூலில் உள்ளது என்றாலும் , விரிவாக வேறு ஒரு சமயத்தில் விவாதிப்போம் எனக் கூறி – மகாத்மா காந்திக்கும், ஸ்ரீ தரம்பாலுக்கும் நமது நன்றி கலந்த வணக்கத்தை செலுத்துவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7344
Date:
Permalink  
 

1776ஆம் ஆண்டு. ரோமிலிருந்து பாலினோ தா பர்தால்மோ  (Paolino da San Bartolomeo)  என்னும் போதகர் மலபார்  வந்திறங்கினார்.  1789 வரையில் இந்தியாவில் தங்கிய அவர், இந்திய மொழிகள் குறிப்பாக சமஸ்கிருதம் மீது அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அலெக்சாண்டர் காலகட்டத்திலேயே மேன்மை எட்டியிருந்த இந்திய கைவினைத்தொழிலாளர்களின் நகல் தயாரிக்கும் புகழைக் கேள்வியுற்று, போர்ச்சுகலில் தயாரான வேலைப்பாடு மிகுந்த விளக்கினை இந்தியக் கைவினைக் கலைஞர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சில நாட்களில் எது அசல், எது நகல் எனக் கண்டுபிடிக்க இயலாதவாறு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வந்த விளக்கைக் கண்டு வியப்படைந்தார். இம்மாதிரியான கலைகள் அந்நிய ஆட்சியாளர்களால் பராமரிக்கப்படாமல் வீழ்ச்சியடைகிறது என்றும், பிற இந்திய அறிவியல் சாதனைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் தனது இந்தியச் சிறுவர்களின் கல்வி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவிட்டார்.

Remembering-Dharampalவெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டவரும் காந்தியவாதியுமான தரம்பால் 1983 இல் வெளிவந்த தனது ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) நூலின் ஆவணங்களில் ஒன்றாக பர்தால்மோவின் கட்டுரையை இணைக்கிறார்.  இந்நூலின் மூலம் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரால் பரவலாக்கப்பட்ட ஒரு தவறான கருத்தினை மறுதலிக்கிறார். நவீன கல்வியை அறிமுகம் செய்த பிரிட்டிஷார் இந்தியச் சமூகத்தின் கல்வியையும் ஞானத்தையும் மீட்கவில்லை. மாறாக நிர்வாகத் தேவை, வர்த்தகம், மதம் போன்ற சில சுயநல காரணங்களால்  கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து எந்த புரிதலும் பெருமிதமும் இல்லாத தலைமுறைகளை உருவாக்க வித்திட்டனர் என்ற வாதத்தை முன்வைக்கிறார். 

பாரம்பரிய கல்வி முறை அழிந்ததும் கூடவே இந்திய கைவினைக் கலைகளும், அறிவியல் சாதனைகளும் புறக்கணிப்புக்குள்ளாயின. விவசாயக் கருவிகள், கப்பல் கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் தவிர்த்து கைவினைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் தரம்பால் ஆய்வு செய்தனவற்றுள் அவ்வளவாகத் தென்படுவதில்லை. இதற்குக் காரணமாக அவர் கருதுவது அவற்றை எழுதிய பிரிடிஷ் அரசாங்க நிர்வாகிகள், பயணிகள், மதப் பிரச்சாரகர்கள், ஆய்வறிஞர்கள் ஆகியோருக்கு இக்கலைகள் குறித்தும், இவை தலைமுறைகளாகக் கைமாற்றப்படும் முறை குறித்தும் பெரிய அக்கறை இருக்கவில்லை என்பதே. மற்றொரு காரணம் இந்தியாவில் கைவினைத் தொழில் என்பது பெரிதும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டது, அந்தந்த ஜாதிகளுக்கு உட்பட்டது.

அக் 20, 1931 மகாத்மா காந்தி லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் ஆற்றிய நீண்ட உரையில் கடந்த 50 – 100 வருடங்களில் இந்தியப் பாரம்பரிய கல்வி அழிந்ததன் காரணமாக பிரிட்டிஷாரை நிலை நாட்டினார். 

“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்த போது, இங்கு நிலவிய அமைப்புகளைப் புரிந்துகொண்டு அதை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள். அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டு விட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது”

அந்த ‘அழகிய மரம்’ மட்கி அழியும் முன் நிலவிய கல்விச் சூழலை விளக்க, தரம்பால் அக்காலகட்டத்தில் வெளிவந்த ஏழு ஆவணங்களை நூலின் பின்னிணைப்புகளாக இணைக்கிறார். அந்த ஆவணங்களின் மூலம் 18 ஆம் நூற்றாண்டு இந்தியக் கல்வி முறை எவ்வாறு இருந்தது என்றும் அன்றைய பிரிட்டிஷ் பொதுக்கல்வி முறையை விட எப்படி மேம்பட்டு இருந்தது எனவும் தெளிவாக நிறுவுகிறார்.  

தரம்பால், பிற ஆய்வாளர்கள் அதுவரை பெரிதும் கவனிக்காத ஆவணம் என மதராஸ் மாகாணத்து கவர்னர் தாமஸ் மன்ரோ 1822 இல் வெளியிட்ட  அவைக்குறிப்பையும், அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட ஆய்வறிக்கைகளையும் குறிப்பிடுகிறார். “இந்தியர்களிடையே நிலவும் அறியாமை குறித்தும் அவர்களுக்குக் கல்வி வழங்குவது” குறித்தும் முடிவெடுக்க, தனது மாகாணத்தின் கீழ் வரும் பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை இந்தியப் பாரம்பரியக் கல்வி தொடர்பாக விரிவான தகவல்களைச் சேகரிக்க மன்ரோ உத்தரவிட்டார். அவர்களின் எதிர்வினைகளோ தரவுகளே இல்லாமல் யூகத்தின் பெயரில் (கனரா கலெக்ட்டர்) அனுப்பட்டவையிலிருந்து தீவிர களப்பணியால் சேகரிக்கப்பட்டவை (மதராஸ், பெல்லாரி கலெக்டர்கள்) வரை பலதரப்பட்ட நிலைகளில் வெளிவந்தன. பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் பயில்வோரின் பால், ஜாதி அடிப்படையிலான எண்ணிக்கை, வகுப்பு அட்டவணை, பயிற்றுவிக்கப்படும் மொழிகள், பயன்படுத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் எனத் தகவல்கள் கூடவும் குறையவும் அவர்களால் மன்ரோவிற்கு அனுப்பப்பட்டன. 

மேல் மற்றும் இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கப்பெற்றது என்று இன்றும் நம்பப்படுகிறது. ஆனால் நிலவரம் நேர்மாறாக இருந்துள்ளது.  பிற ஜாதி மாணவர்கள், சூத்திர மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். தமிழ் பேசப்படும் மதராஸ் திருநெல்வேலி, மலையாளம் பேசப்படும் மலபார், கன்னடம் பேசப்படும் பெல்லாரி, ஒரிய மொழி பேசப்படும் கஞ்சம், தெலுங்கு பேசப்படும் கடப்பா விசாகப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களில் 40 முதல் 84 சதவீதம் வரையில் சூத்திர, பிற சாதியினரே இருந்துள்ளனர். 

school1

கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. பெண்களில் நடனப் பெண்கள் அல்லது கோவில்களில் தேவதாசிகளாக இருந்த பெண்கள் அதிகம் கல்வி பெற்றதாகத் திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் கலெக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

w1

மேலும் இத்தரவுகளில் மாணவர்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி பெற்றனர் அவர்களுக்கு எவ்வாறான சலுகைகள் அளிக்கப்பட்டன போன்றவற்றிற்கான விளக்கங்களும் இடம்பெறுகின்றன. ஏழை பிராமண மாணவர்களின் கல்விக்கு அவர்கள் சமூகத்தினர் அளித்த உதவிகள் தொடர்பாகக் கடப்பா கலெக்டர் அளிக்கும் தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. பத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த இடங்களுக்குக் கல்வியின் பொருட்டு வந்து தங்கிய ஏழை சிறுவர்களின் தினசரித் தேவைகளை அவர்களின் ஆசிரியர்களும், கிராமத்தினரில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கவனித்தனர். இத்தனைக்கும் ஆசிரியர்கள் வறுமையில் உழல்பவர்களாகவே இருந்தனர். கிராமத்தினரும் மாணாக்கரிடம் எதையும் எதிர்பார்த்து உதவிகள் செய்யவில்லை. எளிய முறையில் வழங்கப்பட்ட இத்தானங்களைக் கண்ட பிரிட்டிஷரான கடப்பா கலெக்டர் , “அரசாங்கம் கொஞ்சம் போலக் கருணையுடனும் தாராள சிந்தையுடனும் நடந்துகொண்டால் இந்த அம்சத்தை நன்கு வளர்த்தெடுக்க முடியும்” என்று வரையறை மீறாத தொனியில் தன் மேலதிகாரிக்குத் தெரிவித்தார்.

மதராஸ் மாகாணத்தின் தரவுகள் தொடர்ந்து வங்காளம், பஞ்சாப் மாகாணத்தின் ஆய்வுக்குறிப்புகளிலிருந்து தொகுத்த செய்திகளை தரம்பால் முன்வைக்கிறார். 1836 – 1838 ஆண்டுகளில் வெளியான வில்லியம் ஆடம்மின் அறிக்கைகளை தரம்பால் கடுமையாக விமர்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசின் தலையீடு வேண்டி, இந்தியாவில் பாரம்பரியக் கல்வி விளிம்பு நிலையிலிருப்பது போல் ஒரு பிம்பத்தை ஆடம் நிறுவியதாகக் கருதுகிறார். ஆனாலும் அவர் ஆடம்மின் கடின உழைப்பையும் அவரது ஆய்வின் பரந்துபட்ட தன்மையையும் அங்கீகரிக்கத் தவறுவதில்லை.

வங்காள, பாரசீக, அரபிய ஆரம்பக் கல்வி நிலையங்களின் அவல நிலையை விளக்கும் ஆடம்மின் கட்டுரையில் மாணவர்கள் எப்படி எழுதப்பழகுகிறார்கள், அடுத்த பாடத்திற்கு எவ்வாறு முன்னகர்கிறார்கள் போன்ற தகவல்கள் கவனம் ஈர்ப்பன. கல்வி கற்க ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் மணலில் எழுத்துகளை வரைந்து பழகிக்கொள்கின்றனர். பின்னர் பனை ஓலையில் மூங்கில் பேனாக் கொண்டு எண்களை எழுதுகின்றனர். பின்னர் கணிதத்தின் அடுத்த கட்டப் பாடங்களை வாழை இலையில் வண்டி மை கொண்டு எழுதக் கற்கின்றனர்.

g1

 

‘அழகிய மரம்’ அளிக்கும் பாரம்பரிய கல்விக் குறித்த சித்திரம் தத்ரூபமாக உ.வே.சாவின் வாழ்க்கை சரிதையில் காணலாம். அவரது சுயசரிதையில் ஏட்டுச்சுவடிகள் திரட்டும் பகுதித் தவிர்த்து அனைத்து பகுதிகளும் அவர் கல்விக்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் பற்றியவையே. 1855 இல் பிறக்கும் உ.வே.சாமிநாதையர் ஐந்து வயதில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்திலுள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் கல்விப்படலத்தைத் தொடங்குகிறார்.  அங்கே தன் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டே மாணாக்கர்களை அரிச்சுவடி, எண் சுவடி மனனம் செய்ய வைக்கிறார் உபாத்தியார் . பின்னர் வேறொரு உபாத்தியாரிடம் எழுதக் கற்றுக்கொள்கிறார். முதலில் மணலில் எழுதப் பழகிய பின் எழுத்தாணிக்கொண்டு ஓலைச்சுவடியில் எழுதப் பயில்கிறார். உபாத்தியாரின் நண்பர் ஒருவர் மாணாக்கர்களுக்கு ஆங்கில எழுத்துகள் கற்றுத் தருகிறார். 

ensarithram-COLLAGEஎன் சரித்திரம்/ அழகிய மரம் – 2016 இல் வெளிவந்த பி.ஆர். மகாதேவனின் தமிழாக்கம் சரளமாகவும்,  வாசிக்க ஏதுவாகவும் அமைந்திருக்கிறது.

தனது ஏழாவது பிராயத்தில் அரியலூருக்கு வரும் உ.வே.சா காமாகூஷியம்மன் கோவிலில் செயல்படும் பள்ளியில் சங்கீத வித்துவானான தந்தையின் ஆசைக்கிணங்க தெலுங்கு கற்கத் தொடங்குகிறார். தெலுங்குப் பாடங்களில் மனம் செல்லாததால் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தந்தையாரிடம் சங்கீதம் பயில்கிறார்.  பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் என்றெண்ணி தில்லைக்கோவிந்தபிள்ளை என்பவரிடம் கிராமக்கணக்கும், சிதம்பரம்பிள்ளை என்னும் பண்ணையாரிடம் உதவிக்கணக்கும் பயில அனுப்பப்படுகிறார். தமிழின் மேல் உள்ள தீவிரப் பற்றால் வெவ்வேறு ஊர்களில் தங்கி வெவ்வேறு ஆசிரியர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த காவியங்களையும், இலக்கணங்களையும் கற்றறிகிறார். இறுதியாக மாயூரம் வந்தடைந்து மீனாட்சி பிள்ளையவர்களின் பிரதான சிஷ்யராகிறார். அவர் குருவின் மறைவுக்குப் பின் அவரே பிற மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தொடங்குகிறார். இருபது வயதுக்குள்ளாகவே பல காவியங்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் பண்டிதராகிறார். 

அன்று இசை மற்றும் பிற கலைகள் பெரும்பாலும் மகன் வழி பேணப்பட்டதால் இளம் பிராயத்திலேயே உ.வே.சா சங்கீதத்தில் பயிற்சி பெற்றவரானார். பிராமணரான உ.வே.சா பிள்ளை, ரெட்டியார் எனப் பிற வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களையும் கொண்டிருந்தார்.  அவரும் அவர் பெற்றோரும் கல்வியின் பொருட்டு வந்து தங்கும் கிராமங்களிலெல்லாம் அங்குள்ள கிராமத்தினர் தங்குமிடம் உணவுப் பொருட்கள் என தம்மால் இயன்ற வசதிகள் தருவித்துக் குறை ஏதும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். மீனாட்சி பிள்ளையவர்களிடம் படித்த மாணாக்கர்களில் சவேரிநாத பிள்ளை என்னும் கிறிஸ்தவரும் அடக்கம். அவர் மூத்த மாணவராக இருந்த வரையில் இளையவரான உ.வே.சா விற்கு பாடம் கற்பித்தார். உ.வே.சா மூத்த மாணவரானதும் இளைய மாணவர்களுக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்தார். இவ்வாறு உ.வே.சாவின் சரிதையில் இடம்பெற்ற பல தருணங்கள் ‘அழகிய மரம்’ நூலில் சித்தரிக்கப்பட்ட மாணாக்கர் வாழ்க்கையுடன் ஒப்பிடலாம்.

இவ்விருநூல்களும் 18-19 ஆம் நூற்றாண்டு கல்வி பற்றி நம் அறியாமையை அல்லது மேலோட்டமான அறிதலை நிவர்த்தி செய்யும் ஒப்பற்ற களஞ்சியங்கள் (காந்தியின் ‘அழகிய மரம்’ உரைக்கு மறுப்பு தெரிவித்த, எந்தவொரு விளக்கத்திற்கும் செவி மடுக்காத ஃபிலிப் ஹெர்டாக் போன்ற மேட்டிமை வாதிகளின் அறியாமையைத் தவிர). 

இன்றைய இந்தியர்களின் வாழ்வு முறை, தொழில் தேர்வு மற்றும் சமூக அமைப்பு 19ஆம் நூற்றாண்டை விட மிகவும் வேறுபட்டிருப்பதால், இன்றைய பொதுக் கல்வி முறையை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டு அவ்விதமே பின்பற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் காந்தி மொழிந்த அழகிய மரத்தின் வேர்கள் சிதைக்கப்படாமல் நவீனக் கல்வி துணையுடன் பேணப்பட்டிருந்தால் இன்று ஒவ்வொரு தளிரும் அடர்ந்த நிறத்தில் முளைத்திருந்திருக்கும். 



__________________


Guru

Status: Offline
Posts: 7344
Date:
Permalink  
 

ரஜினியின் திரைப்படத்தில் மெக்காலே கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்தை தெரிவித்திருப்பது பிற்போக்குத்தனமானது.

JK

UPDATED: Oct 12, 2024, 3:26:03 PM

திருச்சி

தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்தில் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

அஸ்வத்தம்மன்

திருச்சி மக்கள் அனைவரும் நேற்று இரண்டு மணி நேரமாக பதட்டத்தில் இருந்தனர். பாதுகாப்பாக விமானத்தை தர இயக்கிய விமானிக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

கும்மிடிப்பூண்டி அருகில் ரயில் விபத்து ஏற்பட்டது உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. 4பேர் ICUயில் இருந்தனர் அவர்களும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.

express-train-accident.jpg

MUST READ

கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மோதி விபத்து.

 

ரயில் விபத்து

தொடர்ச்சியாக இது போன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது சதீ செயலா என்று ரீதியில் NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும். சமீப காலமாக தண்டாவளங்களில் கல்லை வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கு ஈடுபடுவது போல வீடியோக்களை நாம் பார்த்து வருகிறோம்.

உலக அளவில் இந்தியாவின் ரயில்வே தரம் உயர்ந்துள்ளது.வந்தே பாரத் ரயில்கள் போல பெட்டிகள் வாங்குவதற்கு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக கடவுளை வணங்க போகிறார்கள் முன்பாக இது போன்ற வாசகங்கள் மனதை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிறது.

பெரியாருடைய சிலை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் அந்த இடம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானது.

thirukural.jpg

MUST READ

தினம் ஒரு திருக்குறள் 12-10-2024

வேட்டையன் திரைப்படம்

திமுகவினர் சொந்த காசில் சொந்த இடத்தில் வைத்து அந்த சிலையை வைக்க வேண்டும் அப்போது கூட இந்த மாதிரி வாசகம் வைக்க கூடாது.

திராவிட கழகத்துக்கு முன்பாக திராவிடர் திடலுக்கு வருபவர்கள் மூளை குறைபாடு உள்ளவர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.

வேட்டையன் திரைப்படத்தில் மெக்காலே கல்வி முறை வந்த பிறகுதான் இந்த நாட்டில் சமூகநீதி வந்தது என்ற கருத்தை திரைப்படத்தில் கூறப்படுகிறது. இது அறிவுக்கு ஒவ்வாத கருத்து.

அடிமை மனோபாவம் கொண்ட கருத்து. அச்சில் இருப்பதுதான் அறிவு என்பதுதான் மெக்காலோ கல்வித் திட்டம்.

புதிய கல்விக் கொள்கையை மூலமாக மாற்றி கேள்வி கேட்டு மாணவர் புரிந்து கொண்ட பின்பு தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கொண்டு வருகிறோம்.

somangalam-aaru.jpg

MUST READ

ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு, ஏரியில் லாரியை கழுவ சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம்.

நீட்

நீட் என்ற தேர்வு வந்த பின்பு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வர முடிந்தது.

இது போன்ற பிற்போக்கான கருத்துக்களை உச்சத்தில் இருக்கும் நடிகர் இருக்கும் திரைப்படத்தில் பரப்புவது என்பது ஆபத்தானது வெளிநாட்டு கார்ப்பரேட் இந்தியன் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக மனநிலையை தெரிவிப்பது ஆபத்தானது. மெக்காலே கல்விக்கு ஆதரவாக பேசுவது ஒரு பிற்போக்குத்தனமாகும் என தெரிவித்தார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard